04 நவம்பர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 67


'அந்த ட்ரிப்ளிக்கேன் எஸ்.ஐ எஸ்.பிக்கிட்டவே போட்டுக்குடுத்துட்டான் சார். ' என்றார் ஆய்வாளர் பெருமாள். 'கொஞ்ச நேரத்துக்கு முன்னால எஸ்.பி கூப்ட்டு ரொம்ப கேவலமா பேசிட்டார்.... அந்த லெட்டர டெஸ்ட்ராய் பண்ணிட்டேன்னு சொல்லியிருந்தா அவர் இருந்த மூட்ல என்னெ சஸ்பென்டே பண்ணியிருப்பார். சொல்றதுக்கு மறந்துப் போச்சி சார்னு சொல்லி ஒருவழியா சமாளிச்சிட்டேன்...'

'நல்ல ஆளு சார் நீங்க! ஒங்களப் போயி நம்பினேன் பாருங்க....' என்ற பிபி சிறிதுநேரம் மவுனமாக இருந்துவிட்டு , 'சரி அது போவட்டும்.' என்றார். 'நா இப்ப சொல்றா மாதிரி புழல் ப்ரிசனுக்கு ஒரு லெட்டர் அடிச்சி உடனே குடுத்தனுப்புங்க.......'

அவர் சொல்ல, சொல்ல மறுபேச்சில்லாமல் எழுதி எடுத்துக்கொண்ட பெருமாள் இது என்ன புது குழப்பம் என்று யோசித்தார். 

'என்னங்க? எழுதிக்கிட்டீங்களா?' என்ற குரல் எதிர்முனையிலிருந்து வந்தது. அதிலிருந்த அதிகாரம் ஆய்வாளர் பெருமாளை முகம் சுழிக்க வைத்தது. சட்டென்று பொங்கிவந்த கோபத்தை அடக்கிக்கொண்டார். 

'எழுதிக்கிட்டேன் சார்.... ஆனா இது தேவைதானா சார்?'

'அதப்பத்தி நீங்க ஏங்க கவலைப்படறீங்க? பின்னால ஏதாச்சும் பிரச்சினை வந்தா அத நா பாத்துக்கறேன். நீங்க லெட்டர மட்டும் எழுதி அனுப்புங்க, அது போதும்.'

அவர் குரலில் தொனித்த ஆணவம் பெருமாளை அதற்கு மேல் பேசவிடாமல் தடுத்தது. சரி.... அதான் அவரே பாத்துக்கறேன்னு சொல்லிட்டாரே... 'சரி சார்.' என்றவாறு இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் கைப்படவே அந்த லெட்டரை எழுதி உறையில் இட்டு காவலர் ஒருவரை அழைத்து கொடுத்தனுப்பினார். 'யோவ் இப்பவே முதல் வேலையா போய் குடுத்துட்டு வா.' 

ஆனாலும் அவருக்கென்னவோ இந்த விஷயம் நிச்சயம் எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும் என்று தோன்றியது. 

*********

எதிர்வரும் திங்கட்கிழமைதான் வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை வரும் என்று எதிர்பார்த்திருந்த ராஜசேகர் நாளையே வருகிறது என்று வசந்த் தொலைபேசி வழியாக கூறியதும் 'ச்சே... நாகுவ நம்பி ஒரு யூசும் இல்லை.... டெய்லி போயி பார்றான்னா என்ன செஞ்சிக்கிட்டிருந்தான்?' என்று தனக்குள் முனகியவாறே மணியைப் பார்த்தான். இரவு ஒன்பது மணி!

அநேகமாக PW1ஐ வைத்துத்தான் நாளைக்கு விசாரணையை பிபி துவங்குவார் என்று நினைத்தான். அதற்குப் பிறகு PW2.. வழக்கு விசாரணை துவங்குவதற்கு முன்பே போலீஸ் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டால் பிரச்சினை இல்லை.. ஆனால் அதற்கு பிபி அத்தனை எளிதில் ஒத்துக்கொள்ள மாட்டார். மேலும் ராமராஜன் எழுதி வைத்திருந்த லெட்டரிலிருந்தது அவருடைய கையெழுத்துதான் என்பதை கோர்ட்டார் முன் போலீஸ் நிருபித்தாக வேண்டும். அது ஒரு நாளில் முடியாது. 

அந்த லெட்டர் இப்போது யார் வசம் உள்ளது என்கிற பிரச்சினை வேறு. தன்ராஜை அழைத்து விசாரிப்போமா என்று நினைத்தான். ஆனால் அவர் முருகேசனை விசாரிப்பதில் ஈடுபட்டிருப்பாரோ? எப்படியும் அவனை நாளைக்குள் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக்க வேண்டுமே? அவனை கன்ஃபெஸ் செய்ய வைப்பதும் அத்தனை எளிதாக இருக்காது. அவனுடன் பழகிய அனுபவத்தில் அவன் சரியான கல்லுளிமங்கன் என்பது ராஜசேகருக்கு தெரியும். மேலும் அவன் கூறுவது எதையும் நம்பாமல் இருப்பதும் கடினம். அத்தனை லாவகமாக பொய் சொல்வதில் மன்னன். 

எதற்கும் தன்ராஜை அழைத்துப் பார்க்கலாம். நாளை வழக்கை வாபஸ் பெறுவதாக அவர்கள் முடிவு செய்திருந்தால் தேவையில்லாமல் நாம் தயாரிக்க வேண்டாமே என்று நினைத்தான். சரி அழைத்துத்தான் பார்ப்போம்.

அவன் செல்ஃபோனை எடுத்ததுமே அது ஒலிக்க, திரையை பார்த்தான். வசந்த்!

'என்னடா?' என்று கேட்டு முடியும் முன்பே, 'பாஸ் ஒரு ஹாட் நியூஸ்.' என்ற வசந்தின் குரல் கேட்டது.

'அப்படியா? என்ன?'

'பிபியோட அசிஸ்டென்ட்ஸ்ல நம்ம கிளாஸ்மேட்டும் இருக்கான்னு சொன்னேனில்ல?'

'ஆமா.'

'அவன் வழியா வந்த நியூஸ். அதான் கூப்ட்டேன்.'

'டேய் சஸ்பென்ஸ் வைக்காம விஷயத்த சொல்லு.' என்றான் ராஜசேகர் எரிச்சலுடன். அவனுக்கு நாளைய விசாரணக்கு செய்ய வேண்டிய தயாரிப்பைத் துவங்க வேண்டுமே என்ற கவலை..... அத்துடன் தன்ராஜிடம் முருகேசனுடைய விசாரணை முடிந்துவிட்டதா என்று கேட்க வேண்டிய அலுவல் வேறு இருந்தது.

'பிபி மாதவி கேஸ்ல இன்னொரு ரிலையபிள் விட்னஸ் கிடைச்சிருக்கு. அது ஒன்னே போறும், இப்பருக்கற PW1, PW2 சொதப்புனாலும் பரவால்லைன்னு சொன்னாராம்?'

'என்னடா சொல்ற? இன்னொரு விட்னஸா? நமக்கு தெரியாத விட்ன்ஸ் யார்றா?'

'இப்ப கோபாலோட செல்லுல இருக்கற பிரிசனர் போலருக்கு பாஸ்..... பேருகூட தனபால்னு சொன்னான். லைஃப் டேர்ம்ல இருக்கறவன் போலருக்கு..... அவர்கிட்ட மாதவிய நாந்தான் போட்டுத்தள்னேன்னு கோபால் சவடால் பண்றார்னு ஜெயிலர்கிட்ட சொல்லி அவர் ப்ரிசென் ஹெட் கிட்ட சொல்லியிருக்கார். அவர் பிபிக்கிட்ட போட்டுக்குடுத்தா பின்னால ஏதாச்சும் ஃபேவர் கேக்கலாமேன்னு சொல்லி அவர்கிட்ட இன்ஃபர்மேஷன் குடுத்துருக்கார்... அதனால நாளைக்கி அவர கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணச் சொல்லி பெருமாள் வழியா ரிக்வெஸ்ட் குடுக்க ஏற்பாடு பண்ணிட்டாராம்... இந்த விஷயம் தன்ராஜுக்கு தெரியுமான்னு தெரியல.'

இதை எப்படி கையாள்வது என தெரியாமல் ஒரு சில நொடிகள் சிந்தனையில் ஆழ்ந்தான் ராஜசேகர். கடந்த விசாரணையின்போது போலீஸ் விசாரணை சரியில்லை என்று தான் வாதாடிய விதம் வேணுவை சுருதியேற்றிருக்க வேண்டும். மேலும் அவர் தயாரித்து வைத்திருந்த இரு முக்கிய சாட்சிகளில் ஒருவர் கோர்ட்டில் சரணடைந்திருக்கும் செய்தியும் அவருக்கு கிடைத்திருக்க வேண்டும். அடுத்தவர் கோர்ட்டுக்கு வருவதற்கே தயங்குவதால் அவராலும் தான் நினைத்தபடி கோபாலின் மீது குற்றத்தை நிரூபிக்க முடியாது என்று நினைப்பும் இப்படியொரு குறுக்கு வழியில் இறங்க அவரை தூண்டியிருக்கலாம். ஆனால் இதில் துளியளவும் உண்மையிருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தான். முதலில் கோபால் சாதாரணமாக அதிகம் பேசாதவர். அதுவும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்த்தில் உள்ளவர். அவர் போய் சக கைதி ஒருவரை சமமாக பாவித்து உரையாடியிருக்க வாய்ப்பில்லை. அதுவும் கொலை செய்யாத ஒருவர் அதை தான் செய்ததாக ஏன் கூற வேண்டும்? அதுவும் முன்பின் தெரியாத ஒரு கைதியிடம்? இதன் பின்னால் நிச்சயம் பிபி இருக்க வேண்டும். அல்லது பெருமாளாகவும் இருக்கலாம். விசாரணையில் தன்னுடைய குறுக்கீட்டை  தன்ராஜ் தடுத்து நிறுத்தியதாலும் ஏற்கனவே அவர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் இதை செய்திருக்கலாம். 

'என்ன பாஸ் சைலன்ட்டாய்ட்டீங்க?'

'இல்லடா... இத எப்படி டீல் பண்றதுன்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்.... அதுவும் இந்த ராத்திரி நேரத்துல எங்க போயி, யார பாத்து..... சரிடா ஒன்னெ ஒன்னு கேக்கட்டுமா?'

'கேளுங்க பாஸ்...'

'இந்த தனபாலப் பத்தி தெரிஞ்சிக்கணுமே?'

'நீங்க சொன்னா மாதிரி இந்த ராத்திரி நேரத்துல யார கேக்கறது பாஸ்?' என்று பதிலளித்தான் வசந்த். 'வேணும்னா ஒன்னு செய்யலாம் பாஸ்.'

'என்ன?' என்றான் ராஜசேகர் சற்று எரிச்சலுடன், 'ஏதாச்சும் உருப்படியா இருந்தா சொல்லு... இல்லன்னா.....'

'கோச்சிக்காதீங்க பாஸ்.... அந்த தனபால் என்ன சொல்றான்னு கேட்டுட்டு..... அட்ஜேர்ன்மென்ட் கேட்டா? ஒரு ரெண்டு நாள் டைம் கிடைச்சா போதும் பாஸ்.... அவனெ பத்திய ஃபுல் டீட்டெய்ல்ஸ புடிச்சிறலாம்.'

அவன் கூறியதை ஒரு சில நொடிகள் அசைபோட்ட ராஜசேகர், 'நல்ல ஐடியாவாத்தான் இருக்கு..... ஆனா ஜட்ஜ் ஒத்துக்கணுமே....'

'இல்லன்னா இப்படி பண்லாம் பாஸ். எந்த அட்வான்ஸ் இன்ஃபர்மேஷனும் இல்லாம புதுசா ஒரு விட்னஸ அட்மிட் பண்ண முடியாதுன்னு ஆர்க்யூ பண்ணுவோம்.... பிபி நிச்சயமா அப்ஜெக்ட் பண்ணுவார்... அப்படீன்னா முதல்ல ஏற்கனவே லிஸ்ட் பண்ணியிருக்கற PW1, PW2வ எக்ஸாமின் பண்ணிட்டு புது விட்னஸ எக்ஸாமின் பண்ணணும்னு சொல்லுவோம்.....அதுலயே நேரம் போயிரும்... வேற வழியில்லாம ஜட்ஜ் அட்ஜர்ன் பண்ணிருவார்.....'

ராஜசேகர் சிரித்தான். 'இது முதல்ல சொன்னத விட நல்ல ஐடியாடா..... டிரை பண்ணி பாக்கலாம்....' என்றான். 'நீ முடிஞ்சா உன் லாயர் ஃப்ரெண்டையே கூப்ட்டு இந்த தனபால பத்தி அவங்க ரெக்கார்ட்ல ஏதாச்சும் இருக்கான்னு கேளேன்.... கிடைச்சா இந்த குறுக்கு வழியிலயெல்லாம் போவேணாமே.... நமக்கும் கேஸ் சீக்கிரமா முடிஞ்சா நல்லதுதானடா?'

'சரி பாஸ்.... ட்ரை பண்ணி பாக்கறேன்... ஏதாச்சும் கிடைச்சா கூப்டறேன்..' 

இணைப்பு துண்டிக்கப்பட ராஜசேகர் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். இதைப்பற்றி தன்ராஜிடம் கேட்டால் என்ன என்று தோன்றியது. எதிரிக்கு எதிரி நண்பன்கறா மாதிரி ஒருவேளை ஹெல்ப் பண்லாமே என்று நினைத்தான். அன்றைக்கு  கோர்ட்ல தன்ராஜ் பிபிய பாத்த பார்வையிலருந்தே அவங்க ரெண்டு பேர்க்கு இடையிலயும் அவ்வளவு நல்ல ரிலேஷன்ஷிப் இல்லைன்னு தெரிஞ்சிதே..... அப்படிப் பாத்தா வேணுவோட குணத்துக்கு யாருமே அவர் கூட நல்ல ரிலேஷன்ஷிப் வச்சிருக்க வாய்ப்பில்லைதான். 

எதற்கு அவரை கேட்டுப் பார்ப்போம் என்று டயல் செய்தான். எதிர்முனையில் ஏழெட்டு ரிங்கிற்கு பிறகுதான் எடுத்து, 

'சொல்லுங்க சார்!' என்றார் தன்ராஜ் தயக்கத்துடன். அவருடைய குரலில் இருந்தே அருகில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்பது தெரிந்தது. 

'பிசியா இருந்தா நா அப்புறம் கூப்பிடட்டுமா?' என்றான்.

'ஒரு அஞ்சி நிமிஷம் கழிச்சி நானே கூப்டறேன்...' என்றவாறு அவர் இணைப்பைத் துண்டிக்க ராஜசேகர் செல்ஃபோனை மூடி அருகில் வைத்துவிட்டு தன் கைப்பெட்டியை திறந்து அதில் இருந்த மாதவி கொலை வழக்கு கோப்பை எடுத்தான். 

அடுத்த திங்கட்கிழமைக்கு இன்னும் நான்கு நாட்கள்தானே உள்ளது என்று நினைத்து அலுவலகத்திலிருந்ததை கொண்டு வந்தது நல்லதாகிப்போனது என்று நினைத்தான். ராகவன் மற்றும் குமார் ஆகிய இருவர் கூறியதையும் ஒலிநாடாவிலிருந்து கணினிக்கு ஏற்றி ப்ரிண்ட் போட்டு வைத்திருந்தான். முதலில் ராகவனின் வாக்குமூலத்தை எடுத்து மேலோட்டமாக வாசித்து இதை அப்படியே இல்லாவிட்டாலும் கோர்ட்டாருக்கு எளிதில் விளங்கும் விதத்தில் ராகவனின் மனைவியிடமிருந்து வரவழைக்க என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என்று ஏற்கனவே பட்டியலிட்டிருந்தவற்றையும் ஒவ்வொரு கேள்வியாக மீண்டும் வாசித்துப் பார்த்தான். அந்த பட்டியலை முழுவதுமாக முடிப்பதற்கு முன்பே அவனுடைய செல்ஃபோன் சிணுங்கியது. 

தன்னுடைய படுக்கையறை சாத்தப்பட்டிருக்கிறதா என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துக்கொண்டு எடுத்து 'ஹலோ.. சொல்லுங்க சார்...' என்றான்.. 'ஏதாவது மீட்டிங்ல இருந்தீங்களா?'

'மீட்டிங் இல்லை... எஸ்.பியும் இன்னொரு கொல்லீகும் கூட இருந்தாங்க... எஸ்.பி மட்டும்னா பரவால்லை.... அதான் கீழ வந்துட்டேன்......' என்ற தன்ராஜ் தொடர்ந்து, 'நீங்க இப்ப வீட்லயா? இல்ல....' என்றார்.

'வீட்லதான் சார்... எதுக்கு கேக்கறீங்க?'

'அங்க இன்டர்நெட் ஃபெசிலிட்டி இருக்கில்ல?'

'ஆமா....ப்ராட்பேன்ட் இருக்கு...'

'நல்லதாப்போச்சி....இப்ப நா சொல்ற நம்பர்ங்கள நோட் பண்ணிக்குங்க....' என்றவர் சில வழக்கு எண்களை வாசித்தார். 

என்ன வழக்குகள் இவை என்ற குழப்பத்துடன் அவற்றை தன் குறிப்பேட்டில் குறித்துக்கொண்ட ராஜசேகர், 'என்ன கேசஸ் சார்?' என்றான்.

'இது நாளைக்கு உங்களுக்கு முக்கியமா தேவைப்படும். இந்த கேஸ்ங்களோட ஜட்ஜ்மென்ட்ஸ் நெட்ல இருக்கும் டவுன்லோட் பண்ணி பாத்து வச்சிக்குங்க. இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாது.....'

'ஒரு ஹின்டாவது குடுங்களேன் சார்.....' என்றான் ராஜசேகர்.

'நாளைக்கி பிபி புதுசா ஒரு விட்னஸ இன்ட்ரொ பண்ணப் போறார்..... அவர பத்தி இந்த கேசஸ்ல சில அப்சர்வேஷன்ஸ் இருக்கு.... அத என்னன்னு பாக்கறப்பவே உங்களுக்கு புரிஞ்சிரும்.....'

அட! நாம கேக்க நினைச்சதையே இவராவே சொல்றாரே? அப்போ இவருக்கு விஷயம் தெரிஞ்சிருக்கு.....'அப்போ கேஸ நாளைக்கு வித்ட்றா பண்ணலையா?' என்றான்.

'இல்ல ராஜசேகர்..... ராமராஜன் பாடியிலருந்த சூயிசைட் நோட்லருக்கற கையெழுத்து அவனோடது இல்ல.... கோபால் ஆஃபீஸ்லருக்கற ஃபைல்சை பாத்ததுலருந்து தெரிஞ்சிது..... முருகேசனோடதும் இல்ல.... ரொம்ப க்ளவரா வேற யாரையோ வச்சி எழுதியிருக்காங்க.....'

'அப்போ அந்த நோட் கிடைச்சிருச்சா?' என்றான் ராஜசேகர் இடைமறித்து.

'ஆமா.... அது பெருமாள் சார் கிட்ட இருந்துது..... எல்லாம் பிபி பண்ற வேலை.... பாடிய முதல்ல ஹேன்டில் பண்ண எஸ்.ஐ.. பாலா என்னோட பேட்ச்மேட்.... அவர்தான் அந்த நோட்ட எடுத்து பெருமாள் கிட்ட குடுத்துருக்கார். அவர் இத பிபி கிட்ட சொல்லியிருப்பார் போலருக்கு..... பிபி சும்மா இருப்பாரா? அத கிழிச்சி எறிங்க சார்னு கத்தியிருக்கார். ஆனா பெருமாள் சாருக்கு என்ன தோணிச்சோ எதுக்கும் இருக்கட்டும் வச்சிருக்கார்.... நா இத எஸ்.பிக்கிட்ட சொன்னதும் அவர் போட்ட போடுல பெருமாள் உண்மைய ஒத்துக்கிட்டார்.'

'ஆனா அது இருந்தும் இந்த கேசுக்கு யூஸ் ஆகாது போலருக்கே?' என்றான் ராஜசேகர் சலிப்புடன்.

தொடரும்

12 கருத்துகள்:

  1. பெயரில்லா2:43 PM

    lincoln lawyer

    பதிலளிநீக்கு
  2. ஆவலோடு அடுத்து என்ன நடக்குமோ என்ற எண்ணத்தில் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. Anonymous said...
    lincoln lawyer//

    Nice guess. The idea of introducing a new witness from the prison is from that Novel. But I've treated that differently. I've already said that inspiration to write crime stories has come from the Novels of M.C.

    பதிலளிநீக்கு
  4. :43 PM
    வே.நடனசபாபதி said...
    ஆவலோடு அடுத்து என்ன நடக்குமோ என்ற எண்ணத்தில் தொடர்கிறேன்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  5. அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளுடன் நானும் தொடர்கிறேன் நண்பரே...

    பதிலளிநீக்கு
  6. சகோதரருக்கு வணக்கம்.
    அடுத்தடுத்த திருப்பங்களுடன் அழகாய் நகர்கிறது தங்களது தொடர். படிப்பவர்களின் ஆவல் மிகுந்துள்ளதில் ஆச்சரியமில்லை. அழகான ஆக்கம். தொடரட்டும் பகிர்வுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு

  7. மகேந்திரன் said...
    அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளுடன் நானும் தொடர்கிறேன் நண்பரே..//

    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு

  8. மகேந்திரன் said...
    அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளுடன் நானும் தொடர்கிறேன் நண்பரே..//

    மிக்க நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு

  9. அ. பாண்டியன் said...
    சகோதரருக்கு வணக்கம்.
    அடுத்தடுத்த திருப்பங்களுடன் அழகாய் நகர்கிறது தங்களது தொடர். படிப்பவர்களின் ஆவல் மிகுந்துள்ளதில் ஆச்சரியமில்லை. அழகான ஆக்கம். தொடரட்டும் பகிர்வுக்கு நன்றிகள்.//

    மிக்க நன்றி சகோதரரே!

    பதிலளிநீக்கு

  10. கதை முடிவை நோக்கிப் போகையில், சிலருடைய அழுக்கு மனங்களைத் தோலுரித்துக் காட்டுகிறீர்கள்.நேர்மையில்லாத அதிகாரிகள் இருக்கிறார்கள், அவர்களது அடையாளம் தெரிந்தும் ஏதும் செய்ய இயலாத நிலையில் சில அதிகாரிகளும் இருக்கிறார்கள். ரசிக்க வைக்கும் எழுத்து. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. பின்னால் நிச்சயம் பிபி இருக்க வேண்டும். அல்லது பெருமாளாகவும் இருக்கலாம்.

    எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
    விறுவிறுப்பாக செல்கிறது.

    பதிலளிநீக்கு