27 மார்ச் 2012

படிக்காவிட்டால் பிச்சைதான் எடுக்கணும்!

         இது சாதாரணமாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளூக்கு கூறும் அறிவுரை. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் ஒருவர் இதை வெறும் அறிவுரையாக மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. தன்னுடைய மகளுடைய கையில் ஒரு தட்டைக் கொடுத்து கோவில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தாராம்!

பள்ளிச் சீருடையில் கோவில் வாசலில் மற்ற பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருந்த சிறுமியைக் கண்ட பொது மக்கள்  விசாரிக்க சாலையின் மறுபுறம் காரில் அமர்ந்திருந்த தந்தையைச் சுட்டிக்காட்டி அவர்தான் தன்னை இவ்வாறு தண்டித்ததாக கூறினாராம். கொதிப்படைந்த பொதுமக்கள் தந்தையையும் அவருடன் காரில் அமர்ந்திருந்த பெண் ஒருவரையும் (சிறுமியின் தாய் இறந்துவிட்டாராம்) திட்டியதுடன் காவல்துறைக்கும் தகவல் அளித்தனராம்.

காவல்துறை விசாரனையில் சரியாக படிக்காவிட்டால் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை மகளுக்கு உணர்த்தவே இப்படி செய்தேன் என்றாராம் தந்தை!

என்ன கொடுமை பாருங்கள்! இந்த லட்சணத்தில் அவர் ஒரு தாசில்தாருடைய மகனாம்.
வாழ்க்கையில் வெற்றியடைய படிப்பு அவசியம்தான். ஆனால் படித்தவர்கள் அனைவருமே வாழ்க்கையில் வெற்றியடைந்து விடுவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதுபோலவே படிக்காதவர்கள் அனைவருமே தெருவில் பிச்சை எடுத்துத்தான் பிழைப்பு நடத்தவேண்டி வரும் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம்தான்.
இதை எப்போதுதான் பெற்றோர்கள் புரிந்துக் கொள்ளப் போகிறார்களோ?