13 பிப்ரவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 78

பிறகு, ‘சார் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க இங்கருந்து இறங்குனதும் மறுபடியும் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்திருந்தார்..’ என்றார்.

போலீஸ் இன்ஸ்பெக்டரா? எதற்கு?

‘யார் அன்னைக்கி கைகலப்பு நடந்தப்போ வந்தாரே, அவரா?’ என்றேன்.

‘ஆமா சார். உங்கள பாக்கணும்னு வந்தார்.’

‘என்னையா? எதுக்கு? ஏன்னு சொன்னாரா, சார்?’

‘மெட்ராஸ்லருந்து புதுசா வந்துருக்கற எஸ்.பி. உங்கள பாக்கணும்னு சொன்னாராம் சார். அதுக்குத்தான் உங்கள தேடிக்கிட்டு வந்தார். நீங்க இல்லன்னதும் உங்க ஃபோன் நம்பர் இருக்கான்னு கேட்டார்.. உங்க வீட்டு நம்பர் குடுத்துருக்கேன் சார்..’

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.. புது எஸ்.பியா? யார் அவர்? அவருக்கெப்படி நான் இங்கே இருப்பது தெரிந்தது?

‘புதுசா வந்திருக்கற எஸ்.பி யோட பேர் --------- சார். நீங்க மெட்றாஸ்லருந்தப்ப இன்ஸ்பெக்டரா இருந்தாராம். உங்கள தெரியும்னு சொன்னாராம்.’ என்ற உரிமையாளரின் சகோதரரைப் பார்த்தேன்.

‘ஓ! அவரா? அவர் இப்போ எஸ்.பியா?’ என்றேன் வியப்புடன். ‘சார் அவரோட ஆஃபீஸ் எங்கருக்கு? நான் வீட்டுக்கு போற வழியில அவர போய் பார்த்துட்டு போறேன்.. அவர கூட திறப்புவிழாவுக்கு கூப்டலாம்னு நினைக்கிறேன். அவரோட நட்பு நமக்கு ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருக்கும் சார்..’

அவர் கூறிய விலாசத்தைக் குறித்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றேன்.

அவர் அலுவலகத்தையடைந்ததும் என்னுடைய அடையாள அட்டையை வாயிலில் நின்றிருந்த காவலாளரிடம் கொடுத்து நான் வந்திருக்கும் விவரத்தை எஸ்.பி அவர்களுக்கு தெரிவிக்குமாறு கூறினேன்.

அவர் எஸ்.பி இன்னும் பதவியேற்கவில்லையென்றும் அவருடைய குடியிருப்பில் சென்று பார்க்குமாறும் கூறினார். நானும் அலுவலகத்தின் பின்புறத்திலிருந்த அவருடைய குடியிருப்பை விசாரித்துக்கொண்டு சென்றேன்.

என்னைக் கண்டதும் புன்னகையுடன் வரவேற்ற அவர், ‘என்ன சார் இங்க வந்தவுடனே ஃபேமஸ் ஆயிட்டீங்க போலருக்கு? அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் விசிட் பண்ணியிருக்கீங்க போலருக்கே.’ என்றார் சிரித்துக்கொண்டே.

அதற்குள் இவருக்கெப்படி தெரிந்தது என்று பார்த்தேன்.

அவர் என்னுடைய முகத்தில் தெரிந்த வியப்பைப் பார்த்துவிட்டு மேலும் சிரித்தார். 'உங்க மேல கேஸ் பதிவு பண்ண இன்ஸ்பெக்டர் சொல்லித்தான் சார் தெரியும். நேத்தைக்கி உங்க புது ப்ராஞ்சுக்கு முன்னால ஏதோ கைகலப்பு நடந்துதுன்னு ஒரு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார் இல்லையா? அவர் திரும்பி வரும்போது அவரோட ஸ்டேஷன்ல நான் விசிட்டுக்கு போயிருந்தேன். அவர் திரும்பி வந்ததும் அங்க நடந்ததப்பத்தி சொன்னப்போ நீங்க ஸ்கூட்டர்ல இடிச்ச பையனையும் அந்த கூட்டத்துல ஒன்னா பார்த்ததப் பத்தி தமாஷா சொன்னார். அப்பத்தான் அவரு உங்களப்பத்தித்தான் சொல்றார்னு புரிஞ்சிக்கிட்டேன். நீங்க மெட்றாஸ்லருந்து டிரான்ஸ்ஃபர் ஆனதுக்கப்புறம் அது தெரியாம உங்கள பாக்கறதுக்கு உங்க ப்ராஞ்சுக்கு போயிருந்தேன். இப்ப இருக்கற மானேஜர்க்கு உங்க மேல அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்ல போலருக்கு. நீங்க எந்த ஊருக்கு மாறி போயிருக்கீங்கன்கூட சொல்லமாட்டேன்னுட்டார்.’ என்றார் சிரிப்பு மாறாமல்.

எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த இரு மேலாளர்களுக்கிடையில் இருந்த ஈகோ அந்நிறுவனத்துடைய பெயரையே கெடுத்துவிட்டதே என்று நினைத்தேன். என்னுடைய வங்கியைப் பத்தி அவர் என்ன நினைத்திருப்பார்?

‘சாரி சார். அவர் அப்படித்தான். னா அதுக்காக எங்க பேங்க்ல இருக்கற எல்லாருமே அப்படித்தான்னு நினைச்சிக்காதீங்க.’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘நோ மிஸ்டர் ஜோசப். அவர் ஒருத்தர வச்சி உங்க பேங்கப்பத்தி தப்பா எடை போட முடியும்னா உங்கள மாதிரி மேனேஜர்கள வச்சி நல்ல மாதிரியும் எடை போட முடியுமே.. தனியார் பேங்க்கா இருந்தும் நான் வந்து கேட்டதுமே தையல் மிஷின்கள குடுத்து எத்தன பேருக்கு ஹெல்ப் பண்ணீங்க? I I won’t forget that. இப்ப எங்க டிப்பார்ட்மெண்டையே எடுத்துக்குங்க. எத்தனையோ படித்த இளைஞர்கள் தங்களோட உயிரையே பயணம் வச்சி லா அண்ட் ஆர்டர மெயிண்டெய்ன் பண்றதுக்கு ராப்பகலா உழைக்கிறாங்க. பொறுப்பில்லாம அடாவடித்தனமா நடந்துக்கற ஒரு சில போலீஸ் அதிகாரிகளால எங்க டிபார்ட்மெண்ட் பேரே கெட்டுப்  போயிடலையா?’ என்றார்.

எத்தனை உண்மை!

நானும் என்னுடைய அலுவலக பயணத்தில் எத்தனையோ உண்மையுள்ள, நேர்மையான காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் அதேபோல் நேர்மையற்ற, ஒழுக்கங்கெட்ட அதிகாரிகளையும் சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது. நேர்மையான அதிகாரிகளைச் சந்தித்தபோது கிடைத்த சந்தோஷத்தை விட நேர்மையற்ற அதிகாரிகளிடம் சிக்கிகொண்டு அனுபவித்த வேதனையே என்னை அதிகமாகப் பாதித்திருக்கிறது.

‘இங்க வந்து சார்ஜ் எடுத்தவுடனே மெட்றாஸ்ல இருக்கற மாதிரியே போலீஸ் ட்யூட்டியில உயிர்விட்ட காவல்துறையினரின் குடும்பத்தாருக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன் மிஸ்டர். ஜோசஃப். அதுக்கு உங்க மாதிரி பேங்க் மானேஜர்சுடைய உதவி நிச்சயம் தேவைப்படும். தஞ்சாவூர் கலெக்டரையும் சந்திச்சி பேசினேன். அவருக்கும் இந்த ஐடியா ரொம்பவும் பிடிச்சிருக்கு. நான் வந்து பொறுப்பேற்றதும் தஞ்சாவூர் டவுண்லருக்கற பேங்க் மேனேஜர்ஸ் மீட்டிங் ஒன்னு அரேஞ் பண்ணலாம்னு பாக்கறேன். இப்பத்தைக்கு உங்களதான் எனக்குத் தெரியும். அதானலதான் சென்னைக்கு போய் ரிலீவ்  ஆகி வர்றதுக்கு முன்னாலயே உங்கள சந்திக்கணும்னு  ஆசைப்பட்டேன். அதே மாதிரி இங்கருக்கற பேங்க்சுக்கு எங்க டிபார்ட்மெண்ட்லருந்து என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க.. மெட்றாஸ்ல இருக்கறாமாதிரியே நைட் பட்ரோலுக்கு நான் வந்தவுடனேயே ஏற்பாடு பண்றேன்..’ என்று அவர் எடுக்கவிருந்த ஏற்பாடுகளை விவரித்தார்.

நானும் என்னாலான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துவிட்டு விடைபெற்று சென்றேன்.

இவரும் என்னுடைய தஞ்சை வாசத்தில் ஒரு நண்பனைப் போல பல விதங்களிலும் உதவியாயிருந்தவர். அவர் கேட்டுக்கொண்டதற்கேற்ப தையல் இயந்திரங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்ததுடன் தஞ்சையில் பணியாற்றிய எல்லா கடைநிலை காவல் அதிகாரிகளுக்கும் (Constables) வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க, அவர்களுடைய பிள்ளைகளுடைய மேற்படிப்புக் கடன் என்று பலதிட்டங்களையும் நிறைவேற்றி காவல்துறையினரிடையில் மிகவும் பிரபலமடைந்தேன் என்றால் மிகையாகாது..

இப்போது நினைத்தாலும் வேடிக்கையாக இருக்கிறது. சில சமயங்களில் நான் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்கின்ற நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நிற்கும் காவலர்கள் என்னைப் பார்த்து ஏதோ அவர்களுடைய உயர் அதிகாரிகளைப் போல சல்யூட் அடித்து மரியாதை செய்வார்கள். ‘யார்றா இவன்?’ என்று சாலையில் போவோர் வருவோர் என்னைப் பார்த்து வியந்ததுண்டு!

அதுமட்டுமா? ஒருமுறை பரபரப்பாக இருக்கும் தஞ்சை பேருந்து நிலையத்தின் அருகில் நான் என்னுடைய வாகனத்தை நோ பார்க்கிங் பகுதியில் கவனக்குறைவாக நிறுத்திவிட்டு செல்ல ஒரு காவலர் புக் செய்துவிட்டார். நான் கடையிலிருந்து வெளியே வர என்னைப் பார்த்த அவர் என்னை பார்த்து அவசர அவசரமாக சல்யூட் அடித்ததுடன், ‘சாரி சார். இது உங்க வண்டின்னு தெரியாம..’ என்று இழுத்தார்.

இது கொஞ்சம் ஓவரா தெரியுதா? உண்மையில, அதாங்க நடந்தது!

நான் அசடு வழிந்துக்கொண்டு, ‘சாரிங்க.. போர்ட பாக்கலை. ஃபைன் என்னன்னு சொல்லுங்க, கட்டிடறேன்.’ என்றேன்.

அவரும் பதிலுக்கு அசடு வழிந்து, ‘பரவாயில்லை சார்.. இனி பாத்துக்குங்க..’ என்றவாறு அங்கிருந்து நகர்ந்தார். நான் சுற்றிலும் நின்றவர்களுக்கு பார்வை பொருளானேன்.

அதாங்க சின்ன ஊர்ல வேலை செய்யறதுல இருக்கற வசதி!



தொடரும்

துளசியுடன் சந்திப்பு!

நியூஜி துளசி மற்றும் அவருடைய கணவர் கோபால் அவர்களின் சென்னை விஜயத்தையொட்டி நேற்று மாலை (ஞாயிறு) சென்னை டிரைவின் உணவகத்தில் தமிழ்மண ப்ளாகர்கள் சிலர் கூடினோம்.

சுமார் ஒரு மணி நேர சந்திப்பு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக அமைந்தது.

இத்துடன் நின்றுவிடாமல் சென்னையில் உள்ள எல்லா தமிழ்மண ப்ளாகர்களின் கூட்டத்திற்கும் கூடிய விரைவில்  ஏற்பாடு செய்தால் என்ன என்று தோன்றுகிறது.

அதற்கு முன்னேற்பாடாக சென்னையில் வசிக்கும் எல்லா ப்ளாகர்களுடைய விலாசம், தொலைப்பேசி எண் என்பனவற்றைக்கொண்ட ஒரு டைரக்டரியை தயாரித்தால் என்ன என்றும் தோன்றுகிறது.

இதற்கு உங்களுடைய விருப்பத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது வேண்டுகோள் மட்டுமே.. யாரையும் நிர்பந்திக்கும் உத்தேசமில்லை..

அன்புடன்
டிபிஆர்


2 கருத்துகள்:

  1. "யார்றா இவன்?" என்று சாலையில் போவோர் வருவோர் என்னைப் பார்த்து வியந்ததுண்டு!"

    உங்களுக்கு கொஞ்சம் போலீஸ் ஜாடை உண்டு என்றுதான் எனக்கு நேற்று உங்களைப் பார்த்ததும் பட்டது!

    ப்ளாக்கர் டைரெக்டரி நல்ல ஐடியா. முதலில் நான் ஆரம்பித்து வைக்கிறேன்.

    டோண்டு ராகவன்
    N.Raghavan B.E.,
    20/B.23, 15th Cross Street,
    Nanganallur,
    Cheennai - 600061
    Tel: 22312948, 22324807 & 9884012948

    இப்பின்னூட்டத்தின் நகலை என்னுடைய இப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு கொஞ்சம் போலீஸ் ஜாடை உண்டு என்றுதான் எனக்கு நேற்று உங்களைப் பார்த்ததும் பட்டது!//

    நீங்க சொல்றது சரிதான். வேறு சிலரும் என்னிடம் இப்படி கூறியிருக்கின்றனர்.

    ப்ளாகர் ஐடியா!

    நன்றி ராகவன் சார். இதுவரைக்கும் வேற யாரும் அவ்வளவா விருப்பம் காட்டவில்லை.. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.. இல்லையென்றால் இரண்டு நாட்கள் கழித்து தனி இடுகையாக போடலாம் என்று பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு