15 ஆகஸ்ட் 2006

திரும்பிப் பார்க்கிறேன் 187

செப்டம்பர் எட்டு.

புதுமனை புகுவிழா.

இந்த தேதியை தெரிந்தெடுக்க காரணமிருந்தது.

சாதாரணமாக என் குடும்பத்தில் நல்ல நாள் என்றெல்லாம் பார்க்கும் வழக்கமில்லை.

செப்டம்பர் எட்டாம் தேதி மரிய அன்னை (ஏசுவின் தாய்) யின் பிறந்த நாளாக கத்தோலிக்க திருச்சபை கொண்டாடுகிறது. அன்றுதான் அன்னை வேளாங்கன்னியின் திருவிழாவும் கூட.

எங்களுடய குடும்பத்தில் நடக்கும் அனேக சுப வைபவங்களை நடத்த இந்த நாளைத்தான் தேர்ந்தெடுப்பது வழக்கம். இதுதான் என்னுடைய தாயின் விருப்பமும் கூட.

ஆக அந்த நாளில் பால் காய்ச்சுவதென தீர்மானித்து சென்னையிலிருந்த என் பெற்றோர் சகோதரர்கள், மாமன்மார், தூத்துக்குடியிலிருந்த என் மனைவி வீட்டார் அனைவரையும் அழைத்தேன்.

என்னுடைய மைத்துனர் நில விஷயத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல் நீதிமன்றத்தில் இருந்ததையும் மறந்து என் மாமனார் வீட்டில் அனைவரும் வந்திருந்து சிறப்பித்ததை மறக்கவே முடியாது.

அவர்களுடன் என்னுடைய கிளையில் பணிபுரிந்த ஊழியர்கள், நண்பர்கள், மிகப் பழக்கமான வாடிக்கையாளர்கள் என ஏறத்தாழ நூறு விருந்தினர்கள் சூழ்ந்திருக்க விழா எளிமையாக நடந்தது.

ஆனால் முந்தைய நாள்வரை பிரச்சினைகள் இல்லாமல் இருக்கவில்லை.

விழாவிற்கு பந்தல் ஏற்பாடு செய்திருந்தவர் கிழிசல் துணிகளை வைத்து பந்தல் இட்டிருந்ததைக் கவனித்த நான் உடனே அதை பிரித்து எடுத்துவிட்டு மாற்ற வற்புறுத்த ஊரிலிருந்து வந்திருந்த என்னுடைய பெற்றோர்கள், ‘டேய் அபசகுணம் மாதிரி போட்ட பந்தல பிரிக்க சொல்லாதடா.. இருந்துட்டு போட்டும்.. யார் பாக்கப்போறா?’ என்றனர்.

ஆனால் நான் கேட்டால்தானே, ‘அட நீங்க என்னம்மா? அபசகுணமாவது ஒன்னாவது? இவர் கிட்ட ஏற்கனவே தெளிவா சொல்லியிருந்தேன்.. இவர் கேட்ட கூலியில அஞ்சி பைசா கூட குறைக்காம ஒத்துக்கிட்டேன். எதுக்கு? இந்த மாதிரி கிழிசல் துணியில பந்தல் போடவா? நீங்க பேசாம இருங்க. இவர நா டீல் பண்ணிக்கறேன்.’ என்று அவர் ‘ஐயா எங்கிட்ட வேற துணி இல்லைங்கய்யா.. இன்னைக்கி ரெண்டு மூனு எடத்துல விசேஷங்க.. அதான்..’ என்று தயங்கியும் ஒத்துக்கொள்ளாத நான் ‘அப்படீன்னா பந்தலையே பிரிச்சி எடுத்துக்கிட்டு போயிருங்க. நா வேற ஆள பாத்துக்கறேன்.’ என்று அவரை அனுப்பி வைத்தேன்.

அவர், ‘என்ன ஆளுய்யா நீங்க.. போட்டத பிரிக்க சொல்றீங்களே?’ என்று முனுமுனுத்தவாறு பந்தலை அவிழ்த்துக்கொண்டு செல்ல உடனே என்னுடைய வாடிக்கையாளராயிருந்த ஒரு திருமண மண்டப உரிமையாளரை அழைத்து விவரத்தைக் கூற அவர் உடனே அவருக்கு மிகவும் பழக்கமான பந்தல் இடுபவரை அனுப்பிவைக்க அடுத்த இரண்டு மணி நேரத்தில் புத்தம் புது பந்தல் கனஜோராக தயாரானது.

எங்களுடைய வீடுகளில் பூஜையறை என்று தனியாக ஏதும் வைக்கும் பழக்கமில்லை. ஏசு, மரி, சூசை என்னும் திருக்குடும்பத்தின் படம், இருதய ஆண்டவரின் படம், மரியன்னையின் படம் என்று வரவேற்பறையிலேயே பொருத்துவது வழக்கம். இம்மூன்று படங்களும் என்னுடைய தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய வீடுகளிலும் இருக்கும்.

விழாவிற்கு முந்தைய நாள்வரை வண்ணம் பூசுபவர், மின் விளக்குகள¨ப் பொருத்துபவர், கதவுகள், வாசல் நிலைகள் ஆகியவற்றில் பாலிஷ் செய்யும் ஆசாரி ஆகியோர் அவரவர் வேலகைளை பார்த்துக்கொண்டிருக்க, அவர்களுடன் என்னுடைய சகோதரர்கள் மற்றும் மைத்துனர்கள் வீட்டை அலங்கரிப்பதில் தீவிரமாயிருக்க வீடே கலகலப்பாயிருந்தது.

இவர்களுக்கிடையில் என்னுடைய தாய் ஆசாரியை இந்த மூன்று படங்களையும் கிழக்கு திசையை நோக்கி இருந்த சுவரில் பொருத்தித் தரும்படி கூறிக்கொண்டிருந்தார். அவரோ, ‘இல்லீங்கம்மா, அந்த சுவர்ல போர்ட்டிக்கோ பீம் இருக்குது. அதும்மேல ட்ரில்லிங் மிஷின் வச்சிக்கூட ஓட்டை போட முடியாதுங்க. அதனால எதிர்த்தாப்லருக்கற சுவர்ல பொருத்தி தாரன்.’ என்றார் பணிவாக.

ஆனால் அம்மா ஒரு டீச்சராயிற்றே.. டீச்சர்கள் இருபத்தி நாலு மணி நேரமும் டீச்சர்களாகவேத்தான் இருப்பார்கள் என்பது என் அம்மாவை வைத்து நான் ஏற்கனவே கணித்திருந்தேன். அதை அம்மா மீண்டும் நிரூபித்தார்கள். ‘நீர் நா சொல்றத செய்யும்.. நீரா ஏதாச்சும் ஐடியா குடுக்கற வேலையெல்லாம் ஒங்க முதலாளிக்கிட்ட வச்சிக்கிரும்.’ என்றார்கள் எரிச்சலுடன்.

ஆசாரி என்னைப் பரிதாபமாக பார்த்தார். நான் சுற்றிலும் நின்றிருந்தவர்களை ஒருமுறை பார்த்தேன். அந்த கூட்டத்தினரிடையே ஆசாரி சொன்னதில் தவறில்லையென்று நான் கூறினால் வேறு வினையே வேண்டாம் என்று நினைத்து, ‘சரிம்மா அவர் வேலைய முடிச்சிட்டு போறதுக்குள்ள அடிச்சிருவார். நீங்க ஏன் இந்த தூசியில நிக்கீங்க.. போய் வீட்ல இருங்க.’ என்று சமாளிக்க முனைந்தேன்.

ஆனால் அம்மா விடவில்லை. அவர்களுக்கு ஏற்கனவே பந்தல் விஷயத்தில் அவர்கள் கூறியதை நான் பொருட்படுத்தவில்லை என்ற மனத்தாங்கல். ஆகவே, ‘ஏன் இப்ப செஞ்சா என்னவாம்? எங்க நீ வைக்கமாட்டியோன்னு வேல மெனக்கெட்டு இந்த படங்கள எவ்வளவு கஷ்டப்பட்டு மெட்றாஸ்லருந்து பேக் பண்ணி கொண்டுவந்திருக்கேன். மொதல்ல இத வச்சி குடுத்துட்டு வேற வேல பாக்கச் சொல்லு.’ என்று பிடிவாதம் பிடிக்க நான் இதை கண்டுக்கொள்ளாதவர் போல் ஒரு அலங்கார தொங்கலை படு சிரத்தையுடன் பொருத்துவதில் மும்முரமாயிருந்த என்னுடைய மூத்த சகோதரரை நெருங்கி, ‘அண்ணே நீங்களாவது சொல்லுங்க. அம்மா சொல்றா மாதிரி அந்த பீம் மேல படங்கள ஃபிக்ஸ் பண்ண முடியாதுன்னு ஒங்களுக்கும் தெரியும்லே.. சொல்லுங்களேன்.’ என்று கிசுகிசுத்தேன்..

அவரோ, ‘டேய்.. என்னெ வம்புல மாட்டி விட்டுறாத.. அப்புறம் அம்மா மெட்றாஸ் போய் சேர்ற வரைக்கும் என்னை திட்டி தீர்த்துருவாங்க..’ என்று எனக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு செய்துக்கொண்டிருந்த வேலையையும் அப்படியே விட்டுவிட்டு நழுவினார். போகவிருந்தவர், ‘வேணும்னா ஒன்னு செய்.. போய் மைனிய புடி.. அவதான் இவங்களுக்கு சரி.. அவ சொன்னா இவங்க ஒன்னும் மறுபேச்சு பேசாம ஒத்துக்குவாங்க.’ என்றொரு அட்வைசை கிசுகிசுத்துவிட்டு சென்றார்.

அம்மாவுக்கு ஒருவாறு புரிந்தது. அதற்கு மேல் அங்கு நின்று விவாதம் செய்வதில் பயனில்லையென்று நினைத்தார்களோ என்னவோ.. ‘என்னமோ போங்க.. ஒங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்னு நினைச்சிக்கிட்டிருக்கற ஆளுங்களாச்சே நீங்க.. என்னமும் செய்ங்க..’ என்றவாறு வெளியேற நான் பின்னாலேயே ஓடி பெரும்பாடுபட்டு சமாதானம் செய்துவிட்டு திரும்பி வந்தேன்.

ஆசாரிக்கும் அங்கு குழுமியிருந்த வேலையாட்களுக்கும் இச்சம்பவம் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. நான் மீண்டும் உள்ளே வந்ததும் மேஸ்திரி, ‘சார் அம்மா சொன்னா மாதிரியே செஞ்சிரலாம். அவங்க சொன்னதுல ஏதாச்சும் சாஸ்திரம் இருக்கும். பீமுக்கு அரையடி மேல ட்ரில் பண்ணி மாட்டிரலாம்.’ என எனக்கு சட்டென்று ஆசாரியின் மேல் கோபம் வந்தது. ‘இவர் சொன்னா மாதிரி நீங்க ஏங்க யோசிக்கல? வெட்டியா அம்மா டென்ஷ்னாயிருக்க மாட்டாங்கல்லே.. முதல்ல அந்த வேலைய முடிங்க.’ என்றேன் சற்றே எரிச்சலுடன்..

இப்படி சின்ன, சின்னதாக தடங்கல்கள்..

எல்லா கடைசி நேர வேலைகளையும் முடித்து பணியாட்களை அனுப்பிவிட்டு அன்று இரவு படுக்கச் சென்றபோது நள்ளிரவைக் கடந்திருந்தது.

ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி அடுத்த நாள் காலை 6.00 மணி வழிபாட்டிற்கு என்னுடைய பங்கு தேவாலயத்துக்கு சென்று வழிபாடு முடிந்த கையோடு என் பங்கு குருவை அழைத்துவந்தேன். அவருடன் குடும்பத்தோடு சேர்ந்து பிரார்த்தனை செய்தோம். பிறகு வீடு முழுவதும் புனித தீர்த்தத்தால் மந்தரித்துவிட்டு பாதிரியார் திரும்பிச் சென்றார்.

அதன் பிறகு காலை ஒன்பது மணிக்கு வீட்டு வரவேற்பறையில் ஒரு சின்ன குத்துவிளக்கில் என் பெற்றோர், என் மனைவியின் பெற்றோர் மற்றும் நானும் என் மனைவியும் விளக்கேற்ற அதன்பிறகு சம்பிரதாயமாக பால் காய்ச்சி அரை மணி நேரத்தில் விழா முடிந்தது.

*******

புது மனை புகு விழா தினத்தன்று மேஸ்திரிக்கும் தலைமை ஆசாரிக்கும் புது வேட்டி, புது சட்டை அன்பளிப்பாக கொடுப்பது வழக்கம் என்று என்னுடைய மாமனார் ஏற்கனவே கூறியிருந்தார்.

இதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் சரி செய்துவிட்டு போவோம் என்று தீர்மானித்து அதற்கு வேண்டியதை ஏற்பாடு செய்தேன்.

ஆரம்பத்திலும் இடையில் அவ்வப்போதும் எனக்கு இடைஞ்சல் அளித்துக்கொண்டிருந்த மேஸ்திரி நாளடைவில் மனம் மாறி நல்லபடியாய் வேலையை முடித்துக்கொடுத்தார் என்று வைத்துக்கொள்ளலாம்.

ஆரம்பத்திலும் மரவேலைகள் பெரும்பாலும் முடியும்வரையிலும் ஒழுங்காக இருந்து இறுதி நேரத்தில் கோபித்துக்கொண்டு சென்ற ஆசாரியை நினைத்துத்தான் மருகினேன். அவர் இல்லாத நேரத்தில் அவர் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் முடித்துக்கொடுத்த அவருக்குக் கீழ் பணியாற்றியவருக்கு அம்மரியாதையை செய்தாலென்ன என்று என் மனைவியிடம் கூற, ‘அப்படியே செஞ்சிரலாங்க.’ என்று சம்மதித்தார்.

அப்படியே செய்தும் முடித்தேன்.

ஆனால் விழாவிற்கு வந்திருந்த மற்ற சிஷ்ய ஆசாரிகள் அவரிடம் போய் வத்தி வைக்க அடுத்த நாள் விடியற்காலையிலேயே ஆக்ரோஷமான கூச்சலுடன் வந்து பிரச்சினை செய்தார் பழைய தலைமை ஆசாரி.

நல்ல வேளையாக முந்தைய நாள் விழா முடிந்த கையோடு சென்¨னையிலிருந்து வந்திருந்த என் பெற்றோர், சகோதரர்கள் யாவரும் அன்று இரவே புறப்பட்டு சென்றிருந்தனர்.

என்னுடைய மாமனார் மற்றும் மைத்துனர்கள் மட்டும் அன்றிரவு எங்களுடன் புதுவீட்டில் இருந்தனர்.

நான் ஆசாரியின் அநாகரீகமான கூச்சலைக் கேட்டு பதறிக்கொண்டு வெளியே வருவதற்குள் என் மைத்துனர்களும் அவர்களுடன் முந்தைய நாள் இரவில் தங்கியிருந்த அவருடைய நண்பர்களும் மாடியிலிருந்து இறங்கி வந்து அவருடைய சட்டையைப் பிடித்து தாக்க முயல சில நொடிகள் நான் தாமதித்திருந்தாலும் ரசாபாசமாக ஆகியிருக்கும்.

நல்லவேளையாக அடுத்த வீட்டு நண்பர் ராஜேந்திரனும் வீட்டிலிருந்ததால் அவர் தலையிட்டு ஆசாரியை என் மைத்துனர்களிடமிருந்து விடுவித்தார்.

அதற்குள் என்னுடைய மாமனார் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்து என்னுடைய மைத்துனர்களைக் கடிந்து அழைத்துச் செல்ல விஷயம் விபரீதமாகாமல் தப்பித்தது.

ஆசாரியோ அடங்குவதாயில்லை. அப்போதே கணக்கு தீர்த்தால்தான் ஆயிற்று என்று ஒற்றைக்காலில் நின்றார். நான் பொறுமையுடன், ‘நீங்க ரெண்டு நாள் கழிச்சி நிதானமா வாங்க. கணக்க முடிச்சிரலாம்.’ என்று சொல்லியும் அவர் கேட்பதாயில்லை.

ராஜேந்திரனும் தன்னால் இயன்றவரை கூறிப்பார்த்தார். ஊஹ¤ம்.. அவர் கேட்பதாயில்லை.

ராஜேந்திரனுக்கும் அவருடைய தில்லுமுல்லுகளைப் பற்றி என் மூலம் ஏற்கனவே தெரிந்திருந்ததால் அவர் என்னைப் பார்த்து, ‘சரி ஜோசப் அவர் கேக்கறா மாதிரியே முடிச்சிரலாம்.. நீங்க போய் ஒங்க கணக்கு புஸ்தகத்த கொண்டு வாங்க.’ என்றார்.

புது வீட்டில் புகுந்த முதல் நாளே அதுவும் காலையில் இப்படியொரு வில்லங்கமா என்று நினைத்த நான் ஆசாரியை மீண்டும் பார்த்தேன். அவர் முகத்தை திருப்பிக்கொள்ள வேறு வழியில்லாமல் சாலையைக் கடந்து நான் தாற்காலிகமாக வாடகைக்கு எடுத்த வீட்டிலிருந்த கணக்கு புத்தகத்தையும் அவர் பரிந்துரைத்த மரக்கடை பில் ரசீதுகளையும், பிறகு முன்வாசல் கதவுக்காக பலகை வாங்கிய மரக்கடை பில்களையும் எடுத்துக்கொண்டு ஆசாரியை எதிர்கொண்டேன்.

தொடரும்..

நாளை தூத்துக்குடி அனுபவங்கள் நிறைவுபெறும்..

இத்துடன் இணைத்திருக்கும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் எடுத்தது.. மாடி கீழ்வீடு கட்டி முடித்து நான்கு வருடங்கள் கழித்து கட்டியது.. அது ஒரு தனி அனுபவம்..




வீட்டின் இடது புறம் இருப்பது ராஜேந்திரனின் வீடு.. வலது புறத்தில் இருந்த ஒத்தை ஒட்டு வீடு டீச்சருடைய காலி மனையில் இருந்தது.. இப்போதும் அது அதே நிலையில்தான் இருக்கிறது..

9 கருத்துகள்:

  1. வீடு அட்டகாசமா இருக்கு!

    வாழ்த்து(க்)கள்.

    'ஆடு'ங்க நம்மளுதாங்க?:-))))))

    பதிலளிநீக்கு
  2. விடுமுறையிலும் பதிவா!!!.

    Photo upload செய்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வாங்க துளசி,

    வீடு அட்டகாசமா இருக்கு!//

    அப்படியா? நன்றி..

    பதிலளிநீக்கு
  4. வீடு பிரமாதமா வந்திருக்கு. அது சரி..வெளியில மேயுற ஆடுதான் அன்னைக்கி பிரியாணியா? :-)

    பதிலளிநீக்கு
  5. வாங்க அருண்மொழி,

    விடுமுறையிலும் பதிவா!!!.//

    இந்தியாவிலதான விடுமுறை.. அதான்..

    பதிலளிநீக்கு
  6. வாங்க ராகவன்,

    அது சரி..வெளியில மேயுற ஆடுதான் அன்னைக்கி பிரியாணியா? :-) //

    போட்டுருக்கலாம்.. ஆனா கிரஹப்பிரவேசத்துக்கு வெஜ்தானே..

    பதிலளிநீக்கு
  7. 'ஆடு'ங்க நம்மளுதாங்க?:-)))))) //

    ஆமாங்க துளசி. நம்ம வீட்டுக்கு முன்னால நிக்கறதெல்லாமே நம்மளுதான்னு நினைக்கறவன் நான்:))

    பதிலளிநீக்கு
  8. சந்தோஷம்.
    வீடு அட்டகாசமா உள்ளது!பாராட்டு
    //"ட்டீச்சர்கள் 24 மணி நேரமும் ட்டீச்சகளாகவே இருப்பார்கள்...// யாரைக்கண்டாலும் லோன் அப்ளிகேண்ட்ட்டோ என்று பேங்கர்கள்
    மிரளுவதைப்போலவா?

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஜி!

    யாரைக்கண்டாலும் லோன் அப்ளிகேண்ட்ட்டோ என்று பேங்கர்கள்
    மிரளுவதைப்போலவா? //

    அடடடடடடா.. ஒரு டீச்சர சொன்னதும் பேராசிரிய வரிஞ்சி கட்டிக்கிட்டு வர்றத பாருங்க..

    ஆனா நீங்க சொன்ன எக்ஸாம்பிள் சூப்பர். உண்மைதான்..ஹி..ஹி..

    பதிலளிநீக்கு