'அப்படியா, அட! இதுவும் நல்ல யோசனையாச்சே. எனக்கேன் இது தோனாம போச்சி?' என்று நினைத்துக்கொண்டு, ‘சரிம்மா. நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. சாமியார் எந்த நேரத்துல ஃப்ரீயா இருப்பார். உங்களுக்கு தெரியுமா?’ என்றேன்.
‘காலைல பதினோரு மணிக்கு மேல போனா பார்க்க முடியும் சார்.’
என்னுடைய பணிப்பெண் கூறிய ‘கோயில்’ ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தேவாலயம். அதற்கு மிக அருகாமையிலேயேதான் நானும் தங்கியிருந்தேன்.
நானும் அதே மதத்தைச் சார்ந்தவன் என்பதால் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேவாலயத்தில் நடைபெறும் வழிபாட்டிற்கு செல்வது வழக்கம். பணிப்பெண் குறிப்பிட்ட ‘சாமியார்’ என்ற பங்கு குருவையும் இரண்டு, மூன்று முறை சந்தித்திருக்கிறேன்.
ஒரு தேவாலயத்தை சுற்றி வசித்து வந்த கிறீஸ்துவக் குடும்பங்களை அடக்கிய பகுதிதான் ‘பங்கு’ என அழைக்கப்படும். ஒவ்வொரு பங்குக்கும் ஒரு தேவாலயம் இருக்கும். இது போன்ற பல பங்குகளைக் கொண்டது ஒரு மறைமாவட்டம். பங்கின் தலைவர் பங்கு குரு என்றும் மறைவாட்டத்தின் தலைவர் பிஷப் எனவும் அழைக்கப்படுவர்.
இக்குறிப்பிட்ட பங்கு குரு என் மனைவியின் சொந்த ஊரான தூத்துக்குடியைச் சார்ந்தவர் என்பதால் என் மனைவி தன்னை ஒரு முறை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அதைத் தொடர்ந்து வெகுநேரம் அவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது என்னைப் பற்றியும் நான் தஞ்சையில் தங்கியிருப்பதன் நோக்கம் பற்றியும் அவருடன் கூறியிருந்தேன். ஆனால் கிளைக்கான இடத்தேவையைப் பற்றி நான் கூறவில்லை.
நான் தேவாலயத்தை அடைந்து அவருடைய அறைக்கதவு அடைத்திருக்கவே வெளியே வராந்தாவில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்தேன்.
சிறிது நேரத்திற்குப்பிறகு பங்குக் குருவின் சாத்திய அறையிலிருந்து பேச்சு சப்தம் கேட்டது. பங்கு குருவின் குரல் எனக்கு நன்றாக பரிச்சயமாகியிருந்ததால் அறையினுள் பேசிக்கொண்டிருந்தவர் அவரல்ல என்பதை உணர்ந்தேன்.
அவருடன் பேசிக்கொண்டிருந்தவர் பேச்சிற்கிடையே ‘சாமி, சாமி’ என்றதால் அவரும் ஒரு குரு என்று மட்டும் தெரிந்தது.
‘என்னய்யா இது, இந்த நூற்றாண்டிலயும் இன்னமும் கோவில் தேர் இந்த சாதிக்காரங்க இருக்கற தெருக்கள்ல போக்கூடாதுன்னு சொல்றீங்களே.. இறைவன் எல்லாருக்கும் பொதுன்னு எத்தனை முறை கோவில் பிரசங்கத்துல சொல்லியிருக்கோம். அதுக்கப்புறமும் ஊர் பெரியவரா இருந்துக்கிட்டு நீங்களே இப்படி சொன்னா எப்படிய்யா?’ இது குருவின் குரல்.
அவருடன் பேசிக்கொண்டிருந்தவரின் கோபக்குரல் உடனே ஒலித்தது. ‘சாமி உங்களுக்கு சின்ன வயசு. பங்கு சாமிக்கு இந்த ஊர் பிரச்சினை நல்லா தெரியும். திடீர்னு கிளம்பி அவர் ஊருக்கு போயிட்டதாலத்தான் இப்ப பிரச்சினையே.. நாளைக்கு பங்கு திருவிழாவோட முதல் நாள். கொடியேத்தி, முதல் நாள் தேர் ஊருக்குள்ள சுத்தி வரணும். நாங்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணியாச்சி. கடைசி நேரத்துல அந்த ---- பயல்க வேணும்னே ஊர் கட்ட மீறி உங்க கிட்ட வந்து புகார் பண்ணியிருக்கானுக. காலங்காலமா இந்த பங்குல இதான் முறை. கோவில் தேரை அலங்கரிக்கறதுலருந்து, தூக்கிக்கிட்டு பவனியா போயி கோவிலுக்கு திரும்பி வர வரைக்கும் எங்க சாதியாளுங்கத்தான் செய்வோம். ஏன்னா இந்த கோவிலுக்கு எடம் கொடுத்ததும் பக்கத்துலருக்கற எங்க சாதியை சேர்ந்த ஆட்டோ ஒர்க்ஷ¡ப் முதலாளிதான். வருஷா வருசம் இந்த கோவில் நிர்வாகத்துக்கு ஆகுற செலவுல பெரும் பாதி கொடுக்கறதும் எங்க விவசாய நிலத்துலருந்துதான். அது உங்களுக்கு தெரியாது சாமி.. நீங்க ஒரு வாரம், பத்து நாள்னு இருந்துட்டு போயிருவீங்க.. நீங்க ஏதாச்சும் புதுமைன்னு சொல்லிக்கிட்டு செய்யற காரியத்தல ஊர்ல பிரச்சினை வந்துரக்கூடாது சாமி. நீங்க இதுக்கு ஒத்துக்கலைன்னா நாங்க பிஷப் ஹவுசுக்கு போக வேண்டியிருக்கும். சொல்லிட்டன்.’
போச்சிரா.. தேவாலயத்துலயும் சாதி பிரச்சினைதானா? ஒட்டுமொத்த கிறீஸ்துவர்களையே தலித் இனத்தை சார்ந்தவர்களென நினைக்கும் சாதி இந்து சமூகத்தினரிடையே வாழும் கிறீஸ்துவ சமூகத்தினரிடையேயும் சாதிப் பேய் தலைவிரித்தாடுவதைப் பார்த்த எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
‘அய்யா.. கோபப்படாதீங்க. உங்க பங்கு குரு ஏதோ அவசர வேலையா போனதா சொன்னீங்களே. அவர் போனதுக்கு உங்களுக்கிடையில இருக்கற சாதி பிரச்சினையை சரிபண்ண முடியலையேங்கற வேதனையிலதான். உங்க பங்கு திருவிழான்னு தெரிஞ்சும் ஊருக்கு போறதா சொல்லிட்டு போயிட்டார். இந்த காரணத்துக்காகத்தாங்க உங்க கோவில்ல யாரும் குருவா வரதுக்கு யோசிக்கறாங்க. நீங்க சொன்னா மாதிரி நான் ஒருவாரம் ஆனதும் போயிருவேன். போன ரெண்டுநாள்ல உங்களுக்குள்ளருக்கற இந்த பிரிவினையினால எவ்வளவு நொந்துபோயிருக்கேங்கறது உங்களுக்கு இன்னமும் புரியலைன்னு நினைக்கிறேன். கடைசியா ஒன்னு சொல்றேன்.. பங்குலருக்கற எல்லா சாலைகள் வழியாகவும் தேர் பவனி செல்லும். அப்படியில்லாத பட்சத்துல இத்தனை வருஷமா நடந்துக்கிட்டிருக்கற தேர் பவனி நாளைக்கு கண்டிப்பா நடக்காது. நீங்க பிஷப் ஹவுஸ் போய் புகார் செஞ்சாலும் இதான் நடக்கும். நம்ம பிஷப்போட கண்டிப்பான உத்தரவின்படிதான் நானே இங்கே வந்திருக்கேன். இறைவன் எல்லோருக்கும் பொது.. என்னை மிரட்டி பணிய வைக்க முடியும்னு நீங்க நெனச்சீங்கன்னா அது தவறுங்கறத உங்களுக்கு தெரியப் படுத்தத்தான் உங்கள வரச்சொன்னேன். நான் சொல்ல வந்தத சொல்லிட்டேன். முடிவெடுக்க வேண்டியது நீங்கதான்.’ என்று தீர்மானமாக கூறிய குருவை சந்தித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து காத்திருந்தேன்.
அறைக்கதவுகளைப் படார் என்று திறந்துக்கொண்டு ஆவேசத்துடன் வெளியேறுபவரைப் பார்த்தேன். அட! இவர்தானா என்று நினைத்தேன். எல்லா ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டிலும் முதல் வரிசையில் அவருக்கென்று பணியாட்கள் வீட்டிலிருந்து கொண்டுவந்த நாற்காலி ஒன்றை போடுவார்கள். அவர் அதில் அமர்ந்துக்கொள்ள அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ண்களும், பெண்களும் அவரைச்சுற்றி அமர்ந்திருப்பர்.
எல்லா தேவாலயங்களையும் போலவே இத்தேவாலயமும் சிலுவை வடிவில் அமைந்த்திருந்தது. கோவிலின் நடுப்பாகத்தில் ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்து வழிபாட்டில் கலந்துக்கொண்டதைக் கண்டிருக்கிறேன். ஆனால் சென்னையிலுள்ள கோவில்களில் யார் எங்குவேண்டுமானாலும் அமர்ந்துக்கொள்ளலாம். ஆதலால் நானும் என் மனைவியும் எப்போதும் ஆண்கள் பகுதியிலேயே அமர்ந்துக் கொள்வோம். வியப்புடன் எங்கள் இருவரையும் பார்த்த மற்றவர்களைப் பொருட்படுத்தமாட்டோம்.
கோவிலின் வாயிற்கருகே எப்போதும் ஏழை எளியவர்கள் (பெரும்பாலோர் வயல்களில் கூலி வேலை செய்து பிழைப்போர்) ஒரு சிறு கும்பலாக அமர்ந்து வழிபாட்டில் கலந்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
தேவாலயத்தில் வழிபாட்டுக்கிடையில் ‘நன்மை’ வழங்கப்படுவதைக் கண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இயேசு கிறிஸ்துவை உயிரோடு நன்மை எனப்படுகின்ற சிறு அப்பத்தின் வழியாக உண்கிறோம் என்பது கத்தோலிக்க கிறீஸ்துவர்களின் நம்பிக்கை. அதை குரு வழிபாடு நடத்தும் மேடையைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த கிராதி எனப்படும் சிறு மேடையில் பக்தர்கள் முழந்தாள் படியிட்டு நாவில் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நான் குறிப்பிட்ட தேவாலயத்தில், கிராதி எனப்படும் மேடையில் கோவில் வாசலில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் சென்று நன்மையைப் பெறமாட்டார்கள். குருவே ஆலயத்தின் முன்பாகத்தில் இருப்பவர்களுக்கு வழங்கிவிட்டு அவர்களிடம் சென்று வழங்குவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இதற்கும் பாழாய்போன இந்த சாதிதான் காரணம் என்று எனக்கு விளங்கவில்லை. அதாவது கீழ்சாதியினர் மேற்குடியினரோடு ஒன்றாய் கலந்து கிராதியில் முழந்தாட்படியிட்டு வாங்க தகுதியில்லாதவர்கள் போலும். இறைவனின் முன்னால் நாமெல்லோரும் சமம் என்று வலியுறுத்தப்படும் மதத்திலும் சாதி பிரச்சினை!
கோபத்துடன் வெளியேறியவரைத் தொடர்ந்து அறையை விட்டு வெளியே வந்த குரு வயதில் மிகவும் இளையவராகத் தெரிந்தார். வெளியே வந்தவர் சில நிமிடங்கள் சற்றுமுன் வெளியேறிச் சென்று கோவில் வளாகத்தில் நின்றுக் கொண்டிருந்த காளை மாடு பூட்டப்பட்டிருந்த கூண்டு வண்டியில் ஏறிக்கொண்டு சென்றவரையே பார்த்துக்கொண்டு நின்றார். வண்டி கோவிலை விட்டு வெளியேறவும் அறைக்கு திரும்பியவர் என்னைக் கண்டு சற்றே திடுக்கிட்டார். பிறகு சுதாரித்துக்கொண்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார்.
கறுத்த வானில் சட்டென்று தோன்றி மறையும் மின்னலைப் போன்றிருந்தது அவருடைய புன்னகை.
‘வாங்க சார். உங்கள இதுக்கு முன்னால நான் பார்த்ததில்லைன்னு நினைக்கிறேன்.’ என்றார்.
நான், ‘ஆமாம் ஃபாதர். எனக்கு மதறாஸ்..’ என்று ஆரம்பித்து என்னைப் பற்றியும் நான் வந்த நோக்கத்தைப் பற்றியும் சுருக்கமாக குறினேன்.
‘அப்படியா, சந்தோஷம். வாங்க உக்கார்ந்து பேசலாம்.’
இருவரும் அறைக்குள் நுழைந்து அமர்ந்தோம்.
அவர் சிறிது நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.
பிறகு ‘நீங்க வந்து ரொம்ப நேரம் ஆச்சா சார்?’ என்றார்.
'ஆமாம் ஃபாதர். நீங்க அவர்கிட்ட அடிச்ச லெக்சர் முழுசையும் கேட்டேன்.’
அவர் உரக்க சிரித்தார். தஞ்சைவாசிகளுக்கே உள்ள பழக்கம்போலும். ‘நீங்க சொன்னது சரிதான். அது வெறும் லெக்சராத்தான் அவருக்கே தோன்றியதுன்னு நினைக்கறேன். நான் சொன்னத அவர் சட்டையே பண்ண மாட்டார். என்ன பண்றது சார்? ஆரம்பத்திலேயே இவங்க வம்சத்துலருந்து கோவிலுக்கு இடம் தானமாத் தரேன், வருஷா வருஷம் கோவில் நிர்வாகத்துக்கு விவசாயத்துலருந்து கிடைக்கற வருமானத்துல ஒரு பகுதிய தரேன்னு சொன்னப்பவே வேண்டாம்னு மறுத்திருக்கணும். செய்யலை.. இப்ப என்னடான்னா தாந்தான் இந்த கோவில் தர்மகர்த்தான்னு நினைச்சிக்கிட்டு தான் வச்சதுதான் சட்டம்கறா மாதிரி நடந்துக்கிறார். இவரை சமாளிக்க முடியாமத்தான் இங்க வர எல்லா பங்கு குருங்களும் விட்டா போறும்னு ஒரு வருஷத்துலயே பிஷப் கால்ல கைல விழுந்து மாறி போயிடறாங்க. ஒரு பரீட்சார்த்தமாத்தான் மிரட்டி பார்த்தேன். பலன் ஏதும் இருக்கப் போறதில்லைன்னு தெரியும். இருந்தாலும் கல்லெறிவோம் விழுந்தா பழம். இல்லைன்னா கல்லுன்னு நினைச்சித்தான் செஞ்சேன்.’
நான் பதில் பேசாமல் அவரையே பார்த்தேன்.
‘என்ன சார் பாக்கறீங்க?’ என்றார்.
‘இல்ல ஃபாதர், அவர்கிட்ட நீங்க சம்மதிக்காத பட்சத்துல இந்த தேர்பவனியே நடக்காதுன்னு மிரட்டினீங்களே.. அது சாத்தியம்னு நீங்க நினைக்கறீங்களா?’
அவர் இல்லை என்று தலையை அசைத்தார். ‘நிச்சயமா முடியாது. அப்படி நடக்காதுன்னு அவருக்கும் தெரியும். இருந்தாலும் இதுவரைக்கும் எந்த ஒரு குருவும் செய்யாத காரியம் நான் விட்ட மிரட்டல். அது அவரை யோசிக்க வைக்கும்னு நினைக்கறேன். பாக்கலாம். அது கிடக்குது சார். நீங்க வந்த விஷயத்தை நான் விசாரிக்கறதுக்கு ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க. டவுண்ல மொத்தமா அஞ்சி பங்குங்க இருக்கு. மத்த பங்கு குருவுங்க கிட்டயும் நான் பேசிட்டு.. அத்தோட பிஷப் ஹவுசுக்கும் டவுண்ல ப்ராப்பர்டீஸ் இருக்கு.. கேட்டுட்டு சொல்றேன். நீங்க ரெண்டு நாள் கழிச்சி ஃபோன் பண்ணுங்க. அதுக்குள்ள ஏதாச்சும் வந்தா நான் இந்த கார்ட்லருக்கற நம்பருக்கு ஃபோன் பண்றேன்.’ என்றவாறு எழுந்து நிற்கவே நான் புரிந்துக்கொண்டு விடைபெற்றேன்.
போவதற்கு முன் ஒரு செய்தி.
அன்று மாலை நானும் அந்த தேர்பவனிக்கு சென்றிருந்தேன். ஊர்த் தலைவர் நினைத்தபடிதான் நடந்தது. பவனி புறப்பட ஒரு மணி நேரம் இருக்கும்போதே அவர் குறிப்பிட்ட தாழ்ந்த வகுப்பைச் சார்ந்தவர்கள் பங்கு குருவை சந்தித்து தேர் அவர்கள் பகுதிக்கு வராமற்போனாலும் பரவாயில்லை என்று தெரிவித்தனராம்.
சாமி தேர் வந்து தங்களுடைய வயிற்றைக் காய போட்டுவிட்டால் என்னாவது என்று நினைத்திருப்பார்கள் போல தெரிகிறது. அல்லது மேட்டுக்குடியினரின் மிரட்டலுக்கு அஞ்சியும் செய்திருக்கலாம்.
காலப்போக்கில் இத்தகைய போக்கு மாறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
தொடரும்.
ஆமாங்க. கிறிஸ்த்தவ மதத்திலும் ஜாதிபார்த்துத்தான் கல்யாணம் எல்லாம் நடக்குதுன்னு
பதிலளிநீக்குநாங்க மதுரை மாவட்டம் ஆத்தூர்லே இருந்தப்பத் தெரிஞ்சுக்கிட்டேன். அப்ப சின்ன வயசு.
வெறும் ஒம்போது. அதானாலே அதுலே இருந்த விவகாரம் புரியலை. இப்பவும் நிலமை
அப்படித்தான் இருக்குதுங்களா?
அட! இதென்ன கூத்து. இப்ப நிலம மாறியிருக்குமுன்னு நெனைக்கிறேன். பாப்போம்.
பதிலளிநீக்குநான் தூத்துக்குடீல இருந்தப்ப இந்த விஷயங்கள நிறையப் பாத்திருக்கேன். அங்கேயும் இரண்டு கிருஸ்துவ சாதிகளுக்கு ஆகாது. வெட்டு குத்துன்னு அடிக்கடி நடக்கும்.
அதே சமயத்துல தூத்துக்குடீல பல அதிசயங்களையும் பாத்திருக்கேன். பழைய ஹார்பர் எதுக்க உள்ள ஒரு சின்ன பிள்ளையார் கோயிலுக்கு வழக்கமா கட்டளைக்குக் குடுக்குறது ஒரு கிருத்துவ காண்டிராக்டர். அதே போல பெரிய கோயில் (கடற்கரையில் இருக்கும் சர்ச்) கொடியேத்து விசேசம்னா நாங்களும் குடும்பத்தோட போவோம். சர்ச்சுக்குள்ள போவோம். எல்லாரும் சாமி கும்புடுவாங்க. எங்களுக்கு அவங்க முறைகள் தெரியாது. அதுனால சுத்திப் பாத்துட்டு வெளிய வந்து சவ்வு மிட்டாய் வாங்குவோம். பலூனு, ராட்டிணம் அது இதுன்னு திருவிழா கனஜோரா இருக்கும்.
அதே மாதிரி சிவங் கோயில்ல சூரசம்ஹாரம் நடக்கும், அதுக்கும் அங்கயிருக்குற கடைக்காரங்க சாதி மதம் பாக்காம பந்தல் வெச்சிருப்பாங்க. தட்டியெல்லாம் வெச்சிருப்பாங்க. திருச்செந்தூருக்கு அப்புறம் தூத்துக்குடி சூரசம்ஹாரமும் சிறப்பா இருக்கும்.
வாங்க டி.ராஜ்,
பதிலளிநீக்குஇப்பவும் நிலைமை மாறவில்லை என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. சற்று முன்னேறியுள்ளது என்று வேண்டுமானால் கூறலாம்.
வாங்க சத்தீஷ்,
பதிலளிநீக்குYou don't normally notice such things. I was attending the services in the same Church without realising these issues till I happened to overhear the conversation between the Parish Priest and the ஊர்தலைவர்.
வாங்க துளசி,
பதிலளிநீக்குஇன்னமும்தான் என் சாதி, என் குலம்னு அடிச்சிக்கிறாங்க. என் மூத்த மகளுக்கு வேற சாதியிலதான் கல்யாணம் பண்ணேன். அதுக்கே என் மனைவி வீட்ல முனுமுனுத்தாங்க. சென்னையில கொஞ்சம் கொஞ்சமா மாறுதல் வருது. ஆனா ஊர் பக்கம் இன்னமும் அப்படித்தான் இருக்கு. தூத்துக்குடியி ஜாதி வெறி பிடிச்ச கிறீஸ்துவர்கள்தான் ஜாஸ்தி.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குநீங்க சொன்னாமாதிரி தூத்துக்குடியில ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால கிறீஸ்துவர்களுக்கிடையில மூண்ட ஜாதி கலவரத்துல என் வீட்டைக் கூட அடிச்சி நொறுக்க ட்ரை பண்ணாங்க. நல்ல வேளை என் வீட்டு பக்கத்துலருந்தவங்க தலையிட்டு காப்பாத்திட்டாங்க. ஆனா என்னுடைய சகலையோட கார் சுத்தமாக தீக்கிரையானதுமில்லாம அவரோட வீடும் பெருத்த சேதத்துக்கு உள்ளாச்சி. அத்தோட அந்த வீட்டையே வித்துட்டு வேற இடத்துக்கு போயிட்டார்.
இன்றைய (3.1.06) தினமலர்ல உங்க பதிவு பற்றி வந்திருக்கு..வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு// நீங்க சொன்னாமாதிரி தூத்துக்குடியில ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னால கிறீஸ்துவர்களுக்கிடையில மூண்ட ஜாதி கலவரத்துல என் வீட்டைக் கூட அடிச்சி நொறுக்க ட்ரை பண்ணாங்க. நல்ல வேளை என் வீட்டு பக்கத்துலருந்தவங்க தலையிட்டு காப்பாத்திட்டாங்க. ஆனா என்னுடைய சகலையோட கார் சுத்தமாக தீக்கிரையானதுமில்லாம அவரோட வீடும் பெருத்த சேதத்துக்கு உள்ளாச்சி. அத்தோட அந்த வீட்டையே வித்துட்டு வேற இடத்துக்கு போயிட்டார். //
பதிலளிநீக்குஐயோ! கேக்கவே பயமா இருக்கே! நீங்க அஞ்சு வருசக் கத சொல்றீங்க. நான் ஒரு எட்டு ஒம்போது வருசக் கதை சொல்றேன். அப்பயும் இப்படித்தான் கலாட்டா! அப்ப நாங்க இருந்தது ஃபிஷ்ஷிங் ஹார்பர் பக்கத்துல கவர்மெண்ட்டு குவார்டர்ஸ். எங்க அத்தையெல்லாம் இருந்தது போல்டன்புரத்துல.
இப்படித்தான் ரெண்டு தரப்புக்கும் பிரச்சனை. ஊரே பத்தி எரியுற அளவுக்குப் பிரச்சனை. கிளியோபாட்ரா தேட்டர் இருக்குற ரோட்டுல கலெக்டர் போன ஜீப்புலயே நாட்டுக் குண்ட விட்டெறிஞ்சிருக்காங்க. அவரு தப்பிச்சிட்டாரு.
நாங்க குவாட்டர்ஸ்குள்ள பெரிய கேட்ட மூடீட்டு உக்காந்திருக்கோம்.
அப்பப் பாத்து எங்க அத்த மகன் வேல விஷயமா தூத்துக்குடி வந்திருக்காரு. அவரு வெளிய போவேன்னு அடம் பிடிக்கிறாரு. மெஜுரா கோர்ட்ஸ் வரைக்குந்தான். போயிட்டு வர்ரேன்னு சொல்லி அடம் பிடிக்கிறாரு. சொல்லச் சொல்லக் கேக்காம தங்கச்சி காலேஜுக்குப் போற வண்டிய எடுத்துக்கிட்டு கெளம்பிப் போயாச்சு.
போனா வழியில பிடிச்சிக்கிட்டாங்க. டேய். வண்டியக் கொளுத்துங்கலங்கான் ஒருத்தன். ஆள அடீங்கான் இன்னோருத்தன். இவரு வெலவலத்துப் போயிட்டாரு. சென்னைப் பதவிசு தூத்துக்குடீல எடுபடுமா?
வண்டீல பெட்ரோல மொதல்ல பிடில. அத ஊத்திக் கொளுத்துவோமுன்னு இன்னொருத்தன் சொல்றான். பெட்ரோல் டாங்கியத் தொறக்க சாவிய எடுத்ததுருக்கானுக. அதுல முருகன் டாலர் இருந்துருக்கு.
"ஏல நீ இந்துவா"ன்னு ஒருத்தன் கேட்டுருக்கான்.
ஆமாமுன்னு இவரு சொல்லீருக்காரு. சத்தங்காட்டாம அப்பிடியே திரும்பி ஓடீரு. இங்குட்டெல்லாம் வந்த அம்புட்டுதான்னு சொல்லி வெரட்டி விட்டுட்டாங்க.
வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் காச்சல்ல கெடந்தாரு. இத என்னன்னு சொல்ல!
வாங்க தருமி,
பதிலளிநீக்குசாரி சார். உங்க பின்னூட்டதுக்கு பதில் போடறதுக்கு லேட்டாயிருச்சி.
எல்லாம் வேலை நிமித்தம் தான். ரெண்டு நாளா மீட்டிங், மீட்டிங்னு கொன்னுட்டாங்க. என்ன பண்றது?வயித்து பிழைப்பாச்சே.
உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி சார்.
சாரி ராகவன்.
பதிலளிநீக்குஉங்க பின்னூட்டத்துக்கு உடனே பதில் குடுக்க முடியலை. தருமி சாருக்கு தந்த பதிலைப் பாருங்க புரியும்.
பாத்தீங்களா இந்துங்கறதுனால உங்க அத்த மகன் தப்பிச்சார்.
இருந்தாலும் என் மனை ஊராச்சே விட்டுக்கொடுக்க முடியுமா? நமக்கு புடிச்ச ஊர் தூத்துக்குடிதான். இந்த ஜாதி பிரச்சினையெல்லாம் சும்மா டெம்பொரவரிதான். இப்பல்லாம் எந்த பிரச்சினையுமில்லையே. என்ன சொல்றீங்க?
// விட்டுக்கொடுக்க முடியுமா? நமக்கு புடிச்ச ஊர் தூத்துக்குடிதான். இந்த ஜாதி பிரச்சினையெல்லாம் சும்மா டெம்பொரவரிதான். இப்பல்லாம் எந்த பிரச்சினையுமில்லையே. என்ன சொல்றீங்க? //
பதிலளிநீக்குஉங்க மனைவி ஊரையே விட்டுக்குடுக்க முடியலையே ஜோசப் சார். நான் பொறந்த ஊர விட்டுக் குடுப்பேனா? ஆயிரம் இருந்தாலும் தூத்துக்குடி தூத்துக்குடிதான். அடடா! என்ன ஊரு!