ஆனால் என்னுடைய செயல் அடுத்த நாள் எனக்கே வில்லங்கமாய் முடிந்தது..
அப்போதெல்லாம் தொலைதூர எஸ்.டி.டி. தொலைபேசி வசதி பிரபலமடைந்திருக்கவில்லை.
சென்னையில் இருந்த சமயத்தில் என்னுடைய அலுவலக தொலைபேசியில் எஸ்.டி.டி வசதி இருந்தது. ஆனால் இத்தகைய வசதிகள் ஒரு கிளையின் மொத்த வர்த்தக அளவைப் பொருத்தே அளிக்கப்படுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி கிளையில் எஸ்.டி.டி வசதி இருக்கவில்லை. என்னுடைய வட்டார அலுவலகத்திற்கோ அல்லது தலைமை அலுவலகத்திற்கோ அவசரமாக அழைக்க வேண்டுமென்றால் டிரங்கால் வசதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழ்நிலை. ஒவ்வொரு முறையும் அழைப்பை பதிவு செய்துவிட்டு குறைந்தது ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்.
ஆகவே என்னுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு என்னுடைய கிளை அலுவலகத்திற்கு அருகாமையிலிருந்த தந்தியலுவலகத்திலிருந்த எஸ்.டி.டி பூத்தில் இருந்து அழைப்பது வழக்கமாக வைத்திருந்தேன். ஆனால் சாதா டிரங்க் அழைப்பைவிட எஸ்.டி.டி அழைப்பு கட்டணம் நான்கு மடங்காயிருந்ததால் அத்தியாவசிய தேவைக்கு அதுவும் கான்ஃபிடன்ஷியல் எனப்படும் மிகவும் பிரத்தியேக தேவைகளுக்கு மட்டுமே அவ்வசதியை உபயோகிப்பேன்.
அதுபோல்தான் ஃபேக்ஸ் வசதியும். எஸ்.டி.டி வசதியே அபிரிமிதமான தேவையாக இருந்தபோது ஃபேக்ஸ் வசதியை நினைத்துப்பார்க்கவும் முடியாத சமயம் அது. அதுவும் தூத்துக்குடி போன்ற ஊரில்.. சான்ஸே இல்லை..
எந்த விஷயமானாலும் தபால் துறையையே நம்பியிருந்த காலம் அது. என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து ஏதாவது அத்தியாவசிய அல்லது அவசரமான தகவலை என்னுடைய கிளைக்கு தெரிவிக்க வேண்டுமென்றால் தந்தி ஒன்றுதான் வழியாயிருந்தது. எங்களுடைய மற்ற கிளைகளிலிருந்தும் அவ்வப்போது இத்தகைய தந்திகள் வருவதுண்டு.
இத்தகைய தந்திகளில் பெரும்பாலானவை வங்கியின் தினசரி அலுவல் சம்பந்தப்பட்டவையாயிருக்கும் என்பதால் நேரடியாக என்னுடைய உதவி மேலாளரிடம் வழங்கப்பட்டுவிடும். அவர் அதை பிரித்து அவற்றில் உள்ளவற்றை செயல்படுத்துவார். அவற்றுள் ஏதாவது முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில், அதாவது என்னுடைய நேரடி கவனத்திற்குட்பட்டதாய் இருக்கும் சமயங்களில்மட்டுமே அவர் அதை என்னிடம் அனுப்பி வைப்பார்.
அன்று வந்திருந்த மூன்று நான்கு தந்திகளில் ஒன்று என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து. அதுவும் என்னுடைய வங்கித் தலைவரின் அலுவலகத்திலிருந்து.
அதனுடைய சாராம்சம் இதுதான்.
உங்களுடைய கிளையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற வாடிக்கையாளர் நீங்கள் அவரை அவருடைய பணியாட்களுடைய முன்னிலையில் அவமானப்படுத்திவிட்டதாகவும் அவரை தொழில் நடத்தவிடாமல் அவருடைய தொழில் நிலையத்தை பூட்டி சீல் வைத்துவிடுவதாக மிரட்டியதாகவும் ஒரு புகார் வந்திருக்கிறது. ஆகவே இத்தந்தி கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும்.
இதை முற்றிலும் எதிர்பார்க்காத நான் ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போய் அமர்ந்திருந்தேன்.
பிறகு சுதாரித்துக்கொண்டு என்ன செய்வதென ஆலோசித்தேன். இத்தந்தி விவரத்தைக் குறித்து கிளையிலிருந்தவர்களிடம் கூறி பரபரப்பை ஏற்படுத்த விரும்பாத நான் என்னுடைய உதவி மேலாளரை மட்டும் அழைத்து நேற்று சந்தித்த வாடிக்கையாளரிடம் நான் நடந்துக்கொண்ட விதத்தைக் குறித்து அவரை ஒரு சிறு அறிக்கையைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
பிறகு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கோப்பையும், அவர்களுடைய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த கணக்குகள் அடங்கிய புத்தகத்தையும் எடுத்துவரக் கூறினேன். அடுத்த அரை மணி நேரத்தில் என்னால் இயன்ற அளவுக்கு ஒரு தெளிவான ஆனால் சுருக்கமான விளக்கத்தை தயாரித்து தட்டச்சு செய்துக்கொண்டேன்.
என்னுடைய வங்கி பணியாளர் ஒருவரை அழைத்து அடுத்திருந்த தந்தியலுவலகத்திலிருந்து என்னுடைய தலைமையலுவலகத்திற்கு ஒரு விரைவு தந்தியை அனுப்பிவிட்டு வருமாறு பணித்தேன்.
இந்த விஷயம் இத்துடன் முடிந்துவிடாது என்பதையும் அறிந்திருந்ததால் தலைமையலுவலகத்திலிருந்து வரப்போகும் தொலைப்பேசி அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தேன். இதற்கிடையில் தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த தந்தியின் தாக்கம் என்னுடைய உதவி மேலாளரிடம் நிறையவே தெரிந்ததை என்னுடைய அறையிலிருந்தே கவனிக்க முடிந்தது.
அவரால் தன்னுடைய பணியில் கவனம் செலுத்த முடியாமல் வாடிக்கையாளர்களின் எரிச்சலுக்கு உள்ளாகிக்கொண்டிருந்ததை கவனித்த நான் என்னுடைய அறையிலிருந்து வெளியேறி சிறிது நேரம் அவருடைய இருக்கைக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து அவருடைய பணிகளில் உதவிபுரிய ஆரம்பித்தேன்.
என்னுடைய அந்த செயல் என்னுடைய தலைமை குமாஸ்தாவையும் காசாளரையும் வியப்படைய வைத்தாலும் அன்றைய வர்த்தக நேரம் (Business hours) முடிவுறும் வரை அவரவர் பணியில் ஆழ்ந்து போயிருந்தோம்.
என்னுடைய விளக்க தந்தி கிடைத்ததும் தலைமையலுவலகத்திலிருந்து தொலைப்பேசி வரும் என்ற என்னுடைய எதிர்பார்ப்பு பொய்யாகிப்போனதில் ஒருபக்கம் லேசான வருத்தம்தான் என்றாலும் இத்துடன் இந்த விஷயம் முடிந்துபோனால் நல்லதுக்குத்தான் என்று சமாதானமடைந்தேன்.
ஆனால் என்னுடைய சமாதானத்தை முறியடிக்கும் வகையில் மாலை சுமார் நான்கு மணியளவில் என்னுடைய பிரத்தியேக தொலைப்பேசி அலறியது.
என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்துதான் என்று கூறவும் வேண்டுமா?
நான் சென்னை கிளையிலிருந்த சமயத்தில் என்னுடைய தலைமையலுவலகத்தில் கடன் வழங்கும் இலாக்காவின் தலைவராக இருந்தவராவது தேவலை. படபடவென்று பொறிந்து தள்ளுவார். ஆனால் சில நொடிகளிலேயே அவற்றை மறந்துவிட்டு நாம் கூறுவதை கேட்பார். நம்முடைய தரப்பில் நியாயம் இருக்கும் பட்சத்தில் சமாதானமடைந்துவிடுவார்.
நான் தூத்துக்குடி கிளையில் பணிக்கு சேர்ந்த அதே சமயத்தில் இவ்விலாக்கா பொறுப்பேற்றிருந்தவர் அவருக்கு நேர்மாறானவர். திறமைசாலி என்பதுடன் நல்ல விவரம் உள்ளவர் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே திறமையற்றவர்கள் என்பதுபோன்ற எண்ணம் அவருக்கு அதிகம் இருந்ததை நான் மட்டுமல்ல என்னைப்போன்ற மேலாளர்கள் பலரும் அறிந்திருந்தோம்.
அத்துடன் எதிராளி பேசுவதற்கு வாய்ப்பே அளிக்கமாட்டார். அவருடன் நேரில் பேசுவதே பெரிய போராட்டமாக இருக்கும். தொலைப்பேசியில் பேசுவதென்றால அதுவும் தொலை தூர தொலைப்பேசி வசதியின் தரம் குறைவாய் இருந்த அந்த காலத்தில் கேட்கவே வேண்டாம்.
சாதாரணமாகவே தொலைதூர சம்பாஷனைகளில் குரலை உயர்த்தி பேசவேண்டும். தொலைப்பேசி கட்டணமும் மிக உயர்ந்த அளவில் இருந்ததால் நாம் பேசுவதை உரத்த குரலில் பேசுவது மட்டுமல்லாமல் வேகமாகவும் பேசவேண்டும்.
நம்முடன் எதிர் முனையிலிருந்து பேசுபவர் தான் கூறவந்ததை கூறுவதிலேயே குறியாயிருந்தால் நம்முடைய வேதனைக்கு அளவே இல்லை.
அன்றும் அதுதான் நடந்தது.
என்னுடைய வாடிக்கையாளர், குறிப்பாக ராஜேந்திரன், அப்போதைய வங்கித் தலைவரால் என்னுடைய வங்கிக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆகவே அவர் கூறிய புகாரில் எள்ளளவும் உண்மை இல்லை என்று நான் என்னுடைய விளக்கத்தில் கூறியதை என்னுடைய தலைமயைலுவலகத்திலிருந்த எந்த அதிகாரியும் குறிப்பாக என்னுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்காவின் அதிகாரி ஒத்துக்கொள்ள தயாராக இல்லை.
அத்துடன் நான் சென்னையிலிருந்த நேரத்தில் அதே வங்கி தலைவர் அறிமுகப்படுத்திய வேறொரு வாடிக்கையாளரையும் சரியாக நடத்தவில்லை என்ற புகாரும் இருந்ததால் பதினைந்து வருடங்கள் நேர்மையுடன் வங்கிக்கு உழைத்த என்னுடைய விளக்கத்தை நம்புவதைவிட என்னுடைய வங்கியிலிருந்து பெற்ற கடனை வைத்து சரிவர வர்த்தகம் நடத்தாமல் வீணடித்துவிட்டு கடனை திருப்பி அடைப்பதில் காலந்தாழ்த்திவந்த ஒரு நேர்மையற்ற வாடிக்கையாளர் கூறிய புகாரை நம்புவதென ஒருதலைப்பட்சமாக தீர்மானித்து எனக்கெதிராக வந்திருந்த புகாரின் அடிப்படையில் என்னை ஏன் தற்காலிக பணிநீக்கம் செய்யலாகாது என்று அடுத்த இரண்டு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதுவரை புகார் அனுப்பிய வாடிக்கையாளருடைய கணக்கில் வரவுசெலவுக்கு எந்த ஒரு தடைய¨யும் ஏற்படுத்தலாகாது என்றும் எச்சரிக்கையும் அன்றைய தொலைப்பேசி வழியாக எனக்கு அளிக்கப்பட்டது.
எப்படி இருக்கிறது பாருங்கள்?
தொடரும்..
niyayangal nagara ninaippatharkul,
பதிலளிநீக்குaniyayangal oor sutri mudithuviduginrana
வாங்க ஜி!
பதிலளிநீக்குaniyayangal oor sutri mudithuviduginrana //
ஆமாங்க. அதுதான் நிதர்சனமான உண்மை..
அப்படீன்னா, நியாயமா நடந்து கொள்ள வேண்டும் என்று எப்படித்தான் ஊக்கம் வரும்? பேசாமல், எல்லோரையும் போல சரியாகத் தோற்றமளிக்குமாறு செய்ய வேண்டியதைச் செய்து விட்டு வாழ்க்கையை சிக்கலற்றதாக வைத்துக் கொள்ளலாம் என்றுதானே தோன்றும்?
பதிலளிநீக்குஜோசப் சார், நீங்கள் இதை எல்லாம் பார்த்த பிறகும் எப்படி உங்கள் நேர்மையைத் தொடர்ந்து கடைபிடித்தீர்கள்?
'நல்லதுக்குக் காலமில்லை'
பதிலளிநீக்குஇப்படிப் 'பட்டவங்க'தான் சொல்லிட்டுப் போயிருக்கணும்.
வாங்க சிவகுமார,
பதிலளிநீக்குவாழ்க்கையை சிக்கலற்றதாக வைத்துக் கொள்ளலாம் என்றுதானே தோன்றும்?//
உண்மைதான்.. எனக்கும் அப்படி சில சமயங்களில் தோன்றியதுண்டு..
எப்படி உங்கள் நேர்மையைத் தொடர்ந்து கடைபிடித்தீர்கள்?//
இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மனம் சஞ்சலம் அடையத்தான் செய்தது.. ஆனாலும்.. கடவுள் மேல நான் வைத்திருந்த நம்பிக்கைதான் என்னை தவறான பாதையிலிருந்து காத்தது..
வாங்க துளசி,
பதிலளிநீக்குஇப்படிப் 'பட்டவங்க'தான் சொல்லிட்டுப் போயிருக்கணும். //
இருக்கலாம்.:-)
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குஆனாலும் கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச வெவகாரம் தான் போல.... //
கொஞ்சம் இல்லை.. நிறையவே..:-(
ம்ம்ம்ம்.....கலிகாலத்துல எல்லாம் நடக்கும்...இதுவும் நடக்கும். இதுக்கு மேலையும் நடக்கும்.
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குஇந்த கலிகாலங்கறது எப்பங்க முடியும்? ஏன் கேக்கறேன்னா இந்த மாதிரி சம்பவங்கள் இப்பவும் நடந்துக்கிட்டுத்தான இருக்கு?