26 ஜூன் 2006

திரும்பிப் பார்க்கிறேன் 159

நான் கிளை பொறுப்பேற்ற சில மாதங்களுக்குப் பிறகு அவர்களுடைய குடும்பத்தலைவருக்கு பிறந்த நாள் என்பதை அவர்களுடைய கோப்பிலிருந்து அறிந்த நான் அவரை நேரில் சென்று வாழ்த்த வேண்டும் என்று நினைத்தேன்.

அது என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.

சாதாரணமாக என்னுடைய கிளை வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றை சேகரித்து வைத்திருப்பேன்.

குறிப்பிட்ட தினத்தன்று நேரில் சென்றோ, தொலைப்பேசி மூலமாகவோ அல்லது வாழ்த்து அட்டைகள் மூலமோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

அது குறிப்பிட்டவர்களை சந்தோஷப்படுத்தும் என்பதுடன் அத்தகைய ஒரு சிறிய செயலே என்னுடைய வங்கியுடனான அவர்களுடைய வணிகத் தொடர்பை மேலும் விரிவாக்கவும் வழிசெய்ததை நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

நான் குறிப்பிட்ட நிறுவனம் எங்களுடைய கிளையுடன் ஒரு கணிசமான வணிகத் தொடர்பு வைத்திருந்ததால் அதனுடைய பாகஸ்தர்களுடைய பிறந்த நாளையெல்லாம் அவர்கள் சம்பந்தப்பட்ட கோப்பிலிருந்து குறித்துவைத்திருந்தேன்.

நிறுவனத்தினருடைய குடும்பத்தில் மூத்தவருடைய பிறந்த தினம்  என்பதால் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தால் என்ன என்று தோன்றியது.

அத்தகைய நேரங்களில் முன்கூட்டியே அறிவித்துவிட்டு செல்வது என்பது முடியாத காரியம். ‘சார் உங்க பேர்த் டேக்கு ஒங்கள விஷ் பண்றதுக்கு வர்றதாருக்கேன்’ என்று கூறினால் நன்றாக இருக்காதல்லவா? ஆகவே முன்னறிவிப்பில்லாமல் செல்வதுதான் சிறந்ததென தீர்மானித்தேன்.

தூத்துக்குடி நகரின் மிகப் பெரிய செல்வந்தர்களுள் ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க வெறுங்கையுடன் செல்வதும் சரியல்லவே. எதை வாங்கி கொடுப்பது என்று சிறிது நேரம் குழம்பி பூஜையறையில் உபயோகப்படுத்தும் வெள்ளி பாத்திரங்கள் அடங்கிய செட் (அதை தூத்துக்குடி நகரில் விற்பனை செய்யும் வணிகரும் எனக்கு மிகவும் பழக்கமாயிருந்தவர் என்பதால் மார்க்கெட் விலைக்கும் மிகவுக் குறைவாகவே வாங்க முடிந்தது) ஒன்றை வாங்கிக்கொண்டு காலை சுமார் ஒன்பது மணிக்கு புறப்பட்டுச் சென்றேன்.

நான் வீட்டைச் சென்றடைந்தபோது நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் ஒன்றையும் காணாததால் சற்று நேரம் திகைத்துப்போனேன். நான் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி வாசலில் இருந்த பிரம்மாண்டமான கேட்டை திறந்துக்கொண்டு நுழைந்தேன். தூத்துக்குடி நகரில் இருந்த மிகச் சில பங்களாக்களில் ஒன்று அவருடையது. ஒன்றுக்கு மூன்று வாகனங்கள், அதில் ஒன்று இறக்குமதி செய்யப்பட்டது போல் தெரிந்தது, வீட்டின் முன் பரந்த அடர்த்தியான்  நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருந்த புல்தரை.

கேட்டிலிருந்து சுமார் முப்பதடி தொலைவில் இருந்த பங்களா வாசலை அடையும்வரை ஆளரவமே இல்லாமல் அமைதியாக இருந்தது எனக்கே ஒருவித தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. I am going to make a fool of myself என்று நினைத்தவாறு வீட்டினுள் இருந்து யாராவது வெளியே வரமாட்டார்களா என்று சில விநாடிகள் காத்திருந்தேன்.

என்னுடைய நல்ல நேரம் வாசலில் இருந்த கேட் திறக்கப்படும் ஓசை கேட்டு திரும்பினேன். அந்த குடும்பத்தில் கடைக்குட்டி மகன் அரை நிஜார், டீசர்ட் சகிதம் உள்ளே நுழைந்து ஸ்கூட்டரிலிருந்து இறங்கினார். கையில் டென்னிஸ் மட்டையுடன் என்னை நோக்கி வந்தவர் என்னுடைய கையிலிருந்த பார்சலையும் என்னையும் ஒரு மாதிரி பார்த்தார்.

சிறிய அளவில் பத்து வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டிருந்த அவருடைய குடும்ப நிறுவனம் இன்று ஓரளவுக்கு வளர்ந்து வெற்றிகரமாக நடக்க என்னுடைய வங்கியிலிருந்து தக்க சமயத்தில் கடனுதவி வழங்கியதும் ஒரு மூல காரணம் என்பது எனக்கும் தெரியும் அவருக்கும் தெரியும்.

ஆயினும் ஏதோ வேண்டாத விருந்தாளியைப் பார்த்தது போலிருந்தது அவருடைய பார்வை. ‘என்ன சார் திடீர்னு.. அதுவும் இந்த நேரத்துல? எங்கயாவது விசேஷத்துக்கு போய்ட்டு வரீங்களா?’

என்ன செல்வதென தெரியாமல் ஒரு சில நிமிடங்கள் தடுமாறிப்போன நான் அவருடைய தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கவே வந்தேன் என்றேன் தயக்கத்துடன்.

அவருடைய முகத்தில் தெரிந்தது அதிர்ச்சியா அல்லது குழப்பமா என்பதை தீர்மானிக்க முடியாமல் நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்க வீட்டினுள் இருந்து அன்றைய பிறந்தநாள் கதாநாயகரே வெளிய வர நான் அவரை பார்த்ததும் என்னையுமறியாமல் 'many, many happy returns of the day Sir' என்றேன்.

சற்று நேரம் குழப்பத்துடன் நின்ற அவர் பிறகு சிரித்துக்கொண்டே என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘ஒங்க பேங்க்லருக்கற ரெக்கார்ட்ஸ்படி எனக்கு இன்னைக்கி பிறந்தநாள்தான் சார். ஆனா வீட்ல நா பிறந்த நட்சத்திரத்தன்னைக்கித்தான் கொண்டாடுவோம். அதான்நீங்க க்ரீட் பண்ணதும் சட்டுன்னு  என்னால ரெஸ்பாண்ட் செய்ய முடியலை.. ரொம்ப நன்றி சார்.’ என்றார்.

எனக்கு ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வதென தெரியவில்லை. என் அலுவலகத்தில் இருந்த அனைவரும் என்னுடைய உதவி மேலாளரைத் தவிர, எல்லோரும் கிறிஸ்துவர்களாக இருந்ததால் இந்த நட்சத்திர விவகாரம் எனக்கு தெரியாமல் போய்விட்டது. என்னுடைய உதவி மேலாளரும் விடுப்பில் இருந்ததால் வந்தது இந்த தர்மசங்கடமான தவறு.

நான் என் கையில் இருந்த பார்சலை என்னையுமறியாமல் மறைத்துக்கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் அதை கவனித்துவிடவே வேறுவழியில்லாமல் அதை அவருடைய கையில் திணித்தேன். ‘ஒரு சின்ன அன்பளிப்பு சார்.’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘ரொம்ப நன்றி சார். உள்ள வாங்க.’என்றவாறு என்னை அழைத்துச் சென்று வரவேற்பறையில் இருந்த சோபா ஒன்றில் அமரச் செய்துவிட்டு உள்ளே திரும்பி தன்னுடைய குடும்பத்தினரை அழைத்தார்.

அவருடைய குரலைக் கேட்டு உள்ளிருந்து வந்த வீட்டின் மூத்த மகனும் நிர்வாக பாகஸ்தரும் சரி, அவருடைய இரு சகோதரர்களும் சரி என்னைப் பார்த்த பார்வையில் ‘இவன் எங்க இங்க?’ என்ற தோரனையே தெரிந்தது.

குடும்பத் தலைவர் அதை கவனிக்கவில்லை என்பதுபோலிருந்தது  அவருடைய அடுத்த நடவடிக்கை. வரவேற்பறைக்குள் நுழைந்த தன்னுடைய மருமகள்கள் ஒருவரிடம், ‘வராதவர் வந்திருக்கார். ஒரு காப்பி கொண்டு வாம்மா.’ என அவரும் என்னை ஒருமாதிரி பார்த்தவாறு உள்ளே சென்றார்.

‘நீங்க பேசிக்கிட்டிருங்கப்பா.. எங்களுக்கு ஃபீஸ்க்கு  கிளம்பற நேரம்..’ என்றவாறு பிள்ளைகள் மூவரும் கழண்டுக்கொள்ள நானும் பெரியவர் மட்டும் தனித்துவிடப்பட்டோம்.

பெரியவர் அள்ளிமுடித்த குடுமியும் நெற்றி நிறைய நாமமும் பார்ப்பதற்கு தெய்வீகமாக இருந்தார். அந்த வயதிலும் அவர் அமர்ந்திருந்த தோரனையே கம்பீரமாக இருந்தது. அவர் பேசிக்கொண்டே இருந்தார். ஆனாலும் என்னுடைய மனமோ அவருடைய பேச்சில் ஈடுபடாமல் அங்கிருந்து போய்விடவேண்டுமென்ற சிந்தனையிலேயே இருந்தது.

ஐந்து நிமிடம், பத்து நிமிடமாக காப்பி வந்தபாட்டைக் காணோம். நான் சங்கடத்துடன் என்னுடைய வாட்சை பார்க்க அதை கவனித்துவிட்ட பெரியவர் பொறுமையிழந்து எழுந்து உள்ளே சென்று அடுத்த சில நிமிடங்களில் அவரே ஒரு பித்தளை தம்ளர், டபரா சகிதம் வந்தார்.

எனக்கோ சங்கடம் அதிகரித்தது. எழுந்து அவரிடமிருந்து காப்பி டபராவை பெற்றுக்கொண்டு அவசர அவசரமாக குடித்து முடித்துவிட்டு எதிரிலிருந்த மர டீப்பாயில் வைத்துவிட்டு எழுந்து நின்றேன். ‘ரொம்ப நன்றி சார்.’ என்று கிளம்ப பெரியவரும் எழுந்து என்னுடன் வாசல்வரை வந்தார்.

நாங்கள் இருவரும் வாசலுக்கு வெளியே நின்றவாறு ஒரு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வீட்டினுள் இருந்து கையில் ஒரு பித்தளை செம்புடன் வந்த ஒரு வயதான பெண் நான் டீப்பாயில் வைத்திருந்த டபராவைச் சுற்றி செம்பிலிருந்த நீரை தெளித்துவிட்டு கையுடன் கொண்டுவந்திருந்த ஒரு துணியால் டீப்பாயை துடைத்துவிட்டு அதே துணியால் டபராவை சுற்றி எடுத்துச் செல்வதைப் பார்த்தேன்.

என்பக்கமாக பார்த்துக்கொண்டு நின்ற பெரியவர் என்னுடைய பாவை சென்ற திசையில் பார்க்க வீட்டிற்குள் சென்ற அந்த பெண்ணைப் பார்த்தார். ‘She is my wife..’ என்றவாறே அவரை அழைத்தார் ஆனால் அவரோ கணவர் கூப்பிட்டது கேட்காததுபோல் வீட்டிற்குள் சென்று மறைய பெரியவருக்கு தர்மசங்கடமாகிவிட்டது.  என்னைப் பார்ப்பதை தவிர்த்து வாசல் கேட்டை பார்க்கவே எனக்கோ அங்கிருந்து போனால் போதுமென்றிருந்தது.

‘சரி.. சார்.’ என்றவாறு விடைபெற்றுக்கொண்டு வாசல் கேட்டை அடயைவும் வீட்டினுள் இருந்து ஒரு பெண்ணின் கோபக்குரல் எழவும் சரியாக இருந்தது. அந்த கோபத்தின் காரணத்தை ஒருவாறு ஊகித்த நான் நின்று கேட்க விருப்பமில்லாமல் என்னுடைய வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டேன்.

ஆனாலும் எனக்கு அப்போதிருந்த மனநிலையில் வாகனத்தை செலுத்த முடியவில்லை. மனத்தில் ஒரு இனம் புரியாத வேதனை.. என்னுடைய வாழ்வில் இப்படியொரு அவமானத்தை நான் சந்தித்ததே இல்லையே என்ற உணர்வு என்னை வாட்டியெடுத்தது.

தஞ்சையில் நான் சந்தித்த அந்த பிராமண வகுப்பைச் சார்ந்த பெரியவரை, கீழ்சாதிப்பெண்ணை தன்னுடைய சொந்த மகளாக வரித்திருந்த அந்த பெரியவரை, நான் அவரைக் காண சென்ற சமயத்திலெல்லாம் என்னை அன்புடன் வரவேற்று தன்னுடைய குடும்பத்தில் ஒருவரைப் போல் நடத்திய அந்த மனித தெய்வத்தை அந்த நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை என்னால்.

மனம் பதற்றமடைந்திருந்த அந்த நேரத்தில் இதற்கு ஏதாவது ஒரு வழியில் இந்த குடும்பத்தை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது..

அந்த எண்ணம் என் மனதில் தோன்றிய அக்கணமே நான் வியாழக்கிழமைதோறும் வழிபாட்டுக்கு செல்லும் தூய ஜூட்ஸ் தேவாலயத்தின் முன் இருந்ததை உணர்ந்தேன். அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதென்பதை உணர்ந்தும் வாகனத்தை வாசலில் நிறுத்திவிட்டு தேவாலயத்திற்குள் நுழைந்து என் மனம் ஒரு நிலைக்கு வரும்வரை வெறுமனே அமர்ந்திருந்தேன்.

தொடரும்..





12 கருத்துகள்:

  1. மற்றவர்கள் எப்படி இருந்தாலும் அந்த பெரியவர் உங்களை நன்றாகத்தானே நடத்தினார். அவருக்கு தகுந்த மரியாதைதான் உங்கள் எண்ணத்தில் தோன்றிய பழிவாங்கும் உணர்ச்சியா? இதுவரை அவ்வளவு எளிதில் உணர்ச்சி வசப்படாதவராய்த்தான் உங்களைப் பார்த்து(படித்து) வந்துள்ளேன். எந்த விஷயத்திலும் நல்லதைப் பார்ப்பீர்களே, அதனால்தான் இந்த கேள்வி.

    பதிலளிநீக்கு
  2. // பழிவாங்கவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. //

    மனதில் உள்ளவற்றை உள்ளவாறே எழுதியதால் வலியை உணர முடிகிறது

    பாரதி வென்றாரா வீழ்ந்தாரா?

    பதிலளிநீக்கு
  3. வாங்க இ.கொ.

    அவருக்கு தகுந்த மரியாதைதான் உங்கள் எண்ணத்தில் தோன்றிய பழிவாங்கும் உணர்ச்சியா? //

    நிச்சயமாக இல்லை. ஆனால் ஒன்று. இப்போதுள்ள மனமுதிர்ச்சி அப்போது என்னிடம் இருக்கவில்லையே.

    என் கண் முன்னே நடந்ததைக் கண்டபோது என் மனதில் உடனே (impulsive reaction) எழுந்த எண்ணம்தான் அந்த பழிவாங்கும் உணர்வு.

    அதைத் தொடர்ந்து நான் நடந்துக்கொண்ட விதத்தை இப்போது சீர்தூக்கி பார்க்கும்போது என்னுடைய அன்றைய அணுகுமுறை தவறு என்றே தோன்றுகிறது.

    ஆனால் இத்தொடர் நான் அந்தந்த காலகட்டங்களில் நான் நடந்துக்கொண்ட விதத்தை அப்படியே எடுத்துரைப்பதாயிற்றே. என்னுடைய தவறுகளையும் நான் மறைக்காமல் அப்படியே எழுதுவதுதானே நல்லது.

    பதிலளிநீக்கு
  4. வாங்க பஸ்பாஸ்,

    மனதில் உள்ளவற்றை உள்ளவாறே எழுதியதால் வலியை உணர முடிகிறது/

    எழுத்தில் வடித்ததைவிட அதிகமாகவே புண்பட்டுப்போனேன் என்பதுதான் உண்மை. ஒரு சராசரி முப்பது வயது இளைஞனுடைய உணர்வுதான் அந்த பழிவாங்கும் எண்ணம்.

    இருபது வருடங்களுக்குப்பிறகு இப்போது அதை திரும்பிப்பார்க்கும்போது என்னுடைய அந்த உணர்வு தவறானதாகவே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  5. அவமதிக்கப்பட்டோமுன்னு உணர்கிறோம் பாருங்க. அப்ப மனசுலெ வர்ற வலி இருக்கே.
    அது அனுபவிச்சவங்களுக்குத்தாங்க தெரியும்.

    பதிலளிநீக்கு
  6. படித்து முடித்ததும், உங்கள் மனவலியை நானே உணர்ந்தது போல் இருந்தது. உங்களுக்கு உண்டான கோபம் நியாயமானதுதான். உணர்ச்சிகளில் சரி, தவறு என்று உண்டா? சிந்தனை, சொல், செயல் இவற்றில் தான் இது சரி, இது தவறு என்று சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  7. 26 ஜுன் 06 காலை 9/45 க்கு இடப்பட்ட பதிவு நேற்று தெரியவில்லை. இன்று 9/45 க்கு தெரிகின்றது
    "இது என்ன புதுக் குழப்பம் பீம்சிங்...?

    அந்த நேரத்தில் அப்படி நினைப்பது சரிதான்;எதுவும் செய்யாமல் இருந்தால்தான் தப்பு

    உங்களுக்கு நிகழ்ந்தது ஒரு சிறுவனுக்கு நிகழ்ந்திருந்தால் அவனுக்கு எவ்வளவு மனவலி ஏற்பட்டிருக்கும்?சகமனிதர்களுடனான
    அவனுடைய அணுகுமுறையை எப்படி மாற்றியிருக்கும்? பட்ட அடியை எப்படியோ எங்கோ திருப்பித்
    தருவான் இல்லையா?

    பதிலளிநீக்கு
  8. வாங்க துளசி,

    அது அனுபவிச்சவங்களுக்குத்தாங்க தெரியும். //

    அதுவும் அதிக அனுபவமில்லாத வயசுல அது கொஞ்சம் ஜாஸ்தியாவே வலிச்சது..

    ஆனால் இந்த வயசுல அது ஒன்னும் பெரிசாவே தெரியல..

    பதிலளிநீக்கு
  9. வாங்க சிரிகாந்த்,

    சிந்தனை, சொல், செயல் இவற்றில் தான் இது சரி, இது தவறு என்று சொல்ல முடியும் என்று தோன்றுகிறது. //

    எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க..

    உணர்வுங்கறது அடிப்பட்டவுடனே அம்மாங்கலையா அது மாதிரி..

    பதிலளிநீக்கு
  10. வாங்க ஜி!

    "இது என்ன புதுக் குழப்பம் பீம்சிங்...?/

    யாரு நானா? நீங்க வேற..

    ஆனா அவருடைய diehard fan நான்..

    அந்த நேரத்தில் அப்படி நினைப்பது சரிதான்;எதுவும் செய்யாமல் இருந்தால்தான் தப்பு//

    அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

    உங்களுக்கு நிகழ்ந்தது ஒரு சிறுவனுக்கு நிகழ்ந்திருந்தால் அவனுக்கு எவ்வளவு மனவலி ஏற்பட்டிருக்கும்?சகமனிதர்களுடனான
    அவனுடைய அணுகுமுறையை எப்படி மாற்றியிருக்கும்? பட்ட அடியை எப்படியோ எங்கோ திருப்பித்
    தருவான் இல்லையா? //

    கரெக்டா சொன்னீங்க..

    தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கோபம் எவ்வளவு நியாயமானது பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  11. ஜோசப் சார். மிகவும் வருத்தமான நிகழ்வு. ஒருவரைப் போல ஒருவர் இல்லை. இன்றைக்கு உலகம் மாறியிருக்கிறது. இன்னும் மாறும் என்று நம்புவோம். தவறு செய்கிறவர் எங்கும் உண்டு. சேவியர்சில் படிக்கையில் வீட்டிலிருந்து தீபாவளி பொங்கலுக்குப் பலகாரம் கொண்டு போனால் வாங்கிச் சாப்பிடாத மாணவர்களும் உண்டு. அது தப்பாம். என்னவோ போங்க. ஒருத்தரை ஒருத்தர் இழிவா நினைக்கக் கூடாதுன்னு சொன்னா யாருக்குத் தெரியுது.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராகவன்,

    சேவியர்சில் படிக்கையில் வீட்டிலிருந்து தீபாவளி பொங்கலுக்குப் பலகாரம் கொண்டு போனால் வாங்கிச் சாப்பிடாத மாணவர்களும் உண்டு. அது தப்பாம்.//

    பார்த்தீங்களா..

    இந்த மாதிரி சொல்ற கிறித்துவர்களும் உண்டு. அவங்க சாமிக்கு படைச்சதை நாம சாப்பிடக்கூடாது என்பார்கள். என்ன பண்றது?

    பதிலளிநீக்கு