20 அக்டோபர் 2013

சொந்த செலவில் சூன்யம் - 52

'இருக்கேன் சார்....' என்றார் பெருமாள் சுருதியிறங்கி.' ஒங்கள எப்படி பேசிஃபை (pacify) பண்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன் சார்... அதான்...'

'என்னெ பேசிஃபை பண்ணி என்ன சார் பிரயோசனம்? நாளைக்கி இன்வெஸ்ட்டிகேஷன் சரியால்லைன்னுட்டு கேஸ் தோத்துட்டா பரவால்லை..... நா சரியா கேஸ நடத்தாததாலதான் கேஸ் படுத்துக்கிச்சின்னு சொன்னா மினிஸ்டர் ஆள்தான இப்படித்தான் இருப்பான்னு ஒங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்களே சொல்லிக்கிட்டு திரிவீங்களே சார்?'

இப்ப மட்டும் என்னவாம் என்று நினைத்துக்கொண்டார் பெருமாள். 'சேச்சே அப்படியெல்லாம் ஒன்னும் ஆவாது சார்.... அதான் ரெண்டு விட்னசையும் வார்ன் பண்ணி வச்சிருக்கமே.... அவங்க விட்னசே போறுமே சார்...?' அடுத்த நொடியே முதல் விட்னஸ் மாயமாகிப் போனதும் ரெண்டாவது விட்னஸ் உடல் சுகமில்லை என்று வராமல் டிமிக்கி கொடுத்திருந்ததும் நினைவுக்கு வர சொந்த செலவில சூன்யம் வச்சிக்கிட்டம் போலருக்கே என்று நினைத்தார். அடுத்து பிபியிடம் இருந்து வரப்போகும் வசவுக்காக தயாரானார்...

'என்னங்க சொல்றீங்க?' என்று பிபி உச்ச ஸ்தாயியில் கத்த பெருமாள் ரிசீவரை ஓரடி தள்ளிப் பிடித்தார். 'இருக்கற ரெண்டு விட்னஸ்ல ஒன்னெ கோட்ட விட்டுட்டீங்க..... ஒரு வாரமா தேடியும் கிடைக்கலங்கறீங்க.... ரெண்டாவது உள்ளூர்லயே உடம்புக்கு முடியலன்னுட்டு டிராமா போடற அந்த லேடியயும் கோர்ட்டுக்கு கொண்டு வர முடியல... இதுல ரெண்டு ஸ்ட்ராங்கான விட்னஸ் இருக்காம்.... ஏங்க தெரியாமத்தான் கேக்கேன்...? ஒரு பொடிப்பயல தேடி கண்டுப்புடிக்க முடியாம என்னங்க ஸ்டேஷன் நடத்தறீங்க?'

'அவனோட ஊர் வரைக்கும் கூட போய் பாத்தாச்சி சார்...... பய அங்கெல்லாம் போல போலருக்கு.... இருந்தாலும் அடுத்த ஹியரிங்குள்ள புடிச்சிருவோம் சார்.... ப்ராமிசா சொல்றேன்....'

'சரி.... அந்த லேடி உண்மையிலயே உடம்பு முடியாமத்தான் இருக்காங்களா இல்ல நாம சொன்னா மாதிரி சொல்றதுக்கு பயந்துபோயி டிமிக்கி குடுக்குதா?'

'அப்படி தெரியல சார்.... டாக்டர் சர்ட்டிஃபிக்கேட் கூட சப்மிட் பண்ணியிருக்காங்களே...'

'அட என்ன ஆளுங்க நீங்க? பணத்த தூக்கிப் போட்டா சர்ட்டிஃபிக்கேட் குடுக்க ஆளா இல்ல? டிஎம்மோ (DMO) முன்னால ஆஜராயி டெஸ்ட் பண்ணி அவரோட சர்ட்டிஃபிக்கேட்ட குடு இல்லன்னா கோர்ட் சம்மன் வீடு தேடி வரும்னு மிரட்டி பாருங்க... அப்புறம் தெரியும் சேதி..... போலீஸ்னா யாருன்னு காமிக்கணுங்க....'

'இல்ல சார் கொஞ்சம் படிச்ச ஃபேமிலி மாதிரி தெரிஞ்சிது அதான்....'

'என்னங்க பெரிய படிப்பு..... படிப்பு இருந்தா போறுமா? ஒரு க்ரைம விட்ன்ஸ் பண்ணத கோர்ட்டுக்கு வந்து சொல்றதுங்கறது பப்ளிக்கோட கடமைன்னு கூட தெரியாம..... நா சொல்றபடி செஞ்சிட்டு ரியாக்‌ஷன சொல்லுங்க... மீதிய நா பாத்துக்கறேன்.....அடுத்த ஹியரிங் இந்த ரெண்டு பேரோட விட்னஸோடதான் தொடங்கணும்.... அது மட்டும் போறாதுங்க... நா சொல்லிக்குடுத்தா மாதிரி ரெண்டு பேருமே சொல்லல..... அதுக்கு நீங்களும் அந்த தன்ராஜும்தான் பொறுப்பு..... புரியுதுங்களா?'

'புரியுது சார்...' என்ற தன்னுடைய பதிலை கூறி முடிப்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட கையில் அமைதியாகிப் போன ஒலிவாங்கியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார் பெருமாள்.

********

நீதிமன்றத்திலிருந்து நேரே தன் அலுவலகம் திரும்பிய ராஜசேகர் வழக்கு விசாரணைக்கு மீண்டும் நீதிமன்றம் வருவதற்குள் இந்த கொலையில் கோபாலின் பி.ஏ. ராமராஜனின் பங்கு என்ன என்பதை முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

இன்று நீதிமன்றத்தில் தன்னுடைய குறுக்கு விசாரணையில் குட்டுப்பட்ட தன்ராஜும் பிபி வேணுவும் அடுத்த ஹியரிங்கில் இன்னும் பலமான முன்னேற்பாடுகளுடன் நீதிமன்றத்திற்கு வரக்கூடும். குறிப்பாக அரசு வழக்கறிஞர் வேணு அவனை வீழ்த்தவேண்டும் என்ற வெறியுடன் இருப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. அவருக்கு பலமாக இருப்பது அரசுதரப்பில் ஆஜராகவிருந்த PW1 (மாதவி வீட்டின் அடுத்த வீட்டில் குடியிருக்கும் ராகவனின் மனைவியும்) PW2 (மாதவி வீட்டுக்கு எதிரில் இருந்த மாநகராட்சி கார் பார்க்கிங் பணியாள்) மட்டுமே. அவர்களில் ஒருவர் தலைமறைவாகிவிட்டார். அடுத்தவர் மருத்துவமனையில்...... 

இவர்கள் இருவரையுமே போலீஸ் அடுத்த ஹியரிங்கிற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துவிடுவார்கள் என்பது நிச்சயம். தலைமறைவாகியிருந்தவனை பிடிப்பது போலீசுக்கு அத்தனை சிரமமாயிருக்க வாய்ப்பில்லை.... ராகவனின் மனைவி உண்மையிலேயே உடல்நலக் குறைவாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு வந்து செல்ல முடியாத அளவுக்கு உடல்நலம் குன்றியிருக்கவும் வாய்ப்பில்லை.... நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளிக்க பயந்துக்கொண்டுதான் மருத்துவமனையில் தஞ்சமடைந்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.

இந்த சூழலில் இந்த வழக்கிலிருந்து கோபாலை முழுமையாக விடுவிக்க வேண்டுமென்றால் அன்று கொலை நடந்த சம்பவத்தில் கோபால் இருக்கவில்லை என்று நிரூபிக்க.... ராகவன் சில தினங்களுக்கு தன்னிடம் கூறியிருந்ததைப் போல அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்தது முருகேசன்தான் என்பதை இன்னும் ஒரு சாட்சி மூலம் நிரூபிக்க வேண்டும். ஒருவேளை பார்க்கிங்கில் இருந்தவனும்  இதைப் பார்த்திருக்கக் கூடும். ஆகவேதான் பிபி வேணு அவனை பொய் சாட்சியம் அளிக்க வற்புறுத்தியபடி நீதிமன்றத்தில் சொல்வதற்கு தைரியமில்லாமல் தலைமறைவாகியிருக்க வேண்டும்.... போலீஸ் அவனை கண்டுபிடிப்பதற்கு முன்பு நம்மால் அவனை நெருங்க முடிந்தால் ராகவன் சொன்னதை அவனிடம் போட்டுக்காட்டி உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமே என்றும் நினைத்தான். ஆனால் அது நடக்கக் கூடிய காரியமா என்ன? 

அவன் அலுவலகத்தை அடைந்தபோது வசந்த் ஏற்கனவே வந்திருந்து தனக்காக காத்துக்கொண்டிருந்ததைக் கவனித்தான். 'எப்படிறா எனக்கு முன்னால?' என்றான் வியப்புடன்.

வசந்த் சிரித்தான். 'அதான் பாஸ் டூ வீலர்ல இருக்கற சவுகரியம்...... எந்த சந்து புந்துலயும் பூந்து வந்துறலாமே?'

'பாத்துறா..... சந்துல பூர்றேன்னுட்டு எவனையாவது இடிச்சி தள்ளிட்டு மாட்டிக்காத ... அட்லீஸ்ட் இந்த கேஸ் முடியறவரைக்கும் நீ எனக்கு வேணும்' என்றான் ராஜசேகர் சிரித்தவாறு....

வசந்த் முறைத்தான். 'அப்போ இந்த கேஸ் முடிஞ்சதும் எனக்கு என்ன ஆனாலும் பரவால்லை... அதான சொல்ல வறீங்க?'

'இல்லடா..... சும்மா தமாஷ் பண்ணேன்.... ராமருக்கு லட்சுமணன் மாதிரியாச்சே நீ எனக்கு? ஒன்னோட இன்வெஸ்ட்டிகேஷன் ப்ரெய்ன் (brain) மட்டும் இல்லன்னா இந்த கேஸ்ல இந்த அளவுக்குக் கூட நாம வந்துருக்க முடியாதே...? கோபால் மட்டும் இன்னும் கொஞ்சம் கோவாப்பரேட் செஞ்சிருந்தார்னா நல்லாருந்துருக்கும்...... சரி இதுவும் நல்லதுக்குத்தான்.... நாம இன்னும் கொஞ்ச டீப்பா போக முடிஞ்சிதே.....'

'ஆமா பாஸ்....' என்று ஆமோதித்த வசந்த் 'PW1, PW2 பேரையுமே கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணாம அவங்களால என்னத்த ப்ரூஃப் பண்ண முடியும் பாஸ்?' என்று வினவினான். 

'நீ சொல்றது சரிதான்... ஆனா அடுத்த ஹியரிங்குக்கு இன்னும் முழுசா ஒரு வாரம் இருக்கே..... அதுக்குள்ள ரெண்டு பேரையும் கொண்டு வந்துற மாட்டாங்க?'

'மிசஸ் ராகவன வேணும்னா மிரட்டி கிரட்டி கொண்டு வந்துருவாங்க... ஆனா அந்த பையன்? அப்ஸ்காண்டிங்காம?'

'எங்க போயிருவான்...? மிஞ்சிப் போனா அவனோட நேட்டிவ் ப்ளேசுக்கு போயிருப்பான்.... அதத்தானட முக்காவாசி ஆளுங்க செய்யிறாங்க....? நாம பேசிக்கிட்டிருக்கற இந்நேரமே போலீஸ் அவனெ நெருங்கியிருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல....' 

அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே வசந்தின் செல்ஃபோன் ஒரு அழகான இசையுடன் சினுங்க அவன் எடுத்து திரையைப் பார்த்தான். சட்டென்று முகம் பிரகாசமானது. ' நீயா? ஒரு நிமிஷம் அப்படியே லைன்லயே இரு' என்றவாறு ராஜசேகரைப் பார்த்து 'அந்த பார்க்கிங் லாட் பையன் குமார் பாஸ்...! நீங்க சொல்லி முடிக்கல, அதுக்குள்ள அவன் கிட்டருந்து ஃபோன்.... இருங்க ஸ்பீக்கர்ல போடறேன்.' என்று கூறிவிட்டு செல்ஃபோன் ஸ்பீக்கரை ஆன் செய்தான்.' 'சொல்லு... எங்கருந்து பேசறே?' எதிர்முனையிலிருந்து வந்த குரல் அமைதியாக இருந்த அந்த அறையில் தெளிவாகக் கேட்டது.

'சார்.... நா இங்க ராமராஜன் சார் தங்கியிருந்த மேன்ஷலருந்து கூப்டறேன்.... ஒங்கள அர்ஜன்டா பாக்கணும் சார்....'

ராஜசேகர் 'சரின்னு' சொல்லு என்று சைகை காட்டினான். 

'சரிடா.. அதுக்கு முன்னால ஒன்னு. ஒன்னெ போலீஸ் தேடிக்கிட்டு இருக்கு தெரியுமா?'

'என்னையா, எதுக்கு சார்?'

'போன வாரமே அவங்க ஒன்னெ கோர்ட்டுக்கு வரச் சொல்லல?'

'ஆமா சார்... ஆனா என்னெத்தான் இந்த ரூமுக்குள்ளவே அடைச்சி வச்சிட்டாங்களே...?'

'அடைச்சி வச்சிட்டாங்களா, யார், எதுக்கு?'

'சார்... அதெல்லாம் டீட்டெய்லா சொல்றேன்... உடனே நா சொல்ற அட்ரஸுக்கு வாங்க .' அவனுடைய குரலில் இருந்த பதற்றத்தைக் கண்டு ராஜசேகரும் வசந்தும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

' சரி.. இப்பவே வரேன்... மேன்ஷன் பேர மட்டும் சொல்லு.'

அவன் சொன்னதை குறித்துக்கொண்ட வசந்த், 'உங்கூட வேற யார் இருக்கா?'

'எங்கூடையா....? யாரும் இல்ல சார்... ராமராஜன் சார்தான் என்னெ அவர் ரூம்ல அடைச்சி வச்சிருந்தார்.... நா முழிச்சப்போ அவர ரூம்ல காணோம்... ரூம் வெளியில பூட்டியிருந்ததால அடுத்த ரூம்லருக்கறவங்களுக்கு கேக்கறாமாதிரி சத்தம் போட்டேன்.... அதுக்கப்புறந்தான் மேன்சன் ஆளுங்க வந்து என்னெ திறந்துவிட்டாங்க. எனக்கு வெளியில வர்றதுக்கு பயமாருக்கறதாலதான் மேன்சன் மேனேஜர் ரூம்லருந்து கூப்டறேன்....ஆஃபனவர்குள்ள வந்துருவீங்களா?'

வசந்த் ராஜசேகரைப் பார்த்தான். அவன் சரி என்று தலையை அசைக்க, 'சரி.. வரேன்...' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான். 

'டேய்... நீ தனியா போவேணாம்.... இதுல என்னவோ இருக்கு..... ஒன்னையோ இல்ல என்னையோ அங்க வர வைக்கிற ப்ளானா இருக்கும்....' என்ற ராஜசேகர் சிறிது நேரம் யோசித்தான். பிறகு, 'போலீஸ்ல சொல்லிறலாமா?' என்றான். 

'போலீஸ்னா.... அந்த தன்ராஜ் கிட்டயா? அவரத்தான் இன்னைக்கி பிரிச்சி மேஞ்சிட்டீங்களே பாஸ்? அந்த கடுப்புல இப்ப கூப்ட்டா என்னய்யா நக்கல் பண்றீங்களாம்பார்.....  இன்ஸ்பெக்டர் பெருமாளையும் கூப்ட முடியாது. அவர் தானெ பிபி சொன்னார்னுட்டு இவனெ ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி மிரட்டி அனுப்புனாரு....? அவர்கிட்ட போயி இந்த கொலைக்கி கோபால் காரணம் இல்லன்னு நாம சொன்னாலும் நம்ப மாட்டார்..... அவருக்கு எப்படியாவது இந்த கேஸ க்ளோஸ் பண்ணா போதும்.... அதுல பனிஷ் ஆவறது கோபாலா இருந்தா ரெண்டு விட்னசையும் நா மிரட்டி வச்சதாலத்தான் கோபால போட்டுக்குடுத்தாங்கன்னு பிபிகிட்ட நல்ல பேரு வாங்கிப்பார்... பிபி? இதுக்கு ஐடியா குடுத்ததே நாந்தானேய்யாம்பார்..... அதனால இந்த மூனு பேரும் நமக்கு ஹெல்புக்கு வரமாட்டாங்க....'

அவன் சொல்வதும் உண்மைதான் என்று நினைத்தான் ராஜசேகர். பிபி வேணுவுக்கும் கோபாலுக்கும் இடையில் இருந்த முன்விரோதம்தான் இந்த வழக்கு திசைமாறிச் செல்ல காரணம் என்பதும் அவனுக்கு தெரியும். முதல் மனைவி கொலை வழக்கின் கட்டுகளை ராகவாச்சாரியின் வீட்டில் படித்திருந்ததால்தான் அதே பாணியில் க்ரைம் சீன் விசாரணை அதிகாரியை வேண்டுமென்றே கோர்ட்டில் வைத்து துளைத்து எடுத்திருந்தான்.... 'ட்ரையல் விசாரணக்கு வர்ற ஃபர்ஸ்ட் டேயிலயே ஜட்ஜோட அட்டென்ஷன நம்ம பக்கம் திருப்பிறணும்.... அதுக்கு நம்ம கையில மாட்டற ஃபர்ஸ்ட் விட்னஸ்... அது யாரா இருந்தாலும்.... க்ராஸ்ல பிச்சி பீஸ், பீஸ் ஆக்கிறணும்.... அது கேசுக்கு யூஸ் ஆவுதோ இல்லையோ ஜட்ஜ் இம்ப்ரஸ் ஆயிருவார்.....' என்று ராகவாச்சாரி case bundleன் முதல் பக்கத்தில் strategy pointsஎன்று எழுதி வைத்திருந்ததை அவன் பார்த்திராவிட்டால் இந்த அளவுக்கு தன்ராஜை வறுத்தெடுத்திருக்க மாட்டான். அந்த முதல் வழக்கிலும் வேணு அவருடைய opening statement முடிந்ததும் முதலில் விசாரணைக்கு அழைத்தது க்ரைம் சீனை விசிட் செய்திருந்த காவல்துறை அதிகாரியைத்தான்... அது வேணுவின் strategy போலிருக்கிறது..... அவரை ராகவாச்சாரி கிராசில் வறுத்தெடுத்திருந்தார். அதிலேயே கேஸ் விழுந்துவிட்டிருந்தது.....

'என்ன பாஸ்.... என்ன யோசனை?'

தொடரும்...

10 கருத்துகள்:

  1. உங்கள் தளத்திற்கு முதல் வருகை தருகிறேன் ஐயா..கதை நன்றாக உள்ளது,,தொடர்ந்து உங்களைத் தொடரவிரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு

  2. கலியபெருமாள் புதுச்சேரி said...
    உங்கள் தளத்திற்கு முதல் வருகை தருகிறேன் ஐயா..கதை நன்றாக உள்ளது,,தொடர்ந்து உங்களைத் தொடரவிரும்புகிறேன்.//

    வாங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    தொடர்ந்து வாங்க.

    பதிலளிநீக்கு

  3. // நீ தனியா போவேணாம்.... இதுல என்னவோ இருக்கு..... ஒன்னையோ இல்ல என்னையோ அங்க வர வைக்கிற ப்ளானா இருக்கும்....'//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அனேகமாக வசந்த் அங்கு போகமாட்டார் என நினைக்கிறேன். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

    பதிலளிநீக்கு
  4. முருகேசன் ராமராஜன் இருவரில் சூத்திரதாரி யார்.? நல்ல விறு விறுப்பு. தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. //நா சொல்லிக்குடுத்தா மாதிரி ரெண்டு பேருமே சொல்லல..... அதுக்கு நீங்களும் அந்த தன்ராஜும்தான் பொறுப்பு..... புரியுதுங்களா?'//

    Here, whenever we talk to any organisation, there will be an automated message saying that this conversation is going to be recorded. I wish there should be such facilities in the police and other Govt departments. Of course, normally it would be used against the common public there. But, it can be used against, some corrupt officials too. Waiting for the next episode. Thanks.

    பதிலளிநீக்கு

  6. வே.நடனசபாபதி said...

    // நீ தனியா போவேணாம்.... இதுல என்னவோ இருக்கு..... ஒன்னையோ இல்ல என்னையோ அங்க வர வைக்கிற ப்ளானா இருக்கும்....'//

    நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அனேகமாக வசந்த் அங்கு போகமாட்டார் என நினைக்கிறேன். பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.


    7:43 PM

    பதிலளிநீக்கு

  7. G.M Balasubramaniam said...
    முருகேசன் ராமராஜன் இருவரில் சூத்திரதாரி யார்.? நல்ல விறு விறுப்பு. தொடர்கிறேன்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  8. Packirisamy N said...
    //நா சொல்லிக்குடுத்தா மாதிரி ரெண்டு பேருமே சொல்லல..... அதுக்கு நீங்களும் அந்த தன்ராஜும்தான் பொறுப்பு..... புரியுதுங்களா?'//

    Here, whenever we talk to any organisation, there will be an automated message saying that this conversation is going to be recorded. I wish there should be such facilities in the police and other Govt departments. Of course, normally it would be used against the common public there. But, it can be used against, some corrupt officials too. Waiting for the next episode. //

    You are right. Even if such an idea is mooted everyone in the dept. would see that it is defeated.

    Thanks for your visit and the comment.

    பதிலளிநீக்கு
  9. சார்! ஏற்கனவே கதை எழுதி இருக்கீங்களா? முதல் கதையா? முதல் மாதிரி தெரியல. கலக்கறீங்க

    பதிலளிநீக்கு
  10. T.N.MURALIDHARAN said...
    சார்! ஏற்கனவே கதை எழுதி இருக்கீங்களா? முதல் கதையா? முதல் மாதிரி தெரியல. கலக்கறீங்க//

    நன்றிங்க. க்ரைம் தொடர் இதுதான் முதல் தடவை. கதைகள் எழுதியிருக்கேன்.
    http://enkathaiulagam.blogspot.com போய் பாருங்க, நேரம் கிடைக்கறப்போ.

    பதிலளிநீக்கு