இது இத்தொடரின் எழுபத்தைந்தாவது பகுதி!
இத்தொடரை நான் எழுது ஆரம்பித்தபோது இத்தனை பகுதிகளை எழுதுவேன் என்று நினைக்கவில்லை. உங்களுடைய தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
***
எனக்கு அப்போதும் ஒன்றும் விளங்கவில்லை. ‘என்ன சார் சொல்றீங்க? டிராமான்னா?’
‘ஆமாம் சார். நான் அவர்கிட்ட சொன்னா மாதிரி வக்கீல் நோட்டீஸ்லாம் ஒன்னும் அனுப்பப் போறதில்லை. அதே மாதிரி கோர்ட்லயும் அப்பீலெல்லாம் ஒன்னும் பண்ணப் போறதில்லை.’
‘அப்படியா? அப்புறம் எதுக்கு சார் அப்படி சொன்னீங்க?’
அவர் தன் சகோதரரை ஒரு முறைப் பார்த்துவிட்டு தொடர்ந்தார். ‘சார் உங்க கிட்ட சொல்றதுக்கென்ன. இப்பல்லாம் எல்லா கோர்ட்லயும் டெனண்டுக்கு சாதகாமத்தான் இருக்காங்க. அதுவும் டெனண்ட் கவர்மெண்ட்டுன்னா கேக்கவே வேணாம். அதனாலதான் நம்ம வக்கீல் ஒரு மூனு மாசம் போகட்டும். உங்க பேங்க் டெனண்ட் அவங்களோட பிராஞ்ச துவக்கிரட்டும். அப்புறம் இந்த கடைய கேட்டு அப்பீல் பண்ணலாம்னார்.’
‘சரி அதுக்கும் நீங்களே இந்த டேமேஜுக்கு பொறுப்பு எடுத்துக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?’
‘சம்பந்தம் இல்லைதான் ஜோசப் சார். ஆனாலும் இத இந்த மேனேஜர் தலையில போடறதுனால பிரச்சினை சால்வ் ஆகப் போறதில்லை. நாமளே பண்றதுன்னா மேக்சிமம் ரெண்டு வாரத்துல பண்ணிரலாம். அத விட்டுட்டு அவங்களே பண்ணிக்கிட்டும்னு விட்டா மேனேஜர் நினைச்சாக்கூட அவரால செஞ்சிர முடியாது. டெல்லியிலருந்து எக்ஸ்பென்சுக்கு சாங்ஷன் வரணும். அவங்க முதல்ல இவர் மேலயே ஒரு என்க்வயரி வச்சி இவர்தான் இதுக்குக் காரணமான்னெல்லாம் பாப்பாங்க. அதுக்கே குறைஞ்சது மூனு மாசமாயிரும். என்னதான் இருந்தாலும், அவங்க எம்ப்ளாயி மேல தப்பே இருந்தாலும் டெல்லியிலருந்து அத அவ்வளவு ஈசியா ஒத்துக்க மாட்டாங்க. எப்படியாச்சும் நம்ம தலையில கட்டத்தான் பாப்பாங்க. கவர்ன்மெண்ட்ட எதுத்து நம்மால என்ன பண்ண முடியும்? ஒரு மூனு மாசம் கழிச்சி ரிப்பேரும் பண்ணி மூனு மாச சேல்ஸ் நஷ்டத்தையும் கொடுறான்னு அவங்க கோர்ட்ல போயி நின்னு யாராச்சும் ஒரு விவஸ்தையில்லாத ஜட்ஜ் அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு குடுத்தாலும் குடுத்துறுவார். அப்புறம் கேக்கவே வேணாம்.’
‘அப்புறம் எதுக்கு சார் அவர்கிட்ட அப்படி பேசினீங்க?’ என்றேன்.
அவர் என்னைப் பார்த்து விஷமத்துடன் சிரித்தார். ‘அதுக்கு காரணம் இருக்கு சார். முதல்ல அந்தாள் உங்கள குத்தம் சொல்றதுலருந்து திசை திருப்பணும். அடுத்தது, இதுக்கு நீயும் உன் கம்பெனியும்தான் காரணம்னு நான் சொன்னதுல அந்தாளு நிச்சயம் ஆடிப்போய்ட்டான். அதத்தான் நீங்களே பார்த்தீங்களே. அவனும் கடையில வேலை செய்யறவங்களும் நிச்சயமா இன்னேரம் கூடி பேசிக்கிட்டிருப்பாங்க. மேனேஜர் நம்மக் கிட்டருந்து பணம் வாங்கற விஷயம் இது வரைக்கும் அவங்க யாருக்கும் தெரிஞ்சிருக்காது. இப்போ அது தெரிஞ்சதுக்கப்புறம் நிச்சயம் அவரோட மதிப்பு அவங்க முன்னால குறைஞ்சிருக்கும். அவங்க எல்லாரும் சேர்ந்துக்கிட்டு அவர் மேலயே பழிய போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை. இந்த விஷயம் டெல்லி வரைக்கும் போச்சினா நிச்சயம் மேனேஜர்கிட்டருந்து எக்ஸ்ப்ளனேஷன் கேப்பாங்க. ஒரு வேளை கடையிலருக்கறவங்கக் கிட்டயும் என்ன நடந்துதுன்னு கேட்டாலும் கேப்பாங்க. அத நிச்சயமா நம்ம மேனேஜர் விரும்ப மாட்டார். அதனால இன்னும் கொஞ்ச நேரத்துல மன்னிச்சிருங்க சார்னு வந்து நிப்பார். அவர கொஞ்சம் நேரம் கெஞ்ச விட்டு அப்புறம் பெருந்தன்மையா சரி நானே செஞ்சி தரேன்னு சொல்றேன்னு வச்சிக்குங்க.. அந்தாளு இனிமே நம்ம கிட்ட வாலாட்ட மாட்டான். என்ன சொல்றீங்க? நான் செஞ்சது சரிதானே?’ என்று நிறுத்திவிட்டு என்னைப் பார்த்து விஷமத்துடன் சிரித்தார்.
அவருடைய சாதுரியத்தை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
'ஆனா இந்த ப்ளான்ல உங்களோட ரோல் ரொம்பவும் முக்கியமானது சார்.’
என்றவரை குழப்பத்துடன் பார்த்தேன்.
‘என்ன சார் சொல்றீங்க? நான் என்ன பண்ணேன்?’
‘என்ன சார் ஒன்னும் தெரியாத மாதிரி பேசறீங்க? நீங்க இந்த விரிசல் சமாச்சாரத்தை சரியான நேரத்துல அவர் முன்னால தூக்கிப் போட்டதும், அந்த நேரம் பார்த்து அங்க வந்து நம்ம பையன் கோபத்தோட அதையே எடுத்து பேசினதும்தான் முக்கியமான கட்டம்.. அத வச்சிக்கிட்டுத்தான் என்னாலயும் கோபம் படறாமாதிரி ஆக்ட் பண்ணி எல்லார் முன்னாலயும் மேனேஜரை மிரட்ட முடிஞ்சது.. நீங்க மட்டும் அந்த பாய்ண்டை எடுத்து போடலைன்னா அந்தாள அவ்வளவு ஈசியா படிய வச்சிருக்க முடியாது சார்.’
அவர் கூறியதும் சரிதான் என்று எனக்குத் தோன்றியது. உண்மையில் என்னை காப்பாற்றிக் கொள்ள நான் உபயோகித்த ஒரு யுக்தியே அது. இல்லையென்றால் மொத்த நஷ்டத்திற்கும் என்னையே பொறுப்பாக்கி விட்டிருப்பார் அந்த மேலாளர்.
மேலும் அவருடைய பணத்தாசைதானே என்னுடைய உரிமையாளரிடத்தில் கையூட்டு பெற வைத்து விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது? ஆகவே அவருக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு அவர் மட்டுமே பொறுப்பு என்று நினைத்தேன்.
‘சரி சார். நீங்க சொல்றதும் சரி தான். ஆனா சீக்கிரம் ரிப்பேர் பண்ணி முடிச்சிட்டீங்கன்னா நல்லது. இல்லன்னா நம்ம திறப்பு விழா நேரத்துல கல்லு, மண்ணுன்னு கடை முன்னால கிடந்தா நல்லாருக்காது. நீங்க சொன்னா மாதிரி இன்னைக்கே தரைய சரி பண்ற வேலைய ஆரம்பிச்சிட்டீங்கன்னா நல்லதுன்னு நினைக்கிறேன்.’ என்று இருவரையும் பார்த்துக் கூறிவிட்டு எழுந்து நின்றேன். ‘நான் வரேன் சார். பிசினஸ் விஷயமா ரெண்டு மூனு பேரை பார்த்துட்டு சாயந்திரமா வீட்டுக்கு போற வழியில உங்கள வந்து பாக்கறேன்.’
அவர்களிருவரும் எழுந்து நின்றனர். ‘சரி சார். நீங்க கிளம்புங்க. மேனேஜர் வரும்போது நீங்க இங்க இருந்தாலும் நல்லாருக்காது. ஏன்னா அவர இன்னும் கொஞ்சம் மிரட்ட வேண்டியிருக்குது.’ என்றார் மூத்தவர்.
நான் கிளம்பி கடை வாசல் வழியாக வெளியேறாமல் அவருடைய வீட்டிலிருந்த பின் வாசல் வழியாக வெளியேறி தெரு முனையில் நிறுத்தி வைத்திருந்த என்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சேட்டுடைய அலுவலகத்தை நோக்கிச் சென்றேன்.
நான் அவருடைய அலுவலகத்தை அடைந்தபோது வாசலில் ஒரு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் நின்றிருப்பதைப் பார்த்தேன். சேட்டுடையதாக இருக்க முடியாது என்று நினைத்தேன்.
நான் நினைத்தது போலவே சேட்டுடன் வேறொருவரும் இருந்தார்.
சேட் என்னைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்று அவரை அறிமுகப்படுத்தினார்.
‘ஜோசப் சார், இவர்தான் நம்ம ரோட்டரி க்ளப் பிரசிடெண்ட்.’
அவரை வெறுமனே ‘செட்டியார்’ என்று குறிப்பிடுகிறேன்.
அவர் தஞ்சையிலிருந்த மிகச் சில தொழிலதிபர்களில் முதன்மையானவர் என்றால் மிகையாகாது.
என்னுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் அவருடைய நிறுவனத்தின் பிரம்மாண்டமான நியான் பெயர்ப் பலகையைப் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.
பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தார். நான் யாரென்பதை அறிந்ததும் புன்னகையுடன் எனக்கு வணக்கம் தெரிவித்து, ‘சார் உங்கள பத்தி சேட்டும், நாயக்கரும் ஏற்கனவே சொல்லியிருக்காங்க. இப்படி திடீர்னு மீட் பண்ணுவேன்னு எதிர்பார்க்கலை.. ரோட்டரி மெம்பர்சையெல்லாம் நிச்சயம் இன்வைட் பண்ணுவீங்கன்னு சேட் சொன்னார். சரி அப்ப பார்த்துக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்.’ என்றார்.
'ஆமாம் சார். சேட்டோடவே வந்து எல்லாரையும் இன்வைட் பண்ற ஐடியாவுலதான் இருந்தேன். இன்னும் ரெண்டு நாளைல இன்விடேஷன் எல்லாம் ரெடியாயிரும். நானே உங்கள வந்து பாக்கறேன்.’ என்றேன்.
அவர் சேட்டைப் பார்த்து, ‘என்ன சேட்ஜி. சார நம்ம க்ளப்புல சேர்த்து விட்டிருக்கலாமே.. நம்ம க்ளப்புல பேங்க் மேனேஜர்ஸ் யாருமே இல்லையே..’ என்றார்.
சேட் ஒரு விஷமப் புன்னகையுடன், ‘என்ன செட்டியார் உங்க பேங்க் மேனேஜர மறந்துட்டீங்களா? அவர் தஞ்சாவூர்க்கு வந்ததுலருந்தே மெம்பராச்சே..’ என்றார்.
செட்டியாரின் கறுத்த முகம் மேலும் கறுத்தது. ‘சும்மா இருங்க சேட்ஜி.. அந்தாள ஞாபகப்படுத்தாதீங்க. சரி, அந்தாளுக்கு ஆளுங்களோட தராதரம் தான் தெரியலை. க்ளப்புக்காவது ஒழுங்கா வரலாமில்லே.. என்னவோ அந்தாளுக்குத்தான் வேலை இருக்கறமாதிரி.. நாம எல்லாம் வேல வெட்டியில்லாமயா மீட்டிங்குக்கு வந்துக்கிட்டிருக்கோம்.’ என்றவர் அப்போதுதான் நான் அங்கு இருப்பதை நினைவு கூர்ந்தவராய் என்னைப் பார்த்து புன்னகையுடன், ‘சார் ஒரு பேங்க் மானேஜேரைப் பத்தி இன்னொரு மானேஜர் முன்னால சொல்றேன்னு நினைச்சிக்காதீங்க. உண்மையத்தான் சொல்றேன்.’ என்றார்.
நான், ‘அதானல பரவாயில்லை சார்.’ என்றேன்.
சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வணக்கம் கூறிவிட்டு சென்றவரை வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு திரும்பி வந்தார் சேட்.
‘சொல்லுங்க சார். டேட்டெல்லாம் ஃபிக்ஸ் பண்ணிட்டீங்க போலருக்கு? ரெண்டு, மூனு வாரமா உங்கள பாக்கவே இல்லையா, என்ன நடக்குதுன்னே தெரியலையே நேத்துதான் நினைச்சேன். நம்ம பாய்க்கு ஃபோன் பண்ணப்பத்தான் நீங்க ஓப்பனிங் டே பிசினஸ்சுக்காக இங்கயும் அங்கயுமா அலைஞ்சிக்கிட்டீருக்கீங்கன்னு சொன்னார்.’
‘ஆமாம் சார். ஏறக்குறைய ஓப்பனிங் பட்ஜெட்ட புடிச்சிட்டேன். இன்னும் கொஞ்சம் கூட கிடைச்சா நல்லாருக்கும். அதான் உங்கள வந்து பார்த்துட்டு உங்களுக்குத் தெரிஞ்சவங்க இருந்தா அவங்களையும் போய் பாக்கலாம்னு வந்தேன்..’ என்று நான் இழுப்பதைப் பார்த்ததும் அவர் உரக்க சிரித்தார்.
‘நிச்சயமா சார்? நீங்க கேக்கணுமா சார்? அன்னைக்கு நீங்க வந்தப்போ நம்ம ஜாதி ஆளுங்க மீட்டிங் நடந்திச்சி இல்லையா சார், அதுல ஒரு ரிசலூஷனே பாஸ் பண்ணிட்டோம்னா பாத்துக்குங்களேன். எங்க அசோசியேஷன்ல செம கலெக்ஷன் இருக்கு சார். நாங்க எல்லாருமா சேர்ந்து ஒரு பொது நல சேவை மையம்னு ஒன்னு வச்சிருக்கோம். அது ஒரு ட்ர்ஸ்ட். வருஷ லாபத்துல ஒரு பர்சண்ட் எல்லாரும் ட்ரஸ்ட்டுக்கு காண்ட்ரிபியூட் பண்ணிரணும். அந்த ட்ரஸ்ட்டோட மெய்ன் அக்கவுண்ட ------ பேங்கலருந்து உங்க பேங்குக்கு மாத்திரணும்னு ரெசொலூஷன் போட்டுட்டோம்.’
நான் நன்றியுடன், ‘ரொம்ப தாங்க்ஸ் சார்.’ என்றேன். வருட லாபத்தில் ஒரு சதவிகிதம் என்றால் ட்ரஸ்ட் கணக்கில் கணிசமான தொகை இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனா மெம்பர்ஸ் ஒரு சின்ன ரிக்வெஸ்ட் வச்சிருக்காங்க சார் என்றார் சேட்.
அதான பார்த்தேன்.. 'ஸ்ட்ரிங்க்ஸ்' இல்லாம இந்த காலத்துல ஒன்னுமே நடக்காதே..
'சொல்லுங்க' என்றேன்.
தொடரும்..
முக்கா சதம் போட்டுட்டீங்க சார். பாராட்டுகள். இன்னும் இருவத்தஞ்சு போட்டா நூறாயிரும். ஆனா நீங்க அதையும் தாண்டியே தேரோட்டலாம். நடக்கட்டும். நடக்கட்டும்.
பதிலளிநீக்குஎன்ன கண்டிசன் போட்டுறப் போறாங்க...பங்கு குடுங்கன்னு கேட்டாங்களா..
வாங்க ராஜ்,
பதிலளிநீக்குசேட் ஒரு சரியான பிசினஸ் மேன்.. அவரைப் போன்ற ஆட்கள் எந்த உதவியையும் பிரதிபலன் பார்க்காமல் செய்ய மாட்டார்கள்தானே.. அதைத்தான் அவரும் கேட்டார்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குபங்கு குடுங்கன்னு கேட்டாங்களா..
பங்குன்னா? கிக்பேக்கா? சேச்சே அதெல்லாம் இல்லை..
ஓ! Shareஆ.. இல்லை..
பாராட்டுகள்.
பதிலளிநீக்குromba nallave irukku
பதிலளிநீக்குruvarin anubavam matravarkku nalla padam allava?
avasarappattu sekkiram mudichidatheenga!
வாங்க ஷண்முஹி,
பதிலளிநீக்குஉங்களுடைய பாராட்டுகளுக்கு நன்றி.
வாங்க சிவஞானம்ஜி,
பதிலளிநீக்குநீங்க சொல்றது சரிதான். ஒருவருடைய அனுபவம் நிறைய பேருக்கு பாடமாக அமைய வாய்ப்புண்டு என்றுதான் இந்த தொடரையே துவக்கினேன்.
நிச்சயம் அவசரப்பட்டு முடித்துவிட மாட்டேன்.