21 மே 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 60

மத்திய ஆய்வுக் குழுவின் இறுதியறிக்கையின் நகலை என்னுடைய நண்பருக்கு அனுப்பி அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமீறல்களுக்கு அவரிடன் விளக்கம் கேட்டபோதுதான் தெரிந்தது அவருடைய பிரச்சினையின் தீவிரம்.

ஆய்வு அறிக்கையின்படி

1. என்னுடைய நண்பர் வழங்கியிருந்த அளவு எண்ணிக்கையில் கடன் வழங்க ஒரு வட்டார மேலாளருக்கே அதிகாரமில்லை. ஆகவே என்னுடைய நண்பர் வழங்கியிருந்த கடன்கள் அனைத்துமே நியதிக்கு மீறியவை.

2. மாத ஊதிய சான்றிதழை வழங்கவோ அல்லது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுடைய ஊதியத்திலிருந்து மாதத் தவணைகளைப் பிடித்தம் செய்யவோ பள்ளி தலைமையாசிரியருக்கு அதிகாரம் இருக்கவில்லை. சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிக்கே அந்த அதிகாரம் இருந்தது. ஆனால் அத்தகைய சான்றிதழை வழங்கிய விவரமே தங்களுக்கு தெரியாது என்று எல்லா நிர்வாகிகளுமே ஆய்வுக் குழுவிடம் தெரிவித்ததாக அறிக்கை கூறியது.

3. கடன் பெற்றவர்கள் தங்களுடைய பங்குக்கு செலுத்த வேண்டிய மார்ஜின் தொகையை சாதனங்களை விற்பனை செய்த டீலரே வங்கியில் செலுத்தியிருந்தார்.

4. டீலருக்கு சாதனங்களின் தொகையை வங்கி காசோலையாக வழங்க வேண்டும் என்பது நியதி. ஆனால் எங்களுடைய கிளையிலேயே டீலரை கணக்கு துவக்க அனுமதித்து கடன் தொகையை வரவு (credit) செய்திருந்தார் என்னுடைய நண்பர். பிறகு அதிலிருந்து மொத்த தொகையையும் ரொக்கமாக எடுக்க அனுமதித்திருக்கிறார். இதன் மூலம் கடன் தொகையின் உபயோகத்தை (end use of the loans) கிளை மேலாளர் உறுதி செய்யவில்லை. அத்துடன் வங்கியிலிருந்து கடன் பெற்றிருந்த சிலருக்கு கணக்கிலிருந்து காசோலை (cash cheque) வழங்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடைய வீடுகளை சென்று பார்த்ததில் கடன் வழங்கப்பட்ட சாதனங்களை அவர்கள் வாங்கவேயில்லையென்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

5. கடன் பெற்றிருந்த பலரும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த விலாசத்தில் வசிக்கவில்லை.

அதாவது ஒரு கடனை வழங்க தேவையான அடிப்படை விதிகளைக்கூட மேலாளர் கடைபிடிக்கவில்லையென்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த லட்சணத்தில் இருநூறு கடன்களை வழங்கியிருந்தார்!

அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றசாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவருடைய விளக்கம் திருப்தியளிக்காத பட்சத்தில் அவர்மீது விசாரனை நடத்தப்படும் என்று கூறியிருந்தது.

சாதாரணமாக இவ்வாறு விளக்கம் கோரி கடிதம் வரும்போது பாதிக்கப்பட்ட அதிகாரிகள் தங்களுடைய தொழிற்சங்கத்தை அணுகுவது வழக்கம். தொழிற்சங்கத்தில் இதற்கெனவே சில அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் இருப்பார்கள். வேண்டுமென்றே ஊழல் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் இயங்கும் உறுப்பினர்களைத் தவிர மற்றெல்லா உறுப்பினர்களுக்கும் இத்தகைய சமயங்களில் உதவுவதற்கு இவர்கள் தயாராக இருப்பார்கள்.

என்னுடைய நண்பர் நிச்சயம் ஊழலில் ஈடுபடுபவர் அல்ல. அவருடைய நோக்கம் கிளையின் வணிகத்தை கூட்டுவது மட்டுமே என்று அனைவருக்கும் தெரிந்திருந்தது. அதாவது அவரை நன்றாக தெரிந்திருந்தவர்களுக்கு. ஆகவே என்னுடைய அலுவலகத்திலிருந்த பலரும் அவரை தொழிற்சங்கத்தை அணுகும்படி கேட்டனர்.

ஆனால் என்னுடைய நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை. 'எதுக்கு? நா செஞ்சிருக்கற தப்புன்னுதான் எனக்கே தெரியுதே? ஆனா தப்பான நோக்கத்தோட செய்யலேன்னு எக்ஸ்ப்ளெய்ன் செஞ்சிட்டுப் போறேன்?' என்றார் கூலாக. அவர் சரியான வெகுளி என்பது அப்போதுதான் எனக்கு தெரிந்தது.

சாதாரணமாக நாம் தவறே செய்திருந்தாலும் விசாரனை என்று வந்தால் அதை மறுப்பதுதான் வழக்கம். விசாரனைக்கு உத்தரவிடப்பட்டால் நாமே நமக்காக வாதாடுவதற்குப் பதிலாக தொழிற்சங்க இதில் முன் அனுபவம் உள்ள இத்தகைய அதிகாரிகள் நமக்காக வாதாடுவார்கள்.

அதையும் மீறி நாம் செய்தது தவறுதான் என்பது விசாரனையில் கண்டுபிடிக்கப்பட்டாலும் விசாரணை அதிகாரிக்கு தண்டனை வழங்கும் அதிகாரம் இல்லை. அதற்கு வேறொரு அதிகார் இருப்பார். விசாரனை நியாயமாகவும் பாரபட்சமில்லாமலும் நடத்தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதுடன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தன்னுடைய குற்றத்தை மறுத்துப் பேச போதிய சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டதற்குப் பிறகு வங்கியின் நியதிகளின்படி இன்ன தண்டனை வழங்கலாம் என்று தீர்மானிப்பார்.

ஆனால் அவருடைய தீர்ப்பை எதிர்த்து முறையிட ஒரு மேலதிகாரி நியமிக்கப்பட்டிருப்பார். இவற்றையெல்லாம் கடந்து வங்கியின் இயக்குனர் குழுவிடமும் முறையீடு செய்ய வாய்ப்புண்டு.

ஆனால் இதற்கு தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சம்பந்தப்பட்டவர் மறுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தான் செய்த தவறுகளை விளக்கம் கோரும் சமயத்திலேயே ஒப்புக்கொண்டுவிட்டால் பிறகு விசாரனைக்கே தேவையில்லாமல் போய்விடும். பிறகு விதிக்கப்படும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பில்லாமல் போய்விடும்.

தங்களுடைய வாதத் திறமையால் விசாரனையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட பல அதிகாரிகளும் அதிலிருந்து தப்பித்ததை நான் கண்டிருக்கிறேன். குற்றச்சாட்டிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்படாவிட்டாலும் குற்றச்சாட்டுகளின் தீவிரம் குறைந்துவிடுவதையும் கண்டிருக்கிறேன். ஆகவே பல அதிகாரிகளும் தங்களுடைய தொழிற்சங்கத்தை விளக்கம் கேட்கப்படும் நிலையிலேயே அணுகுவது வழக்கம்.

ஆகவேதான் என்னுடைய நண்பரும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அத்துடன் என்னுடைய அலுவலகத்திலேயே எங்களுடைய தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர்களுள் ஒருவரும் பணியாற்றிக்கொண்டிருந்ததால் இதற்கென்று கேரளா செல்ல வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. மேலும் அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்களுள் ஒருவராகவும் இருந்தார். அவருக்கு இதுபோன்ற பல விளக்கக் கடிதங்களுக்கு பதிலளித்த அனுபவமும் இருந்தது. பல இளம் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டிருந்த வீண் பழிகளிலிருந்து மீட்டவர் அவர். மீட்க முடியாமல் போன சமயங்களில் அவர்களுடைய தண்டனையைக் குறைக்க வேண்டி இயக்குனர் குழு வரையிலும் மேல் முறையீடு செய்த அனுபவம் இருந்தது.

ஆனால் என்ன சொல்லியும் என்னுடைய நண்பர் மசிவதாயில்லை. 'என்னைய பொருத்தவரைக்கும் நா ச்செஞ்சது தப்புன்னு தெரியுது டிபிஆர். நா லோன் குடுத்த விஷயம் எங்க ரீஜினல் மேனேஜருக்கும் தெரியும். அதனால நா எந்த தப்பும் ச்செய்யலன்னு சொல்லி மறுபடியும் ஒரு தப்ப ச்செய்ய நா விரும்பல. என்னைய விட்டுருங்க... கடவுள் சித்தப்படி நடக்கட்டும்.'

அவர் கடன்களை வழங்கிய விஷயம் தன்னுடைய வட்டார மேலாளருக்கு தெரியும் என்று கூறினாலும் சம்பந்தப்பட்ட வட்டார மேலாளர் தனக்கு என்னுடைய நண்பர் இதைக்குறித்து எந்த தகவலும் எழுத்து மூலமாக தரவில்லை என்று ஏற்கனவே என்னுடைய தலைமையகத்துக்கு தெரிவித்திருப்பதாக என்னுடைய தொழிற்சங்க நண்பர் என்னிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அதையும் என்னுடைய நண்பரிடன் கூறி, 'இங்க பாருங்க சார். நீங்க லோன் குடுத்த விஷயம் எனக்கு தெரியும்னு அவர் சொன்னா நிச்சயம் அவர் மாட்டிக்குவார். ஏன்னா அவருக்கே இவ்வளவு பேருக்கு லோன் குடுக்கறதுக்கு அதிகாரம் இல்லை. அதனால அவர் நிச்சயம் ஒங்கள டிஃபென்சுக்கு வரப் போறதில்லை.' என்றேன். ஆனால் அவரோ, 'அவர் அப்படி ச்சொல்லியிருந்தா அவரெ கடவுள் பாத்துக்குவாருங்க.' என்றார் ஒரு பாதிரியாரைப் போல.

மாலைப் பொழுதுகளில் பாதிரியாரைப் போன்று வீட்டிலேயே பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்தான் அவர். இன்றும் பிரபலமாக இருக்கும் சி.எஸ்.ஐ. போதகர் ஒருவரின் பரம சிஷ்யர் என்பதால் அவருடைய பேச்சிலும் பாட்டிலும் அந்த சாயல் மிகத் தெளிவாகவே இருந்தது.

ஆனால் நடைமுறை வாழ்க்கையின் நிதர்சனத்தை உணராத மனிதர். நான் எவ்வளவு வற்புறுத்தியும் கேளாமல் அவருக்கு விளக்கம் கேட்டு வந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அனைத்து விதிமீறல்களையும் ஒப்புக்கொண்டதுடன் இனி இத்தகைய தவற்றை செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன் என்றும் எழுதி அனுப்பிவிட்டார்.

தொடரும்…

4 கருத்துகள்:

  1. தவறாகக் கடன் கொடுத்தது மட்டுமின்றி விசாரணையைத் தவறான
    கோணத்திலும் அணுகுகின்றார்....
    இதையெல்லாம் ஆண்டவனாலும்
    காப்பாற்ற இயலாது

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜி!

    இதையெல்லாம் ஆண்டவனாலும்
    காப்பாற்ற இயலாது //

    கரெக்ட்... ஆண்டவனே என்க்வயரி ஆஃபீசராருந்தாலும் ஒன்னும் செஞ்சிர முடியாது...:-)

    பதிலளிநீக்கு
  3. Saarvaal,

    avarah paartha vadivelu sollarah madhiri

    Rombha nallavara irukarunu sollathonudhu...

    Unmaiya vendiya nerathula unmaiya sollanum, same like that oru Unmaiya oru nalladhukaga maraichu sollaradhula thappum ellai. [Idha thaan avar aandavan paarthupaarnu sollitaar], Aandavan paarthupaan sari, Avaroda visarainaila vara thandanaiku avaroda family thaneh kashtapadapogudhu (if its like temporary suspension)...Kastamthaan...

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஆணி,

    Avaroda visarainaila vara thandanaiku avaroda family thaneh kashtapadapogudhu //

    உண்மைதாங்க.. அத அவர் புரிஞ்சிக்கவே இல்லை.. அவரோட மனைவியும் ரொம்பவும் சாது. கணவன் சொல்லே மந்திரம் என்று நினைப்பவர்.

    பதிலளிநீக்கு