10 மே 2006

திரும்பிப் பார்க்கிறேன் 131

நான் நேற்று குறிப்பிட்டிருந்த நிறுவனத்திற்கெதிராக வழக்கு தொடுத்து ஒரு வாரம் கழித்து ஒரு நாள் நான் அலுவலகத்தில் என்னுடைய அலுவலில் மும்முரமாக இருந்த சமயம் என்னுடைய வழக்கறிஞரிடத்திலிருந்து ஒரு தொலைப்பேசி வந்தது.

‘என்ன சார் சொல்லுங்க.’ என்றேன்.

‘சார் நாம போட்ட கேஸ் சம்பந்தமா பேசணும்னு அந்த Firmமோட ரெண்டு பார்ட்னர்சுமே நேத்தைக்கி எனக்கு ஃபோன் பண்ணியிருந்தாங்க. நான் உங்கள கேட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கேன். இன்னைக்கி ராத்திரி என் ஆஃபீஸ்ல வச்சி மீட் பண்ணலாமா?’ என்றார்.

நான் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘என்ன விஷயம்னு கேட்டீங்களா சார்?’ என்றேன்.

அவர் சிறிது நேர தயக்கத்திற்குப்பிறகு, ‘நாம அட்டாச் பண்ண ப்ராப்பர்ட்டீசப் பத்திதான்னு நினைக்கிறேன் ஜோசப். அந்தாள் ரொம்ப அப்செட்டாயிருக்கார். எதுக்கு என் ப்ராப்பர்டீச மட்டும் அட்டாச் பண்ணாருன்னு கேட்டு சொல்லுங்க சார்னு கேக்கறார்.. அதான் நேர்ல வச்சி பேசிக்கலாம்னு..’

நான் நினைத்தது சரிதான் என்று நினைத்தேன். ‘ சார் நான் ரிக்கவரி பண்றதுக்கு என்னாலவரைக்கும் ட்ரை பண்ணேங்கறது உங்களுக்கு தெரியும். கேஸ் கொடுத்ததுக்கப்புறம் ஏன் தொடுத்தேன்னோ அல்லது எதுக்கு ப்ராப்பர்டீச ஏன் அட்டாச் பண்ணேன்னோ நானோ அல்லது நீங்களோ விளக்கம் குடுக்க தேவையில்லேன்னு நினைக்கிறேன். நாம செஞ்சதுல அவங்களுக்கு ஏதாச்சும் அப்ஜெக்ஷ்ன் இருந்திச்சின்னா அவங்க கோர்ட்ல ஸ்டே கேட்டு அப்பீல் பண்ணட்டும்.. கோர்ட்ல ஆர்க்யூமெண்ட் ஸ்டேஜ்ல எதுக்கு அட்டாச் பண்ணோம்னு சொல்லிக்கலாம். அத விட்டுட்டு நா அங்க வந்து பேச்சு நடக்கறப்போ ஏதாச்சும் தவறான வார்த்தைகள் வந்திருச்சின்னா அப்புறம் பிரச்சினையா போயிரும். அதனால நான் வர்றதுக்கில்லை. நீங்களும் அவங்க வக்கீல் முன்னிலையில பேசிக்கறதுதான் நல்லதுன்னு நா நினைக்கிறேன்.’

அவரும் ஒப்புக்கொண்டு இணைப்பைத் துண்டித்தார். நானும் அதற்குப்பிறகு இதைப் பற்றியே சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். வழக்கு தொடுத்தாகிவிட்டது. அப்படியே சொத்துக்களை அட்டாச் செய்ததில் ஏதும் சட்டப்பிரச்சினை இருந்திருந்தால் அட்டாச்மெண்ட் பெட்டிஷன் தாக்கல் செய்த சமயத்திலேயே நீதிமன்றம் ஆட்சேபனை செய்திருக்கும். நீதிமன்றமோ என்னுடைய வழக்கை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் வழங்க உத்தரவிட்டுள்ளது. எதிர்வாதிகளுக்கு ஆட்சேபனையிருக்கும் பட்சத்தில் ஸ்டே பெட்டிஷன் தாக்கல் செய்யலாம். அவர்களுடைய தரப்பில் நியாயம் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு சாதகமாக ஸ்டே கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அப்படியிருக்க என்னுடைய வழக்கறிஞர் ஏன் இதில் சமரசம் செய்ய முயல்கிறார்? அதுவும் பிரதிவாதிகளுடைய வழக்கறிஞர் இல்லாமல்? சரியில்லையே..

சரி என்னதான் நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு என்னுடைய அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து என்னுடைய வழக்கறிஞர் என்னுடை அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

‘சார். அவங்க வந்திருந்தாங்க. ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு காம்ப்ரமைஸ் ப்ரொப்போசல் தந்திருக்காங்க. அதான் ஒங்கக்கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்.’ என்றார்.

காம்ப்ரமைசா? ‘சொல்லுங்க சார்.’ என்றேன்.

அவர் தன்னுடைய கையிலிருந்த உறையிலிருந்து ஒரு கற்றை காகிதங்களை என்னிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்டு ‘நான் அப்புறமா படிக்கறேன்,  இதுல என்ன இருக்குன்னு மட்டும் சுருக்கமா சொல்லுங்களேன்.’ என்றேன்.

‘சார் வேறொன்னுமில்லை. கடந்த ஒரு வருஷத்து வட்டிய மட்டும் கழிச்சிக்கிட்டு மீதியிருக்கற தொகைய முழுசும் ஆறு தவணைகள்ல கட்டிடறேன் எழுதி குடுக்கறோம்கறாங்க.’

நான் அவரையே வியப்புடன் பார்த்தேன். ‘என்ன சார் சொல்றீங்க? முழு தொகையையும் வசூல் பண்ற அளவுக்கு சொத்துக்கள அட்டாச் பண்ணியிருக்கோம். அப்படியிருக்கறப்போ எங்க பேங்க் இந்த ப்ரொப்போசலுக்கு ஒத்துக்கமாட்டாங்க சார். உங்களுக்கு தெரியாததா?’

அவர் சங்கடத்துடன் நெளிந்தார். ‘சார் அதுக்கில்ல. நீங்க கேஸ் போட்டாலும் வசூல் வறதுக்கு எப்படியும் அஞ்சாறு வருஷம் ஆயிரும். அதுக்குள்ள நீங்களும் டிரான்ஸ்ஃபர் ஆயி போயிருவீங்க. நீங்க போனதுக்கப்புறம் இது வசூலாயி வரப்போற மேனேசருக்குத்தான பேர் வரப்போவுது. அத நீங்க இருக்கப்பவே வசூல் பண்ணிட்டா உங்களுக்குத்தான சார் பேர் வரும்.. அதுக்காகத்தான் சொல்றேன்.’

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சட்ட நுணுக்கங்களை அறிந்த என்னுடைய வழக்கறிஞரே அப்படி பேசுவார் என்று நான் துளியும் எதிர்ப்பார்க்கவில்லை. வழக்கு தொடுத்தாயிற்று. அதற்கு கட்டணம், முத்திரைத் தாள் எல்லாமாக சேர்த்து ரூ.75000/- ஆகியிருந்தது. இந்த நேரத்தில் இப்படி ஒரு ப்ரொப்போசலை கொண்டுவருவதால் வங்கிக்கு என்ன பலன்? எனக்கு பெயரா? நிச்சயம் வராது. வழக்கு தொடுத்துவிட்டு வட்டியை விட்டுக்கொடு என்று பரிந்துரை செய்தால் என் மீதே நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

‘என்ன சார் யோசிக்கறீங்க?’ என்ற வழக்கறிஞ்ரை முதன்முதலாக சந்தேகத்துடன் பார்த்தேன்.

‘என்னை என்ன சார் சொல்ல சொல்றீங்க? இந்த வழக்க போடறதுக்கு நான் எவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்ததென்று உங்களுக்கே தெரியும்.. வழக்கு தொடுத்த அன்று நான் தந்தி கொடுக்கவில்லையென்றால் இன்று வரை அனுமதி வந்திருக்காது. இப்போது அனுமதி வந்து இரண்டு நாட்களுக்குள் ஒரு வருடத்திற்குண்டான வட்டியை விட்டுக்கொடுத்தால் கடனை ஆறு தவணைகளுக்குள் அடைக்கிறேன் என்று அவர்கள் சொன்னதாக நான் பரிந்துரை செய்தால் கேட்கவே வேண்டாம். நல்ல பெயர் வருவது இருக்கட்டும்.. இருக்கும் நல்ல பெயரும் போய்விடும்.’

என்னுடைய குரலில் தெரித்த எரிச்சல் அவரை மேலும் சங்கடப்படுத்தியது. ‘ஜோசப் நா எதுக்கு இத சொல்ல வந்தேன்னு நின¨க்கறீங்க? ஒங்களுக்கு ஏதாச்சும் தொல்லை இந்தாளால வரக்கூடாதுன்னுதான்..’

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  ஆனால் இவரிடம் கோபப்பட்டு எந்த பயனும் இல்லை என்று நினைத்தேன். அதாவது எனக்கும் என்னுடைய வங்கிக்கும் பாதுகாப்பு தரவேண்டிய ஒருவரே மிரட்டலுக்கு பணிந்து போக சொல்லுகிறார். ‘சார்.. தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க சொல்ல வர்றது எப்படியிருக்குன்னா.. நீங்க முதல்ல ஒங்கள பார்த்துக்குங்க.. அப்புறம் பேங்க பத்தி கவலைப்படலாம்னு சொல்றா மாதிரி இருக்கு. நீங்க முன்ன ஒருதரம் இப்படி சொன்னப்போ நா நீங்க சொன்னா மாதிரி டைம் கொடுத்துட்டு காத்திருந்தேன். இனி அப்படியிருக்க தேவையில்லை சார். அப்புறம் இன்னொன்னு. அவர் என்னை ஏதாச்சும் பண்ணாக்கூட எங்க பேங்க் நீங்க சொல்ற இந்த காம்ப்ரமைசுக்கு ஒத்துக்கும்னு நினைக்கிறீங்களா? நான் நீங்க சொன்னத இன்னைக்கி எங்க எச்.ஓவுக்கு ஃபோன் பண்ணி சொன்னேன்னா நாளைக்கே என்னை பாதுக்காக்கறதுக்காக வேண்டி இங்கருந்து வேற ஊருக்கு மாத்திருவாங்க. அதத்தவிர வேறொன்னும் நடக்காது. இன்னொன்னும் சொல்லிக்கறேன். இந்தமாதிரி ஒரு ப்ரொப்போசல எங்க லீகல் அட்வைசர் கொண்டு வந்தார்ங்கறது எச்.ஓவுக்கு தெரிஞ்சா உங்களையே எங்க லீகல் பேனல்லருந்து நீக்கவும் தயங்க மாட்டாங்க.’ என்றேன் சற்றே சூடாக.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகம் போன போக்கிலிருந்தே தெரிந்தது. உடனே, ‘நான் சொல்ல வந்தத சொல்லிட்டேன் சார். நீங்க இப்ப எங்கிட்ட சொன்னத அவங்கக்கிட்ட சொல்லிடறேன். எப்படியோ உங்க கடன் வசூலானா மாதிரி இருக்கட்டுமேன்னு நினைச்சேன். அப்புறம் உங்க இஷ்டம்.’ என்று எழுந்து நின்றார்.

நான் வேண்டுமென்றே மறுபடி ஏதும் சொல்லாமல் அமர்ந்திருந்தேன். அவர், ‘சரி.. நா வரேன் சார்.’ என்றவாறு இறங்கிச் சென்றுவிட்டார்.

அவர் சென்றதும் என்னுடைய காசாளர் உடனே எழுந்து என் அறைக்குள் நுழைந்தார். ‘என்ன கோமஸ்?’ என்றேன்.

‘சார்.. நா ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?’ என்றவரைப் பார்த்தேன்.

‘சொல்லுங்க.’

‘சார் இந்த வக்கீல் அவ்வளவு நல்லவர் இல்லை. அவரோட ஆஃபீசுக்கு முன்னால அந்த கப்பல் பார்ட்டிய நேத்து ராத்திரி பார்த்தேன். நான் பார்த்தும் பாக்காத மாதிரி போயிரலாம்னு பார்த்தப்போ இந்த வக்கீல் என்னெ கூப்டு அந்தாள்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். நான் சாரெ ஏற்கனவே தெரியுமேன்னேன். அப்போ அந்தாள், ‘எலேய் உங்க மானேசர ரொம்ப துள்ளாம இருக்கச் சொல்லுன்னு..’ மிரட்டிட்டு வண்டியில ஏறி போய்ட்டார் சார்..’ என்றவர், ‘இப்ப இவரு எதுக்கு வந்தார் சார்?’ என்றார்.

நான் அவர் வந்த விஷயத்தை சுருக்கமாகக் கூறினேன். அவர் அதிர்ச்சியுடன், ‘சார் நீங்க சொன்னதுதான் சரி. உடனே நம்ம எச்.ஓவுக்கு ஃபோன் பண்ணி இந்த விஷயத்த சொல்லிருங்க சார். அந்தாள் மிரட்டுனப்பவே நினைச்சேன். ஏதாச்சும் ஏடாகுடமா செஞ்சிரப்போறார் சார்.’ என்றார்.

நான் அவரை நன்றியுடன் பார்த்து, ‘சரி கோமஸ். நான் எச்.ஓவில பேசறேன். நீங்க போங்க.’ என்று கூறிவிட்டு சிறிது நேரம் என்னுடைய வழக்கறிஞர் கூறியதையே யோசித்துக்கொண்டிருந்தேன்.

பிறகு சட்டென்று ஒரு யோசனை உதிக்க தூத்துக்குடியில் எனக்கு மிகவும் நெருக்கமாகியிருந்த ஒரு வங்கி மேலாளரை அழைத்து வழக்கறிஞரிடம் இன்று நடந்த சம்பாஷனையைப் பற்றி கூறினேன். அவர் உடனே சிரித்துக்கொண்டு, ‘ஜோசப் இந்த ஊர்ல இந்த மாதிரி ஆளுங்க நிறையப் பேர் இருக்காங்க. எல்லாம் வெத்து பயல்க.. நாங்கல்லாம் எதுக்கு இருக்கோம்? நம்ம க்ளப் மீட்டிங் வேணும்னா போட்டு டிஸ்கஸ் பண்ணிரலாமா?’ என்றார்.

நான் பதறிக்கொண்டு, ‘ஐயைய்யோ அப்படியெல்லாம் ஒன்னும் வேணாம் சார். நான் சும்மா பேச்சுக்குத்தான் உங்ககிட்ட சொன்னேன்.’ என்றேன்.

அவர் மேலும் சிரித்தார். ‘ஜோசப், நா இங்க வந்து அஞ்சி வருஷம் ஆகப்போவுது. இந்த ஊர் ஒரு வில்லங்கம் பிடிச்ச ஊர்தான். ஆனா நமக்காக உசிர குடுக்கறதுக்கும் இங்க ஆள்ங்க இருக்காங்க. நா ஒன்னு பண்றேன்.. நீங்க சொன்ன ஆளப்பத்தி எனக்கு தெரிஞ்ச ஆளுங்கக் கிட்ட சொல்லி வார்ன் பண்ணச் சொல்றேன். அப்படியும் மீறி ஏதாச்சும் பண்ணார்னா சொல்லுங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. இந்த ஊர் டி.எஸ்.பி பஞ்சாப் காரரு.. ஒரு வார்த்த சொன்னாப் போறும்.. பேங்க் மேனேஜர்ங்கன்னா அவருக்கு ரொம்ப மதிப்பு.நாம் ஒருத்தர் ரெண்டு பேர் இல்ல ஜோசப்.. மொத்தமா இருபத்தியேழு பேங்க் பிராஞ்சஸ் இந்த டவுண்ல இருக்கு.. தைரியமா இருங்க.’

அந்த தைரியத்தில்தான் நானும் தெம்பாய் இருந்தேன். என்னதான் நடக்கிறதென்று பார்த்துவிடலாம் என்ற அசட்டு தைரியத்திலும்..

தொடரும்..

9 கருத்துகள்:

  1. திக்..திக்..திக்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க கிருஷ்ணா,

    திக்..திக்..திக்.//

    ஆமாம் அடுத்த இரண்டு மூன்று தினங்கள் அப்படித்தான் இருந்தது. நல்ல வேளையாக என் மனைவியிடம் இதைப்பற்றி மூச்சே விடவில்லை.

    பதிலளிநீக்கு
  3. இத்தனை பிரச்சினைகளிலிருந்தும் நீங்கள் மீண்டு வந்ததற்கு முக்கியக் காரணமாக நான் கருதுவது உங்கள் கை சுத்தம் என்பதுதான். பல மேனேஜர்கள் தேவையின்றி வாடிக்கையாளர்கள் தரும் மேல் சௌகரியங்களைப் பெற்று அவர்கள் சம்பந்தமாக அலுவலக நடவடிக்கை எடுக்க நேரும்போது தயக்கத்தால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இன்னொரு விஷயம், பல வாடிக்கையாளர்கள் தங்கள் மனைவியரை மேனேஜர் வீட்டம்மாவை சிநேகம் பிடிக்க செய்து, பல வெகுமதிகளை கொடுத்து மேனேஜரின் கையைக் கட்டிப் போடுகிறார்கள். அவ்வாறெல்லாம் நடக்க நீங்களோ உங்கள் வீட்டம்மாவோ அனுமதிக்காததில்தான் உங்கள் வெற்றிக்கான முக்கியக் காரணத்தைப் பார்க்கிறேன்.

    இதெல்லாம் வர ஏசுவின் அருளும் முக்கியம்தானே?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராஜ்,

    உண்மையிலேயே வில்லங்கம் பிடிச்ச ஊராத்தான் இருந்திருக்கும் போல... ..//

    அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எந்த ஊரில்தான் இம்மாதிரி எத்தன்கள் இல்லை? திண்டுக்கல்லில் என்னுடைய மேலாளர் நண்பர் ஒருவரை லாரியை வைத்து இடித்து காயப்படுத்தி மனுஷன் உடலால் பாதிக்கப்பட்டதை விட மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு நீண்ட விடுப்பில் இருந்தார்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க டோண்டு சார்,

    நம்முடைய நேர்மை, திறமை, துணிச்சல் எல்லாம் இறைவனின் அருள் இல்லையென்றால் ஒன்றுக்கும் பலனில்லை.

    பதிலளிநீக்கு
  6. இதுலே இருந்து மீண்டு வந்துட்டீங்க. ஆனா எப்படி?
    ச்சீக்கிரம் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  7. pls remove 'asattu' from the last
    line.i think this word dergrade both the author and the reader

    பதிலளிநீக்கு
  8. ஜோசப் சார்,
    உங்களது பதிவுகள் ஒன்று விடாமல் படித்து வருகிறேன். சும்மா "அப்புறம்?" என்று பொழுதுபோக்குக்கு இல்லை. நிறையவே பயனடைந்திருக்கிறேன்.

    எனது ஊரைப்பற்றி நான் அறிந்ததைவிட மிகவும் நேர்த்தியாகவும், யதார்த்தமாகவும் நிகழ்வுகளைத் தருகிறீர்கள். இதைவிட நான் மிகவும் உங்கள் வார்த்தைகளில் மதிப்பது ,உங்களது நேர்மையும் நியாயத்தின் பக்கம் தைரியமாக இருப்பதும்தான். எத்தனையோ முறை பலவகையான மிரட்டல்கள், ஆசைகாட்டல்களைத் தெளிவாகக் கையாண்டிருக்கும் உங்கள் அனுபவத்திலிருந்து நடுத்தள ஆளுமை அதிகாரியான நான் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

    வேலையில் இருக்கும் நமது நண்பர்கள் எந்த தளத்தில் இருப்பினும் உங்களது அனுபவங்கள் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    மேலும் தொடருங்கள்.
    அன்புடன்
    க.சுதாகர்.
    மும்பை பக்கம் வந்தால் ஒரு வார்த்தை சொல்லுங்கள். வீட்டுக்கு கண்டிப்பாக வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  9. தூத்துக்குடீல என்னோட மாமா வக்கீலா இருக்காரு. அவரு ரொம்ப நாயமா வக்கீல் தொழலை நடத்தி நல்ல பேரோட இருக்காரு. கிரிமினல் வழக்கு எடுக்கவே மாட்டாரு. ஆனா நீங்க சொல்ற வக்கீலு பெரிய தில்லாலங்கடியா இருக்காரே...

    பதிலளிநீக்கு