28 செப்டம்பர் 2019

நடந்தது என்ன - 2

ஆத்திரக்காரனுக்கு......

ரவியின் மனைவி ராஜி அவனிடமிருந்து செல்பேசியை பறித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து சற்று முன் வந்த செல்பேசி எண்ணை டயல் செய்தாள்.

எதிர் முனையில் பெண் குரல் ஒன்று கேட்டதும், ‘மேடம், உங்க வீட்டுக்காரர் கடையில விட்டுட்டு போன ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. நாளைக்கி எங்க வந்து குடுக்கணும்னு சொல்லுங்க.’ என்றாள்.

எதிர்முனையில் சிறிது நேரம் பதில் வரவில்லை. அந்த பெண் கணவனுடன் பேசும் ஒலி மட்டும் லேசாக கேட்டது. 

‘ஹ்லோ..’ என்றாள் தயக்கத்துடன்.

‘சரிங்க. காலையில அந்த மாலுக்கே வர்றேன்னு சொல்றார். கூப்ட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்க.’

‘பரவால்லைங்க.’ என்று அதற்கு மேல் பேச மனமில்லை இணைப்பை துண்டித்துவிட்டு செல்பேசியை சமையலறைக்குள் மறைத்து வைத்தாள்.

*****

’ஏங்க எங்கிட்ட என்ன சொன்னீங்க? செல்ஃபோன் டிஸ்ப்ளே சரியில்லை. ஃப்ரெண்டுக்கிட்ட குடுத்துருக்கேன்.. ரெண்டு நாள்ல வந்துரும்.... ஏங்க எப்படிங்க உங்களால மட்டும் இப்படி கோர்வையா டூப் அடிக்க முடியுது?’ என்றவாறு மாதவனை கடுப்புடன் பார்த்தாள் ஷாமிலி.’ஃபோன் தொலைஞ்சிருச்சின்னு சொன்னா ஒங்கள கடிச்சா தின்னுருவேன்?’

’உங்கிட்ட சொன்னா பேசியே கொன்னுருவியேன்னுதான் சொல்லலை...’ என்று முனுமுனுத்தவன் இவளிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தவாறு அமர்ந்திருந்தான். 

‘என்ன பதிலையே காணம்?’

’இல்லடி.. எதுக்கு வீணா ஒன்ன டென்ஷன் படுத்தணும்னுதான்....’

‘சரி... ஆனா ஒங்க ஃபோன் ஆஃபாயிருச்ச்ன்னு சொன்னீங்க? இப்ப எப்படி அதுக்கு உயிர் வந்துது?’

அதானே என்று நினைத்தான் மாதவன். செல்ஃபோன் ஆஃபாயிருச்சின்னுதான நாம ட்ராலியில போட்டோம்? இது எப்படி அந்த லேடிகிட்ட போச்சி?

‘தெரியலையே.. ஒருவேளை நாம யார்ங்கற டீட்டெய்ல்ஸ் தெரிஞ்சிக்கறதுக்காக சார்ஜ் பண்ணியிருப்பாங்களோ என்னவோ?’ என்று பதிலளித்த மாதவ்ன் சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் ‘அப்படீன்னா கூட ஃபோன் லாக்காகியிருக்குமே எப்படி திறந்தாங்க?’ என்றான் குழப்பத்துடன். ‘எனக்கென்னவோ இது அந்த லேடியோட வீட்லருக்கற ஆம்பள பண்ண வேலையாத்தான் இருக்கும்...’

ஷாமிலிக்கும் குழப்பமாகத்தான் இருந்தது, 

மாதவனும் யோசனையில் ஆழ்ந்தான். ஒருவேளை இந்த லேடியோட ஹஸ்பெண்ட்தான் அந்த ஆறடி ஆளா இருப்பானோ? அவந்தான் நம்ம பக்கத்துல க்ளோஸா நின்னுக்கிட்டிருந்தான். அவந்தான் நாம பின்ன (PIN) அடிச்சத பாத்துருப்பான்....... கரெக்ட் இது அவன் வேலையாத்தான் இருக்கும்... ட்ராலியிலருந்து விழுந்த ஃபோன எடுத்துருப்பான்.... அவன் பார்வையே சரியில்லை....

அவனுடைய சந்தேகத்தை அப்படியே மனைவியிடம் சொல்ல அது வேறொரு பிரச்சினையை கிளப்பியது.

‘ஒங்களுக்கு விவஸ்தையே கிடையாதுங்க.’ என்றாள் ஷாமிலி எரிச்சலுடன்...

‘ஆரம்பிச்சிட்டாடா.... நானே வாய குடுத்துட்டு மாட்டிக்கறனே... இதுக்குத்தான் இவ கிட்ட சொல்ல வேணாம்னு பாத்தேன்... எல்லாம் அந்த ராஸ்கலால வந்த வினை.... காலையில முதல் வேலையா ஸ்டேஷனுக்கு போயி ரெண்டு கான்ஸ்டபிள்ங்கள கூட்டிக்கிட்டு போயி அவன புடிச்சி குடுக்கணும்... முட்டிக்கி முட்டி தட்ட வச்சாத்தான் நம்ம ஆத்திரம் அடங்கும்....அவனா ஃபோன் பண்றதுக்கு பயந்துக்கிட்டு பொண்டாட்டிக்கிட்ட குடுத்து ஃபோன் பண்ண வைக்கிறான்... நாளைக்கி இருக்கு அவனுக்கு....

‘எந்த எடத்துடல எத எப்படி செய்யிறதுன்னு.... ஒரு..... புத்தி கெட்ட மனுஷன்.... இதுல நா டென்ஷனாவேன்னு எங்கிட்டருந்து மறைச்சாராம்...’ ஷாமிலி தொடர்ந்து புலம்ப மாதவன் காது கேளாதவன் போல் அமர்ந்திருந்தான்...

சிறிது நேரம் புலம்பி நிறுத்திய ஷாமிலி..’காலையில முதல் வேலையா போயி அத வாங்கிருங்க. ‘ என்றாள்.

‘சரி.. அத நா பாத்துக்கறேன்... நீ போய் படு... மணி ஒன்னாகப் போவுது...’

‘நாளைக்கி அவங்க கிட்ட எதுவும் ப்ராப்ளம் பண்ணாதீங்க...’ ஷாமிலி குழந்தைகள் படுத்திருந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினாள்.

’அத எடுத்தது நீயா? இருடே நாளைக்கி இருக்கு ஒனக்கு,,,,’ என்று அந்த ஆறடி உருவத்தை மனதுக்குள் கறுவியவாறு படுக்கையறைக்குள் நுழைந்து ஏசியை ஆன் செய்தான். 

உறக்கம் வந்தால்தானே.... அடுத்த நாள் காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதுக்கு திட்டமிட்டவாறே படுக்கையில் உருண்டுக்கொண்டிருந்த மாதவன் தன்னையும்றியாமல் உறங்கிப்போனான்.

*****

அடுத்த நாள் காலையில் எழுந்ததும் மாதவன் தன் நண்பனை அழைத்து தான் அன்று அலுவலகத்திற்கு விடுப்பு என்று கூறிவிடுமாறு கேட்டுக்கொண்டு முந்தைய நாள் இரவு தீர்மானித்தபடி குளித்து உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டான். பத்து மணிக்கி முன்னால போயிரணும்.... இன்ஸ்பெக்டர் வரலைன்னாலும் எஸ்.ஐ யாராச்சும் இருப்பாங்களே....

அவன் அறையிலிருந்து வெளியில் வருவதற்கென்றே காத்திருந்தவள் போல்,’நீங்க அந்த மால் வாசல்லருக்கற காஃபி ஸ்டால்கிட்ட நிக்கணுமாம். அந்த லேடியோட ஹஸ்பெண்ட் வந்து குடுப்பாராம். அவர் ஒங்கள் நேத்து பாத்துருக்கறதால அடையாளம் கண்டுபிடிச்சிருவார்னு சொன்னாங்க.’ என்றாள் ஷாமிலி.

ஆக அவந்தான் ஃபோன எடுத்துருக்கான்.....வச்சிக்கறேன்... நேரா என்னெ கூப்டுருக்கலாமில்ல? தேவையில்லாம இவள கூப்ட்டு...

‘என்ன யோசிக்கிறீங்க? அவர் கிட்ட தகராறு பண்லாம்னுதான?’

‘இல்லடி... அதான் நேத்தே சொல்லிட்டியே... தகராறு பண்ணி என்ன ஆவப்போவுது? ஆனா...’

ஷாமிலி எரிந்து விழுந்தாள்.’ என்ன ஆனான்னு இழுக்கறீங்க?’

‘இல்ல தேவையில்லாமல் ஒனக்கு ஃபோன் பண்ணி......’

‘ஓ... இப்ப எனக்கு தெரிஞ்சி போச்சேன்னுதான் ஒங்க கவலை, இல்ல? ஏங்க இப்படி இருக்கீங்க? அவங்க எப்படி ஒங்க ஃபோன்ல கூப்ட முடியும்? அதுவே அவங்கக்கிட்டதான் இருக்கு. நீங்க என் ஃபோன்லருந்து கூப்ட்டீங்க. அதனால அதே ஃபோனுக்குத்தான் கூப்டுவாங்க? என் ஃபோன் அடிச்ச சத்தம் கேட்டதால நா ஓடி வந்து ஆன்ஸர் பண்ணனேன்... நீங்க அந்த நேரம் பாத்து பாத்ரூம் போனீங்க.. அதுவும் நல்லதுக்குத்தான் இல்லனா எனக்கு இந்த விஷயமே தெரிஞ்சிருக்காதே...’

அவள் கூறுவதும்தான் சரிதான் என்று நினைத்த மாதவன் பதிலளிக்காமல்... ‘டிஃபன் ரெடியால் இல்லன்னா... நா வெளிய பாத்துக்கறேன்...’ என்றவாறு பேச்சை திசை மாற்றினான்.

‘ஆமா... லேட்டா தூங்கனதால... காலையில எழுந்து டிஃபன் பண்ண முடியல.... மதியானத்துக்கும் கேண்டீன்லயே சாப்டுக்கங்க... ஃபோன் கிடைச்சதும். எனக்கு ஃபோன் பண்ணுங்க...சரியா?’ என்றவாறு ஷாமிலி வாசலை நோக்கி நகர மாதவன் சோபாவில் கிடந்த லேப்டாப் பையையும் பைக் சாவியையும்  எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றான்.

*****

‘மறுபடியும், மறுபடியும் சொல்றேன்னு நினைக்காதீங்க.... அந்த ஆள பாத்ததும் ஜாஸ்தியா பேசிக்கிட்டு நிக்காம ஃபோன குடுத்துட்டு வந்துருங்க... இடையில புத்தி கெட்டு போயி எதாச்சும் தில்லு முல்லு பண்ணீங்க... அப்புறம் என்னெ மறந்துற வேண்டியதுதான்...சொல்லிட்டேன்...’என்ற ராஜியை பார்த்தான் ரவி...

அதான் கைக்கு எட்டுனத வாய்க்கு எட்டாம பண்ணிட்டியே..... இப்படி போயிருவேன் போயிருவேன்னு சொல்லியே என்ன இன்னும் எத்தன நாளைக்கித்தான் ப்ளாக்மெயில் பண்ணுவியோ தெரியல... இன்னும் ஒரு அரை மணி நேரம் கழிச்சி வந்திருந்தேன்னா ஒரு அம்பது ரூபாய என் அக்கவுண்டுக்கு மாத்திக்கிட்டிருப்பேன்.... 

‘என்ன பதிலையே காணம்?’ 

நினைவுகள் கலைக்கப்பட்ட ரவி திடுக்கிட்டு தன் மனைவியை பார்த்தான். ‘இல்ல ஒன்னுமில்ல... ஆனா....’

‘என்ன ஆணா....?’

‘அவன் போலீஸ் கீலிஸ்னு போயிருந்தா?’

ராஜியும் சிந்தனையில் ஆழ்ந்தாள்....’ஆமா நீங்க சொல்றதும் சரிதான்......’

‘நா வேணா நம்ம பாஸ்கர கூப்ட்டு விஷயத்த சொல்லவா?’

‘யாரு... லா டிகிரிய முடிக்காமயே லாயர்னு சொல்லிக்கிட்டு திரியற அந்த ஆளையா? வேற வினையே வேணாம்...’

‘இல்லம்மா.... அவன் வேலை பாக்கற லாயர் ரொம்ப சீனியர் தெரியுமா? அவர் கிட்ட வேலை செஞ்ச அவன் கிட்டத்தட்ட முழு லாயராய்ட்டான்... போலீஸ் ஸ்டேஷன்ல எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்கான்...அவனோட போனா அந்த ஆள் ஏதாச்சும் வில்லங்கம் பண்ணாலும் சமாளிச்சிறலாம்...’

‘சரி... என்னவோ செய்ங்க.... நீங்களா இழுத்து வச்சிருக்கற வில்லங்கத்த விடவா அந்தாளு வில்லங்கம் பண்னப் போறான்? சரி போலீஸ்க்கு போய்ட்டார்னே வச்சிக்குவம்.... நீ  எதுக்குய்யா கீழ கிடந்த ஃபோன எடுத்ததுமில்லாம அத திறந்து பாத்தேன்னு போலீஸ் கேட்டா என்ன பதில் சொல்வீங்க?”

’அத பாஸ்கர் கிட்ட விட்டுறலாம்... அவன் பாத்துக்குவான்... ஒருவேளை அந்த ஸ்டேஷன்ல கூட யாரையாச்சும் இவனுக்கு தெரிஞ்சிருக்கலாம்...’

‘சரி....பாத்து சூதானமா நடந்துக்குங்க.... லாயர்னு ஒருத்தர் கூட இருக்கற தைரியத்துல எதையாச்சும் பேசி விஷயத்த பெரிசாக்கிறாதீங்க.... என்ன நடந்தாலும் எங்கிட்டருந்து மறைக்காதீங்க... உடனே ஃபோன் பண்ணுங்க... என்ன நா சொல்றது கேக்குதா?

‘கேக்குது கேக்குது.... ஃபோன குடுத்ததும் ஒனக்கு ஃபோன் பண்றேன்...’ 

விட்டால் போதும் என்பதுபோல் உடனே அங்கிருந்து புறப்பட்டான்..... வழியில் தன் நண்பன் பாஸ்கரை அழைத்து விஷயத்தை கூறினான். 

‘சர்றா மச்சான்... டீ ஆர் மால் தான? நீ போய் சேர்றதுக்குள்ள நா அங்க இருப்பேன். நா வந்த பிறகு அந்தாள் கிட்ட பேசிக்கலாம்.. நீயா போய் மாட்டிக்காத..’

‘சரிடா.. வச்சிர்றேன்..’ இணைப்பை துண்டித்துவிட்டு பைக்கை டிஆர் மால் இருந்த திசையில் செலுத்தினான்.

காலை நேர வாகன நெரிசல் அவன் மாலை அடைந்த போது பத்து மணியை கடந்திருந்தது. மாலை நெருங்கியதும் வாசலை அடுத்திருந்த காஃபி ஸ்டாலை பார்த்தான். அங்கு யாரும் காத்திருக்கவில்லை.... ‘இன்னும் வரல போலருக்கு.... அவனும் ட்ராஃபிக்ல மாட்டியிருப்பான்.’

‘என்னடா நா நெனச்சதுக்கு முன்னாலயே வந்துட்டே’ என்றவாறு தன்னை நோக்கி வந்த பாஸ்கரை கவனித்தான். ‘மச்சான் இந்த ட்ரஸ்ல அசல் லாயர் மாதிரியே இருக்கேடா...’ என்றான் புன்னகையுடன்.

‘டேய்.... உண்மையிலயே நா லாயர்தாண்டா....’ என்றான் பாஸ்கர் புன்னகையுடன்.... ‘அட்லீஸ்ட் அப்படித்தான் எல்லாரையும் நம்ப வச்சிக்கிட்டிருக்கேன்.... நீதான் நம்ப மாட்டேங்கற..’

‘இல்லடா மச்சான்.....சும்மா தமாஷ்....’

‘சரி... அந்தாள் வந்துட்டானா? பாத்தியா?’

மீண்டும் ஒருமுறை காஃபி ஸ்டால் இருந்த திசையில் பார்த்தான்... ’இல்ல மச்சான். எங்கயாவது ட்ராஃபிக்ல சிக்கிக்கிட்டிருப்பான்.’

****

ஆனால் உண்மையில் மாதவன் வாகன நெரிசல் எதிலும் சிக்கவில்லை.. .

கடந்த ஒரு மணி நேரமாக காவல் நிலையத்தில் அங்கிருந்த உதவி ஆய்வாளர் கோபாலின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.

‘ஏங்க பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க. இப்படியா எல்லாத்தையும் ஃபோன்லயா சேவ் பண்ணி வப்பீங்க? இது எப்படி இருக்குன்னா வீட்ட பூட்டிட்டு சாவிய பூட்டு வாயிலயே வச்சிட்டு போற மாதிரி இருக்கு..’ என்று கிண்டலடித்த கோபால் ‘சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்கறீங்க?’ என்று வினவினார்.

‘இல்ல சார்... அந்த ஆள் என் பேங்க் அக்கவுண்ட்லருந்து ஏதாச்சும் எடுத்துருப்பானோன்னு ஒரு டவுட்...’

‘அத எப்படி அவ்வள்வு ஷ்யூரா சொல்றீங்க?’

‘காலையில பேங்க் சைட்ல போயி செக் பண்ணி பாத்துட்டுதான் சார் வரேன்... முழுசா இருபத்தையாயிரம் குறையறா மாதிரி தெரியுது..’ தான் சொல்வதில் துளியும் உண்மையில்லை என்பது தெரிந்தே சொன்னான் மாதவன். அவனுக்கு ஃபோனை எடுத்தவன் தன்னுடைய மனைவியிடம் தன்னை போட்டு கொடுத்துவிட்டானே என்கிற ஆத்திரம். 

‘மாதிரி தெரியுதுன்னா?’ கோபாலின் குரலில் தெரிவது கோபமா அல்லது கிண்டலா என்பது தெரியாமல் குழம்பினான் மாதவன்.

‘புரியல சார்..’ என்றான் தயக்கத்துடன்.

‘இல்ல... அக்கவுண்ட்ல பேலன்ஸ் குறையறா மாதிரி தெரியுதுன்னீங்களே அத கேட்டேன்.... மாதிரி தெரியுதா இல்ல உண்மையிலேயே குறைஞ்சி இருக்குதா? தெளிவா சொல்லுங்க.’

தான் சொல்வதில் இவருக்கு நம்பிக்கை இல்லை போலருக்கே.. நாம சொல்றது பொய்னு இவருக்கு தெரிஞ்சிருக்குமோ? அவசரப் பட்டுட்டமோ? இங்க வந்தே இருக்க வேணாம் போலருக்கே? நம்ம ஏரியா ஸ்டேஷனா இருந்தா நம்ம நலச் சங்க ஆளுங்கள யாரையாச்சும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாம். ;இல்ல சார் ஃபோன எங்க தொலைச்சீங்களோ அந்த ஏரியா ஸ்டேஷன்லதான் புகார் குடுக்கணும்.’ என்று தன்னை காலையில் அவனுடைய பகுதிகுட்பட்ட காவல் நிலையத்தில் தெரிவித்ததால் வேறு வழியின்றி இந்த நிலையத்திற்கு வந்தான்...

உதவி ஆய்வாளர் கோபால் கேட்ட கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று குழம்பியவாறு மாதவன் சில நொடிகள் அமர்ந்திருந்தான்.

‘இங்க பாருங்க சார்.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு...’ என்று எரிந்து விழுந்தார் கோபால். ‘நீங்க தயங்கறதுலருந்தே நீங்க சொல்றது உண்மையில்லேன்னு தெரியுது. உங்க ஃபோன் போச்சேங்கற கவலைய விட அந்தாளு நம்ம ஃபோன தொறந்து பாத்துட்டானேங்கற ஆத்திரம் தான் ஜாஸ்தியா இருக்கறா மாதிரி தெரியுது.’

இந்த போலீஸ்காரங்களுக்கு இதெல்லாம் எப்படித்தான் தெரியுதோ தெரியல. நம்ம மனசுலருக்கறத அப்படியே சொல்றான் பார்.... 

‘இன்னொன்னையும் சொல்லிக்கறேன். False complaint குடுக்கறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுமா? இதுக்குன்னே ஐபிசில ஒரு செக்‌ஷன் இருக்கு. செக்‌ஷண்ட் 182ல  இதுக்கு என்ன தண்டனைன்னு சொல்லியிருக்கு தெரியுமா? குறைந்த பட்சம் ஆறு மாசம் ப்ரிசன். அதனால யோசிச்சி சொல்லுங்க. உண்மையிலடே அந்தாளு உங்க அக்கவுண்ட்லருந்து பணத்த கையாடல் பண்ணியிருக்காரா இல்லையா?’ உதவி ஆய்வாளரின் குரல் அதிகார தோரணையில் உயர்ந்துக்கொண்டே போக உண்மையிலேயே அரண்டு போனான் மாதவன்.

அவனையுமறியாமல் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

‘என்ன எழுந்துட்டீங்க? உக்காருங்க.’ என்றார் உதவி ஆய்வாளர் கோபத்துடன். ‘நீங்க பாட்டுங்க வருவீங்க... பொய்யா ஒரு புகார் குடுப்பீங்க... அதுக்கு நாங்க FIR போட்டு விசாரணை பண்ணிக்கிட்டு கிடக்கணும்...அப்படித்தான?’

செய்வதறியாது தவித்தான் மாதவன்... ‘இல்ல சார்... ஃபோன் போன பதட்டத்துல.....’ அவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தை கவனித்த உதவி ஆய்வாளர் நாமளும் அதிகமா கோச்சிக்கிட்டமோ என்று நினைத்தார். .

அந்த நேரம் பார்த்து மாதவனின் கையிலிருந்து அவனுடைய மனைவியின் செல்பேசி ஒலிக்கவே, ‘எடுத்து யார்னு பாருங்க.’ என்றார் உதவி ஆய்வாளர். ‘அந்தாளா இருந்தா எங்கிட்ட குடுங்க.’

‘என்ன சார்... பத்து மணிக்கே வரேன்னீங்க?’ என்ற குரல் கேட்டதும் ‘அந்தாள்தான் சார்’ என்றவாறே உதவி ஆய்வாளரிடம் நீட்டினான்.

‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்றார் அதிகாரத்துடன்.

‘நீ யார்யா?’ என்று பதில் வந்ததும்.

‘டேய்....  நா நீங்க யார்னு மரியாதையா கேட்டா பதிலுக்கு நீ யார்யான்னு என்னையே கேக்கறியா? நா இந்த ஏரியா எஸ்.ஐ.. இன்னும் பத்து நிமிஷத்துல ஃபோனோட இங்க வரல....’

எதிர் முனையில் யாரோ இருவர் பேசிக்கொள்வது கேட்டது... அதை பொருட்படுத்தாமல் இனைப்பை துண்டித்துவிட்டு மாதவனிடம் செல்பேசியை திருப்பி அளித்தார் உதவி ஆய்வாளர். ‘பதினஞ்சி நிமிஷம் பார்ப்போம். இல்லன்னா கான்ஸ்டபிள அனுப்பி தேட வைப்போம். நீங்க போயி வாசல்ல வெய்ட் பண்ணுங்க. அந்த ஆள வாசல்ல பாத்தா ஒன்னும் பேசாதீங்க. நா விசாரிச்சி முடிச்சிட்டு ஒங்கள் கூப்டறப்போ மட்டும் வந்தா போதும்... வேணும்னா ஒரு டீ அடிச்சிட்டு வாங்க. என்ன?’

மாதவனுக்கும் பசி வயிற்றை கிள்ளியது. காலையில் டிஃபன் ஒன்றும் சாப்பிடாததும் உதவி ஆய்வாளரின் கிடுக்கிப்பிடி விசாரணையாலும் ஆடிப்போயிருந்த அவனுக்கு எதையாவது சாப்பிட்டால்தான் தெம்பு வரும் என்று தோன்றியது...

‘தாங்ஸ் சார்..’ என்றவாறு வாசலை நோக்கி நடந்தான். 

****

ரவி இணைப்பு துண்டிக்கப்பட்ட செல்பேசியையே பார்த்தவாறு நின்றிருந்தான். நாம நினைச்சது மாதிரியேத்தான் நடந்துருக்கு. நல்ல வேளையா பாஸ்கர வரச்சொன்னோம் என்று நினைத்தவாறு தன் அருகில் நின்றிருந்த தன்னுடைய நண்பனைப் பார்த்தான்.

‘என்னடா பேயறைஞ்சா மாதிரி ஆய்ட்டே?’ என்றான் பாஸ்கர். ‘யார் ஃபோன்ல?’

‘இந்த ஏரியா எஸ்.ஐடா... அவன் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுத்துட்டான் போலருக்கு. இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்டேஷன்ல இருக்கணும்னார்.... அதான் ஒரு செக்கண்ட் என்ன பண்ரதுன்னு தெரியாம.....’

பாஸ்கர் சிரித்தான். ’ஓ இதான் விஷயமா? கவலைய விடு. இந்த ஏரியா எஸ்.ஐ நமக்கு தெரிஞ்சவர்தான்...கொஞ்சம் அடாவடியா பேசுவார்... ஆனா கை சுத்தம்.. மத்த ஆளுங்க மாதிரி இல்ல.. வா பாத்துக்கலாம். ஒன்னோட வண்டியிலயே போயிரலாம். சாவிய குடு. என் வண்டிய வந்து எடுத்துக்கலாம்.’

இருவரும் அடுத்த ஐந்தாவது நிமிடம் காவல் நிலையத்தை அடைந்தனர். 

பாஸ்கரை பார்த்ததும் ஏளனத்துடன் புன்னகை செய்தார் உதவி ஆய்வாளர். ‘என்னய்யா பாஸ்கர், எங்க இவ்வளவு தூரம்? இவர் யாரு ஒன் ஃப்ரெண்டா?’

‘ஆமா சார்...கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஃபோன்ல பத்து நிமிஷத்துல இங்க இருக்கணும்னு மிரட்டுனீங்களே அவர் இவர்தான்.’ என்று பதிலளித்த பாஸ்கர் ரவியின் கையிலிருந்த செல்பேசியை வாங்கி அவரிடம் நீட்டினான். ‘இதான் உங்க கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணவரோட செல்ஃபோன்.’

அதை வாங்கி மேஎசையில் வைத்துவிட்டு ரவியை பார்த்தார் உதவி ஆய்வாளர். ‘இது எப்படிங்க உங்கக்கிட்ட வந்தது? எல்லாத்தையும் மறைக்காமல் சொன்னீங்கன்னா நல்லது.’

ரவி பதில் பேசாமல் தன்னருகில் நின்றிருந்த பாஸ்கரை பார்த்தான். 

‘சார் அது வந்து...’ என்று பாஸ்கர் இழுக்க... உதவி ஆய்வாளர் தலையை வேண்டாம் என்பதுபோல் அசைத்தார். ‘பாஸ்கர் நீங்க வெளியில இருங்க பளீஸ்... இவர நாங்க விசாரிக்கத்தான் கூப்ட்டோம்... இன்னும் அரெஸ்ட் பண்ணல.... போலீஸ் விசாரணையில குறுக்கிட கூடாதுங்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்.’

அவர் சொல்வதில் இருந்த நியாயத்தை உணர்ந்த பாஸ்கர் ரவியிடம், ‘டேய் பயத்துல எதையாவது உளறி வைக்காத... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில சொல்லு. பொய்யா மட்டும் எதையும் சொல்லாத. அப்புறம் என்ன நடந்தாலும் நா பாத்துக்கறேன். சரியா? நா இங்கதான் இருப்பேன்.’ என்று கிசுகிசுத்துவிட்டு வெளியிஏறினான். 

தயக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்த ரவியை யோசனையுடன் பார்த்தார் உதவி ஆய்வாளர்.... ஆள பாத்தா டவுட்டா எதுவும் தெரியலையே...அந்தாள் சொன்னா மாதிரி பேங்க்லருந்து பணத்த கையாடல் பண்ணியிருந்தா தைரியமா ஃபோன திருப்பி குடுக்க வரமாட்டானே? எதுக்கு விசாரிப்போம்.. அப்புறம் பாத்துக்கலாம்  என்று நினைத்தவாறு... அவனை அமரச்சொன்னார்.

‘உங்க பேரு?’

‘ரவி சார்.’ என்றான் தயக்கத்துடன். 

‘என்ன பண்றீங்க?’

வேலை செஞ்ச இடத்த சொன்னா அங்க விசாரிக்கணும்னு சொன்னாலும் சொல்வார்... அப்புறம் வேற வினையே வேணாம். ‘சொந்தமா பிசினஸ் பண்றேன்’

‘பிசினஸ்னா? கடை கிடை வச்சிருக்கீங்க:ளா? விவரமா சொல்லுங்க.’

‘அமேஜான்லருந்து மொத்தமா சாமான்கள வாங்கி வீடு வீடா போயி விப்பேன் சார்.... இருபதுலருந்து இருபத்தஞ்சி பெர்சண்ட் கிடைக்கும்....

‘அமேஜான் ஆன்லைன் ஷாப்லருந்தா?’

‘ஆமா சார்.’ இதுக்கு மேல கேக்காதீங்க சார்.. பொய்யா எதையும் சொல்லி வைக்காதே என்று பாஸ்கர் அறிவுறுத்தியது வேறு நினைவுக்கு வந்தது.

நல்லவேளையாக உதவி ஆய்வாளர் அவனுடைய பதிலில் திருப்தியடைந்துவிட்டதுபோலிருந்தது அவருடைய அடுத்த கேள்வி.

‘சரி.. இந்த ஃபோன் எப்படி உங்க கைக்கு வந்தது? அதச் சொல்லுங்க.’ 

ரவி முந்தைய தினம் நடந்தவற்றை கூறினான். ‘அது எப்படி என் பேஸ்கட்ல வந்துச்சிங்கறது சத்தியமா எனக்கு தெரியாது சார். நீங்க வேணும்னா கடையிலருக்கற சிசிடிவி ஃபுட்டேஜ் பாருங்க....கவுண்டர்ல பில் போடற பையன் எடுத்து குடுத்தப்பத்தான் எனக்கே தெரியும்.’

எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அவன் கூறியதிலிருந்தே அவன் சொல்வது உண்மைதான் என்பதை உணர்ந்துக்கொண்ட உதவி ஆய்வாளர் மேலே தொடர்ந்தார்.

‘சரி ஃபோன அந்த கடை பையன் குடுக்கும்போதே அது எந்தில்லேன்னு சொல்லிற வேண்டியதுதான? எதுக்கு அத வாங்கி.... அத்தோட நிக்காம அத தொறந்து பாத்து அதுலருக்கற நம்பருக்கு ஃபோன் பண்ணி..... இப்படி இங்க வந்து நிக்கணுமா?’

இத்தனை கேள்விகளா? இதுல எதுக்கு முதல்ல பதில் சொல்றது என்று திணறினான் ரவி.

‘என்ன பதில காணம்?’ 

உதவி ஆய்வாளர் குரலில் இருந்த அதட்டல் அவனை மேலும் பதறவைத்தது. இது நமக்கு தேவையா? ஒரு லாபமும் இல்லாம...ச்சை என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டான். ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுவான்னு பாஸ்கர கூப்டுக்கிட்டு வந்தா இவர் அவனெ ஒரே வார்த்தையில விரிட்டிவிட்டுட்டார். 

‘என்னங்க?’ கோபால் விடுவதாக இல்லை.

‘இல்ல சார்.. கடை பையன்......

‘ஆட்டைய போட்ருவான்னு நினைச்சிருப்பீங்க. அப்படித்தானே?’

‘ஆமா சார்’ என்றான் ரவி அவசர அவசரமாக... அவன் சொன்ன நினைத்ததை உதவி ஆய்வாளரே சொன்னதில் அவனுக்கு ஒரு திருப்தி,’அதனாலதான்
அந்த ஃபோன வாங்கி அது யாரோடதுன்னு தெரிஞ்சிக்கிறலாம்னுதான்...

உதவி ஆய்வாளர் அட லூசுப்பயலே என்பதுபோல் அவனைப் பார்த்து ஏளனத்துடன் புன்னகைத்தார் கோபால். நீ இப்படி சொல்ற. அவன் நீ காச ஆட்டைய போட்டுட்டேன்னு புகார் குடுக்கறான்... 

சுவரில் இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தார் கோபால்... ஐயையோ கோர்ட்டுக்கு வேற போவணுமே....ரெண்டு மூனு கேள்வியோட முடிச்சிக்கணும்....இது ஒரு ஒப்பேறாத கேஸ்

‘சரி.. நீங்க இப்படி சொல்றீங்க? புகார் குடுத்தவர் நீங்க அவர் பேங்க் அக்கவுண்ட்லருந்து காச எடுத்துட்டீங்கன்னு சொல்றாரே?’

ரவி திடுக்கிட்டு அவரை பார்த்தான். ‘சார்... சத்தியமா இல்ல சார்.... வேணும்னா இப்பவே உங்களுக்கு ஃப்ரூஃப் பண்ணி காட்றேன்.’

‘எப்படி?’  

அந்த ஃபோன ஒரு நிமிஷம் நா யூஸ் பண்லாமா சார் என்றவாறு மேசை மீதிருந்த செல்பேசியை எடுத்து அடுத்த பதினைந்து நிமிடத்தில் மாதவனின் மூன்று வங்கிகளுடைய ஆப்பையும் பயன்படுத்தி ஒவ்வொன்றிலும் இருந்து வங்கி கணக்கு புத்தக நகலை தரவிறக்கம் செய்து அதில் எதிலிருந்தும் தான் பணத்தை எடுக்கவில்லை என்பதை நிரூபித்தான். 

அவன் செயல்படுவதை அவனுடைய இருக்கைக்கு பின்னல் நின்று கவனித்துக்கொண்டிருந்த கோபால் அவன் செய்து முடித்ததும்....’ நீங்க பலே ஆள் போல இருக்குதே...’ என்று சிரித்தார். ‘அதெப்படிங்க ஒரு ஆளோட பேங்க் அக்கவுண்ட்டுக்க்ள்ள இவ்வளவு ஈசியா போய் வரீங்க? அதுக்கு வேண்டிய பாஸ்வேர்ட் எல்லாம் அந்த ஃபோன்ல இருக்கறதுங்கறத நேத்து ராத்திரி பூரா ஒக்காந்து மேய்ஞ்சிருக்கீங்க, இல்ல?’

அவர் குரலில் இருந்த கோபம் ரவியை குழப்பியது... இந்த ஆள்தான நா காட்டறேன்னு சொன்னப்போ சரிங்கறா மாதிரி ஃபோன குடுத்தாரு? இப்ப அதுவே விணையா போயிருச்சி போலருக்கே?

‘சரி.. சரி டென்ஷனாகாதீங்க.... எல்லாம் ஒரு க்யூரியாசிட்டி இல்ல? இத்தன பேங்க்ல கணக்கு வச்சிருக்கானே? அப்படி என்னத்தான் அதுல வச்சிருப்பான்னு பாக்கற ஆர்வம்... அப்படித்தான? அதுவும் நல்லதா போச்சி... இல்லன்னா அந்த ஆள் அப்படி ஒரு புகார் குடுத்தா ஒங்களால அது பொய்யின்னு ப்ரூஃப் பண்ணியிருக்க முடியாதே... குட்... நல்ல வேலை செஞ்சீங்க...’ என்ற உதவி ஆய்வாளர் எழுந்து நின்றார்... பிறகு எதிரில் நின்றிருந்த காவலரிடம், ‘யோவ் வெளியில அந்த லாயர் பாஸ்கர் வெய்ட் பண்ணிக்கிட்டிருப்பார் அவர உள்ள வரச்சொல்லு’

பாஸ்கர் அடுத்த நொடியே உள்ளே வந்தான். ‘என்ன சார்.. முடிச்சிட்டீங்களா?’

‘ஆமாய்யா.... ஒன் ஃப்ரெண்ட் பலே ஆள்தான்... ஆனா சுத்த ஏமாளி அவர் இருந்த இடத்துல வேற ஆளா இருந்தா பேங்க் பேலன்ஸ் முழுசையும் சுரண்டிட்டு ஃபோன குப்ப தொட்டியில வீசி எறிஞ்சிட்டு போயிருப்பான். இவர் என்னடான்னா ஃபோன் சொந்த காரன கூப்ட்டு குடுக்கலாம்னு..... அந்தாள் என்னடான்னா இவன் பணத்த ஆட்டைய போட்டுட்டான்னு கம்ப்ளெய்ண்ட் குடுக்கறான்....?’

பாஸ்கர் கோபத்துடன், ‘அப்படியா சொன்னான்...? அப்படி ஒரு கம்ப்ளெய்ண்ட் அந்தாள் குடுத்தா நாங்க ஐபிசி செக்‌ஷன் 182ல ஒரு கவுண்டர் (counter) கம்ப்ளெய்ண்ட் குடுத்தா எப்படி இருக்கும் சார்.. ?சும்மான்னாச்சும் ஒரு ஃபால்ஸ் கம்ப்லெய்ண்ட் குடுத்து ஒங்கள சுத்த விடற ஆள சும்மா விட கூடாது சார்.’

கோபால் சிரித்தார். ‘ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க? கவுண்டர் கம்ப்ளெய்ண்ட்லாம் தேவையிருக்காது...அந்தாள ஏற்கனவே மிரட்டிதான் வச்சிருக்கேன். சரி... நீங்க வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தப்போ அந்தாள் வந்தாரா?’

‘இல்லையே சார்... வெளியில யாரும் இல்லையே?’ 

‘அப்படியா? அப்படியே ஓடிட்டானா?’ என்று சிரித்தார் கோபால். ‘பொய் புகார் குடுத்தா ஆறு மாசம் ஜெயில்னு ஒரு குண்ட போட்டேன்.. மனுஷன் பயந்துட்டார் போலருக்கு.....’

‘அப்ப நாங்க போலாமா சார்?’

‘தாராளமா....அந்தாள் புகார் எதுவும் ரைட்டிங்ல குடுக்கல... குடுத்தா பாத்துக்கலாம்...’ என்றவன் ரவியை பார்த்து புன்னகைத்தார்...’பாத்துங்க... எல்லாரும் என்னைய மாதிரி இருக்க மாட்டாங்க... புகார வாங்கிக்கிட்டு உள்ள தள்ளியிருப்பாங்க.... அப்புறம் நீங்க நிரபராதின்னு கோர்ட்லதான் ப்ரூஃப் பண்ணியிருக்கனும்...போய்ட்டு வாங்க... இனிமே இந்த மாதிரி சோஷியல் சர்வீஸ்லாம் பண்ணாதீங்க... என்ன புரியுதா?’

ரவி உடனே தலையை அசைத்தான்.... ‘தாங்ஸ் சார்...’ என்றவாறு பாஸ்கரை பார்த்தான். அவன் போகலாம் என்பதுபோல் தலையை அசைக்க இருவரும் காவல்நிலையத்தை விட்டு வெளியேறினர். 

அவர்கள் இருவரும் பேசியவாறே காவல்நிலையத்தை விட்டு வெளியேறியதை சாலையின் மறுபுறத்தில் நின்றுக்கொண்டிருந்த மாதவன் கவனித்தான். பிறகு அவர்கள் இருவரும் வாகனத்தில் ஏறி சென்று மறையும் வரை காத்திருந்துவிட்டு காவல்நிலையத்திற்குள் நுழைந்தான்.

அவன் வருவதை கவனித்த உதவி ஆய்வாளர் கோபால். ‘என்ன சார் எங்க போய்ட்டீங்க? அவங்கள நேரா மீட் பண்ற தைரியம் இல்ல... அப்படித்தான?’ 

என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தலை கவிழ்ந்து நின்றான் மாதவன். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல் தான் அவசரப்பட்டு தேவையில்லாமல் சொன்ன பொய் தன்னை இப்படி நிற்க வைத்துவிட்டதே என்று நொந்துபோனான்.

‘இந்தாங்க உங்க ஃபோன்.... நியாயமா இத எடுத்து உங்கக்கிட்ட சேஃபா சேத்துறம்னு நினைச்ச ஆளுக்கு நீங்க ஏதாச்சும் ரிவார்ட் குடுக்கறது போயி... நீங்க சொன்ன ஒரு பொய் உங்கள அந்தாள் மூஞ்ச கூட பாக்க முடியாம பண்ணிருச்சி....’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான். ‘சாரி சார்... ஏதோ அந்தாள் மேலருந்த கோபத்துல....’

‘ஆமாங்க... இப்பவாச்சும் தெரிஞ்சிக்குங்க... கோபத்துல எடுக்கற எந்த முடிவும் சரியா இருக்காது....’ என்ற உதவி ஆய்வாளர் தொடர்ந்தார்..’அந்த மாதிரி பணத்த ஆட்டைய போடணும்னு நினைக்கற ஆள் எதுக்காக ஒங்கள கூப்டணும்.? அக்கவுண்ட்லருந்து எல்லாத்தையும் எடுத்துட்டு ஒங்க ஃபோன சிம் கார்ட எடுத்துட்டு தூக்கி எறிஞ்சிட்டு போயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? சரி ஒங்க ஃபோனோட IMEI நம்பரையாவது சேவ் பண்ணி வச்சிருக்கீங்களா?’

‘இல்ல சார்...’ 

உதவி ஆய்வாளர் எரிச்சலுடன் அவனை பார்த்தார். ‘முதல்ல அத செய்ங்க... அப்பத்தான் ஃபோன்ல வேற எந்த சிம் கார்ட போட்டாலும் ட்ரேஸ் (Trace) பண்ண முடியும்... அது இல்லேன்னா.... ஒன்னும் பண்ண முடியாது....’

மேசை மீதிருந்த செல்பேசியை எடுத்து அவனிடம் நீட்ட அதை பெற்றுக்கொண்டு ‘சாரி சார்... தாங்ஸ் சார்...’ என்று குளறியவாறு தலைகுணிந்தபடி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினான் மாதவன்...

*******

இது இப்படியும் முடியலைங்க...

அப்போ உண்மையில என்னதான் நடந்தது?

அதை திங்கட்கிழமை பாக்கலாம்...

இது வரைக்கும் புடிச்சிருந்தா மேலருக்கற ‘லைக்’ பட்டண அழுத்துங்க...



**********




18 கருத்துகள்:

  1. பதிவு மிகவும் சுவாரஸ்யறாக இருந்தது.
    இதில் ஆய்வாளர் கோபால் நல்லவராக இருந்தது கதாசிரியருக்கு லாபம்.
    (ஒருவேளை திங்கட்கிழமை முகமூடி கழட்டப்படுமோ)

    இரண்டு கணவர்களின் குணங்களும் குப்பையே.. ஆனால் இருவரது மனைவிகளின் குணம் தங்கமே...

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது உண்மையே...

    சரி உண்மையில் நடந்தது என்ன ?
    அறிய ஆவலுடன்...

    (இதுல லைக் பட்டனுக்கு எங்கே போறது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு கணவர்களின் குணங்களும் குப்பையே.. ஆனால் இருவரது மனைவிகளின் குணம் தங்கமே...//

      ஏறக்குறைய எல்லார் வீட்லயும் இப்படித்தானே :)

      இதுல லைக் பட்டனுக்கு எங்கே போறது)//

      தலைப்புக்கு மேல தெரியுமே....

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி!

      நீக்கு
  2. போலீஸ் வக்கீல்க்ள் பற்றி அதிகம்தெரிகிறதுஉங்களுக்கு நல்ல விஷ்ய ஞானம் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  3. லைக் பட்டன் சிஸ்டம் இப்பொழுதுதான் உள்ளே போய் கண்டு கொண்டேன் லைக்-8 போட்டேன்.
    நான் அலைபேசியில்தான் படித்து கருத்துரை கொடுக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லைக் போட்டதற்கு மிக்க நன்றி :)

      நான் அலைபேசியில்தான் படித்து கருத்துரை கொடுக்கிறேன் ஐயா.//

      நானும் வழக்கமாக அப்படித்தான் செய்வேன்.. இதை கணினியில் செய்கிறேன்.

      நீக்கு
    2. நானும் லைக் பட்டனைத் தேடிக் கண்டுபிடித்தேன்!

      நீக்கு
  4. மிகவும் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்கமுடியவில்லை. மனைவிமார்கள் இருவரும் நியாயப்படி நடக்கவேண்டும் என்ற கொள்கை உள்ளவர்களாக இருக்கும்போது, அவர்களின் கணவன்மார்கள் அதற்கு எதிராக இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இதுதான் வாழ்வின் விசித்திரம் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சுவாரஸ்யமாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள்.//

      மிக்க நன்றி சார்.

      மனைவிமார்கள் இருவரும் நியாயப்படி நடக்கவேண்டும் என்ற கொள்கை உள்ளவர்களாக இருக்கும்போது, அவர்களின் கணவன்மார்கள் அதற்கு எதிராக இருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. இதுதான் வாழ்வின் விசித்திரம் போலும்.//

      சரியாக சொன்னீர்கள். ஆனாலும் மனைவிமார்கள் எல்லை மீறும் சமயங்களில் அவர்களிடமிருந்து பல உண்மைகளை மறைப்பதிலேயே ஆண்கள் குறியாயிருப்பார்கள். இதை மனைவிமார்களும் புரிந்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்.

      வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
  5. இரண்டு பகுதிகளையும் ஒன்றாக படித்தேன். நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாகராஜ் அவர்களே.

      நீக்கு
  6. இப்படியெல்லாம் கற்பனைக் குதிரையில் நல்லா பறக்கிற ஆளு எதுக்காக எல்லாத்தையும் மூட்டை கட்டிட்டு உக்காந்துட்டாரு .... இப்படி மனதுக்குள் ஒரு கேள்வி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தருமி சார்,

      நல்ல கேள்விதான்.... எதற்காக விலகியிருந்தேன் என்பது உங்களுக்கே தெரியும்... இப்போது அதிகம் எழுதாமல் மாதம் இரண்டோடு நிறுத்திக்கொள்வதால் தோள்வலி பரவாயில்லை... மருத்துவமும் பார்த்தேன்.. ஆகவேதான் சரி எழுதித்தான் பார்ப்போமே என்று நினைத்தேன்...

      நீக்கு
    2. ஓ...    அதே தோள்வலி பிரச்னையா?  டேக் கேர் ஸார்.

      நீக்கு
  7. இவ்வளவு  நியாயமான போலீஸ் அதிசயம்தான்.  மாதவனுக்கு அதிருஷ்டம்.   ஷாமிலி ரவியையும், மாதவனையும் காப்பாற்றி இருக்கிறாள்.    நல்லவனாக இருக்கவிடாத, அல்லது தொடரவிடாத உலகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தெரிந்த பல காவல்துறை அதிகாரிகள் மிகவும் நல்லவர்கள். அவர்களில் ஒருவர்தான் கோபால் .

      திரைப்படங்களில் வருபவர்களைப் போன்றவர்களும் இருக்கலாம்

      நீக்கு
  8. சில புத்திசாலிகள் ஏ டி எம் கார்டுக்குப் பின்னாலேயே பின் நம்பர் எழுதி வைத்திருப்பார்கள்.    மாதவன் அந்த ரகம் போல....!   இன்னொரு முடிவு வேற இருக்கா.....   காத்திருக்கிறேன்.

    எப்படியோ கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க....   எங்களையும் ஞாபகம் வச்சுக்குங்க!!!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படியோ கதை எழுத...//

      நிச்சயமா அடித்த சிறுகதை 'எங்கள் பதிவில்' தான்இது சற்று நீண்டுவிட்டது அதனால்தான் தரவில்லை.

      வந்து உங்களுடைய கருத்தை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு