11 ஜனவரி 2006

எனக்குப் பிடித்த மாமனிதர் - 3

எனக்குப் பிடித்த மாமனிதர் - 3

இந்திய திருநாட்டிற்கு ஈடு இணையற்ற பெருமை சேர்த்தவர்களில் ஒருவர் அன்னை தெரேசா அவர்கள் என்றால் மிகையாகாது. யுகோஸ்லேவியா நாட்டில் பிறந்த அன்னை அவர்கள் நமது கொல்கொத்தா நகரத்தில் தனக்கென ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி ஏழை எளியோர்க்கு ஜாதி, மத பேதமின்றி தொண்டாற்றியவர்.

அல்பேனியா நகரங்களில் புகழ்பெற்று விளங்கியவைகளில் ஒன்றான ஸ்காம்ஜேயாவில் நிக்கோலா மற்றும் திரானா தம்பதியருக்கு 1910 ம் ண்டு பிறந்த அன்னை திரேசாவின் இயற்பெயர்ஆக்னஸ் கொன்சகா பொஜாக்ஸியு ஆகும்.

ஸ்காப்ஜே நகர அரசியல் சபையின் உறுப்பினைர்களில் ஒருவரான அவருடைய தந்தை ஓரளவு செல்வமும் செல்வாக்கும் பெற்றவராயிருந்தார். அல்பேனியாவின் விடுதலைக்கும் பாடுபட்ட அவருடைய செல்வாக்கு பலருக்கு பொறாமையை விளைவித்தது. எனவே ஒருநாள் விருந்துக்கு அழைத்துச் சென்று அவருடைய உணவில் நஞ்சைக் கலந்து கொன்றுவிட்டனர்.

நாற்பத்தைந்தே வயதில் முற்றிலும் எதிர்பாராத சூழ்நிலையில் அவர் மரணமடைய தலைவனையிழந்த ஆக்னஸ்சின் குடும்பம் செய்வதறியாமல் தவித்தது. ஒன்பதே வயதான ஆக்னஸ் அந்த சூழ்நிலையிலும் தன்னுடைய பள்ளிப் படிப்பில் முழு தீவிரம் காட்டி படித்துவந்தார். தான் படித்ததுடன் படிக்க முடியாதவர்களுக்கும் கற்பித்து வந்தார்.

தன்னுடைய  இளம் வயதிலேயே Sodality என்ற சபையில் அங்கத்தினராக சேர்ந்து ஏழை எளியவர்களுக்கு தொண்டு செய்ய ஆரம்பித்தார். அச்சபையிலிருந்து அயல் நாடுகளுக்கு சென்று சேவைபுரிந்த கன்னியர்களைப் பற்றி கேள்விப்பட்ட ஆக்னஸ் தானும் அதுபோல் செல்ல விரும்பினார். அவர்களுள் சிலர் இந்தியாவிலுள்ள கொல்கொத்தா நகருக்குச் சென்று தாங்கள் செய்த சமூக சேவையைப் பற்றி ஆக்னஸ் வசித்து வந்த பகுதியின் பாதிரியார் அவர்களுக்கு கடிதம் மூலம் தங்களுடைய அனுபவங்களை தெரிவித்தனர். அவற்றையெல்லாம் படித்த ஆக்னஸ் அவற்றால் மிகவும் கவரப்பட்டு தனக்கும் அப்பாக்கியம் கிட்டாதா என ஏங்கலானார்.    

அவருடைய எண்ணத்திற்கு அவருடைய தாயும், மூத்த சகோதரியும் ஆரம்பத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவித்தாலும் பிறகு அவருடைய பிடிவாத குணத்திற்கு பணிந்து அவரை போக அனுமதித்தனர்.

அவர் விருப்பப்படியே 1929ம் ண்டு ஜனவரி மாதம் ஆறாம் நாள் கொல்கொத்தா வந்து சேர்ந்தார்.

ராஜாராம் மோகன்ராய், கவிக்குயில் சரோஜினி நாயுடு, சரத் சந்திரர், கவியரசு இரவீந்தரநாத் தாகூர், சுவாமி விவேகானந்தர், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அறிவுசால் ஆன்றோர்களை இந்த உலகிற்கு ஈந்த கொல்கொத்தா நகரம் பல ஆண்டுகள் தவம் இருந்து ஏழை எளியவர்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் வந்த ஆக்னசை இரு கரம் விரித்து வரவேற்றது.

அதன் பின்னர் இரண்டாண்டு காலம் இறையியல் பயிற்சியும், ஆசிரியர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்து 1931ம் ஆண்டு மே மாதம் 24ம் நாள் கன்னியர் மடத்தில் தன்னுடைய முதல் துறவற வாக்குறுதியை முடித்து ஆக்னஸ் என்ற தன் பெயரை சகோதரி தெரேசாவாக மாற்றிக்கொண்டார். பின்னர் டார்ஜிலிங் சென்று சில காலம் ஆசிரியராக பணியாற்றிய பின் கொல்கொத்தா திரும்பி தூய மரியாள் பள்ளியில் தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து சுமார் 17 ஆண்டுகாலம் திறம்பட பணிபுரிந்தார்.

1946ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள் ஒரு பயிற்சியில் பங்குபெற டார்ஜிலிங்கை நோக்கி ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். பயண நேரத்தை வீணாக்க விரும்பாமல் தியானத்தில் ஈடுபட்டிருந்தார். திடீரென அவருடைய செவிகளில் ‘சேரிகளுக்கு நீ சென்று சேவை செய்ய வேண்டும். இதுவே என் அன்புக் கட்டளை’ என்ற குரல் மீண்டும் மீண்டும் ஒலிக்க கேட்டார். அவருக்கு இது தெய்வத்தின் குரலே என்று தோன்றியது.

இறைவன் கட்டளையை ஏற்று கொல்கொத்தா திரும்பியதும் தன்னுடைய ஆசிரியர் பணியிலிருந்து விலகி முழுநேர சேவைப் பணியில் ஈடுபட உறுதி பூண்டார்.

ஆனால் அவருடைய முடிவைக் கேள்வியுற்ற அவருடைய மடத்தலைவி அவரை அங்கிருந்து ‘அசென்சால்’ என்ற மடத்துக்கு மாற்றினார். அவருடைய ஆணைக்கு பணிந்த தெராசா அங்கு சென்று சேர்ந்தாலும் அவருக்கு மிகவும் பழக்கமாயிருந்த பங்கு பாதிரியார் வான் எக்சம் வழியாக கொல்கொத்தாவில் அன்று பேராயரரக இருந்த பெரியர் (Perriar) அவர்களுக்கு தன்னுடைய சேவை புரிய வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்.

நல்ல உள்ளம் படைத்த பேராயர் திரேசாவின் வேண்டுகோளை தன்னுடைய பரிந்துரையுடன் உரோமாபுரியிலிருந்த போப்பாண்டவருக்கு அனுப்பி வைத்தார். முதலில் தெரேசாவின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு அனுமதி மறுத்த போப்பாண்டவர் அவருடைய தொடர்ந்த விண்ணப்பங்களை மறுக்க முடியாமல் இறுதியில் 1948ம் வருடம் தெரேசா அப்போதிருந்த கன்னியர் சபையிலிருந்து விலகி முழுநேர சேவைப் பணியில் ஈடுபட அனுமதியளித்தார்.

சபையிலிருந்து வெளியேறியதும் சகோதரி தெரேசா செய்த முதல் வேலை தன்னுடைய கன்னியர் உடையை களைந்து விட்டு இந்திய ஏழைப் பெண்கள் உடுத்துவதுபோன்ற பருத்தி நூலால் நெய்யப்பட்ட சேலையை தெரிவு செய்ததுதான். மூன்று நீலக்கரைகளைக் கொண்ட வெள்ளை சேலைதான் இன்றுவரை அவர் துவங்கிய அன்பின் பணியாளர் (Missionaries of Charity) சபை சகோதரிகளின் சீருடையாக இருந்து வருகிறது.

இந்த சபையின் நோக்கம்: நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் வாழும் ஏழை எளிய மக்கள்,ஆதரவற்றோர், தொழுநோயாளர், இறக்கும் தருவாயில் இருப்போர் ஆகியோடருக்கு இலவச சேவை புரிதல்.

கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்ற மூன்று வாக்குறுதிகளுடன் ஏழைகளுக்கு முழு மனதுடன் இலவச சேவை புரிதல் என்ற நான்காவது வாக்குறுதியையும் இச்சபையில் கன்னியராக சேரும் எவரும் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அது இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இச்சபை துவக்கப்பட்ட காலத்தில் ஒரு நாள் வீதியோரத்தில் அரை குறை ஆடையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஒரு ஏழைக் கிழவியைப் பார்த்தார். அப்பெண்ணின் உடலை எறும்புகளும், ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து பதறிப்போன சகோதரி தெரேசா அவரை அப்படியே தன் இரு கரங்களிலும் அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றார்.

ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் அருவருப்புடன் சிகிச்சையளிக்க மறுக்கவே அப்பெண்மனிக்கு சிகிச்சை அளிக்காதவரை தான் அங்கிருந்து போவதில்லை என்று சத்தியாக் கிரகம் செய்ய ஆரம்பித்தார். வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக சிகிச்சை செய்தும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடையவே சகோதரி தெரேசா  அன்றே ஒரு முடிவுக்கு வந்தார்.

மோட்டிஜில் பகுதியில் ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்தார். அதில் இறக்கும் தருவாயிலிருந்தவர்களை நகர் முழுவதும் தேடி கொண்டு வந்து சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்தார். நாளடைவில் வந்து சேர்ந்த பிணியாளர்களின் எண்ணிக்கைப் பெருகவே மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து காளி கோயிலின் அருகே இருந்த இரண்டு தர்ம சாலைகளில் ஒன்றைப் பெற்று தன் சேவையை தொடர்ந்தார்.

சகோதரி தெரேசா அன்னை தெரேசாவாக மாறுதல்

1949ம் ண்டு மார்ச் மாதம் 19ம் நாள். அன்று யேசுவின் வளர்ப்புத் தந்தை அர்ச். சூசையப்பரின் (St. Joseph) திருவிழா. விழாவுக்கு பெருந்திரளாக கூடியிருந்த அப்பகுத்த ஏழை எளிய மக்கள் சகோதரி தெரேசாவை அன்புடன் ‘அன்னை’ என்று அழைக்க அதுவே அவருடைய அடைப்பெயராக மாறி அன்று முதல் அன்னை தெரேசா என அழைக்கப் பட்டார்.

இதன் இரண்டாம் பாகம் நாளை...




2 கருத்துகள்:

  1. அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள் ஜோசப் சார். பொதுவாகவே வரலாறு என்று வருகையில் அதை வறுத்தெடுக்கும் விதமாகத்தான் படிக்க வேண்டியிருக்கும். ஆனால் அன்னை தெரசாவைப் பற்றிய இந்த வரலாற்றுப் பதிவு ஒரு அழகான குறுங்கதை போல செல்கின்றது. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்,

    உங்களுக்கு மட்டுமாவது பிடிச்சிருக்கே..

    நன்றி.

    பதிலளிநீக்கு