இது இத்தொடரின் ஐம்பதாவது பகுதி!!
ஆனால் நான் சென்றடைந்தது சேட் அலுவலகத்திற்கல்ல. தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு!
தஞ்சை மருத்துவக் கல்லூரியிலிருந்து தஞ்சை டவுணுக்கு செல்லும் சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இருப்பினும் சாலையின் அகலம் ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் சென்று,வர மட்டுமே போதுமானதாயிருந்தது. அதுவும் அவ்விரண்டு வாகனங்களும் பேருந்து மற்றும் கனரக வாகனங்களாகிவிட்டால் என்னைப் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு இடமே இருக்காது.
மேலும் சாலை இருமருங்கிலும் இருந்த குடியிருப்புகளைவிட சுமார் பத்தடி உயரத்தில் அமைக்கப் பட்டிருந்தது. ஆகவே சாலையின் ஓரத்தில் செல்லும் என்னைப் போன்ற சிறு வாகன ஓட்டிகள் போக்குவரத்து மிகுந்த நேரங்களில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டும்.
பின்னிரவு நேரங்களிலும் அப்படித்தான். எதிரே வரும் வாகனங்களின் அதிப் பிரகாசமான விளக்கொளி சில சமயங்களில் எதிரே இருக்கும் சாலையே தெரியாது. நொடிப்பொழுதில் நிதானம் தவறினால் வாகனத்தோடு சேர்ந்து பத்தடிக்கு கீழே போய் விழவேண்டியிருக்கும். அதுபோல் நானும் விழுந்து பெரிய காயங்களில்லாமல் சிராய்ப்புகளுடன் தப்பித்திருக்கிறேன்.
இச்சாலை அப்படியென்றால் டவுணுக்குள் சாலையின் இருமருங்குகளில் பெரும் பகுதியை அடைத்துக்கொண்டு செல்லும் சைக்கிள்கள். 1980களில் தஞ்சையென்ன தூத்துக்குடி, ஏன் மதுரை போன்ற நகரங்களிலும் சைக்கிள்கள்தான் அதிகம். அவர்களுக்குப் போகத்தான் மற்றவர்கள் சாலையைப் பயன்படுத்த முடியும்.
ஆனால் சம்பவத் தினத்தன்று வாகன நெரிசலுடன் குறித்த நேரத்தில் நான் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய வேண்டுமே என்ற என்னுடைய சிந்தனையும் நான் சந்தித்த விபத்துக்கு காரணமாயிருந்திருக்கலாம்.
நான் எனக்கு முன்னால் அணிவகுத்து சென்று கொண்டிருந்த சைக்கிள் பயணிகளை முந்திக்கொண்டு செல்ல முயன்ற அதே நேரத்தில் எனக்கு எதிரே வந்துக்கொண்டிருந்த சைக்கிள் ரிக்ஷாவின் பின்புறம் சைக்கிளில் வேகமாய் வந்துக்கொண்டிருந்த ஒரு பதிமூன்று வயது மாணவனும் சட்டென்று ரிக்ஷாவை முந்திக்கொண்டு வர அதை சற்றும் எதிர்பார்க்காத நான் வாகனத்தின் முன் நிறுத்தத்தை (Front wheel brakes) இறுக்கிப் பிடித்தும் நிற்காமல் சைக்கிளில் மோதவே நிலைதடுமாறி பக்கவாட்டில் சரிந்து ஒரு பத்தடி வரை தரையில் தேய்த்துகொண்டே சென்ற வாகனத்துடன் சென்று விழுந்தேன்.
யாருடைய பாக்கியமோ, எங்களுக்கு முன்னும் பின்னும் கனரக வாகனங்கள் இல்லாததால் பெருத்த விபத்திலிருந்து இருவருமே தப்பித்தோம். சைக்கிளின் முன் சக்கரம்
வளைந்துப்போனதைத் தவிர மாணவனுக்கு சிறு சிராய்ப்புகள் மட்டுமே. ஆனால் என்னுடைய வலது கால் மூட்டில் கை வளையல் அளவுக்கு பெரிய, ஆழமான ஓட்டை. மேல் சதை பிய்ந்து.. எலும்பு மட்டும்தான் தெரியவில்லை.. ஹெல்மெட் அணிந்திருந்ததாலும் வாகனம் பக்கவாட்டில் சரிந்ததாலுமோ என்னவோ தலையில் அடிபடாமல் தப்பித்தேன். என்னுடைய வாகனத்தின் முன் பகுதி மட்டும் முற்றிலும் வளைந்து முன்விளக்கும் உடைந்து போயிருந்தது.
அதில் வேடிக்கை என்னவென்றால் முந்தைய நாள் மாலையில்தான் என்னுடைய வாகனத்தை வாட்டர் வாஷ் செய்து சர்வீஸ் செய்திருந்தேன். முன், பின் இரண்டு பிரேக்குகளையும் பரிசோதித்து சரிபார்த்து தந்திருந்தார் என்னுடைய மெக்கானிக். நான் தஞ்சைக்கு வந்து சேர்ந்த நாள் முதல் அவரிடமே என் வாகனத்தை பழுது பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த மூன்று மாத காலத்தில் என்னைப் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்திருந்த அவர் என்னை மிகவும் பணிவுடன் நடத்துவது வழக்கம். அவருடைய சிறிய கடைக்கு சென்றுவிட்டால் ராஜமரியாதைதான்! நான் கிளையைத் துவங்கி வழங்கிய முதல் கடன் அவருக்குத்தான். இப்போது அவர் நன்றாக உழைத்து தன் தொழிலில் மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளதாக எங்களுடைய தஞ்சை கிளையின் இப்போதைய மேலாளர் ஒருமுறை கூறியபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
என்னுடைய அதிர்ஷ்டம், எனக்கு விபத்து நேர்ந்த இடம் அவருடைய கடைக்கு நேர் எதிரில்! விபத்து எழுப்பிய சப்தத்தில் கடையில் அமர்ந்திருந்த அவர் உடனே எழுந்து ஓடிவந்தார். விபத்தில் சிக்கியது நான்தான் என்று அறிந்ததும், கோபத்தில் சைக்கிளில் வந்த மாணவனை சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துவிட்டார். அதுவே பின்னால் ஒரு பெரும் பிரச்சினையாக வந்தது. அந்த மாணவர் அழுதுக்கொண்டே தன்னுடைய வாகனத்தை தள்ளிக்கொண்டு சாலையின் ஓரத்தில் சென்று அமர்ந்துக்கொண்டார். அவரைச் சுற்றி பாதசாரிகள் ஒரு சிறு கூட்டம் நின்றுக் கொண்டு தலைக்குத் தலை அறிவுரைகள் வழங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். மாணவன் ஒரு இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவராம். அடித்தவன் நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட ---- இனத்தைச் சார்ந்தவராம்! அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.
என்னுடைய வாகனத்தை என்னுடைய மெக்கானிக் நண்பரே தூக்கி தன் கடைக்குள் சென்று நிறுத்தினார். நான் வலியுடன் எழுந்து அந்த நேரத்திலும் கலைந்து கிடந்த தலைமுடியை ஒதுக்கிவிட்டுக் கொண்டு (இதை ஏன் குறிப்பாக எழுதுகிறேன் என்பது இச்சம்பவத்தின் பின்விளைவுகளை எழுதும்போது புரிந்துக்கொள்வீர்கள்) அவருடைய கடைக்குள் சென்றமர்ந்தேன். ‘சார் பக்கத்துல எனக்கு தெரிஞ்ச டாக்டர் க்ளினிக் இருக்கு சார். அங்க போயி முதலுதவி பார்த்துக்கலாம். ஆனா இது விபத்துங்கறதுனால நாம பெரிய ஆஸ்பத்திரி இல்லன்னா மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு போறதுதான் சார் நல்லது.’ என்றார்.
எனக்கோ அடிபட்டதை விட என்னைத் தேடிக்கொண்டு சேட் என்ன டென்ஷனில் இருப்பாரோ என்பதுதான் கவலையாக இருந்தது. நல்ல இடம் என்று வேறு சொன்னாரே. சே, இந்த பையனுக்கு மோதறதுக்கு வேற வண்டியா கிடைக்கல? இந்த நேரம் பார்த்து இப்படி ஆயிருச்சே என்று சிந்தனை சென்றது.
பிறகு சுதாரித்துக்கொண்டு இப்போது நடக்க வேண்டிய விஷயத்தைப் பார்ப்போம். இடத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். என்னுடைய வீட்டிலிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மிக அருகாமையில் இருந்ததால் அங்கேயே செல்வோம் என்று அவரிடம் கூறினேன். அவரும் சம்மதிக்க அவருடயை வாகனத்திலேயே அருகிலிருந்த மருத்துவரிடம் சென்றேன். மருத்துவர் வந்திருக்கவில்லை. (இவரும் பிறகு எனக்கு மிக நெருங்கிய நண்பரானார்.) ஆயினும் க்ளினிக் ஊழியர்களே காயத்தைச் சுத்தம் செய்து உடனே மருத்துவமனைக்குச் சென்று சேர்ந்துக்கொள்ளுமாறும் குறைந்தபட்சம் ஓரிரவாவது மருத்துவர்களின் நேர் பார்வையில் இருப்பதுதான் நல்லது என்று அறிவுறுத்தினார்கள்.
உடனே என்னுடைய நண்பர், ‘சார் ஒன்னும் கவலைப் படாதீங்க. அந்த ஆஸ்பத்திரியில ரெண்டு, மூனு டாக்டர்ங்க அப்புறம், டாக்டருக்கு படிக்கற சில பசங்க வண்டியையும் நாந்தான் பாக்கறேன். அவங்க இப்ப டியூட்டிலதான் இருப்பாங்க. நான் உங்கள சேர்த்துட்டு அப்படியே உங்க வீட்ல போய் சொல்லிடறேன் சார்’ என்று ஆபத்பாந்தனாய் வந்தார்.
முன்பின் தெரியாத ஒரு ஊரில் வெறும் மூனு மாச பழக்கத்தில் அந்த நண்பர் அடுத்து வந்த இரண்டு நாட்களில் என்னுடைய மூத்த சகோதரனைப் போல் செய்த உதவிக்கு நான் செய்த கைம்மாறுதான் அவருடைய தொழிலை மேம்படுத்த நான் வழங்கிய கடனுதவி!
நான் மருத்துவமனைக்கு சென்றடைந்த நேரத்தில் என்னுடைய நண்பருக்கு அறிமுகமான மருத்துவ மாணவர்தான் வெளி நோயாளிகள் பகுதியில் இருந்தார். அவர் என் நண்பரைக் கண்டவுடன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்தார். என் நண்பர் நடந்ததை சுருக்கமாக கூறவே அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். ‘சார் நீங்க மெட்றாஸ்லருக்கற ----- சர்ச்சுக்குத்தான வருவீங்க? உங்க பொண்ணு கூட துருதுருன்னு இருக்குமே.. நீங்க எங்க சார் இங்க?’ என்றார். உடனே என்னை அறையிலிருந்த நீள மேசையில் படுக்க வைத்து என்னுடைய காயத்தை பரிசோதிக்க ஆரம்பித்தார்.
அட பார்றா! உலகம் கையளவுதான்னு சொல்றது எத்தனை சரியாயிருக்கு! சென்னையில் ஓரிரண்டு முறை மட்டுமே பார்த்த ஒருவரை என்னுடைய மகளுடைய சுட்டித்தனம் கவர அவரும் நானும் ஊர் விட்டு ஊர் வந்து சந்திக்க ஏதுவாயிருந்திருக்கிறது!
இதைத்தான் இறைவனுடைய விளையாட்டு என்கிறோம். அந்த மாணவர் அருகிலிருந்த மாணவர்கள் விடுதியிலேயே தங்கியிருந்ததால் நான் மருத்துவமனையில் தங்கியிருந்த அன்று இரவு முழுவதும் டியூட்டியில் இருந்து என்னை அவருடைய மூத்த சகோதரரைப் பார்ப்பதுபோல் பார்த்துகொண்டார்.
என்னுடைய மெக்கானிக் நண்பர் என்னை அனுமதித்தவுடனே என்னுடைய வீட்டிற்குச் சென்று என் மனைவியிடம் பதட்டப்படாமல் நடந்ததை விளக்க என்னுடைய வீட்டு உரிமையாளர் அதே காலனியிலிருந்த ஒரு நண்பரின் நாற்சக்கர வாகனத்தில் என் மனைவியை அழைத்துக்கொண்டு உடனே வந்தார்.
வந்ததுமே அவர் கேட்ட முதல் கேள்வி, ‘சார் போலீஸ்ல புகார் கொடுத்தீங்களா?’ என்பதுதான்.
சற்று முன்னர் ஊசி மூலம் செலுத்தப்பட்ட தூக்க மருந்தின் மயக்கதிலிருந்த நான் அவர் கேட்ட கேள்வியின் முக்கியத்துவத்தை உணராமல், ‘என் மேல தப்பிருந்தாத்தான சார் பயப்படணும்? அந்த பையனுக்கும் பெரிசா காயமில்லை.. அப்புறம் எதுக்கு போலீஸ், கேஸ்னு போகணும்? எனக்கு அதுக்கெல்லாம் நேரம் எங்க சார் இருக்கு?’ என்றேன்.
அவரும் என்னுடைய தூக்க கலக்கத்தைப் பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார். அவருடைய கேளிவியிலிருந்த முக்கியத்துவம் பிற்பாடு காவல் நிலையத்திற்கு நடையாய் நடந்தபோதுதான் தெரிந்தது!
நாம்தான் சம்பந்தப் பட்டவர் மேல் புகார் செய்ய வேண்டும் என்பதில்லையே.. நம் மேலும் பாதிக்கப்பட்டவர் புகார் செய்யலாமில்லையா? அதுதான் நடந்தது.
அம்மாணவருக்கு இந்த விவரமெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் அவரை குழுமியிருந்த கும்பலில் சில எல்லாம் தெரிந்த மேதாவிகள் அம்மாணவனைக் கட்டாயப்படுத்தி, பழுதடைந்த வாகனத்திற்காவது நஷ்ட ஈடு கிடைக்குமே என்று அறிவுறுத்தி என்னைப் பற்றி அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள் என்பது பிறகுதான் தெரிய வந்தது..
விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனமும் விபத்து நடந்த இடத்திற்கு நேர் எதிரே இருந்த கடையில்தான் இருக்கிறது என்று புகாரில் குறிப்பிட அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே வாகனத்தைக் கைப்பற்றியதுடன் என்னை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு திரும்பிய மெக்கானிக்கையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, ‘ஏண்டா டேய், உன் கண் முன்னால விபத்து நடந்திருக்கு. போலீஸ்க்கு சொல்லணும்னு உனக்கு தெரியாது? பையனுக்கும் உடம்பெல்லாம் காயம். ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிருந்தா என்னடா ஆவறது. அத்தோட என்னை தைரியமிருந்தா தோளுக்கு மேல வளர்ந்த அதுவும் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவன்னு தெரிஞ்சும் கை நீட்டியிருப்பே.. நீ யார்றா? நீ எப்படிறா அவன் மேல கைய வைக்கலாம்? அவங்க அப்பாரு யார்னு தெரியுமாடா? எழுந்து தலைய சீவிக்கிட்டு ஸ்டைலா போன ஆள கொண்டு போயி சும்மா ஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டு டிராமா போடறியா?’ என ஜாதி பெயரைச் சொல்லி அவமானப்படுத்தி விசாரித்திருக்கிறார்களென்பதும் பிறகுதான் எனக்கு தெரியவந்தது.
எல்லாம் எனக்கு உதவப்போய் வீணாய் வந்த தொல்லை அவருக்கு. இதில் கவனிக்க வேண்டியதென்னவென்றால் இத்தனை நடந்திருந்தும் அடுத்த நாள் என்னை மருத்துவமனையிலிருந்து விடுவித்தபோது வந்து என்னுடனேயே வீடுவரை வந்தபோதும், என்னிடம் ஒன்றும் கூறாமல் இருந்ததுதான். 'அந்த நேரத்துல உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னுதான் சார் பேசாம இருந்துட்டேன். அதுவுமில்லாம இந்த விஷயத்த உங்க வீட்ல கேட்டா அவங்க வேற வருத்தப்படுவாங்களேன்னு நினைச்சேன். என் ஜாதி பேர சொல்லி கேவலப்படுறது ஒன்னும் எனக்கு புதுசில்ல சார். அது எங்கள மாதிரி ஆளுங்களோட தலைவிதி. அதுக்கெல்லாம் வருத்தப்பட ஆரம்பிச்சா பிழைப்பு நடக்காது சார். நீங்க மெட்றாஸ் மாதிரி ஊர்லருந்து வந்திருக்கீங்க. அதான் உங்களுக்கு இது பெரிசா தெரியுது. நீங்க நல்லானதும் வாங்க சார். போலீஸ் கேஸ்லாம் சும்மா பூச்சாண்டி காட்றா மாதிரி. கொடுக்க வேண்டியத கொடுத்தா கேசாவது மண்ணாவது. அத நான் பார்த்துக்கறேன்.' என்றார் அவர் சர்வ சாதாரணமாக!
அடுத்த நாள் காலை நான் வீடு வந்து சேர்ந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரிடம் இருந்து பெற்ற விலாசத்தைக் கண்டுபிடித்து என் வீடு தேடிவந்தார் ஒரு காவற்காரர். நல்ல வேளை, அவர் வந்த நேரத்தில் என் மனைவியும் என் வீட்டுக்காரரின் மனைவியும் அருகிலிருந்த கடைக்கு சென்றிருந்தார்கள். என் மேல் புகார் பதிவு செய்திருப்பதைக் கூறி என்னை விசாரிக்க வந்த காவற்காரரின் துரதிர்ஷ்டம் என்னுடனிருந்த என் வீட்டுக்காரரிடம் அகப்பட்டுக் கொண்டார்.
‘ஏங்க நீங்க போலீஸ்னா என்ன வேனா பண்ணுவீங்களா? அவரே பாவம் வெளியூர்காரரு. அடிபட்ட காயம் ஆர்ற வரைக்கும் கட்டில விட்டே எழுந்துக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார். நீங்க பாட்டுக்கு உடனே வந்து இன்ஸ்பெக்டர பாக்கணும்கறீங்க? அவர் வரமாட்டார். நான் சொன்னேன்னு போயி உங்க இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுங்க. இதுக்கும் மேல ஏதாச்சும் இங்க வந்து தொந்தரவு பண்ணினீங்கன்னா எனக்கு உங்க மேலதிகாரியையும் தெரியும். செல்லிட்டேன்’ என்று அவர் செய்த கலாட்டாவை சமாளிக்க முடியாமல் திணறிப்போய் விட்டால் போதும் என்று விசாரைனையைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, ‘சார் நீங்க ஒருவாரம், பத்து நாளைக்கு நடக்கக் கூடாதுன்னு ஒரு சர்டிபிக்கேட் வாங்கி குடுத்துறுங்க சார். நான் ரெண்டு நாள் கழிச்சி வரேன்.’ என்று கூறி மறுபதிலுக்கு காத்திராமல் வெளியேறி சைக்கிளை எடுத்துக்கொண்டு சிட்டாய் பறந்தார்.
நான் ஆச்சரியத்துடன் என் வீட்டுக்காரரைப் பார்த்தேன். ‘சார் உங்களுக்கு உண்மையிலேயே அவங்க மேலதிகாரியைத் தெரியுமா?’ என்றேன்.
அவர் ஒரு விஷம புன்னகையுடன், ‘ஓ தெரியுமே..’ என்று சற்று நிறுத்திவிட்டு, ‘ஆனா அவருக்குத்தான் என்னைத் தெரியுமான்னு தெரியலை’ என்றார் விவேக் பாணியில். சாரிங்க.. அப்போ விவேக் அரைக்கால் சட்டைய போட்டுக்கிட்டு எந்த பள்ளியிலயாவது படிச்சிக்கிட்டு இருந்திருப்பார்! அதனால விவேக்தான் இவர் பாணியில் பிற்காலத்துல பேசினார்னு சொல்லணும்.
தொடரும்..
Viriviruppana arai sathaththukku vazthukkal. Century? double or triple?!! ( I too studied in donbosco high school, but born in the year u finished... 1976-80)
பதிலளிநீக்குNever bother about your quantity, your quality speaks !!Your style of narration is simply superb !
பதிலளிநீக்குஅடடா! பாருங்க....ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைலயும் நம்ம படிக்க வேண்டிய பாடம் எவ்வளோ இருக்கு.
பதிலளிநீக்குபடக்குன்னு கைய மட்டுமில்ல வாயையும் நீட்டக் கூடாதுன்னு தெரியுது. ஆனா சந்தர்ப்பம் வரும் போது அறிவு மறந்து போய் உணர்ச்சி வேலையக் காட்டுது.
வாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குநீங்களும் தொன்போஸ்கோ பள்ளியில்தான் படித்தீர்களா? எப்ப படித்தால் என்ன? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது.
நீங்கள் எதிர்பார்ப்பதுபோல செஞ்சுரியையாவது தாண்டவேண்டும் என்பதுதான் ஆவல்.
வாங்க மணியன்.
பதிலளிநீக்குநான் 50வது பதிவு என்று போட்டது ஒரு குறிப்புக்காகத்தான்.
நீங்கள் சொல்வது சரிதான். எண்ணிக்கையல்ல முக்கியம், தரம்தான்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குவாழ்க்கைதான் நமக்கு சிறந்த பாடம். அனுபவங்கள்தான் ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது என்பது எத்தனை சத்தியமான வார்த்தை!
நன்றி ராகவன்.
நல்லவேளை அதிகம் ஆபத்தில்லாம்ப் போச்சு.
பதிலளிநீக்குஅரை சதத்துக்கு வாழ்த்துக்கள்!
நேத்தே படிச்சுட்டேன், ஆனா பின்னூட்டப்பெட்டி திறக்கமாட்டேன்னுடுச்ச்சு.
முக்கியமான வாழ்க்கைப்பாடம்: கீழே விழுந்தவுடனே எந்திரிக்கும்போது தலைமுடியை
கோதிவிடக்கூடாது. அதுவும் ஸ்டைலா கோதவே கூடாது. இல்லீங்களா?:-)
அதுவும் ஸ்டைலா கோதவே கூடாது. இல்லீங்களா?:-) //
பதிலளிநீக்குரொம்ப கரெக்ட் துளசி. அந்த ஸ்டைல்தான் நம்மள சிக்கல்ல மாட்டி விட்டுருச்சி.
இப்ப அந்த கவலையேயில்லை :-((