பதற்றத்துடன் எழுந்து ஓடிவந்து கதவைத் திறந்தார். ‘என்ன சார் சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க?’ என்றார் சற்று எரிச்சலுடன்.
அவர் (ராஜேந்திரன் என்று குறிப்பிடுகிறேன். புனைப்பெயர்தான்) என்னை கேள்வி கேட்ட விதம் என்னுடைய கோபத்தைத் தூண்டினாலும் என்னுடைய கோபத்தை அடக்கிக்கொண்டு, ‘தப்பா நினைச்சிக்காதீங்க ராஜேந்திரன். இந்த பக்கமா வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாமேன்னு நினைச்சேன். இங்க வந்ததுக்கப்புறம்தான் தெரியுது உங்க அக்கவுண்ட் ஏன் கொஞ்ச நாளா ஆப்பரேஷன் இல்லாம இருக்குன்னு.’ என்றேன்.
என்னுடைய வார்த்தைகள் அவரை சட்டென்று நிதானத்திற்குக் கொண்டுவந்தது. இருந்தாலும் முறைப்புடன், ‘முன்னாலருந்த மேனேஜர் இந்த மாதிரி சொல்லாம கொள்ளாம வந்து நிக்க மாட்டார் சார். அதுவும் சாட்சிக்கு கூட்டிக்கிட்டு வரா மாதிரி அசிஸ்டெண்ட் மேனேஜரோடயெல்லாம் வரவே மாட்டார். நீங்க ஏதோ எங்கள கையும் களவுமா பிடிக்கறா மாதிரி வந்திருக்கீங்களே சார்.’ என்றார்.
அவருடைய வார்த்தைகள் என்னுடயை உதவி மேலாளருக்கு முழுவதுமாக புரியாவிட்டாலும் அவருடைய பதவியை ராஜேந்திரன் குறிப்பிட்டதைக் கேட்டதும் அவரைத்தான் ஏதோ குறை சொல்கிறார் என்பதுமட்டும் புரிந்திருக்க வேண்டும். சட்டென்று அவர் என்னைப் பார்த்து ஆங்கிலத்தில், ‘என்னைப் பத்தி ஏதாச்சும் குத்தமா சொல்றாரா சார்.’ என்றார் ராஜேந்திரனுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற நினைப்பில்.
ஆனால் ராஜேந்திரன் சகலகலாவல்லன் (வில்லன் என்றும் கூறலாம்) என்பதை என்னுடைய உதவி மேலாளர் தெரிந்து வைத்திருக்கவில்லை. ராஜேந்திரனுக்கு தமிழுடன், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி என எல்லாவற்றிலும் சரளமாகப் பேசக்கூடியவர் என்பதை அன்றுதான் நானே தெரிந்துக்கொண்டேன். தனக்கு தெலுங்கும் பேச வரும் என்பதைக் காட்ட வேண்டி, ‘ஏமி சார். இங்லீஷ்லோ சூஸ்தாரு? நாக்கு மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என்னி எல்லா பாஷாலும் தெலிசு சார்.’ என்றாரே பார்க்கவேண்டும்! என்னுடைய உதவி மேலாளர் அதிர்ந்துபோய் வாயை மூடிக்கொண்டார்.
நான் அவருடைய அறையை சுற்றிலும் குவிந்துக்கிடந்த கணக்குப் புத்தகங்கள், பில் பேடுகள் ஆகியவற்றைப் பார்த்தேன். ஒரு நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதை அதன் பொறுப்பாளர் அறையைப் பார்த்தாலே தெரிந்துவிடும் என்பார்கள். தன்னுடைய சிறியதொரு அறையையே ஒழுங்குடன் வைத்துக்கொள்ள தெரியாத ஒருவர் நிச்சயம் அந்த நிறுவனத்தை திறம்பட நடத்த முடியாது என்பதும் என்னுடைய அனுபவத்தில் நான் கண்டிருந்த உண்மை.
‘எனக்கு ஒங்க மில்ல கொஞ்சம் சுத்தி காமிங்களேன். வந்ததுதான் வந்தேன் பார்த்துட்டு போயிடறேன்.’ என்ற என்னுடைய வேண்டுகோளை கேட்காததுபோல், ‘எப்படி சார் ஊர் புடிச்சிருக்கா? ஒரு மூனு வருஷம் இருப்பீங்களா இல்ல போன மேனேஜரப் போல ரெண்டே வருசத்துல உங்களையும் உங்க பெர்ஃபார்மன்ஸ் சரியில்லேன்னு தூக்கிருவாங்களா?’ என்றார் கிண்டலாக.
ஒம்ம மாதிரி ஆளுங்க நாலு பேர் இருந்தா போறும்யா. நாங்க பெர்ஃபார்மன்ஸ் பண்ணி கிளிச்சாப்பலத்தான் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, ‘நான் கேட்டதுக்கு நீங்க ஒன்னும் பதில் சொல்லலையே.’ என்றேன்.
அவர் வேண்டுமென்றே, ‘என்ன சார் கேட்டீங்க?’ என நான் எழுந்து நின்று, ‘வாங்க வந்து உங்க ஆயில் மில்லை சுத்தி காமிங்க.’ என்றேன் பிடிவாதத்துடன். தொடர்ந்து என்னுடைய உதவி மேலாளரிடம், ‘சார் நீங்க ஸ்டோர் ரூம் போய் ஸ்டாக்க ரேண்டமா செக் பண்ணிட்டு வாங்க.’ என்றேன் வேண்டுமென்றே.
ராஜேந்திரன் அப்போதும் இருக்கையிலிருந்து எழாமல் அமர்ந்துக்கொண்டு, ‘சார் இன்னைக்கி மில்லுக்கு வீக்லி ஆஃப். அதனால் யாரும் இருக்க மாட்டாங்க. நீங்க ஒரு ரெண்டு நாளைக்கப்புறம் வாங்க, ஸ்டாக்க பார்க்கலாம்.’ என்றார்.
‘சரி ராஜேந்திரன். ஸ்டாக்க வேணும்னா அப்புறமா பார்த்துக்கலாம், You just show me the mill.’
என்னடா இவன் விடாக்கண்டன் கொடாக்கண்டனா இருப்பான் போலருக்கே என்று நினைத்தாரோ என்னவோ வேண்டா வெறுப்புடன் எழுந்து எனக்கு முன்னால் நடக்க நானும் என்னுடைய உதவி மேலாளரும் அவரைப் பிந்தொடர்ந்தோம்.
அடுத்த கால்மணி நேரம் சுமார் இருபதாயிரம் சதுர அடி பரப்பில் பரந்து விரிந்து கிடந்த ஆலையை பார்வையிட்டோம். வெற்றிகரமாக நடத்திச் செல்லக்கூடியதொரு ஆலையைப் போல் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் ஓடக்கூடிய மிகப்பிரம்மாண்டமான மூன்று எண்ணெய் செக்குகள் (ஒரு காலத்தில் மாடுகள் ஒரு வட்டத்துக்குள் சுற்றி சுற்றி வந்து எண்ணெய் எடுக்க இப்போது முற்றிலும் மின்விசையால் இயக்கப்படக்கூடியவை) கம்பீரமாக கூரையைத் தொட்டுக்கொண்டிருந்தன.
‘ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் டப்பா எண்ணெய் தயாரிக்கக் கூடியது சார் நம்ம ஆலை. தூத்துக்குடியில இது மாதிரி இன்னும் ரெண்டே ஆலைகள்தான் இருக்கு. ஒன்னு விவிடி. மத்தது ஏவிஎம். மூனாவது நம்முடையதுதான்.’ என்று பெருமையுடன் கூறிய ராஜேந்திரனைப் பார்த்தேன்.
ஆனால் நான் சென்றபோதிருந்த நிலையை வைத்துப் பார்த்தால் இந்த ஆலை கடந்த ஆறுமாத காலமாகவெங்கிலும் ஓடியிருக்காது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு ‘சரிங்க. இந்த தேங்காயை எல்லாம் வெயில்லதான் வச்சி காய வைப்பீங்களா இல்ல அதுக்கும் ட்ரையர் மாதிரி ஏதாச்சும் இருக்கா?’ என்றேன்.
ஏனென்றால் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு ட்ரையர் வாங்குவதற்கென ---------- லட்சம் ரூபாய் தனியாக கடன் பெற்றிருந்தார். அதிலும் கடந்த ஆறுமாத காலமாக ஒன்றும் அடைக்கப்பட்டிருக்கவில்லை.
அவருடைய முகம் சட்டென்று களையிழந்துபோய்விட்டது. ‘அது வாங்கி முழுசா மூனுமாசம் கூட வேலை செய்யலை சார். அத வித்தவன் சரியான ஃப்ராடு பார்ட்டி. ரிப்பேர் பண்ணி கொண்டு வரேன்னு சொல்லி எடுத்துக்கிட்டு போனவன், போனவந்தான். ஆளையே காணோம். அதான் பழையபடி முத்தத்துல போட்டு காய வைக்கிறோம். நீங்க வரும்போது பார்த்திருப்பீங்களே.’
நான் உடனே திரும்பி அவருடைய முகத்தையே கூர்ந்து பார்த்தேன். அவர் என்னுடைய பார்வையைச் சந்திக்க முடியாமல் வேறு திசையில் திரும்பிக்கொண்டார். நான் வங்கியில் இதை வாங்கியதற்கான இன்வாய்ஸ் இல்லாமல் இருந்தபோதே சந்தேகித்தேன். ட்ரையர் வாங்குவதற்கான தொகையை அதை தயாரிக்கும் நிறுவனத்திற்கு நேரடியாக வழங்காமல் ராஜேந்திரனுடைய சொந்த சேமிப்பு கணக்கில் வரவு வைத்திருந்ததைக் கண்டபோதே எனக்கிருந்த சந்தேகம் இப்போது ருசுவானது.
ஆகவே, ‘ட்ரையரோட பில் உங்கக்கிட்ட இருக்கா ராஜேந்திரன்? இருந்தா ஒரு காப்பியாச்சும் குடுங்களேன். பேங்க் ஃபைல்ல அத காணோம்.’ என்றேன்.
அவர் உடனே, ‘பாக்கறேன் சார். ஒரு ரெண்டு நாள் டைம் குடுங்க.’ என்றார். ஆள் லேசுப்பட்ட ள் இல்லேடா என்றது என் உள்மனது.
‘சரிங்க. கிடைச்சதும் குடுத்தனுப்புங்க.’ என்றவாறு அவருடைய அலுவலக அறைக்கு திரும்பினோம்.
சிறிது நேரம் பொதுவான விஷயங்களைக் குறித்து பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பி முற்றத்தை அடைந்ததும் குனிந்து ஓரிரண்டு கொப்பரைத் தேங்காயை எடுத்து முகர்ந்து பார்த்துவிட்டு, ‘இது என்ன ஒரு லாரி லோடு இருக்குமா ராஜேந்திரன்?’ என்றேன் வேண்டுமென்றே.
அவருக்கு என்னுடைய கேள்வியின் உட்பொருள் புரிந்தாலும் புரியாததுபோல், ‘இருக்கும் சார். இன்னும் அஞ்சாறு லோடு வரவேண்டியது.. என்னான்னு தெரியலை லேட்டாகுது. வந்ததும் வேலை முழுமூச்சா ஆரம்பிச்சிரும்.’ என்றார்.
குனிந்து வேலாயாய் இருந்த பெண்கள் ஒருவர் ஒருவரை விஷமத்துடன் பார்த்து சிரிப்பதைப் பார்த்த நான் அவரிடம், 'ஆனா போன வாரம் நீங்க பேங்க்ல கொடுத்த ஸ்டாக் ரிப்போர்ட்ல -------- லட்சம் மதிப்புள்ள ஸ்டாக் இருக்கறதா குறிப்பிட்டிருக்கீங்களே ராஜேந்திரன்’ என்றே ஆங்கிலத்தில் வீணாக அவருடைய ஊழியர்களுடைய முன்னால் அவருடைய மானத்தை வாங்க வேண்டாமே என்ற நினைப்பில்.
அவருடைய முகம் சட்டென்று கறுத்துப்போனது. ‘அது வந்து சார்...’ என்றார் தயக்கத்துடன்.
‘சொல்லுங்க ராஜேந்திரன். எதுவாயிருந்தாலும் வெளிப்படையா சொல்லிருங்க. அதான் உங்களுக்கு நல்லது.’
‘சரி சார். வாங்க, போய்க்கிட்டே சொல்றேன்.’ என்றவாறு அவருடைய ஊழியர்கள் இருந்த இடத்தை விட்டு அகன்று வாசலை நோக்கி நடந்தார். நாங்களும் அவரைப் பின்தொடர்ந்தோம்.
வாசலையடைந்து நாங்கள் வந்திருந்த வாகனத்தின் அருகில் சென்று நின்றதும் ராஜேந்திரன் என்னைப் பார்த்தார். அவருடைய பார்வையில் கையும் களவுமாய் பிடிபட்ட ஒருவருடைய குற்ற உணர்வு இருந்தது.
‘சாரி சார். ஒரு ரெண்டு வாரம் டைம் குடுங்க. எல்லாத்தையும் சரி பண்ணிடறேன். கெட்ட நேரம் நா தொட்டதெல்லாம் மண்ணா போயிருச்சி. அதான்..’ என்றவரைப் பார்த்தேன்.
இவர் தான் தான் புத்திசாலி என்று நினைத்து செய்ததை கெட்ட நேரம் என்று திசைதிருப்புகிறார் என்ற நினைப்புடன் இவரை சும்மா விடலாகாது என்று முடிவு செய்தேன். ‘உங்க உப்பளம் பிசினஸ் எப்படி இருக்கு சார்?’ என்றேன் சட்டென்று.
அவர் என்னுடைய கேள்வியை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலேயே தெரிந்தது. இருப்பினும் சமாளித்துக்கொண்டு, ‘உப்பளமா? எங்களுக்கா? எங்க தொழிலுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத விஷயமாச்சே சார். எதுக்கு கேக்கறீங்க?’ என்றார்.
நான் என்னருகில் நின்ற என்னுடைய உதவி மேலாளரைப் பார்த்தேன். அவர் நமக்கேன் வம்பு என்பதுபோல் தரையையே பார்த்துக்கொண்டிருந்தார்.
நான் திரும்பி ராஜேந்திரனைப் பார்த்தேன். பிறகு, ‘ராஜேந்திரன். என்கிட்டருந்து இனியும் மறைக்கறதுல எந்த பிரயோசனமும் இல்லை.உங்க ஆயில் மில் மற்றும் உங்க பெட்ரோல் பங்குக்கு நாங்க கொடுத்திருக்கற --------------லட்சத்துல ஏறக்குறைய பாதிக்கும் மேல நீங்க டைவர்ட் பண்ணியிருக்கீங்க. அந்த பிசினஸ்ல ஏற்பட்ட நஷ்டம் ஒங்க இந்த ரெண்டு பிசினைசையும் பாதிச்சிருக்கு. இன்னமும் ஒன்னும் கெட்டுப் போயிரலை. நீங்க நாளைக்கு பேங்குக்கு வந்து இந்த விஷயத்த எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி ஒரு லெட்டர் குடுக்கணும். இன்னும் எவ்வளவு நாளைக்குள்ள கணக்கிலருந்து டைவர்ட் பண்ணியிருக்கறத திருப்பி செலுத்தமுடியும்னும் எழுதி குடுக்கணும். இல்லன்னா உங்க ஆயில் மில் அப்புறம் பெட்ரோல் பங்குக்கு குடுத்த கடனை திருப்பி வசூலிக்க கேஸ் போடறதத் தவிர வேற வழியிருக்காது, சொல்லிட்டேன். அப்புறம் என் மேல வருத்தப்படாதீங்க.’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டு திகைத்துப்போய் நின்ற அவரை லட்சியம் செய்யாமல் என்னுடைய வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றேன்.
ஆனால் என்னுடைய செயல் அடுத்த நாள் எனக்கே வில்லங்கமாய் முடிந்தது..
தொடரும்..
ம்ம்ம் சொல்லுஙங்க. இப்படி சுவாரசியமான இடத்துலே முடிச்சைப் போட்டுட்டுப்போயிருங்க. இங்கே அது என்ன வில்லங்கம்னு மண்டையைப் போட்டு உருட்டிக்கிட்டு இருக்கேன்.
பதிலளிநீக்குvillanga partykalte villangam senja villangam dhane varum.....
பதிலளிநீக்குippa dabarnu kanama poneengale oru varam, adhuvum oru vagai villangamdhan
hello ketka maranthitten
பதிலளிநீக்குaan pathy, pen pathy nu endha adippadaile prikranga
ம்ம்ம்ம்ம்....நெறைய விஷயங்கள் சொல்லீருக்கீங்க சார். நான் அமைதியா இருக்கிறதுதான் எனக்கும் உங்களுக்கும் நல்லது. :-)
பதிலளிநீக்குமர்மக்கதைத் தொடர் மாதிரி நிறுத்தி இருக்கீங்க!
பதிலளிநீக்குவாங்க துளசி,
பதிலளிநீக்குஉங்க எல்லாருடைய பின்னூட்டத்தையும் பப்ளிஷ் பண்ணக்கூட நேற்று நேரம் கிடைக்கவில்லை. மன்னியுங்கள்.
என்ன வில்லங்கம்னு மண்டையைப் போட்டு உருட்டிக்கிட்டு இருக்கேன்//
பார்த்து கழண்டு ஓடிரப்போவுது:-)
வாங்க ஜி!
பதிலளிநீக்குippa dabarnu kanama poneengale oru varam, adhuvum oru vagai villangamdhan //
அது தவிர்க்கமுடியாத வில்லங்கம் :-)
மீண்டும் வாங்க ஜி!
பதிலளிநீக்குaan pathy, pen pathy nu endha adippadaile prikranga //
அவங்க பாத்திகள அமைக்கும்போதே அப்படி நினைச்சிக்கிட்டு அமைக்கறாங்க. ஆ.பா பெ.பாவை விட கொஞ்சம் அகலமா, ஆழமா இருக்கும்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குநீங்க சொல்றது ஓரளவுக்கு உண்மைதான். அந்த பெட் ரோல் பங்க் கைமாறி போயிருச்சி. ஆயில் மில்லிலருந்து மருமகன நீக்கிட்டு மறுபடியும் சின்ன அளவுல நடத்துறாங்கன்னு கேள்விப்பட்டேன். இப்ப எங்க பேங்க்லயும் அவங்க கணக்கு இல்ல.
வாங்க சிவா,
பதிலளிநீக்குவாழ்க்கையே ஒரு மர்மத் தொடர் மாதிரிதானே. நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியுது:-)