27 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 44

யார்றா "அது? நடுக்கூடத்துல வச்சி உபசாரம் பண்ணிக்கிட்டிருக்கே..' என்று வீட்டின் பின்புறத்திலிருந்து வந்த ஓசையைக் கேட்டதும் பதறி எழுந்து ஓடிய வீட்டு உரிமையாளரைப் பார்த்து வியந்துபோய் நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் பார்க்க, தரகர் கலவரத்துடன் எங்களையே பார்த்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்த வீட்டின் உரிமையாளர் நேரே தன் மனைவி இருந்த
அறைக்கு சென்றார். குசுகுசுவென்ற பேச்சு சப்தம் மட்டுமே எங்களுக்கு கேட்டது. நானும் என் மனைவியும் விவரம் புரியாமல் அவர்களிருவரும் இருந்த அறை வாசலையே பார்த்தோம்.

சற்று நேரத்தில் கூடத்திற்கு வந்த உரிமையாளர் என் எதிரில் இருந்த பலகை ஊஞ்சலில் அமர்ந்து என்னைப் பார்த்து அசடு வழிந்தார். ' அது எங்கம்மா சார். தொன்னூறு வயசாயிருச்சி. கண்பார்வை மங்கிட்டாலும் காது மட்டும் ஷார்ப்பா இருக்கு. அதான் நாம பேசிக்கிட்டிருந்தத கேட்டுட்டு யாருன்னு கேட்டாங்க. புதுசா குடித்தனம் வரப்போறவங்கம்மான்னேன். ஜாதி, குலம் கோத்திரமெல்லாம் பார்த்தியாடான்னு கேக்கறாங்க. அதான் என்ன சொல்லலாம்னு என் வீட்ல கேட்டுட்டிருந்தேன்.'

நான் என்ன மறுமொழி கூறுவதென தெரியாமல் தரகரைப் பார்த்தேன். அவர் மேல்கொண்டு எதுவும் பேசவேண்டாம் என்பதுபோல் தலையை அசைத்தார். உரிமையாளர் அதை பார்த்துவிட்டார். 'என்ன தரகரே, என்ன சொல்றீங்க? சார் கிறீஸ்துவங்கன்னு அம்மா கிட்ட சொல்ல முடியாது. அதான் யோசிக்கறேன்.' என்றார்.

தரகர் உடனே, அதுக்கென்னங்க, சார் என்ன நேரா போயி அம்மாகிட்ட சொல்லவா போறார்? நீங்களா சொன்னாத்தான் தெரியப் போவுது.' என்றார்.

எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. என் மனைவியைப் பார்த்தேன். அவரோ, 'வேண்டாங்க.. நீங்க சும்மா இருங்க.' என்பதுபோல் பார்த்தார்.

அதைப் பொருட்படுத்தாமல் நான் உரிமையாளரைப் பார்த்தேன். 'சாரி சார். உங்களுக்கு வீடு கொடுக்கறதுக்கு சங்கடமாயிருந்தா சொல்லிருங்க. எனக்கு பொய் சொல்லி வீடு பிடிக்கணும்னு இல்ல. நல்லா யோசிச்சி சொல்லுங்க. நான் வரேன்.' என்றவாறு எழுந்து நின்றேன்.

அவரும் எழுந்து நின்று, அதுக்கில்ல சார்..' என்று இழுத்தார். நான் தரகைரை பார்த்தேன். 'உங்களுக்கு சிரமம் இல்லேன்னா.. இந்த ஏரியாவிலேயே வேற வீடு ஏதாவது இருங்க காமிங்க.' என்றேன்.

தரகர் உரிமையாளரைப் பார்த்தார். 'சார் ஏதோ சொல்ல வந்தீங்களே?' என்று இழுத்தார்.

நான் இடைமறித்து, 'விட்டுருங்க சார். நாம வேற வீட்ட பார்த்துக்கலாம்.' என்று கோபத்துடன் கூறிவிட்டு என் மனைவியைப் பார்த்து 'வா போகலாம்.' என்றேன்.

நான் இறங்கிப் போவதைப் பார்த்து தரகரும் வேறு வழியில்லாமல் எங்களுக்கு பின்னால் ஓடி வந்தார். வீட்டு உரிமையாளரும் என் பின்னாலேயே வந்தார். 'சார் தயவுசெய்து தப்பா நினைச்சிக்காதீங்க. எனக்கு எங்கம்மாவ மீறி எதுவும் செய்ய முடியாது. வயசானவங்க இல்லையா?' என்றார்.

சட்டென்று பொங்கி வந்த கோபத்தை அடக்க முடியாமல் அவரை திரும்பிப் பார்த்தேன். 'கண்டிப்பா இதை தப்பாத்தான் எடுக்கப்போறேன் சார். உங்கம்மா வயசானவங்கன்னு சொல்லி உங்க செயலுக்கு நியாயம் கற்ப்பிக்க பாக்காதீங்க. என்னை நீங்க முதமுதலா கேட்ட கேள்வியே என்னுடைய ஜாதிய பத்தித்தானே சார்? நீங்க ஒரு அரசு ஊழியர். உங்க மேலே வேணும்னா நான் அதிகாரபூர்வமா புகார் எழுதி உங்க தலைமை அதிகாரிக்கு அனுப்ப முடியும். அப்படி அனுப்பினா என்ன ஆகும்னு தெரியுமில்ல? I can do that, you want to test me?'

என்னுடைய குரலில் இருந்த கோபம் அவரை வெகுவாக கலவரப்படுத்தியது. 'சார் அப்படியெல்லாம் செஞ்சிராதீங்க. எனக்கு இன்னும் ரெண்டு வருஷ சர்வீஸ்தான் இருக்கு. இந்த நேரத்துல இந்த மாதிரி புகார் வந்தா இதையே காரணமா வச்சி ஒருவேளை வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பிருவாங்க.'

கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீருடன் நின்றவரைப் பார்த்தபோதும் அவர்மேல் எனக்கு துளிக்கூட இரக்கம் ஏற்படவில்லை. அரசு துறையில் இத்தனை உயர்ந்த பதவியில் இருக்கும் இவரைப் போன்றவர்களே ஜாதி, மதம் என்ற பிரிவினையில் மக்களைப் பார்க்க துவங்கினால் பாமர மக்கள் என்று மாறப்போகிறார்கள்? இவருக்கு நான் கொடுக்கப்போகும் ஒரே தண்டனை நான் எங்கே புகார் அனுப்பப் போகிறேனோ என்று நினைத்து நினைத்து கலவரப்பட வைப்பதுதான். ஆகவே அவருடைய சால்ஜாப்புக்கு மறுமொழி கூறாமல் நான் வண்டியில் ஏறி அமர என் மனைவியும் அவரைத் தொடர்ந்து தரகரும் ஏறிக்கொண்டனர்.

வண்டி புறப்பட்டு சிறிது நேரம்வரை பேசாமல் இருந்த தரகரைப் பார்த்தேன். 'என்ன தரகரே பேசாம வர்றீங்க? நான் செஞ்சதுல ஏதாச்சும் தப்பு இருக்கா சொல்லுங்க. ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கற இவரே இப்படி செஞ்சா என்னாவறது? நான் எங்க அவர்மேல புகார் பண்ணிருவேனோன்னு தினமும் அவர் பயந்து சாகணும். அதுக்குத்தான் அப்படி ஒரு பொய்ய சொன்னேன்.'

தரகர் வியப்புடன் என்னை திரும்பிப் பார்த்தார். 'அப்படீன்னா நீங்க அவர்மேல புகார் அனுப்ப போறதில்லையா சார்?'

நான் சிரித்தேன். 'கண்டிப்பா இல்லங்க. அவர்மேல புகார் அனுப்பினா அவர் சொன்னா மாதிரி கண்டிப்பா அவர்மேல ஆக்ஷன் எடுப்பாங்க. வேலை போகலைன்னாலும் இதுக்கப்புறம் அவருக்கு எந்த பதவி உயர்வும் கிடைக்காது. அதனால எனக்கென்ன லாபம்? அவருடைய செயலுக்கு ஒரு அடையாள தண்டனை, அவ்வளவுதான். சரி அது போட்டும். இந்த ஏரியாவுல வேற ஏதாச்சும் வீடு இருக்கா? இருந்தா அதையும் பார்த்திட்டு போயிரலாம் இல்லே, அதனாலதான் கேக்கறேன்.'

தரகர் ஏதோ சொல்ல வந்து தயங்குவதைப் போல் தெரிந்தது.

'சொல்லுங்க. ஏதோ சொல்ல வந்தீங்க. என்ன விஷயம், சொல்லுங்க.' என்றேன்.

அவர் சிறிது நேரம் தயங்கிவிட்டு வண்டி ஓட்டுனரை ஒரு முறை பார்த்தார். 'சார் ஒன்னுமில்லை. நாயக்கருக்கு பிடிக்கிமோ பிடிக்காதோன்னுதான் தயங்குறேன். அவர் அந்த ஜாதிக்காரரோட வீட்டை சாருக்கு காண்பிக்காதீங்கன்னு என்கிட்ட கண்டிப்பா சொல்லியிருந்தாக. அதான் யோசிக்கறேன்.'

எனக்கு எரிச்சலாக வந்தது. இருப்பினும் அதை வெளியே காட்டாமல் அவரைப் பார்த்தேன். 'சும்மா தயங்காம சொல்லுங்க. அந்த வீடு எங்கருக்கு? பக்கத்துல இருந்தா நேரா அங்க வண்டிய விடுங்க. வீட்ட பார்ட்த்துட்டு முடிவு பண்ணலாம்.'

அவர் திரும்பி ஓட்டுனரிடம் அந்த வீட்டுக்கு வழி கூற அடுத்த ஒருசில நிமிடங்களில் அந்த வீட்டை அடைந்தோம். வீட்டை வெளியிலிருந்து பார்த்தபோதே எனக்கு மிகவும் பிடித்துப்போனது. என் மனைவியைப் பார்த்தேன். அவருடைய முகத்தில் தெரிந்த சந்தோஷம் அவரும் நான் நினைத்ததையே நினைக்கிறார் என்பதை உணர்த்தியது. சுமார் நான்காயிரம் சதுர அடி நிலத்தில் பிரதான வீடு ஒன்றும் அவுட் ஹவுஸ் போல சிறியதாய் கச்சிதமாய் ஒரு வீடும் இருந்தன. அவுட் ஹவுஸ் வீடுதான் காலியாயிருக்கும் என்று நினைத்தேன்.

வீட்டையடைந்ததும் தரகர் முதலில் இறங்கி 'சார் நான் முதல்ல உள்ளார போயி உங்களப்பத்தி சுருக்கமா சொல்லிட்டு உங்கள கூப்பிட்டுகிட்டு போறேன். நீங்க தப்பா நினைச்சிக்காதீங்க.' என்றார்.

எனக்கும் அவர் கூறியது சரியென்று படவே ஒரு சிறு புன்னகையுடன் தலையசைத்தேன். அவர் உள்ளே சென்றிருந்த நேரத்தில் வண்டியிலிருந்து இறங்கி அந்த வீட்டை சுற்றிலுமிருந்த வீடுகளைப் பார்த்தேன். காலனி நுழைவாயிலில் போஸ்டல் காலனி என்ற பலகையைப் பார்த்த நினைவு. ஆக, இக்காலனியில் வசிப்பவர்கள் தபால், தந்தி துறையில் பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியே வந்த தரகர் முகத்தில் தெரிந்த சந்தோஷம் சென்ற காரியம் வெற்றி என்று உணர்த்தியது. வண்டிக்குள் அமர்ந்திருந்த என் மனைவியைப் பார்த்தவர், 'மேடம் இறங்கி வாங்க. உங்களப் பத்தி சொன்னேன். உடனே யோசிக்காம சரின்னு சொல்லிட்டாங்க. சார் வாங்க, வந்து வீட்டைப் பார்த்துட்டு சொல்லுங்க. பிடிச்சிருந்தா அட்வான்ஸ்கூட கொடுத்திரலாம்னு நினைக்கிறேன்.' என்றார்.

நானும் என் மனைவியும் பிரதான வீட்டை நோக்கி நடந்தோம். வீட்டின் வாயிலை அடையும் முன்பே வீட்டினுள் இருந்து நடுத்தர வயதுள்ள பெண்மனி வெளியே வந்து அவுட் ஹவுசை நோக்கி காண்பித்துவிட்டு எங்களுக்கு முன்னர் நடக்க ஆரம்பித்தார். வீட்டை பார்த்த முதல் பார்வையிலேயே எனக்கும் என் மனைவிக்கும் வீடு பிடித்துபோய்விட்டது. எங்கள் இருவருடைய முகத்திலும் தெரிந்த திருப்தியை கண்ட அப்பெண் எங்கள் இருவரையும் பார்த்து புன்னகைத்தார். 'உங்க ரெண்டு பேருக்கும் வீடு பிடிச்சிருக்குன்னு உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது. வாங்க வீட்டுக்குள்ளாற போயி பேசலாம்.'

அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர் கூறிய மாத வாடகை சரியென படவே ஒத்துக்கொண்டோம். 'முன் தொகையா எவ்வளவு கொடுக்கணும்னு சொன்னீங்கன்னா..' என்று நான் இழுக்க அவர் சிரித்துக்கொண்டே, 'பாங்க் மேனேஜர் கிட்ட அதெல்லாம் கேக்க மாட்டேன். அதுவுமில்லாம நீங்க ரெண்டு பேர் மட்டும்தானே. சாதாரணமா இவ்வளவு பெரிய வீட்டுல இந்த ஊர்ல அஞ்சாறு பேர் இருக்கற குடும்பமாத்தான் வருவாங்க. நீங்க டோக்கன் அட்வான்ஸா ரூ.1000/- கொடுங்க போறும். என்னைக்கு வரூவீங்கன்னு சொன்னா வீட்ட கொஞ்சம் சுத்தம் பண்ணி வைக்கறேன்.' என்றார்.

சென்னையில் ஐந்து மாத வாடகையாய் முன்தொகையாய் கொடுத்து பழக்கப்பட்ட எங்களுக்கு இது வியப்பை அளித்தது. சரி என்று உடனே சம்மதித்து அவர் கேட்ட தொகையைக் கொடுத்தேன். இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிபுகுவதாய் கூறிவிட்டு வெளியே வந்தோம். வீட்டையும் வீட்டு உரிமையாளராய் பிடித்துப் போனதால் எங்கள் இருவர் மனதிலும் லேசாய் ஒரு சந்தோஷம். தரகரை பார்த்தேன். அவர் முகத்தில் ஏதோ ஒருவித சங்கடம் தெரிந்ததால், 'என்ன சார் உங்க முகத்தில ஏதோ சங்கடம் தெரியுதே. உங்களுக்கு பிடிக்கலையா?' என்றேன்.

அவர் வண்டிக்குள் ஏறப்போன என்னை தடுத்து நிறுத்தினார். 'சார் ஒரு நிமிஷம், இப்படி வாங்க.'

என் மனைவியை காரில் ஏறி அமர கூறிவிட்டு நான் சற்றே தள்ளி நின்ற தரகரை நெருங்கினேன். 'சொல்லுங்க. என்ன விஷயம்?'

அவர் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, 'சார் நாயக்கர் நான் உங்கள லாட்ஜ்ல பார்க்கறதுக்கு புறப்பட்ட உடனே இந்த ஜாதிக்காரங்க வீட்ட சாருக்கு முடிச்சி குடுத்திராதய்யான்னு சொல்லித்தான் அனுப்பினார்.' என்றார்.

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. இதுக்குத்தானா? என்று நினைத்தேன். பதில் கூறாமல், 'வாங்க.. போய்க்கிட்டே பேசலாம்.' என்றவாறு நாங்கள் வந்த வந்த வாகனத்தை நோக்கி நடந்தேன்.

என் பின்னால் ஓடிவந்த தரகர் வாகனத்தில் ஏறியவுடனேயே ஆரம்பித்தார். 'சார் இதவிட வேறொரு வீடு கொஞ்சம் தள்ளி இருக்கு சார். அதையும் பார்க்கறீங்களா?' என்றார்.

நான் புன்னகையுடன் அவருடைய உள்நோக்கத்தைப் புரிந்துக்கொண்டு, 'அதான் வீடு பிடிச்சிருக்குன்னு அட்வான்சையும் கொடுத்திட்டோமே. அப்புறம் எதுக்கு வேற வீடு. நீங்க பேசாம வாங்க நாயக்கர் சார்கிட்ட நான் பேசிக்கறேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லைன்னு அவர்கிட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்.' என்றேன்.

நான் என்ன பேசுகிறேன் என்று புரியாமல் என்னைப் பார்த்த என் மனைவி, 'என்னங்க சொல்றீங்க? எதுல நம்பிக்கையில்லன்னு சொன்னீங்க? நாம பார்த்த வீட்ல எதுவும் பிரச்சினையாம்மா?' என்றார்.

என் மனைவியின் அருகில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த மகள் உறக்கம் கலைந்து புரண்டு படுப்பதைப் பார்த்த நான், 'அதெல்லாம் ஒன்னுமில்லை. நீ பாட்டுக்கு எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டிருக்காதே. பேசாம வா. பாப்பா முளிச்சிக்கிட்டான்னா அப்புறம் அவளை சமாதானப் படுத்துறதுக்குள்ள போறும், போறும்னாயிரும்.' என்றேன்.

வண்டி தஞ்சை நகரத்தை நோக்கி விரைந்தது. நாயக்கர் கூறிய குலத்தவரை தஞ்சை மக்கள் இன்னமும் இழிகுலத்தவராய் கருதி ஒதுக்கி வைத்திருந்த அவலத்தை எண்ணிப் பார்த்து வேதனையடைந்தேன். இத்தனைக்கும் இக்குலத்தை சார்ந்த பலரும் படித்து பட்டம் பெற்று அரசு உத்தியோகம் உள்பட பல துறைகளிலும் முன்னேறியிருந்தனர். நான் சற்று முன் சந்தித்த குடும்பத்திலிருந்தும் மூத்த ஆண்மகன் பொறியாளர் பட்டம் பெற்றதுடன் மேற்படிப்புக்காக அயல் நாடு சென்றுள்ளார் என அப்பெண்மணி கூறியதை நினைத்துப் பார்த்தேன். நல்ல பொருளாதார வசதியுடன் இருந்த அக்குடும்பம் இன்ன ஜாதி, இன்ன குலம் என்று தரகர் கூறியிராவிட்டால் அவர்களுக்கும் அதுவரை நான் சென்று கண்டவர்களுக்கும் எந்தவித வித்தியாசத்தையும், பேச்சிலும் சரி, தோற்றத்திலும் சரி, நான் கண்டிருக்க மாட்டேனே. சொல்லப்போனால் அதுவரை நான் கண்ட வீடுகளைவிடவும் இந்த வீடு நல்ல வசதியுடன், காற்றோட்டமாக இருந்ததுடன் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டு நன்றாகவும் பராமரிக்கப்பட்டிருந்தது. வீட்டு உரிமையாளரும் தோற்றத்திலும், பேச்சிலும் மற்ற உயர்குலத்தோரை விடவும் உயர்ந்தவர்களாகவே எனக்குத் தெரிந்தது. ஒரேயொரு குறை வீடு தஞ்சையிலிருந்து பதினைந்து கிலோ மீட்டருக்கும் தள்ளியிருந்ததுதான்.

அதற்கு முன் நான் சந்தித்த உயர்குலத்தைச் சார்ந்த அரசு அதிகாரி, மற்றும் அவருடைய மனைவியை ஒப்பிட்டுப் பார்த்தபோது இவர்கள் எத்தனையோ விதத்தில் மேல் என்றே தோன்றியது..

இது என் இரண்டு வருட தஞ்சைவாசத்தின் முதல்நாளே ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்.

மேலும் நாயக்கருக்கு நிச்சயம் இந்த விஷயம் பிடிக்காது சார் என்று தரகர் கூறியபோது பெரிதாக நினைக்காத நான் தரகர் விஷயத்தை அவரிடம் கூறியவுடன் அவர் ரியாக்ட் செய்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.

தொடரும்..

8 கருத்துகள்:

  1. நான் ஏற்கனவே கூறியதுபோல நகரத்திலேயே பிறந்து வளர்ந்த எனக்கு இதெல்லாம் இதுவரை தெரியாத செய்திகளாகத்தான் படுகின்றன.

    20 வருடங்கள் நான் தில்லியிலேயே இருந்ததால் என் வீட்டை என் சார்பில் வாடகைக்கு விட்டது கூட என் நண்பரது குடும்பத்தினர்தான். அவரிடம் நான் சிலருக்கு வாடகைக்கு விடக் கூடாது என்று மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் முக்கிய கண்டிஷன் இலங்கைக்காரர்களுக்கு தரக்கூடாது, போஸ்ட் ஆஃபீஸ், தாலுக்கா ஆஃபீஸ், போலீஸ் ஸ்டேஷன் ஆகியோருக்கு வீடு கிடையாது ஆகியவை. ஒரு குடித்தனக்காரர் பி.சி.ஓ. நிறுவ எண்ணினார். So he was out. இலங்கைக்காரர் நல்லவராகவே இருந்தாலும் புலி தொந்திரவு இருக்கும் வரை அவர்களை கிட்டத்திலேயே சேர்க்கக் கூடாது என்றேன். முக்கியக் காரணம் நாம் வேண்டும்போது காலி வீடு கிடைக்காது.

    அப்படியெல்லாம் பார்த்து வாடகைக்கு விட்டாலும் கடைசி குடித்தனக்காரர் ஒரு மாத வாடகையை பாக்கி வைத்து விட்டு கம்பி நீட்டினார். இருப்பினும் வீடு திரும்ப காலியாகக் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். அது வேறு பெரிய கதை.

    மேலும் நீங்கள் எழுதுவதை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  2. இந்த வயசானவுங்க அந்தக் கால்த்துலே ரொம்ப ஆச்சாரமா அனுஷ்டானமா இருக்கறதா
    நினைச்சதாலே இந்த 'ஜாதி' கேக்கற அவலம் எல்லா இடங்களிலும் நடந்துக்கிட்டுத்தான்
    இருந்துச்சு.

    எங்க பாட்டிகூட இப்படித்தான், வீட்டுக்கு எங்கள் நண்பர்கள் வந்தால் அவர்களுக்குக் காஃபி கொடுக்கவென்றே
    ஒரு டீ செட் வைத்திருந்தாங்க. நாங்களும் வீட்டுக்குள்ளேயே அவஸ்தைப் பட்டவங்கதான்.
    எங்க அம்மா காலத்துலே இதெல்லாம் போயிருச்சு.

    பதிலளிநீக்கு
  3. ஒருபக்கம் பழமையை, படித்து உயர்பதவியிலிருந்தாலும், உதறமுடியாதவர்; மற்றொருபக்கம் ஜாதியை பொருட்படுத்தாதவர்களையும் தடுதாள்பவர்கள் என சிறுநகரங்களில் நிலவும் நிலையை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். சென்னை போன்ற நகரங்களில் இரண்டொருவர் பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள்; உங்களுக்கு நாளை சொல்கிறோம் என மழுப்பியிருப்பார்கள் :)

    பதிலளிநீக்கு
  4. வாங்க டோண்டு சார், நன்றி.

    குடித்தனக்காரர்களை வைப்பதில் நீங்கள் கூறிய முறைதான் சரி. நானும் என்னுடைய தூத்துக்குடி வீட்டில் தரகர் மூலமாக குடி வைத்தவர்களால் மிகுந்த சிரமத்திற்காளாகியிருக்கிறேன். ஆனால் எந்த சூழ்நிலையிலும் இந்த குலத்தைச் சார்ந்தவருக்குத்தான் வீடு கொடுப்பேன் என்று கூறியதேயில்லை.

    பதிலளிநீக்கு
  5. வாங்க துளசி, நன்றி.

    எங்க பாட்டிகூட இப்படித்தான், வீட்டுக்கு எங்கள் நண்பர்கள் வந்தால் அவர்களுக்குக் காஃபி கொடுக்கவென்றே
    ஒரு டீ செட் வைத்திருந்தாங்க.//

    எனக்குமே இந்த அனுபவம் நடந்திருக்கிறது. ஏதோ கிராமத்தில் அல்ல. சென்னையில். என் நண்பர் ஒருவர் வீட்டில்! நான் குடித்து முடித்த டம்ளரை மற்ற பாத்திரங்களுடன் சேர்க்காமல் என் கண் முன்னாலயே புழக்கடை ஓரமாய் அவருடைய தாயார் வைத்தபோது அதிர்ச்சியுடன் என் நண்பரைப் பார்க்க அவர் அவமானம் தாங்கமுடியாமல் தலைகுனிந்துக்கொண்டார். வெளியே வந்ததும், 'சாரிடா தப்பா நினைச்சுக்காதே.' என்ற் என் நண்பரைக் கடிந்துக்கொண்டேன். 'உங்கம்மாவ குறைசொல்ல மாட்டேண்டா. அவங்க இப்படீன்னு தெரிஞ்சும் என்னை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து காப்பி கொடுத்த உன்னைத்தான் குறை சொல்வேன்.' என்றே. அன்றிலிருந்து அவர் வீட்டுப்பக்கம் சென்றதே இல்லை.

    பதிலளிநீக்கு
  6. வாங்க மணியன் நன்றி,

    நான் என் அலுவலக வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்திருக்கிறேன். அவற்றில் சிலரைத்தான் என் தொடரில் உலவவிட்டிருக்கிறேன். இவர்களில் யார் செய்வது சரி, யார் பக்கம் தவறு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதெல்ல என் நோக்கம்.

    பதிலளிநீக்கு
  7. பொதுவாகவே நமது சொந்தங்கள் எவ்வளவிற்கு எவ்வளவு அருகாமையில் இருக்கிறதோ வேறுபாட்டின் வீரியம் அவ்வளவிற்கு அவ்வளவு வெளிபடுகிறது. உதாரணமாக கிராமத்தில் வெளிபடையாகவே வேறுபாட்டினை காணமுடியும். மீறுவதும் கடினம்.

    அதுவே நகர வாழ்க்கையில் சிறு குடும்பங்களில் பொருளாதார நிர்பந்தங்களினால் வீட்டிற்கு வெளியே சில கட்டுப்பாடுகளை தளர்த்திவிடுகிறோம். பொது கல்வி சாலைகள், போக்குவரத்துக்கள், வணிகம் எனவாக. என் வீடு என்று வரும் பொழுது வீரியம் சிறிதளவாக எட்டி பார்க்கத்தான் செய்கிறது.

    இதுவே வெளிநாடுகளில் வசிக்கும் பொழுது நாம் இன்னும் விட்டு கொடுத்து (?!) பால்ய பழக்க வழக்கங்கள் (இறை வழிபாடு, உணவு போன்றன) தவிர்த்து சம சமூக வாழ்க்கை வாழ பழகிக்கொள்கிறோம்.

    ஆக, சமூகத்தில் நாம் எங்கே எவ்வாறாக யாராக பிறரால் அளவிடப்படுவோம் என்பதை பொறுத்தே வீரியம் அமைகிறது. 'பிறர்' என்ற "reference" கிராமத்தில் உங்கள் நெருங்கிய சொந்தங்களாகவும், நகரங்களில் பொருளாதாரத்தில் நிகர் நிலையில் இருப்போரும் வெளி நாடுகளில் உங்கள் கலாசாரமுமாக அமைகிறது.

    இதில் நல்ல விஷயம் என்னவென்றால் இவ்வட்டம் மற்றும் "reference" மாறுபட்டு கொண்டு வருகிறது. பிற்காலத்தில் "true global village" சாத்தியப்படும் பொழுதோ நாம் வேறு கிரகங்களிற்கு குடி பெயரும் பொழுதோ அல்லது "Robot" நம்மை ஆளும்பொழுதோ முன் கண்ட வீரியம் முற்றிலும் மறையலாம்.

    இதில் வேடிக்கை என்னவென்றால் "reference"'ஐ மனிதர் தவிர வேறு எப்பொருளை வைத்தாலும் நாம் அனைவரும் ஒன்றே. ஒருவரை விட பெரியோர் என்றோ அல்லது சிறியோர் என்றோ நாம் நினைத்தால் அரிது கிட்டும் வாழ்க்கையில் நாம் நாமாக வாழ மறுக்கிறோம் என்பதே என் பணிவான கருத்து.

    பதிலளிநீக்கு
  8. வாங்க 'பஸ்பாஸ்'. முதல் முறையா நம்ம வலைப்பூவுக்கு ஒரு ஆழமான பார்வையோடு வந்திருக்கீங்க. நன்றி.

    ஆக, சமூகத்தில் நாம் எங்கே எவ்வாறாக யாராக பிறரால் அளவிடப்படுவோம் என்பதை பொறுத்தே வீரியம் அமைகிறது. 'பிறர்' என்ற "reference" கிராமத்தில் உங்கள் நெருங்கிய சொந்தங்களாகவும், நகரங்களில் பொருளாதாரத்தில் நிகர் நிலையில் இருப்போரும் வெளி நாடுகளில் உங்கள் கலாசாரமுமாக அமைகிறது.//

    ரொம்ப கரெக்டுங்க.

    ஒருவரை விட பெரியோர் என்றோ அல்லது சிறியோர் என்றோ நாம் நினைத்தால் அரிது கிட்டும் வாழ்க்கையில் நாம் நாமாக வாழ மறுக்கிறோம் என்பதே என் பணிவான கருத்து.//

    அதே கருத்துதான் எனக்கும். ஆனால் அது எல்லாருடைய கருத்தாகவும் இருப்பதில்லையே. அதுவும் கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் வாழ்வோர் பரந்துகிடக்கும் வெளியுலக நிதர்சனங்களை அறிந்திராததால் நடக்கும் கேவலங்கள்தான் இவை.

    "true global village" சாத்தியப்படும் பொழுதோ நாம் வேறு கிரகங்களிற்கு குடி பெயரும் பொழுதோ அல்லது "Robot" நம்மை ஆளும்பொழுதோ முன் கண்ட வீரியம் முற்றிலும் மறையலாம்.//

    உங்க கனவு முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் ஆகாமல் இருக்க வேண்டும். அதற்கு என் பிரார்த்தனை.

    பதிலளிநீக்கு