24 ஜனவரி 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 22

அவரோ அதற்கும் கவலைப்படாமல் தொலைப்பேசியை எடுத்து என்னிடம் நீட்ட நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தேன் ஒரு சில நிமிடங்கள்..

அவர் அந்த நகரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அதுமட்டுமல்லாமல் அதே கிளையில் குமாஸ்தாவாக பணிக்கு சேர்ந்து கடைநிலை அதிகாரியாக (Grade I Officer) பதவி உயர்வு பெற்று மாற்றலாகிச் சென்று மீண்டும் இரண்டாண்டுகள் கழித்து அதே கிளைக்கு மாற்றலாகி வந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருந்தவர்.

பிறகு மீண்டும் மாற்றலாகி சில வருடங்களுக்குப் பிறகு மேலாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டதும் பிறந்து வளர்ந்த நகருக்கே அதாவது அவர் குமாஸ்தாவாகவும் துணை அதிகாரியாகவும் பணியாற்றிய கிளைக்கே மேலாளராக அமர்த்தப்பட்டவர்!

இது மிகவும் அபூர்வம். ஆனால் எங்களுடைய வங்கியில் அப்போது ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. இப்போதும் அப்படித்தான் என்பது வேறு விஷயம்!

மேலும் ஆந்திராவில் இயங்கிவரும் கிளைகளில் மேலாளராக பணியாற்றுவது மிகவும் சிரமம். என்னுடைய அனுபவத்தில் கற்பதற்கு தமிழ், மலையாளம், கன்னடம் போன்று அத்தனை எளிதான மொழியல்ல தெலுங்கு. தெலுங்கில் எழுத, படிக்க, பேச தெரிந்த அதிகாரிகளும் எங்களுடைய வங்கியில் மிகவும் குறைவாக இருந்ததால் அம்மாநிலத்தைச் சார்ந்தவர்கள் முகக் குறைந்த வயதிலேயே மேலாளர்களாக இன்றும் அமர்த்தப்படுகின்றனர்.

நான் குறிப்பிட்ட மேலாளரும் சரி அவருக்கு முன்னர் அக்கிளைக்கு மேலாளராக இருந்தவரும் சரி ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவர்கள். அத்துடன் முந்தைய மேலாளரும் இவரும் ஒரே நாளில் குமாஸ்தாவாக பணிக்கு சேர்ந்து ஒரே நாளில் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றவர்கள். அதுவரை நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தவர்கள்.

ஆனால் அந்த நட்பு முந்தைய மேலாளர் இவருக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் மேலாளர் பதவி உயர்வு பெற்றதுடன் முறிந்துபோனது! பொறாமைதான் காரணம்!

போதாததற்கு முந்தைய மேலாளர் இவரைவிடவும் படிப்பில் சற்று குறைவாம்! இவர் முதுகலைப் பட்டதாரியாம். அவர் வெறும் பட்டதாரியாம்!

அதாவது அவருக்கு முன்பு இவருக்கு பதவி உயர்வு கிடைத்திருக்க வேண்டுமாம்!

அதுமட்டுமல்ல. முந்தைய மேலாளர் மீது இன்னாள் மேலாளருக்கு இருந்த ஆதங்கம் அவரிடம் அப்போது அறிமுகமாகி பிரபலமாயிருந்த மாருதி 800 வாகனம் இருந்தது. அதுவும் ஏ.சி வசதியுடன். இவரிடம் வெறும் இரு சக்கர வாகனம் மட்டும்!

‘அவரோட அப்பா வெறும் டெய்லர் சார். சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கிட்டிருந்த குடும்பம். அவருக்கு எங்கருந்து வந்தது சார் இந்த வசதி? எங்கப்பா ஹெட் மாஸ்டரா இருந்து ரிட்டையர் ஆனவர். இதுலருந்தே உங்களூக்கு தெரிஞ்சிருக்கும் ஏன் அவர் குடுத்த லோனெல்லாம் irregular ஆயிருக்குன்னு.'

இதுதான் மேலாளருடைய விட்டேத்தியான போக்குக்கு காரணம்!

இத்தகைய போக்கை எல்லா நிறுவனங்களிலும் காணலாம். சம வயதுள்ள, சம அந்தஸ்த்துள்ள அதிகாரிகளுக்கிடையில் போட்டி, பொறாமை என்பது மிகவும் சகஜம். இது ஒருவகையில் தேவையும்தான். போட்டி மனப்பான்மையில்லாவிட்டால் வாழ்வில் முன்னேறுவது கடினம்தான். ஆனால் அதுவே பொறாமையாகிவிட்டால் எத்தகைய பாதிப்புகளை விளைவிக்கும் என்பது நான் ஆய்வுக்குச் சென்ற கிளையின் அவல நிலை எனக்கு உணர்த்தியது.

முந்தைய மேலாளர் பரிந்துரைத்திருந்த வாடிக்கையாளர்கள் எல்லோருமே திருடர்கள் அல்லது நம்பத்தகாதவர்கள் என இவர் கருதக் காரணம் அவருடைய வாழ்க்கைத்தரம் இவரைவிடவும் மேலாக இருந்ததுதான். ‘அவர் இந்த லோனுங்கள சாங்ஷன் பண்ணார்னு சொல்றதவிட விலைக்கு வித்தார்னுதான் சார் சொல்லணும். அந்த ஆடிட்டரும் இவரும் சேர்ந்துக்கிட்டு காசு வாங்கிக்கிட்டு குடுத்த லோனுங்கள நான் ஏன் சார் ஓடி அலைஞ்சி ரிக்கவர் பண்ணணும்? அவரையே இங்க கொஞ்ச நாளைக்கு ரிக்கவரி ஆஃபீசரா போடுங்கன்னு சொன்னேன். நம்ம ஜோனல் மேனேஜர் கேக்கவேயில்லை. அதான் நானும் எப்படியோ போட்டும்னு விட்டுட்டேன்.’

எப்படியிருக்கு?

சாதாரணமாகவே ஒரு மேலாளர் வழங்கிய கடனை அவரையடுத்து வரும் மேலாளர் வசூலிப்பதில் அதிகம் அக்கறை காட்டமாட்டார் என்பது உண்மைதான். வசூலிப்பதைவிட வழங்குவது எளிதாயிற்றே. அத்துடன் தன்னால் மட்டுமே ஒரு வாடிக்கையாளரை சரிவர கணிக்க முடியும் என்ற எண்ணம் எல்லா மேலாளர்களிடத்திலும் உண்டு - என்னையும் சேர்த்து!

அத்துடன் முந்தைய மேலாளர் தன்னைவிட படிப்பிலும், அனுபவத்திலும் குறைந்தவர் என்ற எண்ணம் ஒரு மேலாளர்கு ஏற்பட்டுவிட்டால் கேட்கவே வேண்டாம். அவர் வழங்கியிருந்த அனனத்து கடன்களுமே வசூல் செய்ய முடியாத கடன்கள் என தீர்மானித்துவிடுவார். அத்தகைய எண்ணத்துடன் வசூலில் இறங்கினாலும் வெற்றி கிட்டுவது அரிதுதான்.

இதையெல்லாம் மீறி நான் குறிப்பிட்ட கிளை மேலாளருக்கு முந்தைய மேலாளர் பிறப்பிலும் தன்னைவிட தாழ்ந்தவர் என்பதுடன் தன்னைவிடவும் பொருளாதார நிலையில் தாழ்ந்திருந்தவர் தன்னால் அடைய முடியாத நிலையை அடைந்துவிட்டாரே என்ற ஆதங்கமும் இருந்தது என்பதை நான் அறிந்தபோதுதான் எரிச்சலடைந்தேன்.

ஆகவே அவர் கிளைக்கு பொறுப்பேற்று இரு மாதங்களே ஆகியிருந்தது என்றாலும் அவர் நினைத்திருந்தால் முந்தைய மேலாளர் கொடுத்து நிலுவையில் நின்றிருந்த கடன்களை வசூலித்திருக்க முடியும் என்று எனக்கு தோன்றியது.

அதைச் செய்யாமல் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுள் பலருக்கும் நிதியறிக்கைகளைத் தயாரித்தளித்திருந்த தணிக்கையாளருடைய தற்போதைய விலாசத்தைக் கூட கண்டுப்பிடிக்காமல் இருந்ததை என்னால் சகித்துக்கொள்ள முடியாமற் போனது.

ஆனால் அடுத்த நொடியே கோபப்பட்டு அவரைப் பற்றி என்னுடைய வட்டார மேலாளரிடத்தில் முறையிடுவதை விட அவரை என்னுடைய வழிக்கு கொண்டு வருவதுதான் நல்லது என நினைத்தேன்.

ஆயினும் அவரை சற்று மிரட்டிப் பார்ப்பதில் தவறில்லை என்ற நினைப்புடன், ‘என்ன சார் வேணும்னா ஃபோன் செஞ்சிக்குங்கன்னு சொல்றாப்பல இருக்கு நீங்க பண்றது?’ என்றேன் எரிச்சலுடன்.

அவர் உடனே, ‘அப்படியெல்லாம் இல்ல சார். நீங்க கேட்டு நா தரலேன்னு நினைக்கக் கூடாதில்லையா அதனால்தான்.’ என்றார் சுருதியிறங்கி. ‘அதுமட்டுமில்ல சார். எனக்கு இங்க டிரான்ஸ்ஃபர் ஆயிருக்குன்னு தெரிஞ்சதுமே முன்னாலருந்த மேனேஜர் அத தடுக்கறதுக்கு என்னவெல்லாம் செஞ்சார் தெரியுமா? நா இங்க வந்து எங்க அவரோட வண்டவாளத்தையெல்லாம் கண்டுபிடிச்சிருவேனோங்கற பயத்துல என்னெ பத்தி என்னென்னமோ நம்ம ஜோனல் மேனேஜர் கிட்ட சொல்லி அவர் இப்பல்லாம் நா ஃபோன் பண்ணால எரிஞ்சி விழறார் சார். அவர்கிட்ட போயி இவர் பண்ணி வச்சிருக்கற வேலையையெல்லாம் சொன்னாக்கூட நம்ப மாட்டேங்கறார். நான் என்னோட ரிலீவிங் மேனேஜர் சர்ட்டிப்பிகேடுல எழுதன irregularities எல்லாத்தையும் எடுத்துரச் சொல்லி எங்கிட்டவே ஃபோன் செஞ்சார்னா பாத்துக்குங்களேன். அதான் நானும் எனக்கென்ன வந்ததுன்னு எதையும் சரி பண்ணாம இருக்கேன்.’

அவர் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. என்னுடைய ஜோனல் மேனேஜர் அப்படி செய்யக் கூடியவர்தான் என்பது எனக்கு தெரிந்திருந்தது. யாரையுமே குற்றம் சொல்ல விடமாட்டார் அவர். எல்லோருமே நல்லவர்கள் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆகவே ஒரு மேலாளர் தன்னுடைய முந்தைய மேலாளரைப் பற்றி குறை சொல்வதையும் விரும்ப மாட்டார்,

அத்துடன் இவ்விரு கிளை மேலாளர்களுக்குமிடையில் இருந்த கருத்து வேறுபாடு அவருக்கும் ஒருவேளை தெரிந்திருக்கலாம். ஆகவே அதை மனதில் வைத்துக்கொண்டுதான் இவர் அவரைப் பற்றி தாறுமாறாக எழுதியிருக்கிறார் என்று நினைத்திருக்கலாம்.

ஆக, இவருடைய மனத்தாங்கலில் சிறிதளவேனும் நியாயம் இருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றியது.

இருப்பினும் அதை வெளிப்படையாக அவரிடம் காட்டுவது சரியல்ல என்று நினைத்தேன். மேலும் எனக்கு மேலதிகாரியாக இருக்கும் வட்டார மேலாளரை ஒரு கிளை மேலாளர் குறை சொல்ல அனுமதிப்பதும் சரியல்லவே.

ஆகவே, ‘ இங்க பாருங்க. வட்டார மேலாளர் நம்ம எல்லாரையும் விட அனுபவசாலி. எனக்கு தெரிஞ்சவரைக்கும் ரொம்பவும் நேர்மையானவர். அவருக்கு நீங்க மட்டுமில்ல யாரும் யாரையும் குறை சொல்லக் கூடாதுன்னு நினைக்கறவர். அதனாலதான் ஒங்கக்கிட்ட மாத்தி எழுதச் சொல்லியிருப்பார். அந்த மாதிரி ஜோனல் ஆஃபீஸ்ல வேலை செய்யற எல்லார்கிட்டயும் சொல்றவர்தான் அவர். அதுல ஏதும் தப்பு இருக்கறதா எனக்கு தோனல. அதனால ஒங்களோட ஆதங்கத்துல அர்த்தமில்ல. நீங்க ஒங்க முந்தைய மேனேஜர குறை சொல்றத விட்டுட்டு அதுக்கு என்ன ரெமடி இருக்குன்னு யோசிக்கப் பாருங்க. அதுவுமில்லாம இதுதான் ஒங்களுக்கு முதல் ப்ராஞ்ச்.. நீங்க இங்கருக்கறப்ப குடுக்கப்போற எல்லா லோனையும் நீங்க இங்க இருக்கறப்பவே ரிக்கவர் செஞ்சிர முடியாது. நீங்க போனதுக்கப்புறம் ஒங்களுக்கு பின்னால வரப்போறவர் நீங்க குடுத்த லோன சரியா ரிக்கவர் பண்ணலேன்னா ஒங்களுக்குத்தான் கெட்ட பெயர் வரும். அதனால ஒங்க லோன அவர் ரிக்கவர் பண்ணணும்னு நீங்க ஒங்க ப்ரீவியஸ் மேனேஜர் குடுத்துருக்கற லோன ரிக்கவர் பண்ண முயற்சி எடுங்க. அதான் நல்லது.’ என்று என்னால் இயன்றவரை அவருக்கு அறிவுரை செய்தேன்.

அவர் அதை ஏற்றுக்கொண்டாரோ இல்லையோ ஆனால் அப்போதிருந்து அவருடைய போக்கை சற்றே மாற்றிக்கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்..

அன்று மாலையே அவருக்கு தெரிந்த வாடிக்கையாளர்களையெல்லாம் அழைத்து நான் சந்திக்க விரும்பிய தணிக்கையாளரின் அப்போதைய விலாசத்தைக் கண்டுபிடித்தார். அவர் சாதாரணமாக இரவு எட்டு மணிக்கு மேல்தான் அந்த விலாசத்தில் இருப்பார் என்பதையும் கண்டுபிடித்து நானும் அவரும் அந்த விலாசத்திற்குச் சென்றோம்.

அவர் என்னுடைய மேலாள நண்பரைக் கண்டதும் கோபத்துடன் தெலுங்கில் சரமாரியாக வசைபாடத் துவங்கிவிட்டார். எனக்கும் தெலுங்கு சுமாராக தெரியும் என்றாலும் அவர் கடகடவென பொரிந்து தள்ளியது முழுவதுமாக விளங்காவிட்டாலும் அவர்கள் இருவரிடையிலும் ஏதோ மனஸ்தாபம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

தொடரும்..

4 கருத்துகள்:

  1. ஐயோ பாம். தமிழ் வசசு முடிஞ்சி இப்ப தெலுங்கு திட்டா? ம்ம்ம்....ஆந்திராக் காரம்.....பேச்சுல இல்லாமலா போயிரும்! சினிமாவுல வர்ர மாதிரி சம்பேஸ்தான்ரான்னு அருவாளத் தூக்கீட்டு வராம இருந்தாங்களேன்னு சந்தோசம்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா11:15 AM

    என்ன சார் 2 நாளா ஆள காணோம்.. உங்க பழைய பதிவு எல்லாம் இப்போ தான் படிச்சு முடிச்சேன்.. ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க சார்

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்,

    அருவாளத் தூக்கீட்டு வராம இருந்தாங்களேன்னு //

    உண்மையிலேயே உசிலம்பட்டியில ஒரு விளை நிலத்தை கையகப்படுத்த போனப்போ அருவாள தூக்கிக்கிட்டு வந்து இடைமறிச்சாங்க. கோர்ட் அமீனாவோட போயும் இந்த கதி. வேற வழி? திரும்பி வந்துட்டோம்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க மீனாப்ரியா,

    என்ன சார் 2 நாளா ஆள காணோம்.. //

    ஊர்ல இல்லேங்க. இன்னைக்கி காலைலதான் வந்தேன்.

    பதிலளிநீக்கு