தஞ்சை ஆயர் அன்று இல்லத்தில் இருந்ததால் நானும், என் மனைவி மற்றும் மகளும் அவரை சந்திக்க முடிந்தது.
ஆயர் அவர்கள் அதே அமைதியான மற்றும் எளிமையான தோற்றத்தில் புன்னகையுடன் எங்களை வரவேற்றார். நானும் என் மனைவியும் அவருடைய அர்ச்சித்த மோதிரத்தை முத்தி செய்ய ஆயர் தன்னுடைய வலக்கரத்தால் எங்கள் மூவருடைய தலையையும் தொட்டு ஆசீர்வதித்தார்.
பிறகு நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத விதமாக என் மகளை என் மனைவியிடமிருந்து பெற்று தன் மடியில் வைத்துக்கொண்டார்.
நான் பதற்றத்துடன், ‘ஐயா உங்களுடைய உடுப்பு..’ என்றேன்.
அவர் புன்னகை மாறாத முகத்துடன், ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என்ற யேசுவின் வார்த்தைகளை மறந்துட்டீங்களா ஜோசப்.’ என்றார் குறும்புடன்.
நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். பிறகு சற்று நேரத்திற்கு என்னுடைய மற்றும் என்னுடைய மனைவியுடைய குடும்பத்தாரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
ஆயர் நெடுநாட்கள் அறிமுகமானவர்களுடன் பேசுவதுபோல் எங்கள் இருவரிடமும் உரையாடிக்கொண்டிருந்தது எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவருக்கு இருக்கும் அலுவல்களுக்கிடையில் இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று வியந்துப் போனேன்.
நாங்கள் புறப்படும் நேரம் வந்தபோது ஆயர் அவர்களுடைய அறைக்குள் சென்று இரு அழகான ரேடியம் ஜெபமாலைகளை (நான் போன முறை ரோமுக்கு போயிருந்தப்போ வாங்கிட்டு வந்தது ஜோசப் என்றார்)ஆசீர்வதித்து ஆளுக்கு ஒன்றாக எனக்கும் என் மனைவிக்கும் கொடுத்தார். பிறகு வெள்ளியாலான சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த ஒரு அழகிய சுரூபத்தை என் மகளுடைய கழுத்தில் அவரே அணிவித்தார்.
நாங்கள் இருவரும் அவருடைய செய்கையால் பேச்சற்று நிற்க அவர் புன்னகையுடன் எங்களை வழியனுப்பி வைத்தது இதை எழுதும்போதும் அப்படியே நிழற்படம் போல் என் கண்கள் முன்னே தெரிகிறது!
நாங்கள் அவருடைய அறையிலிருந்து திரும்பி வரும் வழியில் என்னை அழைத்துச் சென்ற பாதிரியார், ‘ஜோசப், உண்மையிலேயே நீங்க அதிர்ஷ்டசாலிதான். சாதாரணமா ரோம்லருந்து வாங்கிட்டு வர்ற ஜெபமாலைய எங்களுக்கே கொடுக்க மாட்டார். அவரோட நெருங்கிய உறவுக்காரங்களுக்கு இல்லன்னா தெரிஞ்ச நண்பர்களுக்குத்தான் கொடுப்பார். ஏன்னா இந்த ஜெபமாலைங்க நம்ம் போப்பாலயே ப்ளஸ் பண்ணாதாயிருக்கும். அதனாலத்தான் நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலின்னு சொல்றேன்.’ என்றார்.
‘நீங்க சொல்றது சரிதான் சாமி.’ என்றார் என் மனைவி.
அவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு வீடு திரும்பியதும், ‘இப்பவே வீட்டுக்காரங்க கிட்ட சொல்லிரலாமா? இல்லேன்னா திடுதிடுப்புன்னு போயி வீட்ட காலி பண்றோம்னு சொன்னா அவர் ஏதாச்சும் தப்பா நினைச்சிக்குவாரே..’ என்றேன் என் மனைவியிடம்.
‘அதெல்லாம் இப்ப வேணாங்க. ஒரு வேளை நம்ம இப்ப பார்த்துட்டு வந்திருக்கற வீட்டுக்காரர் சாமியார் சொன்ன வாடகைக்கு தரமாட்டேன்னுட்டார்னா? ஃபாதர் முதல்ல ஃபோன் பண்ணட்டும் அப்புறம் சொல்லிக்கலாம்.’ என்ற என் மனைவி தொடர்ந்து, ‘நீங்க வீட்டுக்காரர்கிட்ட எப்படி சொல்றதுன்னு கவலைப்படாதீங்க.. நானே சமயம் பார்த்து பக்குவமா அந்தம்மா கிட்ட சொல்லிடறேன்..’ என்றார்.
அவர் சொன்னதும் சரிதான். நான் எதையுமே எடுத்தேன் கவுத்தேன் என்று செய்துவிட்டு பிறகு வருத்தப்படும் ஜாதி. அலுவலக வாழ்விலும் சரி என்னுடைய சொந்த வாழ்விலும் சரி.. நான் அவசரப்பட்டு எடுத்த பல முடிவுகள் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தியதுடன் நிறைய எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது..
‘You know how to make enemies out of Friends, TBR!’ என்றார் என்னுடைய சேர்மன்களில் ஒருவர். நூத்துக்கு நூறு உண்மையான வார்த்தை..
அடுத்த நாளே என் பாதிரியார் நண்பர் என்னை தொலைப்பேசியில் அழைத்து தன்னுடைய நண்பர் எங்களுக்கு வீடு கொடுப்பதற்கு சம்மதித்துவிட்டதாக கூறியதுடன் வரும் மாதம் முதல் தேதியிலிருந்து வாடகை அளிக்க வேண்டும் என்று விரும்பியதாக கூறினார்.
அதெப்படி? அடுத்த ஒன்றாம் தேதிக்கு இன்னும் ஒரு வாரமே இருந்த நிலையில் இப்போதுள்ள வீட்டு உரிமையாளர் குறைந்தது ஒரு மாத நோட்டீசாவது வேண்டுமென்று கூறினால் இரண்டு வீட்டுக்கும் வாடகைக் கொடுக்க வேண்டி வருமே என்று யோசித்தேன்.
ஆனால் என் மனைவியோ மிகவும் எளிதாக, ‘நீங்க ஏன் அதப்பத்தியெல்லாம் கவலைப் படறீங்க? என்கிட்ட விட்டுறுங்க.. நான் பார்த்துக்கறேன்.’ என்றார்.
அதே போல் உரிமையாளரிடம் என்ன பேசினாரோ, எப்படி பேசினாரோ அன்று நான் இரவு வீடு திரும்பியதும், ‘இங்க பாருங்க.. நமக்கு சேர வேண்டிய வீட்டு அட்வான்ஸ் செக்.. வீட்டுக்காரர் கொடுத்தது..’ என்று என்னிடம் நீட்ட நான் அசந்துபோனேன்.
‘எப்படி? அவர் ஒன்னுமே சொல்லலையா?’ என்றேன்.
‘சொன்னார். சொல்லாமா இருப்பாரா? ஆனா நான் விடலை.. கெஞ்சி கூத்தாடி வாங்கிட்டேன். ஆனா அவங்க ஒன்னும் வருத்தப்படலை.. அவங்களுக்கு வாடகை முக்கியமில்லீங்க.. நாம போறேமேன்னுதான் கொஞ்சம் கவலை.. முக்கியமா நம்ம பொண்ணு இல்லாம இருக்க முடியாதேன்னுதான் அவர் கவலைப்பட்டார்.. நாங்க எங்க போறோம் டவுணுக்குள்ளத்தானே.. அடிக்கடி கொண்டுக்கிட்டு வறோம்னு சொன்னேன்.. பாப்பாவும் தாத்தா அங்க அணில், குருவில்லாம் நிறைய இருக்கு. தாத்தா, பாட்டி நீயும் வாயேன்னு கொஞ்சுனதும் ரெண்டு பேரும் அப்படியே குளிர்ந்து போய்ட்டாங்க.’ என்று தன்னுடைய திறமையை விலாவாரியாக விவரித்தார்.
சரி நமக்கு ஒரு வேலை மிச்சம் என்று நினைத்து நிம்மதியடைந்தேன்..
அடுத்தது இங்கருக்கறதையெல்லாம் தூசி தட்டி, மூட்டை கட்டி..
எப்படி என்று மலைப்பாக இருந்தது..
நான் சென்னையிலிருந்து மாற்றலாகி வந்தபோது என்னுடைய மைத்துனர்கள் இருவர் வந்து உதவி செய்தனர்.. ஆனால் இப்போது..
சட்டென்று ஒரு யோசனை தோன்ற என் மனைவியைப் பார்த்தேன். ‘உன் தம்பிங்க ரெண்டு பேரையும் உடனே வரவச்சா என்ன?’
எதுக்கு என்பதுபோல் என்னைப் பார்த்த என் மனைவி, ‘அட நீங்க வேறங்க.. அவனுங்க வந்து போன தடவை மாதிரி பண்டம் பாத்திரங்களை முரட்டுத்தனமா தூக்கிப் போட்டுத்தான் பாதி பாத்திரம் சொட்டையும் சொள்ளையுமா வந்து சேர்ந்துச்சி.. அதெல்லாம் வேணாம்.. உங்க ஆஃபீஸ் பியூன்கிட்ட சொல்லி யாரையாச்சும் கூட்டிக்கிட்டு வரச்சொல்லுங்க.. ஒன்னோ ரெண்டோ குடுத்துட்டா போச்சு..’ என்றார் சர்வசாதாரணமாக..
நான் பார்த்தேன். பாத்திரங்கள் சொட்டை, சொள்ளையா போனது என்பதெல்லாம் சும்மா என்று எனக்குத் தெரியும்.. என் தம்பிங்கன்னா உங்களுக்கு வேலைக்காரங்க மாதிரி தெரியுதா என்பது போல் அவர் என்னைப் பார்த்தாரே அதான் நிஜம்.
ஆனா இந்த ஒன்னோ ரெண்டோ குடுத்துட்டா போச்சுங்கறது கடைசியில சுளையா ஐந்நூறு என்று வந்து நின்றபோதுதான்.. ‘சே இதுக்கு எங்க தம்பிங்களையே கூப்டுறுக்கலாம் போல..’ என்று என் மனைவி முனுமுனுத்தார்.
இருப்பினும் வீட்டுச் சாமான்களை ஒன்று விடாமல், எந்தவித சேதாரமும் இல்லாமல்.. அதற்கு மேல் எனக்கு எந்தவித டென்ஷனும் இல்லாமல் முடித்துக் கொடுத்ததற்கு இன்னும் கொஞ்சம் அதிகமானாலும் பரவாயில்லை என்று தோன்றியது..
அத்தனை கனகச்சிதமாக முடித்துக் கொடுத்த அந்த மூன்று தஞ்சை இளைஞர்களையும் பாராட்டத்தான் வேண்டும். தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு மாற்றலாகி சென்றபோது அங்கிருந்த அடாவடி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டு நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே சொல்லி மாளாத வேதனை..
சமயம் வரும்போது சொல்கிறேன்..
சரி.. புது வீடு வந்தாகிவிட்டது..
என் மனைவிக்கும் மகளுக்கும் ஏதோ சொர்க்க பூமிக்குள் குடிவந்ததுபோல் முகத்தில் ஒரு சந்தோஷம்..
கீழே முகப்பில் இருந்த முற்றத்தில் பாதி அளவுக்கு, உரிமையாளருடைய அலங்கார காளை மாட்டு வண்டி நிற்பதற்கு வசதியாக, போர்ட்டிகோ அமைக்கப்பட்டிருந்தது..
அதனுடைய கூரை எங்களுக்கு பால்கணி..
சுமார் இருபதடி நீளம், பத்தடி அகலம் கொண்ட அந்த பெரிய பால்கணியில் ஒரேயொரு குறை, மிகவும் உயரம் குறைந்த சுற்றுச்சுவர்..
என் இரண்டு வயது மகள் உயரம் கூட இல்லை. நாங்கள் குடிபுகுந்த முதல் நாள் அவள் கால் நுனியில் நின்று கீழே எட்டிப் பார்த்தபோது நான் பதறிப்போனேன்..
பால்கணியிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் மாங்கனிகள் தொங்கியது என் மகளுக்கு மட்டுமல்ல என் மனைவிக்கும் சோதனையாய் இருந்தது..
ஆனால் கீழே சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த 'இந்தியன் தாத்தா' அத்தனை லேசுப்பட்டவர் இல்லை.. ‘ஐயாவுக்கு எந்த மரத்துல எத்தன காய் இருக்கு, பழம் இருக்குன்னு மனப்பாடமா தெரியும்மா.. நீங்க பாட்டுக்கு எங்க பாக்கப்போறாருன்னு பறிச்சிராதீங்க.. அப்புறம் அடுத்த நாளே காலி பண்ணிருங்கன்னு சொன்னாலும் சொல்லிருவார்.. பாப்பாவையும் பால்கணியில விடாதீங்கன்னு ஐயா சொல்லச் சொன்னாரு..’ என்று முதல் நாளே மாடிக்கு வந்து அறிவுறுத்திய அவருடைய வேலையாளைப் பார்த்ததும் என் மனைவிக்கு புதுவீட்டின் ச்சார்ம் (charm) போய்விட்டது என்றே கூறலாம்.
அதுமட்டுமா? லாட்ஜ் ரூமுக்குள்ள வாடகைக்கு அறைகள் எடுப்பவர் கவனத்திற்கு என்று சட்டமடித்து ஒரு அறிக்கை வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்களே.. அதே போன்ற ஒரு பட்டியலை அடுத்த நாளே வீட்டுக்காரம்மா என் மனைவியிடம் வாசித்தபோது.. ‘ஐயோ.. உங்க பேச்ச கேக்காம இங்க வந்ததுக்கு என்ன செருப்பால அடிச்சிக்கணும் போலருக்குங்க..’ என்ற என் மனைவியைப் பரிதாபத்துடன் பார்த்தேன்.
தொடரும்..
என்னது அந்தக் காலத்துலயே ஐநூறு ரூபாய் கொடுத்தீங்களா! அதுவும் ஒரே ஊருக்குள்ள மாத்த....இருவது வருசம் கழிசி நான் 3000 ரூபாஇ கொடுத்தது சரிதான்.
பதிலளிநீக்குநான் பெங்களூருல மொதல்ல வீடு பாக்கும் பொது....அப்பப்பா....தேடித் தேடி அலுத்துட்டேன்...வீடு நல்லா இருந்தா ஏரியா நல்லாயில்லை. ரெண்டும் நல்லா இருந்தா ஓனர் சரியில்லை. அல்சூர்யு லக்ஷ்மிபுரத்துல ஒரு வீடு. நாலாயிரம் ரூபாஇ வாடகை. ஓரளவு நல்லா இருந்தது. ரெண்டாவது மாடி. நைட்டு ஒம்பது மணிக்குப் பாத்தோம். நாளைக்கு பொழுது சாயவும் வர்ரோம்னு சொல்லிட்டு வந்தோம். அப்ப பாதி அட்வான்ஸ் குடுகிறதா பேச்சு.
அடுத்த நாள் திடீர்னு பன்னண்டு மணிக்கு வீட்டுக்கார அம்மா ஃபோன் போட்டு....வேறொருத்தரு அட்வான்ஸ் தர்ரேன்னு சொல்றாரு. அதுனால நீங்களும் இப்பவே முழு அட்வான்ஸ் தந்திருங்கன்னு சொன்னங்க....நான் ஒடனே வேடு வேன்டாம்னு சொல்லீட்டு வேற வேடு பாத்தேன். ஓரளவு நல்ல வீடு அமைஞ்சது. அவர் நல்ல நண்பரா இருந்தாரு. கிட்டத் தட்ட நாலு வருஷம் அந்த வீட்டுல இருந்தேன். வாடகை கோட எனக்காக அவங்க ஏத்தலை. அந்த வீட்டு அக்க கோட சொந்தத் தம்பி மாதிரி பாத்துக் கிட்டாங்க. இன்னைக்கும் அவங்க வீட்டுக்குப் போனா சப்பிடாம விட மாட்டாங்க...
இதுல நான் அசைவம்....ஆனா அவங்க தெலுங்கு பிராமிண். வீட்டுல கோழியோ மீனோ வேகும் போது என்னவா இருக்கும்னு ஆர்வத்துல வந்து பாப்பாங்க. ஆனா சாப்பிட மாட்டாங்க. அவங்க பசங்க...அவங்க அம்மா நானா எல்லாரும் நல்லா பழகுவாங்க.
அட ரொம்ப இண்ட்ரஸ்ட்டிங்கா இருக்கே..
பதிலளிநீக்குஇந்த மாதிரி அனுபவங்களையே ஒரு சங்கிலி பதிவா போட்டா என்ன.. படிக்கறதுக்கு நல்லா தமாஷா இருக்கும்..
இந்த நேரத்துல ஒரு தமாஷ் விஷயம் சொல்றேன்.
என் நண்பர் ஒருவர் கேரளத்திலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்தார். அவர் ஒரு வீட்டைப் சென்று பார்த்தார். வீட்டில் பெண்கள் மட்டும் இருந்ததால் அவர்கள் ஆண்கள் காலையில்தான் இருப்பார்கள், அப்போது வாருங்கள் என்றார்கள். இவர் சம்மதித்து சரிம்மா ஞான் நாளை ராவிலே வராம் என்றார். ராவிலே என்றால் மலையாளத்தில் காலையில் என்று அர்த்தம். ஆனால் சென்னை பாஷையில் அது ராத்திரி என்று அர்த்தம். அவர் அப்படிச் சொன்னதும் வீட்டிலிருந்த பெண்கள் வெகுண்டு ,'ஏய்யா யோவ். பொம்பளங்க மாத்திரம் இருக்கோம்.. ராவுல வரேங்கறியே? என்ன திமிரா?' என்று கேட்டு.. 'ஒனக்கு வூடும் இல்ல, ஒன்னும் இல்ல போய்யா?' என்ற விரட்ட கூடவே இருந்த நான் விஷயத்தை விளக்கியதும் அங்கு குழுமியிருந்த எல்லோரும் கொல் என்று சிரிக்க என் நண்பர் பேந்த, பேந்த விழித்தார்.