12 ஜனவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் - 55

எனக்கு தயக்கமாயிருந்தது.. ஏனெனில் அதில் விஷயமிருந்தது..

நான் அவரை சம்மதிக்க வைக்க உண்மைக்கு புறம்பாக ஏதாவது சொல்ல வேண்டியிருக்கும் அதைப் போய் இவர் முன்பு எப்படி...

அப்போது எனக்கு அத்தியாவசியமாகப் பட்டது அந்த இடம். தற்சமயத்துக்கு அந்த கடைக்குப் பின்னாலிருந்த கிடங்கு தாராளமாகப் போதும். ஒரே குறை, கிளைக்கு சாலையிலிருந்து நேரடியாக வாசல் கிடைக்காது. வங்கியின் பெயர் பலகையை பார்வையான இடத்தில் பொருத்தவும் முடியாது.

கிளை துவக்கப்பட்ட முதல் வருடத்தில் இத்தகைய வசதிகள் மிகவும் தேவையானவை. இந்திய வங்கிகளை எடுத்துக் கொண்டால் அவை எல்லாமே இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுவதால் வாடிக்கையாளர்களுடைய சேமிப்பின் மேல் கொடுக்கப் படும் வட்டி விகிதமும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் படும் கடனுக்கு வசூலிக்கப் படும் வட்டி விகிதமும் ஒரே அளவில்தான் இருக்கின்றன.

தஞ்சையிலிருந்த சுமார் 30 வங்கிக் கிளைகளில் ஏறத்தாழ 15 வங்கிக் கிளைகள் தஞ்சை தெற்குத் தெருவில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. இத்தகைய கடுமையான போட்டியில் சாலையிலிருந்து நேரடியான வாசலும், பகட்டான விளம்பரப் பலகையும், குளிர்சாதன வசதியும், எல்லாவற்றிற்கும் மேலாக தனிப்பட்ட, பணிவான சேவையும் வாடிக்கையாளர்களைக் கவரும் அம்சங்களாகும்.

இவற்றில் தனிப்பட்ட, பணிவான சேவையைத் தவிர என்னால் வேறெந்த பிரத்தியேக வசதிகளும் இக்கிடங்கில் கிளையை திறப்பதால் என்னுடைய வாடிக்கையாளர்காளுக்கு அளிக்க முடியாது.

இருப்பினும் இச்சங்கடங்கள் எல்லாம் இந்த கடையின் சட்டச் சிக்கல் தீரும் வரைதானே என்று தோன்றியது. இதையும் விட்டுவிட்டு மீண்டும் தேடுதல் பணியைத் தொடர எனக்கு மனமுமில்லை. தேடி, தேடி சோர்ந்து போயிருந்த நேரத்தில் கிடைத்த இந்த இடத்தை ஆறேழு மாதங்களில் தீரக்கூடிய சட்ட சிக்கலுக்கு பயந்து விட்டுவிட நான் தயாராயில்லை.

எப்பாடு பட்டாவது, எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி என்னுடைய வட்டார மேலாளரை சம்மதிக்க வைப்பதென்று தீர்மானித்தேன். அத்துடன் இடத்தின் உரிமையாளர்களையும் வட்டார மேலாளருடன் சந்திக்கின்ற சூழ்நிலையையும் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

நான் ஒன்று சொல்ல இவர்களிருவரும் வேறேதாவது சொல்லி குட்டையைக் குழப்பி விட்டால் வில்லங்கமாக போய்விடும் என்று நினைத்தேன்.

ஆகவே அங்கிருந்து தொலைப்பேசி செய்ய விரும்பாமல், ‘பரவாரயில்லை சார். என் வீட்லருந்து பேசினா எங்க பேங்க் விஷயமாவும் ஏதாவது சொல்ல வசதியாயிருக்கும். எனக்கும் அவர்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேச வேண்டியிருக்கு. நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க.’ என்று கூறி சமாளித்துவிட்டு விடைபெற்றேன்.

நான் என் வட்டார மேலாளரிடம் என்ன கூறி அனுமதி பெற்றேன் என்பது முக்கியமல்ல. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்த பண்ணுன்னு பெரியவங்க சொல்லி வச்சது எத்தனை வசதி! அப்படித்தான் இந்த அனுமதியையும் வாங்கினேன். அதன் பின்விளைவு என்னவானாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில். ‘நல்லதா நினைச்சி எது செஞ்சாலும் அது நல்லதாவே முடியும்’ இதுதான் என் கொள்கை.

ஆக, வட்டார மேலாளர் என் பேச்சில் மயங்கி எந்த பிரச்சினையையும் எழுப்பாமல் நான் கூறியபடியே தலைமையலுவலகத்திலிருந்து முன்னர் அளித்த அனுமதியில் சில மாற்றங்களை செய்வித்து ஒரு புது அனுமதி கடிதத்தைப் பெற்றுத் தந்தார்.

கட்டிட உரிமையாள சகோதரர்களுக்கு ஆச்சரியம். ‘சார் என்ன சார் சொன்னீங்க? இவ்வளவு சீக்கிரமா மாற்று ஆர்டர் வந்திருச்சி! நீங்க செஞ்ச இந்த உதவிய நாங்க மறக்கவே மாட்டோம் சார். உங்க பாங்க் திறக்கறதுக்கு என்ன உதவின்னாலும் கேளுங்க சார். எங்களுக்கு இங்க தெரியாத ஆளுங்களே கிடையாது..’ என்று என் கரங்களைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சி வசப்பட்டனர்.

பார்த்தீர்களா? இதான் மனித இயல்பு.. எனக்கு அப்போது இது போன்ற நட்பு கொண்ட மனிதர்கள்தான் தேவைப் பட்டனர். இவ்விரு சகோதரர்களும், சேட்டும் என்னுடைய தஞ்சை வாசத்தில் செய்து தராத உதவிகளே இல்லை என கூறலாம்.

அடுத்தது வங்கி கிளைக்கு தேவையான தட்டு முட்டு சாமான்கள். ஆமாங்க.. ஒரு கிளைய திறக்கறதுங்கறது மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போலத்தான்.

கிளைக்கு இடம் கிடைக்க பட்ட பாட்டை விட கிளைக்குத் தேவையான மேசை, நாற்காலி, இரும்பு அலமாரிகள், இத்யாதி, இத்யாதிகளை.. சேர்ப்பதற்குள் நான் பட்ட பாடு. தஞ்சை அப்போது சரியான பட்டிக்காடு. (இராமனாதன் நிச்சயம் சண்டைக்கு வரப்போறார்).

எல்லாவற்றிற்கும் 55 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த திருச்சிக்குத்தான் செல்ல வேண்டும். மணிக்கொரு பேருந்து இருந்தாலும் போய் வர ஒரு நாள் போய்விடும். எங்களுடைய வங்கி கிளை திருச்சியில் இருந்ததோ பிழைத்தேனோ.. அத்துடன் அப்போது திருச்சி கிளை மேலாளராக இருந்தவர் என் நெருங்கிய நண்பரானதால் நான் கேட்காமலேயே பல உதவிகளையும் செய்து கொடுத்தார்.

அடுத்தது வங்கிக்கு தேவையான கவுண்டர். அது என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்துதான் வர வேண்டும். அங்கிருந்து அனுப்பப்பட்ட ஓரு பொறியாளர் வந்து இடத்தின் வரைபடத்தைப் பார்த்து இடத்தின் அளவிற்கு ஏற்ற வகையில் அம்சமாக வடிவமைத்து கொடுத்தார். நான் அவரிடம் நிலைமையை எடுத்துரைத்து ஒரு வருடத்திற்குள் எந்த பழுதும் இல்லாமல் பிரித்தெடுக்கும் வகையில் அமைத்துத் தரச்சொன்னேன். அவரும் சம்மதித்துவிட்டு சென்றார்.

நான் அத்துடன் அவ்விஷயத்தை மறந்துவிட்டு கிளையைத் திறந்து வைக்க யாரை அழைக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் மேற்கூறிய நண்பர்கள் மூவரும் ஆளுக்காள் யோசனைக் கூறி குழப்பினர்.

அவர்களுக்கு எப்படியாவது எனக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில் இவரைக் கூப்பிடலாம், அவரைக் கூப்பிடலாம் என்று பரிந்துரைத்தனர். அதுவும் சேட்டிற்கு பரலோகத்திலிருந்து பாதாளம்வரை என்பதுபோல் தஞ்சை மாவட்ட ஆட்சியாளரிலிருந்து தஞ்சைப் பல்கலைக் கழக துனை வேந்தர் வரை எல்லோரையும் தெரிந்திருந்தது. தஞ்சையின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராயிருந்த மூப்பனாரும் நெருங்கிய நண்பர் என்றார்.

சென்னையில் முதலமைச்சர் அலுவலகத்தில் நான் பட்ட பாடு அப்போதும் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்ததால் பெரிய தலைகள் யாரையும் அழைத்துவிட்டு என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதுவுமல்லாமல் நான் திறக்கப் போகும் கிளையின் மொத்த அளவே 800 ச.அடிக்கும் குறைவானது. அதுவும் சாலையிலிருந்து சுமார் 50 அடி குறுகிய பாதையில் நடந்து அடையவேண்டும். எந்தவித கவர்ச்சியுமில்லாமலிருந்த அலுவலகத்தை திறக்க மாவட்ட ஆட்சியரையோ, துணை வேந்தரையோ அழைத்தால் வங்கியின் பெயரையே அவமதிப்பதாகிவிடும் என்ற எண்ணத்தில் அவர்களுடைய யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.

சரி.. வேறு என்னதான் செய்வது என்று யோசித்தேன். திறப்பு விழாவை பெரிய விளம்பரமும், ஆர்ப்பாட்டமுமில்லாமல் திறக்க வேண்டும்.ஆறேழு மாதம் கழித்து NTC Showroom கிடைத்ததும் இடமாற்றத்தை பெரிதாக விளம்பரப் படுத்தி விடலாம் என்று நினைத்தேன்.

என்னுடைய வட்டார மேலாளரும் என் யோசனையை ஏற்று என்னுடைய வங்கி சேர்மனையே வைத்து திறப்பு விழாவை நடத்திவிடலாம் என்று தீர்மானித்தார். அவரும் என்னுடைய தலைமையலு வலகத்திற்கு பரிந்துரைப்பதாக உறுதியளித்தார்.

ஆக அந்த பிரச்சினையும் ஒரு வழியாக தீர்ந்தது.

அடுத்தது வங்கிக்கு தேவையான வர்த்தக தொடர்புகள்.

அந்த நேரத்தில் எனக்கு நாயக்கரின் நினைவு வந்தது. அவரைச் சந்தித்து எத்தனை மாதங்களாயிற்று! என்று நினைத்துக் கொண்டு அடுத்த நாளே அவரைச் சென்று பார்த்தேன்.

என்னைப் பார்த்ததுமே வாயெல்லாம் பல்லாக என்பார்களே அதுபோல் ஒரு அகண்ட சிரிப்புடன் என்னை வரவேற்று உபசரித்தார். ‘வாங்க சார். எத்தன மாசமாச்சி.. இப்படி ஒரேயடியா நம்மள மறந்துட்டீங்களே.. அந்த மார்வாடி சேட்டுதான் ரோட்டரி க்ளப்பில பாக்கும் போதெல்லாம் உங்கள பத்தி பேசுவாரு.. என்னமோ அவர்தான் உங்க கார்டியன் மாதிரி எல்லார்கிட்டயும் உங்களுக்கு செஞ்ச உதவிய பத்தி பீத்திக்கிட்டு அலைவாரு.. நானும் நினைச்சிக்குவேன் இந்த மாதிரி பகட்டான ஆளுங்களத்தான் நம்ம தமிளாளுங்க நம்பி நாசமாப் போறாங்க.. அதுலயும் நம்ம சாரும் ஒருத்தராயிட்டார் போலருக்குதேன்னு.. நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க ஜோசப் சார். அவன் சின்ன மீன போட்டு பெரிய சுறாவா பிடிக்கிற ------- பய (அவர் பிரயோகித்த வசவு வார்த்தையை அப்படியே எழுதினால் நன்றாக இருக்காதே என்று வெட்டிவிட்டேன்) மாட்டிக்கிறாதீங்க சொல்லிட்டன்.’ என்று மூன்று மாத காலமாக மனதில் வைத்திருந்த ஆதங்கத்தையெல்லாம் கொட்டித் தீர்த்தார்.

நான் அமைதியாக என்னுடைய உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் கேட்டுவிட்டு. ‘சேச்சே.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க.. நான் என்னோட பத்து வருஷ சர்வீஸ்ல உங்கள மாதிரியும் அவரை மாதிரியும் எத்தனையோ பேரை சந்திச்சிருக்கேன். யார்கிட்ட என்ன பேசணும், எப்படி நடந்துக்கணும்னு எனக்கும் கொஞ்சம் தெரியும் சார். நீங்க கவலைப் படாதீங்க’ என்றேன்.

என்னடா இவன் நம்மளையும் சேர்த்து குறை சொல்றான் போலருக்கே என்று ஒரு விநாடி சந்தேகத்துடன் என்னை பார்த்தவர் பிறகு சுதாரித்துக் கொண்டு, ‘சொன்னார் சார்.. நம்ம மெட்றாஸ் நண்பர் உங்கள பத்தி நிறைய சொல்லியிருக்கார். சார் பாக்கறதுக்கு சின்ன வயசானாலும் பயங்கரமான ஆளுன்னு.. நாந்தான் மறந்துட்டு உங்களுக்கு தேவையில்லாம அறிவுரை சொல்லிட்டேன். மனசுல வச்சிக்காதீங்க.. நீங்க நெனக்கறா மாதிரி இந்த ஊரு ஆளுங்க லேசு பட்டவங்க இல்ல.. சரி சார். உங்களுக்கு எடம் கிடைச்சாச்சி. தொறக்கறதுக்கும் உங்க சேர்மனே போதும்னு முடிவெடுத்திட்டீங்க. இப்ப நான் என்ன பண்ணனும் சொல்லுங்க.’ என்றார்.

நான் அவரிடமிருந்து எத்தகைய உதவியை எதிர்பார்க்கிறேன் என்று சுருக்கமாக கூறினேன்.

‘ஓ அதுவா சார். கவலைய விடுங்க.. நீங்க ஒன்னு பண்ணுங்க சார்.. உங்க பேங்க்ல என்னல்லாம் சேமிப்பு திட்டங்க இருக்கு.. எவ்வளவு வட்டி தருவீங்கன்னு டீடெய்லா ஒரு சீட்டுல எளுதிக் குடுத்துருங்க.. நான் எனக்கு தெரிஞ்ச முதலாளிங்க கிட்டல்லாம் குடுக்கறேன்.. நானே உங்கள கூட்டிக்கிட்டு போயி அறிமுகமும் செஞ்சி வைக்கறேன்.. அப்புறம் அவங்க கிட்டருந்து எவ்வளவு வாங்க முடியுமோ.. அது உங்க திறமைய பொருத்தது.. என்ன சொல்றீங்க?’

அவர் கூறியதும் சரியாகப் படவே சந்தோஷத்துடன் சம்மதித்துவிட்டு, ‘நான் ரெண்டு நாள்ல உங்களுக்கு தேவையான விவரங்களோட வந்து பாக்கறேன்.’ என்று கூறிவிட்டு என் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதம், என் மனைவி படு டென்ஷனுடன், ‘என்னங்க எங்க போனீங்க? உங்க ஹெட் ஆஃபீஸ்லருந்து ஃபோன் வந்துது.. உங்கள உடனே புறப்பட்டு வரச் சொல்றாங்க. ஏதோ சீரியசாம். உங்க ஜோனல் ஆஃபீஸ்லருந்தும் ஃபோன் வந்துது.. நீங்க வந்ததும் கூப்ட சொன்னாங்க. என்ன பண்ணீங்க? அவரு ரொம்ப கோபமா பேசினார்.. நீங்க சாப்டுட்டு போயி இன்னைக்கி ராத்திரி பஸ்சுக்கே புக் பண்ணிட்டு வாங்க.. அதுக்கு முன்னால கோயம்புத்தூருக்கு ஃபோன் பண்ணுங்க..’ என்று படபடத்தார்.

தொடரும்..

8 கருத்துகள்:

  1. என்ன இது.....அடுத்த பிரச்சனையா.....அனேகமா அந்தக் கவுண்டர் பத்துன பிரச்சனையாகத்தான் இருக்கனும்.என்னன்னு நாளைக்கு வர்ர பதிவு வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  2. நிஜம்மா இது மெகா மெகா மெகா
    சீரியல்தான்.

    ம் சொல்லுங்க என்ன ஆச்சுன்னு.

    பதிலளிநீக்கு
  3. Hello TBR

    Waiting for tomorrows post :)
    Murali

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராஜ்,

    பதில் போட லேட்டாயிருச்சி. வெளிய போயிருந்தேன்.

    பிரச்சினைதான் வாழ்க்கை. வாழ்க்கைதான் பிரச்சினை. அதுலயும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்யுது.

    பதிலளிநீக்கு
  5. வாங்க ராகவன்,

    என்னுடைய மேலாளர் அனுபவத்துல எனக்கு வந்த பிரச்சினைகள் அதிகம்தான். ஆனாலும் கடவுள் கிருபையால ஏறக்குறைய எல்லா பிரச்சினைகளும் நல்லதாவே முடிஞ்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  6. வாங்க துளசி,

    சாரிங்க, சரியா ஒரு நாள் கழிச்சி பதில் போடறேன்..

    இது மெகா சீரியல்தான்... போஓஓஓய்கிட்டேஏஏஏஏ இருக்கும். டேய் நிறுத்துறா போறும்னு சொல்றவரைக்கும்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க சத்தீஷ்,

    நான் சொல்ற நிகழ்வுகள் 1981ல நடந்தது சத்தீஷ். கோத்ரெஜ், மெத்தடெக்ஸ் ஃபர்னிச்சருக்கு தஞ்சையில அப்ப டீலரே இருக்கலை.அதான்...

    தஞ்சை உங்க ஊரா சத்தீஷ். கோச்சிக்காதீங்க..

    பதிலளிநீக்கு
  8. வாங்க முரளி,

    இது நீங்க நேத்து போட்ட பின்னூட்டம். இன்னைக்கி பதிவ படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்..

    சாரி, பதில் போட லேட்டாயிருச்சி.

    பதிலளிநீக்கு