அன்றைக்கு இரவு SDL ஐ கடை வழியாகக் கொண்டு சென்றபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏற்பட்ட விபத்து அடுத்த இரண்டு நாட்களுக்கும் பெரிய தலைவலியாய் போனது..
சாதாரணமாக கோத்ரெஜ் நிறுவனத்தார் அவர்களுடைய பாதுகாப்பு பெட்டகத்தை வாடிக்கையாளர்களுடைய இடத்தில் இறக்கி வைப்பதற்குத் தேவையான எல்லா உபகரணங்களுடன் வருவது வழக்கம்.
அன்றும் தேவையானவற்றையெல்லாம் கொண்டு வந்திருந்தனர். அத்துடன் அவ்வேலையில் மிகவும் பயிற்சிப் பெற்ற வேலையாட்களும் வந்திருந்தனர். எங்களுடைய உதவி தேவையில்லாமலே லாவகமாக அவர்களுடைய வாகனத்திலிருந்து இறக்கி கடை வாசல் முன்பு வைத்துவிட்டனர்.
கடையின் முகப்பு வாசல் சற்றே பெரிதாயிருந்ததால் கடைக்குள் எடுத்துச் செல்லவும் வசதியாயிருந்தது. அதுவரை எந்த பிரச்சினையுமில்லை.
இத்தகைய அதிக எடையுள்ள பொருட்களை ‘அலேக்காக’ என்பார்களே அதுபோல் தூக்கிச் சென்றுவிட முடியாது. அதுவும் வாசலிலிருந்து சுமார் முப்பதடி தொலைவிலிருந்த என்னுடைய கிளைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு அப்படி கொண்டு செல்வதென்பது இயலாத காரியம்.
ஆகவே தரையில் இரண்டு மூன்று இரும்பு கம்பங்களை இட்டு அதன் மேல் பெட்டகத்தை கிடத்தி உருட்டிக் கொண்டு செல்வதுதான் வழக்கம்.
அன்றும் அப்படித்தான் செய்தோம். சுமார் பத்தடி வரை எந்தவித தடங்கலுமில்லாமல் சென்றது. துணிக்கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு துணியை விரித்துக் காட்ட வசதியாக கவுண்டர்கள் அமைப்பதற்காக தரையில் சதுர வடிவில் பள்ளங்கள் எடுத்திருந்தார்கள். அத்தகைய பள்ளங்களில் ஒன்றிலிருந்து புறப்பட்டு கடைக்கு குறுக்கே நீண்ட கீறல் இருந்ததை குழல் விளக்கின் வெளிச்சத்தில் நாங்கள் எல்லோருமே கவனிக்கத் தவறி விட்டோம். பகல் நேரத்தில் நடந்திருந்தால் இதைக் கவனித்திருக்கலாம்.
அந்த கீறலின் மேல் பெட்டகம் ஏறியதும் தரை அப்படியே சரிந்து உள்ளே விழ கடையின் இரண்டு பக்கமும் அமைத்திருந்த கவுண்டர்களும் சரிந்தன. பெட்டகமும் குழிக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. நல்லவேளை யாருக்கும் காயம் படவில்லை.
சரியாக ஒன்பது மணிக்கு துவங்கிய வேலை பிரச்சினையில்லாமல் நடந்திருந்தால் சுமார் ஒரு மணி நேரத்தில் முடிந்திருக்கும். பெட்டகம் பள்ளத்தில் விழுந்தபோது மணி பத்துக்குள் இருக்கும்.
செய்வதறியாது திகைத்து நின்ற அனைவரும் ஒருவர் மேல் குறை கூறுவதிலேயே குறியாய் இருந்தனர். எனக்கோ விபத்தால் ஏற்பட்ட குழ்ப்பத்தையும் நஷ்டத்தையும் விட நாளைக் காலையில் கடை மேலாளரும் சிப்பந்திகளும் வந்து என்ன தகராறு செய்வார்களோ என்று கவலையாயிருந்தது.
‘என்ன பாய் இப்படி ஆயிருச்சி? இப்ப என்ன பண்றது?’ என்றேன் உரிமையாளரை நோக்கி. அவர் தன் சகோதரரைப் பார்த்தார். ‘அபி க்யா கர்நேக்கா பையா?’ என்றார்.
அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு என்னைப் பார்த்து, ‘சார், நீங்க ஒன்னும் கவலைப்படாம உங்க வீட்டுக்கு போங்க. அங்க பாவம் மேடம் தனியா எங்கடா உங்கள காணமேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருப்பாங்க. இத நாங்க பாத்துக்கறோம். நீங்க காலையில ஒன்பது மணிக்குள்ள வந்துருங்க. அதுக்குள்ள இது உங்க எடத்துல இருக்கும். அதுக்கு நான் காரண்டி. டஇந்த டேமேஜ பத்திக் கூட நீங்க கவலைப் படவேண்டாம். நாங்களே சரி பண்ணிக்கிறோம். என்ன சார்?’ என்றார்.
எனக்கு அவர் சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தாலும் இதை எப்படி அப்படியே விட்டுவிட்டு போவது என்று தோன்றியது. பெட்டகத்திற்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டு ஏதாவது ஒரு லாக்கர் திறக்க முடியாமல் போனாலும் பதில் சொல்ல வேண்டுமே என்று நினைத்தேன்.
அத்துடன் இந்த பிரச்சினையால் திறப்பு விழா தள்ளிப் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வதென்றும் தோன்றியது.
‘சார் நீங்க சொல்றா மாதிரி என் மனைவி என்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள் என்பது சரிதான். ஆனால் இங்கருந்து ஃபோன் பண்ணி சொல்லிட்டா போறும் சார். நான் இங்கருந்து போனாலும் என் கவனமெல்லாம் இங்கேயேதான் சுத்திக்கிட்டிருக்கும். வீட்ல நிம்மதியா தூங்கவும் முடியாது. அந்த மேனேஜருக்கும் இப்பவே இன்ஃபர்ம் பண்ணிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். அப்புறம் இத காணோம் அத காணோம்னு சொன்னார்னா நல்லாருக்காது. என்ன சார் உங்க பொறுப்புல கடைய விட்டுட்டு போனா நீங்க பாட்டுக்கு போயிட்டீங்களேன்னு சொன்னா என்ன பதில் சொல்றதுன்னு நினைக்கிறேன்.’ என்றேன் உரிமையாளர்கள் இருவரையும் பார்த்து.
நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்திலேயே திருச்சியிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் லாவகமாக பெட்டகத்தைப் பள்ளத்திலிருந்து (நல்ல வேளை பள்ளம் சுமார் ஒரு அடி ழம்தான் இருந்தது) தூக்கிவிட்டார்கள்.
பிறகு உரிமையாளரைப் பார்த்து, ‘பாய் இனிமேலாவது தரை ஸ்ட்ராங்கா இருக்குமா? ஏன்னா மறுபடியும் உழுந்துட்டா வம்பு பாய்.’ என்றனர்.
உரிமையாளர் மீண்டும் தன் சகோதரரைப் பார்த்தார். இவருக்கென எந்த யோசனையும் தோன்றாது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
அவர் தொழிலாளர்களைப் பார்த்து, ‘என்னங்க, கீறல் இருந்த எடத்துலதான உள்ள விழுந்திருச்சி. இதுவரைக்கும் தள்ளிக்கிட்டுத்தானே வந்தீங்க. நீங்க ஒரு ரெண்டடி தள்ளி ரோலரப் போடுங்க. ஸ்மூத்தா போயிரும். ஜாஸ்தி ஃபோர்ஸ் போடாம தள்ளுங்க.’ என்று யோசனை சொல்ல அவர்களும் அவர் கூறியபடியே இரும்பு குழாய்களை பள்ளத்தின் முனையிலிருந்து சற்று தள்ளி அமைத்து தொழிலாளர்களும் உரிமையாளரின் துணிக்கடை சிப்பந்திகளுமாக சேர்ந்து பெட்டகத்தை அதுவரை அலேக்காக தூக்கி குழாய்களின் மேல் மெள்ள வைத்து எந்த பிரச்சினையுமில்லாமல் அடுத்த அரை மணி நேரத்தில் என்னுடைய வங்கிக்கென கட்டப்பட்டிருந்த பாதுக்காப்பு பெட்டக அறை வாசலில் கொண்டு சேர்த்தனர்.
எனக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.
இனியும் ஐந்தாறு அடி தூரம்தான். பாதுக்காப்பு அறையின் இரும்புக் கதவுகளைத் திறந்து பெட்டகத்தை நெட்டுக்கு நிமிர்த்தி வைத்து லாக்கர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக திறந்து பரிசோதித்து முடித்து திருப்தியுடன் கோத்ரெஜ் தொழிலாளர்களுடைய படிவத்தில் கையொப்பமிட்டு நிமிர்ந்த போது மணி நள்ளிரவு!
‘சார்’ என்று தலையைச் சொறிந்துக் கொண்டு நின்ற தொழிலாளர்களுக்குக் கணிசமான தொகையை டிப்சாக கொடுக்கவே அவர்களும் சந்தோஷத்துடன் விடை பெற்று சென்றனர்.
ஆக, வங்கிக்கு எந்த சேதாரமும் இல்லை.
துணிக்கடை மேலாளரையும் சமாளித்துவிட்டால் பிரச்சினை தீர்ந்தது. சம்பவம் நடந்தது வெள்ளிக் கிழமை. சனிக்கிழமை எப்படியும் கடையைத் திறக்க முடியாது. இரவு பகல் பாராமல் வேலை செய்தால் சரிந்துப்போன தரையைச் இரண்டு நாட்களுக்குள் சரி செய்துவிட முடியும் என்று நினைத்தேன்.
ஆனால் பழுதாகிப் போன கடை கவுண்டர்களைச் சரி செய்ய குறைந்தது இரண்டு வாரங்கள் பிடிக்கும். அதுவரைக் கடையில் வணிகம் செய்வது சாத்தியமாயிருக்காது. அதை நினைத்தால்தான் பிரச்சினை பூதாகரமாக வெடிக்க வாய்ப்பிருக்கிறதென்று நினைத்தேன்.
என்னுடைய உரிமையாளர்களின் எண்ணத்தை அறிய அவர்களைப் பார்த்தேன். சேதாரத்தையே பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்த மூத்தவர் அந்த நேரத்திலும் கலக்கமடையாமல் என்னைப் பார்த்து புன்னகை செய்தார்.
அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி. எந்த இக்கட்டிலும் நிதானம் தவறாமல் நிற்பார். நான் தஞ்சையிலிருந்த இரண்டாண்டு காலத்தில் அவருடைய இந்த குணம் பல நேரங்களிலும் என்னைக் கவர்ந்தது. அத்துடன் ஒரு திறம்படைத்த மேலாளருக்குத் தேவையான எல்லா திறமைகளும் அவருக்கிருந்தன.
‘சார் நீங்க ஒன்னுக்கும் கவலைப் படாதீங்க. இந்த டேமேஜை சரி பண்றதுக்கு மேக்சிமம் ரெண்டு நாள் ஆவும். நம்ம மேஸ்திரி பக்கத்துலதான் இருக்கார். இப்பவே அவர போய் பார்த்து நாளைக்கு எந்த வேலையிருந்தாலும் ஒரு பத்து பேரோட வந்துருங்கன்னு சொல்லிட்டு வந்திடறேன். ஞாயித்துக் கிழமை ராத்திரிக்குள்ள கான்க்ரீட் போட்டு தளம் ரெடியாயிரும். அப்புறம் திங்கக் கிழமை பகல் நேரத்துலயே புது டைல்ஸ் ஒட்டிரலாம். அதுக்கப்புறம் நம்ம கடையில வேல பார்த்த கார்ப்பெண்டர்ச வச்சி கவுண்டர் வேலையையும் முடிச்சி குடுத்துடறேன். மேனேஜர் ஏதாச்சும் தகராறு பண்ணார்னா அவர் எப்படி டீல் பண்றதுன்னு எனக்குத் தெரியும். நீங்க கவலைப் படாம வீடு போய் சேருங்க. என் சன்னை வேணும்னா கூட அனுப்பட்டுமா சார்?’ என்றவரைப் பார்த்து வியப்புடன் என் புருவங்களை உயர்த்தினேன்.
‘அதெப்படி சார் அதுக்குள்ள அவ்வளவு கச்சிதமா எஸ்டிமேட் போட்டு சொல்றீங்க? சரி அப்படியே செஞ்சாலும் கடை திறக்கறதுக்கு இன்னும் பத்து நாளாவது ஆகும் போலருக்கே. அவங்க நஷ்ட ஈடு கேட்டா?’ என்றேன்.
அதற்கும் அவரிடம் பதிலிருந்தது. ‘சார் ஃபெஸ்டிவல் சீசன்லாம் முடிஞ்சி போச்சி. கல்யாணம் சீசன் துவங்குறதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. இந்த சீசன்ல இவங்க கடையில் மிஞ்சிப் போனா டெய்லி ஒரு அஞ்சாயிரம் சேல்ஸ் நடந்தா லாபம். அத நாங்க பேசி தீர்த்துக்கறோம். நீங்க கவலையே படாதீங்க. வேணும்னா ஒன்னு பண்ணலாம். நம்ம ஃப்ரெண்டோட கார்ல நாம மூனு பேருமே மேனேஜர் வீட்டுக்கு போய் சுருக்கமா நடந்தத சொல்லலாம். நானே எல்லா ரிப்பேர்சையும் பண்ணிக் குடுத்தடறேன்னு சொல்றேன். அவர் என்ன சொல்றார்னு பார்த்துக்கலாம். என்ன சார்?’
இது தேவையா என்று யோசித்தேன். அப்போதே நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. இனி மேலாளருடைய வீட்டுக்கு சென்று, அவரிடம் பேசி.. வேண்டாம் நாளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம். இனி இவர்களால் கடைக்குள் ஒன்றும் செய்ய முடியாது. கடையை பூட்டிக்கொண்டே போகலாம் என்று முடிவு செய்து அவரிடம் கூறினேன்.
அவரும் சற்றும் யோசிக்காமல், ‘நீங்க சொல்றதும் சரிதான் சார். இப்பவே மணி ஒன்னாகப் போகுது. நீங்க கடைய பூட்டி சாவிய கொண்டு போங்க. நாளைக்கு காலைலயே அவர்கிட்ட சொல்லிக்கலாம்.’ என்று தானே கடையைப் பூட்டி சாவியைக் கொடுக்க நானும் பெற்றுக் கொண்டு என் வாகனத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டேன்.
நான் வீடு செல்லும் வழியில்தான் நான் ஞாயிற்றுக் கிழமைகளில் செல்லும் தேவாலயமும் இருந்தது அதைக் கடக்கும் நேரத்தில், ‘சோதனைகள் போறும் சாமி. நாளைக்கு எந்த பிரச்சினையுமில்லாமல் முடிக்கணுமே’ என்ற வேண்டிக் கொண்டு வீடு போய் சேர்ந்தேன்..
நாளைய பிரச்சினையை நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற நினைவுடன் படுக்கையில் படுத்தவன் உடல் அசதியில் அப்படியே உறங்கிப் போனேன்.
அடுத்த நாள் காலை கண் விழித்த போது மணி ஒன்பது!!
தொடரும்
SDL - இதை இராமநாதனின் TLC பதிவுலே போட்டீங்களோ? Safe Deposit Locker-ல இருந்து Software Development Lifecycle வரை உங்க அனுபவம். அடேயப்பா. எல்லாத்தையும் எழுதுங்க. படிக்க காத்திருக்கோம்.
பதிலளிநீக்குஅப்பாடியோவ்! ஒருவழியா லாக்கர பாங்குக்குள்ள கொண்டு போய் வெச்சாச்சு. கிரேட். விபத்துன்னதும் நாங்கூட யாருக்கோ என்னவோன்னு நெனச்சேன். நல்லவேளைக்கு ஆளுகளுக்கு அடிபடலை.
பதிலளிநீக்குஅட ஜோசப் சார்,
பதிலளிநீக்குஉங்க லொள்ளுக்கு அளவேயில்லியா??? கடுப்புல தான் கேக்கறேன்!!!
நேத்திக்கு சொன்னதப் பார்த்தவுடனேயே அய்யோ, என்னாச்சோனு நானும் இராகவனா மாதிரி நினச்சேன். நல்லவேளை, வெறும் தரையும், கவுண்டரும் தானே.
ஆமா, அந்த NTC மேனேஜர் சும்மாவே பிரச்சனை பண்றாரே? இப்ப என்ன செய்யப் போறோரோ. நீங்க வேற லேட்டாத் தான் எழுந்திருச்சேன் கறீங்க!
பிராஞ்சு திறந்தப்புறமாவது நம்மூரப் பத்தி நல்லதா எழுதுவீங்களா? :)))
பின்னூட்டம் இட்ட அனைவருக்கும்(!) சாரி.. இன்னைக்கி நாள் முழுசும் மீட்டிங், மீட்டிங்னு போட்டு நொந்து போயிட்டேன். இப்பத்தான் முடிஞ்சி நம்ம டெவலப்பர்ஸ் எல்லாம் போனாங்க.
பதிலளிநீக்குசரி விஷயத்துக்கு வருவோம்..
வாங்க இ.கொத்தனார்,
பதிலளிநீக்குSDL - இதை இராமநாதனின் TLC பதிவுலே போட்டீங்களோ? //
போட்ருக்கலாம் இல்லே.. இராமநாதன்! உங்க லாஆஆஆங் லிஸ்ட்ல இதையும் சேத்துருங்க.
Safe Deposit Locker-ல இருந்து Software Development Lifecycle வரை //
ஆறிலிருந்து அறுபது வரைக்கும் மாதிரியா?
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஇதுவரைக்கும் சாதாரணமா கரெக்டா ஊகிச்சிருவீங்க. இந்த தடவை நான் ஜெயிச்சிட்டேன். :-))
வாங்க இராமநாதன்,
பதிலளிநீக்குநீங்க மூனெழுத்துன்னு ஒரு நீஈஈஈஈண்ட லிஸ்ட் போட்டு லொள்ளு பண்ணீங்களே அத விடவா? அந்த லிஸ்ட்ல இ.கொத்தனான் சொன்னதையும் சேர்த்துக்குங்க.
அப்புறம் உங்க ஊரை பத்தி நல்லதா எழுத ஏதாச்சும் இருக்கா?
ச்சும்மா.. கோச்சிக்காதீங்க..
நல்லதா இருக்கு.. கொஞ்சம் பொறுத்துக்குங்க.. இன்னும் ரெண்டோ மூனோ எப்பிசோட்தான்.