27 செப்டம்பர் 2019

நடந்தது என்ன? (சிறுகதை )

மாதவன் நிமிர்ந்து மணியைப் பார்த்தான்.

எட்டு மணி!

இப்பவே கிளம்புனாத்தான் கடை மூடறதுக்குள்ள போக முடியும்.

செல்பேசியை எடுத்து  அன்று காலையில் அவனுடைய மனைவி  ஷாமிலி சொல்ல சொல்ல சாம்சங் நோட்ஸ் கோப்பில் குறித்து வைத்திருந்த மளிகை பொருட்களின் பட்டியலைப் பார்த்தான். '

'எத்தன தடவ சொன்னாலும் கேக்க மாட்டேங்குறியே ஒரு வாரத்துக்கு வேணுங்கற சாமான மட்டும் வாங்குடின்னா.... ச்சை '  என்று மனைவியை கடிந்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

'ஏன் கேக்க மாட்டீங்க? சாப்பிடறது நீங்க... என்னமோ நா எல்லாதையும் எங்கம்மா வீட்டுக்கு தூக்கி குடுத்துடறா மாதிரி...'

'சரி... சரி ஆரம்பிச்சிறாத... வாங்கிக்கிட்டு வரேன்.'

மாதம் முதல் தேதியானதும் அந்த மாதம் முழுவதுக்கும் தேவையான மளிகை பொருட்களை வாங்குவதில் அவனுக்கு விருப்பமில்லை. 'எதுக்கு வீணா நாலாயிரம் அஞ்சாயிரத்துக்கு சாமான வாங்கி, வைக்கக் கூட இடம் இல்லாம... வாரத்துக்கு ஒரு தடவ வாங்கினா போதும்.. நா வர்ற வழியிலதான டிஆர் மால் இருக்கு? ஒரே கடையில எல்லாத்தையும் வாங்கினா மாதிரியும் இருக்கும்... கார்ட்லயே பே பண்ணிறலாம்...' என்பான்.

'அப்ப வாங்கிட்டு வாங்க... நீங்கதான் நாலஞ்சி தரம் அலையணும்...வீட்டுக்கு பக்கத்துலயே கடை இருக்கு. ஒன்னாம் தேதியானா லிஸ்ட் போட்டு குடுத்துட்டா வீட்டுக்கே வந்து போட்டுறப்போறான். எதுக்கு எங்கயோ கிடக்குற மால்ல போயி வாங்கறது? ஒட்டிக்கி ரெட்டியா அவன் கடைவாடகையையும் சேர்த்து சாமான் விலையில வைப்பான்.'

ஷாமிலி பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும். பதிலுக்கு பதில் பேசாமல் இருந்தால் சிறிது நேரத்தில் அவளே அடங்கிவிடுவாள்.

ஆகவே மாதவன் பதிலேதும் பேசமால் குழந்தைகளுக்கு 'பை பை' சொல்லிவிட்டு கிளம்பியதை நினைத்துப் பார்த்தான். அவனையுமறியாமல் அவன் உதடுகள் புன்னகையால் விரிந்தன.

இருக்கையிலிருந்து எழுந்து லாப்டப்பை அணைத்து பேக் பேக்கில் (Back Pack) வைத்தான். காலடியில் கிடந்த டிபன் பாக்ஸ் பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

நூறு மென்பொறியாளர்கள் அமர்ந்து பணியாற்றக்கூடிய அந்த விசாலமான ஹாலில் அவனைத் தவிர சுமார் பத்து பதினைந்து பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.

ஹாலை விட்டு வெளியேறி மின்தூக்கி இருந்த திசையைப் பார்த்தான். வாயிலில் அவனுடைய நண்பர்கள் நிற்பது தெரிந்தது. அவணுங்க கூட போனா எதையாச்சும் பேசுவாணுங்க.... நம்ம டைம் போயிரும். அப்புறம் ஷாமிலிக்கு பதில் சொல்ல முடியாது.

மூன்றாம் தளத்திலிருந்து படிகளில் தடதடவென இறங்கி பார்க்கிங்கில் இருந்த இரு சக்கர வாகனத்தை கிளப்பி சாலையில் இறங்கி அடுத்த பதினைந்து நிமிடத்தில் டிஆர் மாலை அடைந்தான்.

அவனுடைய வாகனத்திற்கே பார்க்கிங் இல்லாமல் நிரம்பிக் கிடந்த வாகனங்களைப் பார்த்ததும் எரிச்சலாக இருந்தது.

மணியை பார்த்தான்.

9.00!

இன்னும் அரை மணி நேரத்தில் வாசற்கதவை மூடிவிடுவார்கள் என்பது நினைவுக்கு வர கண்ணில் தெரிந்த காலி இடத்தில் வாகனத்தை பார்க் செய்துவிட்டு கடை வாசலை அடைத்து வழியில் இருந்த ட்ராலிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டான். பில் கவுண்டர்களுக்கு முன்பு நின்றுக்கொண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்து மளிகை பொருட்கள் இருந்த ஹாலுக்குள் நுழைந்தான்.

அங்கும் பெரும் கூட்டம்..

எந்த பகுதியில் கூட்டம் குறைவாக இருக்கிறது என்று பார்த்து அதை நோக்கி விரைந்தான்.

சட்டைப் பையில் இருந்த செல்பேசியை எடுத்து நுழைவு சமிக்ஞையை (entry pin) அடித்து திறந்தான்.

'அட சூப்பரா இருக்கு சார். என்ன மாடல் சார்?'

குரல் எங்கிருந்து வருகிறது என்று சுற்றும் பார்த்தவன் தன் மீது மூச்சுக் காற்று படும் அளவுக்கு நெருக்கத்தில் நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தான்.

அடேங்கப்பா ஆறடிக்கு மேல இருப்பான் போலருக்கு என்று நினைத்தான். 'என்ன கேட்டீங்க?'

'இல்ல ஃபோன் என்ன மாடல்னு கேட்டேன்.'

இது என்னவா இருந்தா இவனுக்கு என்ன வந்தது? ஆள் ஆறடி வளர்ந்துருக்கான தவிர...... 'சாம்சங் ஏ50' என்று சுருக்கமாக கூறிவிட்டு லிஸ்ட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு  அங்கிருந்து நகர்ந்தான்.  செல்பேசி பேட்டரி இன்னும் ஒரு சில நொடிகளில் மரித்துவிடுவேன் என்று மிரட்டியதை கவனியாமல் அடுத்து என்ன எடுக்கலாம் என்று லிஸ்ட்டை பார்க்கவும் அது செயலிழந்து போகவும் சரியாக இருந்தது.

'ச்சை.... செத்துட்டியா?' என்றான் சற்று உரக்கவே.

அருகில் இருந்தவர்களில் சிலர் தன்னை விநோதமாக பார்ப்பதை உணர்ந்தவன் அவர்களுடைய பார்வையை தவிர்த்து அணைந்துபோன செல்பேசியை எரிச்சலுடன் ட்ராலியில் வீசி எறிந்தான்.

காலையில் குறித்து வைத்திருந்த பொருட்களின் பட்டியலில் நினைவில் இருந்தவைகளை ட்ராலியில் அள்ளிப் போட்டுக்கொண்டு பில் கவுண்டரை நோக்கி விரைந்தான். கூட்டம் குறைவாக இருந்த வரிசையில் நின்றவன் பில் தொகையை செலுத்த பர்ஸில் இருந்த டெபிட் கார்டை எடுத்து நீட்டினான்.

'பை இருக்கா சார்?'

ச்சே... மறுபடியும் மறந்துருச்சே.... சாமான சொல்றவ பையை குடுத்தணுப்பணும்னு நினைச்சாளா பார்....

'என்ன சார் பை போடவா? அதுக்கு எக்ஸ்ட்ரா வரும். கார்ட்ல போட முடியாது.. கேஷ்தான்.'

எரிச்சலுடன் பர்ஸில் இருந்த ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டினான். ஒரு துணிப் பைக்கு பதினைந்து வீதும் இரண்டும் பைகளுக்கு முப்பது ரூபாய் போக  மீதியை வாங்கிக்கொண்டு வாய் வரை நிரம்பி வழிந்த பைகளை எடுத்துக்கொண்டு வாகனத்தை நோக்கி நகர வாசற்கதவு அடைத்துவிட்டதை பார்த்தான்.

'சைடு வழியாத்தான் சார் போவணும்... மணி பத்தாக போவுதே?' என்ற வாட்ச்மேனை பார்த்து முறைத்துவிட்டு பைகளை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு பர்க்கிங்கை அடைந்தான்.

அடுத்த அரை மணியில் வீட்டையடைந்தவனுக்கு வழி முழுவதும் பின் சீட்டின் இருபுறமும் ஆடிக்கொண்டிருந்த பைகளில் இருந்து பொருட்கள் ஏதும் விழுகிறதா என்றும் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.

வாசலிலேயே இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு ஷாமிலி நிற்பது தெரிந்தது.

ஏதாச்சும் சொல்லட்டும் வச்சிக்கறேன் கச்சேரி என்று மனதுக்கு முணகியவாறே வண்டியிலிருந்து இறங்கினான்.

'ஏங்க எத்தன தடவ கூப்டறது? எடுக்கவே மாட்டேங்கறீங்க? எப்பவும் மாதிரியே பேட்டரி போயிருச்சா?'

'என்னது கூப்டியா, அடிக்கவே இல்லையே?' என்ற மாதவன் சட்டைப்பையை தடவ அது காலியாக இருந்ததை உணர்ந்தான். அப்போதுதான் கடையில் செல்பேசியை அணைத்து ட்ராலிக்குள் வீசியது நினைவுக்கு வந்தது. ஐயையோ கீழ விழுந்துருச்சி போலருக்கே.... ச்சை... எப்படி மறந்து போனேன்?வாங்கி

முழுசா மூனு மாசம் கூட ஆகலையே.... சுளையா 12000 ரூபாயாச்சே...

அத வாங்கிய அன்னைக்கே ஷாமிலியுடன்நடந்த வாக்குவாதம் நினைவுக்கு வந்தது.

'என்ன புது ஃபோனா? பழைய ஃபோனுக்கு என்ன ஆச்சு நல்லாத்தான இருந்துச்சு?' என்றவாறே அவன் கையிலிருந்து பிடுங்கி ஃபோனை பார்த்தவளுக்கு இன்னும் கோபம் வந்தது. 'ஏங்க விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போலருக்கு? இது இப்ப தேவையா? ஒங்க தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்குன கடனே இன்னும் முழுசா அடைச்சி முடிக்கல...'

'ஜாஸ்தி ஒன்னும் இல்லைடி.... பழைய ஃபோன எக்ஸ்சேஞ்ச் செஞ்சி வாங்குனேன். கையிலருந்து ஐயாயிரம்தான் குடுத்தேன்.' என்று பொய் சொல்லி சமாளித்ததும் நினைவுக்கு வந்தது. அந்த ஃபோனைத்தான் இப்போது தொலைத்து விட்டு வந்து நிற்கிறோம்..... ஆனா தொலைஞ்சிருச்சின்னு இவ கிட்ட இப்ப சொல்ல வேணாம்.... வேற எதையாச்சும் சொல்லி சமாளிப்போம்....

'இல்லடி. டிஸ்ப்ளே காலையிலருந்தே மக்கார் பண்ணிக்கிட்டிருந்திச்சி. அதான் ஆஃபீஸ் ஃப்ரென்ட் கிட்ட குடுத்து பாக்க சொல்லியிருக்கேன். ரெண்டு நாள்ல வந்துரும். நீ இத எடுத்துக்கிட்டு போய் உள்ள வை.'

ஆனால் அந்த பொய் வேறு ஒரு பிரச்சினையை கிளப்பியது. 'போச்சா? வாங்கி முழுசா ரெண்டு மாசம் ஆகலை. அதுக்குள்ளவே ரிப்பேரா?. ஆன்லைன்ல வாங்காதீங்க, வாங்காதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா? ஃப்ராடு பயலுக. இப்படி ஏமாத்தறானுங்களே?' என்று ஷாமிலி புலம்பியவாறே சாமான்களை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் செல்ல. மாதவன் தன் பாக்கெட்டை துழாவி மாலில் வாங்கிய சாமான்களை பில்லை எடுத்து தொலைபேசி எண் ஏதும் இருக்கிற்தா என்று தேடினான்.

இருந்தது.

டீப்பாயில் கிடந்த ஷாமிலியின் செல்பேசியை எடுத்துக்கொண்டு தன் படுக்கையறைக்குள் நுழைந்து கதவை சாத்திவிட்டு டயல் செய்தான்.

'ஹல்லோ யாருங்க?' என்ற ஒலி எதிர்திசையிலிருந்து கேட்டதும் கடகடவென்று விஷயத்தை விவரித்து தன்னுடைய செல்பேசி அங்கு உள்ளதா என்று கேட்டான்.

'ஏங்க மணி பத்தரையாயிருச்சேங்க. கடை மூடியாச்சே. நா வாட்ச்மேன் பேசறேன். காலையில கூப்டுங்க" இணைப்பு துண்டிக்கப்பட இடியட்' என்றான் உரக்க.

இப்ப என்ன செய்யறது?

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் வெளியில் வந்து ஜன்னலில் மாட்டி வைத்திருந்த அவன் குடியிருந்த  காலனி நல சங்கத்தின் காலண்டரை திருப்பி அதில் பட்டியலிடப்பட்டிருந்த தொலைபேசி எண்களை மேய்ந்தான். வருடா வருடம் அந்த சங்கத்தில் உருப்படியாய் செய்யும் காரியம் பெரிய நாள்காட்டியை இலவசமாக வினியோகிப்பதுதான். அதன் பின்பக்கத்தில் அந்த ஏரியா மின்வினியோக அலுவலகத்திலிருந்து காவல் நிலையம் வரை அனைத்து தொலைபேசி எண்களும் அச்சடிக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அந்த ஏரியா காவல் நிலையத்தின் எண்ணை குறித்துக்கொண்டு மீண்டும் படுக்கையறைக்குள் நுழைந்தான். நல்ல வேளையாய் ஷாமிலி சமையலறையில் மும்முரமாய் இருந்தாள்.

வெகுநேரம் கழித்து எதிர்முனையிலிருந்து '......... போலீஸ் ஸ்டேஷன் ' என்று குரல் வந்தது.

மாதவன் தன் பிரச்சினையை விவரித்தான்.

'இன்ஸ்பெக்டர் ஐயா வீட்டுக்கு போய்ட்டாருங்க. இனி காலையிலதான். பத்து மணிக்கி வந்து கம்ப்ளெய்ன்ட் எழுதி குடுங்க. வச்சிர்றேன்.

மாதவனை பேச விடாமல் இணைப்பு துண்டிக்கப்பட ஆத்திரத்தில் செல்பேசியை படுக்கையில் எறிந்துவிட்டு தலையில் கையை வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்தான்.

'எவனாச்சும் எடுத்துருப்பானோ?'

அடுத்த நொடியே  அப்படியே எடுத்திருந்தாலும் அத ஓப்பன் பண்ண முடியாதே என்றும் நினைத்தான். ஆனாலும் மனது ஆறவில்லை. அவன் கணக்கு வைத்திருந்த மூன்று வங்கிகளின் கணக்கு ஆப்கள் (apps) அதில்தான் இருந்தது. மொபைல் பேங்க் ஆப்ஸ் வேறு. ஆனால் அதை திறப்பதற்கு எடுத்தவனால் முடியுமா? என்று நினைத்தவன் தேள் கொட்டியதுபோல் நிமிர்ந்து உட்கார்ந்தான். டெபிட் கார்ட் மற்றும் பேங்கிங் ஆப்களின் அனைத்து பின் நம்பர்களும் அந்த ஃபோனில்தான் இருந்தன என்பதும் நினைவுக்கு வந்தது.

'முதல்ல ஃபோன திறக்கணுமே' என்ற வினாவுடன் தன்னைத்தானே தேற்றிக்கொண்டான். ஏனெனில் அந்த செல்பேசியின் 'திறப்பு பின்' ஷாமிலியின் பிறந்த தேதி மற்றும் மாத எண்களின் காம்பினேஷனைக் கொண்டது. அவனுடைய நெருங்கிய நண்பர்களாலும் கூட ஊகிக்க முடியாத எண் என்று எப்போதும் நிணைத்துக்கொள்வான்.ஆகவேதான் அந்த ஃபோனில் இருந்த 'சாம்சங் நோட்ஸ்' ஆப்பிலேயே அனைத்தையும் குறித்து வைத்திருந்தான். பாதுகாப்பாக இருக்குமே என்று.

'ஏங்க என்ன பண்றீங்க? சாப்பிட வரீங்களா? மணி பண்ணெண்டாக போகுது.'

பண்ணிரண்டா? நேரம் போகாமல் செல்பேசி தொலைந்ததை பற்றியே மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

எழுந்து உடை மாற்றிக்கொண்டு குளித்தான். தலையை துவட்டியவாறே டைனிங் மேசையில் அமர்ந்து ஷாமிலி பரிமாறிய சப்பாத்தியை மடமடவென சாப்பிட்டு முடித்தான்.

'நான் இன்னைக்கி பசங்களோட படுத்துக்கறேன். நீங்க ஏற்கனவே டயர்டா இருக்கா மாதிரி தெரியுது. நிம்மதியா ஏசிய போட்டுக்கிட்டு தூங்குங்க.'

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்பார்களே அதுமாதிரி ஏழு வயதில் ஒரு பெண்ணும் ஐந்து வயதில் ஒரு மகனும் அவனுக்கு.

ஷாமிலி குழந்தைகள் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொள்ள மாதவன் சோபாவிலேயே அமர்ந்து யோசிக்க துவங்கினான்...
.......

மாதவன் யோசித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில்

அமர்ந்திருந்த ரவியும் தன் கையிலிருந்த செல்பேசியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

அவன் வேறு யாருமில்லை.

'இது என்ன மாடல் சார். சூப்பரா இருக்கே?' என்று மாதவனைக் கேட்டு எரிச்சலடைய வைத்தவனே தான்.

மாதவனைப் போலவே பொருட்களுடன் பில் கவுண்டரை அடைந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையை வைத்துவிட்டு பில் போடும்போதே அதில் வரும் தொகையை பார்த்துக்கொண்டு நின்றவனை, 'சார் ஃபோன்' என்ற குரல் ஈர்த்தது. பில் போடுபவனுக்கு அருகில் பொருட்களை பைகளில் அடுக்கிக்கொண்டிருந்த பணியாள் அவனை நோக்கி செல்பேசி ஒன்றை நீட்டுவதை பார்த்தான்.

'இத போயி சாமான்களோட வச்சிருக்கீங்க? யாராச்சும் எடுத்திருந்தா என்னாவறது? இந்தாங்க பிடிங்க.'

இது அந்தாளோட ஃபோன் ஆச்சே? இது எப்படி நம்ம கூடையில வந்துது?

சுற்று,ம் முற்றும் பார்த்தான். மாதவன் வாசலுக்கு வெளியே தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் செல்வது தெரிந்தது.  அவனை கூப்பிட குரல் எழுப்ப நினைத்தவனை பில் கவுண்டரிலிருந்து வந்த குரல் இடைமறித்தது. சார்... 475/- ஆவுது கார்டா கேஷா?'

'கேஷ்தான்'  சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஐநூறு  ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

மீதியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவன் அவசர அவசரமாக சாலையில் இறங்கி மாதவன் சென்ற திசையைப் பார்த்தான். மாதவன் சென்ற சுவடே தெரியவில்லை.

'சுத்த லூசா இருப்பான் போலருக்கே.... ஃபோன் காணலைங்கறது கூடவா தெரியாம இருக்கும்?' என்று நினைத்தவாறு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நெருங்கி பையை தொங்க விட்டுவிட்டு சீட்டில் அமர்ந்து யோசித்தான்.
'இப்ப என்ன பண்றது?’கடையிலயே திருப்பி குடுத்துறலாமா? ஆனா அவனுங்களே வச்சிக்கிட்டானுங்கன்னா? வேணாம். ஆனா இந்த மாதிரி செல்ஃபோனுக்கு ஆசைப்பட்டுத்தானே நம்ம வேலையே போச்சி?

ஒன்னு பண்லாம்.இத தொறந்து பார்த்து அந்தாளோட விவரம் தெரியுதான்னு பாப்பம். அப்புறம் காண்டாக்ட் பண்ணி உங்க ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. வந்து வாங்கிக்கிருங்கன்னு சொல்லி குடுத்துருவோம். அதுக்கு முதல்ல இத ரீசார்ஜ் பண்ணணும்..' என்று நினைத்தவாறு  ரீசார்ஜ் செய்ய உதவும் துளையை பார்த்தான். அது சற்று அகண்டு இருந்தது.

'வீட்லருக்கற சார்ஜரால இத சார்ஜ் பண்ண முடியாது போலருக்கே?' என்று யோசித்தவனுடைய பார்வையில் சாலையின் மறுபுறம் ஒளிவிளக்குகளுகளுடன் மின்னிக்கொண்டிருந்த பூர்விகா செபேசி கடை தெரிந்தது.

பைக்கில் ஏறி சற்று தொலைவில் தெரிந்த யூடர்னில் வளைவெடுத்து கடையை அடைந்தான்.

கூட்டம் சற்று குறைவாகவே இருந்ததால் 'என்ன சார் வேணும்'  என்று கேட்டவனைநெருங்கி 'நா வெளியூரு. வர்ற அவசரத்துல சார்ஜர் எடுக்கமறந்துட்டேன்.

ஆஃபாயிருச்சி..' என்று தன் கையிலிருந்த மாதவனின் செல்பேசியை நீட்டினான். 'இதுக்கு ஒரு சார்ஜர் வேணும்.'

'என்ன மாடல் சார்?'

இந்த கேள்வியை எதிர்பார்க்காத ரவி ஒரு சில நொடிகள் திகைத்துப்போனான். உடனே மாதவன் சற்று முன்பு கூறியது நினைவுக்கு வர சமாளித்துக்கொண்டு

'சாம்சங் ஏ50' என்றான்.

'இதுக்கு எதுக்கு இப்படி தடுமார்றான்.' என்று அவனை சந்தேகத்துடன் பார்த்தான் கடையின் பணியாள். அதை கவனியாதவன் போல் பாவித்த ரவி, 'எவ்வளவு வரும்' என்று சமாளித்தான்.

விலையைக் கேட்டதும் சற்று அதிர்ந்து போனான். 'ஏங்க ஆன்லைன்ல நாநூறுக்கு கீழ கிடைக்குதே?'

'அப்ப ஆன்லைன்லயே வாங்க வேண்டியதுதான?' கடைய மூடற நேரத்துல வந்துட்டு... என்று மனதுக்குள் கறுவினான் கவுண்டரில் நின்றிருந்தவன்.

'உடனே கிடைக்காதே....அதான்...'

'அதனாலதான் இந்த விலை. வேணுமா, வேணாமா?'

ரவி எரிச்சலுடன் எதிரில் நின்றவனை பார்த்தவாறு பர்சை எடுத்து தனியாய் நின்ற கடைசி ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.'டெஸ்ட் பண்ணி குடுத்துறுங்க.'

சார்ஜரில் இணைக்கப்பட்ட அடுத்த சில நொடிகளில் செல்பேசிக்கு உயிர் வந்தது. 'இது போறுமா?' என்று கேட்ட பணியாளிடம் 'போறுங்க.' என்றவாறு செல்பேசியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அடுத்த அரை மணியில் வீட்டையடைந்து கையிலிருந்த பையை மனைவி ராஜியிடம் கொடுத்துவிட்டு நேரே தன்னுடைய படுக்கையறையை நோக்கி விரைந்தவனை 'என்ன சாப்பிடலையா? ரெடியாருக்கு.' என்ற மனைவியின் குரல் தடுத்து நிறுத்தியது.

'இப்ப வேணாம்... கொஞ்ச நேரம் ஆவட்டும்'

படுக்கையறைக்குள் நுழைந்து சட்டையைக் கூட கழற்றாமல் சார்ஜரை ப்ளக்கில் நுழைத்து மாதவனின் செல்பேசியை அதனுடன் இணைத்தான். அடுத்த சில நொடிகளில் அது உயிர் பெற்று எண் பேடை (Pad) காட்டியது.

'அவன் என்னவோ நம்பர அடிச்சானே?' என்று கண்களை மூடியவாறு யோசித்தான். சட்டென்று நினைவுக்கு வந்த எண்களை தயக்கத்துடன் அடித்தான்.

அவனுடைய அதிர்ஷ்டம் செல்பேசி உடனே ஹோம் திரையை காட்டியது. ஏதோ ஜாக்பாட் அடித்தவன் போல் மகிழ்ந்து போனான் ரவி.

அடுத்த ஐந்து நிமிட நேரம் செல்பேசியின் சகல வசதிகளையும் பார்வையிட்டான். நிறைய வித விதமான ஆப்கள் (Apps) நிறுவப்பட்டிருந்தன. அதில் அவனுடைய கவனத்தை ஈர்த்தது வங்கி ஆப்கள். மூன்று வங்கிகளின் செல்பேசி வங்கி வர்த்தக ஆப்கள் (mobile banking apps). பயங்கர பசையுள்ள ஆள் போல இருக்கே. உள்ளாற நுழைஞ்சி பாக்கலாமா?

ஆனா இதுக்கெல்லாம் பாஸ்வேர்ட் இல்லன்னா பின்  வேண்டியிருக்கு,மே? என்று யோசித்தவாறே  அனைத்து ஆப்களையும் மீண்டும் ஒருமுறை மேய்ந்தான்.

இறுதியில் அவனில் கண்ணில் பட்டது 'Samsung Notes'.

இதுலருந்துதான அவன் சாமான்கள் லிஸ்ட வாசிச்சான் என்று யோசித்தவாறு அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த கோப்புகளை அலசினான்.

அந்த கோப்புகளில் ஒன்றின் பெயர் pwd என்றிருக்கவே அதை திறந்தான். கண்கள் வியப்பால் விரிந்தன.

'அடப்பாவி! இப்படியா ஒருத்தன் எல்லா பாஸ்வேர்டையும் ஒரே ஃபைல்ல சேத்து வைப்பான். அட மொபைல் பேங்க் பின் நம்பர் கூட இருக்கே' என்று மகிழ்ந்து போனான்.

மீண்டும் ஒரு முறை படுக்கையறை கதவு மூடியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு. நிறுவப்பட்டிருந்த ஒவ்வொரு வங்கி ஆப்பினுள்ளும் நுழைந்து வெளியேறினான். மூன்று வங்கிகளிலும் சேர்த்து ரூ.1.50 லட்சம் சேமித்து வைத்திருப்பதை பார்த்ததும் நாவில் எச்சில் ஊற மென்று விழுங்கினான்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கலானான். இப்ப இருக்கற நிலைமைக்கு அதிகம் வேணாம் ஒரு அம்பதாயிரம் கிடைச்சா ரெண்டு மாசத்த ஓட்டிறலாம்... அடுத்த வேலை கிடைக்கற வரைக்கும்.....

அவனை மேலும் தொடர்ந்து யோசிக்க விடாமல் அவன் எதிர்பாராத நேரத்தில் கையிலிருந்த செல்பேசி மிகுந்த சப்தத்துடன் ஒலிக்க துவங்கியது திரையில் ஷாமிலி .( wife) என்ற எழுத்தும் அழகான முப்பது முப்பத்தைந்து  பெண்ணின் புகைப்படமும் தெரிய 'அட! சூப்பரா இருக்காளே' என்றான் சற்று உரக்க..

அவனை சாப்பிட அழைக்கலாம் என்று நினைத்தவாறு அவனுடைய படுக்கையறைக்குள் நுழைந்த ராஜி 'யார் சூப்பரா இருக்கா?' என்றவாறே அவன் கையில் ஒலித்தவாறு இருந்த செல்பேசியை பார்த்ததும் வியப்புடன், 'இது யார் ஃபோனுங்க?' என்றவாறே அவனருகில் அமர்ந்தாள்.

திரையில் தெரிந்த பெண்ணைப் பார்த்ததும் பொறாமையுடன் 'சூப்பரா இருக்காளேன்னு இவளதான் சொன்னீங்களா?' என்றாள்.

ரவி இல்லை என்று அசடு வழிந்தான். கையும் களவுமாய் பிடிபட்ட கள்வனைப் போலிருந்தது அவனுடைய பார்வை.அதற்குள் செல்பேசி அடித்து ஓய்ந்தது.

ராஜி கோபத்துடன் ரவியை பார்த்து முறைத்தாள். 'சொல்லுங்க... யார் ஃபோன் இது? மறுபடியும் ஒங்க பழைய வேலைய ஆரம்பிச்சிட்டீங்களா?'

ரவிக்கு திருட்டு செல்பேசிகளை வாங்கி அதை மாற்றியமைத்து (Reset) அதிக விலைக்கு கைமாற்றுவது வழக்கம்.  ரவியின் ஆடம்பர சிலவுகளுக்கு அவனுடைய மாத ஊதியம் போதாததாக இருந்ததால் இதை ஒரு சைட் பிசினஸ்சாகவே செய்து வந்தான். ராஜி பல்முறை எச்சரித்தும் அதை அவன் விடுவதாயில்லை. விளைவு? கடந்த மாதம் அவன் அலுவலகத்திலிருந்தே ஒரு செல்பேசியை திருடிவிட கையும் களவுமாய் பிடிபட்டு வேலை போய் கடந்த ஒரு மாதமாக வேறு வேலை தேடிக்கொண்டிருந்தான்.

'நல்ல வேலைக்காரன் நீ, உனக்கெதுக்குடா இந்த சில்லறை புத்தி?' என்று அவனுடைய நெருங்கிய நண்பர்களே ஒதுங்கிக்கொண்டனர்.

'சத்தியமா இல்லம்மா... இன்னைக்கி டிஆர் மால்ல ஒருத்தன் மறந்து  விட்டுட்டு போய்ட்டான். அது எப்படி என் சாமான் கூடையில வந்துதுன்னு தெரியல. பில்லு போடறப்போ அந்த பேக்கிங் பையன் இந்தாங்க சார் உங்க ஃபோன்னு கையில திணிச்சிட்டான். வேற வழி தெரியல வாங்கிக்கிட்டு வந்துட்டேன். இப்ப என்ன பண்ரதுன்னு தெரியல..'

'சரி எடுத்துக்கிட்டு வந்தீங்க. இப்ப அவங்க வீட்லருந்துதான ஃபோன் பண்றாங்க? உங்க ஃபோன் இங்கதாங்க இருக்குன்னு சொல்லிற வேண்டியதுதான? அத விட்டுப்  போட்டு அந்தாளோட வய்ஃப் சூப்பரா இருக்கான்னு வழியறீங்க?' ராஜியின் குரலில் தெரிந்த எரிச்சல் ரவியையும் தொற்றிக்கொண்டது.

'இவ ஒருத்தி பூஜை நேரத்துல கரடி மாதிரி....' என்று மனதுக்குள் நினைத்தான்.

'என்ன கம்முன்னு ஒக்காந்திருக்கீங்க?' என்றாள் ராஜி எரிச்சலுடன். 'அந்த நம்பருக்கு ஃபோன் போடுங்க.'

'இல்லம்மா...' என்று இழுத்தான் ரவி.'ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருந்தது. நாந்தான் சார்ஜர் ஒன்ன வாங்கி.....

'எதுக்கு? நீங்க எதுக்கு தண்டத்துக்கு சார்ஜர் வாங்கனீங்க? அதுலருக்கறத அழிச்சிட்டு கைமாத்தறதுக்குத்தான?'

'சீச்சி... சத்தியமா இல்லம்மா..'

'பின்ன?'

அவளிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்ற யோசனையுடன் பதில் பேசாமல் அமர்ந்திருக்க ராஜியின் கோபம் அதிகரித்தது.

'என்ன சத்தத்தையே காணம்? ஆபீஸ்ல ஃபோன திருடுனீங்களே அப்பவே அவங்க போலீஸ் கம்ப்ளைண்ட் குடுத்திருந்தா என்ன ஆயிருக்கும்? நா வந்து ஒங்க எம்டி கால்ல விழுந்து கெஞ்சினதுனால விட்டார்.... இந்த லட்சணத்துல இத வேற நோண்டி முட்டாள்தனமா எதையாச்சும் செஞ்சிட்டு மாட்டிக்கிட்டீங்க... நா பாட்டுக்கு பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு ஊர பாக்க போயிருவேன்...'

அவளுடைய குரலில் இருந்த கோபம் அவனை திடுக்கிட வைத்தது.

'இல்லம்மா... அப்படியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லை...' என்று இழுத்தான்.

'அப்புறம் எதுக்கு இந்த ஃபோன கை நீட்டி வாங்கனீங்க. அவன் நீட்னப்பவே என்னது இல்லன்னு சொல்லிற வேண்டியதுதான?'

'சொல்லியிருக்கலாம்தான்... அப்ப தோனலை... வேணும்னா நாளைக்கி காலையில திருப்பி குடுத்துட்டு வந்துற்லாம். என்ன சொல்ற?.

'தேவையில்லாததையெல்லாம் செஞ்சிட்டு இங்க வந்து கேளுங்க..... ஃபோன வாங்குனதுதப்புன்னா... அத தேவையில்லாம திறந்து பாத்தது அத விட பெரிய தப்பு.' என்று சீறிய ராஜி அவனிடமிருந்து செல்பேசியை பிடுங்கி திரையிலிருந்த ஆப்களை பார்த்தாள். 'இதுல அந்தாளோட பேங் ஆப்லாம் நிறைய இருக்கு போலருக்கு?'

'அப்படியா?' என்று ஒன்றும் தெரியாதவனைப் போல் எட்டி தன் கையிலிருந்த ஃபோனைப் பார்த்தவனை வெறுப்புடன் தள்ளிவிட்டாள் ராஜி.

'ஒன்னும் தெரியாத மாதிரி ஆக்ட் குடுக்காதீங்க. நீங்க வந்ததுலருந்து அரை மணி நேரமா இந்த ரூமுக்குள்ள இந்த ஃபோனதான் நோன்டிக்கிட்டிருந்தீங்க? உண்மைய சொல்லுங்க.... ஏதாச்சும் தில்லுமுல்லு பண்ணீங்களா?

இல்லை என்பதுபோல் ரவி தலையை அசைக்க 'அப்ப குடுங்க ஃபோன. இத எப்படி எங்க சேக்கணும்னு நா டிசைட் பண்ணிக்கறேன்.'

'இல்ல வேணாம்... அவன் போலீஸ் கீலீஸ்னு போயிருந்தா பிரச்சினையாயிரும். இத நானே டீல் பண்ணிக்கறேன்.. நீ போய் படு.'

'வேணவே வேணாம்.... இனியும் உங்கள நம்பி இத உங்கக்கிட்ட விட்டு வைக்க முடியாது' என்று மறுத்த ராஜி அவனிடமிருந்து செல்பேசியை பிடுங்கிக்கொண்டு

அறையிலிருந்து வெளியேறி கதவைச் சாத்தினாள்.

கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாம போயிருச்சே என்ற ஏக்கத்துடன் உடை மாற்றிக்கொண்டு குளிக்க போனான் ரவி.



*******



இந்த கதை இப்படி முடியாம இருந்தா?

அத நாளைக்கு பாக்கலாம்.



10 கருத்துகள்:

  1. கதை நல்ல சுவாரஸ்யமாக சென்றது ஐயா.

    நல்லவனைகூட புத்தி தடுமாறும் நிலைக்கு சிலர் சில விடயங்களை பதிந்து வைத்து விடுவார்கள்.

    ராஜி போனை மாதவனிடம் ஒப்படைக்கட்டும் அ(இ)துவே நன்று.

    மற்றொரு கோணத்தை நாளை பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி!

      இது ஒரு உண்மை சம்பவத்தையொட்டி எழுதப்பட்ட சிறுகதை. ஆனால் அது அப்படி முடியாமல் இருந்திருந்தால் என்று யோசித்ததன் விளைவே இந்த சற்று நீளமான சிறுகதை. தொடர்ந்து வாசியுங்கள். நன்றி.

      நீக்கு
  2. கதை எழுதுவது உங்களுக்கு கைவந்தகலைதானே சொந்த செலவில்சூனியம் கதை நினைவுக்கு வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கதைக்கும் அந்த தலைப்பு பொருந்தும் போலுள்ளது. வருகைக்கு நன்றி சார்.

      நீக்கு
  3. ‘சொந்த செலவில் சூனியம் ‘என்ற தொடருக்குப் பிறகு புதிர் உள்ள கதையை நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கும் வாய்ப்பைத் தந்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆவலையும் தூண்டியுள்ளீர்கள். ஷாமிலி என் செய்தார் ? உண்மையில் நடந்தது என்ன ? என்று அறிய தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிர் உள்ள கதையை நீண்ட நாட்களுக்குப் பிறகு படிக்கும் வாய்ப்பைத் தந்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை அறியும் ஆவலையும் தூண்டியுள்ளீர்கள்//

      உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி சபாபதி சார்.

      இது ஒரு செல்பேசியை தொலைத்துவிட்டவர் பட்ட பாட்டின் உண்மைச் சம்பவம்... அதோடு என்னுடைய கற்பனையையும் சேர்த்து எழுத நினைத்தேன். சற்று நீண்டு விட்டது...

      நீக்கு
  4. //ஷாமிலி பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாள் என்பது அவனுக்கு தெரியும். பதிலுக்கு பதில் பேசாமல் இருந்தால் சிறிது நேரத்தில் அவளே அடங்கிவிடுவாள்.//

    ஓ....   எல்லா இடத்திலும் இப்படித்தானா?  எல்லா இடத்திலும் இதே டெக்னிக் தானா?!!!

    பதிலளிநீக்கு
  5. ரவி இவ்வளவு சுலபமா ஃபோனைத் திறந்துட்டானே....    அவன் திருடன் வேறா?  அதுசரி...  வாய்ப்பு கிடைச்சா எல்லோரும் திருடன்தான்!!!    ஆனா  மாதவனுக்கு ஏன் அவ்வளவு கோபம் வருது?   செல்போனைத் தூக்கித் தூக்கி வீசும் அளவு கோபம், அலட்சியம்....!

    பதிலளிநீக்கு
  6. வாய்ப்பு கிடைத்தால் நம்மில் பலர் திருடர்களாகிவிடுவார்கள் என்பது உண்மைதான்.

    மாதவனைப் போல கோபப்படுபவர்கள் நம்மில் பலர் உண்டு என்பதும் உண்மை!

    லருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு