16 ஏப்ரல் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 49

விளக்கம் கேட்டு எனக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விதி மீறல்கள் எல்லாமே பதிலளிக்க முடியாதவை என்பது எனக்கு மட்டுமல்ல என்னிடம் கேள்வி கேட்டிருந்த மேலதிகாரிகளுக்கும் தெரிந்துதானிருந்தன.

இருந்தும் என்னிடம் அவற்றிற்கு விளக்கம் கேட்கப்பட்டதன் காரணம் ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.

இதுதான் எல்லா நிறுவனங்களிலும் நடக்கும் ஒரு நாடகத்தனம். குற்றம் செய்ததாக கருதப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அவர் செய்ததாக கருதப்பட்ட குற்றங்களுக்கு விளக்கம் கோருவது ஒரு சம்பிரதாயம். அவ்வளவுதான்.

பல சமயங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதென தீர்மானித்த பிறகும் அதை செயல்படுத்துவதற்கு முன்பு வெறும் கடமைக்காக மட்டுமே செயல்படுத்தப்படும் ஒரு சடங்காகவும் இது அமைந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். மேலும் விளக்கம் கோரி அனுப்பப்படும் கடிதத்திலேயே தாங்கள் அளிக்கவிருக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் தங்கள் மீது தேவைப்பட்டால் ஒரு பாரபட்சமற்ற விசாரனைக்கு உத்தரவிடப்படும் என்ற எச்சரிக்கையும் இருக்கும். அதாவது அவர் அளிக்கு விளக்கம் திருப்திகரமாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி ஏற்கனவே வந்துவிட்டார் என்ற தொனியுடன் முடிக்கப்பட்டிருக்கும் அந்த கடிதம்!

அதைவிட வேடிக்கை அதனையடுத்து விசாரனை என்ற பெயரில் நடைபெறும் கூத்து!

அது பெரும்பாலும் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டதாக கருதப்பட்டிருக்கும் குற்றசாட்டுகளை மீண்டும் ஒருமுறை சாட்சிகளின் அடிப்படையில் நிரூபிக்கபடுவதற்காக நடத்தப்படும் நாடகமாகவே அமைந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன்..

அலுவலகங்களில் நடைபெறும் இத்தகைய விசாரனைகளுக்கு (Departmental enquiry) சட்டபூர்வமான அங்கீகாரமும் இருப்பதுதான் வேடிக்கை. அதாவது இத்தகைய விசாரனைகளுக்கு உத்தரவிடக்கூடிய அதிகாரம் ஒரு அதிகாரிக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிறகு அதை ஒரு தலைமை நிர்வாகத்தினர் நிர்ணயித்திருந்த சட்டதிட்டங்களுக்குட்பட்டு நடத்த வேண்டும். அதற்குட்பட்டு அவர் நடத்தும் விசாரணை சட்டத்திற்குட்பட்டு நடத்தப்பட விசாரணையாகக் கருதப்பட்டுவிடும். இத்தகைய விசாரணைக்குப் பிறகு விதிக்கப்படும் தண்டனைகளை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களை அணுகினாலும் பெரும்பாலான நீதிமன்றங்கள் அவற்றில் தலையிட மறுத்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். அப்படியே தலையிட்டாலும் விசாரனை நடத்த தேவையான அதிகாரம் குறிப்பிட்ட அதிகாரிக்கு அளிக்கப்பட்டிருந்ததா என்பதைப்பற்றி மட்டுமே அவை ஆராய்வது வழக்கம். அவை சரியான முறையில் நடத்தப்பட்டதா என்பதைக் கண்டுகொள்வதில்லை.

இத்தகைய விசாரனைகளுக்கு ஆளாகும் நபர் தனக்கு சாதகமாக வாதாட ஒரு சட்டம் படித்த வெளி வழக்கறிஞரையும் தன் செலவில் நியமித்துக்கொள்ள வங்கி நிர்வாகம் அனுமதித்துள்ளது. அதுபோன்றே நிர்வாகமும் இதற்கெனவே சட்டம் படித்த அதிகாரிகளை மடும்மே தங்களுக்கு சாதகமாக வாதாட நியமிக்கும். ஆனால் விசாரனை நடத்தும் அதிகாரி பெரும்பாலும் சட்ட அறிவு இல்லாதவராக இருப்பார்.

சில விசாரனைகளில் நடப்பவை கேலி கூத்தாக இருக்கும்.

ஒரு கிளை அதிகாரி போலி கையொப்பமிடப்பட்டிருந்த ஒரு காசோலையை பாசாக்கிவிட்டார் என்று அவர் மீது புகார். சம்பந்தப்பட்ட அதிகாரி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தான் கிளையில் இருந்த மாதிரி கையொப்பத்துடன் ஒப்பிட்ட பிறகுதான் அதை அனுமதித்தேன் என்று விளக்கமளித்திருந்தார். அந்த கையொப்பத்தைப் பார்த்தால் போலி என்று கூறப்பட முடியாத அளவுக்கு அத்தனை தத்ரூபமாக இருந்தது.

அவருடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் விசாரனைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தன்னுடைய கையொப்பத்தின் கீழ் ஒரு சிறிய கோடு இடுவது வழக்கம். விசாரனையின்போது நிர்வாகத்தினர் சார்பாக வாதாடிய அதிகாரி கையில் ஒரு அளவுகோலை வைத்து சம்பந்தப்பட்ட காசோலையிலிருந்த கையொப்பத்தின் கீழிருந்த கோட்டையும் கிளையிலிருந்த மாதிரி கையொப்பத்தின் கீழிருந்த கோட்டையும் அளந்துவிட்டு இரண்டிற்கும் இடையிலிருந்து ஒரு மில்லி மீட்டர் வேறுபாட்டை நிரூபித்தார்!

எப்படியிருக்கிறது! இப்படி எத்தனையோ கேலி கூத்துக்கள், விசாரனை என்ற பெயரில் நடந்திருக்கிறது.

விளக்கம் கோருதல், விசாரனை என்ற பெயரில் தனிநபர் விரோதத்தை தீர்த்துக்கொள்வதையும் பார்த்திருக்கிறேன். சுமார் முப்பாதாண்டு காலம் பணிபுரிந்த ஒருவர் ஓய்வுபெறும் நாளன்றோ அல்லது ஒருநாளுக்கு முன்பாகவோ அவரை இடைநிலை பணி நீக்கம் செய்வதோ அல்லது அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றசாட்டுகளுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் உண்டு.

இது தனியார் நிறுவனங்களில் அபூர்வம் என்றாலும் அரசு வங்கிகள், நிறுவனங்களில் சர்வ சாதாரணமாக இத்தகையை நடவடிக்கைகள் இப்போதும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவரின் உறவினர் ஒரு அரசு வங்கியின் ஹாங்காங் கிளைகளின் வட்டார மேலாளராக பதவி வகித்து ஓய்வுபெறவிருந்தார். சாதாரணமாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்களை அவர்கள் ஓய்வு பெறுவதற்கு சற்று முன்னதாக இந்தியாவுக்கு மாற்றுவது வழக்கம். அதுபோன்று அவரும் சுமார் மூன்று மாத காலத்திற்கு முன்பு கிளையின் சென்னை வட்டார அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார்.

அவரை மாற்றிய கையோடு ஹாங்காங் கிளைகளில் அவர் பதவியிலிருந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன் கோப்புகளை அவசர அவசரமாக நிர்வாகம் ஆய்வு செய்தது. ஆயினும் அவர் மீது எந்த குற்றத்தையும் சுமத்த முடியாத அளவுக்கு அவருடைய நடவடிக்கைகள் இருந்தன. ஆயினும் அவர் மீது தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்த உயர் அதிகாரி ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இல்லாத ஊழல் புகார்களை பட்டியலிட்டு அவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முந்தைய நாள் அவரிடமிருந்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. அவரால் எப்படியும் இருபத்திநான்கு மணி நேரத்தில் பதிலளிக்க இயலாது எனவும் அதை சாக்காக வைத்து அவரை ஓய்வு பெறவிருந்த நாளன்று பணிநீக்கம் செய்துவிடலாம் என்று நிர்வாகம் கருதியிருக்க கடிதத்தைப் பெற்றவர் சிறிதும் தாமதியாமல் சென்னை நீதிமன்றத்தில் தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படும் நிர்வாகம் தன்னை பணி நீக்கம் செய்ய தடைசெய்ய வேண்டும் என மனு செய்ய அவருடைய தரப்பிலிருந்த நியாயத்தைக் கண்ட நீதிமன்றம் தாமதியாமல் தடையுத்தரவை பிறப்பித்தது..

ஆனால் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளிலிருந்து அவர் முழுவதுமாக விடுபெற சுமார் ஏழாண்டுகள் பிடித்தன!

என்னுடைய வங்கியில் இதுவரை அப்படியொரு நிகழ்வு நடந்திருக்கவில்லை என்றாலும் ஒன்றுமில்லாத விஷயங்களுக்காக விளக்கம் கோருவது, அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இருந்தாலும் வேண்டுமென்றே விசாரனைக்கு உத்தரவிடுவது போன்ற விஷயங்கள் நடந்துக்கொண்டுதானிருந்தன.

ஆகவே என்னிடம் விளக்கம் கோரி கடிதம் வந்ததும் இது ஏதோ திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகவே எனக்கு தோன்றியது.

என்னுடைய கிளையில் நடந்திருந்த விதிமீறல்கள் வருடக்கணக்காக நடந்து வந்திருந்தவைதான் என்பது எனக்கு மட்டுமல்லாமல், என்னுடைய வட்டார அலுவலகம் மற்றும் மத்திய அலுவலகத்திற்கும் தெரிந்துதானிருந்தன. நான் குறிப்பிட்ட சிப்பந்தி வருடக்கணக்காக அலுவலகத்திற்கு நினைத்த நேரத்தில் வருவதும் போவதும் நடந்துக்கொண்டுதானிருந்தது. வருடாந்தர ஆய்வு நேரத்திலும் அவருடைய இந்த போக்கை நேரிலேயே பார்த்திருந்த ஆய்வாளர்களும் அதைப்பற்றி தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டதில்லை. அவர் அலுவலக சூட்கேசில் மதுபாட்டில்களை வாங்கி வருவதும், விநியோகம் செய்வதும் வருடக்கணக்காக நடந்துவந்திருந்தவைதான். ஆனால் அவற்றால் அதுவரை யாருக்கும் எந்தவித இழப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. ஆகவே அவற்றை யாரும் அதுவரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இத்தகைய விதிமீறல்களை அவற்றால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் என்னைப் போன்ற எந்த மேலாளரும் அனுமதித்து வந்திருந்தததற்கு எழுத்து மூலமாக நியாயம் கற்பிக்க முடியாவிடினும் அவற்றை முழுவதுமாக தவிர்க்க முடியாத சூழலில்தான் நாங்கள் அப்போது இருந்தோம்.

இல்லாவிட்டால் கிளையை பிரச்சினையில்லாமல் நடத்திச் செல்ல இயலாது. இதைத்தான் நீக்கு போக்குடன் நடந்துக்கொள்வது என்பது!

ஆகவே என்னுடைய கிளையில் நடந்திருந்த இத்தகைய விதிமீறல்களை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்று எனக்கு தெரிந்துதானிருந்தது. ஆயினும் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.

ஆனால் அதற்கு முன்பு எத்தகைய விளக்கத்தை என்னிடமிருந்து நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டால் நல்லது என்று எனக்கு தோன்றியது. ஆகவே என்னுடைய தலைமையகத்தில் இருந்த எனக்கு மிகவும் பரிச்சயமான அதிகாரியை தொலைபேசியில் அழைத்து விசாரித்தேன். அவரோ சிரித்தவாறு, 'நீங்க எதுக்கு டிபிஆர் இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் ரெஸ்பான்சிபிளிட்டி எடுத்துக்கணும்? பேசாம இது என்னோட வேலையில்லை. என்னோட அசிஸ்டெண்ட் மேனேஜரோட பொறுப்புன்னு சொல்லிருங்க. அதுவுமில்லாம அந்த ப்யூன் சம்பந்தப்பட்ட அன்றைக்கு ஆஃபீஸ்லருந்து போனப்போ நீங்க அங்க இல்லையே.. அப்புறமென்ன? அப்படியே ரிப்ளை பண்ணிருங்க. அப்புறம் அது அவர் பாடு. வேணும்னா ஒங்களுக்கு இருக்கற இன்ஃப்ளூயன்ச வச்சி அவர சேவ் பண்ண பாருங்க. டோண்ட் ஒர்றி.' என்றார் கூலாக.

தொடரும்

2 கருத்துகள்:

  1. அதென்னங்க மனுஷங்களுக்கு இப்படி ஒரு பழி வாங்கும் வெறி(-:

    அடுத்தவனைக் கெடுக்க எப்படியெல்லாம் மூளை வேலை செய்யுது பாருங்க!

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    அதென்னங்க மனுஷங்களுக்கு இப்படி ஒரு பழி வாங்கும் வெறி(-://

    அதான் மனுசனோட ஸ்பெஷாலிட்டியே..

    அடுத்தவனைக் கெடுக்க எப்படியெல்லாம் மூளை வேலை செய்யுது பாருங்க! //

    அப்பத்தான் மூள ரொம்ப நல்லாவே வேலை செய்யும்:)

    பதிலளிநீக்கு