திரும்பிப் பார்க்கிறேன் - 53
நானும் அவனும் ஒருவரையொருவர் பார்த்து திகைத்துப் போனோம்.. என்னைப் பார்த்து ஸ்தம்பித்து நின்ற சிறுவன் அடுத்த கணமே படியேறி ஓடி மறைந்தான்.
என்னுடைய முகத்தில் நொடிப்பொழுது தோன்றி மறைந்த அதிர்ச்சியை இரு சகோதரர்களுமே பார்த்து விட்டனர். அத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தவன் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று படியேறி சென்றுவிட்டதும் அவர்கள் இருவருடைய கவனத்தையும் ஈர்த்தது என்று நினைத்தேன்.
இருவருள் மூத்தவர் என்னைப் பார்த்தார். ‘சார் அது நம்ம பேரப்பிள்ளை. அவன் எப்பவுமே அப்படித்தான். புது மனுசங்கள பார்த்தா மிரளுவான். ஆனா பயங்கர வாலு சார். சைக்கிள் மட்டும் கிடைச்சிருச்சின்னா கண்ண மூடிக்கிட்டு ஏதோ ஏரோப்ளேன்ல போறா மாதிரி பறப்பான். இப்படித்தான் பாருங்க ரெண்டு வாரத்துக்கு முன்னால ரோட்ல கண்ண மூடிக்கிட்டு போயி ஒரு ஸ்கூட்டர்ல மோதிட்டு ரோட்ல யாரோ சொன்னாங்கன்னு அவர் மேல போயி போலீஸ்ல புகார் கொடுத்துட்டு வந்து நிக்கறான். இருக்கற வேலையையெல்லாம் விட்டுட்டு ரெண்டு நாளா போலீஸ் ஸ்டேஷன்ல போயி காத்துக் கிடக்க வேண்டி வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஸ்டேஷன்லருந்து திடீர்னு கூப்டு உங்க புகார வந்து வாபஸ் வாங்கிக்குங்க இல்லன்னா உங்க பேரப்பிள்ளை மேலயே ஆக்ஷன் எடுப்பேன்னு மிரட்றாங்க. என்ன பண்றது சொல்லுங்க? இவன் போய் இடிச்ச ஆளு ஏதோ பெரிய எடத்த பிடிச்சிட்டார் போலருக்குது.. ரெண்டு நாள் முன்னால வரைக்கும் எங்களுக்கு ஆதரவா பேசிக்கிட்டிருந்த இன்ஸ்பெக்டர் சட்டுன்னு மாறி நம்மளையே மிரட்டராறு.. ஒரே பேரன்னு செல்லம் குடுத்துட்டு இப்ப பாருங்க அவஸ்தையை.’
நான் என்ன சொல்வதென தெரியாமல் ஒரு நிமிடம் விழித்தேன். பிறகு இருவரையும் பார்த்து, ‘சார் நீங்க சொன்ன ஸ்கூட்டர் ஆளு வேற யாருமில்லை, நாந்தான். நீங்க ஏதோ பெரிய இடம்னு சொன்னீங்களே அது நம்ம சேட்டுதான்.’ என்றேன்.
சட்டென்று முகம் மாறிப் போன இருவரும் ஒருவர் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். மூத்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, படிகட்டிற்கு அருகில் சென்று மேலே பார்த்து உரத்த குரலில், ‘டே முஸ்தபா.. இங்க வா.’ என்று கூப்பிட்டார்.
பிறகு என்னைப் பார்த்து, ‘ஐயோ, சார் நீங்க வருவீங்க, வருவீங்கன்னு அன்னைக்கி பகல் வரைக்கும் நானும் என் தம்பியும் சேட் வீட்ல காத்துக்கிட்டிருந்துட்டு வீட்டுக்கு வந்தப்ப இந்த முஸ்தபா பய வந்து என்னை ஒரு ஆளு இடிச்சிட்டு ஸ்டைலா தலைய சீவிக்கிட்டு போயிட்டாருன்னு கண்ணை கசக்கிக்கிட்டு நின்னப்ப எனக்கும் இடிச்ச ஆளு மேல பயங்கர கோபமா வந்துது சார். ஆனா உங்களுக்காக நாங்க இங்க காத்துக்கிட்டிருந்த நேரத்துல எங்க வீட்டு பையனே இல்ல அதுக்கு காரணமாயிருந்திருக்கான்?’ என்றவாறே என்னை நெருங்கி வந்து கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘சார் யார்னு தெரியாம எக்குத்தப்பா பேசிட்டேன். மனசுல வச்சிக்காதீங்க சார். நா இப்பவே இந்த பயலோட போயி அந்த கம்ப்ளெயிண்ட வாபஸ் வாங்கிக்கறேன். அத்தோட உங்க வண்டிக்கு ஆன செலவையும் நானே கொடுத்திடறேன் சார்.’ என்றவரின் கண்கள் கலங்கிவிட்டன.
நான் பதறிப் போய் என் கைகளை விடுவித்துக்கொண்டேன். ‘என்ன சார் நீங்க? வயசுல எங்கப்பா மாதிரி இருக்கீங்க. நீங்க போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு.. பையன் சிறுசுதானே.. போட்டும் விடுங்க. இப்ப அவன் நம்ம வீட்டு பையனாயிட்டான்.. நீங்க பணமெல்லாம் ஒன்னும் தர வேணாம்.’
தயங்கி, தயங்கி வந்து நின்ற முஸ்தபாவைப் பார்த்தேன். தலையைக் குனிந்துக் கொண்டு நின்ற அவனைப் பார்த்ததும் என்னையுமறியாமல் இரக்கப்பட்டேன்.
‘எலே முஸ்தபா.. சார் கிட்ட மன்னிச்சுக்கங்க சார்னு சொல்லு..’ என்று மிரட்டிய மூத்த சகோதரரை தோளில் தொட்டு, ‘வேணாம் சார். விட்டுருங்க. நீங்க சொன்னா மாதிரி கம்ப்ளெய்ண்ட்ட மட்டும் வாபஸ் வாங்கிட்டீங்கன்னா போறும். இப்படி ஒரு விஷயம் நடந்ததுங்கறதையே மறந்துரலாம்.' என்றேன்.
அதற்குள் மாடியிலிருந்து மொத்த குடும்பமும் இறங்கி வந்து என்னையே பார்த்தது. மூத்த சகோதரர் எல்லோருக்கும் விளக்க அவருடைய மனைவி யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் முஸ்தபாவின் தலையில் நங் கென்று ஒரு குட்டு வைக்க பாவம் பையன் வலியை விட வேற்றாள் முன்னால் அடிபட்டோமே என்ற அவமானத்தில் தலையை குனிந்துக் கொண்டே படியேறி சென்று விட்டான். எனக்கோ தர்மசங்கடமாகிப் போனது.
‘நான் அப்ப வரேன் சார். எங்க வட்டார மேலாளர்கிட்ட இன்னைக்கே ஃபோன் பண்ணி சொல்லிடறேன். நீங்க போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு வந்து எனக்கு ஃபோன் பண்ணுங்க.’ என்றவாறே குழுமியிருந்த எல்லோரையும் பார்த்து பொதுவில் புன்னகைத்தேன்.
திகைத்துப்போய் நின்றிருந்த பெண்கள் என்னை குழப்பத்துடன் பார்க்க இரு சகோதரர்களும் சுதாரித்துக்கொண்டனர். மூத்தவர், ‘சரி சார். பையன் பேர்லதான் முழு தப்பும் எங்களுக்கு தெரியுது சார். இருந்தாலும் நீங்க அத பெரிசு பண்ணாம விட்டதுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை.. மனசுல ஒன்னும் வச்சிக்காதீங்க சார்.’ என்றார் என்னைப் பார்த்து.
நான் சங்கடத்துடன் அவரைப் பார்த்தேன். ‘சார், என்ன சார் பெரிய பெரிய வார்த்தையெல்லாம்.. பேசறீங்க. இத இத்தோட விட்டுருவோம். இன்னொன்னு சார்.. சேட்டுக்கு இந்த விஷயம் தெரிய வேணாம். இன்ஸ்பெக்டர் கிட்டயும் என்னை உங்களுக்கு தெரியும்னு காண்பிச்சிக்காதீங்க. நீங்க போயி கம்ப்ளெய்ண்ட மட்டும் திருப்பி வாங்கிட்டு வந்துருங்க. நான் நாளைக்கு ஒன்னும் தெரியாத மாதிரி இன்ஸ்பெக்டர போய் பாத்துக்கறேன். அவர் ஏதாச்சும் வில்லங்கம் பண்ணா அப்புறம் பார்த்துக்கலாம். என்ன சொல்றீங்க?’
இரு சகோதரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு ஹாலில் குழுமியிருந்த பெண்களையும் தன் மகனையும் அனுப்பிவிட்டு என்னை வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பினர்.
நான் காரில் ஏறும் முன்பு இரு சகோதரர்களும், ‘சார் நீங்க இந்த ஊர்ல இருக்கறவரைக்கும் என்ன உதவி வேணும்னாலும் நீங்க எங்களத்தான் கூப்பிடணும். நீங்களும் நம்ம குடும்பத்துல ஒருத்தர் மாதிரி ஆயிட்டீங்க.’ என்றனர்.
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒப்புக்கு சரியென்று தலையை அசைத்துவிட்டு காரிலேறிக்கொண்டு சேட்டின் அலுவலகம் சென்று அவரிடம் நடந்தவற்றை சுருக்கமாக கூறினேன். அவரும் மகிழ்ச்சியுடன், ‘கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு ஜோசஃப் சார். ஏதோ என்னால முடிஞ்சது. நீங்க உங்க ஜோனல் மேனேஜர வரச்சொல்லுங்க. பேசிட்டு நீங்க என்ன வாடகைக்கு எதிர்ப்பாக்கறீங்களோ அத விட குறைச்சி நான் முடிச்சி தரேன்.’ என்றார்.
நான், ‘உங்க உதவிக்கு ரொம்ப நன்றி சார்.’ என்று கூறிவிட்டு விடைபெற்றேன்.
போகும் வழியில் இந்த சேட் சென்னை சேட் மாதிரியோ அல்லது பிள்ளை மாதிரியோ இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்துக்கொண்டே சென்றேன்.
வீட்டை சென்றடைந்ததும் என் வட்டார மேலாளரை தொலைப்பேசியில் அழைத்து விவரத்தை கூற அவரும் இரண்டொரு நாட்களில் புறப்பட்டு வந்தார்.
அவருக்கும் இடம் மிகவும் பிடித்துப் போக உரிமையாளரிடமிருந்து ஒரு ஐந்து வருட லீசுக்கான எல்லா ஷரத்துக்களையும் உள்ளடக்கிய கடிதத்தைப் பெற்றுக்கொண்டு தலைமையலுவலகத்துக்கு பரிந்துரைப்பதாக அன்றே கோவைக்கு திரும்பிச் சென்றார்.
அடுத்த இரண்டு வாரங்களிலேயே தலைமையலுவலகத்திலிருந்து அனுமதியும் வந்தது.
அதை எடுத்துக்கொண்டு சந்தோஷத்துடன் உரிமையாளரைக் காணச் சென்றபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது.
சை! தஞ்சாவூர் புறப்பட்டு வந்த நேரமே சரியில்லை போலருக்குதே என்று சோர்வடைந்தேன்.
தொடரும்
இது சிறிய உலகம் என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?
பதிலளிநீக்குஆக பையனுக்கு குட்டு கிடைத்தது!
இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க டோண்டு சார், நன்றி.
பதிலளிநீக்குஇப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும்.//
இப்பல்லாம் ரொம்பவே ஜாக்கிரதையாத்தான் இருக்கீங்க போல.
எப்படியோ ஒண்ணுக்குள்ளெ ஒண்ணா ஆயிட்டீங்கன்னு பார்த்தா இன்னும் வில்லங்கமா?
பதிலளிநீக்குஎன்னது மறுபடியும் பிரச்சனையா.....கதைக்குள்ள கதை மாதிரி பிரச்சனைக்குள்ள பிரச்சனையா!
பதிலளிநீக்குஅப்புறம் இன்னொன்னு....நம்ம பையன் மேல தப்பு இருந்தாலும் அடுத்தவங்க முன்னாடி அடிக்கக் கூடாது. அது தப்பு.
வாங்க துளசி,
பதிலளிநீக்குஇன்னும் வில்லங்கமா? //
ஏன் கேக்கறீங்க? வில்லங்கம் இல்லாத வாழ்க்கையில ஒரு த்ரில் இருக்காதுன்னு சும்மாவா சொன்னாங்க.
ஒவ்வொரு வில்லங்கமா சால்வ் பண்ணி அந்த ப்ராஞ்சை தொறக்கறதுக்குள்ள போறும்னு ஆயிருச்சி. இப்ப நினைச்சி பார்த்தாலும் அலுப்பா இருக்கு.
என்ன சார் இது?
பதிலளிநீக்குதஞ்சாவூர்னாலே வில்லங்கம் புடிச்ச ஊருங்கற மாதிரி இமேஜ் டேமேஜ் ஆகிக்கெடக்குதே.. :(
வாங்க இராமநாதன்,
பதிலளிநீக்குவில்லங்கம் ஊர்ல இல்லீங்க. கோச்சிக்காதீங்க.
வில்லங்கம் ஆளுங்களோட நடத்தையிலதான். எந்த ஊர்லதான் வில்லங்கம் புடிச்சவங்க இல்ல.
நான் எங்க ஊர் தூத்துக்குடிய பத்தி எழுதும்போது பாருங்க. அப்போ இத விட வில்லங்கத்த சந்திச்சிருக்கேன்.
கோ.ராகவன் என்ன சொல்ல போறாரோ தெரியலை.
// கோ.ராகவன் என்ன சொல்ல போறாரோ தெரியலை //
பதிலளிநீக்குநான் என்ன சொல்லப் போறேன். தூத்துக்குடிய எனக்கு ஒரு குழந்தையாகவும் வளருகின்ற பையனாகவும் தெரியும். வளர்ந்த மனிதனாகத் தெரியாது. ஆகையால் என்னுடைய பார்வையில் எப்பொழுதும் குழந்தைத் தன சிறுபிள்ளைத்தன தூத்துக்குடியே தெரியும்.
ஆயிரம் இருந்தாலும் தூத்துக்குடி போல வருமா! அடடா!
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குதூ..டிய பத்தி எழுதினதும் நீங்க வருவீங்கன்னு தெரியும்.
நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.. நாம சின்ன வயசுலருந்து வளர்ந்த ஊர பத்தி நம்மளோட கண்ணோட்டம் காக்கைக்கு தன் குஞ்சும் பொன்குஞ்சுதாங்கற மாதிரிதான் இருக்கும். வெளியூர் ஆளுங்க பார்வையிலதான் அதனுடைய விகாரங்கள் தெரியும்.
ஆயிரம் இருந்தாலும் தூத்துக்குடி போல வருமா! அடடா! //
தூ..டி என்ன நம்ம ஊர் எதுவானாலும் அப்படித்தான் தோணும். என்ன இராமநாதன்?