சேட்டுடன் பேசி முடித்துவிட்டு என்னைப் பார்த்த ஆய்வாளரின் முகத்தில் எந்தவித சங்கடமும் தென்படவில்லை. ‘இதெல்லாம் இங்க சகஜமப்பா’ என்று வாய்விட்டு கூறுவார் என்று எதிர்பார்த்தேன்.
‘சார் நீங்க நாளைக்கு இதே நேரத்துல ஒரு அஞ்சு நிமிஷம் வந்துபோனா நல்லாருக்கும். அந்த பையனோட அப்பாவையும் வரச்சொல்றேன். சுமுகமா பேசி அவரோட புகாரை திருப்பிப் பெற்றுக்கொள்ள செய்துவிடலாம்.’
எனக்கும் அப்படி செய்வதுதான் சரியென்று தோன்றவே, ‘சரி, சார்.’ என்று கூறிவிட்டு என் நண்பருடன் வெளியேறினேன்.
அவரைப் பார்க்கவே எனக்கு பாவமாயிருந்தது. யார் இவர்? எனக்கும் இவருக்கும் எத்தனை நாள் பழக்கம்? எதற்காக இவர் பரிந்து பேசி அடிபட்டு அவமானப்படவேண்டும்?
நட்புடன் அவருடைய தோளில் கை போட்டேன். அவர் என்ன நினைத்தாரோ என்னுடைய கையை மெள்ள விலக்கிவிட்டு தள்ளி நடந்தார்.
‘என்னை மன்னிச்சிருங்க. அவர் ஒரு அரசாங்க அதிகாரியா இருந்தும் இப்படி முட்டாள்தனமா உங்க குலப்பேரைச் சொல்லி அவமானப் படுத்துவாருன்னு நான் கனவுலயும் நினைக்கலே. அதுவுமில்லாம உங்கள் அடிச்சி, கழுத்தப் பிடிச்சி வெளியே தள்ளி.. என்னாலத்தான உங்களுக்கு இந்த அவமானமெல்லாம்.. இந்த உதவியை நான் மறக்கவே மாட்டேங்க.’ என்றேன்.
பதிலுக்கு அவர் சிரித்த சிரிப்பில் நான் கண்டது சோகமா, இல்லை சுய பச்சாதபமா என்று தெரியவில்லை.
‘சார்.. நீங்க மெட்றாஸ்லருந்து வர்றதுனால இதெல்லாம் உங்களுக்கு பெரிசா தெரியுதுன்னு நினைக்கிறேன். இங்கல்லாம் இது ரொம்ப சகஜம் சார். போலீஸ்காரங்களுக்கு எங்கள மாதிரி ஆளுங்கன்னா ஒரு இளக்காரம்தான். வேற கேஸ் கிடைக்கலைன்னு வச்சிக்குங்க, எங்கள மாதிரியாளுங்க ராத்திரி ரோட்ல ஒரு கூட்டமா நின்னு பேசிக்கிட்டிருந்தாக் கூட சந்தேக கேஸ்ன்னு பிடிச்சிட்டு போயிருவாங்க. இன்னைக்கி கிடைச்ச அடி மாதிரி இதுக்கு முன்னால பல தடவை வாங்கிருக்கேன் சார். அத நான் அப்பவே மறந்துட்டேன். விட்டுத்தள்ளுங்க.’ என்றவரை வியப்புடன் பார்த்தேன்.
மனதில் என்னையுமறியாமல் ஒரு குற்ற உணர்வு.. இவருக்கு நாம் ஏதாவது கைம்மாறு செய்தே ஆகவேண்டும். இவருடைய பொருளாதார நிலை முன்னேறினால் இவரைப் போன்றவரை ஏளனத்துடன் பார்க்கும் இச்சமுதாயத்தின் பார்வையில் ஒருவேளை மாற்றம் ஏற்படலாம் அல்லவா? அதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். என்னுடைய மேலாளர் அதிகாரத்தை பயன்படுத்தி இவருடைய தொழில் முன்னேற கடன் வழங்குவது மட்டுமே என்னால் முடிந்த காரியம் என்று தீர்மானித்தேன்.
பிறகு, அவரிடமிருந்து விடைபெற்று சேட்டின் அலுவலகம் சென்றேன். நான் அங்கு சென்றடைந்த சமயத்தில் சேட்டுடன் அறுபது வயது மதிக்கத் தக்க ஒருவர் வாசலையொட்டியிருந்த திண்ணையில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
வெள்ளை வெளேர் ஜிப்பா, வேட்டி. தலையில் ஒரு skull cap. அவர் ஒரு இஸ்லாமியர் என்பது அவருடைய உடையிலிருந்தே தெரிந்தது.
நான் என்னுடைய வாகனத்தை வாசலில் நிறுத்தவும் என்னைப் பார்த்துவிட்ட சேட் எழுந்து என்னை நோக்கி வந்தார்.
‘வாங்க சார். எப்படி இருக்கீங்க?’ என்றவரைப் பார்த்து நன்றியுடன் புன்னகை செய்தேன்.
‘பரவாயில்லை சார். உங்க உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ்.’ என்றேன்.
அவர் உரக்க சிரித்தார். ‘என்ன சார்? நன்றிங்கறது ரொம்ப பெரிய வார்த்தை. வாங்க நம்ம நண்பர் உங்களுக்காகத்தான் வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கார்.’ என்று தன்னுடன் அமர்ந்திருந்தவரை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
எனக்கு வெய்ட் பண்றாரா? யாரிவர்?
என் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் புரிந்துக் கொண்ட சேட், ‘சார்தான் நான் அன்னைக்கி சொன்ன கட்டிடத்தோட ஓனர்.’ என்றார்.
அவரும் எழுந்து மரியாதையுடன் கரம் கூப்பி வணக்கம் செலுத்தினார். ‘ சேட், நீங்க ஏதோ விபத்துல சிக்கிக்கிட்டதா சொன்னாரே சார் இப்ப பரவாயில்லையா?’ என்றார்.
‘அது ஒன்னும் பெரிசா இல்ல சார். நவ் ஐ ம் ஓகே.’
சேட் எங்கள் இருவரையும் பார்த்தார். பிறகு என்னிடம், ‘பாய் நமக்கு ஒரு முப்பது வருஷமா பழக்கம் சார். தற்செயலாத்தான் ஒரு நா பார்த்துட்டு உங்க விஷயத்த பத்தி சொன்னேன். சாருக்கு தெற்கு வீதியில ஒரு பில்டிங் இருக்கு. அங்க இப்ப NTC Showroom ஒன்னு இருக்குது. அஞ்சு வருஷம் லீஸ் போட்டு அது முடிஞ்சி போயி ஒரு வருஷம் ஆவுது. காலி பண்ணாததால பாய் மதறாஸ் ஹைக்கோர்ட்ல கேஸ் போட்டு ஜெயிச்சிட்டாரு. லீஸ் முடிஞ்சி ஒரு வருஷத்துக்குள்ள வேற இடம் பார்த்துட்டு ஓனர்கிட்ட சாவி குடுத்துரணும்னு ஜட்ஜ்மெண்ட் வந்து ஆறுமாசமாயிருச்சி. இன்னும் ரெண்டே வாரத்துல காலி பண்ணிரடறோம்னு டெல்லியிலருந்து தகவல் வந்திருக்குன்னு சொன்னார். உங்களுக்கு உங்க ஹெட் ஆஃபீஸ்லருந்து சாங்ஷன் வர்றதுக்கு அவ்வளவு நாளாகுமில்லையா? அதான் நீங்க பாயோட போயி எடத்த பாருங்க. பிடிச்சிருந்தா பேசி முடிச்சிரலாம்’. என்றவர் அவரைப் பார்த்து, ‘என்ன பாய்?’ என்றார்.
‘ஓ, அப்படியே செஞ்சிரலாம் சார். பில்டிங் பக்கத்துலதான். பார்த்துட்டு சொன்னீங்கன்னா நானும் எங்க அண்ணாகிட்ட பேசிட்டு சொல்லிருவேன்.’ என்றார்.
சேட், ‘அப்ப என்ன சார்? நீங்க ரெண்டு பேரும் நம்ம கார்ல இப்பவே போய்ட்டு வந்துருங்க. உங்க ஸ்கூட்டர் இங்கயே இருக்கட்டும் சார்.’ என நடந்து செல்லும் தூரத்திலேயே இருந்த இடத்திற்கு அவருடைய சொல்லைத் தட்ட முடியாமல் அவருடைய காரிலேயே சென்றோம்.
பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு இடம் பிடித்துப் போனது. கடைக்குள் நான் சென்றபோது மேலாளரும் கடை சிப்பந்திகளும் என்னை விரோதத்துடன் பார்த்தனர். நான் அதைப் பொருட்படுத்தாமல் கடை முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். கடைக்கு பின்புறத்தில் இருந்த கிடங்கையும் சேர்த்து சுமார் 2000 சதுர அடி இருந்தது. இன்னும் பதினைந்து வருடங்களுக்கு இந்த இடம் போதுமானதாக இருக்கும். அடிக்கடி இடம் மாற்ற தேவையாயிருக்காது என்று நினைத்தேன்.
‘இடம் பிடிச்சிருக்கா?’ என்று தயக்கத்துடன் கேட்ட உரிமையாளரைப் பார்த்து 'ஆமாம்’ என்று தலையசைத்தேன்.
‘ஆனா சார். கோயம்புத்தூர்லருக்கற என்னோட வட்டார மேலாளர் வந்து பார்த்துட்டு தான் எங்க ஹெட் ஆஃபீசுக்கு பரிந்துரை செய்வார். சுமார் ஒரு மாசம் எடுக்கும். பரவாயில்லையா?’ என்றேன்.
அவருடைய முகத்தில் ஏமாற்றத்திற்கு பதில் நிம்மதி தெரிந்தது. ‘தாராளமா ஆவட்டும் சார்.’
எனக்கும் ‘அப்பாடா இந்த இடம் அமைஞ்சிட்டுதுனா மத்த வேலைகளையெல்லாம் பார்க்கலாம்.’ என்ற நிம்மதி பிறந்தது. ‘சரி சார். நான் சேட்டுக்கிட்ட விஷயத்தை சொல்லிட்டு கிளம்பறேன்.’ என்றவாறு புறப்பட்டேன்.
ஆனால் அவர், ‘என்ன சார்? நம்ம அண்ணன் வீடு எதிர்த்தாப்பலதான் இருக்குது. அவர்தான் நம்ம குடும்பத்துல மூத்தவர். அவர்கிட்ட கேக்காம நான் ஒன்னும் செய்ய மாட்டேன். வாங்க அவரையும் பார்த்துட்டு போயிரலாம்.’ என்றார்.
நான் எதிரே இருந்த இரண்டு மாடி கட்டிடத்தைப் பார்த்தேன். கீழ் தளத்தில் ஒரு துணிக்கடை. முதல் மாடியில் ஒரு அரசுடைமையாக்கப் பட்ட வங்கி. கட்டிடத்தின் முகப்பு பார்ப்பதற்கு அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. தெற்கு வீதியில் இருந்த கட்டிடங்களில் தனியாக தெரிந்தது.
‘சரி சார்.’ என்று அவருடன் துணிக்கடைக்குள் நுழைந்து ‘கல்லா பெட்டியில்’ நடு நாயகமாக வீற்றிருந்தவரைப் பார்த்தேன். தன் இளைய சகோதரரைப் போலவே ஆனால் சற்றே குட்டையாக, பருமனாக தெரிந்தார். எப்போதும் சிரித்த முகம்.
என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டேன். ‘தம்பி நேத்தைக்கித்தான் உங்களப்பத்தி சொன்னார் சார். நான் மேல இருக்கற மேனேஜர்கிட்ட விசாரிச்சேன். உங்க பேங்க பத்தி நல்லபடியா சொன்னார். தம்பிக்கும் என்ன மாதிரியே பாங்க் கனெக்ஷன் கிடைச்சா நல்லதுதானேன்னு உடனே சரின்னுட்டேன்.’ என்றவரிடம் ‘ரொம்ப தாங்க்ஸ் சார்.’ என்றேன்.
உரக்க சிரித்தார். அவர் சிரித்தபோது அவருடைய உடம்பு முழுவதும் குலுங்கி சிரிப்பில் சேர்ந்துக் கொள்ள நான் வியப்புடன் பார்த்தேன்.
‘தாங்க்ஸ்லாம் எதுக்கு சார். அதான் மாசா மாசம் டாண்னு வாடகை கொடுக்க போறீங்களே. தம்பிக்கு அதான வேணும்?’ என்றவாறே கல்லாவிலிருந்து இறங்கி, ‘வாங்க சார். கடைக்கு பின்னாலதான் நம்ம வீடு.. முத முதலா வந்திருக்கீங்க. ஒரு காப்பி குடிச்சிட்டு போலாம்.’ என்று என் பதிலுக்கு காத்திராமல் கடையின் பின்புறம் நோக்கி நடந்தார்.
நான் தயக்கத்துடன் என்னுடன் வந்த அவருடைய சகோதரரைப் பார்த்தேன். அவர், ‘வாங்க சார். அண்ணா இப்படித்தான். அவர் சொன்னா சொன்னதுதான். அப்பீலே கிடையாது. வாங்க, ஒரு அஞ்சு நிமிஷம் உக்காந்திட்டு போயிரலாம்.’ என்று என் முன்னால் செல்ல நானும் வேறு வழியில்லாமல் அவரை பின் தொடர்ந்தேன்.
கடையின் பின்னால் இருந்த கதவைத் திறந்துக் கொண்டு நுழைந்தால் ஒரு விசாலமான வரவேற்பரை. அதையொட்டி ஒரு அறை. படுக்கையறை போல் தெரிந்தது. அதற்கடுத்தாற்போல் சமையலறை மற்றும் உணவறை. வரவேற்பரையின் கோடியில் மாடிக்கு செல்ல படிகள். கச்சிதமாக இருந்தது.
‘வாங்க சார். கீழ இந்த ஹால், என்னோட படுக்கையறை, கிச்சன் அப்புறம் டைனிங் ஹால். மத்ததெல்லாம் ரெண்டாவது மாடியில. எனக்கு மூனு பசங்க சார். ஒரு பையன், ரெண்டு பொண்ணு. மூத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டேன். அதுக்கு ஒரேயொரு பையன். எட்டாவது படிக்கறான். மருமகனுக்கு துபாய்ல வேலை. அதனால என் பொண்ணும் பேரனும் எங்களோடதான். என் பையன் ஸ்கூல் முடிச்சிட்டு என்னோட கடையில இருக்கான். கடைசிப் பொண்ணு படிக்குது. என் பேரனுக்கும் என் கடைசி பொண்ணுக்கும் ரெண்டு வயசுதான் வித்தியாசம்.’ என்று என்னைப் பார்த்து கண்ணடித்தார். சரியான தமாஷ் பேர்வழி. அவருடன் நான் தஞ்சையில் சந்தோஷமாய் கழித்த மாலைப் பொழுதுகள் இன்றும் என் நினைவில் பசுமையாக..
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மாடிப் படிகளிலிருந்து இறங்கி வந்த அந்த சிறுவன்!
நானும் அவனும் ஒருவரையொருவர் பார்த்து திகைத்துப் போனோம்.. என்னைப் பார்த்து ஸ்தம்பித்து நின்ற சிறுவன் அடுத்த கணமே படியேறி ஓடி மறைந்தான்.
தொடரும்..
இஸ்லாமியர்னு சொன்னதும் அவர் சைக்கிள் விஷயம் பேச வந்தவருன்னு நெனச்சேன். ஆனா கதை வேற பக்கமாப் போனதால கொஞ்சம் அத லூசுல விட்டேன். இப்பப் பாத்தா கடைசில...இல்ல..இல்ல..மொதல்ல இருந்தே அந்த பையன் அந்த வீட்டுப் பையந்தனா! இருந்தாலும் உங்களுக்கு அந்தக் கட்டடம் கெடச்சிருக்குமுன்னு நெனைக்கிறேன். அடுத்த பதிவுல தெரிஞ்சிரப் போகுது.
பதிலளிநீக்குஎன்னங்க , இப்படி சஸ்பென்ஸைப் போட்டு உடைச்சிட்டீங்க!
பதிலளிநீக்குவாங்க ராஜ்,
பதிலளிநீக்குஉங்க யூகம் சரிதான். நாளைய பதிவ படிச்சா புரியும்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஇஸ்லாமியர்னு சொன்னதும் அவர் சைக்கிள் விஷயம் பேச வந்தவருன்னு நெனச்சேன்//
ஓ, அப்படியும் ஒரு ரூட் இருக்கோ. நீங்க சொன்னதும்தான் எனக்கும் தோனுது. கட்டடம் கிடைக்காம இருக்குமா? ஆனா ஒன்னு நான் நினைச்ச இடம் கிடைக்கலை.
ஆமாங்க துளசி,
பதிலளிநீக்குஇப்ப நீங்க சொன்னதும்தான் இன்னைக்கி அத உடச்சிருக்க வேணாமேன்னு தோணுது.
ஆனா பாருங்க.. கட்டடத்துல ஒரு சஸ்பென்ஸ் இருக்கு..
ஒரு நாவலாசிரியருக்கான சரக்கு உங்களிடம் இருக்கிறது. சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு போகிறீர்கள்.
பதிலளிநீக்குவாங்க சுதர்சன்,
பதிலளிநீக்குஉங்க கருத்துக்கு நன்றி..
கற்பனை செய்து எழுதும் கதைகளுக்கு ஈடான சுவாரஸ்யம் ,திருப்பங்கள்..கலக்குங்க சார்!
பதிலளிநீக்குவாங்க ஜோ, நன்றி.
பதிலளிநீக்குநம் வாழ்க்கைக்கும் கதாசிரியர்கள் கற்பனக்கும் அவ்வளவு வித்தியாசமில்லையே ஜோ.
ஸ்டீவ் வாகோட புத்தகத்த படிச்சி பார்த்தீங்கன்னா தெரியும். அவ்வளவு சுவாரசியமா இருக்கும்.