29 செப்டம்பர் 2006

திரும்பிப் பார்க்கிறேன் நிறைவுப் பதிவு

அடுத்த ஒரு வாரத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை.

சரி.. அமைச்சர் அந்த விஷயத்தை மறந்திருப்பார் என்று நினைத்தேன்..

அதுதான் இல்லை.

சரியாக பத்து நாட்கள் கழித்து என்னுடைய வங்கி முதல்வருடைய காரியதரிசியிடமிருந்து தொலைப்பேசி வந்தது.

‘சேர்மன் ஒங்கள ஒடனே அவருடைய பெர்சனல் ஃபோன்ல கூப்பிட சொல்றார் சார், அவசரமாம்.’

சரி.. ஏதோ டோஸ் விழப்போகிறது என்ற படபடப்புடன் என்னுடைய வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு என்னுடைய அறையில் அமர்ந்திருந்த ஒரு வாடிக்கையாளரை, ‘சார்.. தப்பா நினைச்சிக்காதீங்க.. ஒரு ரெண்டு நிமிஷம் வெளியில் வெய்ட் பண்ணுங்க.. சேர்மன்கிட்ட பேசணும்..’ என்று அனுப்பிவிட்டு அவருடைய பிரத்தியேக எண்ணை சுழற்றினேன்.

மறுமுனையில் எடுத்ததுமே அவர் உரக்க சிரிக்க என்ன ஏது என்று விளங்காமல் திகைத்துப்போனேன்.. ‘என்ன டிபிஆர். நீங்க மதுரையில சேர்ந்ததிலருந்து உங்களுக்கு எதிரா வர்ற மூனாவது கம்ப்ளெய்ண்ட் இது.. முதல் ரெண்டையும் சமாளிச்சேன்.. ஆனா இத என்னாலயே சமாளிக்க முடியல டிபிஆர். I may have to take action against you.’ என்றார் தொடர்ந்து..

நான் எப்படி பதிலளிப்பதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்..

‘என்ன டிபிஆர் ஷாக்காயிட்டீங்களா? ஒங்கள அங்க போடச் சொன்னதே நாந்தான். ஒரு வருஷத்திலயே சரியாக்கிருவீங்கன்னு நான் எதிர்பாக்கல.. ஆனா செஞ்சிட்டீங்க.. குட்.. அதனால.. ஒங்க மேல சிவியரா ஆக்ஷன் எடுக்க மனசு வரல.. ஆனாலும்.. எடுக்காமயும் இருக்க முடியாது.. என்ன சொல்றீங்க.. என்ன செய்யலாம்.. நீங்களே சொல்லுங்க..’

என்னடா இது டார்ச்சர்.. என்னெ என்ன செய்யலாம்னு என்னையே கேட்டா..?

‘ஒங்கள ஊர விட்டு உடனே மாத்தியாகணும் டிபிஆர்.. Tell me where do you want to go?’

நான் உடனே ‘மெட்றாசுக்கு போறேன் சார்.’ என்றேன்.

அவர் மீண்டும் உரக்க சிரித்தார். ‘ஒக்கே க்ராண்டட்.. ஆனா மேனேஜரா போமுடியாதே..’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. ஊர் மாற்றம் நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் மேனேஜர் பதவி பறிபோகும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. சரி.. என்னதான் சொல்கிறார் பார்ப்போமே என்று காத்திருந்தேன்..

‘நான் ஒங்கள மெட்றாஸ் ஜோனல் ஆஃபீஸ்ல டெஸ்க் ஆஃபீசரா கொஞ்ச நாளைக்கு போடலாம்னு இருக்கேன் டிபிஆர். மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.. But you should have known whom you are talking to.. After all he is a Central Minister!’

நான் அதிர்ச்சியில் பதில் பேசாமல் அமர்ந்திருந்தேன்..

‘But don’t lose heart.. I will not deprive you of the perks you are enjoying now.. Be there for a year.. Let me see.. All the best.’

இணைப்பு துண்டிக்கப்பட்டு அமைதியாகிப் போக நான் ஒலிவாங்கியை அதன் இடத்தில் வைத்துவிட்டு சற்று நேரம் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் அமர்ந்திருந்தேன்.

நான் வாடிக்கையாளரை வெளியே அனுப்பிவிட்டு தொலைபேசியில் பேசுவதைக் கவனித்த என்னுடைய உதவி மேலாளர் என்னுடைய முகத்தில் அப்பட்டமாக தெரிந்த அதிர்ச்சியைக் கண்டதும் ஓடி வந்தார். ‘என்ன சார்.. ஏதும் பிரச்சினையா?’

நான் பதிலளிக்காமல் ஆமாம் என்று தலையை அசைத்துவிட்டு சற்று முன் வெளியே அனுப்பிய வாடிக்கையாளரை மீண்டும் உள்ளே அழைத்து அவருக்கு தேவையான தங்க நகைக் கடனை கொடுத்து அனுப்பி வைத்தேன்.

அதற்கு மேலும் அலுவலகத்தில் அமர்ந்திருக்க மனமில்லாமல் எழுந்து என்னுடைய உதவி மேலாளரிடம் கூறிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினேன்.

என்னை அந்த நேரத்தில் எதிர்பார்க்காத மனைவி, ‘என்னங்க இந்த நேரத்துல? எதையாச்சும் மறந்துட்டீங்களா?’ என அவரை அமரச் செய்து நடந்தை முழுவதும் கூறி இன்னும் ஒரு வாரத்திற்குள் பயணமாக வேண்டும் என்று கூறினேன்.

நான் எதிர்பார்த்ததற்கும் எளிதாகவே என்னுடைய மனைவி அந்த அதிர்ச்சியை ஏற்றுக்கொண்டார். ‘பரவால்லீங்க.. என்ன இப்போ? மேனேஜர் பதவிதான் வேணும்னு இருக்கா என்ன? பேசாம கொஞ்ச நாளைக்கு எந்த டென்ஷனும் இல்லாம இருப்போம். அப்புறம் பாத்துக்கலாம். நீங்க எதுக்கும் கவலப் படாதீங்க.’ என்றார் ஆறுதலாக..

நான் எதிர்பார்த்திருந்ததற்கும் விரைவாகவே உத்தரவு வர
என்னுடைய மேலாளர் பதவி Phase I ஆறாண்டுக் காலத்துடன் முடிவுக்கு வந்தது..

****

இந்த தொடரின் 201வது பதிவுடன் என்னுடைய தொடரின் முதல் பகுதி முடிவுக்கு வருகிறது.

நான் சென்னை வட்டார அலுவலகத்தில் சுமார் ஓராண்டுக் காலம் பணியாற்றினேன்..

வங்கிக் கிளைகளில் மேலாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு வட்டார அலுவலகத்தில் சிறப்பாகப் பணியாற்ற துணையாயிருந்தது.

ஆனாலும் கிளைகளில் இருந்த பரபரப்பு, வித விதமான வாடிக்கையாளர்களை சந்தித்த சுவாரஸ்யம் ஏதும் இல்லாமல் வாழ்க்கையே டல்லடித்துப் போனது.

பதவி பறிபோனதன் காரணத்தை என்னுடைய பெற்றோர்களுக்கு புரிய வைக்க முடிந்தது.. ஆனால் என்னுடைய மாமனார் வீட்டினரையும் என்னுடைய நண்பர்களையும் என்னால் சமாளிக்க முடியவில்லை..

முக்கியமாக என்னுடைய மனைவியின் குடும்பத்தார் முன்னிலையின் என்னுடைய மதிப்பு குறைந்துப் போனதென்னவோ உண்மை..

ஆனால் என்னுடைய வங்கியின் அப்போதைய முதல்வர் என்னை மறந்துவிடவில்லை. அடுத்த பத்தே மாதத்தில் என்னை மீண்டும் சென்னைக் கிளைகளில் ஒன்றில் மேலாளராக ஆக்கினார்..

அதைப்பற்றி அடுத்த பகுதியில்..

*******

என்னுடைய தொடரை தினமும் படித்து, பின்னூட்டம் இட்டு என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..

சுமார் ஒரு மாத காலத்திற்கு இடைவெளி விட்டு மீண்டும் சென்னையில் மேலாளராக இருந்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்கிறேன்..

நன்றி, வணக்கம்..

***



21 கருத்துகள்:

  1. தலைப்பு சற்றே நீண்டுவிட்டதால் பின்னூட்டம் போட வருகிறதா என்பதற்கான டெஸ்ட்..

    பதிலளிநீக்கு
  2. பல அரசியல்வாதிகள் நிஜத்தில் நாட்டை பிடித்துள்ள அரசியல்வியாதிகள் என்பது சரிதான். ஒரு மாத இடைவெளிக்கு பின் மீண்டும் திரும்பிப்பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  3. 'பூசாரி' சாமியாடிட்டாருன்னு சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  4. விடுங்க, திரு ஜோசப்
    நடந்தது,நடப்பது & நடக்கப்போவது எல்லாம் நல்லதுக்கு என்று எடுத்துக்கொண்டு வாழ்வோம்.
    மிக அருமையான தொடர்.
    மேலும் பல நிகழ்வுகளை எழுதவும்.

    பதிலளிநீக்கு
  5. சரி அந்தப் பத்து மாசம் ஒரு ரிலாக்ஸ் செய்யறதுக்கு விட்டதுன்னு
    எடுத்துக்கணும்.

    அருமையான தொடரைக் கொடுத்தீங்க.

    நவம்பர் முதல் தேதிக்கு காத்திருக்கோம்:-)

    பதிலளிநீக்கு
  6. ஜோசப் சார்...முதல் பாகம்தான் நிறைவு பெறுகிறது என்று தெரியும் பொழுது ஒரு நிம்மதி. :-)

    அரசியல்வாதி ஒருவர் கையூட்டு வாங்க மறுத்த என்னுடைய தந்தையை எப்படி அலைக்கழித்தார் என்று நான் அறிவேன். என்னுடைய தந்தையார் பணியில் சேரும் பொழுதே....அரசாங்கப் பணியல்லவா....ஆகையால் ஆர்டர் வேண்டுமென்றால் காருக்கு டயர் வாங்கிக் குடு என்று அமைச்சர் கேட்டாராம். முடியாத குடும்பம். எப்படியோ எங்கேயோ பெரட்டி உருட்டி ஒப்பேத்தியிருக்கிறார்கள். இதில் டயர் கேட்டவரும் அலைக்கழித்தவரும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கும் எதிரிக் கட்சிகள் அவர்கள் சார்ந்த கட்சிகள்.

    அன்றைக்கு நீங்கள் பட்ட மனவேதனை எனக்குப் புரிகிறது. மறப்போம். மன்னிப்போம்.

    பதிலளிநீக்கு
  7. அந்த லோன் மேலா உங்களை தனிப்பட்டு தாக்கியிருக்கிறது என்று தெரிந்து அதிர்ந்தேன். ஆனால், இதெல்லாம் ஒரு நல்லதுக்குதான் என்பதே காலம் காட்டும் உண்மை. என் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

    மிகச்சிறந்த ஒரு வலைப்பூ பதிவுகளை தந்திருக்கிறீர்கள். இதற்கு வாழ்த்துக்கள். முஷரப் மாதிரி புரட்டு எழுதி ஆயிரம் ரூபாய் புத்தகத்து செலவு வைக்காமல் ஓசியில் உங்கள் அனுபவத்தை பிழிந்து எங்களுக்கு சுவைக்க சுவைக்க கொடுத்ததை நான் மனமார பாராட்டுகிறேன்.

    ஒரு மாதம் திரும்பிப்பார்க்கிறேன் ஓய்ந்தால் வேறு பதிவுகளில் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    வணக்கம். நன்றி

    பதிலளிநீக்கு
  8. முதல்ல, அட்டகாசமான இரட்டை சதத்திற்கு பிடியுங்கள் வாழ்த்தை. ஒவ்வொரு நாளும் எப்பொழுது பதிவு வருமென எதிர்பார்க்க வைத்தது, அந்த அனுபவம் நுகர்தலின் சுகமா, அருமையாய் எளிய தமிழில் தந்த உங்களின் எழுத்தின் ஈர்ப்பா, மனிதர்களை (அலுவலக, குடும்ப மற்றும் நண்பர்கள்) அணுக வேண்டிய முறைகளைப் பற்றி சொல்லித் தந்த பட்டறிவின் பகிர்தலா...

    நன்றாக ஓய்வெடுத்துவிட்டு நவம்வர் ஒன்றாம் தேதி duty join பண்ண வேண்டும். விடுமுறை நீட்டிப்பெல்லாம் கிடையாது, இப்போதே சொல்லிவிட்டோம்...

    சூரியனுக்கு இப்போதைக்கு விடுமுறை தர முடியாது, மன்னிக்கவும்..

    (எந்த வேளையில், 187வது பதிவில், என்ன சார் 200-ஐ தொட மனசில்லையா எனக் கேட்டேனோ, 200-ஐ தொட ஏகப்பட்ட தடங்கல் வந்துவிட்டதே...உடல்நிலையும், மனநிலையும் பழைய நிலைக்கு திரும்பிவிட்டதுதானே?)

    பதிலளிநீக்கு
  9. ***********************************மாடமாளிகையிலிருந்து மன்குடிசையைத் திரும்பிப் பார்த்தான்,
    சித்தார்த்தன்;புத்தன் ஆனான்!"--
    'திரும்பிப்பார்' வசனம்:கலைஞர்
    ***********************************
    2 சதம்-பெரிய சாதனை;பாராட்டுகள்
    அடுத்த பாகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
    நல்ல ஒய்வு எடுத்த பின்னர் தொடங்கவும்

    பதிலளிநீக்கு
  10. நிறைவான பதிவு டிபிஆர். இது ஒரு தற்காலிக நுறுத்தமே என அறிய மகிழ்ச்சி.

    அரசியல்வாதிகளின் தலையீடு நிர்வாகங்களை எவ்வாறு எல்லாம் அலைக்கழிக்கிறது :(( இப்போது கூட அரசுஅதிகாரிகளை சுதந்திரமாக இயங்க அமைப்பு உருவாக்கப் பட இருப்பதாக செய்தி படித்தேன்.

    மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் சட்டசபை மற்றும் அமைச்சரவை, அவற்றின் ஆணைகளை நிறைவேற்றும் அரசு இயந்திரம், இவர்களின் செயல்பாட்டை கண்காணிக்கும் நீதித்துறை என தம்தம் கடமைகளை சுதந்திரமாக செயலாக்கும் நாளும் வருமா ?

    நவம்பர் 1 இல் காணலாமா ?

    பதிலளிநீக்கு
  11. வாங்க அருண்மொழி,

    நாட்டை பிடித்துள்ள அரசியல்வியாதிகள் என்பது சரிதான். //

    உண்மைதாங்க.. எனக்கு நடந்தது இருபது வருசத்துக்கு முன்னால.. ஆனா இப்பவும் அந்த மாதிரி விஷயங்கள் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு..

    பதிலளிநீக்கு
  12. வாங்க குமார்,

    நடந்தது,நடப்பது & நடக்கப்போவது எல்லாம் நல்லதுக்கு என்று எடுத்துக்கொண்டு வாழ்வோம்.//

    இதுதான் சரியான அணுகுமுறை.. நம் கையில் இல்லாத விஷயங்களைக் குறித்து அதிகம் வருத்தப் பட்டு பலனில்லை..

    பதிலளிநீக்கு
  13. வாங்க துளசி,

    சரி அந்தப் பத்து மாசம் ஒரு ரிலாக்ஸ் செய்யறதுக்கு விட்டதுன்னு
    எடுத்துக்கணும். //

    ஆமாங்க.. அப்படித்தான் என் மனைவியும் சொன்னாங்க.. அவங்கள மாதிரி மனைவி கிடைக்கப்பெற்றது நான் செஞ்ச புண்ணியம்னு நினைக்கேன்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ராகவன்,

    அரசியல்வாதி ஒருவர் கையூட்டு வாங்க மறுத்த என்னுடைய தந்தையை எப்படி அலைக்கழித்தார் என்று நான் அறிவேன். என்னுடைய தந்தையார் பணியில் சேரும் பொழுதே....அரசாங்கப் பணியல்லவா....ஆகையால் ஆர்டர் வேண்டுமென்றால் காருக்கு டயர் வாங்கிக் குடு..//

    என்ன அக்கிரமம் பாருங்க.. இந்த மாதிரி ஆளுங்கள அந்த டயராலயே நாலு மொத்து, மொத்தணும்..

    மறப்போம். மன்னிப்போம்.//

    நம்மால வேற என்ன செய்ய முடியும்..

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஜயராமன்,

    ஆனால், இதெல்லாம் ஒரு நல்லதுக்குதான் என்பதே காலம் காட்டும் உண்மை. என் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். //

    நூத்துக்கு நூறு உண்மைங்க..

    ஓய்ந்தால் வேறு பதிவுகளில் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.//

    வாரம் ஒரு ரெண்டு பதிவாவது எழுதலாம்னு இருக்கேன்..

    பார்க்கலாம்..

    பதிலளிநீக்கு
  16. வாங்க கிருஷ்ணா,

    விடுமுறை நீட்டிப்பெல்லாம் கிடையாது, இப்போதே சொல்லிவிட்டோம்...//

    சரிங்க.. அப்படியே:)

    சூரியனுக்கு இப்போதைக்கு விடுமுறை தர முடியாது, மன்னிக்கவும்..//

    நா கேக்கலையே.. அது பாட்டுக்கு வரும்.. வாரம் மூனு தடவை..

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஜி!

    அடுத்த பாகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்//

    சீக்கிரம் வந்துடறேன்:)

    நல்ல ஒய்வு எடுத்த பின்னர் தொடங்கவும் //

    நிச்சயமா..


    உங்கள் எல்லோருக்கும் என மனமார்ந்த நன்றிகள்..

    மீண்டும் சந்திப்போம்..

    பதிலளிநீக்கு
  18. வாங்க ராயுடு,

    'பூசாரி' சாமியாடிட்டாருன்னு சொல்லுங்க.//

    அவருக்கு வச்ச பெயர்லதான் இருக்கு பிரச்சினையே..

    பதிலளிநீக்கு
  19. மறக்க முடியாத பாடங்கள். உங்கள் அனுபவங்களை சுவையாகப் பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றிகள்.

    I am privileged to have read your writings and have met you in person.

    கடைசி இரண்டு பகுதிகளை எழுதும் போதே உங்களுக்கு வந்திருக்கக் கூடிய அயர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்னும் திட்டமிட்டு உங்கள் அனுபவங்கள் பரவலாகப் போய்ச் சேரும் வண்ணம் புத்தகமாகவும் வெளி வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    அன்புடன்,

    மா சிவகுமார்

    பதிலளிநீக்கு
  20. ஆவலுடன் காத்திருப்போம். அதுவரை நீங்கள் எஞ்சாய்.

    பதிலளிநீக்கு
  21. அருமை ஐயா
    அடுத்த பகுதியை விரைவில் எதிர்பார்க்கின்றேன்
    ஸ்ரீஷிவ்...

    பதிலளிநீக்கு