என்னுடைய அப்போதைய வங்கி முதல்வருடைய செயல்பாடுகள், முக்கியமாக கடன் வழங்குவதில் அவர் புகுத்த நினைத்த யுக்திகள், எங்களுடைய தலைமையகத்தில் செயல்பட்ட மத்திய கடன் வழங்கும் இலாக்கா அதிகாரிகளையும் கூட சங்கடத்தில் ஆழ்த்தியது என்றால் மிகையல்ல.
அதுவரை லட்சங்களிலேயே புழங்கியவர்களை கோடிகளைப் பற்றி சிந்திக்க வைத்தார் அவர். அதை 'இப்போ இவ்விடயும் கொடியான பிடிக்கென.' என்று கேலியாக கூற ஆரம்பித்தனர். அவர்கள் 'இவ்விடயும்' அதாவது 'இங்கேயும்' என்று கூறியது கேரளத்தில் கம்யூனிச கொடிகளை பிடித்தவாறு தினமொன்றுக்கு செல்லும் ஊர்வலத்தைக் குறித்துதான் என்பது அனைவருக்கும் விளங்கியது.
என்றாலும் ஒரு வங்கி முதல்வரை எதிர்த்து தலைமையக அதிகாரிகளே செயல்பட முடியாதல்லவா? ஆகவே அவரை சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு. ஆனால் தங்களுடைய எதிர்ப்பை மறைமுகமாக காண்பிக்க ஆரம்பித்தனர்.
கிளைகளிலிருந்து வரும் பெருந்தொகைக்கான கடன் பரிந்துரைகளை தேவைக்கும் அதிகமான சிரத்தையுடன் பரிசீலிக்க ஆரம்பித்தனர். அதாவது எப்படியெல்லாம் கடன் வழங்காமலிருப்பது என்ற கண்ணோட்டத்துடன். It is easy to reject than to sanction என்பார்கள். அதாவது குறைசொல்வது எளிது என்பதுபோல. ஆக்கத்தைவிட அழிப்பது எளிதல்லவா?
ஏற்கனவே வங்கி முதல்வரின் அதிரடி நடவடிக்கைகளால் கலங்கிப் போயிருந்த கிளை மேலாளர்கள் எங்களுடைய மத்திய கடன் வழங்கும் இலாக்காவினரின் எதிர்மறையான செயல்பாட்டால் மேலும் குழம்பிப் போயினர்.
எங்களுடைய வங்கி முதல்வர் பொருளாதார செய்தித்தாள்களில் (Financial Newspapers) தினசரி வெளியாகும் நிறுவனங்களின் நிதியறிக்கைகளை படித்துவிட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதல்வருக்கோ அல்லது உயர் அதிகாரிகளுக்கோ நேரடியாக 'உங்களுடைய நிறுவன கடன் தேவைகளுக்கு அருகிலுள்ள எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களை தொடர்பு கொள்ளுங்கள்' கடிதம் எழுதிவிடுவார். அன்றோ வங்கிகளிலிருந்து கடன் பெறுவது சிரமமாக இருந்த காலம். இன்று பதிமூன்றிலிருந்து பதினைந்தாக இருக்கும் கடன் வட்டி விகிதம் அன்று பதினாறிலிருந்து பதினெட்டு வரை இருந்த காலம்.
ஆகவே எங்களுடைய வங்கி முதல்வரிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதம் சகிதம் கிளை மேலாளர்களை (குறிப்பாக சென்னை, மும்பை, தில்லி நகரங்களிலுள்ளவை) அணுகினாலே போதும், கடன் கிடைத்த மாதிரிதான் என்ற நினைப்புடன் அணுகும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் நிதியறிக்கைகளைப் பெற்று தங்களுடைய பரிந்துரையுடன் கிளை மேலாளர்கள் தலைமையகத்துக்கு அனுப்புவது வழக்கம். ஆனால் அவை யாவுமே சுவரில் அடித்த பந்தாக ஏதாவது ஒரு காரணத்திற்காக திரும்பிவந்தால்?
ஆனால் வங்கி முதல்வரின் செயல்பாட்டை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்ட அதிகாரிகள் பிடிபட அதிக நாள் எடுக்கவில்லை. கடன் பரிந்துரைகளை சமர்ப்பித்த சில அனுபவமிக்க கிளை மேலாளர்கள் அவை சில கற்பனையான காரணங்களுக்காக மறுக்கப்பட்ட போது வங்கி முதல்வரிடமே நேரடியாக புகாரளிக்க முதல்வர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்.
அடுத்த சில வாரங்களிலேயே கடன் வழங்கும் இலாக்காவில் சொகுசாக பணியாற்றிக்கொண்டிருந்த சில அதிகாரிகள் தில்லி, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களுக்கு கிளை மேலாளர்களாக மாற்றப்பட்டனர். அதாவது அவர்கள் சற்று முன்பு நிராகரித்த அதே கடன் பரிந்துரைகளை அவர்களே மீண்டும் பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
அவர்களுடைய இடத்திற்கு வங்கியின் இயக்குனர் குழுவின் அனுமதியுடன் சி.ஏ. பட்டம் பெற்ற இளைஞர்களை மத்திய கடன் வழங்கும் இலாக்காவிலும் பெருநகரங்களில் இயங்கிவந்த என்னுடையதைப் போன்ற வட்டார அலுவலகங்களிலும் பணிக்கு அமர்த்தினார். அத்துடன் கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணியில் என்னைப் போன்ற பேங்கிங் அதிகாரிகளுக்கு இருந்த பங்கு (Role) வெகுவாக குறைக்கப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட அளவுக்குட்பட்ட கடன் பரிந்துரைகளை மட்டும் எங்களைப் போன்ற அதிகாரிகளும் அதற்கு மேற்பட்ட பரிந்துரைகளை சி.ஏ. பட்டதாரிகளும் பரிசீலிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பார்ப்பதற்கு சாதுவாக தென்பட்ட முதல்வர் உண்மையில் அப்படிப்பட்டவரல்ல என்பதை இத்தகைய அதிகாரிகள் உணர ஆரம்பித்தனர். விளைவு? அடுத்த ஐந்தாறு மாதங்களில் வங்கியின் கடன் வழங்கும் முறை அடியோடு மாறியது. முன் அனுபவம் இல்லாத சி.ஏ பட்டதாரிகளுடைய பரிந்துரையை மட்டுமே ஏற்று வட்டார மேலாளர்கள் கடன் விண்ணப்பங்களை மேலிடத்திற்கு பரிந்துரைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
இப்போதுள்ளது போன்று அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக செயல்பட்டு வரும் இரண்டாம் தலைமுறை தனியார் வங்கிகள் அப்போது இல்லை என்பதால் அரசு வங்கிகளில் கடன் பெறமுடியாத பல fly by night operators எனப்படும் தரம் குறைந்த நிறுவனங்கள் எங்களைப் போன்ற வங்கிகளுக்கு படையெடுக்க துவங்கியிருந்த காலம் அது.
பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் கடன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத அரசு வங்கிகள் independent lending என்ற முறையிலிருந்து consortium lending என்று புதிய கடன் வழங்கும் பாணியை அறிமுகப்படுத்தியதும் இந்த காலக்கட்டத்தில்தான்.
எங்களுடைய வங்கி முதல்வரும் நாட்டின் முதன்மை அரசு வங்கியிலிருந்து வந்தவர் என்பதால் அந்த வங்கியின் தலைமையில் இயங்கிவந்த consortium குழுவில் அங்கத்தினராகி அவர்கள் கடன் வழங்கியிருந்த பெருவாரியான நிறுவனங்களுக்கு எங்களுடைய வங்கியும் கடன் வழங்குவது என முடிவு செய்தார். எங்களுடைய வங்கி கிளை மேலாளர்களுக்கு corporate advance proposals பரீசிலனை செய்யக் கூடிய திறன் இல்லை என்பதால் இத்தகைய வங்கி குழுக்களுடன் சேர்ந்து கடன் வழங்குவதன் மூலம் மட்டுமே விரைவில் இத்தகைய கடன்களை வழங்க முடியும் என்பது அவருடைய வாதமாக இருந்தது.
அவருடைய அணுகுமுறையில் எங்களுடைய வங்கி உயர் அதிகாரிகள் பலருக்கும் விருப்பம் இல்லையென்றாலும் அத்தகைய கடன்கள் வழியாக அந்த வருட இறுதியில் வங்கிக்கு கிடைத்த கணிசமான வட்டி வருமானம் வங்கியின் ஒட்டுமொத்த லாப விழுக்காட்டை மிக அதிக அளவில் உயர்த்தியபோது அதிகாரிகளின் வாதம் வெறும் வீம்பு என இயக்குனர் குழு முடிவு செய்தது!
அதுவரை கிளை மேலாளர்களின் செயல்பாட்டின் மூலம் கிடைக்கப் பெற்றிருந்த லாபம் இனி வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால் மட்டுமே கிடைக்கும் என்பதுபோன்ற முடிவுக்கு எங்களுடைய வங்கியின் இயக்குனர் குழு வந்தது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயம்..
வங்கிய அந்த வருடத்திய நிதியறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் எங்களுடைய வங்கி முதல்வரின் திறமையான செயல்பாட்டால்தான் வங்கியின் லாப விழுக்காடு பெருமளவில் பெருகியது என்ற அறிக்கையும் வெளியிடப்படவே வருடக் கணக்காக திறம்பட செயல்பட்டு வந்த பல உயர் அதிகாரிகள் சோர்ந்து போயினர் என்பதும் உண்மை.
வங்கியின் இயக்குனர் குழு தன்னுடைய பாணியை அங்கீகரித்தாகிவிட்டது, ஆகவே அதே பாணியில் தொடர்ந்து செல்வது என்ற முடிவுக்கு வந்திருந்த எங்களுடைய வங்கி முதல்வர் மேலும் ஒரு தேவையற்ற காரியத்தை செய்தார்.
அதுவே அவருடைய வீழ்ச்சிக்கும் காரணமாயிருந்தது...
தொடரும்
பந்தயக் குதிரை எப்போ விழுமென்று
பதிலளிநீக்குபார்த்திருப்பார்களே......
வாங்க ஜி!
பதிலளிநீக்குபந்தயக் குதிரை எப்போ விழுமென்று
பார்த்திருப்பார்களே...... //
இது எல்லா நிறுவனங்களிலும் காணக்கூடியதுதான். ஆனால் வங்கிகளில் ஒவ்வொரு மூன்று, நான்கு வருடங்களுக்கும் புதிய தலைவர்கள் வருவது வழக்கமாகிவிட்ட ஒன்று. ஒவ்வொரு புதிய தலைவர் வரும்போதும் வங்கியின் கண்ணோட்டம், செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் அதற்கு எதிர்ப்புகள் எழுவது வாடிக்கை..
அப்படித்தான் நடந்தது எங்களுடைய வங்கியிலும்.