31 அக்டோபர் 2005

திரும்பிப் பார்க்கிறேன்..2

என்னுடைய அலுவலகப் பயணத்தில் நான் இன்றளவும் நன்றியோடு நினைத்திருக்கும் இரண்டாவது மனிதர் என்னுடைய முதல் அக்கவுன்டன்ட்.

முதல் நாள் அன்று மேலாளரிடமிருந்து என்னையும் என்னுடைய வேலையையும் காப்பாற்றியவர் அவர்தான்.

மிகவும் திறமையானவர். ஆனால் அதேசமயம் மிகவும் கோபக்காரர்.

திறமையும் கோபமும் கைகோர்த்து செல்வதை என்னுடைய அனுபவத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஒன்று!

கோபம் இருக்குமிடத்தில்தான் குணமிருக்கும் என்பதும் உண்மைதான்.

நான் மேலே குறிப்பிட்ட என்னுடைய முதல் அக்கவுன்டன்ட் மிகவும் இளைஞர். நேரடியாக அதிகாரியாய் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

நான் பணியில் சேர்ந்த சமயம் அதிகாரியாயிருந்த அவருடைய வயது 27தான்! குமாஸ்தாவாக சேர்ந்த எனக்கு அப்போது வயது 22.

அவரைவிட 23 வயது மூத்தவரான மேலாளருக்கு அவரை கண்டாலே வெறுப்பாயிருந்தது (வேறென்ன? எல்லா அலுவலகத்திலும் இருக்கும் போட்டியும் பொறாமையும்தான் காரணம். இத்தகைய விருப்பு வெறுப்புகள் இன்றும் இருக்கிறது. குறிப்பாக பொறியியல் பட்டம் முடித்த கையோடு நேரடியாக மேலாளர் (ஐ.டி) ஆக பதவியில் பெருமளவு ஊதியத்துடன் பணியமர்த்தப்படும் இளைஞர்களுக்கும் குறைந்த பட்சம் பத்தாண்டுகளாக பணி புரிந்தும் இன்னும் துணை மற்றும் இணை மேலாளராகவே பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையில் நடைபெறும் பணிப்போராட்டத்தை (Cold War) பார்க்கவேண்டும். இந்திய, பாக்கிஸ்தான் மோதல் தோற்றுப்போகும்!).

அலுவலகத்தின் எதிர், எதிர் திசைகளில் அமைந்திருந்த இரு கண்ணாடி கூடுகளிலிமிருந்து (Cabins) பறக்கும் கோபக் கணைகள் இடையிலிருந்த என்னைப் போன்ற குமாஸ்தாக்களைச் சுட்டெரிக்காமல் விட்டது பாக்கியம்தான்.

மேலாளரும் அக்கவுன்டன்டும் தொடர்ந்து சில வாரங்கள் (ஏன் சில மாதங்கள் கூட) பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.

நான்தான் இக்கிளையின் மேலாளர் என்ற நிலையில் ஒருவரும் அதனாலென்ன நான் நேரடியாக அதிகாரியாக அமர்த்தப்பட்டவன் என்ற இறுமாப்பில் (நியாயமான இறுமாப்பு என்று நான் பலதடவைகளில் அவருடைய முடிவெடுக்கும் திறமையைக் கண்டு வியந்ததுண்டு) அக்கவுன்டன்டும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவே மாட்டார்கள்.

குமாஸ்தாகவும், தட்டெழுத்தாளராகவும் இருவேறு பொறுப்புகளைச் சுமந்துக்கொண்டு திறமைவாய்ந்த அதேசமயம் வெட்டி ஈகோ பிடித்தலைந்த இவ்விரு அதிகாரிகளிடமும் நான் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல.

இருப்பினும் இவ்விருவர் மீதும் எனக்கு நாளடைவில் அளப்பறியா மதிப்பும், மரியாதையும் ஏன் ஒருவித பிடிப்பும் ஏற்பட்டுப்போனதை மறுக்க முடியாது.

அக்கவுன்டன்ட் ஒரு சரியான சினிமா பைத்தியம்.

திருமணமான புதிது! ஆம். 21 வயதிலேயே காதலித்து திருமணம் புரிந்துக்கொண்டவர். இவரும் இவருடைய வயதொத்த இவருடைய மனைவியும் செக்கசெவேலென்று திரைப்பட நடிகர்களைப் போல பார்ப்பதற்கு அவ்வளவு அம்சம்!

கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் அவ்வளவாய் தமிழ் வராது.

ஆனாலும் இருவரும் தமிழ் சினிமா அதிலும் எம்.ஜி.ஆர் பைத்தியங்கள். எம்.ஜி.ஆர் கேரளத்தைச் சார்ந்தவர் என்பதில் இருவருக்கும் ஒரு பெருமை.

என்னுடைய வங்கி வாடிக்கையாளர்களில் ஒருவர் அன்று கேரளத் திரையுலகில் மிகவும் பிரபலமடைந்திருந்த திரைப்பட தயாரிப்பாளர். அவர்தான் செம்மீன் போன்ற வெற்றிப்படங்களைக் கொடுத்தவர். அவர் மூலமாக அன்று சென்னையில் நடைபெற்ற எல்லா கேரள திரைப்பட படப்பிடிப்புக்கும் எப்படியாவது சென்றுவிடுவார்.

அன்றைய பிரபலமான கேரள திரைப்பட நட்சத்திரங்களான சத்யன், மது, பிரேம் நசீர், ஷீலா போன்ற பலருடன் நட்பை ஏற்படுத்திக்கொள்வதில் முனைப்பாயிருப்பார்.

தமிழ் சரியாக வரவில்லையென்ற காரணத்தினால் தம்பதியர் இருவரும் திரையரங்குகளுக்கு செல்லும் சமயத்திலெல்லாம் என்னையும் உடன் அழைத்து செல்வதுண்டு.

இருவரும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்தவர்களாதலால் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு திரைப்படத்தையும் (முக்கியமாக எம்.ஜி.ஆர்) முதல் நாள் நள்ளிரவு காட்சியிலேயே பார்த்துவிடுவதில் குறியாயிருப்பார்கள். அதற்கென எத்தனை செலவானாலும் கருப்பில் வாங்கி அன்றே பார்த்துவிட வேண்டும். இல்லையென்றால் தலை வெடித்துவிடும் இருவருக்கும். பிளாக்கில் விற்பவனிடம் பேரம் பேசி வாங்க எங்களுடனே ஒரு கடைநிலை சிப்பந்தியும் (பியூன்) வருவான்.

ஜர்னல் மற்றும் ஜெனரல் லெட்ஜர்சை Tally செய்துவிட்டு களைப்புடன் வீட்டுக்குச் சென்று உணவருந்திவிட்டு படுக்கலாம் என்று நினைத்துக்கொண்டு அவருக்கு தொலைப்பேசியில் அழைத்து ‘வாங்க சார்.. Tally யிருச்சி’ என்றால் ‘ஜோசப் இன்னைக்கி நம்ம வாத்தியார் படம் ரிலீசாயிருக்கே. நீங்க எங்க கூடவே ஹோட்டல்ல சாப்டுறலாம்’ என்று தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் உற்சாகமாய் சொல்லிவிட்டு சிரிப்பார் (அவருக்கென்ன? ஐந்து மணிக்கே வீட்டுக்குபோய் உடை மாற்றிக்கொண்டு ஜிம்கானா க்ளப்புக்கு போய் டென்னிஸ் ஆடிவிட்டு வீடு திரும்பி ரெண்டு பெக் அடித்துவிட்டு..).

அப்போது எனக்கு இன்னும் வேலை நிரந்தரமாயிருக்க வில்லையாதலால் ‘அடப் போய்யா நீயும் உன் சினிமாவும்.’ என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே, ‘சரி சார். வாங்க..’ என்று அவர்கள் கூடவே போய் படத்தைப் பார்த்துவிட்டு வீடு திரும்பினால் வீட்டுக்கதவை சாத்திப் பூட்டியிருப்பார் அப்பா. இப்படி எத்தனை இரவுகள் நள்ளிரவில் வீட்டு வாசலில் தவமிருந்திருப்பேன்!

ஆயினும் இன்றும் அவருடைய சிஷ்யன் என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறேன்.

என்னுடைய பணியில் என்றாவது ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டால் ‘டி.பி.ர் FG யோட சிஷ்யனாச்சே சும்மாவா’ என்று என் நண்பர்களும் சரி என்னுடைய அதிகாரிகளும் சரி பாராட்டுவதை கேட்டு பெருமையடைந்திருக்கிறேன்.

கணிவு அதே சமயம் கண்டிப்பு என்று தன் கீழ் பணிபுரிபவர்களிடம் நடந்துக்கொள்வது எப்படி என்று அவரிடம்தான் நான் தெரிந்துக்கொண்டேன்.

கோபம் வந்தால் அவரைப்போன்று unreasonable க நடந்துக்கொள்ளக் கூடாதென்பதையும் நான் படித்துக்கொண்டேன்.

என்னுடைய அலுவலக வாழ்வில் நான் கற்றுக்கொண்ட நிறைய பாடங்களுக்கு ஆசான் அவர்தான்.

இவரும் என்னுடைய பதவி உயர்வுகளில் பெரிதும் உதவியிருக்கிறார்.

இன்றும் மேலாளராக பதவியமர்த்தப்படுபவரை முதலில் கிராமப்புறக் கிளைகளில் ஒன்றில்தான் அமர்த்தப்படுவது வழக்கம்.

ஆனால் நான் மேலாளராக பதவி உயர்வு பெற்றபோது (1980) எந்த கிளைக்கு இவனை முதல்வராக போடுவதென்ற குழப்பம் தலைமை அலுவலகத்தில் எழுந்தபோது இவனை சென்னையிலேயே திறக்கப்படவிருந்த கிளைக்கு மேலாளராக முன்மொழிந்தவரும் இவர்தான் என்று பிறகு நான் தெரிந்துக்கொண்டேன்.

என்னுடைய பணிப் பாதையில் (Career Path) இவருடைய பங்கு மறக்கவியலாதது..


பயணம் தொடரும்..

4 கருத்துகள்:

  1. பெயரில்லா11:16 AM

    யதார்த்தமாக எழுதியிருக்கிறீர்கள்.

    போகப் போக சூடு பிடிக்கும் என்று நினைக்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி சம்பத்,

    சூடு பிடிக்குமா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை.

    அது 'சூடு' என்று எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.

    நடந்தவற்றைத் தானே என்னால் எழுத முடியும். என்னால் இயன்றவரை ஸ்வாரஸ்யமாக தருவதற்கு முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:44 PM

    முதல் இரண்டு பதிவுகளும் நன்றாக இருக்கின்றன சார்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:46 PM

    ஜோசப் சார்,

    ரொம்ப ஜாக்கிரதையா இப்போ சர்வீஸ்ல இல்லாதவங்களைப் பத்தி எழுதியிருக்கிறீர்கள்.

    இப்போ சர்வீஸ்ல இருக்கறவங்களைப் பத்தி எழுதற தைரியம் உங்களுக்கு இருக்கான்னு இனி வரும் பகுதிகளில்தான் தெரியும்னு நினைக்கறேன்.

    இருந்தாலும் Interesting ஆ இருக்கு.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு