03 பிப்ரவரி 2006

திரும்பிப் பார்க்கிறேன் 73

அடுத்த நாள் காலை கண் விழித்த போது மணி ஒன்பது!!

நான் அதிகாலை சுமார் ஒரு மணிக்குத்தான் வீட்டுக்கு வந்திருந்ததாலும் என்னுடைய கிளை அலுவலகத்தில் முந்தைய நாள் இரவில் நடந்த விபத்தைப் பற்றி ஒன்றும் அறிந்திராததாலும் நான் காலையில் நேரம் கடந்து உறங்கிக் கொண்டிருந்ததை என் மனைவியும்  கண்டுக் கொள்ளவில்லை.

படுக்கையிலிருந்து எழுந்ததும் நேரத்தைப் பார்த்த நான் முதல் வேலையாக என்னுடைய கட்டட உரிமையாளரின் சகோதரர் கடைக்கு தொலைப்பேசி செய்தேன்.

மறுமுனையில் அவர் எடுத்து என் குரலைக் கேட்டதுமே பதற்றமடையாமல், ‘பரவாயில்லை சார். நான் என் பையனை உங்க வீட்டுக்கு அனுப்பியிருக்கேன். சாவிய மட்டும் குடுத்து விட்டுட்டு நீங்க சவுகரியம் போல வாங்க. நான் அதிகாலையில மேனேஜர் வீட்டுக்கு போய் அவரை 'கவனிக்க' வேண்டிய விதத்துல கவனிச்சிட்டு விஷயத்த விளக்கி சொல்லிட்டு வந்திருக்கேன். அவரும் இன்னும் வரல. அதனால பிரச்சினை ஒன்னும் பண்ணமாட்டார்னு நினைக்கிறேன். உங்களுக்கு வேற ஏதாச்சும் வேலையிருந்தாலும் அத முடிச்சிட்டு சாவகாசமா வாங்க. நான் இங்க பார்த்துக்கறேன்.’ என்றார் மூச்சு விடாமல்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல் அவர் ஒரு Man of Crisis. சிறிது நேரத்தில் என் வீட்டுக்கு வந்த அவருடைய மகனிடத்தில் கடைச் சாவியைக் கொடுத்து அனுப்பினேன்.

பிறகு, நான் நிம்மதியுடன் என் காலை வேலைகளை முடித்துக் கொண்டு புறப்பட்டு நேரே அச்சகத்தையடைந்து அங்கு தயாராயிருந்த அழைப்பிதழின் மாதிரியை பெற்றுக் கொண்டேன். பிறகு தஞ்சை மத்திய தந்தியலுவலகத்திலிருந்து என் வட்டார மேலாளரைத் தொடர்புக் கொண்டு அதை வாசித்துக் காண்பித்தேன். அவர் கூறிய சிறு சிறு மாற்றங்களைக் குறித்துக் கொண்டு திரும்பி அச்சகத்துக்குச் சென்று மாற்றங்களை விவரித்துக் கூறிவிட்டு என் அலுவலகத்துக்கு சென்றேன்.

அங்கு.. ஒரே களேபரமாய் இருந்தது. கடை மேலாளரை ‘கவனித்து’ விட்டதாக உரிமையாளர் கூறியிருந்தாலும் அவர் பாதிப்பின் தீவிரத்தை அறிந்திருக்கவில்லையென்பது அவர் என்னைப் பார்த்ததும் முகத்தில் கோபத்துடன் வந்ததிலிருந்தே தெரிந்தது.

நான் அவரை எதிர் கொள்ளும் முன்பு அங்கு நின்றுக் கொண்டிருந்த உரிமையாளரையும் அவருடைய சகோதரரையும் பார்த்தேன். அவர் பதற்றமடைந்திருந்தாலும் அவர் முகம் எப்போதும் போல் புன்னகையுடனிருந்தது. என்னைப் பார்த்து ‘கவலை வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பதுபோலிருந்தது அவருடைய புன்னகை.

எப்படி இவரால் மட்டும் எந்த சூழ்நிலையிலும் கலவரப்படாமல் இருக்க முடிகிறது என்று நான் வியப்படைந்தேன். ‘ஓகே. நானு அதுபோல் இன்று இருக்கப் போகிறேன்’ என்று முடிவெடுத்தேன்.

உடனிருந்த அவருடைய இளைய சகோதரர் படு டென்ஷனாக காணப்பட்டார். எந்த நேரத்திலும் கோபத்தில் வெடித்து விடுவேன் என்ற முகபாவனையுடன் இருந்தார். நான் அங்கு சென்றடைவதற்கு முன்பே கடை மேலாளர்க்கும் அவருக்கும் இடையில் ஏதோ வாக்குவாதம் நடந்திருக்க வேண்டும்.

என்னை நெருங்கிய கடை மேலாளரை அமைதியுடன் பார்த்தேன். இவருக்கும் எனக்கும் இடையில் இதுவரை எந்த பிரச்சினையுமில்லை. இவருடைய அனுமதியின் பேரில்தான் நான் லாக்கர் பெட்டகத்தை எடுத்துச் சென்றேன்.

நான் கடை உரிமையாளராயிருந்திருந்தால் கட்டடத்திற்கு ஏற்பட்ட நஷ்டத்தை நீங்கள்தான் தரவேண்டும் என்று கேட்டிருப்பேன். ஏனென்றால் கவுண்டர் பொருத்தப்பட்ட சமயத்தில்தான் அவர்கள் தளத்தைச் சேதப்படுத்தியிருக்க வேண்டும். அதை உரிமையாளரிடம் தெரிவிக்காமல் மறைத்தது குற்றம். அதை வைத்தே கடையின் உரிமையாளர்கள் மேலாளரை எதிர்க் கொண்டு ஏற்பட்ட நஷ்டத்திற்கு முழுப் பொறுப்பு நீங்கள்தான் என்று பிரச்சினையை எளிதாக திசை திருப்பியிருக்கலாம். அவர்கள் என்ன செய்தார்களோ தெரியவில்லை.

எனக்கும் இப்புதிய கோணம் நேற்று இரவே தோன்றியிருந்தால் அதை அவர்களிடம் அப்போதே கூறியிருக்கலாம்.

படிப்பினை: இதிலிருந்து நாம் என்ன தெரிந்துக் கொள்ள வேண்டும்? எந்த ஒரு பிரச்சினைக்குமே நாம்தான் காரணம் என்று நினைக்கத் தேவையில்லை. பிரச்சினையை எல்லா கோணத்திலிருந்து அமைதியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். நிச்சயம் நம் முன்னே பூதாகரமாக உருவெடுத்து நிற்கும் பிரச்சினைக்கு நம்மையல்லாது வேறு யாராவதோ, அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக இருக்கக் கூடும். நாம் நம்முடைய அலுவலகத்தில் சந்திக்கும் பிரச்சினைகள் பல சமயங்களில் நம்முடைய சக அல்லது நமக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களால்தான் ஏற்படுகின்றன. சில சமயங்களில் நம்முடைய மேலதிகாரிகளின் கவனக்குறைவினாலோ அல்லது அவர்களுடைய முழுமையற்ற அணுகுமுறையினாலோ (strategy) கவும் பிரச்சினைகள் ஏற்படலாம். பிரச்சினைக்கு நாம்தான் காரணம் என்று நாம் நினைப்பதனால் பல வேளைகளில் பிரச்சினையின் மூலகாரணத்தை அறிய முடியாமலே போய்விட வாய்ப்புண்டு!

‘என்ன சார் நீங்க? உங்க கிட்ட பொறுப்பா சாவிய கொடுத்துட்டு போனா நீங்க பாட்டுக்கு போய்ட்டு சாவகாசமா வர்றீங்க? உங்கள பத்தி உங்க மேலிடத்துக்கு புகார் பண்ணா நீங்க என்ன பதில் சொல்வீங்க?’ என்று என்னை நோக்கி உச்ச ஸ்தாயியில் கூச்சலிட்டவரைப் பார்த்தேன்.

என்னாலும் அதற்கு மேல் கோபபட்டிருக்க முடியும். நான் கோபப்படப்போவதில்லை என்ற முடிவுடன் இருந்ததால் அவரை அமைதியுடன் பார்த்தேன். ‘சார்.. பிரச்சினை இப்ப அதுவில்லை. எனக்கும் உங்க கடைக்கு நடந்த இழப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.’

அவருக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. அந்த கோபத்தால் அவர் மேலும் நிதானமிழந்து பேச ஆரம்பித்தார். ‘சார் என்ன ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைப்பா? டஇந்த விபத்துல மட்டும் யாருக்காவது காயம் ஏற்பட்டிருந்தா நீங்களா பொறுப்பு எடுத்திருப்பீங்க? என்னோட கடையில நடந்ததுக்கு நாந்தான சார் பொறுப்பு?’

படிப்பினை ந.2: ‘பதறாத காரியம் சிதறாது’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். கோபத்தின் உச்சியில் நாம் எடுக்கும் எல்லா முடிவுகளும் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும். நாம் கோபத்தின் பிடியில் சிக்கியிருக்கும்போது முடிந்தால் பிரச்சினைக்குரிய இடத்திலிருந்தோ சம்பாஷணையிலிருந்தோ சிறிது நேரத்திற்கு விலகிச் சென்றுவிட வேண்டும். இல்லையேல் எதிராளியின் வாதத்திற்கு கட்டுப்பட்டதுபோல் இருந்துவிட்டு பிறகு அவர் அமைதியானதும் நம்முடைய வாதத்தை எடுத்துரைக்க வேண்டும். இருவருமே  கோபத்தின் உச்சியில் உள்ளவரை பிரச்சினையும், வாக்குவாதமும் வளர்ந்துக் கொண்டுதான் செல்லுமே தவிர, தீர்வு நிச்சயம் கிடைக்காது. இது நான் அனுபவபூர்வமாக கண்டறிந்த ஒன்று.

அதனால்தான் இப்போதும் என்னுடைய ப்ளாகுகளில் பிரச்சினைக்குரிய பின்னூட்டங்கள் வந்தாலும் வாதத்தில் நான் இறங்குவதைத் தவிர்க்கிறேன். உதாரணத்திற்கு என்னுடைய ‘என் பைபிள்’ பதிவில் வந்த சில சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களை வெளியிடுவதைத் தவிர்த்தபோது அதே நபர்களிடமிருந்து கீழ்த்தரமான பின்னூட்டங்கள் வந்தன. ஆனால் அதையும் நான் அமைதியுடன் தவிர்த்தேன். பிறகு சில நாட்களில் பின்னூட்டங்களின் பின்னால் இருந்தவர்களும் ‘சே இந்தாள்கிட்ட பேசிப் பயனில்லை’ என்பதைப் புரிந்துக் கொண்டு பின்னூட்டம் இடுவதை நிறுத்தி விட்டனர். போலி டோண்டுவின் பிரச்சினையும் பூதாகரமானதற்கு இந்த கோபம்தான் காரணம்.

ஆனால் சில சமயங்களில் எதிராளி கோபத்தின் உச்சியில் இருக்கும் நேரத்தில் நாம் அமைதியாக இருப்பதை அவர் அலட்சியம் என்று தவறாக நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது.  அத்தகைய விளைவைத்தான் அன்றும் நான் சந்தித்தேன்.

‘உங்க கடையில நடந்ததுக்கு நீங்கதான் சார் பொறுப்பெடுத்துக்கணும்.’ என்றேன் கூலாக.

என்னுடைய பதற்றமடையாத நிலை அவருடைய கோபத்தை மேலும் கூட்டியது. அவர் நிதானமிழந்து என்னை அடிப்பது போல் என்னை நோக்கி வந்தார். ‘என்ன சார் உளர்றீங்க?’

நான் அவரிடமிருந்து பின் வாங்காமல், ‘சரி சார். நீங்க சொன்னா மாதிரி என்னுடைய மேலதிகாரிகளுக்கு புகார் பண்றீங்க. அவங்க என் மேல நடவடிக்கை எடுப்பதும் எடுக்காம போறதும் உங்க கையில இல்ல. ஆனா உங்க கடை சாவிய என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போனீங்கன்னு உங்க மேலதிகாரிகளுக்கு தெரிஞ்சா உங்க கதி என்னாவும்? அத யோசிச்சி பார்த்தீங்களா?’ என்றேன்.

அவர் அப்போதாவது அமைதியுடன் நான் கூறியதை யோசித்துப் பார்த்திருக்கலாம். அவர்தான் கோபத்தின் பிடியில் இருந்தாரே. என்னுடன் மேலும் வாதத்தில் ஈடுபடுவதில்தான் குறியாயிருந்தார்.

என்னை நோக்கி சுட்டிக் காட்டி, ‘சார், ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைக்காதீங்க. உங்களுக்கு அதுக்கு வயசு பத்தாது. உங்க வயசோட அனுபவம் எனக்கிருக்கு. என்னமோ உங்களுக்குத்தான் பேசத் தெரியும்னு பேசாதீங்க?’ என்றார் கோபத்துடன். ‘எங்க கடைக்கு ஏற்பட்ட டேமேஜ் முழுசுக்கும் நீங்கதான் பொறுப்புன்னு இன்னைக்கே உங்க எச்.ஓவுக்கு தந்தியடிக்கப் போறேன். அப்புறம் பாக்கலாம் யார் யாருக்கு பதில் சொல்லணும்னு.’

சரி. இவரை அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தால்தான் அடங்குவார் என்று நினைத்தேன்.

சற்று முன்பு என் மனதில் நினைத்ததை நாமே ஏன் செயல்படுத்தக் குடாது என்றும் யோசித்தேன். கடையின் உரிமையாளராக என்னை நினைத்துக் கொண்டு அவர்களுக்கு தோன்றியிருக்க வேண்டியதை எடுத்து இவர் முன் போடுவோம். அது நிச்சயம் பிரச்சினையை திசை திருப்பிவிடும் என்ற முடிவுடன் கோபத்தை அடக்க முயற்சித்து தோல்வியடைந்து யாருடன் மோதலாம் என்ற முனைப்புடன் என் முன்னே நின்ற மேலாளரைப் பார்த்தேன்.

‘சார் உங்கள நான் ஒன்னு கேக்கட்டுமா?’ என்றேன்.

என்னத்தைய்யா பெருசா கேட்டுடப் போற? என்ற தோரணையில் அலட்சியத்துடன் பார்த்த அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற உறுதி என் மனதில் தோன்றியது. சிறிய சிறிய காரியத்திற்கெல்லாம் கையூட்டு பெற்றுக் கொண்டு தான் ஊழியம் புரிந்த ஸ்தாபனத்திற்கே எதிராக நடந்துக் கொள்ளும் இவரைச் சங்கடத்திற்குள்ளாவதில் தவறேயில்லை என தோன்றியது.

‘லாக்கர கொண்டு போனதாலத்தான் உங்க கடைக்கு சேதம் வந்திருச்சின்னு நீங்க சொல்றீங்க, சரிதானே?’

‘ஆமா. அதுல என்ன சந்தேகம்?’

‘கடையின் மொத்த நீளம் சுமார் முப்பதடி. சரிங்களா?’

‘அதெல்லாம் எனக்கு தெரிய வேண்டிய தேவையில்லை. டாமேஜ் நடந்துதா இல்லையாங்கறதுதான் முக்கியம்.’

‘ஒத்துக்கறேன். ஆனா பள்ளம் விழுந்த இடத்துக்கு முன்னால இருக்கற சுமார் பத்தடிவரைகும் தரைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படலை. அதே போல அதுக்கு அப்புறம் இருந்த சுமார் இருபதடி தூரத்த கடந்தபோதும் தரைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதுலருந்து என்ன தெரியுது?’

‘ஏன் சார் நீங்க என்ன எஞ்சினியரா? ஏன் அதையும் நீங்களே சொல்லிருங்களேன்.’ என்றவர் அலட்சியத்துடன் சுற்றிலும் நின்ற தன் பணியாளர்களையும் கடையின் உரிமையாளர் சகோதரர்களையும் பார்த்தார்.

கடை உரிமையாளருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. ஆனால் அவருடைய மூத்த சகோதரர் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை மலர்ந்ததிலிருந்து அவருக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

தொடரும்



18 கருத்துகள்:

  1. என்ன சார் நீங்க சொல்றது அநியாயமா இருக்கு??? :(

    அவரு கோபத்துல ஏதோ பேசியிருக்கலாம். இருந்தாலும், உங்கள நம்பி கடைச் சாவியைக் கொடுத்துட்டு போயிருக்காரு.

    தரை உடஞ்சதுக்கு நான் தான் பொறுப்பு, சரி பண்ணித் தந்திடறேன்னு சொல்வீங்கன்னு எதிர்ப்பார்த்தேன். நீங்க வில்லங்கமா வேறேதோ சொல்லப்போறீங்க போலிருக்கே!

    பதிலளிநீக்கு
  2. // சரி சார். நீங்க சொன்னா மாதிரி என்னுடைய மேலதிகாரிகளுக்கு புகார் பண்றீங்க. அவங்க என் மேல நடவடிக்கை எடுப்பதும் எடுக்காம போறதும் உங்க கையில இல்ல. ஆனா உங்க கடை சாவிய என்கிட்ட கொடுத்துட்டு நீங்க போனீங்கன்னு உங்க மேலதிகாரிகளுக்கு தெரிஞ்சா உங்க கதி என்னாவும்? அத யோசிச்சி பார்த்தீங்களா? //


    ஜோசப். நீங்கள் இதை நியாயப்படுத்த போகிறீர்களா? உங்கள் படிப்பு, பதவி, கண்ணியம் ஆகியவற்றை நம்பி கடை சாவியை உங்களிடம் நம்பி ஒப்படைத்து சென்றிருக்கிறார். (இதே அந்த ப்ரதர்ஸ் கேட்டிருந்தால் கொடுத்திருப்பாரா?) இரவில் அவருக்கு என்ன நடந்தது என்று பொறுப்பான நீங்கள் எடுத்து சொல்லவில்லை (அது லேட் என்பதால்) பகலில் கடைக்கு வந்தால் டேமேஜ் ஆகி இருக்கிறது. யாரோ என்னவோ அவரிடம் சொல்கிறார்கள். அவர் நம்பிக்கை வைத்த உங்களை எதிர்பார்க்கிறார். ஆனால் நீங்கள் என்னடா என்றால் இப்படி பேசுகிறீர்கள். நான் அவர் இடத்தில் இருந்திருந்தால் உங்கள நம்பிக்கை துரோகம் செய்தவராகவே பார்த்திருப்பேன்.

    பதிலளிநீக்கு
  3. ஜோசஃப் அவர்களே,

    பல இடங்களில் நான் கூறுவதையே இங்கும் கூற நேரிடுகிறது. பிரச்சினை உங்கள் சொந்தப் பதிவில் வரும் ஆபாசப் பின்னூட்டங்கள் அல்ல. அதே போல உங்களையோ உங்கள் குடும்பத்தினரையோ திட்டி உங்கள் பதிவுகளிலோ அல்லது வேறு பதிவுகளிலோ வருவது கூட அவ்வளவு பிரச்சினைக்குரியது இல்லை.

    ஆனால் உங்கள் அடையாளம் போலவே இன்னொரு அடையாளத்தை உருவாக்கி மற்றவர் பதிவுகளில் நீங்கள் போடுவது போல மற்றவர்களையும் அவர்கள் பெண் உறவினர்களையும் திட்டுவதே மிகப் பெரிய பிரச்சினை. அதற்கு 100% பலியானது நானே. எனக்கு ஆதரவு அளித்த மாயவரத்தான், எல்.எல். தாசு, எஸ்.கே., விஜய், காசி ஆகியோரும் இதற்கு பலியாயினர்.

    நீங்கள் கூறலாம், ஏன் பலரும் அதையே கூறினார்கள், அதாவது, "சார் உங்கள் நடை எங்களுக்குத் தெரியாதா, நாங்கள் எல்லாம் உங்களைத் தவறாகவெல்லாம் நினைப்போமா" என்றெல்லாம்.

    ஆனால் அப்படித் தவறாக நினைத்தவர்களும் கணிசமான அளவில் இருந்தனர். இதில் நீங்களும் அடக்கம் என்று கூற வரவில்லை. (உங்களிடம் பிறகு வருகிறேன்.)

    என் டிஸ்ப்ளே பெயர் dondu(#4800161) என்பதை இட்டு அந்த போலி டோண்டு பதித்தப் பின்னூட்டங்கள் எண்ணிலடங்கா. இதற்கு நான் எதிர்வினை கொடுத்ததன் காரணத்தை நீங்களே இப்பதிவில் குறிப்பிட்டதையே அடிப்படையாக வைத்து கூறுவேன்.

    நீங்கள் எழுதினீர்கள்: "ஆனால் சில சமயங்களில் எதிராளி கோபத்தின் உச்சியில் இருக்கும் நேரத்தில் நாம் அமைதியாக இருப்பதை அவர் அலட்சியம் என்று தவறாக நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அத்தகைய விளைவைத்தான் அன்றும் நான் சந்தித்தேன்."

    அதைத்தான் நானும் செய்தேன் சார். ஆனால் என்ன, அலட்சியம் என்று திட்டப்பட்டவர்கள் நினைத்து, அதனால் அவர்களுடன் எனக்கிருக்கும் நட்பு கெடக்கூடாது என்ற எண்ணத்தில் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்டப் பதிவுகளுக்குப் போய் பின்னூட்டமிட்டு எலிக்குட்டி சோதனை, போட்டோ இருப்பது எல்லாவற்றுக்கும் மேலாக என் தனிப்பதிவிலும் என் பின்னூட்டங்கள் நகலிடப்படுவது என்பதையெல்லாம் கூற ஆரம்பித்தேன். அப்படியும் ரயாகரன், வீர வன்னியன், வா.மணிகண்டன் ஆகியோர் அவற்றையெல்லாம் அலட்சியம் செய்தனர்.

    இப்போது இன்னொரு வகை பின்னூட்டத்திற்கு வருவோம். அதாவது ஆபாசம் இருக்காது, ஆனாலும் மீதி எல்லாம், உதாரணத்துக்கு ஜாதி துவேஷம், எல்லாம் இருக்கும். அம்மாதிரிப் பின்னூட்டம் ஒன்று வீர வன்னியன் அவர்களின் பதிவில் வந்தது. அந்தப் பதிவில் நீங்கள் இட்டப் பின்னூட்டம் இதோ:

    "பள்ளு என்றால் என்ன தெரியுமா? மேன்மக்களாகிய பார்ப்பான்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட பள்ளர்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்போம் என்பதாகும். இவ்வாறு நாங்கள் எங்கள் சென்னைக் கூட்டத்தில் விளக்கம் சொல்வோம்."
    என்று கூறும் இவ்வார நட்சத்திரத்தை (அதாவது டோண்டு ராகவன்) என்னவென்று கூறுவதென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை.

    அவருடைய கருத்து (Are you really serious about what you wrote Mr.Dondu?) விமர்சனத்துக்குக் கூட தகுதியில்லாதது என்று எண்ணி ஒதுக்கித் தள்ளுகிறேன்.

    (அதன் பிறகு குழலி வந்து உங்கள் தவறானப் புரிதலை எடுத்துக் காட்டினார், நீங்கள் உங்களுக்கே உரிய பெருந்தன்மையுடன் அதற்காக என்னிடம் மன்னிப்பெல்லாம் கூடக் கேட்டீர்கள், இப்போது நாம் இருவரும் அசைக்க முடியாத அளவுக்கு நட்புடன் இருக்கிறோம் என்பதெல்லாம் பின்னால் வந்தது. உண்மையைக் கூறப்போனால் உங்கள் அருமையான நட்பு கிடைத்ததற்காகவாவது போலி டோண்டுவுக்கு நன்றி கூற வேண்டும். ஏனெனில் இதைப் படித்து அவன் ரத்த அழுத்தம் எல்லாம் இன்னும் ஏறும் அல்லவா?).

    எத்தனை முறை கரடியாகக் கத்தினாலும் ஒரு சாதாரண எலிக்குட்டி சோதனையைச் செய்யக்கூட சோம்பல்பட்டு தவற்றைத் திரும்பத் திரும்ப செய்கிறார்களே, அவர்களிடம் என்னதான் செய்ய முடியும்?

    இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைத் தெரிவிக்கும் வகையில் போலி டோண்டு பற்றிய என்னுடைய இப்பதிவிலும் அதை நகலிடுகிறேன். பார்க்க:

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  4. உண்மதான் சார். ஆத்திரம் வர்ரப்போ அமைதியா இருக்குறதுதான் நல்லது. ரெண்டு நாளைக்கு முன்னாடி எதுக்கோ ரொம்ப ஆத்திரம் வந்து எங்க டைரக்டர் சொன்னதுக்கெல்லாம் எதுத்துப் பேசினேன். அதுக்கப்புறம் வெளிய வந்தும் வாயத் தொறந்தாலே படபடன்னு வருது. வழக்கமா நான் அப்படிப் பேசுற ஆளே இல்லை. அதுனால ஆபீச விட்டு வீட்டுக்குக் கெளம்பி வந்துட்டேன். அடுத்த நாள் காலைல டைரக்டரப் பாத்து மன்னிப்புக் கேட்டுட்டேன்.

    போலி டோண்டு விஷயத்துல ரெண்டு பக்கமும் எக்கச்சக்க தப்புகள். சில விஷயங்களை கண்டுக்காம விட்டுட்டாலே போதும். கொஞ்ச நாள்ல மறந்துரும். அத விட்டுட்டு....தன்னைத்தானே தூண்டி விட்டுக்கிட்டு அடுத்தவனையும் தூண்டி விட்டுக்கிட்டு...சண்டையப் போட்டு....அப்புறம் என்னவோ வெற்றிக் கொடி நாட்டிட்ட மாதிரி....ம்ம்ம்ம்..ஒலகம் பூரா நடக்குது இப்ப.

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டம் இட்டவர் அனைவருக்கும் பதிலளிக்க தாமதமானதற்கு நேற்று நடந்த மீட்டிங்ஸ் இன்று காலையும் அனுமார்வால்போல் தொடர்ந்ததுதான். இப்போதுதான் ஓய்ந்தது..

    இங்கு வந்து பார்த்தால் கோபம், கோபம், கோபம் கொப்புளிக்கிறது..

    கோபத்துடன் கொந்தளித்தவர்கள் அதே கோபத்தில் பின்னூட்டத்தை இட்டதன் விளைவே என்றுதான் நினைக்கிறேன்.

    அத்தகையோர் மீண்டும் நான் எழுதியதை படித்துப் பார்க்கவும். இருப்பினும் எல்லா பின்னூட்டங்களுக்கும் என்னால் முடிந்தவரை என்னுடைய நிலையை நியாயப்படுத்தி எழுதுகிறேன். பொறுமையுடன் வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  6. முதல் கோபக்காரர் இராமநாதன், வாங்க.

    ‘சரி சார். நான் பாத்துக்கறேன். நீங்க சாவிய குடுத்துட்டு போங்க.’
    என்று நான் கூறியதை மட்டும் வைத்து அவர் என்னிடம் சாவியைக் கொடுத்துவிட்டு போனார் என்பது சரிதான். ஒத்துக் கொள்கிறேன். ‘பார்த்தீங்களா சார் எவ்வளவு பொறுப்பில்லாம லட்சக்கணக்கான சரக்கை விட்டுட்டு கூலா போயிட்டாரு. இதுவே இவருடைய சொந்த கடையாயிருந்தா இப்படி விட்டுட்டு போயிருப்பாரா? கவர்ன்மெண்ட் சொத்துதானே, நமக்கென்னன்னுட்டுதானே போய்ட்டாரு? அவருக்கு போயி நீங்க பரிஞ்சி பேசிக்கிட்டு வரீங்களே சார்?’ என்று அவர் சென்றவுடனேயே நம்முடைய கைகலப்பு ஹீரோ கூறினார். எனக்கும் அப்போது அப்படித்தான் தோன்றியது.. என்னுடைய வங்கி அலுவலகத்தை இன்னொருத்தர் பொறுப்பில் விட்டுவிட்டு சென்றிருப்பேனா என்று நினைத்துப் பார்த்தேன். இருப்பினும் உரிமையாளர் விபத்து நடந்தவுடனே என்னைப் பார்த்து நீங்க சாவிய என்கிட்ட கொடுத்துட்டு நீங்க வீட்டுக்குப் போங்க சார் என்று கூறியதும் நான் என்ன கூறியதாக நேற்றைய பதிவில் எழுதினேன்?

    “சார் நீங்க சொல்றா மாதிரி என் மனைவி என்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்பது சரிதான். னால் இங்கருந்து ஃபோன் பண்ணிட்டா போறும் சார். நான் இங்கருந்து போனாலும் என் கவனமெல்லாம் இங்கேயேதான் சுத்திக்கிட்டிருக்கும். வீட்ல நிம்மதியா தூங்கவும் முடியாது. அந்த மேனேஜருக்கும் இப்பவே இன்ஃபர்ம் பண்ணிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். அப்புறம் இத காணோம் அத காணோம்னு சொன்னார்னா நல்லாருக்காது. என்ன சார் உங்க பொறுப்புல கடைய விட்டுட்டு போனா நீங்க பாட்டுக்கு போயிட்டீங்களேன்னு சொன்னா என்ன பதில் சொல்றதுன்னு நினைக்கிறேன்.’ என்றேன் உரிமையாளர்கள் இருவரையும் பார்த்து.”

    நான் செல்லாததற்கு கடையில் நான் இல்லாத நேரத்தில் ஏதாவது காணாமற்போய்விட்டால் அதற்கும் நான் பொறுப்பேற்க வேண்டுமே என்று நினைத்துத்தான். அந்த அக்கறை அவருக்கும் இருந்திருக்க வேண்டாமா, இல்லையா?

    அதுவுமல்லாமல், நான் லாக்கர் பெட்டகத்தை என்னுடைய கிளைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வைத்தப்பிறகு கடையைப் பூட்டிக்கொண்டுதானே சென்றேன்? காலையில் ‘சார் மேலாளரைப் பார்த்து நிகழ்ந்ததைக் கூறிவிட்டேன்’ என்று என்னுடைய உரிமையாளரின் சகோதரர் கூறியதால் மட்டுமே அதுவும் கடை மேலாளர் வந்தப்பிறகு கடையைத் திறந்தால் போதும் என்று கூறித்தான் அவருடைய மகனிடம் சாவியைக் கொடுத்தனுப்பினேன்.

    இரண்டாவது, கடையின் கவுண்டருக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு நான் தான் பொறுப்பல்ல. ஏன் என்று நான் விளக்குகிறேன். லாக்கரை கவனக்குறைவாக கொண்டு சென்று அவருடைய கடையிலிருந்த கவுண்டரின் மேல் நேரடியாக மோதி அது உடைந்திருந்தால் நீங்கள் கூறியபடி அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொண்டு என்னுடைய செலவில் சரி செய்துக் கொடுத்திருக்க வேண்டும். அதுவா நடந்தது? இல்லையே. கடையின் தரை உடைந்து அதனால்தானே கவுண்டரும் சரிந்தது? தரைக்குச் சொந்தக்காரரான உரிமையாளரே தரை உடைந்ததற்குக் கூட என்னை பொறுப்பாக்காமல் தானே தரையை மட்டுமல்லாது கடையின் கவுண்டரையும் சரி செய்து தருகிறேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டாரே. அதற்கு என்ன காரணம்? தரையின் உறுதியின்மேல் அவருக்கு முழு நம்பிக்கை இருந்ததால்தான் அவர் என்னை ஆயிரம் கிலோ எடையுள்ள லாக்கரைக் கொண்டு செல்ல சம்மதித்தார். அத்துடன் அவரும் கூடவே இருந்து எப்படி கொண்டு செல்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டு இருந்ததால் அவருக்கே தெரியும் தரைக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு நான் காரணம் அல்ல என்று.

    மூன்றாவது, மேலாளரின் கோபம் நியாயமானதா என்று பார்ப்போம். கடை உரிமையாளரும் அவருடைய சகோதரரும் அதிகாலையில் அவருடைய வீட்டிற்கே சென்று கடைக்கு ஏற்பட்ட சேதாரத்தை அறிவித்தபோது அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உடனே அவர் என்னை தொலைப்பேசியில் அழைத்து, ‘உங்கள நம்பி சாவியக் கொடுத்துட்டு வந்தா இப்படி நஷ்டப்படுத்திட்டீங்களே சார்? இதுக்கு நீங்கதான் பொறுப்பு.’ என்று கூறியிருந்தால் ஒருவேளை நான் அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டிருக்கலாம். ‘கவலைப் படாதீங்க சார். உங்களுக்கு ஏற்பட்ட எல்லா நஷ்டத்தையும் கடை உரிமையாளரைக் கொண்டே ஈடுகட்டச் செய்கிறேன்.’ என்றும் கூறியிருக்கலாம். அப்படியா நடந்தது? என்ன, ஏது என்று முழுவதும் விசாரிக்காமல் அவர்களிருவரும் கொடுத்த கையூட்டைப் பெற்றுக் கொண்டுவிட்டு அது எனக்கு தெரியாதென்று நினைத்துக் கொண்டு அவருடைய கடைச் சிப்பந்திகளுக்கு முன் நாடகமாடியவரை எப்படி மதித்து மன்னிப்பு கேட்பது?

    அவரை நான் மடக்க நினைத்ததற்கு வேறொரு காரணமும் உண்டு.. அதையும் நான் இந்த பதிவிலேயே கோடிட்டு காட்டியிருக்கிறேன். இருப்பினும் அதை நான் நாளை அவரிடமே விளக்கும்போது அவருடைய ரியாக்ஷ்ன் எப்படி இருந்ததென்று பார்த்துவிட்டு கூறுங்கள். இந்த விபத்திற்கு யார் பொறுப்பு என்று.

    நான் இப்போது எழுதிய பதில் பின்னூட்டத்திலும் உங்களுக்கு திருப்தி இல்லாமல் போகலாம். பொறுமையாய் வாசியுங்கள்.. பிறகு இன்னும் ஏதாவது விளக்கம் வேண்டுமென்றால் தருகிறேன் :-()

    பதிலளிநீக்கு
  7. இரண்டாவது கோபக்காரர் முகமூடி, வாங்க.

    தயவுசெய்து இராமநாதனுக்கு நான் கொடுத்த பதிலைப் படிச்சிப் பாருங்க.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ராஜ்,

    நம்ம ஆளுக கோபத்தில சொல்லற முதல் வாக்கியமே "ரொம்ப புத்திசாலித்தனமா பேசறதா நினைக்காதீங்க" தான். ;) I hate such absurd statements. //

    இதுவாவது பரவால்லை. எங்க பேங்க்ல ஒருத்தர் ரெண்டு நிமிசத்துக்கு ஒருதரம் என்ன நான் சொல்றது புரிஞ்சிதான்னு கேட்டு கொன்னுடுவார். என்னவோ அவர் புரியாத விஷயத்த சொல்றா மாதிரியும் நாம அத புரிஞ்சிக்க முடியாத குழந்தை மாதிரியும். அவரோட வயசுக்கு மதிப்புக் குடுத்து நாங்களும் தேவுடான்னு கேட்டுக்கிட்டு இருப்போம்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க டோண்டு சார்,

    உங்களுடைய கோபம் நியாயமானதுன்னு நிறைய எடத்துல நீங்க சொல்லியிருக்கீங்க. ஒத்துக்கறேன்.

    உங்க பதிவுல பின்னூட்டம் இட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக என்னுடைய குடும்பத்தையும் சந்திக்கு இழுத்தவர்தான் போலி டோண்டு.

    நான் அவரை ஒரு பைத்தியக்காரர் என்றுதான் பார்த்தேன்.

    நாம ரோட்ல போய்க்கிட்டிருக்கும்போது ஒரு பைத்தியக்காரன் என்னையும் என் மனைவியையும் பார்த்து கீழ்த்தரமான வார்த்தைகளால் என்னை பேசினால் அவன் பைத்தியக்காரன் என்று தெரிந்தும் நான் கோபத்துடன் அவனுடன் மல்லுக்கு நின்றால் எனக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். அதுவே அவன் யார் எவர் என்று விசாரித்து அவன் கூறுவதை உதறி தள்ளிவிட்டால் என்னுடைய மரியாதையை என்னால் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்றுதான் நான் கூற வந்தேன்..

    பதிலளிநீக்கு
  10. வாங்க ராகவன்,

    இன்றைய பின்னூட்டங்களின் வேகத்தைப் பார்த்தாலே என்னுடைய ப்டிப்பினை 2 எவ்வளவு பொருத்தமானது என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் கூறியது மிகவும் சரி.. அஹை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
  11. எப்பவும் உங்களுக்கு ஒரு பிரச்சனைன்னு தொடரும் போடுவீங்க. இன்னைக்கு சந்தோஷமா வேற ஒருத்தருக்கு ஆப்புன்னு நிறுத்தியிருக்கீங்க. இதுவும் நல்லாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. "நாம ரோட்ல போய்க்கிட்டிருக்கும்போது ஒரு பைத்தியக்காரன் என்னையும் என் மனைவியையும் பார்த்து கீழ்த்தரமான வார்த்தைகளால் என்னை பேசினால் அவன் பைத்தியக்காரன் என்று தெரிந்தும் நான் கோபத்துடன் அவனுடன் மல்லுக்கு நின்றால் எனக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும். அதுவே அவன் யார் எவர் என்று விசாரித்து அவன் கூறுவதை உதறி தள்ளிவிட்டால் என்னுடைய மரியாதையை என்னால் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்றுதான் நான் கூற வந்தேன்.."

    உங்களைப்போலவே வேஷம் அணிந்து மூன்றாம் நபர் வீட்டிற்கே போய் அவர், அவரது பெண் உறவினர் என்று எல்லோரையும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அர்ச்சித்து, அது அத்தனையும் நீங்கள் செய்ததே என்று மேலோட்டமாக பார்ப்பவர்கள் செய்யுமாறு செய்தாலும் விட்டு விடுவீர்களா? அதுதான் எனக்கு முதலிலிருந்தே நடந்தது என்கிறேன்.

    இப்போது கூட நீங்கள் குறிப்பிட்டபடி உங்களுக்கு யார் பெயரிலிருந்து உங்களைத் திட்டி போடுவதாக உங்கள் பதிவில் வந்தது என்பதை யோசித்துப் பாருங்கள். அதுதான் சார் பிரச்சினை. என்னை எக்ஸ் அல்லது ஒய் என்ற பெயரில் வந்து திட்டியிருந்தால் நானும்தான் அலட்சியப்படுத்துவேன்.

    ஆனால் dondu(#4800161) என்ற என் டிஸ்ப்ளே பெயரைப் போட்டல்லவா ஊரில் இருந்த அத்தனைப் பதிவுகளுக்கும் போய் பின்னூட்டமிட்டான்? அதுவும் he did it from day 1.
    நான் என்னதான் செய்திருக்க வேண்டும் எனச் சொல்கிறீர்கள்? பதிப்பதை விட்டு ஓடியிருக்க வேண்டுமா அல்லது யாருக்குமே பின்னூட்டம் தராமல் இருக்க வேண்டுமா? போலி விஜய், போலி காசி, போலி மாயவரத்தான் எல்லோரூமே அப்புறம்தான் வந்தார்கள்.

    இப்பின்னூட்டம் உண்மை டோண்டு இட்டதே என்பதைத் தெரிவிக்கும் வகையில் போலி டோண்டு பற்றிய என்னுடைய இப்பதிவிலும் அதை நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  13. வாங்க இ.கொத்தனார்,

    வேற ஒருத்தருக்கு ஆப்புன்னு நிறுத்தியிருக்கீங்க. இதுவும் நல்லாதான் இருக்கு. //

    ஆப்புன்னு சொல்லமுடியுமான்னு தெரியலை. ஆனா நாந்தான் புத்திசாலின்னு நினைச்சிக்கிட்டிருக்கற ஒருத்தருக்கு அவரோட ஃபூலிஷ்தனத்த புரிய வைக்கணும்னு நினைச்சேன். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  14. அது என்னமோ போங்க ஜோசஃப்,
    வயசோ ரொம்பவே ஆயிப்போச்சு. இருந்தும் கோபப்படாதே, கோபம் வந்தா மூச்சை இழுத்திப் பிடிச்சிக்கோ, நூறுவரை எண்ணு..ம்ம்.. இதெல்லாம் எனக்கென்னவோ கைவரவே இல்லீங்க. ஓவராகவே ரெளத்திரம் பழகியாச்சி.

    நித்தம் ஒரு முறையாவது ரோட்ல ரூல்ஸ் மதிக்காத ஆளோடு ஒரு சண்டை போட்டாதான் ஜன்ம சாபல்யம் கிடச்ச மாதிரி இருக்கு. ராத்திரி நிம்மதியா தூக்கம் வருது!! நேத்து உங்க ஆளு ஒருத்தரு - வேற ஒண்ணுமில்லை - வங்கி G.M. ஒருவரோடு மல்லுக்கட்டினேன். ரொம்ப நாளைக்கப்புறம் இந்த மாதிரி சண்டை போட்டேனா; என்ன திருப்தி போங்க..!

    நானும் முயற்சி பண்ணியிருக்கேன் சீரியஸாவே. ஆனா, சண்டை போட வேண்டியபோது சண்டை போடாம விட்டால் மனசு நிம்மதியாகவே இருக்காது. அதனாலதான் என் சொந்த sam's ten commandments-ல் நாலாவது கட்டளை: Make war when you have to. அந்தக் காலத்தில என் H.O.D.(ரொம்ப powerful man) -யுடன் சண்டை போடும்போது சில நண்பர்கள் 'மலையோடு மோதுறியே' என்றார்கள். 'மலையோடு மோதி மண்டை போனாலும் பெருமைதானே' என்றேன். (என் மண்டைக்கு ஒன்றும் ஆகவில்லை. பாஸிட்டிவாகத்தான் ஆனது. 33 வயதில் போட்ட சண்டைக்கு இன்றும் மதிப்பு உண்டு)

    சில பிறப்புகள் அந்த மாதிரி போலும். நாய் வாலு கேசுகள். இனிமே என்னைக்கித் திருந்தி, நல்லவனாகி... அவ்வளவுதான்...பூட்ட கேசு'ம்பாங்களே..அதுமாதிரி.

    பதிலளிநீக்கு
  15. //இதுவாவது பரவால்லை. எங்க பேங்க்ல ஒருத்தர் ரெண்டு நிமிசத்துக்கு ஒருதரம் என்ன நான் சொல்றது புரிஞ்சிதான்னு கேட்டு கொன்னுடுவார். என்னவோ அவர் புரியாத விஷயத்த சொல்றா மாதிரியும் நாம அத புரிஞ்சிக்க முடியாத குழந்தை மாதிரியும். அவரோட வயசுக்கு மதிப்புக் குடுத்து நாங்களும் தேவுடான்னு கேட்டுக்கிட்டு இருப்போம். //

    அடியேனுக்கும் அந்த அனுபவம் உண்டு. உங்கள் வாடிக்கையாளர் தலைநகரத்தைச் சேர்ந்தவர் இல்லையே? ;-}

    பதிலளிநீக்கு
  16. வாங்க தருமி சார்,

    Make war when you have to//

    நீங்கள் கூறியது மிகவும் சரி. நானும் அக்கொள்கை உடையவன் தான். இந்த 'have to'ங்கறத நிர்ணயம் பண்றதுலதான் நாம க்ளியரா இருக்கணும். சும்மா நம்ம ஈகோவ சாட்டிஸ்ஃபை பண்றதுக்காக இல்லாம நம்ம பக்கம் நியாயம் இருக்கற பட்சத்துல நம்மள அநியாயமா குற்றம் சொல்றவங்க கிட்ட சண்டை போடறதுல தப்பே இல்லை.

    ஆனா பைபிள்ல சொல்றா மாதிரி நம்ம எதிராளி யாருங்கறதயும் பார்த்துட்டு சண்டை போடணும். சும்மா சண்டைய போட்டுட்டு ரெண்டு நாள் கழிச்சி அவர்கிட்டயே போய் அசடு வழிஞ்சி சார் நேத்தைக்கு நான் தெரியாம பண்ணிட்டேன்னு நின்னு அவர் அட போய்யான்னு மறுபடியும் கோச்சிக்கற நிலமையில நிக்கறதுக்கு முதல்லயே கோபப்படாம இருந்துட்டா நிம்மதி. என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  17. வாங்க பெத்தராயுடு,

    அடியேனுக்கும் அந்த அனுபவம் உண்டு. உங்கள் வாடிக்கையாளர் தலைநகரத்தைச் சேர்ந்தவர் இல்லையே? ;-} //

    இல்லைங்க. அந்த மாதிரி ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க.

    பதிலளிநீக்கு
  18. //
    ஓவராகவே ரெளத்திரம் பழகியாச்சி.
    //
    தருமி,
    நம்ம கதையும் அதேதான். கல்லூரிகாலங்களில் யாருடனும் சண்டை போடாவிட்டால் அன்று தூக்கம் வராது.இது குறித்து முன்பு ஒருமுறை எழுதியிருந்தேன் அதிலிருந்து

    ரெளத்திரம் பழகு என்றான்
    என்கவி பாரதி நானும்
    அதை என்னுள் ஓரு
    பகுதியாக்கிக்கொண்டேன்.
    பின்பு என்னை
    தன்னுள்
    ஒரு
    பகுதியாக்கிக்கொண்டது.

    (நெடுனாட்களுக்கு முன் எழுதியது பாதி மறந்து விட்டது)

    பதிலளிநீக்கு