நான் குறிப்பிட்டிருந்த வாடிக்கையாளரை சந்தித்துவிட்டு வந்த அடுத்த நாள் காலை அவருடைய மூன்று மகன்களும் வங்கிக்கு வந்தனர்.
முந்தைய தினம் நான் சென்றிருந்தபோது வாய் திறவாமல் நின்றிருந்தவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தபோது மடைதிறந்த வெள்ளம்போல் பேச ஆரம்பித்தனர்.
அவர்களுடனான அன்றைய பேச்சின் முடிவில்தான் தெரிந்தது அவர்களுடைய உண்மையான பிரச்சினை.
எல்லா தொழில்களிலுமே பண முதலைகளின் ஆதிக்கம் இருக்கும். ஆனால் சில தொழில்களில் மட்டும் மாஃபியா என்போமே அதுபோன்றவர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்.
அத்தகைய தொழில்களில் ஒன்று மீன்பிடித் தொழில். அதுவும் தூத்துக்குடி மற்றும் சென்னைப் போன்ற நகரங்களில் இத்தகையோரின் தொல்லை சொல்லி மாளாது.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விடியற்காலை அல்லது இரவு எட்டு மணிக்கு மேல் நானே இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
என்னுடைய கிளையிலிருந்து மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு படகு கட்டுமானத்திற்கு மட்டுமல்லாமல் அதன் பராமரிப்பிற்கும், தொழில் அபிவிருத்திக்கும் கூட கடன்கள் கொடுக்கப்பட்டிருந்ததால் நானும் வாரம் ஒரு முறையாவது மீன்பிடி துறைமுகத்திற்கு செல்வது வழக்கம்.
இத்தொழிலில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்கு வங்கிகள் பலவும் கடனுதவி வழங்கின என்றாலும் வங்கிகளிலிருந்த நியமங்கள் வாடிக்கையாளர்கள் நிறைவேற்ற இயலாத வகையில் இருந்தன என்பதும் உண்மை.
கடன் தொகையை காட்டிலும் ஐந்து மடங்கு மதிப்புள்ளவர்களுக்கே (networth) கடன் வழங்குவது, கடன் தொகையைக் காட்டிலும் இரண்டு மடங்கு அசையா சொத்தை ஈடாக கேட்பது, கடன் பெறுபவருக்கு ஈடாக networth இருந்த தனிநபர் ஜாமீன் என்பதைப் போன்ற நியதிகள் படிப்பறிவில்லாத பல வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மீது ஒரு நம்பிக்கையற்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன் இத்தனை நியதிகளையும் கடைபிடிக்க தயாராக இருந்தாலும் கடன் தொகை கைக்கு வர குறைந்தது இரண்டு மாத காலமாவது எடுக்கும் என்பதும் வாடிக்கையாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால் கந்து வட்டிக்காரர்களிடமிருந்து அதிக தாமதம் இல்லாமல் உடனே தேவையான தொகை கிடைப்பதால் மீன்பிடித்தொழில் ஈடுபட்டிருந்ட பலரையும் கந்து வட்டிக்கு கடன் அளிப்பவர்களை அணுகவைத்திருந்தது.
தங்களை நாடி வருவோர் பலரும் ஏறக்குறைய எல்லா திக்குகளிலும் கடனை எதிர்பார்த்து சோர்ந்து போய் வேறு வழியில்லாமலே வருவர் என்பதும் கந்து வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தது.
ஆகவேதான் தாங்கள் முன் வைக்கும் சகல நியதிகளுக்கும் வாடிக்கையாளர்கள் தயாராக இருப்பார்கள் என்பது அவர்களுடைய எண்ணம்.
வெற்றுத்தாளில் கையொப்பம் அல்லது கைநாட்டு, ஆளை விழுங்கும் வட்டி விகிதம், இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து வட்டி செலுத்தாத பட்சத்தில் படகில் பிடிபடும் அனைத்து சரக்கையும் கைகொள்தல் என்பது போன்ற நியதிகள் கடனுக்காக விண்ணப்பித்தவர்களை அச்சுறுத்துவதாக இருந்தும் கந்து வட்டிக்காரர்களின் தொழில் மிகச் சிறப்பாகவே நடந்துக்கொண்டிருந்தது.
இத்தகயோரின் சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்தவர்கள் அவர்களிடமிருந்து பெற்றிருந்த கடனை அடைப்பதற்கே தங்களுடைய தொழிலில் கிடைத்த வருமானம் முழுவதையும் அடகு வைக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருந்ததாலேயே எங்களைப் போன்ற வங்கிகளிலிருந்து பெற்றிருந்த கடனை அடைக்க முடியாமல் தடுமாறினர்.
கந்து வட்டிக்காரர்கள் கடன் அளிக்கும் நேரத்தில் தேனொழுக பேசி வாடிக்கையாளர்களுக்கு ஏதோ தர்ம சிந்தனையுடன் தொழில் செய்ய உதவி செய்வது போல் நாடகமாடுவர். ஆனால் கடன் தொகையை சரிவர செலுத்த தவறும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் நடந்துக்கொள்ளும் விதம் இருக்கிறதே.. அதை நேரில் பார்த்தவர்களுக்கே அதனுடைய தீவிரம் புரியம்.
ஒருமுறை நான் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்த நேரத்தில் இத்தகைய ஒரு வாடிக்கையாளர் நடத்தப்பட்ட விதத்தை நேரில் காண நேர்ந்தது.
அவர் பெற்றிருந்த கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகையை கடந்த ஐந்தாறு மாத காலமாக சரிவர செலுத்தவில்லை போலிருக்கிறது. பலமுறை எச்சரிக்கப்பட்டும் நிலுவையில் நின்ற வட்டித் தொகைய முழுவதுமாக செலுத்தாத அவருடைய இடுப்பில் படகு இழுக்க உதவும் பருமனான வடக்கயிறை கட்டி படகுத்துறையில் ஆழம் மிகுந்த பகுதியில் மூச்சு முட்டும்வரை வட்டிக்காரருடைய அடிபொடிகள் கீழேயும் மேலேயும் அவரை ஏற்றி இறக்கியதை பார்த்து பதறிப்போனேன்.
பத்து பதினைந்து முறை கடல் நீருக்குள் ஏற்றி இறக்கப்பட்ட அந்த மனிதரை அவர்கள் கடைசி முறையாக நீருக்குள் அமிழ்த்தி வெளியே எடுத்து ஒரு பொருளைப் போல தரையில் வீசியெறிய அவர் மூச்சு விட முடியாமல் திணறியதை பார்த்தும் சுற்றியிருந்தவர்கள் அதைக் கண்டும் காணாததுபோன்று நடந்துக்கொண்டதிலிருந்தே இதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம் என்று ஊகித்தேன்.
‘கடன் வாங்குன்னப்ப இளிச்சிக்கிட்டு வாங்க தெரியுதில்லல்லே.. நீட்டுன பத்திரத்துலல்லாம கையெளுத்து போட்டீரா இல்லையா? ரெண்டு மாசம் தொடர்ந்தாப்ல வட்டி வரலைன்னா சரக்கு முழுசும் நீங்களே எடுத்தக்காலாம்னு ஒத்துக்கிட்டுத்தானல்லே கடன் கொடுத்தேன்.. பொறவென்ன? முழுசையும் எறக்கி வச்சிட்டு போய்க்கிட்டே இரு..’ என்ற மிரட்டலுடன் கரையில் வந்து சேர்ந்த படகுகளிலிருந்த சரக்கு முழுவதையும் வலுக்கட்டாயமாக அடியாட்கள் உதவியுடன் கைப்பற்றி அடிமாட்டு விலைக்கு கைகொள்வதையும் பார்த்திருக்கிறேன்.
அத்தகைய மிரட்டலுக்கு அடிபணியாதவர்களுடைய உடல் சில தினங்களுக்குப் பிறகு மீன்பிடித்துறையில் நங்கூரமிட்டு நின்ற படகுகள் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட சரித்திரமும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சர்வசாதாரணம்.
இத்தகையோரின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு தங்களுடைய தொழிலையும், ஒரே சொத்தான படகையும் இழந்துவிட்டு நின்ற பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.
அத்தகையவர்களுள் ஒருவர்தான் நம்முடைய மிக்கேல் பர்னாந்து என்பதை நான் அறிந்தபோது அவரிடம் பச்சாதபத்திற்கு பதில் கோபமே எனக்கு ஏற்பட்டது.
‘அப்பாவுக்கு இந்த தோணிக்கு முன்னாலயே ஒரு பெரிய தோணி இருந்திச்சுய்யா. அது வட்டிக்காரங்கக்கிட்டருந்து வாங்கி கட்டுனது. அத கட்டுன நேரமோ தெரியல அடுத்த ரெண்டு வருசம் சீசன் நல்லாவே இல்லை.. அப்பாவால வட்டியும், அசலும் கொடுக்க முடியாம போயி.. வட்டிக்காரங்க அப்பாவோட படக பிடிச்சிக்கிட்டாங்க.. அதுக்கப்புறம் அப்பாவும் நாங்களும் கூலிக்குத்தான் மத்த ஆளுங்க தோணியில போய்க்கிட்டிருந்தோம். பெறவுதான் ஒங்க பேங்க் மேனேசரு பளக்கம் ஆச்சி. அவராவே முன் வந்துதான் இந்த லோன கொடுத்தாருய்யா..’
நான் எரிச்சலுடன், ‘ஒங்க கஷ்டத்த பார்த்துட்டுத்தான் எங்க மேனேஜர் லோன் குடுத்தார். ஆனா ஒங்கப்பா என்ன செஞ்சார்? எங்கக்கிட்டருந்த வாங்குன லோன வச்சி வட்டிக்காரர்ட்டருந்து வாங்குன கடனெ அடைச்சி படகை மீட்டுக்கிட்டார்.. இப்ப எங்க லோன் திருப்பி கட்டாம அப்படியே கெடக்கு’ என்றேன்.
அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
பிறகு அவர்களுள் மூத்தவர், ‘ஆமாய்யா அதான் அப்பா பண்ண முட்டாள்தனம். அது மட்டுமில்லய்யா.. ஒங்கக்கிட்டருந்து வாங்குன கடன் தொகை முழுசையும் அந்த ஆள்கிட்ட கட்டியும் கடன் என்னவோ அடையவே இல்லைய்யா. எங்கப்பா அடைச்ச பணம் முழுசும் வட்டிக்குத்தான் காணும்னு சொல்லிட்டான்.. நாங்க, எங்கப்பா நாலு பேரும் மாடாத்தான் ஒளைக்கோம். ஆனாலும் எங்க மீன்பாடு முளுசையும் அவனே ஆளுங்கள வச்சி அடிமாட்டு வெலைக்கு எடுத்துக்கறான்.. இதுல நாங்க எங்க ஒங்க கடனெ அடைக்கறது?’
அவர் கூறியதில் இருந்த உண்மையும் நியாயமும் எனக்கு புரிந்தாலும் அதை ஆமோதிப்பதுபோல் நான் பதிலுரைத்தால் அதுவே அவர்கள் கூறியதை நான் ஏற்றுக்கொண்டதுபோலாகிவிடும் என்று நினைத்து, ‘இதல்லாம் எங்கிட்ட சொல்லி என்ன பிரயோசனம் தம்பி? அதுக்காக நீங்க எங்க பேங்க்லருந்து வாங்குன கடனெ கட்டாமயே இருந்துரலாம்னு நினைக்கீங்களா?’ என்றேன்.
‘அப்படி இல்லைய்யா. இன்னும் கொஞ்சம் நாள் டைம் குடுத்தா...’
‘எவ்வளவு?’
‘சரியா சொல்ல முடியலய்யா.. ஒரு அஞ்சாறு மாசம்..’
எனக்கு அந்த இளைஞர்களைப் பார்க்க பாவமாக இருந்தது. ஆயினும் கடனை அளித்து ஏற்கனவே ஒன்றரை ஆண்டு கடந்திருந்தது. முதல் மாத தவணையைத் தவிர ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியில் பற்று வைக்கப்பட்டிருந்த வட்டித்தொகை கூட அடைக்கப்படவில்லை.
நிலுவையில் நின்ற தொகை கடன் தொகையைவிடவும் ஒன்றரை மடங்காகியிருந்தது. நிர்ணயிக்கப்பட்ட மாதத்தவணையை சரிவர அடைத்தாலே கடன் மற்று வட்டியை திருப்பி செலுத்த இன்னமும் மூன்றாண்டுகளுக்கு மேலாகும். இந்த நிலையில் இனியும் ஒரு ஆறுமாத காலம் அனுமதிப்பதென்பது நிச்சயம் இயலாத காரியம் என்று நினைத்தேன்.
‘நீங்க வெளிய வாங்கியிருந்த கடன் இன்னும் எவ்வளவு பாக்கியிருக்குன்னு தெரியுமா?’ என்றேன்.
மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பிறகு இல்லை என்பதுபோல் தலையை அசைத்தனர்.
‘நீங்க மூனு பேரும் எத்தன வரைக்கும் படிச்சிருக்கீங்க?’ என்றேன்.
தலையைக் குனிந்துக்கொண்டனர்.
இதுதான் இவர்களுடைய தலைவிதி. மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டிருந்த இந்த சமுதாயம் தலைமுறை தலைமுறையாக சீரழிந்துபோவதன் காரணம் இந்த படிப்பின்மைதான்.
இத்தகைய குடும்பங்களில் ஆண் பிள்ளைகளை ஒரு சொத்து என்பார்கள். எதற்குத் தெரியுமா? ‘ஒமக்கென்னவே.. நாலும் ஆணா போயிருச்சி. தோளுக்கு மேல வளர்ந்த ஒடனே தொளிலில்ல இறக்கிவிட்டுருவீரு.. நம்மள சொல்லு..’ என்று பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் சலித்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன்.
உண்மைதான். படிப்புக்கு பேர்போன திருநெல்வேலி மாவட்டத்தின் ஒருபகுதியாயிருந்த தூத்துக்குடியில் பள்ளிப் படிப்பையே எட்டிப்பார்க்காத மீனவர் சமுதாய இளைஞர் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன்.
‘படிச்சி கொஞ்சம் நாகரீகமாய்ட்டா இந்த பயலுவ இந்த தொழில விட்டே போயிருவான்லய்யா? அப்புறம் இந்த தொழில யார் செய்யறது? இந்த தொளில அவ்வளவு எளிசா வேத்து சாதிக்காரங்க செஞ்சிர முடியுமாய்யா..? கடலுக்குள்ள தெனம் தெனம் உயிர பணயம் வச்சி, காத்த மட்டுமே நம்பி போயி வரோமே அதுக்கு படிப்பு முக்கியமில்லய்யா.. மனசு நிறைய தைரியம்தான்..’
இத்தகைய வாதத்திற்கு என்ன பதில் அளிப்பதென தெரியாமல் வாயடைத்துப்போயிருக்கிறேன்..
நியாயம்தானே..
இவர்களுடைய அறியாமைதானே இவர்களுடைய தொழிலையே சூற¨யாடிக்கொண்டிருந்த கந்து வட்டிக்காரர்களுக்கு மூலதனம்?
நான் குறிப்பிட்ட வாடிக்கையாளருக்கு மேலும் ஆறு மாத தவணை கொடுத்தும் பலனில்லாமல் நான் தூத்துக்குடி கிளையிலிருந்து மாற்றலாகி செல்லும்வரை அக்கடன் வசூலாகாமலிருக்கவே எனக்கு பின்னால வந்த மேலாளர் இறுதியில் அவருக்கெதிராக வழக்கு தொடர வேண்டியிருந்தது.
வழக்கின் இறுதியில் தங்களுக்கிருந்த வீட்டையும் சேர்த்து எல்லாவற்றையும் இழந்து நடுத்தெருவில் வந்து நின்ற அக்குடும்பத்தின் நிலையை இப்போது நினைத்தாலும் வேதனைதான் மிஞ்சுகிறது..
இத்தகைய நிலையையடைந்து நிர்க்கதியாய் நின்ற குடும்பங்கள் தூத்துக்குடியில் ஏராளம்.
இவர்களைப் போன்றோரை இந்த நிலைக்கு ஆளாக்கிய கந்துவட்டிக்காரர்களுள் பெரும்பாலோனோர் இதே மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதுதான் உண்மை!
தொடரும்..
என்ன சார் சொல்லாம லீவில் போய்விட்டீர்கள். இந்த வாட்டி Warning கொடுக்கப்படுகிறது. அடுத்த முறை Dismissதான்.
பதிலளிநீக்குவாங்க arunmoli,
பதிலளிநீக்குசாரிங்க.. பயங்கர பிசி(!?)
எச்சரிக்கையை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்..
டிஸ்மிஸ்லாம் வேணாம்:)
பாவம்தாங்க இந்த தொழிலில் இறங்குறவங்க.
பதிலளிநீக்குகடல்லே போறவங்க திரும்பி வர்றதுக்கும் உத்தரவாதம் இல்லீங்க பாருங்க.
எனெக்கென்னவோ ' எம்ஜிஆர் பாட்டுத்தான் ஞாபகம் வருது.
வாங்க துளசி,
பதிலளிநீக்குகடல்லே போறவங்க திரும்பி வர்றதுக்கும் உத்தரவாதம் இல்லீங்க பாருங்க.//
திரும்பி வந்தாலும் பிடிச்சிக்கிட்டு வந்தத எல்லாம் அடாவடியா பிடுங்கிக்கிறது எவ்வளவு கொடுமைங்க..
உயிர பணயம் வச்சி போறவங்க வாழ்க்கையில விளையாடறவங்கள என்னன்னு சொல்றது?
இந்த் அக்கிரம் இன்னமும் தொடர்ந்து நடக்குதுங்கறதுதான் ரொம்ப வேதனை..
எம்.ஜி.ஆர் படத்துல வர்ற சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருந்தாலும் மீனவர் வாழ்க்கை சோகமானதுதான்.
சினிமா என்பதே மிகைப்படுத்துதல்தானே.நிகழ்வுகள் மிகைப்படுத்தப் பட்டிருக்கலாம்.ஆனால் அவற்றால் ஏற்படும் தாக்கங்கள் சினிமாவைவிட உண்மை வாழ்க்கையில் பன்மடங்கு அதிகமாகவே இருக்கும். படிப்பறிவின்மையே காரண்ம்
பதிலளிநீக்குவாங்க ஜி!
பதிலளிநீக்குபடிப்பறிவின்மையே காரணம் //
உண்மைதாங்க. அதனாலதானே என்னவோ இப்பல்லாம் அந்த சமூகத்த சேர்ந்த படித்த இளைஞர்கள் தங்களுடைய குலத்தொழிலை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
ஆகவே நாளடைவில் இத்தொழிலில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது..
எந்தத் தொழிலும் குலத்தொழிலா இருக்கக் கூடாது. யார் யாருக்கு எது வருதோ...அதச் செய்ய விடனும். அதுதான் சரி.
பதிலளிநீக்குநீங்க சொன்ன மாதிரி, அந்தச் சமூகத்து இளைஞர்கள் கரடு முரடா இருந்தாலும் விவரம் பத்தாம இருப்பாங்க. ஆனா முந்திக்கு இப்பத் தேவலாம்னு நெனைக்கிறேன்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குயார் யாருக்கு எது வருதோ...அதச் செய்ய விடனும். அதுதான் சரி.//
ஒத்துக்கறேன். ஆனால் நம் நாட்டில் அப்படியொரு நாள் வருமா?
நீங்க சொன்ன மாதிரி, அந்தச் சமூகத்து இளைஞர்கள் கரடு முரடா இருந்தாலும் விவரம் பத்தாம இருப்பாங்க. //
ரொம்ப சரி.
ஆனா முந்திக்கு இப்பத் தேவலாம்னு நெனைக்கிறேன்.//
ஆமா.
மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது. அந்த இளைஞர்களின் மாற்றம் வாவேற்கத் தக்கது.. தொழில் பின்னடைவு அறிவியல் வளர்ச்சியால் காலப்போக்கில் சமன் செய்யப்படும்
பதிலளிநீக்குவாங்க டி!
பதிலளிநீக்குஇந்த தொழிலும் corporatize நாளடைவில ஆகுமுன்னு தோணுது..//
Corporates do not show any interest in entering farming because the landholding in India is highly fragmented.. Small and marginal farmers are large in numbers that it is absolutely impossible to think about corporaising the agriculture..
இது என்னுடைய கருத்தல்ல.. UNO வின் சர்வே அறிக்கை..
அதுபோலத்தான் மீன்பிடித்தொழிலும்..
பொது அல்லது பெரிய நிறுவனங்கள் இத்தொழிலில் இறங்குவது இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு எட்டாக்கனி.
ஏனென்றால் இப்போதும் இது ஒரு குலத்தொழிலாகவே கருதப்பட்டு வருகிறது.. இன்று நேற்றல்ல சுமார் நானூறு ஆண்டுகளாகவே..
ஃப்ரான்சிஸ் சேவியர் இந்திய மண்ணில் கால்வைத்த காலத்திலேயே இவர்களையெல்லாம் ஒன்று திரட்டி இத்தொழிலுக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்த முயற்சித்தான் என்று படித்திருக்கிறேன்..
நீங்கள் நினைத்ததுபோல நடக்கலாம்.. ஆனால் அடுத்து வரும் ஐம்பது, அறுபது ஆண்டுகளில் நடக்குமா என்பது ஒரு கேள்விக்குறிதான்.
Sir,
பதிலளிநீக்குI understand these people are very religious. Why cant the churches/related organizations educate them & setup co-operative mechanism?
மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது.//
பதிலளிநீக்குசத்தியமான வார்த்தைங்க..
ஆனா அந்த மாற்றம் மெதுவா வரும்போதுதான் பொறுமையிழந்து போகிறோம்..
understand these people are very religious. Why cant the churches/related organizations educate them & setup co-operative mechanism? //
பதிலளிநீக்குYou are right Arunmoli.
Attempts were in fact made by several religious leaders to unite the fishermen community and introduce cooperative culture among them. But thanks to the private money lending sharks it did not succeed.
மீனவர்கள் கந்து வட்டியினால் துன்புறுவதை எடுத்துரைத்திருக்கிறீர்கள். அவர்களின் அந்நிலைக்குக் காரணம் படிப்பறிவின்மையே என்பது எந்த அளவு சரி என்று தெரியவில்லை. நமது கலையுலகில் படித்தவர்களே கந்துவட்டிக்காரர்களிடம் மாட்டும்போது கல்வியையும் தாண்டிய கவர்ச்சி கந்துவட்டிக் காரர்களிடம் இருப்பதாகத் தெரிகிறது. இன்று கூட பீஹாரில் வங்கிகள் கடன் கொடுக்காததால் 'குண்டா' வங்கிகள் உருவாவதாக அம்மாநில முதல்வர் நிதியமைச்சரிடம் முறையிட்டுள்ளார்.
பதிலளிநீக்குவாங்க மணியன்,
பதிலளிநீக்குஅவர்களின் அந்நிலைக்குக் காரணம் படிப்பறிவின்மையே என்பது எந்த அளவு சரி என்று தெரியவில்லை//
படிப்பறிவின்மை மட்டுமே காரணம் என்று நான் கூற வரவில்லை மணியன்.
வங்கிகளின் கெடுபிடியான நியதிகளும் ஒரு காரணம் என்று கோடியிட்டு காட்டியிருக்கிறேன்..
இதில் படிப்பறிவின்மையை நான் சுட்டிக்காட்டியதற்குக் காரணம் அவர்கள் கந்துவட்டிக்காரர்கள் நீட்டும் பத்திரங்களில் எல்லாம் ஒப்பமிட்டு கொடுத்துவிடுவதுதான்..
தாங்கள் ஒப்பிடும் பத்திரங்களில் என்ன எழுதியிருக்கிறது என்றுகூட படித்து பார்க்காமல் தங்களுடைய தலைமுறையையே அடகு வைத்துவிட்டு சீரழிந்துபோவதற்கு இந்த அறியாமையும் ஒரு காரணம் என்பதுதான் என்னுடைய வேதனை..
பீஹார், உ.பி, போன்ற மாநிலங்களிலும் இன்றும் இத்தகையோரிடம் சிக்கிக்கொண்டு அவதிப்படுவோரையும் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் மத்தியிலும் இந்த படிப்பின்மையால் ஏற்படும் அறியாமைதான் மூலக்காரணமாக இருக்கும்.
நீங்கள் எடுத்துக்காட்டிய திரையுலகைச் சார்ந்தவர்கள் தெரிந்தேதான் கந்து வட்டிக்காரர்களை நாடுகிறார்கள். அவர்கள் அங்கு செல்வது அவர்களுடைய சூதாட்ட குணத்தையேக் காட்டுகிறது.. அதற்கும் படிப்பின்மைக்கும் எந்த காரணமும் இல்லை. எத்தனை வட்டிக்கு கடன் பெற்றாலும் ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் போறுமே என்ற ஒரு நம்பிக்கை..
படித்து பெரிய பதவிகளில் இருப்பவர்களும் குதிரை பந்தயம், சூதாட்டம் என்று பணத்தை விரயம் செய்வதில்லையா அதுபோலத்தான் திரையுலகம் கந்து வட்டிக்கு கடன் பெறுவதும்..