31 ஆகஸ்ட் 2013

சொந்த செலவில் சூன்யம் 4

“Once a lawyer represents a client, the lawyer has a duty to make his or her expertise fully available in the realization of the end sought by the client, irrespective, for the most part, of the moral worth to which the end will be put or the character of the client who seeks to utilize it. Provided that the end sought is not illegal, the lawyer is in essence an amoral technician whose peculiar skills and knowledge in respect to the law are available to those with who the relationship of client is established.”


ராஜசேகர் தினமும் காலையில் கோகிலா எழுவதற்கு முன்பு எழுந்து வாசலில் கிடந்த பால் பாக்கெட்டுகளை எடுத்து தனக்கென்று சூடாக காப்பி போட்டு குடித்துக்கொண்டே செய்தித்தாளை மேய்வான். பிறகு வாக்கிங் செல்வான். 

அன்றும் காப்பி கப்பை ஒரு கையில் பிடித்தவாறே செய்திதாளை மேய்ந்தான். மூன்றாவது பக்கத்தில் முந்தைய தினம் தொலைக்காட்சியில் காட்டப்பட்டவை செய்தியாக வந்திருந்தது. அவசரமாக படித்து முடித்தான். படத்திலிருந்த குற்றஞ்சாட்டப்பட்டவரின் முகத்தை பார்க்க பரிதாபமாக இருந்தது. எல்லாம் தலையெழுத்து என்று நினைத்தான்.  பிறகு எழுந்து வாக்கிங் ஷூவை அணிந்துக்கொண்டு வாசற்கதவைப் பூட்டிக்கொண்டு படியிறங்கினான்.

பார்க்கிங் பகுதியில் அந்த குடியிருப்பில் வசித்த மூன்று நான்கு பேர் கூடி பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அதில் ஒருவர் அவனுடன் தினமும் வாக்கிங் செல்பவர். அவனைக் கண்டதும் அவனை நெருங்கி, 'சார்... நீங்க ஒரு க்ரிமினல் லாயர்தான?' என்றார்.

'ஆமா சார்.. ஏன் கேக்கறீங்க?'

'ஒன்னுமில்ல சார்... நேத்தைக்கி நியூஸ்ல கேட்டீங்கல்ல? நம்ம சீனிவாசன் சாரோட சன்ன அரெஸ்ட் பண்ணிட்டாங்க.'

ராஜசேகரின் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. அதிர்ச்சியை வெளியே காட்டிக்கொள்ளாமல், 'சீனிவாசனா... தனியா எங்க ப்ளாட்டுக்கு கீழ இருக்காரே? அவரோட சன்னா?' என்றான் தெரியாததுபோல்.

'ஆமா சார். பாவம் ஆடிபோயிருக்கார். ஒங்கள பாத்ததும் சட்டுன்னு நினைச்சேன். ஒங்களால ஏதாச்சும் பண்ண முடியுமா சார்.'

பழம் நழுவி பால்ல விழுந்தாமாதிரி இருக்கே என்று நினைத்து உள்ளூர மகிழ்ந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்... 'செஞ்சிரலாம் சார். எப்படியும் பதினோரு மணிக்கி மேலதான் அவர கோர்ட்டுக்கு கொண்டு வருவாங்க. வாக் போய்ட்டு வந்துடறேன். வந்து பேசலாம். அவர்கிட்ட கவலைப்படவேணாம்னு சொல்லுங்க.'

அவர் 'சரி சார்' என்று நகர ராஜசேகர் கேட்டைத் திறந்துக்கொண்டு தெருவில் இறங்கினான். 

நேத்து ராத்திரிதான் டிசைட் பண்ணோம், இன்னைக்கி நாம முயற்சி பண்ணாமயே அதுவா நம்மள தேடி வந்துருச்சி... இந்த சந்தர்ப்பத்த நழுவ விடக்கூடாது. 

'எப்படியாவது அவர நாமளே டிஃபெண்ட் பண்றா மாதிரி ஏற்பாடு செஞ்சிக்கணும்...' 

இதுதான் அவன் நேற்று இரவு எடுத்த முடிவு. ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என இரவெல்லாம் தூக்கம் வராமல் திட்டமிட்டும் ஒரு விடையும் கிடைக்காமல் குழம்பிப் போயிருந்தான். அதற்கு இத்தனை எளிதில் தீர்வு கிடைத்துவிடும் என அவன் நினைக்கவில்லை. 

தன்னுடைய திட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

******

நாற்பது நிமிட வாக்கிங் முடிந்து அவன் வாசலுக்குள் நுழைந்ததும் எதிர்கொண்ட மனைவியைப் பார்த்தான். 'கோகி... நீ நேத்து சொன்னியே அவரோட மகன்தானாம் அரெஸ்ட் ஆயிருக்கறது. நம்ம ஆடிட்டர் காலையில பார்த்து, நீங்கதான் உங்களால ஏதாச்சும் செய்ய முடியுமான்னு கேட்டார். சரின்னு சொல்லிருக்கேன்.'

'ஆமாங்க... நானே ஒங்கள செல்லுல கூப்பிடலாம்னு பார்த்தேன். இன்னைக்கி பார்த்து நீங்க அத இங்கயே வச்சிட்டு போயிருக்கீங்க.'

'ஏன்? நாந்தான் வாக் போய்ட்டு வந்து பேசறேன்னு சொல்லியிருந்தேனே?'

'யார்கிட்ட... அந்த பெரியவர் கிட்டயா? அவர்தான் ஒங்கள தேடிக்கிட்டு இங்க வந்திருந்தார்.'

'நா நம்ம பக்கத்து ஃப்ளாட் ஆடிட்டர் இருக்காரே அவர் கிட்ட சொல்லிட்டு போனேன். சரி... நீ டிஃபன ரெடி பண்ணு... நா குளிச்சிட்டு வந்துடறேன்.' 

குளித்து உடை மாற்றும்போதே இதை எப்படி கையாள்வது என மனதுக்குள் பட்டியலிட்டான். அந்தாள பத்திய எல்லாத்தையும் டீட்டெய்லா கேட்டுக்கணும். இன்னைக்கி எப்படியும் மஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு கொண்டு போயிருவாங்க. இப்ப பெய்ல எடுக்கறது சிரமம்னு சொல்லிறணும். ஒரு ரெண்டு நாள் போலீஸ் கஸ்டெடில வச்சி விசாரிச்சிக்கட்டும். முடிஞ்சா போலீஸ் கஸ்டடியில இருக்கறப்பவே அவர மீட் பண்றதுக்கு கோர்ட்ல பர்மிஷன் கேட்டு பாக்கணும். அப்படியே அந்த எஸ்.ஐ. தன்ராஜையும் மீட் பண்ணா மாதிரி இருக்கும். இதுவரைக்கும் அவங்க என்னத்தையெல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்கன்னும் லேசா தெரிஞ்சிக்கலாம். அப்புறம் கொலையாளியோட டிஃபென்ஸ் லாயர்ங்கற முறையில கொலை நடந்த இடத்த ஒருதரம் பாக்கணும்னு போலீஸ் பர்மிஷன் கேக்கணும். அவங்க முடியாதுன்னா  எஸ்.பி சந்தானம் வழியா பிரஷர் குடுக்கணும். எப்படியும் மாதவியோட ஃப்ளாட்டுக்குள்ள ஒருதரமாவது போயி பார்த்துரணும். நாம அவளுக்கு குடுத்த எதாச்சும் போலீஸ் கைல கிடைச்சி அத வச்சி ட்ரேஸ் பண்ணா நம்ம பெயரும் வெளீயில வந்துரும்... 

அவன் கீழே இறங்கி வருவதற்குள் கோகிலா காலை பலகாரத்தை மேசையில் தயாராக வைத்திருந்தாள். 

'இன்னைக்கிம் லஞ்ச் வேணாம் கோகி... கோர்ட்டுக்கு கூட போக முடியுமான்னு தெரியல..'

'சரிங்க... இப்பவே போயி அவர பாருங்க.. பாவம் என்ன டென்ஷன்ல இருக்காரோ...'

'சரி.. சரி... நீ வேற டென்ஷனாகாத.. நா பாத்துக்கறேன்.'

கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கவும் வாசல் மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. சீனிவாசன் ஆடிட்டர் வாசுதேவனுடன் நின்றிருந்தார். கைப்பெட்டியுடன் அவன் புறப்பட தயாராக இருந்ததைப் பார்த்த வாசுதேவன்  'என்ன சார் கிளம்பிட்டீங்களா? சாரோட ஃப்ளாட்டுல ஒக்காந்து பேசலாமா?' என்றார் பக்கத்தில் நின்றிருந்த சீனிவாசனைக் காட்டியவாறு.

'அதான் சார் சரி... வாங்க' 

மூவரும் படியிறங்கி சீனிவசனின் குடியிருப்புக்குள் நுழைந்து வரவேற்பறையில் அமர்ந்தனர். வரவேற்பறையே அமர்க்களமாக இருந்ததை கவனித்தான் ராஜசேகர். நல்ல பசையுள்ள ஆள்தான் போலருக்கு என்று நினைத்தான்.

'மிஸ்டர் ராஜசேகர். எம் பையன எப்படியாச்சும் பெய்ல இன்னைக்கே எடுத்துறணும்... கவுரமான குடும்பம் சார் எங்களுடது..'

கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரை மறைக்க முயன்றவரை பரிதாபத்துடன் பார்த்தான் ராஜசேகர். இந்த வயசான காலத்துல பாவம் இந்த மனுஷன்...இதைத்தான் தலைவிதி என்கிறார்கள் போலும். 

'செஞ்சிரலாம் சார். முதல்ல என்ன செக்ஷன்ஸ்ல அரெஸ்ட் செஞ்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும். மர்டர் கேஸ்ங்கறதால நான்-பெய்லபிள் செக்ஷன் எதையாச்சும் போட்டுருந்தாங்கன்னா இன்னைக்கே எடுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்...'

சீனிவாசன் பதற்றத்துடன் அவனை பார்த்தார். 'சார் அப்படி சொல்லாதீங்க... நானும் உங்க கூட வரேன்... ஏதாச்சும் செலவு பண்ணணும்னாலும் பரவால்லை சார்.'

ராஜசேகர் சங்கடத்துடன் தன்னுடைய வாசுதேவனை பார்த்தான். 'சார் நீங்களாச்சும் சொல்லுங்க... இந்த வயசான காலத்துல இவர் கோர்ட்டுக்கெல்லாம் வரவேணாம்... நா பாத்துக்கறேன்... இந்த டைம்ல பெருசா ஒன்னும் செலவாகாது... இன்னைக்கித்தான் கோர்ட்ல அவர் ப்ரொட்யூஸ் பண்ணுவாங்க... ஒரு வாரம் போலீஸ் கஸ்டடி கேப்பாங்க போலருக்கு... இது மர்டர் கேசுங்கறதால அத நாம தடுத்து நிறுத்த முடியாது.'

'என்ன சார் சொல்றீங்க? போலீஸ் கஸ்டடியா? என் சன்ன அடிச்சி கிடிச்சி விசாரிக்கப் போறாங்க சார்.'

'இல்ல சார்... பதறாம கேளுங்க. போலீஸ்ல நமக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க சார்... ஒங்க சன்னுக்கு எந்த ட்ரபுளும் வராம நா பாத்துக்கறேன்... சினிமால வரா மாதிரியெல்லாம் நடக்காது சார்.  அதுவுமில்லாம அவர மஜிஸ்திரேட் முன்னால ப்ரொட்யூஸ் பண்றப்பவே நா அங்க போயிருவேன். என் முன்னால வச்சித்தான் அவர க்வஸ்ட்சின் பண்றாமாதிரி நா பெட்டிஷன் பண்ணி பெர்மிஷன் வாங்கிருவேன்... நீங்க கவலைப்படாதீங்க...நா இப்பவே போனாத்தான் அவர எந்த ஸ்டேஷன்ல வச்சிருக்காங்கன்னு விசாரிச்சி போகமுடியும்.. நா போய்ட்டு ஒரு மணி நேரத்துக்குள்ள ஃபோன் பண்றேன்...'

'நா வேணும்னா ஒங்கக் கூட வரட்டுமா ராஜசேகர்.' என்று அவனுடன் எழுந்து நின்ற ஆடிட்டரைப் பார்த்தான். 

'சேச்சே... அதுக்கு அவசியமிருக்காது சார். அதுவுமில்லாம நா இங்க, அங்கன்னு அலைய வேண்டியிருக்கும்... நா பாத்துக்கறேன்...' என்ற ராஜசேகர் பதற்றத்துடன் தன்னையே பார்த்தவாறு நின்றிருந்த சீனிவாசனை பார்த்தான். 'சார் நீங்க டென்ஷனாகாதீங்க... ஒங்க சன்னுக்கு ஒன்னும் ஆயிராது. நா இருக்கேன்... ஒங்க சன் பேர மட்டும் சொல்லுங்க.'

'ராஜகோபால் சார்...கோபால்னு கூப்டுவோம்... பில்டரா இருக்கான். இப்ப கொஞ்ச நாளா நேரம் சரியில்லை...என் மருமக ஆஸ்பிட்டிலைஸ் ஆனதுலருந்தே ஒருமாதிரி ஆய்ட்டான்... இதுல இந்த பிரச்சினை... எனக்கு என்ன செய்யிறதுன்னே தெரியல சார்...' மேலே தொடர முடியாமல் அப்படியே சோபாவில் அமர்ந்தவரைப் பார்த்தான். அவருடைய உடம்பு குலுங்கியதிலிருந்து அவர் அடக்கமாட்டாமல் அழுவதை உணர முடிந்தது. 

'சார் நீங்க இவர கன்சோல் பண்ணுங்க.... நா போய் பார்த்துட்டு ஃபோன் பண்றேன்..'

கைப்பெட்டியுடன் வெளியேறி தன் வாகனத்தை அடைந்த ராஜசேகரின் மனசாட்சி அவனைப் போட்டு வதைத்தது. ஆனாலும் எதிர்பாராமல் நடந்த இந்த விபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இதைவிட்டால் வேறு வழி இல்லை என்று அதை அடக்கினான்.

அத்துடன் இனி தான் எடுக்கவிருக்கும் ஒவ்வொரும் முயற்சியும் தன்னை இந்த சிக்கலிலிருந்து எப்படி விடுவித்துக்கொள்வது என்பதை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற உறுதியுடன் தன்னுடைய அலுவலகத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.

தொடரும்..

30 ஆகஸ்ட் 2013

சொந்த செலவில் சூன்யம் 3

கதைச் சுருக்கம்:

க்ரிமினல் லாயர் ராஜசேகருக்கும் அவனுடைய ஒருநாள் கட்சிக்காரர் மாதவிக்கும் இடையிலான தகாத உறவில் விரிசல் ஏற்படுகிறது. அவள் வேறொருவருடன் உறவு வைத்துள்ளதை அறிந்த ராஜசேகர் அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். வாக்குவாதம் சண்டையாக உருவெடுக்கிறது. கோபத்தில் அவளை பிடித்து தள்ளிவிட்டு வெளியேறும் ராஜசேகர் அடுத்த நாள் அவள் கொலையுண்டு கிடப்பதை அறிந்து கலக்கமடைகிறான். ஆனால் சம்பவ இடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவரை கண்டதாக ஒரு பெண் சாட்சியம் கூறியதாக தினத்தாளில் படிக்கிறான். அவனுடைய குழப்பம் அதிகரிக்கிறது.

முந்தைய இரு பகுதிகள்:

**
Death due to head injury: In these cases, the fracture generally occurs just above the ear, in the temporal bone. "There is an artery that runs above the skull and can get torn and begin to bleed above the lining of the brain. It is enough to cause death if not treated immediately"

**

ராஜசேகர் படித்துக்கொண்டிருந்த தமிழ் தினத்தாளை மடக்கி வைத்துவிட்டு ஆங்கிலப் பத்திரிகையை புரட்டினான். உள் பக்கம் ஒன்றில் சிறிதாக தமிழில் வந்திருந்த அதே செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஆக, இப்போதைக்கி கவனம் நம்ம பக்கம் இல்லை என்று தாற்காலிக நிம்மதியடைந்தான். செய்தித்தாள்களை மடித்து தன்னுடைய கைப்பெட்டியில் வைத்துவிட்டு மேசை மீது குமாஸ்தா எடுத்து வைத்திருந்த அடுத்த நாள் விசாரனைக்கு வரவிருந்த வழக்கு கட்டுகளைப் பார்வையிட துவங்கினான். ஆனால் அவனுடைய கவனம் முழுவதும் மாதவியையே சுற்றி வந்தது.

தன் முன்பிருந்த வழக்கு கட்டுகளில் கவனம் செலுத்த முடியாமல் போகவே அவற்றை அப்படியே எடுத்து கைப்பெட்டிக்குள் வைத்து எடுத்துக் கொண்டு அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு கிளம்பினான். 

வீட்டிற்குள் நுழைந்தவனை வியப்புடன் பார்த்தாள் கோகிலா. 'என்னங்க இவ்வளவு சீக்கிரம்? உடம்புக்கு ஏதாச்சுமா?' 

'அதெல்லாம் ஒன்னுமில்லை.. லேசா தலைவலி... காப்பிய போட்டுக் கொண்டா... பாப்பா வந்துட்டாளா?'

'வந்துட்டா... கொஞ்ச நேரம் தூங்கட்டும்னு விட்டுருக்கேன்... இன்னும் ரெண்டு நாளைல பரீட்சை துவங்குதுல்ல? ராத்திரி ரொம்ப நேரம் படிக்கறா... அதான்..'

'சரி தூங்கட்டும்... நா மாடிக்கி போறேன்... நாளைக்கி கேஸ் சம்பந்தமா கொஞ்சம் படிக்கணும். காப்பிய போட்டு கொண்டா.. பாப்பா எழுந்ததும் என்னெ டிஸ்டர்ப் பண்ணாம பாத்துக்க...'

'சரிங்க.. நீங்க போங்க... நா காப்பி போட்டு கொண்டு வரேன்.'

மனைவியின் தலை மறைந்ததும் தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்தான். நல்லவேளையாக மாதவியைப் பற்றி ஒன்றும் இல்லை. அணைத்துவிட்டு கைப்பெட்டியை எடுத்துக்கொண்டு படியேறினான்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும் கைப்பெட்டியில் வைத்திருந்த மாலைப் பத்திரிகைகளை வெளியில் எடுத்து மாதவியைப் பற்றிய செய்தி இருந்த பக்கத்தை கிழித்து அலமாரியில் பத்திரப்படுத்தினான். பிறகு அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க துவங்கினான். 

கைப்பெட்டியிலிருந்த குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான். அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிடத் துவங்கினான்.

1. முதல்ல இந்த வழக்கை யார் விசாரிக்கப் போறாங்கன்னு கண்டுபிடிக்கணும்.
2. நேத்து மாதவியின் வீட்லருந்து வந்தவனைப் பற்றி விசாரிக்கணும்.
3. மாதவியின் வீடு வரை பகல் வேளையில ஒரு தடவை போய் நம்மள யாரும் அடையாளம் கண்டுக்குறாங்களான்னு பாக்கணும்...

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு மூன்றாவதாக குறித்திருந்ததை அடித்தான். 'இப்ப இந்த விஷப் பரீட்சை வேணாம்... முதல்ல போலீஸ் இன்வெஸ்டிகேஷன யார் பண்றான்னு பாக்கலாம்... அப்புறம் அந்த ஆளப் பத்தி ஏதாச்சும் தெரியுதான்னு பாக்கலாம்... அதுக்கப்புறம் எப்படி ப்ரொசீட் பண்றதுன்னு டிசைட் பண்ணலாம்..'

'காப்பி கொண்டு வந்திருக்கேன். கதவ எதுக்கு பூட்டி வச்சிருக்கீங்க?'

ராஜசேகர் மனைவியின் குரல் கேட்டதும் கையிலிருந்த குறிப்பேட்டை கைப்பெட்டிக்குள் வைத்துவிட்டு எழுந்து கதவைத் திறந்தான். 

'குளிக்க போறப்ப கதவ சாத்தினது... மறந்துருச்சி.. சரி குடு...'

'இல்ல... நானே உள்ள வந்து வைக்கிறேன்...' என்றவாறு அறைக்குள் நுழைந்த கோகிலா படுக்கையில் கிடந்த தமிழ் பத்திரிகையைக் கண்டாள்.

'என்னங்க இது? ஈவ்னிங் பேப்பர வாங்கிட்டு வந்துருக்கீங்க...? இந்த மாதிரி பேப்பர்ஸ வாங்க மாட்டீங்களே?'

'நா வாங்கல... சேம்பர்ல கிடந்தது... படிச்சிட்டு அப்படியே ப்ரீஃப்கேஸ்ல வச்சுட்டேன் போலருக்கு.... நாளைக்கி போறப்ப திருப்பி வச்சிறணும்... நீ காப்பிய வச்சிட்டு போ... ராத்திரி டிஃபன் ரெடியானதும் கூப்டு... அதுவரைக்கும் கொஞ்ச நேரம் படுக்கறேன்.. தலைவலி மண்டைய பிளக்குது...'

'சரிங்க...' என்றவள் குணிந்து படுக்கையில் கிடந்த தமிழ் செய்தித்தாளை எடுத்தாள். 'நாளைக்கித்தான திருப்பித் தரணும்... படிச்சிட்டு தரேன்.'

இதை எதிர்பாராத ராஜசேகர் சட்டென்று அவளிடமிருந்து அதை பிடுங்கி படுக்கையில் எறிந்தான். 'நீ ஒன்னும் படிக்க வேண்டாம்... நீ படிச்சிட்டு டீப்பாயில போட்டுட்டு போய்ட்டீனா பாப்பா எடுத்து கிறுக்கி வச்சிருவா... நீ போயி சமையல கவனி..' 

அவனுடைய குரலிலிருந்த கோபம் கோகிலாவை திடுக்கிட வைத்தது... 'நான் இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்தறீங்க?'

ராஜசேகர் சட்டென்று இறங்கி வந்தான். 'சாரி கோகி... ஏதோ டென்ஷன்ல கத்திட்டேன்.. தப்பா எடுத்துக்காத... நீ என்னெ கொஞ்சம் தனியா விடேன் ப்ளீஸ்.'

'சரி.. நா கீழ போறேன்... ஏதாச்சும் வேணும்னா குரல் குடுங்க.'

கோகிலா சென்றதும் மீண்டும் அறைக்கதவை சாத்தி தாளிட்டான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாதவியின் வீட்டுக்கு சென்றுவருவதை யாரெல்லாம் பார்த்திருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்த்தான். மாதவியின் வீட்டுக்கு அவன் செல்லும்போது பெரும்பாலும் இரவு ஏழு மணிக்கு மேல்தான் என்பதால் அவளுடைய வேலைக்காரி அவனை பார்த்திருக்க வாய்ப்பில்லை. மாதவியும் தன்னைப் பற்றி அவளிடம் கூறியிருக்க மாட்டாள். 

Row houses எனப்படும் தனித்தனி வீடுகள் அமைந்திருந்த அந்த பகுதியில்  வசித்த பலரும் நடுத்தரத்திற்கும் சற்று மேலே உள்ளவர்கள் என்பதால் யாரும் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதும் ராஜசேகருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 

ஆக, அவனுக்கு தெரிந்த வரை அவன் மாதவியுடன் தொடர்பு வைத்திருந்ததை அந்த பகுதியில் இருந்த எவரும் பார்த்திருக்க வழியில்லை என்பதை நினைத்து சற்று நிம்மதியடைந்தான்.

'என்னங்க, கொஞ்சம் இங்க வாங்களேன், டிவியில ஒரு நியூஸ்...' மனைவியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்து கையிலிருந்த குறிப்பேட்டை கைப்பெட்டிக்குள் வைத்து பூட்டிவிட்டு கதவைத் திறந்தான். 'என்ன கோகி நீ... நாந்தான் டிஸ்டர்ப் பண்ணாதேன்னு சொன்னேன் இல்ல?' 

'இல்லைங்க... நம்ம அப்பார்ட்மென்ட்ல இருக்கற ஒருத்தர ஏதோ ஒரு கொலைகேஸ்ல அரெஸ்ட் பண்ணிட்டாங்களாம்... நியூஸ்ல போடறான். '

'என்னது நம்ம ஃப்ளாட்டுல குடியிருக்கறவரையா? யாரு?'

'வாங்க சொல்றேன்.' என்றவாறு படியிறங்கிய மனைவியை தொடர்ந்த ராஜசேகர் ஹாலை அடைவதற்குள் அவள் குறிப்பிட்ட செய்தி முடிந்திருந்தது.

'ஐயையோ முடிஞ்சிருச்சி போலருக்கு. நீங்க எதுக்கு என்னைக்குமில்லாம கதவ பூட்டிக்கிட்டு இருக்கீங்க? ஒடனே வந்திருந்தா பார்த்திருக்கலாம்.' என்ற மனைவியை முறைத்தான். 

'நீதான் பார்த்தே இல்ல? யார்னு சொல்லேன்?'

'அதாங்க நமக்கு நேர் கீழ குடியிருக்காரே... மதுரக்காரங்க.'

'ஆமா... அவரையா அரெஸ்ட் பண்ணாங்க? என்னடி ஒளர்றே? அவரே வயசானவரு.'

'அவர இல்லீங்க... அவரோட மகன்... அப்பப்போ இங்க வருவாரு, நா பாத்துருக்கேன்.'

'எதையாவது ஒழுங்கா சொல்றியா?' எரிந்து விழுந்தான் ராஜசேகர். 'முதல்ல நம்ம ஃப்ளாட்டுல இருக்கறவர்னு சொன்னே... இப்ப அவர் இல்ல. அவரோட மகன்னு சொல்றே. சரி எங்க கொல நடந்ததுதாம்? அதையாச்சும் ஒழுங்க கேட்டியா?'

'ஆமா... சென்னையிலதான் மைலாப்பூர்ல. பேரு கூட ஏதோ மாதவியாம். தனியா இருந்த பொம்பள போலருக்கு...'

ராஜசேகருக்கு தலையை சுற்றியது. சமாளித்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சியில் 24 மணி நேர செய்தி சானல்களில் சரசரவென வலம் வந்தான். எல்லாவற்றிலும் விளம்பரங்கள்! 

'நல்லா கேட்டியா?'

கோகிலா வியப்புடன் அவனைப் பார்த்தாள். 'நீங்க ஏன் இவ்வளவு டென்ஷனாவுறீங்க?  நம்ம அப்பார்ட்மென்ட்டுக்கு வந்து போறவரானதால டிவியில பாத்ததும் ஒங்கக்கிட்ட சொல்ல வந்தேன். இப்ப இல்லன்னா ராத்திரி பத்து மணி நியூச பார்த்தா போச்சு. வாங்க, வந்து சாப்டுங்க.'

தன்னுடைய முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை கோகிலா பார்த்திருப்பாளோ என்று நினைத்தவன் சட்டென்று சமாளித்தான். 'சாரி கோகி...இன்னைக்கி கோர்ட்ல பயங்கர டென்ஷன். நீ போயி டிஃபன எடுத்துவை. பாப்பா எங்க?'

'அவளோட ரூம்ல படிக்கிறா. இன்னைக்கி நா அவ கூட கீழயே படுத்துக்கறேன்... நீங்க சாப்ட்டுட்டு நியூச பார்த்துட்டு ஒங்க ரூமுக்கு போங்க.' 

அவன் சாப்பிட்டு முடிக்கவும் இரவு பத்து மணி செய்திகள் ஒளிபரப்பாகவும் சரியாக இருந்தது. தலைப்பு செய்திகளில் ஒன்றும் முக்கியமாக சொல்லவில்லை. பத்து நிமிடங்கள் கழித்து மாதவியின் கொலை செய்தி ஒளிபரப்பானது. காமரா மாதவியின் வீட்டுப் பகுதியை ஒரு முறை வலம் வந்தது. அடுத்து, முந்தைய நாள்  மாலை மாதவியின் வீட்டிலிருந்து வெளியே வரும்போது அவன் பார்ந்த அந்த நபர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்தான். 'இந்தாள் நம்ம ஃப்ளாட்டுக்கு வந்துருக்கானா? நாம ஒருதரம் கூட பார்த்ததில்லையே?' என்று நினைத்தான். மனதுக்குள் நாம் தப்பித்தோம் என்று நினைத்தாலும் இது ஒரு தாற்காலிகமான தப்பித்தல்தான் என்றும் தோன்றியது. 

அடுத்த காட்சியில் சென்னை துணை காவல்துறை துணை ஆணையர் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் பேசுவது தெரியவே தொலைகாட்சியின் ஒலியை சற்று கூட்டினான். 'சம்பவம் நடந்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்ய முடிந்ததற்கு முக்கிய காரணம் அந்த பகுதியில் வசித்த ஒருவரின் சாட்சியத்தால்தான். இதுபோன்று கொலை நடக்கும் அனைத்து இடங்களிலும் பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க முன்வந்தால் எங்களுடைய பணி மிக எளிதாக முடிந்துவிடும்.'

'அந்த சாட்சி யாருன்னு சொல்ல முடியுமா சார்?' என்ற நிரூபர் ஒருவரின் கேள்விக்கு, 'சாரிங்க... அத கோர்ட்லதான் நீங்க பார்த்துக்கணும்.' என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர நினைத்தவரை இன்னொரு நிரூபரின் கேள்வி தடுத்து நிறுத்தியது.

'இனி ஃபர்தர் இன்வெஸ்டிகேஷன் ஏதும் இருக்காதா சார், இவர்தான் கொலையாளின்னு ஷ்யூராயிருச்சா?'

'அப்படித்தான் நினைக்கிறோம். இருந்தாலும் மைலாப்பூர் E1 ஸ்டேஷன் க்ரைம் எஸ்.ஐ. தன்ராஜ் தலைமையில நாலு பேர் கொண்ட ஒரு டீம போட்டுருக்கோம். அவங்க எவ்வளவு சீக்கிரம் விசாரனை முடிக்க முடியுமோ அதுக்குள்ள முடிச்சி ரிப்போர்ட குடுத்துருவாங்கன்னு நினைக்கறோம். முதல்ல அக்யூஸ்ட ஒரு வாரம் போலீஸ் கஸ்டடில விடணும்னு நாளைக்கி கோர்ட்ல கேக்கப் போறோம்.'

'என்னங்க சவுண்ட கொஞ்சம் குறைங்க... பாப்பா படிக்க முடியல..' மனைவியின் குரல் அசரீரியாக வர தொலைக்காட்சி பெட்டியை அணைத்துவிட்டு எழுந்து ஹாலின் குறுக்கே நடந்து தன்னுடைய மகள் காஞ்சனாவின் அறையை எட்டிப் பார்த்தான். மகள் மும்முரமாக எதையோ படித்துக்கொண்டிருந்தாள். கோகிலா அருகில் அமர்ந்திருந்தாள்.

அறைக்குள் நுழைந்து மகளுடைய தலையை வருடினான். 'படிக்கறது அஞ்சாங் கிளாஸ். எதுக்கும்மா இப்படி விழுந்து, விழுந்து படிக்கறே. போறும் படு.'

'நீங்க சும்மா இருங்க... அதான் சாக்குன்னு படுத்துருவா. இந்த தடவையாவது ஃபர்ஸ்ட்டு ராங்க் வரணும்னு நா பாக்கேன்... நீங்க வேற.' என்ற கோகிலாவை பார்த்து சிரித்தான்.

'அது சரி... நீ சாதிக்க முடியாதத இவள வச்சி சாதிச்சிக்கலாம்னு பாக்கியா?'

கோகிலா முறைத்தாள். 'ஜோக் அடிக்காம  போய் படுங்க... இன்னும் அரை மணி நேரம், என்னடா கண்ணா?'

காஞ்சனா தூக்கக் கலக்கத்துடன் தன் தாயைப் பார்த்தாள். 'சரிம்மா.' பிறகு நிமிர்ந்து, 'குட் நைட் டாடி...' என்று கூறிவிட்டு கண்களை மூடிக்கொண்டு படித்ததை முனுமுனுக்க ராஜசேகர் புன்னகையுடன் 'குட் நைட் காஞ்ச்..' என்றவாறு அறையை விட்டு வெளியேறினான்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்ததும் கைப்பெட்டியை திறந்து தன்னுடைய குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு அமர்ந்தான். சற்று முன்பு குறித்துவைத்திருந்த பட்டியலைப் பார்த்தான். இத்தனை விரைவில் இரண்டுக்கும் விடை கிடைத்துவிட்ட  நிம்மதி அவனுடைய முகத்தில் தெரிந்தது. இந்த வழக்கை யார் விசாரிக்கப் போகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற குறிப்பிற்கு நேரே எஸ்.ஐ. தன்ராஜ் என்று எழுதினான். இதற்கு முன் கேள்விப்படாத பெயர் என்றாலும் க்ரைம் பிராஞ்சில் அவனுக்கு தெரிந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் மூலமாக ஒரு சில தினங்களுக்குள் அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. 

இரண்டாவது, குற்றம் சாட்டப்பட்டப்பட்டவரைப் பற்றிய விவரம். பெயர் தெரியவில்லையென்றாலும் அவருடைய தந்தை அவன் இருந்த அதே குடியிருப்பில் இருந்ததால் அவரைப் பற்றிய முழு விவரங்களை ஓரிரு நாட்களில்  தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். 

சட்டென்று ஒரு உத்தி அவன் மனதில் தோன்ற நிமிர்ந்து அமர்ந்தான். சற்று நேரம் அதையே அசை போட்டான். இது சரி வருமா? ரிஸ்க் ஏதும் இருக்கா என்று அதையே பல கோணங்களிலும் இருந்து ஆராய்ந்தான். இறுதியில் அதுதான் இந்த வழக்கில் இருந்து முழுவதுமாக தப்பிப்பதற்கு ஒரே வழி என்று முடிவு செய்தான். அந்த முடிவை செயல்படுத்த என்னென்ன செய்யவேண்டும் என்பதை கடகடவென குறிப்பேட்டில் குறித்துக்கொண்டு மூடி கைப்பெட்டிக்குள் வைத்தான். 

விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான். 

தொடரும்..

29 ஆகஸ்ட் 2013

சொந்த செலவில் சூன்யம் - 2

கதைச் சுருக்கம்: ராஜசேகர் ஒரு க்ரிமினல் லாயர். அவருக்கும் மாதவி என்ற பெண்ணுக்கும் இரண்டு ஆண்டு காலமாக தகாத தொடர்பு. சமீபகாலமாக மாதவி தன்னை தவிர்ப்பதை உணர்கிறான் ராஜசேகர். அவன் நினைத்திருந்தது சரிதான் என்பதை உறுதிப்படுத்துவதுபோல் அவர்கள் வழக்கமாக சந்திக்கும் செவ்வாய்கிழமையன்று வேறொருவருடன் அவளை பார்க்கிறான். அந்த நபர் வெளியேறியதும் அவளுடைய வீட்டிற்குள் நுழைந்து அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். அவனை வீட்டை விட்டு வெளியேறும்படி மாதவி கூறுகிறாள். ராஜசேகர் கோபத்துடன் அவளை பிடித்து தள்ளிவிட்டு வெளியேறுகிறான்.


Lawyers as a Professional: Ethics:“The
 lawyer-client 
relationship
...
is
 morally
 objectionable
 because
 it
 is 
a
 relationship 
in 
which
 the
 lawyer 
dominates 
and 
in
 which
 the
 lawyer
 typically,
 and
 perhaps 
inevitably,
 treats 
the
 client
 in
 both 
an 
impersonal 
and
 a 
paternalistic
 fashion.”

 - 
This 
is
 a 
worry
 about 
the 
relationship 
between 
the 
lawyer
 and 
the Client.

'என்னங்க அரை மணின்னு சொல்லிட்டு...' என்றவாறு வரவேற்ற மனைவியின் கையில் பழங்கள் அடங்கிய பையை திணித்தான் ராஜசேகர். 'இரு வந்து சொல்றேன்' என்றவாறு மாடிப்படிகளில் ஓடி தன் அறைக்குள் நுழைந்தான். 

மின்விசிறியை ஓடவிட்டு படுக்கையில் சற்று நேரம் அமர்ந்தான். ச்சே... நாமளாவது கொஞ்சம் பொறுமையா கேட்டுருக்கலாம்... தேவையில்லாம ஆத்திரப்பட்டு காரியமே கெட்டுப்போச்சு.... அவ என்ன நினைப்பாளோ தெரியலையே... நம்ம மேல இருக்கற கோவத்துல வீட்டுக்கே ஃபோன் பண்ணி கோகிலாகிட்ட போட்டு குடுத்துட்டா என்னாவறது? நம்ம வீட்டு ஃபோன் நம்பர நாம குடுக்கலைன்னாலும் பப்ளிக் டைரக்டரியிலிருந்து கண்டுபிடிச்சிற முடியுமே.... அவ இங்க ஃபோன் பண்றதுக்கு முன்னால நாமளே ஃபோன் பண்ணி சாரின்னு சொல்லிறலாமா?

'என்னங்க காப்பி போடவா...?' கீழிருந்து கோகிலாவின் குரல் கேட்டது...

இவ ஒருத்தி நேரம் காலம் தெரியாம... இருந்தாலும் அவளுடைய இடையூறை தவிர்க்க, 'சரி போடு... குளிச்சிட்டு வரேன்.' என்றான்.

என்ன செய்யலாம்... என்ன செய்யலாம்..? மனம் ஒரு நிலையில் நிற்காமல் தவித்தது. நாம தள்ளிவிட்ட வேகத்துல கீழ விழுந்து ஏதாச்சும் ஏடாகூடமா அடிபட்டுருக்குமோ...? அதான் நம்மள தொடர்ந்து அவளால வர முடியலையோ...? எழுந்து அறையின் குறுக்கே நடந்தான்...  ஃபோன் பண்ணி பாக்கலாமா? வேணாம். வீட்டுலருந்து பேச வேணாம்... இந்த இரண்டு வருடங்களில் எந்த ஒரு சூழலிலும் வீட்டிலிருந்து மாதவியை தொடர்பு கொள்ள அவன் முயன்றதில்லை என்பது நினைவுக்கு வர அந்த எண்ணத்தை கைவிட்டான்...

சரி.. நாளைக்கி ஆஃபீசுக்கு போற வழியில ஒரு பொக்கேவ வாங்கிக்கிட்டு போயி சாரி சொல்லுவோம்.... பரவாயில்லைங்கன்னு ஏத்துக்கிட்டா ஈவ்னிங் எங்கயாவது கூட்டிக்கிட்டு போயி சமாதானமாயிருவோம்... இல்ல... வெளியே போடான்னு சொன்னா சரி விட்டுது சனியன்னு தலைய முழுகிருவோம்...

உடைமாற்றிக்கொண்டு குளிர்ந்த நீரில் குளித்தான். 'டாடி... வெளியில வாங்க... காப்பி ரெடியாம்.' என்ற மகளின் குரல் கேட்டது. 'இதோ வந்துட்டேம்மா..' என்றவாறு கதவை திறந்ததும் அறைக்குள் பாய்ந்து ஓடி வந்த மகளுடன் மாடியிலிருந்து இறங்கி சோபாவில் அமர்ந்து காப்பியை உறிஞ்சியவாறே தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த கார்ட்டூன் சானலை மாற்றினான் 

'என்னப்பா நீ.. நா பாத்துக்கிட்டிருக்கேன்லே..' என்ற மகளைப் பார்த்து சிரித்தான். 'இருடா கண்ணா ஒரே ஒரு நிமிஷம்...' என்றவாறு தமிழ் செய்தி சானல்களை ஒருமுறை வலம் வந்தான்.

மாதவியைப் பற்றிய செய்தி ஒன்றும் இல்லை... சமாதானம் அடைந்தான்... 'இந்தா குட்டி... கார்ட்டூன பாத்துக்கோ' என்று ரிமோட்டை மகளிடம் கொடுத்துவிட்டு அலுவலகத்தில் இருந்து கொண்டு வந்திருந்த நாளைய கேஸ் கட்டுகளை புரட்ட ஆரம்பித்தான்..

இரவு படுக்க செல்வதற்கு முன் மீண்டும் ஒருமுறை செய்தி சானல்களைப் பார்த்தான்... மாதவியைப் பற்றிய செய்தி ஒன்றும் இல்லாததால் நாளைக்கி ஆஃபீஸ் போற வழியில  பார்த்துட்டு போவோம்... அப்புறம் நடக்கறது நடக்கட்டும் என்ற நினைப்புடன் படுக்கையில் விழுந்தான்.

அடுத்த நாள் காலையில்  மீண்டும் ஒருமுறை அன்றைய வழக்குகளுடைய விவரங்களை ஒருமுறை பார்வையிட்டவாறே காலை உணவை முடித்துக்கொண்டு 'இன்னைக்கி லஞ்ச் வேணாம் கோகி. கண்டினியூவசா கேஸ் இருக்கறதால கோர்ட்லயே சாப்ட்டுக்கறேன்..' என்ற ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு ஒரு அரை மணி முன்னதாகவே புறப்பட்டான்.

காலை நேர வாகன நெரிசல் வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் தடுத்தது. வழியில் தெரிந்த கடையருகே மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை பார்க் செய்துவிட்டு இறங்கி ஒரு மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டான். 'சும்மா சாரின்னு சொல்றத ஒரு ஃப்ளவர் பொக்கேவோட சொன்னா நல்லாருக்குமில்ல..' 

அவனுடைய வீட்டிலிருந்து பத்து நிமிட தூரத்தில்தான் இருந்தது மாதவியின் வீடு. ஆனால் அதை கடக்கவே அன்று அரை மணிக்கும் மேலானது. அன்றைய வழக்குகளில் முதலாவதில் வாய்தா வாங்குவது என ஏற்கனவே தீர்மானித்திருந்ததால் பதினோரு மணிக்குள்  நீதிமன்றத்தை அடைந்தால் போதும் என்று நினைத்தான்... மினிமம் ஒரு பத்து நிமிஷமாவது அவ வீட்ல நிக்கணும்.. முதல்ல பிகு பண்ணுவா... தப்பு நம்ம பேர்லங்கறதால நாமதான் இறங்கி போகணும்... அதுக்கும் மேல பிகு பண்ணா சரிதான் போடின்னு சொல்லிட்டு கிளம்பிறணும்... கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து.

இப்பவே பத்தாயிருச்சா... அவ வீட்ல பத்து நிமிஷம்னு வச்சாலும் கோர்ட்டுக்கு டைமுக்கு போயிர முடியுமா? அன்றைய இரண்டாவது வழக்கு முக்கியமான வழக்கு... ஏற்கனவே மூன்று முறை வாய்தா வாங்கியிருந்த வழக்கு... இனியும் வாய்தா கிடைக்காது என்பதுடன் கேஸ் விசாரனைக்கு வரும்போது டிஃபென்ஸ் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லையென்றால் எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு கொடுத்துவிடுவதில் அந்த நடுவர் பிரபலமானவர்..

கடந்த பத்து நிமிடங்களாகவே மாதவி குடியிருந்த சாலை முனையிலேயே நின்றுக்கொண்டிருப்பதை உணர்ந்த ராஜசேகர் கார் கண்ணாடியை இறக்கி எதிரில் வந்த வாகன ஓட்டியிடம் 'என்ன சார் எதாச்சும் ஆக்சிடெண்டா... அப்படியே நிக்குது?' என்றான்.

'ஆக்சிடெண்ட் இல்லை சார்... ஏதோ மர்டர் கேஸ் போலருக்கு.... பாடிய இப்பத்தான் வண்டியில ஏத்திக்கிட்டு இருக்காங்க... ஒரே போலீஸ் கெடுபிடி... இந்த பக்கம் கொஞ்ச நேரம், அந்த பக்கம் கொஞ்ச நேரம்னு வண்டிகள விட்டுக்கிட்டு இருக்காங்க...' 

ராஜசேகருக்கு 'பக்' என்றிருந்தது. மர்டரா? வாகனத்திலிருந்து இறங்கி முடிந்த மட்டும் எட்டி பார்த்தான்... சற்று தொலைவில் ஏறக்குறைய மாதவியின் வீட்டின் முன்புறம் காவல்துறையினரின் வாகனமும், ஒரு ஆம்புலன்சும் சாலையை அடைத்துக்கொண்டு நிற்பதும்.. சாலையின் இருபுறமும் குழுமியிருந்த மக்கள் கூட்டமும் தெரிந்தது. அது மாதவியின் வீடுதான்... அவளுக்குத்தான் ஏதோ நடந்துருக்கணும்... 

படபடவென அடித்த நெஞ்சை பிடித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்து ஸ்டீரிங் மீது சாய்ந்தான்... மார்பை அடைத்துக்கொண்டு வந்தது. வாயை திறந்து இரண்டு மூன்று முறை மூச்சை இழுத்து வெளியில் விட்டான்... ஏசியின் அளவை சற்று கூட்டி அதன் முன் முகத்தை காட்டினான். சில்லென்று வந்த காற்று இதமாயிருந்தது...

முன் சீட்டிலிருந்த மலர்க் கொத்தை சீட்டுக்கடியில் தள்ளிவிட்டான்... போற வழியில எங்கயாவது கடாசிறணும்... இல்லன்னா யாருக்கு சார் இது என்ற குமாஸ்தாவின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வரும்... கைக்கடிகாரத்தைப் பார்த்தான்... பத்து நிமிடங்கள் கழிந்திருந்தன... இனியும் இங்க நிக்கறதுல பிரயோசனம் இல்ல.... திரும்பி போயி வேற வழியா சைதப்பேட்டை போயிருவோம்... 

காரிலிருந்து இறங்கி பின்னால் பார்த்தான். ஊஹும்... சான்சே இல்லை.. முன்னாலயும் போக முடியாது... பின்னாலயும் போக முடியாது போலருக்கே என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கையிலேயே அவனுக்கு முன்னாலிருந்த வாகனம் நகரத் துவங்கியது... உடனே அவனுடைய காருக்கு பின்னாலிருந்த வாகன டிரைவர் 'சார் வண்டிய எடுங்க...' என்று எரிச்சலுடன் இறைய காருக்குள் அமர்ந்து முன்னேறினான். எதிர்திசையில் வரும் வாகனங்கள் சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்ததால் ஒருவழிப் பாதை இருவழிப் பாதையாக அதுவரை காத்திருந்த வாகனங்கள் எல்லாம் முழுவேகத்துடன் முன்னேறின. 

ராஜசேகரும் அதே வேகத்தில் செல்லவேண்டியிருந்தாலும் மாதவியின் வீட்டைக் கடந்தபோது அங்கு குழுமியிருந்த காவல்துறையினரை பார்க்க முடிந்தது. 'காரை எங்கயாச்சும் பார்க் பண்ண முடிஞ்சா என்னன்னு விசாரிச்சிட்டு போயிரலாமே' என்று நினைத்தவாறு சாலையின் இருபுறமும் பார்த்தான்... அவனுடைய வாகனத்தை நிறுத்த இடம் இருந்தாலும் அதை நெருங்க முடியாத அளவுக்கு வாகனங்கள் மறித்துக்கொண்டு காத்திருக்கவே வேறு வழியின்றி வாகனங்களோடு சேர்ந்து செல்ல வேண்டியிருந்தது...

மணி ஏற்கனவே பத்தரையை கடந்திருந்ததை உணர்ந்த ராஜசேகர் அந்த பகுதியைக் கடந்ததும் முழுவேகத்துடன் செலுத்தி நீதிமன்றத்தை அடைந்தான். அவனுடைய வாகனம் வளாகத்தில் நுழைந்ததைப் பார்த்ததுமே அதை நோக்கி ஓடிவந்தான் அவனுடைய குமாஸ்தா நாகவேலு. 'என்ன சார்... இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க? அந்த பார்ட்டி புலம்பி தள்ளிட்டான் சார்... ஏற்கனவே மூனுதரம் வாய்தா வாங்கியாச்சுங்களே... எங்க ஒங்க வக்கீல காணம்னு..' என்றவன் ராஜசேகரின் முகத்தை பார்த்துவிட்டு, 'என்ன சார் ஏதாச்சும் பிரச்சினையா முகத்துல சவக்களை அடிக்குதே..'  என்றான் நக்கலாக...

ராஜசேகர் முறைத்தான். 'யோவ் அதிகப்பிரசங்கித்தனமா பேசாம போ... அந்த பார்ட்டிய போயி பெஞ்சுல ஒக்காரச் சொல்லு... நீ இந்த கேஸ் கட்ட புடி... நான் பாத்ரூம்வரைக்கும் போய்ட்டு வந்துடறேன்...'

அன்று விசாரனைக்கு வந்த அவனுடைய இரண்டு வழக்குகளிலும் ராஜசேகர் செய்த குளறுபடியால் தலைமை வகித்த இரு மஜிஸ்திரேட்டுகளிடத்திலும் திட்டு வாங்கினான். 

'என்னாச்சி சார்.. வீட்ல ஏதாச்சும் பிரச்சினையா? என்று காதைக் கடித்த குமாஸ்தாவை முறைத்தான்.

'இல்லைய்யா... ஒடம்புக்குத்தான் சரியில்ல...நா கெளம்பி ஆஃபீசுக்கு போறன்... நீ நம்ம க்ளையண்டுகள சமாதானப்படுத்திட்டு வா... அப்பீல்ல பாத்துக்கலாம்னு சொல்லு....' 

அலுவலகத்திற்கு வரும் வழியில் அன்றைய மாலைப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக வாங்கினான்.

நல்ல வேளையாக அவன் அலுவலகத்தை சென்றடைந்தபோது வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. குளிர்சாதன பெட்டியை ஆன் செய்துவிட்டு முதலில் தமிழ் பத்திரிகையை விரித்தான். இத்தகைய செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே கட்டம் கட்டி இட்டிருந்ததைப் பார்த்தான்.

'தனியே இருந்த மாஜி சினிமா நடிகை அடித்துக் கொலை'

சென்னை மைலாப்பூரில் தனியாக வசித்து வந்த மாதவி என்கிற முன்னாள் சினிமா துணை நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின் மண்டையில் பலத்த காயம் இருந்ததாகவும் அதனால் நிறைய இரத்தப் போக்கு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஹாலில் இருந்த சோபா கைப்பிடியின் ஓரத்திலும் இரத்தக் கறை இருந்ததால் அவர் அதன் மீது விழுந்து அடிபட்டிருக்கலாம் அல்லது யாரேனும் அவரை பலவந்தமாக பிடித்து தள்ளியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

கொலையாளி.

நேற்று இரவு சுமார் ஏழு மணியளவில் மாதவியின் வீட்டிலிருந்து  சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியேறியதை நேரில் கண்டதாக ஒரு பெண் போலீசாரிடம் கூறியதாகவும் தெரிகிறது. போலீசார் கொலையுண்ட நடிகையின் வேலைக்காரியிடமும் விசாரணை.

...

ராத்திரி ஏழு மணிக்கா? நாம அங்க போயி வந்ததுக்கப்புறம் வேற எவனாச்சும் போயிருப்பானோ? இது என்ன புது குழப்பம் என்று நினைத்தான் ராஜசேகர்.

தொடரும்...

28 ஆகஸ்ட் 2013

சொந்த செலவில் சூன்யம்....(க்ரைம் தொடர்)

IPC:Sec.300 - Example 4:- "Culpable homicide is not murder if it is committed without premeditation in a sudden fight in the heat of passion upon a sudden quarrel"
****
ராஜசேகர் தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். 

மாலை ஐந்து மணி... 

'சார் இன்னைக்கி கொஞ்சம் சீக்கிரமா போகணும்... வீட்ல ஒரு விசேஷம்' என்று அவனுடைய ஒரேயொரு குமாஸ்தாவும் பெர்மிஷனில் செல்ல அலுவலகத்தில் அவன் தனியாக அமர்ந்திருந்தான். 

அவனுடைய பார்வை மீண்டும் மேசை மீதிருந்த தொலைபேசியை நோக்கி சென்றது, தயக்கத்துடன்...

'மாதவிய கூப்ட்டு இப்பவே வரட்டுமான்னு கேட்டா என்ன?' என்று நினைத்தான்.

வாரம் ஒரு நாள், செவ்வாய்கிழமை, மாதவியை சந்திப்பதாக ஏற்பாடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக... 

இந்த இரண்டு ஆண்டுகளில் அவளை சந்திக்கும் நாளுக்காகத்தான் வாரத்தில் மீதி ஆறு நாட்கள் உயிருடன் இருப்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்தியிருந்தது அவளுடைய நட்பு.

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு வழக்கு விஷயமாகத்தான் ராஜசேகர் அவளை சென்னை குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தித்தான். அவள் சற்று தொலைவிலிருந்து தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததுமே 'என்ன ஸ்டரக்ட்சர்றா!' என்று நினைத்தான். அவள் வேறு யாரையோ தேடிக்கொண்டுதான் வருகிறாள் என்று நினைத்தவனுக்கு  அவனை நெருங்கி 'சார்.. நீங்கதான ராஜசேகர்?' என்று கொஞ்சியதும் அந்த ஒரு நொடியில் உலகமே மறந்துபோனது. வார்த்தை வராமல் போனது. ஆமாம் என்று தலையை மட்டும் அசைத்தான். 

அவள் தன் கையிலிருந்த ஒரு விசிட்டிங் கார்டை நீட்டி, 'இவர் ஒங்க க்ளையண்ட்டுன்னு சொன்னாங்க... அதான் ஒங்கள பாத்து பேசிட்டு போலாம்னு....' என்றதும் அவள் நீட்டிய கார்டை பார்க்காமல் செக்கச் செவேல் என்றிருந்த அவளுடைய கைகளையே பார்த்து மெய்மறந்து நின்றான்.

'சார்...' என்று அவள் மீண்டும் அழைத்ததும்தான் அவனுக்கு அவள் கைகளை நீட்டியவாறு நிற்பது புரிந்தது. 

கார்டை பார்த்தான்.  'இவனா.. இவன் சரியான விடாக்கண்டனாச்சே... நீங்க எப்படிங்க  இவன் கிட்ட மாட்டுனீங்க...?'

அவள் சோகத்துடன் அவனை பார்த்தாள். 'சோகத்துலயும் நீ சூப்பராத்தான் இருக்கே' என்று நினைத்தான் ராஜசேகர்.

'நீங்க சொல்றது சரிதான் சார்... கைமாத்தா வாங்குன பணத்த குடுக்காம டிமிக்கி குடுத்துக்கிட்டே இருக்கான். நீங்கதான் எப்படியாச்சும் வாங்கி தரணும்... வட்டி தராட்டியும் பரவால்லை... அசல் வந்தா போறும்...'

இவன் கிட்டருந்து என் ஃபீச கறக்கறதுக்கு நா படற பாடு ஒனக்கு எங்க தெரியப் போவுது? என்று நினைத்தான் ராஜசேகர்... இருந்தாலும் இவள முடியாதுன்னு சொல்லி கட் பண்ணிற கூடாது... ஆஃபீசுக்கு வரச் சொல்வோம்... 

நீதிமன்ற வளாகத்தை ஒருமுறை பார்த்தான்... எல்லோரும் இல்லாவிட்டாலும் ஒருசிலருடைய பார்வை தங்கள் மீது பதிந்திருப்பதை கவனிக்க முடிந்தது... சிலருடைய பார்வையில் 'இவனுக்கு வந்த வாழ்வைப் பார்றா..' என்பதுபோன்ற பொறாமையும் தெரிந்தது..

'நீங்க ஒன்னு பண்ணுங்க.. இன்னைக்கி சாயந்தரம் என் ஆஃபீசுக்கு வந்துருங்க... இவனையும் ஃபோன் பண்ணி வரச் சொல்றேன்... பேசி முடிச்சிரலாம்...' என்றான். 'எவ்வளவு தரணும்னு சொன்னீங்க?'

'அம்பதாயிரம் சார்... ஆறே மாசத்துல வட்டியோட தந்துடறேன் சிஸ்டர்னு சொல்லி கெஞ்சி வாங்கிக்கிட்டு போனான்... ஒன்பது மாசம் ஆகப்போகுது...'

'அம்பதாயிரம் குடுத்தீங்களா? இவன நம்பியா?' 

'ஆமாங்க.. நீங்கதான் எப்படியாச்சும்....'

'நா கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க... இவன் கூட ஏதாச்சும் டீலிங்ஸ் வச்சிருக்கீங்களா?'

சட்டென்று கோபத்தில் அவளுடைய முகம் சிவந்துபோனதை பார்த்த ராஜசேகர்... அடடா கோவத்துலயும் என்ன சூப்பரா இருக்கா? என்று பரவசமானான்..

'அது ஒங்களுக்கு தேவையில்லாத விஷயம்..உங்களால முடியாதுன்னா சொல்லிருங்க..'

ரிவர்ஸ் வாங்கினான் ராஜசேகர்... 'சாரிங்க.. கேட்டது தப்புத்தான்... நீங்க ஆறு மணிக்கி வந்துருங்க... நா பேசறேன்..'

'சரி... நா வர்ற விஷயத்த அவன்கிட்ட சொல்லிறாதீங்க.. வராம டிமிக்கி குடுத்துருவான்..' என்றவாறு தன்னைக் கடந்து சென்றவளுடைய நடையழகில் தன்னையே பறிகொடுத்து நின்றான் ராஜசேகர்.

அப்படி பழக்கமானவள்தான் மாதவி... 

கடனை அவன் சாதுரியமாக பேசி வசூலித்து கொடுத்துவிட 'ரொம்ப தாங்ஸ் சார்... ஒருதரம் வீடு வரைக்கும் வந்துட்டு போங்களேன்...' என்று பேச்சோடு பேச்சாக சொன்னதை மறக்காமல் அடுத்த வாரமே ஒருநாள் அவளுடைய வீட்டுக் கதவைத் தட்டினான். 

சாதாரண சந்திப்பு என துவங்கி அவ்வப்போது சந்திக்கும் நட்பாக மாறி பிறகு... அடிக்கடி சந்திக்கும் அளவுக்கு நெருக்கமானது... பிறகு வாரம் ஒருமுறையாவது அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்றாகிப்போனது... முதல் வருடத்தில் அவனுடைய மாத வருமானத்தில் பத்து சின்ன வீட்டுக்கு என்று ஆரம்பித்த விழுக்காடு இரண்டு வருடங்களில் சுமார் முப்பதைக் கடந்திருந்தது. 

'கோகிலாக்கிட்ட மாட்டிக்கிடறதுக்குள்ள இதுலருந்து எப்படியாச்சும் விடுபட்டுறணும்' என்று அவ்வப்போது நினைப்பான். அது அவளுடைய முகத்தை பார்க்கும் வரைக்கும்தான்...

தொலைபேசி ஒலித்தது... திடுக்கிட்டு எடுத்தான்...

'அட்வகேட் ராஜசேகர் ஹியர்' என்றான் கெத்தாக.

'நாந்தான்' .

இவளுக்கு சாவே இல்ல போலருக்கு! இருந்தாலும் இவள இங்க கூப்ட வேணாம்னு எத்தன தரம் சொல்றது? இதுவே நம்ம குமாஸ்தா எடுத்துருந்தா என்ன ஆவறது? குரல வச்சே மோப்பம் புடிச்சிருவானே..

'ஆஃபீசுக்கு கூப்டாதேன்னு சொல்லியிருக்கேன் இல்ல? என்ன அப்படி அர்ஜண்ட்?'

'இன்னைக்கிம் வரவேணாம்னு சொல்லத்தான் கூப்ட்டேன்...'

ச்சை... ரெண்டு நாளாவே இப்பல்லாம் வீட்டு செலவுக்கு நீங்க குடுக்கற காசு பத்தவேமாட்டேங்குது என்று தகராறு செய்த அவனுடைய மனைவி கோகிலாவால் நொந்து போயிருந்தவன் இன்றைய நாளைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தான்... அதுக்கும் வினை வந்துருச்சே என்று நொந்துப்போனான்...

'என்ன சத்தத்தையே காணோம்?'

'ஏன்.. என்ன விஷயம்...ஒடம்புக்கு ஏதாச்சுமா? ஏற்கனவே ரெண்டு வாரமாச்சி பாத்து' 

'அதெல்லாம் ஒன்னுமில்லை... என் தம்பி ஊர்லருந்து வந்துருக்கான்... இந்த வாரம் முழுசும் இருப்பான்.. அதான்...'

'ஒனக்கு தம்பியா? அது யாரு எனக்கு தெரியாம?'

'ஒங்களுக்கு எதுக்கு தெரியணும்?'

குரலில் இருந்த கோபம் அவனை தயங்க வைத்தது. 'சரி... சரி... அப்ப இந்த வாரமும் பட்டினின்னு நினைச்சிக்கிறேன்... அப்ப அடுத்த செவ்வாய்தானா?'

'ஆமா.. வச்சிடறேன்..' 

துண்டிக்கப்பட்ட தொலைபேசியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சிறிது நேரம். பிறகு கோகிலாவை அழைத்தான். 

'இந்த வாரம் மீட்டிங் கேன்சல் ஆயிருச்சி கோகி.... இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்... ஏதாச்சும் வாங்கிக்கிட்டு வரணுமா?' என்றான் நல்ல பிள்ளையைப் போல். வாரம் ஒரு நாள் லயன்ஸ் க்ளப் மீட்டிங் என்றுதான் எல்லா செவ்வாய் கிழமையும் சொல்லி வைத்திருந்தான். 

'வர்ற வழியில முடிஞ்சா கொஞ்சம் பழங்கள வாங்கிக்கிட்டு வாங்க... வேற ஒன்னும் வேணாம்.'

'சரி' 

எழுந்து அலுவலகத்தைப் பூட்டிக்கொண்டு இறங்கினான். 

அவன் வீட்டுக்கு செல்கின்ற பாதையில்தான் மாதவியின் வீடும் இருந்தது...  

அவளுடைய வீட்டுக்கு எதிரே சற்று தள்ளி சாலைக்கு எதிர்ப்பக்கத்தில் இருந்த பழமுதிர்சோலையில்தான் அவ்வப்போது பழங்கள் வாங்குவது வழக்கம். அன்றும் அந்த கடை வாசலில் இருந்து சற்று தள்ளி தன்னுடைய மாருதியை பார்க் செய்துவிட்டு கடைக்குள் நுழைந்து முதலில் தெரிந்த பழங்களுள் சிலவற்றை வாங்கிக்கொண்டான். கோகிலாவுக்குத்தானே... மாதவிக்குன்னாதான் தேடிப் புடிச்சி வாங்கணும்....

கடையிலிருந்து இறங்கி தன்னுடைய வாகனத்தை நோக்கி செல்ல முயன்றவன் சாலையின் மறுபுறம் இருந்த மாதவியின்  வீட்டிலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்ற சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு பின்னால் வந்து வழியனுப்பிய மாதவியைப் பார்த்ததும் சட்டென்று ஒளிந்து நின்று பார்த்தான். மாதவி அந்த ஆளை நெருங்கி நின்று புன்னகையுடன் வழியனுப்பிய விதம் அவனை என்னவோ செய்தது....  தம்பி கூட இருக்கேன்னு சொன்னா? இந்த ஆள பாத்தா தம்பி மாதிரி தெரியலையே?

மாதவி வழியனுப்பிய அந்த ஆள் சாலையின் குறுக்கே நடந்து எதிரில் பார்க் செய்யப்பட்டிருந்த டயோட்டா கொரலாவில் ஏறி அமரவும் பார்க்கிங் வேலையாள் ஓடிவந்து தன்னுடைய கைக்கடிகாரத்தைக் காட்டி ஏதோ சொல்ல அவர் எரிச்சலுடன் பர்சை திறந்து பணத்தை கொடுத்துவிட்டு சென்றதை கவனித்தான். அந்த கார் சென்று மறையும் வரை முகத்தில் புன்னகையுடன் வாசலில் நின்றுவிட்டு வீட்டுக்குள் திரும்பிய மாதவியையும் பார்த்தான்.  ராஜசேகருக்கு ஆத்திரமாய் வந்தது. 'ஓ! இதான் விஷயமா? மேடம் வாரம் ஒரு நாள் நம்மள பாக்கறா மாதிரி ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு ஆளுன்னு பாக்கறா போலருக்கு... இது புது கனெக்ஷனாருக்கும்... நாம மாருதிதானே... அதான் நம்மள கேன்சல் பண்ணிட்டு ட்யூஸ்டேவ டயோட்டாவுக்கு அலாட் பண்ணிட்டா போலருக்கு… அதான் ரெண்டு மூனு வாரமாவே நம்மள அவாய்ட் பண்றாளா?

மாதவி திரும்பி தன்னுடைய வீட்டுக்குள் நுழையும் வரை காத்திருந்த ராஜசேகர் தன்னுடைய காரில் ஏறி அமர்ந்து சிறிது நேரம் யோசித்தான். 

என்ன தைரியம் இருந்தா இப்படியொரு காரியத்த செஞ்சிருப்பா? இவளோட பழகுன இந்த ரெண்டு வருசத்துல இவளுக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்? இவளுக்காக கட்டுன வைஃப மட்டுமா, ஒன்னேயொன்னு கண்ணே கண்ணேன்னு இருக்கற பொண்ணையும் இல்ல கண்டுக்காம இருந்தேன்? செவ்வாய் கிழமையானா என்ன வேலையிருந்தாலும் இவள பாக்க ஓடி வந்தேனே... 'அப்பா இன்னைக்கி என்னோட ஸ்கூல்ல ஆன்யுவல் கல்ச்சுரல்ஸ்ப்பா... அம்மாவோட நீங்களும் வரணும்ப்பா'ன்னு கேட்டப்பக் கூட பொய் சொலிட்டு வந்துருக்கேனே... 

இவள இப்படியே விட்டா சரிவராது....

காரிலிருந்து இறங்க முயன்றவனுக்கு தன்னுடைய மனைவியிடம் அரைமணியில் வந்துவிடுவேன் என்று கூறியது நினைவுக்கு வந்தது. பரவால்லை... ஒரு அஞ்சி நிமிசம் அவள பாத்து நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டுன்னு போனாத்தான் இன்னைக்கி தூக்கம் வரும்..

காரிலிருந்து இறங்கி எப்போதும்போலவே சுற்றும் முற்றும் பார்த்தான்.  சாதாரணமாக மாதவியின் வீட்டுக்குள் செல்வதை தனக்கு தெரிந்தவர்கள் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவே இருப்பான். அதற்காகவே அவள் வீடு இருந்த சாலையில் வாகனத்தை நிறுத்தாமல் தெரு முனையிலோ அல்லது அருகில் இருந்த சந்துகளிலோ பார்க் செய்துவிட்டு கால்நடையாகத்தான் அவளுடைய வீட்டிற்கு செல்வான். ஆனால் அன்று அவளுடைய வீட்டுக்கு செல்லும் உத்தேசம் இல்லாததாலும் கோகிலா கேட்ட பழங்களை வாங்க வேண்டும் என்பதாலும் யார் பார்த்தால் என்ன என்ற நினைப்புடன் அவளுடைய வீடு இருந்த சாலையிலேயே பார்க் செய்திருந்தான். அதுவும் ஒருவகையில் நல்லதாகிப் போனது. இல்லையென்றால் அவளுடைய தில்லுமுல்லு தெரிந்திருக்காதே...

ஏற்கனவே இருட்ட துவங்கியிருந்தாலும் அவனுக்கு தெரிந்த முகம் ஏதும் தென்படவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு தலையைக் குனிந்தவாறே சாலையைக் கடந்து மாதவியின் வீட்டை அடைந்து அழைப்பு மணியை அழுத்தினான்..

கதவைத் திறந்து அகன்று விரிந்த புன்னகையுடன், 'என்னங்க எதையாச்சும் மறந்துட்டீங்களா?' என்று துவங்கிய மாதவி ராஜசேகரனைக் கண்டதும் அரண்டுபோய் 'நீங்களா? நாந்தான் சொன்னேனேங்க....?' என்றாள்.

'தம்பி கூட இருக்கறேன்னுதானே... அந்த தம்பியதான் இப்ப பாத்தேனே...?'

'யார சொல்றீங்க?'

'அதான்  டயோட்டா வண்டியில வழியனுப்பினியே...'

'ஓ!' என்று அவள் சிரித்த சிரிப்பில் ஒரு கைதேர்ந்த நடிகையின் திறமை தெரிந்தது. 'அவரா... அவர்தாங்க நம்ம ஹவுஸ் ஓனர். அத்தோட ஒரு ரியல் எஸ்டேட்டும் பண்றார்.. ஏதாச்சும் நல்ல இடமா வந்தா சொல்லுங்கன்னு சொல்லியிருந்தேன்... அதான் வந்துட்டு போறார்... நீங்க உள்ள வாங்க...'

அவளைத் தொடர்ந்து ஹாலுக்குள் நுழைந்தவன் டீப்பாயில் இருந்த காப்பி கோப்பைகளைப் பார்த்தான். அருகில் கேக், பிஸ்கெட், பழங்கள் என கடை விரிக்கப்பட்டிருந்தது. சோபாவில் அவன் அவ்வப்போது அவளுக்கு பரிசளிக்கும் மலர்கொத்தும்....

'எடம்னா.... வீடு கட்டற எடமா.... இல்ல என்னெ மாதிரி பார்ட்டியா?' 

'என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல...காப்பி கொண்டு வரவா?'

ராஜசேகர் சோபாவில் அமர்ந்து டீப்பாயில் இருந்த கோப்பையில் மீதம் இருந்த காப்பியை பார்த்தான். 'இதோ இதையே சூடு பண்ணி குடு... போறும்... இத மாதிரி நானும் ஆறின சரக்குதான?'

மாதவி அவனை நெருங்கி அமர்ந்து அவன் தோள்மீது சாய்ந்தாள். 'என்ன, துரைக்கி சந்தேகமா?' 

அவள் மீது வீசிய நறுமணம் அவன் சென்ற வாரம் பரிசளித்த ஃபாரின் செண்ட்... அவள் அணிந்திருந்தது அவன் சென்ற மாதம் பரிசளித்த நைட்டீ என்பதை உணர்ந்தவனுக்கு அவனையுமறியாமல் ஆத்திரம் பொங்கி வந்தது..

'ஏன்டி என்ன தைரியம் இருந்தா நா வாங்கி குடுத்த நைட்டி, செண்ட் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு எனக்குன்னு ஒதுக்குன டேட்டுல இன்னொருத்தனோட கொஞ்சுவே...'

அவனிடமிருந்து சட்டென்று விலகிய மாதவி எழுந்து நின்றாள். ..

'அநாகரீகமா பேசாதீங்க. நீங்க ஒன்னும் கட்டுன புருசன் இல்ல.. நா யார பாக்கணும்... எந்த டிரஸ்ச போட்டுக்கிட்டு யார் கூட கொஞ்சணும்னு நீங்க ஒன்னும் கண்டிஷன் போட தேவையில்ல..'

கண்களை விரித்தவாறு அவள் நின்ற கோலம் அவனை வெறுப்படைய செய்தது. இவளுக்காகவா இவ்வளவும் செய்தோம் என்று கொதித்துப் போனான். அப்படியே இவளுடைய கழுத்தைப் பிடித்து நெறித்தால் என்ன என்று தோன்றியது.

'ஏய்... என்ன கொழுப்பு இருந்தா என்னையே எதிர்த்து பேசுவே' என்றவாறு எழுந்து அவளை நெருங்கினான்... 'உன்னை.... என்ன பண்றேன் பார்....'

நீட்டியவாறு தன்னை நெருங்கிய கரங்களை தட்டிவிட்ட மாதவி வாசலை நோக்கி கைநீட்டினாள். 'மரியாதையா வெளிய போயிருங்க.. இல்ல கத்தி கூச்சல் போடுவேன்.' 

தெருவை ஒட்டியிருந்த வீடு என்பதால் அவளுடைய குரல் தெருவில் கேட்க வாய்ப்பிருந்ததை உணர்ந்த ராஜசேகர் எழுந்து நின்றான். 'இப்ப போறேன்... ஆனா இப்படியே போயிருவேன்னு மட்டும் நினைக்காதே... மறுபடியும் வருவேன்.... இந்த ஏரியாவுலருந்தே உன்னெ விரட்டாம விடமாட்டேன்.... வக்கீல் கிட்டவே ஒன் வேலைய காட்டறியா?' என்றவாறு வாசலை நோக்கி நடந்தவனுடைய காலை தரையில் கிடந்த ஏதோ ஒன்று இடற, தடுமாறி தரையில் விழ இருந்தவன் சமாளித்துக்கொண்டு எழமுயன்றான்.. அதே கணம் அவனுடைய தலைக்கு மீது ஏதோ ஒன்று பறந்து சென்று எதிர் சுவரில் மோதி விழுந்தது. திடுக்கிட்டு என்னவென்று பார்த்தான்... சற்று முன் டீப்பாயில் வைக்கப்பட்டிருந்த காப்பி கோப்பை ஒன்று உடைந்து கிடந்தது...

ஒரு நொடி தப்பியிருந்தாலும் அது தன்னுடைய தலையை பதம் பார்த்திருக்கும் என்பதை உணர்ந்தவன் கட்டுக்கடங்கா ஆத்திரத்துடன் எழுந்து தன்னை நோக்கி வந்த மாதவியை பிடித்து கீழே தள்ளினான்... 

இதை முற்றிலும் எதிர்பார்க்காத மாதவி நிலைதடுமாறி கீழே விழ... ராஜசேகர் அதே கோபத்துடன் திரும்பி வாசற்கதவைத் திறந்துக்கொண்டு வெளியேறி கதவை அழுத்தி மூடினான்... எங்கே அவள் மீண்டும் எதையாவது எடுத்து தன் மீது எறிவாளோ என்ற அச்சம்...

நல்ல வேளை... வாசலில் விளக்கு ஏதும் இருக்கவில்லை... அவளுடைய வீட்டிலிருந்து இறங்கிய தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு தலையைக் குனிந்துக்கொண்டு சாலையைக் கடந்தான். தன்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து கிளம்பியவன் திரும்பி மாதவியின் வீட்டைப் பார்த்தான்... கதவு மூடியே இருந்ததைக் கண்டு சமாதானம் அடைந்தான்... கதவ திறந்துக்கிட்டு வரமாட்டா... என்று நினைத்தவாறு அங்கிருந்து புறப்பட்டு வீட்டை அடைந்தான்.

தொடரும்...

27 ஆகஸ்ட் 2013

ஊக வணிகம்தான் (Speculation) இந்திய ரூபாயின் சரிவுக்கு காரணமா?

கடந்த வாரம் நான் எழுதிய 'இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?' ங்கற பதிவில இந்த மாதிரியான ஏற்ற இறக்கத்துக்கு speculationனும் ஒரு முக்கிய காரணம்னு நண்பர் ஒருவர் கருத்துரையில் எழுதியிருந்தாங்க. 

அது ஓரளவுக்கு உண்மைதான். 

அதனால அதைப்பற்றி இன்னும் கொஞ்சம் டீப்பா பார்த்தா என்னன்னு மனசுல தோனிச்சி..

Speculationங்கற ஆங்கில வார்த்தைய அப்படியே தமிழ்ல சொல்லணும்னா ஊகம்னு சொல்லலாம். அதாவது நாளைக்கி அல்லது இன்னும் கொஞ்ச நாளைக்கு அப்புறம் என்ன நடக்கும்னு ஊகிக்கறது. இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லணும்னா அதாவது இன்னைக்கி டிஸ்கஸ் பண்ணப்போற டாப்பிக்கோட பின்னணியில சொல்லணும்னா, ஊகத்தின் அடிப்படையில் வணிகம் செய்தல் அப்படீன்னு சொல்லலாம். சுருக்கமா சொன்னா 'ஊக வணிகம்'. 

இந்த மாதிரியான வணிகம் பெரும்பாலும் பங்கு சந்தையிலதான் (share market) நடக்கும்னு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா இந்திய மற்றும் அன்னிய செலவாணி பணசந்தை (currency and forex market)கள்லயும் இது நடக்குது!

ஆனா இந்தியாவைப் பொருத்தவரையிலும் பணத்தை வைத்து வணிகம்(currency trading)  செய்வது சட்டவிரோதமாகும். அத்தகைய வணிகத்தில் ஈடுபட விரும்பறவங்க அரசாங்கத்துக்கிட்டருந்து அதுக்குன்னு லைசென்ஸ் வாங்கணும். இவங்களதான் இப்போ Authorised Money Exchangersனு சொல்றாங்க. இதுல கூட வர்த்தகம் செய்யலாம்னுதான் லைசென்ஸ் சொல்லும். அதாவது குடுத்து வாங்கலாம், அன்றைய சந்தை நிலவரப்படி. ஊக அடிப்படையில் அல்ல. இதுவும் கூட சமீப காலத்துல அறிமுகப்படுத்தப்பட்ட லைசென்ஸதான். முந்தியெல்லாம் வங்கிகள் இல்லன்னா தாமஸ் குக் மட்டுந்தான் forex trade செஞ்சிகிட்டு இருந்தாங்க. வங்கிகள தவிர இந்த exchange பிசினஸ்ல பல வருஷங்களா இருந்துவந்த கம்பெனி தாமஸ் குக். 

சரிங்க... எதுக்கு இந்த ஊக வணிகத்துல ஈடுபடறாங்க? யார், யாரெல்லாம் இதுல முக்கியமா ஈடுபடறாங்க?

முதல்ல எதுக்கு இந்த forex trade பண்றாங்கன்னு பாக்கலாம். 

இதுல ரெண்டு வகை இருக்கு.

1. பணமாற்று விகிதத்துல ஏற்பட மாற்றங்களால தங்களுக்கு நஷ்டம் வராம பாத்துக்கறதுக்கு (to protect from possible losses due to exchange fluctuations)

2.இந்த் ஏற்ற தாழ்வுகளை பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது (to make profit out of  exchange flucations).

இத அதிகமா அன்னிய செலவாணி சந்தையிலதான் செய்யிறாங்கன்னு சொல்லலாம். 

இத இன்னும் தெளிவாக்கறதுக்கு  தினமும் சந்தையில நடக்கற சில பண வர்த்தகங்கள பாக்கலாம். இத்தகைய வணிகங்கள் ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் வழியாக மட்டுமெ செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் வெளியூருக்கு செல்லும்போது டாலரை வாங்கும் Money exchanger இதை செய்ய முடியாது.

1அ. இந்திய இறக்குமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையிலிருந்து வாங்குபவர்கள்:

நான் வெளி நாட்டுலருந்து - அது எந்த நாடுங்கறது முக்கியமில்ல - சில மிஷின்கள இறக்குமதி பண்றேன்னு வச்சிக்குவோம். அத்தோட மொத்த மதிப்பு 1000 அமெரிக்க டாலர். நான் போட்டுருக்கற ஒப்பந்தப்படி பணத்த இன்னும் மூனு மாசத்துல குடுக்கணும். இன்னைக்கி அமெரிக்க டாலருக்கு இந்திய பணம் ரூ.65/- ரேட்ல வர்த்தகம் நடக்குது. இப்ப நாடு இருக்கற நிலமையில இந்த ரேட் இன்னும் ஏர்றதுக்கு சான்ஸ் இருக்கு.... 65/- ங்கறது மூனு மாசத்துல எழுபதோ, எழுபத்தஞ்சோ கூட ஆவலாம்னு சொல்றாங்க. இப்படியே போனா என்னோட பேமென்ட் ட்யூ ஆவறப்போ யூ எஸ் டாலர் எழுபத்தஞ்சிக்கு போனா நா 75000/- ரூபா கொடுக்க வேண்டியிருக்கும். பணமாற்று விகிதத்துல ஏற்படற மாற்றத்தால எனக்கு தேவையில்லாம பத்தாயிரம் நஷ்டம். இத தவிர்க்கறதுக்கு ஒரு வழி இருக்கு. நா என்னோட பேங்க்ல போயி எனக்கு ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது என்னோட பில் ட்யூ ஆவறப்போ நீங்க எனக்கு தேவையான ஆயிரம் டாலர இன்னைக்கி இருக்கற ரேட்டுலயே விக்கணும்னு ஒப்பந்தம்.  சாதாரணமா எக்சேஞ் ரேட் ஏறிக்கிட்டிருக்கற மார்க்கெட்ல இன்னைக்கி ரேட்டுக்கே மூனு மாசம் கழிச்சி விக்கறதுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க மாட்டாங்க. இன்னிக்கி இருக்கற ரேட்டுலருந்து ஒரு மார்ஜின் (margin) வச்சி 67-70க்குள்ள ஒரு ரேட்டுக்கு ஒப்பந்தம் போடுவாங்க. அதாவது உங்களுக்கு நஷ்டம் வேணாம் எங்களுக்கும் நஷ்டம் வேணாம்கறா மாதிரி ஒரு நடுநிலையான ரேட்டுக்கு ஒத்துக்குவாங்க. அந்த ஒப்பந்தப்படி மூனு மாசம் கழிச்சி ட்யூ டேட் வர்றப்போ எதிர்பார்த்தா மாதிரியே ரேட் எழுபத்தஞ்சிக்கு மேல போனாலும் நான் ஒப்பந்தத்துல போட்ட ரேட் படி இந்திய பணத்த குடுத்தா போறும். ஆனா நாம எதிர்பார்த்ததுக்கு எதிர்மாறா ரேட் ஏறாம அப்படியே நின்னாலும் இல்ல கொஞ்சமா ஏறியிருந்தாலும் ஒப்பந்தப்படிதான் நான் பணம் குடுத்தாவணும். இந்த ஒப்பந்தம் வழியா நா ஆயிரம் டாலர் வாங்குவேங்கறதால என்னோட பேங்குக்கு இது ஒரு sale contract. அவங்க சந்தையிலருந்து வாங்கி எனக்கு விப்பாங்க. 

1ஆ. ஏற்றுமதியாளர்கள் அதாவது அன்னிய செலவாணியை சந்தையில் விற்பவர்கள்.

நான் வெளிநாட்டுக்கு பழங்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்ற வியாபாரி. சமீபத்துல அமெரிக்காவுக்கு ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்கள ஏத்துமதி செஞ்சிருக்கேன். ஆனால் பணம் மூனு மாசம் கழிச்சித்தான் கைக்கு வரும். இப்ப இருக்கறா மாதிரி டாலரோட மதிப்பு ஏறு முகமா இல்லைன்னு வச்சிக்குவோம். 2000த்துலருந்து 2010 வரைக்கும் நிலமை அப்படித்தான் இருந்துது. அதாவது அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவுல முதலீடு பண்ணா நல்லா லாபம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிருந்த காலம் அது.  இந்திய ரூபாயோட மதிப்பு எங்க ஏறிடுமோன்னு நினைச்சிக்கிட்டிருந்த காலம். இந்திய ரூபாயோட மதிப்பு மூனு மாசத்துல ஏறிடும்கற சூழ்நிலையில எனக்கு இன்னைக்கி உடனே பணம் வந்தா ஒரு டாலருக்கு அறுபத்தஞ்சி ரூபா வீதம் ரூ.65,000/- கிடைக்கும். ஆனா டாலரோட மதிப்பு 63க்கோ இல்ல 62.5க்கோ சரிஞ்சிருச்சின்னா எனக்கு 63,000/- இல்லன்னா 62,500/- தான் கிடைக்கும். என்னோட எந்த தவறும் இல்லாம எனக்கு exchange rate மாற்றத்தால 2,500லருந்து 3000 வரைக்கும் நஷ்டம் ஏற்பட சான்ஸ் இருக்கு. அதனால நா என்னோட பேங்குக்கு  போயி ஒரு forward contract வேணும்னு கேக்கறேன். அதாவது எனக்கு வரப்போற ஆயிரம் டாலர் பணத்த இன்னைக்கி ரேட்டுலயே மூனு மாசம் கழிச்சி வாங்கிக்கணும்னு ஒப்பந்தம். அமெரிக்க டாலரோட மதிப்பு இறங்கப் போவுதுங்கறா மாதிரி சூழ்நிலையில இந்த ரேட்டுக்கு எந்த பேங்கும் ஒத்துக்க வழியில்லை. ஏற்கனவே சொன்னா மாதிரி இன்னைக்கி என்ன ரேட் இருக்கோ அதுக்கும் மூனு மாசத்துக்கு அப்புறம் என்ன ரேட் இருக்கும்னு பேங்க் நினைக்கிதோ அதுக்கும் இடையில ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடுவாங்க. அது 64-62க்குள்ள இருக்கலாம். மூனு மாசம் கழிச்சி டாலரோட இந்திய மதிப்பு 61க்கு கீழ போயிருந்தாக் கூட என் கிட்ட போட்டுருக்கற ஒப்பந்தப்படி ரூ.65க்குத்தான் பேங்க் வாங்கியாகணும். நேர் மாறா டாலரோட மதிப்பு 66 ஆனாலும் எனக்கு 65,000/-தான் கிடைக்கும். பேங்க் எங்கிட்டருந்து 65000/- வாங்கற டாலருக்கு அன்னைய ரேட்டுலதான் சந்தையில வித்தாகணும். நஷ்டமோ லாபமோ பேங்குக்குத்தான், எனக்கில்ல.

இந்த ரெண்டு வர்த்தகத்துலயும் (transactions) ஒப்பந்தப்படி பண்றதால பேங்குகளுக்கு நஷ்டம் வரா மாதிரி தெரியுதேன்னு நீங்க கேக்கலாம்.

ஆனா sale ஆனாலும் purchase ஆனாலும் அதுக்கு ஈடா இன்னொரு வர்தகமும் நடக்கும். அதாவது என்னோட பேங்க் எனக்கு ஆயிரம் டாலர் விக்கணும்னா அந்த ஆயிரம் டாலர சந்தையிலருந்து வாங்கியாகணும். இந்திய பணம் மாதிரி லட்சக் கணக்குல அன்னிய செலவாணிய எந்த பேங்காலயும் கையில வச்சிக்கிட்டிருக்க முடியாது. 

இறக்குமதியாளருக்கு விக்கிறதா ஆயிரம் டாலர் ஒப்பந்தம் (forward sale contract) போடறப்போ அன்னைக்கே இன்னொரு பார்ட்டியோட (அது பேங்கா இருக்கலாம் இல்ல அவங்களோட இன்னொரு ஏற்றுமதி கஸ்டமரா இருக்கலாம். மேல சொன்ன உதாரணம் 1ஆ வில இருக்கற ஏற்றமதி கஸ்டமரோட போட்டா மாதிரி இன்னொரு பர்சேஸ் (forward purchase contract) போட்ருவாங்க. அதாவது யார்கிட்டருந்து வாங்குனாலும் அத உடனே யாருக்காவது வித்துறனும். இதுக்கு squaringனு பேங்குக்காரங்க சொல்வாங்க. purchase இல்லாத sale contractம் இருக்காது. Sale இல்லாத purchase contractம் இருக்காது. இதுக்கு squared positionனு பேரு.

ஒருநாளைக்கு பத்து பேர் கிட்ட வாங்குன டாலர அத்தனையையும் அன்னைக்கே சாயந்தரத்துக்குள்ள (close of business) யாருக்காச்சும் வித்துறணும்கறது இந்திய ரிசர்வ் வங்கியோட கன்டிஷன். ஆனா இது எல்லா சமயத்துலயும் முடியாம போயிரும். உதாரணத்துக்கு ரிலையன்ஸ் மாதிரி ஒரு பெரிய கம்பெனிக்கு வர்த்தகம் முடியறதுக்கு அஞ்சி நிமிஷத்துக்கு முன்னால அமெரிக்காவுலருந்து பத்து மில்லியன் டாலர் வருதுன்னு வையிங்க. அத அவங்களோட பேங்க்குக்கு வித்துடறாங்க. ஆனா வர்த்தகம் முடியற நேரத்துக்குள்ள அந்த பத்து மில்லியனையும் வாங்கறதுக்கு எந்த பேங்கும் இல்லேன்னு வையிங்க. அத அப்படியே வச்சிக்கிட்டு அடுத்த நா வர்த்தகம் துவங்குனதும் விக்கலாம். இந்த மாதிரி விக்காம வச்சிருக்கற நிலைமைக்கு open positionன்னு சொல்வாங்க. 

இந்த மாதிரியான open position ரொம்பவும் டேஞ்சரான விஷயம். உதாரணத்துக்கு நேத்து பிசினஸ் முடியற சமயத்துல வந்த பத்து மில்லியன் டாலர விக்காம வச்சிருக்கேன்னு வையிங்க. நேத்தே அத வித்திருந்தா ரூ.65க்கு வித்துருக்க்லாம். ஆனா அடுத்த நாள் காலையிலயும் விக்க முடியல. ரேட் குறைஞ்சிக்கிட்டே போயி 64 இல்லன்னா 63 ஆயிருது. ஒரு டாலருக்கு ஒரு ரூபாயிலருந்து ரெண்டு ரூபா வரைக்கும் நஷ்டம்! பத்து மில்லியனுக்கு பார்த்தா எவ்வளவு நஷ்டம்! பத்து மில்லியன் டாலர்னா  ஒரு கோடி டாலர்!!. ஒரு டாலருக்கு இரண்டு ரூபா நஷ்டம்னா ஒரே நாள்ல ஒரே வர்த்தகத்துல எனக்கு இரண்டு கோடி  நஷ்டம்! இத சின்ன பேங்குகளால தாங்க முடியாதுல்ல? அதனால ஒரு வங்கியோட net worthல இத்தன சதவிகிதத்துக்கு மேல இந்த மாதிரியான open positon வச்சிருக்கக் கூடாதுங்கற கன்டிஷன் இருக்கு. ஆனாலும் ICICI,CITI,SBI, மாதிரி பேங்குங்க இந்த லிமிட்டுக்கு மேலயும் வச்சிருப்பாங்க. அரசு வங்கிகள் இல்லாத சில பெரிய தனியார் வங்கிகள் இந்த மாதிரி open positionன வேணும்னே வச்சிருப்பாங்க. அதாவது நாளைக்கு ரேட் ஏறும்கற ஊகத்துல லாபம் பண்ற நோக்கத்தோட வச்சிக்கிட்டுருப்பாங்களாம். 

இந்த மாதிரியான open position வச்சிருக்கற பேங்குகளுக்கு மட்டுமில்லாம நாட்டோட பணத்தோட மதிப்புக்கும் பெரிய சவாலா இருக்கற விஷயம். இது எல்லை மீறி போவுதுங்கற சந்தேகம் ரிசர்வ் வங்கிக்கு வந்தா உடனே அந்தமாதிரியான பேங்குகள கூப்ட்டு எச்சரிப்பாங்க. போன ரெண்டு மாசமா அநேகமா தினமும் ஸ்டேட் பாங்க் மாதிரியான பேங்குகள அவங்க கூப்ட்டு வார்ன் பண்ணிக்கிட்டே இருக்காங்களாம்.

இந்த மாதிரியா லாப நோக்கத்தோட ரிஸ்க் எடுத்து செய்யிற பிசினஸத்தான் speculative businessனு சொல்றோம். இது அளவுக்கு மீறிப் போனா அந்த பேங்குகளோட ஒட்டுமொத்த நிதிநிலைமையே மோசமாயிறக் கூட சான்ஸ் இருக்கு. இந்த மாதிரி சம்பவம் வெளிநாடுகள்ல கூட நிறைய நடந்திருக்கு. நிறைய பேங்க் இல்லன்ன நிதிநிறுவனங்கள் திவாலா ஆயிருக்கு.

சரி அடுத்து இந்த மாதிரியான speculation எப்படி ஒரு நாட்டோட பணத்தோட மதிப்பை பாதிக்குதுன்னு சுருக்கமா பாக்கலாம்.

நா மேல சொன்னா மாதிரியான forward contract போடறது ஒரு எல்லை மீறி போவுதுன்னு வையிங்க. அதாவது வெளிநாட்டுலருந்து இறக்குமதி பண்ற எல்லாருமே மூனு மாசத்துக்கப்புறம் இந்த ரேட்தான் இருக்கும்னு ஒரு ஊகத்துல ஒரு ரேட் வச்சி ஒப்பந்தம் போடறாங்க. அதாவது இந்த மாதிரி ஒப்பந்தம் போடறவங்கள்ல பத்துல ஒன்பது பேர் இன்னைக்கி 65ரூபாயா இருக்கற டாலரோட மதிப்பு மூனு மாசம் கழிச்சி 68ரூபாவா ஆகப் போவுதுன்னு தீர்மானிச்சி ஒப்பந்தம் போட்டா உண்மையிலேயே அது மூனு மாசம் கழிச்சி 68லதான் போய் நிக்குமாம்! 

இத ஆங்கிலத்துல herd mentalityன்னு சொல்றாங்க. தமிழ்ல சொல்லணும்னா மந்தை செயல்பாடு... அதாவது மந்தையிலருக்கற நூறு ஆட்டுல பத்து ஆடு மேற்கு திசை பாத்து திரும்புனா அத தொடர்ந்து வந்துக்கிட்டிருக்கற அத்தனை ஆடுகளும் அதே திசையில திரும்புமாம்! இது நம்ம நாட்டுக்கு மட்டுமில்ல இந்த மாதிரியான வர்த்தகம் - பங்கு வர்த்தகம்னாலும் அன்னிய செலவாணி வர்த்தகம்னாலும் - பொருளாதாரத்துல மிகவும் முதிர்ந்த (matured) நாடுன்னு நாம நினைக்கற அமெரிக்கா போன்ற நாடுகளிலும் - வர்த்தகர்கள் இந்த மனநிலையிலதான் வர்த்தகம் செய்வாங்க. அதனாலதான் ஒருநாள்ல முதல் முதல் மார்கெட்ல இறங்கற ஆசிய நாடுகள்ல (இதுல ஜப்பான்லதான் stock exchange முதல்ல துவங்கும்) எப்படி வர்த்தகம் நடக்குதோ அவங்கள தொடர்ந்து ஐரோப்பா அவங்கள தொடர்ந்து கடைசியில வர்ற அமெரிக்காக்காரனும் அதே மாதிரிதான் வர்த்தகம் செய்வான். ஜப்பான்காரனும் முந்தா நாள் கடைசியில அமெரிக்காவுல எப்படி வர்த்தகம் முடிஞ்சிதுன்னு பார்த்துட்டு அதே trendலதான் பிசினஸ தொடங்குவானாம்!. உலக வர்த்தக மயமாக்கல் கொள்கையை கடைப்பிடிக்கற எல்லா நாடுகள்லயும் இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்யும். என்னைக்கி இந்த வலையில இந்தியா மாட்டுச்சோ அன்னையிலருந்து இந்தியாவுலயும் அதே நிலைலதான் பங்கு வர்த்தகமும் அன்னிய செலவாணி வர்த்தகமும் நடக்குது. 

Speculative trading (ஊக வணிகம்) ஒரு அளவுக்குள்ள இருந்துச்சின்னா அது நாட்டோட பொருளாதாரத்துக்கு உதவியா கூட இருக்கும். ஒரு வளரும் நாட்டுல இது நடக்கறது ரொம்பவும் சகஜம், தேவையும் கூட. ஆனா அளவுக்கு மீறுனா அமிர்தமும் நஞ்சுங்கறா மாதிரி இந்த speculative forex trade with profit motive எல்லைய மீறிப் போறதாலயும் கூட இந்திய ரூபாயின் மதிப்பு ஊகம் பண்ண முடியாத அளவுக்கு ஏறி இறங்கிக்கிட்டு இருக்கலாம். 

இத கட்டுப்படுத்தறதுக்கு ஒவ்வொரு வங்கியும் என்ன பொசிஷன்ல இருக்காங்கன்னு உடனுக்கு உடனே கண்டுபிடிக்கற வசதி ரிசர்வ் வங்கிக்கு இப்ப இல்லை. இதுதான் பெரிய துரதிர்ஷ்டம். பேங்குகளோட அன்னிய செலவாணி வர்த்தகத்த ஒரு வரைமுறைக்குள்ள கொண்டு வர்றதுக்குன்னே FEDAIனு (அன்னிய செலவாணியில் டீலர்கள் அசோசியேஷன்) ஒரு கூட்டமைப்பு இருக்கத்தான் செய்யிது. அவங்களாலயும் எல்லா பேங்குகளோட டீலிங்ஸையும் உருப்படியா மானிட்டர் (effective monitoring) பண்ண முடியலைங்கறதுதான் உண்மை. 

இதுக்கு ஒவ்வொரு வர்த்தகத்தையும் அது நடக்கறப்பவே மானிட்டர் பண்றா மாதிரி (online monitoring) ஒரு சரியான மென்பொருளை கண்டுபிடிக்கணும். உடனுக்குடனே இல்லாட்டியும் அன்றைய வர்த்தகத்தின் முடிஞ்சவுடனேயாவது (end of business day) தெரிஞ்சிக்கறா மாதிரி ஒரு வசதி இருந்தா இத ஓரளவுக்கு கட்டுக்குள்ள வச்சிக்க முடியும். வெறும் லாப நோக்கத்தோட speculative tradingல தொடர்ந்து ஈடுபடற வங்கிகள் இல்லன்னா நிதிநிறுவனங்களோட லைசென்ஸ உடனுக்குடனே சஸ்பென்ட் பண்ண முடியுறா மாதிரி வசதி இருந்தா யாரும் இந்த டிரேடிங்ல ஈடுபட தயங்குவாங்கன்னு நினைக்கிறேன்.

********** 





23 ஆகஸ்ட் 2013

சேரன் மகள் தாமினியின் மனமாற்றத்திற்கு யார் காரணம்?


ரெண்டு மாசமா ஊரையே கலக்கிக்கிட்டிருந்த சேரன் - தாமினி - சந்துரு விஷயம் ஒருவழியா க்ளைமாக்ஸ் முடிஞ்சி சுபம்னு போட்டாச்சி.

ஆனா இதுக்கு பின்னால யார், யாரெல்லாமோ சதி செஞ்சிருக்காங்கன்னு சந்துரு சைட் வக்கீல்ங்க புலம்பிக்கிட்டிருக்காங்க. 

ஒருவேளை அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த ஃபீசும் இலவசமா கிடைச்சிக் கிட்டுருந்த பப்ளிசிட்டியும் போயிருச்சேங்கற ஆதங்கமும் (வயித்தெரிச்சல்னு சொன்னா நல்லாருக்காதே!) ஒரு காரணமாருக்கும்.

இதுல ஒரு பெரிய பங்கும் நீதிமன்றமும் ப்ளே பண்ணியிருக்காங்கன்னும் சொல்றாங்களாம்.  சந்துரு ஹேபஸ் கார்பஸ் மனு போட்டதும் தாமினிய ஆஜராக்கியாச்சி. உடனே அத தள்ளுபடி செஞ்சி தீர்ப்பளிக்காம எதுக்கு கேஸ ரெண்டு வாரத்துக்கு தள்ளி வச்சாங்க? கேஸ் நிலுவையிலருக்கறப்போ தாமினிய அரசு காப்பகத்துல வைக்காம சேரன் அன்ட் கோ ஈசியா அப்ரோச் பண்ணி அவர ப்ரெய்ன் வாஷ் பண்றதுக்கு வசதியா அவரோட நண்பர் வீட்லயே தங்க வச்சது எதுக்காக?  நீங்களும் வேணும்னா தாமினிய பாத்து பேசலாம்னு சந்துரு அன்ட் கோவுக்கும் பர்மிஷன் இருந்தாலும் எதிராளியோட
நண்பர் கஸ்டடியில இருக்கறப்போ அவங்களால எப்படிங்க அந்த பொண்ணோட பேச முடியும்னு கேக்கறாங்களாமே?  சேரனுக்கு ஆதரவா ஒட்டுமொத்த கோலிவுட்டே தாமினிய டெய்லி போயி பாத்து பேசி ஒருவழியா அவர இந்த முடிவுக்கு வரவச்சாங்களாமே?

இதெல்லாம் இப்போதைக்கி விடை தெரிஞ்சிக்க முடியாத கேள்விங்க...

எப்படியோ இப்போதைக்கி இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்துருச்சி.... இது நல்ல முடிவா இல்ல இந்த முடிவுலயே தாமினி நிலைச்சி நிப்பாங்களா?

இந்த கேள்விகளுக்கும் காலந்தாங்க பதில் சொல்லணும்....

சரி... நா இன்னைக்கி சொல்ல வந்த விஷயத்த சொல்றேன்...

என்ன இது அதுக்குள்ள முடிச்சிட்டீங்கன்னு கேக்கறீங்களா? என்னங்க பண்றது?

இந்திய ரூபாயின் மதிப்பு ஏன் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது
 
இந்த பதிவுக்கு இப்படி தலைப்பு குடுத்துருந்தா எத்தனை பேர் படிச்சிருப்பீங்க?

அதனாலதான் இந்த பம்மாத்து வேலை...!

தலைப்ப பாத்துட்டு வந்து மாட்டிக்கிட்டீங்க இல்ல.... திட்டறத திட்டிட்டு வந்ததுக்கு முழுசா படிச்சிட்டு போயிறுங்க..

போன ஒரு மாசமாவே நம்ம நாட்டு பணத்தோட மதிப்பு விழுந்துக்கிட்டே வர்றத பார்த்துக்கிட்டு இருக்கோம். குறிப்பா அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு கழுத தேஞ்சி கட்டெறும்பான கதையா குறைஞ்சிக்கிட்டே போவுது.

இதுக்கு உண்மையிலேயே என்னங்க காரணம்?

அதையெல்லாம் பாக்கறதுக்கு முன்னால எதுக்கு இந்த மாதிரி ஏறுது, இறங்குதுன்னு நமக்கு புரியற பாஷையில  பாக்கலாம்.

சாதாரணமா சந்தையில எந்த பொருளோட மதிப்பும் (மதிப்புன்னா விலைன்னு வச்சிக்கலாம்) ஏறவோ இறங்கவோ செஞ்சா அதுக்கு நம்மள மாதிரி ஜனங்க, குறிப்பா வாங்கறவங்க மத்தியில இருக்கற அந்த பொருள் மேல இருக்கற விருப்பும் வெறுப்பும்தான் முக்கிய காரணம். அதாவது, ஒரு பொருள் எனக்கு ரொம்ப தேவைன்னா அது எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிறணும்னு தோனும். அதுக்கு நேர் மாறா ஒரு பொருள் எனக்கு தேவை இல்லைன்னா அது எவ்வளவு சீப்பா கிடைச்சாலும் வாங்கணும்னு தோனாது.

ரெண்டாவது, அது சந்தைக்கு வர்ற அளவு. சந்தையில ஒரு பொருள் ஜாஸ்தியா கிடைக்குதுன்னா அதாவது அத விரும்பி வாங்கறவங்களோட எண்ணிக்கையை விட அதிகமா கிடைச்சிதுன்னா அதோட விலை இறங்கத்தான் செய்யும்.

உதாரணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னால நார்த்ல பல இடங்கள்லயும் மழை அடிச்சி கொளுத்திச்சி. இதனால வெங்காய சாகுபடி நினைச்சபடி நடக்கல. அதனால வெங்காய சப்ளைக்கு நார்த் இந்தியாவையே நம்பியிருந்த நம்ம சந்தையிலயும் வெங்காய வரத்து கணிசமா குறைஞ்சிருச்சி. வரத்து குறைஞ்சிதே தவிர நம்மோட தேவை குறையல.  அதனால கிலோ பதினோரு ரூபாய்க்கு வித்துக்கிட்டிருந்த வெங்காயம் படிப்படியா அதிகரிச்சி இப்போ அறுபது ரூபாய எட்டிப் புடிச்சிருக்கு.

இத ஆங்கிலத்துல சொன்னா the prices of a commodity goes up when the supply is unable to meet the demand. இன்னும் சிம்பிளா சொல்லணும்னா ஒரு பொருளோட சந்தை வரத்து அதன் தேவையைக் காட்டிலும் அதிகமா இருந்தா அதன் விலை குறையும். அதுக்கு நேர் எதிரா தேவை வரத்தை விட அதிகமா இருந்தா அதன் விலை உயரும் (when the suplly is more than the demand the prices go down. It goes up when demand is more than the supply.). 

இதுதான் விலைவாசி ஏறி இறங்குவதன் அடிப்படை நியதி (basic principle)

இதை அப்படியே இந்திய ரூபாயின் மதிப்புடன் ஒப்பிட்டு பாக்கலாம்.

அன்னிய செலவாணி சந்தையில் (forex market) டாலருக்கு (ஏனெனில் இப்போதும் உலக வர்த்தகத்தில் வாங்கல் விக்கல் எல்லாமே டாலரில்தான் நடக்கிறது) ஏற்படும்  தேவைகள்தான் அதன் மதிப்பை (விலையை) நிர்ணயிக்கின்றன.

இந்தியாவில் டாலருக்கு தேவை எப்போதெல்லாம் ஏற்படுகிறது?

1. நாட்டின் Trade deficit அதிகரிக்கும்போது. அதாவது நாட்டின் இறக்குமதி அதன் ஏற்றுமதியை விட அதிகரிக்கும்போது. ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும் அதன் இறக்குமதி மதிப்பிற்கும் இடையிலுள்ள வித்தியாசம்னு சொல்லலாம். ஆனா இந்த இரண்டுமில்லாத விஷயங்களும் இருக்கு. அத அப்புறம் பாக்கலாம். (இந்திய இறக்குமதியில் 35% பெட்ரோல் போன்ற எரிபொருட்களும் அதற்கு அடுத்தபடியாக 11% தங்கமும் இடம் பெறுதாம்).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களுடைய இந்திய முதலீட்டை மீண்டும் தங்கள் நாட்டுக்கு திருப்பி எடுத்துக்கிட்டு போகும்போது.

இது ரெண்டும்தான் இன்றைய பரிதாப நிலைக்கு முக்கிய காரணங்கள்னு சொல்றாங்க.

இந்த ரெண்டுக்கும் அப்புறமும் விஷயங்கள் இருக்கு:

1. இந்திய நிறுவனங்கள் அன்னிய நாடுகளில் செய்யும் முதலீடுகள். (டாட்டா இங்கிலாந்துலருக்கற கோரஸ்னு ஒரு பெரிய ஸ்டீல் கம்பெனிய வாங்குனத இதுக்கு உதாரணமா சொல்லலாம்).

அதுமட்டுமில்லாம

2..மந்தமான இந்திய பொருளாதார சூழல். இங்க வந்து முதலீடு பண்ணா லாபம் வருமான்னு அன்னிய முதலீட்டாளர்கள் மனசுல ஏற்படற ஒரு தயக்கம். சமீப காலத்துல டாலர் முதலீடுகள் குறைஞ்சி போறதுக்கு இதுதான் முக்கிய காரணம்.  ஏற்கனவே செஞ்சிருந்த முதலீட்டையும் திருப்பி எடுத்துக்கிட்டு போய்கிட்டிருக்கறப்போ புது முதலீட்ட எதிர்பாக்கறது முட்டாள்தனம் இல்லையா?

3. அமெரிக்க மத்திய வங்கியின் பொருளாதார கொள்கைகளில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்கள்.

இந்தியாவுலருக்கற முதலீட்டையெல்லாம் மறுபடியும் அமெரிக்காவுக்கே கொண்டு போனதுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்? எங்க லாபம் ஜாஸ்தியோ அங்கதான முதலீட்டாளர்கள் போவாங்க? அதுதான் இப்ப நடக்குது. சமீபத்திய கணக்கெடுக்கின்படி இந்தியாவுல சுமார் 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்காம். அதாவது சுமார் ரூ.90,000 கோடி!  இதுல பெரும்பங்கு இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. போன மூனு மாசமா இந்திய ஷேர் மார்க்கெட் யோயோ (yoyo)மாதிரி ஏறவும் இறங்கவும் அன்னிய முதலீட்டாளர்கள் எடுக்கறதும்
போடறதுமா இருக்கறதுதான் காரணம்.

உலக பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றங்கள்.

நேரு காலத்துலருந்து நரசிம்மராவ் காலம் வரைக்கும் இந்திய பொருளாதாரம் உலக பொருளாதாரத்துலருந்து விலகியே இருந்துதுங்கறது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பல்லாம் உலக சந்தையில ஏற்படற எந்த மாற்றமும் நம்மை அவ்வளவா பாதிச்சதில்லை. ஆனா நரசிம்மராவ் காலத்துல இந்திய பொருளாதரத்துல தாரளமயமாக்கல்னு ஒரு புது கொள்கைய கொண்டு வந்ததுக்கப்புறம் இந்திய பொருளாதாரம் உலக சந்தையோட ஒருங்கிணைக்கப்பட்டாச்சி (integrated). அதாவது அன்னிய நாட்டுக்காரங்க அவங்க பணத்த இந்திய சந்தையில முதலீடு செய்றதுக்கு தாராளமா அனுமதிக்கப்பட்டாங்க. அத்தோட இந்திய கம்பெனிங்கள்ல ஒரு குறிப்பிட்ட விழுக்காடு முதலீடு செய்யவும் பர்மிட் செஞ்சாங்க. அதனால அமெரிக்க டாலர் அதிக அளவுல இந்தியாவுக்குள்ள வர ஆரம்பிச்சிது. இந்தியாவோட அன்னிய செலவாணி கையிருப்பும் ரிக்கார்ட்னு சொல்ற அளவுக்கு கட்டுக்கடங்காம அதிகமாச்சி. இதுக்கு நாங்கதான் காரணம்னு நரசிம்மராவ் அரசு மட்டுமில்லீங்க அவங்கள தொடர்ந்து வந்த NDAவும் சொல்லி எலெக்‌ஷன்ல ஓட்டு வாங்குனதும் உண்மை.

அப்பவே இந்த கொள்கை எதிர்காலத்துல இந்தியாவுக்கு எதிரா திரும்பும்னு எப்பவும் மாதிரியே கம்யூனிஸ்ட்காரங்க கூப்பாடு போட்டாங்க. அவங்க மட்டுமில்லாம அதுவரைக்கும் சந்தையை ஆட்டிப்படைச்சிக்கிட்டிருந்த டாட்டா, பிர்லா, அம்ம்பானி போன்ற இந்திய முதலாளிங்களும் இது சரியில்லைன்னாங்க. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் லாபம் கிடைக்கும்னுதான் இங்க வராங்க அது இல்லேன்னு ஆயிருச்சின்னா கண்ண மூடி திறக்கறதுக்குள்ள தங்களோட பணத்தை தூக்கிக்கிட்டு பறந்துருவானுங்க, ஆனா நாங்க அப்படியில்ல லாபம்னாலும் நஷ்டம்னாலும் நாங்க தொடர்ந்து சந்தையிலதான் இருப்போம்னாங்க. ஆனா வந்து குவிஞ்ச டாலரோட மயக்கம் அன்னைக்கி ஆட்சியிலிருந்தவங்களுக்கு - அது காங்கிரசானாலும் பிஜேபியானாலும் (இந்த ரெண்டு ஆட்சியிலயும் சில சமயங்கள்ல கம்யூனிஸ்ட்டும் பார்ட்னரா இருந்தாங்கங்கறதும் உண்மைதான். ஆனா அது அவங்களுக்கு மறந்து போச்சி) - புரியல, இல்லன்னா புரியாத மாதிரி பாவலா பண்ணாங்க.

அவங்க சுயநலத்தோட சொன்னாங்களோ இல்ல பொதுநலத்தோட சொன்னாங்களோ இப்ப அவங்க அன்னைக்கி சொன்னதுதான் நடக்குது. இங்க நிலமை சரியில்லேன்னு தெரிஞ்சதும் அன்னிய முதலீட்டாருங்க பணத்தோட
பறந்துக்கிட்டே இருக்காங்க.

இதுதான் இந்திய பணத்தின் வீழ்ச்சிக்கு காரணம்.

இதவிட சிம்பிளா சொல்லுங்களேன்ன்னு நீங்க சொல்றது கேக்குது.

அமெரிக்க டாலர் இந்தியாவுல யாருக்கெல்லாம் வேணும்னு பாக்கலாம் (அதாவது டிமான்ட் பண்றவங்க).

1. இறக்குமதி பண்றவங்களுக்கு. இவங்க இறக்குமதி பண்ற பொருட்களுக்கு காசு குடுக்கணும்னா டாலர்லதான் குடுக்கணும். அத அவங்க கணகு வச்சிருக்கற பேங்க்லருந்துதான் வாங்கணும். பேங்க் சந்தையிலருந்து வாங்கணும்.

அதாவது இன்னொரு பேங்க்லருந்து. எல்லா பேங்குகளும் சேர்ந்து நடத்தறதுதான் அன்னிய செலவாணி சந்தை (forex market).

2.அன்னிய முதலீட்டாளர்கள் தங்களோட முதலீட்டை மறுபடியும் எடுத்துக்கிட்டு போறப்பவும் அவங்களுக்கு டாலர்லயே திருப்பி குடுத்தாகணும். இதுக்கும் அன்னிய செலவாணி சந்தையிலருந்துதான் டாலர வாங்கணும்.

3.வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்கள். இவங்களும் இந்த சந்தையிலதான் இந்திய பணத்த டாலரா மாத்தணும்.

இவங்க மூனு பேரும்தான் இந்த சந்தையிலருந்து டாலர வாங்கறதுல முக்கியமானவங்க.

இந்த சந்தையில டாலர விக்கறவங்க (அதாவது சப்ளை பண்றவங்க)
 
 
1. இந்திய ஏற்றுமதியாளர்கள்
 
இவங்க ஏற்றுமதி செஞ்ச பொருட்களோட விலை வெளிநாட்டுக்காரங்கக் கிட்டருந்து அவங்க பேங்க் வழியா டாலரா வரும். அத அப்படியே கையில வச்சிக்க முடியாது. குறிப்பிட்ட நாளுக்குள்ள சந்தையில வித்தாகணும்.

2.அன்னிய முதலீட்டாளர்கள்
 
இந்திய நிறுவனத்திலோ இல்ல பங்கு சந்தையிலோ முதலீடு செய்ய விரும்பற அன்னிய கம்பெனிங்க அவங்களோட டாலர், யூரோ, பவுன்ட் ஸ்டர்லிங் மாதிரி பணத்தையும் இந்த சந்தையிலதான் வித்தாகணும். அதாவது அவங்க முதலீடு எந்த கம்பெனிக்கு போய் சேருதோ அந்த கம்பெனிங்க அவங்க பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க. பங்கு சந்தையில முதலீடு செஞ்சா அந்த பங்குகள அவங்களுக்கு வித்த ஆளுங்க (கம்பெனிங்க) அவங்களோட பேங்க் வழியா சந்தையில வித்துருவாங்க.

இவங்க ரெண்டு பேரும்தான் இந்த சந்தையில டாலர விக்கறதுல முக்கியமானவங்க.

டாலர விக்கறவங்கள சப்ளையருங்கன்னும் டாலர வாங்கறவங்கள டிமான்ட் பண்றவங்கன்னும் சொல்லலாம்.

இந்த சந்தையில டாலர் சப்ளையர்ங்கள விட டிமான்ட் பண்றவங்க ஜாஸ்தியானா டாலர் விலை கூடும். நேர் எதிரா இருந்தா டாலர் விலை குறையும்.

இதுதாங்க மேட்டரே... இத விட சிம்பிளா சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்.

இந்த ஏத்த இறக்கத்துல தலையிட்டு ஏதாச்சும் செய்ய முடியும்னா அது இந்திய மத்திய ரிசர்வ் வங்கி இல்லன்னா ஆட்சியிலருக்கற மத்திய அரசு - குறிப்பா சொல்லணும்னா நாட்டின் நிதி மந்திரி.

ரிசர்வ் வங்கி நினைச்சா டாலர் எப்பல்லாம் விலை ஏறுதோ அப்போ தங்களோட கையிருப்புலருக்கற டாலர சந்தையில விக்கலாம். அதாவது டாலர் தேவைப்படற வங்கிகளுக்கு குடுக்கறது.

சந்தையில டாலர் எப்பல்லாம் அதிகமா வருதோ அப்பல்லாம் அத பேங்குகள்கிட்டருந்து வாங்கிக்கிறது.

அவங்க இல்லாம மத்திய அரசு செய்யக் கூடியது என்னன்னா இங்கருந்து போனாப் போறும்னு நினைக்கற அன்னிய முதலீட்டாளர்கள திருப்திப்படுத்தற விஷயமா ஏதாச்சும் செய்யிறது. சாதாரணமா டாலர் ஒரே சீரா உள்ள வந்துக்கிட்டே இருக்கறதுக்கு அன்னிய முதலீடு கொள்கையை ஒரே சீரா வச்சிக்கிட்டிருக்கறது ரொம்ப அவசியம். அது இல்லாம நினைச்சா நீங்க இஷ்டம் போல வரலாம்னு சொல்றது கொஞ்ச நாள் கழிச்சி நீங்க வரத்தேவையில்லேங்கறா மாதிரி புதுசு புதுசா கண்டிஷன் போடறதுன்னு ஒரு அரசு செஞ்சா இவனுங்கள நம்பி எப்படிறா நம்ம பணத்த இங்க வச்சிக்கிட்டிருக்கறது நினைச்சி இருக்கறவணும் ஓடிருவான்.

அதான் இப்ப மெயினா நடக்குது. புதுசா வரலாம்னு நினைச்சவனும் மனச மாத்திக்கிட்டா இங்க இருக்கறவனும் விட்டாப் போறும்னு ஓடிக்கிட்டிருக்கான்.

உதாரனத்துக்கு சில்லறை வணிகத்துல அன்னிய முதலீட்டாளர்களை அனுமதிக்கறதா வேணாமான்னு தெரியாம மத்திய அரசு ஆடுன ஆட்டத்த அவ்வளவு சீக்கிரம் அவங்க மறந்துருவாங்களா?

அதனால இப்பத்தைக்கி அன்னிய முதலீட்டாளர்கள் தாஜா பண்ணி இந்தியாவுக்குள்ள வரவைக்க முடியாதுங்கறது மத்திய அரசுக்கு தெரிஞ்சி போச்சி. வருமானம் குறைஞ்சி போச்சின்னா செலவ குறைச்சித்தான ஆகணும்? டாலர் உள்ள வர்றது குறைஞ்சிட்டதால வெளிய போற டாலரையாவது முடிஞ்ச மட்டும் குறைப்போம்னு நினைச்சி  செஞ்சதுதான்:
 
1. தங்க இறக்குமதி வரிய இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு ஏத்துனது. இந்த வருசத்து மொத்த தங்க இறக்குமதி 850 டண் மேல போகக் கூடாதாம். ஆனா தங்கத்துக்கு இந்தியாக்காரங்க மத்தியில இருக்கற டிமான்ட் குறையவே இல்லையாம். அதனால இனியும் வரிய கூட்டறதுக்கு சான்ஸ் இருக்காம்! தங்கம்தான் அதிக லாபம் தரும்னு நினைச்சா அதிக விலையும் குடுத்துத்தான் ஆவணும், வேற வழியில்லை.

2. அதே மாதிரி பெட்ரோல் இறக்குமதியும். இந்திய மதிப்பு குறைஞ்சிக்கிட்டே இருக்கறவரைக்கும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் இருக்கும். புலம்பி பிரயோஜனம் இல்லை. வேணும்னா வாரத்துக்கு ஒரு நாள் பஸ்லயோ, ஷேர் ஆட்டோவுலயோ இல்லன்னா சைக்கிள்லயோ ஆஃபீஸ்க்கு போங்க... உடம்பும் இளைக்கும்.

2. இந்திய கம்பெனிங்களோட அன்னிய முதலீட்டு அளவை குறைச்சது. இனி எந்த இந்திய கம்பெனியும் மத்திய அரசோட அனுமதியில்லாம அன்னிய கம்பெனிங்கள வாங்கிற முடியாது.  அவங்கக்கிட்ட டாலர் கையிருப்பு ஜாஸ்தியாருந்தா இந்திய சந்தையிலதான் விக்கணும்...

இந்த மூனையும்தாம் இந்திய அரசாங்கம் இப்பத்தைக்கி செய்ய முடியும்.

இன்னொன்னும் செய்யலாம். நிறைய இந்திய ஐ.டி. கம்பெனிங்க (இன்ஃபோசிஸ் இதுல முக்கியமான கம்பெனி) தங்களோட டாலர் பணத்த அயல்நாட்டு வங்கிகள்ல குவிச்சி வச்சிருக்கறதா கேள்வி. அதையெல்லாம் திரும்ப இங்க கொண்டு வரணும்னு ஒரு கன்டிஷன் போடலாம். அதுக்கு ஏதாச்சும் வரி விலக்கு அளிச்சாலும் அது உடனே ரிசல்ட் குடுக்க வாய்ப்பிருக்கு. ஆனா அவ்வளவு நாட்டுப்பற்று உள்ளவங்க இல்லை நம்ம முதலாளிங்கங்கறது வேற விஷயம்.

இது தேர்தல் வருடம். அதனால பார்லிமென்டையே ஒழுங்கா நடத்த முடியாம தடுமாறுற ஒரு அரசாங்கத்தால அன்னிய முதலீட்டாளர்கள மறுபடியும் இந்தியாவுக்குள்ள வர வைக்கிற மாதிரி பெரிய பொருளாதார முடிவுகள் எடுக்க முடியாதுங்க. அப்படியே எடுத்தாலும் இப்ப இருக்கறவங்க வர்ற தேர்தல்ல தோத்துட்டா அடுத்த வர்ற அரசு என்ன செய்யுமோன்னு அன்னிய முதலீட்டாளர்க நினைப்பாங்க இல்ல?

அதனால காருக்கு டிங்கரிங் பண்றா மாதிரி இப்பத்தைக்கி இத தட்டி, அத தட்டி மேனேஜ் பண்ண வேண்டியதுதான்.

அதத்தான் ப.சிதம்பரம் செஞ்சிக்கிட்டிருக்கார்.

இன்றைய நிலமையில யார் அந்த பதவியில இருந்தாலும் இதத்தான் செய்ய முடியுங்க...

வீணா புலம்பி எந்த பிரயோஜனமும் இல்லை....

அன்னிய செலவாணி சந்தையில ரூபா மதிப்பு விழுந்தா ஆட்டோமேட்டிக்கா நேரடிய பலனடையப் போறது யாருன்னு தெரியுதா? இன்னைக்கி இதப்பத்தி கொஞ்சம் சத்தமாவே புலம்பற அயல்நாட்டுல வேலை செய்யிற நம்ம ஆளுங்கதான்.

டாலர்ல சம்பாதிக்கறவங்களுக்கு இது ஒரு எதிர்பார்க்காத வரப்பிரசாதம்தானே.... போன மாசம்வரைக்கு, 500 டாலர் (25,000/-) வீட்டம்மாவுக்கு அனுப்பிக்கிட்டுருந்த இந்தியாகாரர் இந்திய ரூபா இப்படியே விழுந்து ஒரு டாலருக்கு ரூ.70/-ன்னு ஆவுதுன்னு வையிங்க... அப்போ அவர் அனுப்பற 500 டாலரோட மதிப்பு ரூ.35,000/- ஆயிருமே... அவரோட வீட்டம்மாவுக்கு ஒரேயடியா ரூ.10000/- இன்க்ரிமென்ட் கிடைச்சா மாதிரிதானே?

அத நினைச்சி சந்தோஷப்படறத விட்டுப்போட்டு... எதுக்கு நாட்டப் பத்தி கவலைப்படறீங்க?

சரிங்க, என்னெ மாதிரி இந்தியாவுல சம்பாதிக்கறவங்களுக்கு இதனால பெருசா இழப்பிருக்கா? பெட்ரோல் விலை ஏறும். அத தவிர பெருசா இழப்பு நமக்கு இருக்கப்போவதில்லை... தங்கம் விலை ஏறும். அதால பாதிக்கப்படப் போறவங்க எத்தனை சதவிகிதம் இருப்பாங்க? விடுங்க கவலைய.

இன்னொரு விஷயமும் சொல்றேன்.. இந்த பண வீழ்ச்சி இந்தியாவுல மட்டுமில்லீங்க BRICS நாடுகள்னு சொல்ற நாடுகள்ல சீனா மற்றும் கனடாவ தவிர பிரேசில், ரஷ்யா மட்டுமில்லாம இந்தோனேஷியா, தாய்லாந்து மாதிரியான நாடுகள்லயும் நிலையும் இதேதான்....

எங்கல்லாம் பொருளாதாரம் மந்த நிலையிலோ இருக்கோ... யாரெல்லாம் அன்னிய முதலீட்டாளர்களை நம்பி பொழப்ப நடத்தறாங்களோ அங்க எல்லாமே இதே நிலைதான்...
********

 

16 ஆகஸ்ட் 2013

யார் கொலையாளி (நிறைவுப் பகுதி)

நேற்றைய பதிவை படித்துவிட்டு மேலைநாட்டு நண்பர் ஒருவர் அங்குள்ள  கைதிகளுக்கு 'மிராண்டா உரிமைகள்' முழுவதுமாக படித்துக்காட்டப்பட்டே கைது செய்கின்றனர் என்றும் குற்றவாளி எனக் கருதப்படுபவர் போலீஸ் விசாரணையின்போதோ அல்லது நீதிமன்றத்திலோ தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க வற்புறுத்தப்படுவதில்லை என்றும், தீர்ப்பு வரும் வரையிலும் ஒருவர் குற்றவாளி எனக் கருதப்படுவதில்லை என்றும் கருத்துரையில் குறிப்பிட்டிருந்தார். 

இங்கும் அத்தகைய சில உரிமைகளை சட்டம் வழங்கியுள்ளது. அதைப் பற்றி இன்று சுருக்கமாக பார்ப்போம்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் சாட்சியம்

க்ரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க நிர்பந்திக்கப்படலாகாது என்கின்றன சட்டங்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 20(3) எந்த இந்திய குடிமகனும் தனக்கு எதிராக சாட்சியமளிக்க தேவையில்லை என்றும் அது அவருடைய அடிப்படை உரிமைகளில் ஒன்றும் என்றும் கூருகிறது. 21வது ஷரத்தில் இந்திய குடிமகன் ஒருவருக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளான சுதந்திரமான, இடையூறு இல்லாத வாழ்க்கை ஆகியவற்றை வேறெந்த சட்டமும் பறிக்கலாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போன்று இந்திய குற்றவியல் முறைச் சட்டமும் 161, 313, 315வது பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரையிலும் குற்றமற்றவர் என்றும் கருதப்படுவதால் அவரை தனக்கு எதிராக அரசால் தொடரப்படும் எந்த க்ரிமினல் வழக்குகளிலும் சாட்சியம் சொல்ல வற்புறுத்தலாகாது என்று கூறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தபட்ட ஒருவர் சாட்சியம் அளிக்க முன்வராத நிலையில் அதை அவருக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது என்கிறது குவிமுச.315 (B) பிரிவு.

ஏனெனில் ஒருவரை குற்றவாளி என்று நிரூபிக்கும் கடமையும் பொறுப்பும் குற்றம் சுமத்துபவருக்கே உள்ளதே தவிர குற்றம் சுமத்தப்பட்டவர் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் கடமை இல்லை. 

ஆகவே குற்றம் சுமத்தப்பட்டவர் தனக்கு எதிராகவோ அல்லது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு விசாரணையின்போதோ அல்லது நீதிமன்றத்திலோ உண்மையாக பதில் கூற வேண்டும் என்றோ நிர்பந்தப்படுத்த முடியாது. 

ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாக சாட்சியம் அளிக்கும் பட்சத்தில் அவரை குறுக்கு விசாரணை செய்ய அரசுதரப்பு வழக்கறிஞருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உண்மை கண்டறியும் பரிசோதனைகள்.

Lie Detector Test எனப்படும் உண்மையை கண்டறிய நடத்தப்படும் பரிசோதனைகளும் குற்றம் சுமத்தப்பட்டவருடைய அனுமதி இல்லாமல் நடத்த முடியாது. சமீபத்தில் நடைபெற்ற பல வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவரை இத்தகைய பரிசோதனைகளுக்கு நிர்பந்திப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21வது ஷரத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஒருவர் தாமாக முன்வந்து பரிசோதனைக்கு தன்னை ஆளாக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதன் முடிவுகளை அவருக்கு எதிராக பயன்படுத்திக்கொள்ள தடையேதும் இல்லை. 

ஆகவே காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய புலன் விசாரணையில் இறங்குவதற்கு முன்பே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு சட்டம் வழங்கியுள்ள பல சலுகைகளை, உரிமைகளை கருத்தில்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் பல சமயங்களில், குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்க தங்களுடைய மேலதிகாரிகளிடமிருந்து வரும் நிர்பந்தங்களால் விசாரணை அதிகாரிகள் பல சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதும் உண்மை. 

விசாரணை செய்து குற்றவாளி யார் என்று கண்டுபிடிப்பதை விட அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களையும் சாட்சியங்களையும் திரட்டி அவருக்கு நீதிமன்றங்கள் வழியாக தண்டனை பெற்றுத்தரும் பெரும் பொறுப்பும் காவல்துறை அதிகாரிகளுக்கு உண்டு. 

இதை சொல்வது மிக எளிது. ஆனால் நடைமுறையில் அது அத்தனை எளிதல்ல என்பதை பல வருடங்கள் இத்துறையில் பணியாற்றியவர்களுக்கே தெரியும். 

ஆனால் விசாரணை அதிகாரிகளுடைய கரங்கள் சட்டத்தால் எவ்வாறெல்லாம் கட்டப்பட்டுள்ளன என்பதைப் பற்றிய விவரம் ஏதும் இல்லாத நம்மைப் போன்ற பொதுஜனமும் பத்திரிகைத் துறையும் குற்றம் நடந்த சில தினங்களிலேயே குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போனால் காவல்துறை உறங்குகிறதா என்று கேள்வி கேட்பதற்கு மட்டும் தயங்குவதே இல்லை. 

இதை ஓரளவுக்காவது நாம் தெரிந்து வைத்திருப்பது என்று நான் நினைத்ததால்தான் இந்த கட்டுரையை எழுதினேன். அதற்கென நான் என்னை தயாரித்துக்கொள்ள முயன்றபோது அது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்துக்கொண்டேன். எனக்கு இதில் உதவ இப்போது காவல்துறையில் சர்வீசிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல் ஓய்வுபெற்றவர்களும் கூட தயாராக இல்லை.  சிலர் என் பேரை எங்கையும் குறிப்பிடக்கூடாது சார் என்று சொல்லிவிட்டுத்தான் நான் எழுதிய கட்டுரையை படித்துப்பார்த்து அவற்றிலுள்ள ஒருசில தவறுகளை சுட்டிக்காட்டினார்கள். இன்றும் அந்தத் துறையில் உள்ளவர்கள் மத்தியில் உள்ள ஒருவித அச்ச உணர்வே இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

வழக்கறிஞர்களுள் பலருக்கு முன்பு ஒருகதை சொல்வார்களே தலைமை மந்திரவாதி தன்னுடைய மந்திரங்களில் மிக முக்கியமானவற்றை தன்னுடைய சீடர்களுடன் கூட பகிர்ந்துக்கொள்ள மாட்டாராம் என்று, அதுபோல இது ஏதோ தொழில் ரகசியம் என்பதுபோன்று தங்களுடைய கருத்துக்களை கூறாமல் நழுவிப்போய்விட்டனர். 

ஆனால் தமிழக காவல்துறையின் இணையதளத்தில் பல நல்ல தகவல்கள் குவிந்துக்கிடக்கின்றன. தெரிந்தோ தெரியாமலோ காவல்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டிய பல சுட்டிகள் நமக்கும் படிக்க கிடைக்கின்றன. அத்துடன் விக்கிப்பீடியா, லீகல் ஹெல்ப் என்ற பெயரில் நாட்டிலுள்ள பல இணையதளங்களிலும் இருந்து பல உபயோகமான தகவல்கள் கிடைத்தன. இவற்றை வைத்தே என்னால் இயன்ற அளவு வாசிப்பவர்களுக்கு புரியும் வகையில் எளிதான தமிழில் அளிக்க முயற்சி செய்தேன். 

இது ஒரு வசீகரமான தகவல்கள் இல்லைதான் என்றாலும் பலரும் இத்தொடரை விரும்பிப் படித்ததுடன் நிற்காமல் எனக்கு உற்சாகப்படுத்தும் வகையில் தங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த ஆய்வை நான் நடத்தியதற்கு வேறொரு காரணமும் உண்டு.

நான் பல வருடங்களாக கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவன். அதிலும் க்ரைம் நாவல்கள் என்றால் உயிர். ஒரு காலத்தில் நம்முடைய தமிழகத்தில் க்ரைம் நாவல்களுக்கு பிரசித்திபெற்ற ராஜேஷ்குமாருடைய பரம ரசிகனாயிருந்தவன். அதன் பிறகு பல ஆங்கில க்ரைம் நாவல்களைப் படிக்க வாய்ப்பு கிடைத்தபோது அவருடைய நாவல்கள் எத்தனை primitive ஆக இருந்தன என்பதை பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். 

சமீபகாலமாக ஆங்கில க்ரிமினல் நாவல்கள் எழுதுவதில் சிறந்துவிளங்குபவர் அமெரிக்க நாவலாசிரியரான  மைக்கேல் கொனெல்லி.  லாஸ் ஏஞ்சல்ஸ் டைம் பத்திரிகையின் க்ரைம் ரிப்போர்ட்டராக பணியாற்றிய இவருக்கு அமெரிக்க காவல்துறையினரின் செயல்பாடுகள் அனைத்தும் அத்துப்படி. ஆகவே பிற்காலத்தில் ஒரு தலைசிறந்த க்ரிமினல் கதைகள் எழுதும் நாவலாசிரியராக உருப்பெற்றதில் வியப்பேதும் இல்லை. அவர் படைத்த ஹாரி போஷ் (Harry Bosch) கதாபாத்திரம் க்ரிமினல் நாவல் பிரியர்கள் நடுவில் மிகவும் பிரபலமானது. லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறையில் புலன் விசாரணை அதிகாரியாக பணிபுரிவதுபோல் படைக்கப்பட்ட அந்த கதாபாத்திரம் குற்றவாளிகளை எவ்வாறு மடக்கிப் பிடிக்கிறார் என்பதை மிகவும் விலாவாரியாக, சுவைபட எழுதுவதில் கொனெல்லி மிகவும் வல்லவர். லாஸ் ஏஞ்சல்ஸ் செயல்பட்டு வந்த க்ரிமினல் லாயர்களுடைய செயல்பாடுகளை மையமாக வைத்தும் பல சுவையான கதைகளையும் படைத்துள்ளார் அவர்.

அவரைப் போலவே ஒரு க்ரைம் நாவலை முந்தைய காலத்திய இந்திய எழுத்தாளர்களைப் போன்று மேலெழுந்தவாரியாக எழுதாமல் ஒரு கொலைக் குற்றவாளி மற்றும் அவரை துரத்தும் காவல்துறை அதிகாரி அவர்களைத் தொடர்ந்து புலன் விசாரணை முடிவில் அதை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வாதாடி வெற்றி பெற வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை மிக அழகாக எழுத்தில் கொண்டுவருவதை ஒரு பிரத்தியேக கலையாக கொண்ட ஆங்கில நாவலாசிரியர்கள் ஏராளம்.

அதே பாணியில் ஒரு கொலைக் குற்றம் நடந்ததிலிருந்து, விசாரணை, நீதிமன்றத்தில் நடத்தப்படும் காரசார விவாதங்கள் என அனைத்தையும் ஒரு நாவலில் சொன்னால் என்ன என்று நானும் யோசித்திருக்கிறேன். ஏறக்குறைய மூன்று மாத காலமாக அதைப் பற்றியே கனவு கண்டு அதற்காக இங்கும் அங்கும் அலைந்து இந்திய, குறிப்பாக தமிழக சூழலில் ஒரு முழுமையான க்ரைம் நாவலை எழுத முற்பட்டேன். எனக்கு பழக்கமான காவல்துறை அதிகார்கள், க்ரிமினல் வழக்கறிஞர்கள் சிலரை நேரில் சந்தித்து பல விஷயங்களை தெரிந்துக்கொண்டேன். அத்துடன் நில்லாமல் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள பெருநகர மெட்ரோபாலிட்டன் மஜிஸ்திரேட் மற்றும் எக்மோரிலுள்ள செஷன்ஸ் நீதிமன்றங்களுக்கும் நேரில் சென்று அங்கு நடைபெற்ற வழக்கு விசாரணைகளிலும் ஒரு பார்வையாளனாக கலந்துக்கொண்டேன். 

அந்த முயற்சியில் நான் கண்டறிந்தவற்றை குறிப்பெடுத்து முடித்தபோது அதுவே ஒரு தனிக் கட்டுரையாக வடிவெடுத்திருந்தது. ஆகவே அதையே ஒரு தனி பதிவாக 'யாரி கொலையாளி!' என்ற தலைப்பில் எழுத முடிவு செய்தேன்.

இதன் தொடர்ச்சியாக என்னுடைய 'கதையுலகம்' ப்ளாகில் 'சொந்த செலவில் சூன்யம்...' என்ற தலைப்பில் நாவல் ஒன்றை பதிவிட முடிவு செய்துள்ளேன். தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேல் கணினியில் எழுத முடியவில்லை என்பதால் கதையை எழுதத் துவங்கி இரண்டு மாத காலம் ஆகியும் இன்னும் முழுவதும் ரெடியாகவில்லை. இரண்டு வாரங்களில் முடித்துவிட முடியும் என்று நினைக்கிறேன். அதையும் படித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்,
டிபிஆர்.


**********