கடந்த பல வருடங்களாகவே டைரி எழுதும் பழக்கம் எனக்கு உண்டு.
என்னுடைய வங்கியில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்த புதிதில் நாள்தோறும் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் என்னுடைய கடந்த முப்பதாண்டு வங்கி ஊழியத்தில் கிடைத்த அனுபவங்கள் ஏராளம், ஏராளம்.
அவற்றை சமயம் கிடைக்கும்போதெல்லாம் என்னுடைய நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொள்வது வழக்கம்.
நான் வங்கி மேலாளராக பதவி உயர்வு கிடைத்த 1978 ம் வருடம் முதல் இதுவரை சுமார் பதினைந்து நகரங்களில் (தஞ்சாவூர் போன்ற சிறு நகரங்கள் முதல் மும்பை போன்ற பெரு நகரங்கள் வரை) பணியாற்றியிருக்கிறேன்.
நான் துணை மேலாளராக சென்னை மத்திய கிளையில் பணியாற்றிக்கொண்டிருந்த 1974ம் வருடம் அன்றைய முதலமைச்சர் கலைஞர் மற்றும் அன்று நிதி அமைச்சராக இருந்த திரு மாதவன் அவர்களை ஒரு விழாவுக்கு அழைக்க சென்றது.
1980ம் வருடம் நான் முதன் முதலாக மேலாளர் பதவி உயர்வு பெற்று சென்னையில் புதிதாய் திறக்கப்படவிருந்த கிளையைத் திறந்து வைக்க அன்றைய முதல்வர் மக்கள் திலகத்தை சந்திக்கப் பட்ட பாடு..
1982ல் தஞ்சையில் அன்று பிரபலமாயிருந்த பத்திரிகையாளரும், அரசியல்வாதியுமாயிருந்த வலம்புரிஜான் தலைமையில் வங்கி அதிகாரிகளின் சங்க ஆண்டு விழா நடத்தியது..
1984-85ல் தூத்துக்குடியில் அப்போது காவல்துறை ஆய்வாளரை ஒரு வாடிக்கையாளருக்கு பரிந்துகொண்டு எதிர்க்கப்போய் காவல் நிலையத்தில் ஒருநாள் முழுவதும் சிறைப்பிடிக்கப் பட்டது..
1986 ல் மதுரையில் பணிபுரிந்த சமயம் அன்றைய நிதித்துறைத் துணை அமைச்சராயிருந்த திரு ஜனார்த்தன் பூஜாரியை ஒரு கடன் மேளாவில் முறைத்துக்கொண்டு அதன் விளைவாய் என்னுடைய மேலதிகாரிகளிடம் தண்டனைப் பெற்று உடனடியாக சென்னைக்கு மாற்றப்பட்ட அவலம்..
1988 ல் இருந்து 90 வரையிலும் மீண்டும் 1993ல் இருந்து 1996 வரை மும்பையில் அனுபவித்த சந்தோஷங்கள், ஒரு சிவசேனை தலைவரை வங்கிக்கடன் விஷயத்தில் முறைத்துக்கொண்டு அடியாட்களால் மிரட்டப்பட்டு இரண்டு வார காலம் சென்னையில் தலைமறைவான சோகங்கள்..
இப்படி பலதரப்பட்ட அனுபவங்களை ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் எழுதலாம் என்று நினைத்துள்ளேன்.
நான் இப்போதும் சர்வீசில் இருப்பதால் எல்லாவற்றையும் வெளிப்படையாய் எழுதவியலும் என்று தோன்றவில்லை.
இப்பதிவை ஒரு புனைப்பெயரில் பதிந்திருந்தால் ஒருவேளை எல்லாவற்றையும் எழுத முடிந்திருக்கும்..
இருப்பினும் என்னால் இயன்றவரை சுவாரசியமாக எழுதுகிறேன்..
என்னுடைய மும்பை ரயில் பயண அனுபவத்திற்கு கிடைத்த வரவேற்பும் இத்தொடரை எழுத நான் துணிந்ததற்கு ஒரு காரணம்..
இதில் சில பதிவுகள் சுயபுராணமாகவும் அமையலாம்..
இதில் சம்பந்தப்பட்டவர்கள் பலரும் இப்போது அரசியலிலும், பொதுவாழ்விலும் இருப்பதால் அவர்களை லேசாக கோடிட்டு காட்டியிருக்கிறேன்..
இச்சம்பவங்களைப் பற்றி என்னுடைய அப்போதைய நாட்குறிப்புகளில் குறித்திருந்தாலும் அவற்றை அசை போடுகையில் நடப்பதாக எழுதப்படவிருக்கும் சம்பாஷனைகள் என்னுடைய கற்பனையும் கலந்ததாக இருக்க வாய்ப்புண்டு.. எல்லாவற்றையும் நாட்குறிப்பில் குறித்துக் கொள்ள இயலாதே என்பதால்.
ஆனால் இயன்றவரை நடந்தவைகளை அப்படியே வடித்தெடுத்திருக்கிறேன்..
தினம் ஒரு பதிவாக இடவேண்டும் என்பது என் ஆவல்.
ஆனால் அலுவலக பணியின் நிமித்தம் அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் இடைஇடையே இடைவெளி ஏற்பட வாய்ப்பிருக்கிறது..
தொடர்ந்து எழுதுவதா வேண்டாமா என்பது முதல் இரண்டு, மூன்று பதிவுகளுக்குப் பிறகு என் பதிவுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அமையும்..
வரவேற்பு பலமாக இருக்கும் என்பது உறுதி. நீங்கள் எழுதுங்கள். :)
பதிலளிநீக்குதலைவா.1986 ஆம் வருட அனுபவம் அவலம் இல்லை..பாராட்டப்பட வேண்டிய விஷயம்...
பதிலளிநீக்குஆனால் நம்ப டிபார்ட்மெண்ட் விஷயங்களை பணி ஓய்வு பெற்ற உடன் எழுதுவது தான் நல்லது. சொல்றதை சொல்லிபுட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.
நன்றி சுதர்சன்.
பதிலளிநீக்குஅந்த நம்பிக்கையில்தான் துவங்குகிறேன்.
தம்பி முத்து,
பதிலளிநீக்குஉங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி.
முடிந்தவரை சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தவிர்ப்பேன்.
என்னுடைய அனுபவங்களை நகைச்சுவை கலந்து தரவேண்டும் என்பதுதான் என் நோக்கம்.
நிச்சயமாய் யாரையும் புண்படுத்தவோ குறைகூறவோ மாட்டேன்.
சார்,
பதிலளிநீக்குவங்கிகளின் செயல்பாட்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலுடன் உங்கள் தொடரை எதிர்பார்க்கிறேன்.
உங்கள் அனுபவத்துடன் வங்கியின் செயல் முறைகளையும் குறிப்பாய் என்னைப் போன்று வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியருக்கு சேமிக்கவும், கடன் பெறவும் வங்கிகளில் இப்போதுள்ள திட்டங்களையும் விரிவாக எழுதினால் உதவியாயிருக்கும்.
என்னா நா சொல்றது?
நண்பர் சம்பத்,
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரிதான்.
தொடரின் இடை இடையே கண்டிப்பாய் உங்களை போன்ற இளைஞர்களுக்கும் பயன் படுகின்ற சகல வித திட்டங்களையும் எழுதுகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.
வாருங்கள்;
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வணக்கம்.
பதிலளிநீக்குஉங்களைப்போன்ற பெரியவர்கள் வலைப்பதிவுப்பக்கம் வருவது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.
முத்து மற்றும் சம்பத் கேட்டுக்கொண்டுள்ள விடயங்களை கணக்கில் கொண்டு தொடருங்கள், நன்றி.
மென்மேலும் எழுதுங்கள் அய்யா!
பதிலளிநீக்குவணக்கங்களுடன்,
மூர்த்தி.
நன்றி மூர்த்தி, அன்பு.
பதிலளிநீக்கு