என்னுடைய முந்தைய மேலாளர்களுக்கு விளக்கம் கேட்டு என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்த கடிதங்களின் நகல்கள் கிடைக்கப் பெற்றதும் என்னுடைய தலைமைக் குமாஸ்தாவை அழைத்து அவற்றைக் காண்பித்தேன்.
அவரும் அந்த நகல்களைப் படித்ததும் என்னிடம், ‘சார் இது நிச்சயம் பிரச்சினையை பெரிசாக்கிரும்னு நினைக்கிறேன். இருந்தாலும் உங்களுக்கும் வேற வழியில்ல சார். நீங்க உங்க ரிப்போர்ட்ட அனுப்பறதுக்கு முன்னால கூப்டு சொன்னப்பவே அவங்க உடனே புறப்பட்டு வந்து இந்த பார்ட்டிங்கள நேர்ல போய் பார்த்து ஏதாச்சும் செய்திருக்கலாம்.’ என்றார்.
இதைத்தான் நானும் எதிர்பார்த்திருந்தேன். சாதாரணமாக இத்தகைய குளறுபடிகளை செய்த மேலாளர்களே குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை நேரில் சென்று கண்டால் அவர்களும் முழு ஒத்துழைப்பளிக்க முன்வருவார்கள். என்னுடைய மேலாள நண்பர்கள் அதை செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்பினேன். என்னுடைய தலைமைக் குமாஸ்தா அவர்களிடம் என்னுடைய அறிக்கையின் விவரத்தை தெரிவித்தவுடனே அவர்கள் புறப்பட்டு வந்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. ஆனால் அது நடக்கவில்லை.
என்னுடைய வட்டார அலுவலகத்திலிருந்து சென்றிருந்த கடிதம் அவர்கள் இருவருக்கும் விளக்கமளிக்க இரண்டு வாரங்கள் அளித்திருந்தன. அதற்கு முன்னர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த குளறுபடிகளை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் உதவியுடன் நிவர்த்தி செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. அதை விட்டு அவர்களுடைய செயல்களுக்கும் நியாயம் கற்பிக்க முயற்சி செய்தால் அவர்களுக்குத்தான் பிரச்சினையாக முடியும் என்று நான் நினைத்தேன்.
ஆனால் அது அவர்களுக்கு தோன்றவில்லை என்பது அவர்களுடைய விளக்க கடிதங்களின் நகல்கள் இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு கிடைத்தபோது விளங்கியது. அவர்கள் செய்ததாக கூறப்பட்டிருந்த எல்லா குளறுபடிகளுமே என்னுடைய கற்பனை என்பதுபோலிருந்தது அவர்களுடைய விளக்கம்!
அதுமட்டுமல்ல. இரண்டு வாரங்கள் கழித்து அவர்களுடைய விளக்கத்தை மேற்கோள் காண்பித்து என்னிடம் விளக்கம் கேட்டிருந்தது என்னுடைய வட்டார அலுவலகம்!!
எப்படியிருக்கிறது?
ஆனால் அவர்களுடைய நேரம் சரியில்லை என்று நினைத்த நான் அடுத்த ஒரு வாரத்தில் இரவு நேரங்களில் அமர்ந்து நான் அதுவரை சேர்த்து வைத்திருந்த அத்தாட்சிகளை பட்டியலிட்டு அதன் நகல்களையும் சேர்த்து விளக்கமான ஒரு அறிக்கையை அனுப்பினேன். இம்முறை என்னுடைய அறிக்கையை அலுவலகத்திலிருந்த எவரிடம் காண்பிக்கவில்லை. அதை ஒரு ரகசிய அறிக்கையாக நேரே என்னுடைய வட்டார மேலாளருடைய பார்வைக்கு அனுப்பி வைத்தேன்.
அத்துடன் அதை மறந்துவிட்டு என்னுடைய அன்றாட அலுவல்களை கவனிக்க துவங்கினேன்.
*******
ஏற்கனவே துவக்கப்பட்டிருந்த கிளைக்கு பொறுப்பேற்பது எவ்வளவு பிரச்சினை என்பதை முன்னமே கூறியிருந்தேன்.
அதில் மிகவும் சீரியசான வேறொரு பிரச்சினை முந்தைய மேலாளர்கள் கொடுத்திருந்த கடனை வசூலிப்பது.
புதிய கிளைகள் என்றால் நாமே தேர்ந்தெடுக்கிற வாடிக்கையாளர்களுக்குத்தான் கடன் கொடுப்போம். கடன் வழங்குவதற்கு முன்னரே தீர விசாரித்துவிட்டு வழங்குவதால் பெரும்பாலான கடன்கள் சரியாக வசூலிக்கப்பட்டுவிடும். இருந்தாலும் ஓரிரண்டு கணக்குகள் எதிர்பாராத காரணங்களால் வாராக் கடனாகிவிடுவதுண்டு. அவற்றுள் முக்கியமான காரணங்களுள் ஒன்று வியாபாரத்தில் நஷ்டம். வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு தவறிப்போய் அவருடைய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டுவிட வாய்ப்பிருக்கிறது அல்லவா?அந்த நேரங்களில் முதலில் அவர் வங்கிக் கடனை அடைப்பதைத்தான் தள்ளிப்போடுவார்.
வாடிக்கையாளரின் வணிகம் நஷடப்படுவதற்கு காரணங்கள் பல உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று தேவைக்கதிகமான அல்லது குறைவான அளவு முதலீடு செய்வது.
அவருடைய சுய முதலீடு அவருடைய வணிகத்தின் தேவைக்கு போறாமல் இருக்கும் பட்சத்தில்தான் அவர் வங்கிகளை நெருங்குவார்.
அப்போது அவருடைய வணிகத்திற்கு தேவையான அளவு முதலீட்டை சரியாக கணித்து அவருடைய சுயமுதலீட்டைக் கழித்துவிட்டு மீதமுள்ள முதலீட்டை வழங்குவதுதான் ஒரு வங்கி மேலாளரின் பணிகளுள் முக்கியமான ஒன்று.
தேவைக்கு குறைவான தொகையைக் கடனாக அளிப்பது எந்த அளவுக்கு பிரச்சினையை வாடிக்கையாளருக்கு கொடுக்குமோ தேவைக்கு அதிகமான அளிக்கப்படும் கடனும் அதற்கு நிகரான சில வேளைகளில் அதற்கும் மேலாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது நான் என் அனுபவத்தில் கண்டறிந்த உண்மை.
ஒருவர் எந்த பிரச்சினையுமில்லாமல் வணிகம் செய்வதற்கு தேவைக்குக் குறைவான கடனுதவி அளிக்கப்பட்டால் அவர் வங்கிக்கு வெளியே அதிக வட்டிக்கு கடனளிப்பவர்களிடம் தனக்குத் தேவையான தொகையைக் கடனாகப் பெறுவதற்கு தள்ளப்படுவார். அதன் மூலம் அவருடைய கடன் பளு அதிகமாவதுடன் வெளியில் அவர் பெறும் கடனுக்குண்டான வட்டி விகிதம் நிச்சயம் வங்கி அளிக்கும் வட்டி விகிதத்தைவிட மிக அதிகமாயிருக்கும். அவருடைய வணிகத்தில் இருந்து கிடைக்கும் லாப சதவிகிதமும் இத்தகைய அதிக வட்டி விகிதத்தின் பாதிப்பால் குறைந்துவிட வாய்ப்புண்டு.
ஆனால் அதுவாவது பரவாயில்லை. அவருடைய தேவைக்கு அதிகமான அளவு கடன் அளிப்பது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
அதெப்படி என்று கேட்க தோன்றுகிறதல்லவா?
ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன்.
ஒருவருக்கு வணிகம் செய்ய ரூ.1000 முதலீடு வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நான் மேலாளராகவிருந்த காலத்தில் (இப்போதும் பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை) வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.250/- தன் கையிலிருந்து முதலீடு செய்ய வேண்டும். மீதமுள்ள தொகையில் அவருடைய நண்பர்கள், குடும்பத்தார் இடமிருந்து ரூ.250 வட்டியில்லா அல்லது குறைந்த வட்டிக்கு கடனாக பெறுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம். அதற்குப் பிறகு அவருக்கு வேண்டிய முதலீடு ரு.500. அதை முழுவதுமாய் வங்கி அவருக்கு கடனாக அளிக்கும் பட்சத்தில் அவருடைய வணிகம் சீராக செல்ல வாய்ப்பிருக்கிறது.
அதுவே வங்கிகள் ரூ.500 க்கு பதிலாக ரூ.250/- அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அவருடைய வணிகத்தில் அது போறுமானதாக இருக்காது என்ற நினைப்பில் மீதமுள்ள தொகையான ரூ.250ஐ அதிக வட்டிக்கு (வங்கிகள் 15% வட்டிக்கு கடனாக அளித்தால் சந்தை வட்டி விகிதம் நிச்சயம் 25 லிருந்து 30%ஆக இருக்க வாய்ப்புண்டு). இந்த அதிகப்பட்ச வட்டி அவருடைய லாப சதவிகிதத்தைக் குறைத்துவிட வாய்ப்பிருக்கிறதல்லவா?
வங்கிகள் அளிக்கும் பெரும்பாலான கடன் தொகை ஒருவரின் வணிகத்திலிருந்து கிடைக்கும் லாபத்திலிருந்துதான் வசூலிக்கப்படுகின்றன. லாபம் குறைந்துவிடும் பட்சத்தில் வங்கிகளின் வசூலிப்பும் பாதிக்கப்படும்.
சரி அதே வணிகரின் தேவைக்கு அதிகமாக அதாவது அவருடைய தேவையான ரூ.500க்கு பதில் அவருடைய மொத்த முதலீட்டு தேவையான ரூ.1000 த்தையும் வங்கியே அளிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
நேர்மையான நோக்கத்துடன் வணிகம் செய்பவர் என்ன செய்வார்? வங்கியிலிருந்து கிடைத்த தொகையையும் வணிகத்தில் மூதலீடு செய்து வணிகத்தை இரட்டிப்பாக்கி வெகு விரைவில் செழிப்படைவார். வங்கியும் அவர்களுடைய கடனை வெற்றிகரமாக வசூல் செய்துவிட முடியும்.
ஆனால் ஒரு நேர்மையற்ற வணிகர் என்ன செய்வார் தெரியுமா? வங்கியிலிருந்து கடன் கிடைத்ததுமே தன்னுடைய சுய மூதலீட்டு தொகையான ரூ.250 வணிகத்திலிருந்து எடுத்துவிடுவார். அந்த நிலையில் அவருடைய மொத்த வணிகமும் தன்னுடைய நண்பர்களிடமிருந்து பெற்ற கடனையும் வங்கியிலிருந்து பெற்ற கடனையுமே சார்ந்திருக்கும்.
அதன் பிறகு வணிகத்தில் ஏற்படும் நஷ்டம் அவருடைய முதலீட்டை பாதிக்காதல்லவா? ஒன்று வணிகத்தில் சரியான அக்கறைக் காட்டமாட்டார். அல்லது வேண்டுமென்றே நஷ்டக்கணக்கை காட்டி வங்கி கடனை அடைக்காமல் சாக்கு போக்கு சொல்ல ஆரம்பிப்பார்.
சரி. விவேகமில்லாத வணிகர் என்ன செய்வார் தெரியுமா? வங்கியிலிருந்து கிடைத்த அதிக தொகையை அவருடைய வணிகத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வணிகத்தில் மூதலீடு செய்து அதை வீணடித்துவிடுவார். அந்த வணிகத்தில் முடக்கப்பட்ட வங்கியின் தொகையும் (Fund) நாளடைவில் காணாமல் போய் இவருடைய மூல வணிகத்திலிருந்து முதலீட்டை சம்பந்தமில்லாத வணிகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட வேறு வழியில்லாமல் மாற்றி (divert) செய்து இரண்டு வணிகமுமே மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட மஞ்சள் கடுதாசி (insolvency) கொடுக்கும் நிலைக்கு சென்றுவிடுவார்.
இத்தகைய வாடிக்கையாளர்களுடைய போக்கை துவக்கத்திலேயே கண்டுபிடித்து அவர்களுக்கு சரியான நேரத்தில் அறிவுரை வழங்காவிட்டால் சீர்செய்ய முடியாத அளவுக்கு அவர்களுடைய வணிகம் சென்றுவிட்ட பிறகு (point of no return) வருத்தப்பட்டு பலனில்லை.
பல சமயங்களில் ஒரு மேலாளர் கடன் வழங்கும் நேரத்தில் வாடிக்கையாளரின் தேவயைச் சரியாக கணித்தபிறகுதான் கடன் வழங்கியிருப்பார். ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் அதன்பிறகு அந்த வாடிக்கையாளரை அடிக்கடி சென்று அவர் வணிகம் செய்யும் விதத்தை கவனிப்பது மிக மிக அவசியம். அப்போதுதான் வாடிக்கையாளரும் இந்த மேலாளரை ஏமாற்றமுடியாதுபோலிருக்கிறது என்பதை உணர்ந்து தவறான பாதையில் செல்ல முயல மாட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டமாக அவர் அக்கிளையிலிருந்து மாற்றலாகிச் சென்றபிறகு வருகிற மேலாளர் மற்றும் வாடிக்கையாளருடனான உறவில் விரிசல் ஏற்பட்டு அவரை அடிக்கடி சந்திப்பதை நிறுத்திவிட்டால் அதையே தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு நேர்மையற்ற அல்லது விவேகமற்ற வாடிக்கையாளர் தன் மனம் போன வழியில் சென்று வங்கி கொடுத்த கடன் தொகையை வீணாக்கிவிடுவதுண்டு.
பெரும்பாலான வங்கிகளில் கடன்கள் வாராக் கடனாகிப்போவதற்கு நான் மேற்கூறிய காரணங்களில் ஒன்றாகத்தான் இருக்கும்.
என்னுடைய கிளையில் இத்தகைய கணக்குகள் சில இருந்தன. முக்கியமாக எனக்கு முன்னாலிருந்த மேலாளர் அவருக்கு முந்தைய மேலாளர் கொடுத்த கடன்களை சரிவர கவனிக்காததால் வாராக் கடன்களாகிப் போன கடன்கள்..
அவற்றில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை எல்லாம் சந்தித்து விவரம் அறிவதுதான் அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய முக்கிய பணியாய் இருந்தது..
இதற்கிடையில் என்னுடைய மனைவி இரண்டாம் பிரசவம் வேறு நெருங்கியது...
தொடரும்..
என்ன நெஞ்சழுத்தம் பாருங்க. குளறுபடி செஞ்சுவச்சிட்டு அடுத்த ஊருக்கு ஹாயாப்
பதிலளிநீக்குபோயிட்டாங்களே. அங்கே அவுங்களுக்கும் 'இதே மாதிரி நிலமை' இருந்தா எப்படித் தப்புவாங்க?
அப்பாடா! இப்பத்தான் நிம்மதி. என்னடா ஆளையே காணோமுன்னு பயந்து போயிட்டேன்.
பதிலளிநீக்குயாரைக் கேட்டு லீவு போட்டீங்க. இனிமேல, லீவு போட்டீங்கன்னா, துளசி மேடத்துகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் போகணும். இல்லன்னா....
வாங்க துளசி,
பதிலளிநீக்குஅங்கே அவுங்களுக்கும் 'இதே மாதிரி நிலமை' இருந்தா எப்படித் தப்புவாங்க? //
எங்க தப்பிச்சாங்க. அதான் அடுத்த பிராஞ்சிலயே மாட்டிக்கிட்டாங்களே.
நாலு நாளா ஒரே மீட்டிங், மீட்டிங்னு Bend கழண்டிருச்சிங்க. எழுதி வச்சத அப்லோட் பண்ணக்கூட முடியாம போயிருச்சி. இன்னும் யாரோட பதிவையும் படிக்கக் கூட முடியலை:-(
வாங்க கிருஷ்ணா,
பதிலளிநீக்குயாரைக் கேட்டு லீவு போட்டீங்க. இனிமேல, லீவு போட்டீங்கன்னா, துளசி மேடத்துகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுத்தான் போகணும்.//
லீவு எங்க போடறது. Financial Year Closing Work, Balance sheet finalisationனு ஒர்க், மீட்டிங்.. Hours are wasted minutes are noted னு கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த மாதிரி இந்த கமிட்டி, அந்த கமிட்டின்னு எங்க HOவில மாட்டிக்கிட்டு முளிச்சேன் போன நாலு நாளா.. இன்னைக்கித்தான் ஊருக்கு வந்து சேர்ந்தேன். இனி வர்ற சனி வரை சென்னையில. அடுத்த Sunday to Wednesday மறுபடியும் கொச்சி.. இப்பவே லீவு சொல்லிட்டேன்.
muzhusa oru varam ambel aayteenga!
பதிலளிநீக்குleave podatheenga sir
வாங்க ஜி!
பதிலளிநீக்குவருஷ கணக்கு முடிக்கற நேரமாச்சீங்களே..ஐ.டி. டிபார்ட்மெண்ட் இல்லாம எந்த வேலையும் முடியாதில்லையா? அதனால எங்க எச்.ஓ.வில நாலு நாள் கேம்ப்.. ஈஸ்டரும் இல்லை.. இன்னைக்கித்தான் வந்தேன். அடுத்த வாரம் மறுபடியும் மூனு நாள்.. என்ன பண்றது வேலையாச்சே.. இன்னும் மூனரை வருஷம் .. அப்புறம் உங்கள் மாதிரி ஹாய்யா.. எழுதி தள்ளலாம்.. யாரும் படிக்கறாங்களோ இல்லையோ.. அது வேற விஷயம்..:-)
உங்கள் தொடர் பதிவு போதையை தினமும் ஏற்றிகொண்டிருந்துவிட்டு ஒரு வாரம் இல்லையென்றவுடன் கை கால் எல்லாம் வெல வெலவென்று நடுங்கத் தொடங்கி விட்டது :)
பதிலளிநீக்குஉங்களிடம் கேட்க வேண்டுமென்று நினைத்தது: மேலாளர் பொறுப்பிலிருந்து IT-க்கு மாற இந்த தலைவலியெல்லாமும் ஒரு காரணமோ?
ஆனாலும் மேலாளர் பதவியில் கிடைக்கும் அதிகாரமும், public visibility-யும் இந்தப் பொறுப்பில் இல்லையென்பதை இழப்பாக (சிறிது காலமேனும்) உணர்ந்தீர்களா?
வாங்க arunagiri,
பதிலளிநீக்குமேலாளர் பொறுப்பிலிருந்து IT-க்கு மாற இந்த தலைவலியெல்லாமும் ஒரு காரணமோ?//
அப்படியெல்லாம் இல்லை. எந்த சூழ்நிலையில் நான் இந்த இலாக்காவிற்கு மாற்றப்பட்டேன் என்பதை என்னுடைய ஆங்கிலப் பதிவில் துவக்கியுள்ள Looking Back என்ற தொடரில் விளக்குவேன்.
ஆனாலும் மேலாளர் பதவியில் கிடைக்கும் அதிகாரமும், public visibility-யும் இந்தப் பொறுப்பில் இல்லையென்பதை இழப்பாக (சிறிது காலமேனும்) உணர்ந்தீர்களா? //
உண்மைதான். I T is a thankless job. நாம் என்னதான் உழைத்தாலும் நாம் தயாரித்த மென்பொருளை நம்முடைய நிறுவனத்திற்குள் இருப்பவர்களை ஒத்துக்கொள்ள செய்வதைவிட தலைவலி பிடித்த வேலை வேறெதுவும் இல்லை. It is easy to sell your products to outsiders, not to your own people.
நானும் ரெண்டு நாள் டிரெயினிங்குல இருந்துட்டேன். அதான் இந்தப் பக்கம் ஒழுங்கா வர முடியலை....
பதிலளிநீக்குகடன் அன்பை முறிக்கும்னு சொல்வாங்க...கொடுக்குற பேங்கு மேனேஜர் எலும்பையும் முறிக்குமுன்னு நெனைக்கிறேன். நீங்க சொல்றதப் படிக்கும் போது அப்படித்தான் தோணுது.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குகடன் அன்பை முறிக்கும்னு சொல்வாங்க...கொடுக்குற பேங்கு மேனேஜர் எலும்பையும் முறிக்குமுன்னு நெனைக்கிறேன்.//
நீங்க சொல்றது ஏதோ ஜோக் மாதிரி இருந்தாலும் உண்மையும் அதுதான்.
சந்தடி சாக்கில, இலாகா மாற்றத்தைப் பற்றி, ஆங்கில பதிவுல படிச்சி தெரிஞ்சுங்கங்கன்னு சொல்றாப்பல தெரியுது. அதைப்பற்றியும் இங்கயும் எழுத வேண்டும் என்று மிரட்டப்படுகிறீர்கள்.
பதிலளிநீக்கு