‘சார் நீங்க ஒருவாரம், பத்து நாளைக்கு நடக்கக் கூடாதுன்னு ஒரு சர்டிபிக்கேட் வாங்கி குடுத்துறுங்க சார். நான் ரெண்டு நாள் கழிச்சி வரேன்.’ என்று கூறி மறுபதிலுக்கு காத்திராமல் வெளியேறி சைக்கிளை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்தார்.
அவர் சென்றதும் நான் என்னுடைய மெக்கானிக் நண்பரை தொலைப்பேசியில் அழைத்து காவல்நிலையத்திலிருந்து வந்து சென்ற விஷயத்தை கூறினேன். அவர் அப்போதுதான் நான் நேற்றைய பதிவில் காவல்நிலையத்தில் நடந்ததாய் எழுதிய சம்பாஷனையின் விவரத்தைக் கூறினார். நான் ‘என்னங்க நீங்க? எனக்கு உதவி பண்ண போயி நீங்க வம்புல மாட்டிக்கிட்டீங்களே என்றேன். ‘அத அப்புறம் பார்த்துக்கலாம் சார். குடுக்க வேண்டியத குடுத்தா கேசாவது, மண்ணாவது. ஒன்னுமில்லாம பண்ணிரலாம். அதுக்கு நான் பொறுப்பு. இப்போ உங்களுக்கு ஒரு மெடிக்கல் சர்ட்டிபிக்கேட் வேணும், அவ்வளவுதானே சார்? இன்னைக்கி சாயங்காலம் நானே போயி வாங்கிட்டு வந்திடறேன்.’ என்றார். அவர் கூறியதைப்போலவே அன்று மாலையே சான்றிதழைக் கொண்டு வந்து கொடுத்தார்.
அவர் வந்து சென்றவுடனே சேட்டிடமிருந்து தொலைப்பேசியும் வந்தது! ‘என்னாச்சி சார்? உங்களுக்கு ஆக்சிடெண்ட்டுன்னு கேள்விப்பட்டேனே?’ என்றார்.
நான் சுருக்கமாக நடந்ததைக் கூறினேன். அவர், ‘அப்படியா சார். கவலையே படாதீங்க. நீங்க பூரணமா குணமானதும் எனக்கு ஃபோன் பண்ணுங்க. உங்களோடவே நானும் வந்து இந்த கேசே இல்லாம பண்ணிரலாம். அந்த பையனுக்கு வேணும்னா வேறொரு சைக்கிள் வாங்கி குடுத்துட்டா போறது. அடுத்த தடவை போலீஸ்காரர் வந்தா என் பேரைச் சொல்லுங்க போதும். அவர் புரிஞ்சிக்கிட்டு அதுக்கப்புறம் உங்களைத் தொந்தரவு பண்ணமாட்டார்.’ என்றார்.
ஆனால் நான் அவருடைய பெயரை உபயோகப்படுத்த விரும்பவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து என்னுடைய மெக்கானிக் நண்பரையே அழைத்தேன். அவர் அதற்குள்ளாகவே தள்ள வேண்டியதை தள்ளிவிட்டு என்னுடைய வாகனத்தை காவல் நிலையத்திலிருந்து மீட்டு வந்துவிட்டார்.
என்னுடைய வாகனத்திலேயே அவருடன் சென்று காவல்நிலையத்திலிருந்த தலைமை ஆய்வாளரைக் கண்டு நடந்தவற்றை ஆங்கிலத்தில் சுருக்கமாகக் கூறினேன். ஆனால் என்னுடைய சரளமான ஆங்கிலமே எனக்கு வினையாய் முடிந்தது.
தலைமை ய்வாளர் சுத்த தமிழ் பிரியரோ அல்லது ஆங்கில விரோதியோ தெரியவில்லை. என்னை மேலும் கீழும் ஏதோ ஒரு கொலைகாரனைப் பார்ப்பதுபோல் பார்த்தார். பிறகு ஏளனத்துடன், ‘ஏன் சார். என்னமோ வெளிநாட்டுலருந்து வந்தா மாதிரி பேசறீங்களே ஒரு அடிப்படைப் போக்குவரத்து விதி, இருசக்கர வாகனங்கள் சாலையின் இடது பக்க ஓரத்தில் செல்லவேண்டும் என்பது. நீங்க பாட்டுக்கு ஏதோ கனரக வாகனத்தைச் செலுத்துபவர் போன்று சாலையின் நட்ட நடுவில் சென்றிருக்கிறீர்கள்? இது என்ன உங்க மெட்றாஸ் என்று நினைப்பா?’ என்றார்.
நான் அவரை வியப்புடன் பார்த்தேன். என்னுடன் வந்த நண்பர் சட்டென்று கோபத்துடன் அவரைப் பார்த்தார். ‘என்ன சார் கேள்வி இது? சார் நடு ரோட்டுல போக்கூடாது. ஆனா சைக்கிள்ல வர்ற ஒரு பையன் நடு ரோட்டுல போலாமா? அவன் பாட்டுக்கு ஓரமா போயிருந்தா இவர் ஏன் சார் அவன் மேல போயி மோதியிருக்கப் போறார்?’
ஆய்வாளருக்கு தன் மடமையை போயும் போய் ஒரு மெக்கானிக் கண்டுபிடித்து ஒரு வெளியூர்காரர் முன் காட்டிவிட்டானே என்று அசாத்திய கோபத்துடன் எழுந்து மேசையை சுற்றிக்கொண்டு வந்து என் நண்பரை சட்டையைப் பிடித்து கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
அதுவரை பொறுமையாயிருந்த நான் என் நிதானத்தையிழந்தேன். ‘சார். என்ன இது காட்டுமிராண்டித்தனமா பிஹேவ் பண்றீங்க? அவர் சொன்னதுல என்ன தப்பு? நான் தான் நடு ரோட்டுல வந்தேன். தப்புன்னு சொல்றீங்க சரி, ஒத்துக்கறேன். ஒரு சைக்கிளிஸ்ட்டுக்கும் அதே ரூல்தானே?’ என்றேன் மீண்டும் ஆங்கிலத்தில்.
அது அவருடைய கோபத்தை மேலும் கூட்டியது. மெக்கானிக்கை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார். ‘டேய் அவரோட பேசி முடிக்கற வரைக்கும் இங்கேயெ நிக்கணும். உள்ளாற வந்தே பிடிச்சி நிரந்தரமா உள்ள வச்சிருவேன்.’ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார். பிறகு அருகிலிருந்த காவற்காரரைப் பார்த்தார். ‘யோவ் இவரோட வண்டிய பிரேக் இன்ஸ்பெக்டருக்கு அனுப்பினீங்களா?’ என்றார் கோபத்துடன்.
அவர் பணிவுடன், ‘விபத்து நடந்த அன்னைக்கே அனுப்பிட்டோம் சார். அவர் வண்டியில பிரேக் ரொம்ப ஷார்ப்பா இருந்ததாலதான் பையன் பிழைச்சான்’னு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கார் சார்.’என்றார்.
ஆய்வாளர் முகத்தில் ஈயாடவில்லை. கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு என்னைப் பார்த்தார். ‘சரி, சார். விபத்து நடந்தவுடனே காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்ற விதி உங்க மெட்றாஸ்ல கிடையாதா?’ என்றார் ஏளனத்துடன்.
நான் பார்த்தேன். இவருடைய லொள்ளு அடங்காது என்று நினைத்தேன். எப்படியாவது என்மேல் குற்றம் கண்டுபிடிக்காமல் விடமாட்டார் என்று தோன்றியது. சட்டென்று சேட் கூறியது நினைவுக்கு வந்தது. ‘சார் என் நண்பருக்கு ஒருத்தருக்கு ஒரு தொலைப்பேசி செய்யவேண்டும்.’ என்று சுத்த தமிழில் கேட்டேன்.
வில்லன் சிரிப்பு ஒன்று பதிலாய் வந்தது. ‘அட தமிழ்லகூட பேசுவீங்களோ? அப்புறம் எதுக்கு இங்கிலீஷ்ல பேசி பந்தா பண்றீங்க? சரி யாரோட பேசப்போறீங்க? ஏதாச்சும் சிபாரிசுனா அத இப்பவே மறந்துருங்க. இந்த --- (அவர் பெயர் வேண்டாம் என்று நினைக்கிறேன்) கிட்ட அதெல்லாம் நடக்காது. சொல்லிட்டேன்.’ என்றார்.
‘சார். ப்ளீஸ். என் நண்பருக்கு நான் இங்கு இருக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும். நான் இந்த நேரத்தில் அவரைக் காண வருவதாய் கூறியிருந்தேன். என்னைத் தேடிக் கொண்டிருப்பார். அதனால்தான்..’ என்று இழுத்தேன்.
‘சரி பண்ணிக்குங்க..’ என்றார் அலட்சியத்துடன்.
நான் என் நினைவிலிருந்த சேட்டின் எண்ணுக்கு தொலைப்பேசி செய்து விஷயத்தைக் கூறினேன். அவர் உடனே, ‘என்ன சார், நான்தான் தனியா போகாதீங்கன்னு சொன்னேனே.’ என்று கூறிவிட்டு நான் அதுவரை பேசிக்கொண்டிருந்த ய்வாளரின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவர் இருக்காரா?’ என்றார்.
நான் ஆமாம் என்றேன்.
‘அவர் பக்கத்துல இருந்தா ஃபோனைக் கொஞ்சம் கொடுங்க சார். நான் பேசறேன்.’ என்றார்.
நான் தயக்கத்துடன் எதிரில் நின்று என்னையே சந்தேகக் கண்ணோடு பார்த்துக்கொண்டிருந்த ஆய்வாளரை நோக்கி ஒலிவாங்கியை நீட்டினேன்.
‘யாரு கலெக்டர் யாராவது பேசறாங்களா?’ என்ற கேலியுடன் ஒலிவாங்கியை என்னிடமிருந்து பிடுங்கியவர் கோபத்துடன், ‘சார் நீங்க யாராயிருந்தாலும் இவர் விஷயத்துல ஒன்னும் செய்ய முடியாது. இவர் இடிச்ச பையன் சீரியஸ் காயங்களோட ஆஸ்பத்திரியில இருக்கான். அதனால...’ என்று படபடத்தவர் அடுத்த நிமிடமே காற்று இறங்கிய பலூன்போலானார். என்னைத் திரும்பி பார்த்த பார்வையே சேட்டுக்கு இவர் ‘கடமை’ப் பட்டிருக்கிறார் என்பதைத் தெளிவாக காட்டியது. அதுவரை கோபத்துடன் விறைப்பாக நின்றவர் பவ்யத்துடன், ‘அப்படியா சேட்.. என்கிட்ட உங்க நண்பர் உங்க பேரைச் சொல்லியிருந்தா போறுமே சார்.. சாரி சார்.. அப்படியே செஞ்சிரலாம் சார்.. ஆக்சுவலா அந்த பையன்மேலதான் தப்பு.. அவங்களையும் சாரையும் நேர்ல சந்திக்கவச்சி விஷயத்தை சுமுகமா முடிச்சிடறேன் சேட். நீங்க கவலையேப் படாதீங்க. என்ன சார், புது சைக்கிளா? சேச்சே, அதெல்லாம் வேணாம் சார். சும்மா சின்னதா ஒரு வீல்ல பெண்டுதான். அத அப்பவே அவன் நிமித்திக்கிட்டு வண்டியிலதான் வீட்டுக்கு போனான். சார் மட்டும் அப்பவே ஒரு புகார் கொடுத்திருந்தார்னா அந்த பையனையும் அவனோட பேரண்ட்சையும் பிடிச்சி வார்ன் பண்ணியிருக்கலாம்.’ என்று வழிந்தவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
தொடரும்
வாங்க ராஜ், நன்றி
பதிலளிநீக்குரொம்ப கரெக்டா சொன்னீங்க. அது சாமி கும்பிடற இடமாருந்தாலும் சரி. தெரிஞ்சவங்க இருந்தாத்தான் எங்கயும் காரியம் நடக்கும். நமக்கு வர்ற கோபத்த பத்தி யார் கவலைப் படப்போறா?
எங்க போனாலும் நியாயத்துக்கு மதிப்பில்லைங்க. அவனவன் ஆடுற ஆட்டம் இருக்கே. அடேங்கப்பா. நேர்மைன்னா என்ன விலைன்னு கேக்குற இந்த மாதிரி ஆளுங்களாலதான் பிரச்சனைகளே வர்ரது.
பதிலளிநீக்குபோலீஸ்னா என்ன வேணாலும் செய்யலாங்குறதுதான் இப்ப நடைமுறையா இருக்கு. இந்த நிலை மாறனும்.
சிபாரிசு வேணூம்.
பதிலளிநீக்குஅதுவும் பெரிய இடத்து சிபாரிசு.
ஆனா இருக்குற இடத்துக்குத் தகுந்தாப்புலே சிபாரிசுகள் ரகம் மாறும்.
பேசாம முதல்லேயே சேட் பேரைச் சொல்லியிருக்கலாம்.
ஹூம்...விதி யாரை விட்டுச்சு!
எனக்கு ஏற்பட்ட ஒரு நிகழ்வை பங்கு கொள்ள விழைகிறேன். மெரினா கடற்கரைசாலையில் விவேகானந்தர் இல்லம் அருகே காரில் வந்து கொண்டிருந்தபோது சடாரென நாலைந்து காவல்துறை வண்டிகள் சினிமாகாட்சி போல முன்னே சென்று வழிமறித்து வண்டியை நிறுத்தினர். என்ன என்பதற்குள் வாகனசாரதியை வெளியே இழுத்து நாலைந்து அறைகள் விட்டனர். நாங்கள் எந்த விதிமீறலையும் செய்யாதிருந்த போது இதென்ன அடாவடித்தனம் என்று சுதாரிப்பதற்குள் மற்றொரு வண்டியில் "அது இந்த கார் இல்லை" என்று சொல்ல அனைவரும் உடனே எங்களை விட்டு அவர்கள் வண்டியில் பறந்தோடினர். எங்களிடம் ஒரு சாரி கூட கூறவில்லை. ஏதோ வண்டி CM Convoy குறுக்கே சென்று விட்டதாகவும், அதை எங்கள் வண்டி என்று தவறுதலாக எண்ணியுள்ளனர் என்றும் கூடியிருந்தவர் தெரிவித்தனர்.காவலரின் ஆக்ரோஷத்தை அன்றுதான் முழுமையாக உணர்ந்தேன்.
பதிலளிநீக்குவாங்க ராகவன், நன்றி
பதிலளிநீக்குஎங்க போனாலும் நியாயத்துக்கு மதிப்பில்லைங்க. //
எவ்வளவு சரியான வார்த்தை! அதுவும் நம்ம பக்கத்துலருக்கற நியாயத்துக்கு..
போலீஸ்னா என்ன வேணாலும் செய்யலாங்குறதுதான் இப்ப நடைமுறையா இருக்கு. இந்த நிலை மாறனும்//
இத விட அக்கிரமம் நம்ம ஊர்லயே நடந்தது ராகவன். அத படிச்சிட்டு என்ன சொல்ல போறீங்களோ தெரியலை.
வாங்க துளசி, நன்றி.
பதிலளிநீக்குசிபாரிசு வேணூம்.
அதுவும் பெரிய இடத்து சிபாரிசு.//
இப்பத்தான் எல்.கே.ஜிக்கே சிபாரிசு தேவையிருக்கே.
போலீஸ் ஸ்டேஷனுக்குப் போறதே கேவலம்னு நினைக்க வைக்கறது இந்த மாதிரியான ஆளுங்கதான்.
பேசாம முதல்லேயே சேட் பேரைச் சொல்லியிருக்கலாம்.
ஹூம்...விதி யாரை விட்டுச்சு! //
இப்பவாவது செய்யணும்னு தோணிச்சேன்னு அன்னைக்கி நினைச்சேன். சும்மா வெட்டி ஈகோ பார்த்துட்டு அடி விழறவரைக்கும் காத்திருக்காம போனேனேன்னு நினைச்சிக்கிட்டேன்.
என்ன அக்கிரமம் மணியன்!
பதிலளிநீக்குபடிக்கற எங்களுக்கே ஆத்திரம், ஆத்திரமா வருதே உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.
இப்பல்லாம் இந்த மாதிரி விஷயங்கள எழுதறதே ஆபத்தோன்னு தோனுது. நடக்கறது காட்டாட்ச்சியோன்னு கூட நினைக்கத் தோனுது. சட்டத்த நடைமுறைப்படுத்த வேண்டிய காவல்துறையே இப்படி சீர்கெட்டு நினைக்குது..
எங்க போயி சொல்றது? தலைவிதின்னு நினைச்சி அனுபவிச்சிட்டு கமுக்கமா யார்கிட்டயும் சொல்லாம போயிரவேண்டியதுதான்.