21 டிசம்பர் 2005

திரும்பிப் பார்க்கிறேன் - 39

சென்னை கிளையிலிருந்து எனக்கு மாற்றலாகிவிட்டது என்று தெரிந்ததுமே என் வங்கியிலிருந்த பலரும் சந்தோஷப்பட்டார்கள் என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். ஆனால் வங்கிக்கு வெளியிலும் அதுபோன்ற ஆட்கள் இருக்கத்தான் செய்தார்கள். அதில் முதல் ஆள் என் மனைவிதான்.

தூத்துக்குடி போன்ற சிறிய ஊரில் சொந்தபந்தங்களின் மத்தியில் வசித்துவிட்டு திடீரென்று சென்னையில் அதுவும் கோடம்பாக்கத்திலிருந்த உயர்மட்ட சென்னைவாசிகள் குடியிருந்த ஒரு காலனியில் இரண்டு ஆண்டுகள் தன்னந்தனியாய் வசிக்க வேண்டி வந்ததை நினைத்து என் மனைவி புலம்பாத நாளேயில்லை.

தூத்துக்குடியில் வசித்தபோது ஒரு சின்ன சந்தோஷத்தையும் தன் வயதொத்த தோழிகளுடன் பகிர்ந்துக் கொண்டு ஜாலியாய் இருந்த என் மனைவி குடியே முழுகினாலும் நமக்கென்ன வந்தது என்பதுபோல் பட்டும் படாமலும் இருந்த சென்னைவாசிகளுடன் அனுசரித்து போக முடியாமல் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இப்போதுள்ளதுபோல் போக்குவரத்து வசதிகளும் துவக்க எண்பதுகளில் இருந்ததில்லையே. ஊருக்கு போகவேண்டுமென்றால் நெல்லை விரைவு வண்டி ஒன்றுதான். அதில் இரண்டோ மூன்றோ பெட்டிகளை தூத்துக்குடிக்கென்று இனைத்திருப்பான். அவற்றை மணியாச்சி ரயலில் ஜங்ஷனில் துண்டித்துவிட்டு எனக்கென்ன வந்தது என்பதுபோல் நெல்லை வண்டி போய்விடும்.

துண்டிக்கப்பட்ட பெட்டிகள் ‘தேமே’ என்று நெல்லை-தூத்துக்குடி சாதா வண்டியை எதிர்நோக்கி குறைந்தது அரை மணி நேரமாவது காத்திருக்கும். சென்னையிலேயே பிறந்து வளர்ந்த எனக்கு கட்டாந்தரையாய் இருந்த மணியாச்சி நிலையத்தைப் பார்க்கும் போதெல்லாம் கடுப்பாகிவிடும். கருப்பட்டி காப்பின்னு கருப்பா ஒன்ன ஒரு பித்தளை கெட்டில்லருந்து பிடிச்சி குடுப்பாங்க பாருங்க குடிச்சி முடிச்ச அடுத்த நாள் வரைக்கும் அந்த டேஸ்ட் நாக்குலருந்து போகவே போகாது. ‘எய்யா, இங்கல்லாம் ஜீனி காப்பி கிடைக்காதுங்க.’ன்னு வேற விளக்கம் தருவாய்ங்க, என்னமோ ஜீனி காப்பி தப்பான விஷயம் போல. கோதுமை தோசை மாதிரி வெல்லத்த நடுவுல வச்சி ‘போளி’ன்னு ஒன்னு விப்பாய்ங்க. சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே இருக்கும். ‘இது மாதிரியெல்லாம் உங்க மெத்ராஸ்ல கிடைச்சிருமாக்கும்! என்று நக்கலுடன் சொல்வார் என் மனைவி.

சென்னை எழும்பூரில் மாலை ஐந்து மணிக்கு புறப்பட்டால் தூத்துக்குடி போய் சேர அடுத்த நாள் காலை பதினோரு மணியாகிவிடும். அதாவது சுமார் 600 கி.மீ தூரத்தை கடக்க 18 மணி நேரம்! ஊர் போய் இறங்கியதும் நம்மை வரவேற்பது குண்டும் குழியுமான சாலைகளும், அதன் இருபுறமும் கடல் மணல் நிறைந்த, தூசிபிடித்த ஒரு டவுண்! ஆகஸ்ட், செப்டம்பர் என்றால் கேட்கவே வேண்டாம். காத்து காலமாம்! ஊர்ல நடக்கறவன் தலையெல்லாம் கடல் மணல்தான்.! ஆடிக்காத்துல அம்மியும் பறக்கும்பாங்களே அதுமாதிரி தெருவுலருக்கற கடல் மணல் பறந்து பறந்து போர வர்றவங்களையெல்லாம் அபிஷேகம் பண்ணும்.

குண்டும் குழியுமாய் இருந்த சாலைகளில் ஓடி ஓடி பெண்டு விழுந்துபோன சக்கரங்களுடன் இருக்கை என்ற பெயரில் கிழிந்துபோன (‘எலேய், சீட்ல பார்த்து இரி. ஆணியில மாட்டி துணி கிளிஞ்சிரப்போவுது’) ரெஸ்கின் சட்டையுடன் இருந்த மரச்சட்டங்களில் லாவகமாக அமர்ந்து, ஒவ்வொரு முறையும் பள்ளங்களில் லொட லொட சைக்கிள் ரிக்ஷா விழுந்து எழும்போது ரிக்ஷா கூரையில் போய் தலை முட்ட (நல்ல வேளை. இப்போது போல் தலை சொட்டையாயிருந்தால் முட்டி முட்டி ஒரு பள்ளமே விழுந்திருக்கும்!) மாமியார்! வீடு போய் சேர்வதற்குள் ‘சை! ஏன்டா வந்தோம்’னுருக்கும். ஆனால் என் மனைவியின் முகம் மட்டும் ஏக பிரகாசமாய் ஏதோ சொர்க்கலோகத்துக்கு வந்ததுபோலிருக்கும்.

அப்படி இருந்தவருக்கு சென்னைவாசம் முற்றிலும் பிடிக்காமல் போனதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை.

என்னுடைய தஞ்சை மாற்றம் அவருக்கு சந்தோஷத்தையளிக்க வேறொரு காரணம் தூத்துக்குடிக்கு போய்வரும் பயண நேரம் வெகுவாய் குறைந்து போனதும்தான். தஞ்சையிலிருந்து மதுரைக்கு நாள் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு ஒன்று என்று பேருந்துகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கும். அதே போல் மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கும் நள்ளிரவிலும் பேருந்துகளுக்கு பஞ்சமேயில்லை. தஞ்சையிலிருந்து காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டால் பொழுது சாயும் நேரத்திற்குள் ஊர் போய் சேர்ந்துவிடலாம்.

ஆக, என் மாற்றம் எனக்கும் என் பெற்றோருக்கும் பெரும் ஏமாற்றத்தை தந்தாலும் என் மனைவியின் சந்தோஷத்தைப் பார்த்து ஆறுதல் அடைந்தேன்.

என் தலைமையலுவலகத்திலிருந்து மாற்றத்திற்கான உத்தரவு வந்ததும் நான் போகிறேன் என்று சந்தோஷப் பட்ட இரண்டாம் ஆள் அந்த வட்ட செயலாளர். ‘என்ன சார், நீங்க சொன்ன ஆளுக்கெல்லாம் லோன் குடுத்துட்டு இப்ப ஒராளும் கட்ட மாட்டேங்கறானே.’ என்று அடிக்கொருதரம் போய் நச்சரிக்க மாட்டேன் அல்லவா! அவருக்கு எப்படித்தான் விஷயம் தெரிந்ததோ கடன் பெற்றோரிடமிருந்து வசூலித்த பணத்தில்! ஒரு மாலையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் பூ, பழம், மிட்டாய் சகிதம் நாலைந்து அடிபொடிகளுடன் வந்து மாலையை அணிவித்து ஒரு சின்ன பிரிவு உபசாரத்தையே நடத்திவிட்டார். கூடியிருந்த வாடிக்கையாளர்களுக்கும் விவரம் தெரிந்து என் கையைப் பிடித்து குலுக்கி ‘வாழ்த்துக்கள்’ என்றபோது அடடா, நாம இங்கருந்து போறது எத்தனை பேருக்கு மகிழ்ச்சி என்று நொந்துபோனேன்.

என்னிடம் கடன் பெற்று இன்று மிகப் பெரிய அளவில் வளர்ந்து நிற்கும் ஒருவரைப் பற்றி எழுதியிருந்தேன். அவர் ஒருத்தர்தான் என்னுடைய திடீர் மாற்றத்தை அறிந்ததும் வருத்தப்பட்டார். ஒருவேளை புதுசா வற்ர மேனேசர் எப்படியிருப்பார்னு தெரியலையே என்றும் இருக்கலாம்.

‘அதெல்லாம் ஒன்னும் கவலைப் படாதீங்க. அவர் வந்ததம் உங்களுக்கு அறிமுகப்படுத்திட்டுதான் போவேன்.’ என்றதும்தான் அவருடைய முகம் மலர்ந்தது. ‘அதாவது, நீங்க இருந்தா என்ன போன எனக்கென்ன சார்? என்ன பத்தி நல்லவிதமா சொல்லிட்டு போனா சரிதான்.’ என்பதுபோலிருந்தது அவர் முகம்.


எனக்கு அடுத்தபடியாக மேலாளராக வருபவர் வந்து என் கிளைக்கு பொறுப்பேற்ற பிறகே நான் புறப்படவேண்டும் என்று உத்தரவு வரவே வேறு வழியின்றி என்னுடைய பயணத் திட்டத்தை தள்ளிபோட வேண்டியிருந்தது.

அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருந்தாலும் அதுவரை பார்த்ததில்லை. நான் முந்தைய பதிவில் கூறியிருந்ததுபோல் அவர் பெரும் செல்வந்தர் குடும்பத்து மருமகன்! என்னைப் போல் வேலை செய்துதான் பிழைக்கவேண்டும் என்ற தேவையில்லாதாவர்.

சென்னை போன்ற பெருநகர் கிளையொன்றில் மேலாளராக பணியாற்றுவது அவருக்கு இதுதான் முதல்.

அவர் சென்னை வந்து சேருவதற்கு முன்பே அவருடைய மாமனார் வீட்டிலிருந்து அவருடைய மேனேஜர் இரண்டு பணியாட்களுடன் வந்து கோடம்பாக்கத்தில் பெரும் செல்வந்தர்கள் வாழும் குடியிருப்பில் (அந்த காலத்தில் கோடம்பாக்கத்தில் எழுப்பப்பட்ட ட்யூப்ளெக்ஸ் வடிவ குடியிருப்பு அது ஒன்றுதான்) மாதம் ரூ.2000/- வாடகைக்கு (நான் குடியிருந்த வீட்டின் வாடகை மாதம் ரூ.750/-!) அமர்த்தி, அன்றே சென்னையிலிருந்த ஒரு Furniture கடையிலிருந்து வீட்டிற்கு தேவையான சகலவித Furnnitureகளையும் வாங்கி போட்டு அமர்க்களப்படுத்திவிட்டு போனார்.

அதையெல்லாம் நேரிடையாக மேற்பார்வை பார்த்த என்னுடைய உதவி மேலாளர் என்னை பார்த்த பார்வையிலிருந்த ஏளனம் இன்னும் என் கண்முன் நிற்கிறது. ‘ஒரு மூனாயிரம் பணத்த போய் என்ன கட்ட சொன்னீங்களே சார். இவர பாருங்க, பிச்ச காசு, அஞ்சாயிரத்தையும் இவரே கட்னாலும் கட்டியிருப்பாரு’ என்பதுபோலிருந்தது அவரது பார்வை.

ஆக, என்னிடமிருந்து கிளையின் பொறுப்பை எடுக்க வந்து இறங்கியதே ஒரு அமர்க்களமாய் நடந்து முடிந்த ஒரு நாடகம் போலிருந்தது.


அவர் பணியில் சேர்ந்த அன்று மாலையே எனக்கும் என் வங்கியிலிருந்த எல்லா ஊழியர்களுக்கும் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்த ஒரு பிரபல உணவகத்தில் அட்டகாசமான விருந்தளித்தார். விருந்தின் முடிவில் தன் வீர பராக்கிரமத்தை அவரே விலாவரியாய் எடுத்து கூறி வந்திருந்த எல்லோருக்கும் ஒரு விலையுயர்ந்த ஹீரோ பேனாவை பரிசாக அளித்தார்.

அடுத்த நாள் காலையில் நான் முற்றிலும் எதிர்பாராத ஒன்றையும் அவர் செய்தார். என் முன்னாலேயே அவர் அந்த கப்பல் பார்ட்டி சேட்டை அழைத்து (அவருடைய தொலைப்பேசி எண்ணை அவர் வைத்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை வரவழைத்தது!) தன்னை அறிமுகப்படுத்தாமலே பேசத் துவங்கினார். அதாவது, நான் ஏற்கனவே அவருக்கு அறிமுகமானவர்தான் என்பதை எனக்கு காட்டுவதற்காக.

‘சார் நான் பிராஞ்சில ஜாய்ன் பண்ணிட்டேன். இனி நீங்க கவலைப் படவேண்டாம். அந்த ஃபைல அனுப்பறதுதான் என் முதல் வேலை. நான் நாளைக்கே நம்ம அசிஸ்டென்டோட வரேன். அங்கேயே உக்கார்ந்து ப்ரொப்போசல பிரிப்பேர் பண்ணிரலாம். You Don’t worry sir. That is my first job.’

தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு என்னை பார்த்த பார்வையிலேயே ஒரு இறுமாப்பு தெரிந்தது.

‘சரி, நீ வேலைக்கு சேர்ந்த நேரம் சரியில்ல போலிருக்குது. நா என்ன பண்றது?’ என்று நினைத்துக்கொண்டேன்.

‘மிஸ்டர் ஜோசப்.. உங்க கணிப்புல சேட் ஒரு ஃப்ராட் இல்ல?’ என்றார் ஒரு ஏளனப் புன்னகையுடன். உடன் இருந்த என்னுடைய உதவி மேலாளரின் உதடுகளிலும் அதே புன்னகை.

‘அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. அதுவுமில்லாம இனிமே நான் அவரப்பத்தி என்ன நினைக்கிறேங்கறது அவ்வளவு முக்கியமில்லையே.. அதனால நாம அதப்பத்தி எதுவும் பேச வேண்டாம். நீங்க பொறுப்பேற்கறதுக்கு மூனு நாள்னு ஆர்டர்ல போட்டிருந்தது. உங்களுக்கு என்னெல்லாம் பாக்கணும்னு ஒரு லிஸ்ட ப்ரிப்பேர் பண்ணிடறது நல்லதுன்னு நினைக்கிறேன்.எனக்கும் சவுகரியாம இருக்கும்’ என்றேன்.

அவர் அலட்சியத்துடன் சிரித்தார். அதெல்லாம் இருக்கட்டும் ஜோசப். நீங்க இதுவரைக்கும் சாங்ஷன் பண்ண லோன் பார்ட்டீசையெல்லாம் நான் பாக்கணும். எல்லாரையும் கூப்டு நாளைக்கு இங்க வரச்சொல்லுங்க.’

நான் சிறிது நேரம் அவரையே பார்த்தேன். இவருடைய ஆணவ பேச்சிற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று யோசித்தேன்.

தொடரும்.

7 கருத்துகள்:

  1. காத்திருந்ததிற்கு நல்ல பலன்தான். பெரிய பதிவாக போட்டுவிட்டீர்களே:)

    சென்னைவாசிக்கு என்ன தெரியும் கிராமத்து சுகங்கள் என்று முதல் பாதியும் எத்தனை வகை மனிதர்கள் என்று இரண்டாம் பாதியும் பதிவு செய்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. ஐயா, இது 'திரும்பிப் பார்க்கிறேன் - 40' அல்லவா

    பதிலளிநீக்கு
  3. ஆணவக்காரர்களுக்கு உங்க புதிய மேலாளரின் அனுபவம் ஒரு பாடமாத்தான் இருக்கப்போகுது.

    கொதிக்கறது எப்படியும் ஒருநா அடங்கிரும் இல்லே?

    பதிலளிநீக்கு
  4. வாங்க மணியன், நன்றி

    சென்னைவாசிக்கு என்ன தெரியும் கிராமத்து சுகங்கள் //

    சத்தியமான வார்த்தைங்க. சென்னை மட்டுமல்ல பெருநகரங்களில் வாழும் பெரும்பாலோனோர் வெறும் இயந்திரங்கள், அழகான சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும்கூட நின்று நிதானித்து ரசிக்க நேரம் இல்லாதவர்கள். அவர்களுக்கென்ன தெரியும் கிராமங்களின் சுகமான அனுபவங்கள். நானும் அப்படித்தான் இருந்தேன் தஞ்சையின் வயல்வெளிகளைப் பார்க்கும் வரை.

    பதிலளிநீக்கு
  5. வாங்க புதுவை, நன்றி

    Appada... vanthuteengala....

    வந்துட்டேன். ஆனா இன்னையிலருந்து ஒரு அஞ்சு நாளைக்கு மறுபடியும் லீவ் ஆச்சே. ஆனா டெய்லி படுக்க போறதுக்குள்ள எப்படியாவது போட்டுடறேன்.

    கிறீஸ்துமஸ் இப்போதெல்லாம் யூனிவர்சல் திருவிழாவாக ஆகிவிட்டதல்லவா. உங்களுக்கும் எனது இனிய கிறீஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க சுதர்ஸன், நன்றி.

    இது 'திரும்பிப் பார்க்கிறேன் - 40' அல்லவா//

    ஆமாங்க. ஊர்லருந்து வர்றதுக்கு லேட்டாயிருச்சு. அதான் அவசரத்துல பதிவு எண்ணை 39னு போட்டுட்டேன். சரி பண்ணிடரேன்.

    சுட்டிக்காட்டியதற்கு மிகவும் நன்றி சுதர்ஸன்.

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஸ்டார் துளசி, நன்றி.

    ஆணவக்காரர்களுக்கு உங்க புதிய மேலாளரின் அனுபவம் ஒரு பாடமாத்தான் இருக்கப்போகுது.//

    அத நிறையபேர் மறந்துபோய் ஆட்டம் போடறதுதான் வேதனை. இவருக்கும் அப்படித்தான் நடந்தது.

    பதிலளிநீக்கு