11 ஜூலை 2006

திரும்பிப் பார்க்கிறேன் 170

அடுத்து என்ன செய்வதென புரியாமல் விழித்துக்கொண்டு நான் நிற்க, ‘அவங்க கெடக்காறுனுங்க சார். ஒங்க எஞ்சினியர் நம்ம காம்பஸ்லதான வேல பாக்கார். நான் பாத்து பேசி நாளைக்கு கூட்டிக்கிட்டு வாரன். பேசி முடிவு பண்லாம். நீங்க போங்க.’ என்றார்.

அவர் உறுதியளித்தபடியே பொறியாளரை அலுவலகத்தில் சந்தித்து பேசி அழைத்து வந்தாரெனினும் அவருடைய சமாதான முயற்சி பலன் தர இரண்டு நாட்கள் எடுத்தது.

இதற்கிடையில் காயமுற்ற அடுத்த வீட்டுக்காரர் எங்களை கலக்காமல் போலீசில் சென்று புகார் செய்ய விஷயம் சற்று விபரீதமாகவே அவரை சமாதானம் செய்து புகாரை திரும்பப் பெற வைத்தோம்.

அப்படி இப்படியென்று ஒரு வாரத்திற்கு மேலாக அலுவலகத்திற்கும் செல்ல முடியாமல் நான் பட்ட அவஸ்தை பெரும் அவஸ்தை.

இந்த சம்பவத்தில் போலீசில் கொடுத்த தன்னுடைய புகாரை திரும்பப் பெற கூறிய விவகாரத்தில் எனக்கும் என்னுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையிலிருந்த சுமுக உறவு நசிந்துபோனது. அதை மனதில் வைத்துக்கொண்டு என்னுடைய கட்டுமான வேலையில் என்னவெல்லாம் தொல்லைக் கொடுக்க முடியுமோ அத்தனையும் செய்தார் அவர்.

அஸ்திவாரத்துக்கென தோண்டும் வேலை நிறைவுபெற்று கம்பி இல்லாத கான்க்ரீட் பெல்ட்டும் இட்டு முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அஸ்திவாரப் பணியை துவக்கினோம்.

சென்னையிலுள்ளது போலல்லாமல் அஸ்திவாரத்துக்கு பெரிய, பெரிய கருங்கற்களை உபயோகிப்பதுதான் தூத்துக்குடியில் வழக்கம். சென்னையில் கீழிருந்தே செங்கற்கட்டு துவங்கிவிடும்.

இத்தகைய கருங்கற்கள் ஒரே சீரான வடிவத்தில் இருப்பதில்லை. ஆகவே அதை இணைத்து கட்டுவதற்கு சிமெண்ட் உபயோகித்தால் கட்டுபடியாகாதென்பதால் சுண்ணாம்பும் மணலும் கலந்து தயாரிக்கப்படும் சாந்தை உபயோகிப்பது தூத்துக்குடியில் வழக்கமாயிருந்தது.

அதற்கெனவே திரேஸ்புரத்தில் ஒரு சுண்ணாம்பு காளவாயும் இருந்தது. அங்கிருந்து சுண்ணாம்பு கிளிஞ்சல்களை மாட்டுவண்டியில் எடுத்து வந்து நம்முடைய கட்டுமான இடத்திலேயே அளந்து கொடுக்கும் வழக்கமும் இருந்தது.

சுண்ணாம்பு கிளிஞ்சல்களை அளப்பதற்கு மேற்புறமும், அடியிலும் திறந்திருந்த மர டப்பாக்களை வண்டியிலேயே கொண்டு வந்து  சாலையில் பரப்பி வைக்கப்பட்ட மணலின் மீது வைத்து அளந்து தருவார்கள். பிறகு இரண்டையும் நீருடன் நன்றாக காலில் ரப்பர் காலணிகளை அணிந்துக்கொண்டு கலந்து, குவித்து மேற்பரப்பில் குழி செய்து விளிம்புவரை நீரை நிரப்பி வைத்துவிட்டு சென்றால் அடுத்த நாள் காலை இரண்டும் கலந்து சிமெண்ட் சாந்து போல் இருக்கும்.

நம்முடைய ‘நேர்மையான’ மேஸ்திரி இதிலும் தன்னுடைய விளையாட்டை காட்டுவார். மணலை சாலையில் பரவலாக நிரவி வைத்திருந்தாலும் சுண்ணாம்பு அளக்கும் மர டப்பாவை மணலின் மீது வைத்து நன்றாக அழுத்தி தேய்ப்பார். டப்பாவின் அடிப்புறத்திலும் திறந்திருக்கும் அல்லாவா? மேஸ்திரி அழுத்தி தேய்க்கும்போது அடிப்புற வாய் வழியாக மணல் டப்பாவை பாதிக்கும் மேல் நிறைத்துக்கொள்ளும். அதற்கு மேல் சுண்ணாம்பு கிளிஞ்சல் பாதி டப்பாவுக்கும் குறைவாகவே நிற்கும். டஇப்படி பதினைந்து, இருபது டப்பா கிளிஞ்சல்களை அளந்ததாலும் நமக்கு கிடைப்பதென்னவோ சரி பாதிதான். அதாவது இருபது டப்பா கிளிஞ்சல்களுக்கு பணம் வசூலித்துவிட்டு அளந்து தருவதோ பத்து டப்பாக்கள்தான். இதன் மூலம் கிடைக்கம் அதிகபட்ச பணத்தை சுண்ணாம்பு வண்டிக்காரனுக்கு ‘ஏதோ’ கொஞ்சம் கொடுத்துவிட்டு மீதியை மேஸ்திரி சுருட்டிவிடுவார்.

இதை நான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. சுண்ணாம்பு வண்டி சாதாரணமாக இரவு பத்து மணிக்கு மேல்தான் கட்டுமான இடத்துக்கு வரும். என்னுடைய வீட்டு நிலத்தில் மின்சார சப்ளை இருந்தாலும் அது குடிசை வரைக்கும்தான். சாலையில் இருந்த மின்கம்பமும் சற்று தள்ளியே இருந்தது.  

ஒரு நாள் இரவு சுண்ணாம்பு வண்டி என்னுடைய நிலத்துக்கு முன் வந்து நிற்கவும் இரவு உணவுக்குப் பிறகு ராஜேந்திரனும் அவருடைய மனைவியும் அவர்களுடைய வீட்டு வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

நம்முடைய மேஸ்திரி சுண்ணாம்பு வண்டியின் பின் அடைப்பை நீக்கிவிட்டு அளவையை எடுத்து பரப்பியிருந்த மணலின் மீது வைத்து தேய்ப்பதைப் பார்த்தார். நானும் அருகேதான் நின்றுக்கொண்டிருந்தாலும் எனக்கு அவருடைய உதடுகளில் தவழ்ந்த விஷமப் புன்னகையின் மர்மம் புரியவில்லை.

ஏற்கனவே ஒருமுறை கேட்கப்போய் விஷயம் விபரீதமானதைக் கருதியோ என்னவோ அவர் ஒன்றும் பேசாமல் ‘ஜோசப் எங்கூட வாங்க’ என்று சைகைக் காட்டியவாறு அருகில் சென்று மேஸ்திரியிடமிருந்து டப்பாவை மெள்ள பிடுங்கி அதை அப்புறப்படுத்திவிட்டு, ‘என்ன மேஸ்திரி மணலை இன்னும் சரியா நீவிவிட்டுட்டு சுண்ணாம்ப அளக்கலாமில்ல..?’ என்றவாறு அளவையின் கீழே குவியலாக இருந்த மணலை தன்னுடைய கால்களால் சமமாக பரப்பி விட்டுவிட்டு சுண்ணாம்பு வண்டிக்காரனைப் பார்த்தார், ‘ஏண்ணே நீங்களாச்சும் சொல்லக்கூடாது? இப்ப அளங்க.’ என்றார்.

மேஸ்திரியின் முகம் போன போக்கு அந்த லேசான விளக்கொளியிலும் எங்கள் இருவருக்கும் தெரிந்தது. ராஜேந்திரன் விவரமான ஆள் என்பது மேஸ்திரிக்கு புரிந்தது. மேலும் அவர் துறைமுகத்தில் ஒரு அதிகாரி என்பது அவருடைய பொறியாளர் வழியாக தெரிந்திருக்க வேண்டும். ஆகவே வாயை மூடிக்கொண்டு நின்றார். ஆனால் அவர் மனதுக்குள் தன்னுடைய வயிற்றில் அடித்துவிட்டானே என்று கறுவிக்கொண்டிருந்தது அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

வண்டிக்காரர் அளந்து முடித்து பணத்தை பெற்றுக்கொண்டு செல்ல அவர் பின்னால் சாதாரணமாக  தன்னுடைய சைக்கிளில் விரட்டிக்கொண்டு செல்லும் மேஸ்திரி இன்று அவர் சென்ற பாதைக்கு நேர் எதிரில் செல்வதைப் பார்த்த நான் ராஜேந்திரனைப் பார்த்து நன்றியுடன் புன்னகைத்தேன்.

‘இந்தமாதிரி சில்லறை தில்லுமுல்லுங்க கட்டட வேலையில இருக்கறதுதான்னாலும் நாம சாக்கிரதையாயிருந்தா தடுக்கலாமில்லையா? பெரிய எடம்னா பரவாயில்லை. எதுக்கு நம்ம கைகாச இவங்கிட்டல்லாம் விடறது, என்ன சொல்றீங்க?’

அதானே என்று நினைத்தேன் நான்.

இவர் இப்படியென்றால் அவரை பரிந்துரைத்த பொறியாளர் ஒரு நாள், ‘சார், சீலிங் வரைக்கும் தேவைப்படற செங்கல் லோடுக்கு இப்பவே நீங்க மொத்தமா பணத்த கட்டி வச்சிடறது நல்லது சார். திருநெல்வேலியில அரசன் ப்ரிக் வொர்க்ஸ்னு ஒன்னு இருக்கு. அங்கதான் செங்கல் நல்லாருக்கும். போய் வர சிரமத்த பாக்காம ஒரு எட்டு லோடு கல்லுக்கு இந்த வாரத்துலயே போய் கட்டிருங்க. அட்வான்சா கட்னா கன்செஷன் கூட இருக்குன்னு கேள்விபட்டிருக்கேன். கல்லு கில்லு ஏதாச்சும் மிஞ்சினா கைப்பிடி சுவர் அப்புறம் காம்பவுண்ட் சுவருக்குக் கூட யூஸ் பண்ணிக்கலாம்.’ என்றார்.

கட்டுமான பணியில் எனக்கு சம்பளமில்லாத அறிவுரையாளராக இருந்த ராஜேந்திரனிடம் இதைக் கூறியதுமே அவர் சிரித்துக்கொண்டு என்னைப் பார்த்து விஷமத்துடன் புன்னகைத்தார். பிறகு தன் மனைவியிடம், ‘பார்த்தியா வசந்தி, அந்த மேஸ்திரி சில்லறையா கொள்ளையடிச்சா இந்த எஞ்சினியர் மொத்தமா அடிக்க பாக்குறார். நாம அப்போ பட்ட அதே அவஸ்தையத்தான் ஜோசப் இப்ப படறார் பார்.’ என்றார்.

நான் ஒன்றும் விளங்காமல் இருவரையும் மாறி, மாறி பார்த்தேன். ‘என்ன சார் சொல்றீங்க?’

‘சார் ஒங்க எஞ்சினியர்னு இல்லே நாங்க வீடு கட்டற காலத்துலருந்தே எல்லா எஞ்சினியர்ங்களும் இப்படித்தான். நீங்க அவர் சொன்னார்னு போய் எட்டு லோடுக்கும் சேர்த்து கட்டிறாதீங்க. ரெண்டு,  லோடுக்கு கட்டுனா போறும். இங்க சாயந்திரம் அஞ்சி மணிக்கு பஸ் ஏறுனீங்கன்னா ஒன்னரை மணி நேரத்துல போய் இறங்கிரலாம். பஸ் ஸ்டாப்புக்கு எதிர்லயே அரசன் டெப்போ ஒன்னு இருக்கு. பணத்த கட்டி ரசீது வாங்கிட்டு வந்து எதுத்தாப்பலருக்கற ஸ்டாப்புல போயி நின்னீங்கன்னா அஞ்சி, பத்து நிமிசத்துக்கு ஒரு வண்டின்னு வந்துக்கிட்டே இருக்கும். எட்டு, எட்டரைக்குள்ள வீடு வந்து சேர்ந்துரலாம். நீங்க வாங்கி குடுக்கற ரெண்டு லோடே லிண்டெல் லெவல்லுக்கு வர்ற வரைக்கும் போறும்னு நினைக்கேன். அப்புறம் ரூஃப்.. அதுக்கப்புறம் லோடு தாங்காத பார்ட்டிசன் சுவருக்குன்னு செங்கல் வேண்டியிருக்கும். ஒங்க ப்ளான் ப்ரகாரம் பார்த்தா அவர் சொன்ன எட்டு லோடுங்கறது ஜாஸ்தி. காம்பவுண்ட் சுவர்க்கெல்லாம் நாட்டு கல்லே போறும்சார். எதுக்கு அவர் சொல்றார்னா நீங்க ஆர்டர் பண்ற ஒவ்வொரு லோடுக்கும் அவருக்கு இவ்வளவுன்னு கமிஷன்னு இருக்கும். அத நீங்க மொத்தமா முன்னாலயே கட்டிட்டீங்கன்னா அவருக்கும் மொத்தமா கமிஷன் கிடைச்சிருமே.. அதான்..’

நான், ‘மொத்தமா கட்டுனீங்கன்னா விலையில டிஸ்கவுண்ட் கிடைக்கும்னு சொன்னாரே?’ என்றேன்.

அவரோ சிரித்துக்கொண்டு, ‘என்னத்தா சார் குடுத்துரப்போறான். ஒரு லோடுக்கு இருபது ரூபா குறைச்சா லாபம். எட்டு லோடுக்கு நூத்தறுபது ரூபா. ஆனா மொத்த லோடையும் ஒடனே குடுத்துருவான்னு நினைக்காதீங்க. ரெண்டு ரெண்டு லோடா அனுப்பறேன் சார். மொத்தமா அனுப்புனா சைட்லருந்து திருட்டு போயிரும்னு எதையாச்சும் சொல்லி இன்ஸ்டால்மெண்ட்லதான் அனுப்புவான். அதுக்கு மொத்தமா எதுக்கு பணம் கட்டணும்?’ என்றார்.

அவருடைய விளக்கத்தை கேட்டதும்தான் எனக்கு அதிலிருந்த சூட்சுமம் புரிந்தது. அவர் கூறியபடியே செய்துவிட்டு வந்தேன். அடுத்த முறை சைட்டுக்கு வந்த பொறியாளர், ‘என்ன சார் ரெண்டு லோடுக்குத்தான் பணம் கட்டியிருக்கீங்க போலருக்கு?’ என்றதுமே இவருக்கெப்படி இது தெரிந்தது என்று நினைத்தேன். அடுத்த விநாடியே ராஜேந்திரன் கூறியது நினைவுக்கு வர, ‘சார் கொஞ்சம் பணமுடை. அடுத்த லோன் இன்ஸ்டால்மெண்ட் ரிலீஸ் பண்றதுக்கு முன்னால பேங்குலருந்து இன்ஸ்பெக்ஷன் வருவாங்க. அது முடிஞ்சதுக்கப்புறம்தான் அடுத்த லெவலுக்கான ஃபண்ட்ஸ் ரிலீசாவும். அதான் ரெண்டு லோடுக்கு மட்டும் கட்டிட்டு வந்தேன்.’ என்று கூறி சமாளித்தேன்.

பொய் சொல்றதுக்கும் ஒரு தனித் திறமை வேண்டுமல்லவா? வங்கி மேலாளராக இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றியிருந்த எனக்கு அது தாராளமாகவே இருந்தது. நான் கூறிய காரணத்தை புன்னகையுடன் ஏற்றுக்கொண்ட பொறியாளர், ‘பரவாயில்லை சார், நம்ம மாதிரி மிட்ல் க்ளாஸ் ளுங்க ஒரு வீட்ட கட்டி முடிக்கறதுக்குள்ள என்ன பாடுபட வேண்டியிருக்கு பாருங்க.’ என்று தத்துவம் பேசிவிட்டு அடுத்த விநாடியே, ‘அடுத்த தடவை போறப்போ மீதி இருக்கற ஆறு லோடுக்கும் சேர்த்து கட்டிருங்க சார். அப்பத்தான் வேலை தடையில்லாம நடக்கும்.’ என்று தன் வருமானத்திலேயே குறியாயிருந்தார்.

அவருடைய இன்னுமொரு சில்மிஷத்தைப் பற்றி நாளை..

தொடரும்..

14 கருத்துகள்:

  1. ஸோ... காசு அடிக்கறதுக்கு எல்லா லெவெல்லேயும் ஆட்கள் இருக்காங்க.

    இதுக்கு முன்னாலே இங்கே நியூஸியிலே கட்டுன வீடெல்லாம் ஒண்ணுமில்லாப்
    போயிரும்போல இருக்கு:-))))

    இங்கத்துக் கட்டுமானம் வேற அதை வச்சுதான் வெளியிடணும் நானு:-))))

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    காசு அடிக்கறதுக்கு எல்லா லெவெல்லேயும் ஆட்கள் இருக்காங்க.//

    பின்னே.. படிச்சவன் பெருசா அடிப்பான் படிக்காதவன் சிறுசா அடிப்பான். அதான் வித்தியாசம்.

    இங்கத்துக் கட்டுமானம் வேற அதை வச்சுதான் வெளியிடணும் நானு//

    தாராளமா எழுதுங்க. ஒங்க ஸ்டைலே தனிதானே. எத எழுதனாலும் சுவாரஸ்யமா எழுதறீங்களே..

    ஒருவேளை நாங்கல்லாம் நியு.சீ வந்து செட்டிலானா வீடு கட்ட ஒதவியாருக்குமே!

    பதிலளிநீக்கு
  3. திரு ஜோசப்
    உங்க நண்பரை எனக்கு Tution எடுக்கமுடியுமா என்று கேளுங்க.
    நானும் கத்துக்கனும்.
    நாங்க செய்வது பெரியவேலை என்பதால் இதெல்லாம் தெரியாம போயிடுத்து.
    இந்த தொழிலில் எங்கெங்கு கானினும் பொய்தான்.
    அந்த கலை கிடைக்க பெறாததால் போட்டியிடமுடியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. வாங்க குமார்,

    இந்த தொழிலில் எங்கெங்கு கானினும் பொய்தான்.//

    அதுல சந்தேகமேயில்லை. என்ன.. சொல்ற பொய்யோட அளவுலதான் வித்தியாசம் இருக்கும்.

    அந்த கலை கிடைக்க பெறாததால் போட்டியிடமுடியவில்லை. //

    அப்ப நீங்க இந்த ஃபீல்டுக்கு லாயக்கில்லை:)

    ஆனா இத படிக்கற நம் நண்பர்களுக்கு உதவியா இருக்குமேன்னுதான் எழுதறேன்..

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் ஜோசப், ரொம்ப நாட்கள் கழித்து இப்பத்தான் உங்க வலைப்பக்கம் வருகிறேன்.. முன்பு பார்த்த அதே சுவராஸ்யம் உங்க பதிவுகளில் இப்போதும் இருக்கு.. வாழ்த்துக்கள் !!!

    ****

    'என்ன சார் ரெண்டு லோடுக்குத்தான் பணம் கட்டியிருக்கீங்க போலருக்கு?’ - இஞ்சீனியர் விவரமான ஆள்தான் - இதற்கு நீங்க கொடுத்த பதில் சூப்பர்..

    ****

    இந்த பதிவுகள் சொந்த வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் சிறந்த அனுபவப் பாடமாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்.. தொடருங்கள் உங்கள் நற்பணியை!!!

    பதிலளிநீக்கு
  6. சிறுவயதில் தூத்துக்குடியில் இருந்ததால் எனக்குத் தூத்துக்குடியின் பழைய வீடுகளின் அமைப்பு கொஞ்சம் தெரியும். வீட்டுச் சுவற்றில் உப்பு நீர் ஊறும். ரொம்பல்லாம் இல்லை. லேசாக சொட்டுச் சொட்டாக முத்து முத்தாக இருக்கும். தொட்டு நக்கினால் அந்த உப்புச்சுவை தெரியும்.

    கடற்காற்றும் சுவற்றில் இருக்கும் சுண்ணாம்பும் காரணம். தரை மெழுகல் கூட சுண்ணாம்பாகத்தான் இருக்கும். எங்கள் வீட்டுத் தரையில் ஆங்காங்கே குழிகள் இருக்கும். அந்தக் குழிகளிலிருந்து வெள்ளையாகச் சுண்ணாம்புத் தூள் வரும். அதை அப்படியே விடாமல் அடைக்க வேண்டும் அல்லவா. ஆனால் செலவு? அதற்குத்தான் காகிதத்தைத் தண்ணீரில் ஊற வைத்து, அந்தக் கூழைக் குழிகளில் ஊற்றுவோம். அது காய்ந்து அப்படியே பிடித்துக் கொள்ளும்.

    சுண்ணாம்பு பற்றி நீங்க சொன்னதும் இதெல்லாம் நினைவுக்கு வந்தது. நுரைக்கல்லும் சுத்துச் சுவர்களில் வைப்பார்கள். இப்பல்லாம் காங்கிரீட்டுதான.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ராகவன்,

    சுண்ணாம்பு பற்றி நீங்க சொன்னதும் இதெல்லாம் நினைவுக்கு வந்தது. நுரைக்கல்லும் சுத்துச் சுவர்களில் வைப்பார்கள். இப்பல்லாம் காங்கிரீட்டுதான. //

    செப்டிக் டாங்கிலிருக்கும் உபரி தண்ணீரை உறிய மொரக்கல்லைப் போன்ற கல்லை நான் பார்த்ததில்லை. இப்போதும் தூத்துக்குடியில் இதைத்தான் உபயோகிக்கிறார்கள்.. தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க சோ.பையன்,

    இந்த பதிவுகள் சொந்த வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் சிறந்த அனுபவப் பாடமாக இருக்குமென எதிர்பார்க்கிறேன்.//

    பாடமா இருக்குமோ இல்லையோ பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் எழுதுகிறேன்..

    பதிலளிநீக்கு
  9. உண்மைதான். நகரங்களில் இந்த தில்லாலங்கடி வேலை அதிகம்தான்;கிராமங்களில் கொஞ்சம் பரவாயில்லெ

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஜி!

    உண்மைதான். நகரங்களில் இந்த தில்லாலங்கடி வேலை அதிகம்தான்;கிராமங்களில் கொஞ்சம் பரவாயில்லெ //

    கிராமவாசிகள் கள்ளமில்லா குழந்தைகள் என்றால் நகரவாசிகள் எல்லாம் படித்து தெளிந்த பி.எச்.டிகள்.. அதாவது தில்லுமுல்லுகளில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்கள். சரிதானே:)

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கு ஒரு இராஜேந்திரன் கிடைத்தார்; நாங்களெல்லாம் எத்தனை ஏமாந்திருப்போம் என பகீரென்கிறது. அந்த வகையில் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இது ஒரு பாடம் தான்.

    பதிலளிநீக்கு
  12. வாங்க மணியன்,

    நாங்களெல்லாம் எத்தனை ஏமாந்திருப்போம் என பகீரென்கிறது.//

    அப்படியெல்லாம் இருக்காது. கவலைப்படாதீர்கள்.

    உலகத்தில் எல்லாருமா ஏமாற்றுகிறார்கள்.. நல்லவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்..?

    பதிலளிநீக்கு
  13. நல்லாவே மேஸ்திரியை ஊடு கட்ரீங்க...

    தொடரை சீக்கிரம் முடிக்காதிங்க... என்னை போன்று வீடு கட்ட இருப்பவர்களுக்கு நல்ல அனுபவம்...

    பதிலளிநீக்கு
  14. I am regular reader of your blog. Thank god i didn't face any such problem when i construct a house in chennai. since my brother is an engineer and close friend constructed the house. They did well I did'nt expect that i will have such a beautiful house. i just went to the house warming ceremony. nice quuality job they did.

    பதிலளிநீக்கு