07 ஜூன் 2007

திரைப்படங்களில் பிரம்மாண்டம்

இன்றைய குமுதத்தில் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி நடிகர் விக்ரம் கூறுகையில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய பிரம்மாண்ட யுக்திகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

திரைப்படங்களில் பிரம்மாண்டம் தேவைதான், ஓரளவுக்கு. ஆனால் அதையே ridiculous என்பார்களே அந்த அளவுக்கு கொண்டு செல்வதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் விளைவுகளைப் - பொருளாதார விளைவுகள் - பற்றி இவர்களுக்கு கடன் வழங்கும் என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கே தெரியும்.

நான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாமவர் நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். அப்போது தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவர்.

நான் கிளைக்கு பொறுப்பேற்கும்போதே அவருக்கு எங்களுடைய கிளையிலிருந்து கடன் வழங்கப்பட்டிருந்தது. என்னுடைய காலத்தில் அதை புதுப்பிக்க வேண்டும். அதற்காக அவரிடமிருந்து ஒரு விண்ணப்பம் வேண்டியிருந்தது.

அதற்கே பலமுறை என்னுடைய பணியாளர்களுள் ஒருவர் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. பிறகு பெருந்தன்மையுடன் சரிவர பூர்த்தி செய்யப்படாத ஒரு விண்ணப்பத்தையும் அதனுடன் தணிக்கை செய்யப்படாத நிதியறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார்.

அவருடைய நிதியறிக்கைகளைப் பரிசீலித்தபோது அதில் sundry creditors பகுதியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளின் பெயரைக் காண முடிந்தது. ஏறக்குறைய இவர்கள் எல்லோருடைய பெயரும் sundry debtors பகுதியிலும். அதாவது நிறுவனத்திற்கு கடனும் கொடுத்திருக்கிறார்கள், அதே நிறுவனத்திலிருந்து கடனும் பெற்றிருக்கிறார்கள். இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்று நினைத்தேன்.

அப்போது அந்த தயாரிப்பாளர் இருந்த உச்ச நிலையில் அவரை அணுகி விளக்கம் கேட்பதென்பது முடியாத காரியம். அவருடைய அலுவலக மேலாளர் அதற்கும் மேல். தொலைப்பேசியில் அழைப்பது வங்கி மேலாளர் என்று தெரிந்ததும் இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லும் ரகம். திரைப்பட நடிகர்கள் காட்டும் பந்தாவைவிட திரைப்பட தயாரிப்பாளர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் காட்டும் பந்தா மிக அதிகம்.

ஒருவழியாக பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு தயாரிப்பாளருடைய மேலாளரையும், தணிக்கையாளரயும் சந்திக்க முடிந்தது. என்னுடைய சந்தேகம் எல்லாம் எப்படி ஒருவரே கடன் பெற்றவராகவும், கடன் கொடுத்தவராகவும் தொடர்ந்து இருக்க முடியும் என்பதுதான்.

அதற்கு அவர்கள் அளித்த பதில். 'சார் நம்ம கம்பெனி கண்ட்ரோல்ல இருக்கற தியேட்டர்காரங்கதான் இவங்க. நாங்க தயாரிக்கற படாமாருந்தா ஒரு படத்துக்கு பூஜை போட்டதும் ஏரியா, ஏரியாவா வித்துருவோம். அதுக்கு அவங்க குடுக்கற அட்வான்ஸ் தொகை sundry creditor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம். அதுக்கப்புறம் படம் முடிஞ்சி ரிலீஸ் பண்ற நேரத்துல மீதி பணத்த அவங்களால ஒரே தவணையில குடுக்க முடியாமப் போயிரும். அவங்க குடுத்துருக்கற தொகைய கழிச்சிக்கிட்டு மீதி வரவேண்டிய தொகைய sundtry debtor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம்.'

எனக்கு அப்போதும் குழப்பம் தீரவில்லை. 'நீங்க சொன்னபடி பார்த்தா படம் ரிலீஸ் பண்ற நேரத்துல அவங்கக்கிட்டருந்து வாங்குன தொகைய கழிச்சிக்கிட்டுத்தான படத்த குடுக்கறீங்க? அப்போ sundry creditorல இருக்கற கணக்க முடிச்சிரணுமே. அதுக்கப்புறம் எப்படி அதுல பாலன்ஸ் இருக்கும்?' என்றேன்.

இது கூட தெரியாதா சார் உங்களுக்கு என்பதுபோல் இருவரும் என்னைப் பார்த்தனர். 'இது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் சார்.. அதோட நாங்க வருசத்துக்கு கொறஞ்சது நூறு படங்கள வெளியாளுங்கக் கிட்டருந்து வாங்கி ரிலீஸ் பண்றமே? அதனால இது தொடர்ந்துக்கிட்டே இருக்கும் சார்.'

அதாவது சங்கிலித் தொடர்போன்று படங்கள் தயாரிக்கப்படுவதும், வெளியிடப்படுவதும் நடந்துக்கொண்டே இருப்பதால் நிறுவனத்துடன் தொடர்புக்கொண்டிருந்த திரையரங்குகளிடமிருந்து பணம் பெறுவதும் கொடுப்பதும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும்.

'சரி சார். அப்படீன்னா ஒவ்வொரு படத்துக்கும் வர்ற லாபத்த எப்படி கணக்கு பண்ணுவீங்க? முழுத்தொகையும் வசூலாவறமாதிரியே தெரியலையே? நீங்க போன வருசத்துல காமிச்சிருக்கற லாபம் எந்தெந்த படங்கள்லருந்து வந்த லாபம்னு ஏதாவது கணக்கு இருக்கா? எங்க ஹெட் ஆஃபீஸ்ல கேப்பாங்களே?' என்றேன் சலிப்புடன்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இந்த மாதிரி சின்னப் பசங்கள்லாம் பேங்க் மேனேஜரா வந்தா இதான் பிரச்சினை என்று அவர்கள் நினைப்பது எனக்கு நன்றாகவே விளங்கியது.

'சார்... இது நீங்க நினைக்கறா மாதிரி பிசினஸ் இல்லை. எவ்வளவு போட்டா எவ்வளவு லாபம் வரும்னெல்லாம் கணக்கு தெரியாம செய்யற பிசினஸ். ஒரு படத்துக்கு ஒரு கோடி செலவு செய்வோம்... பத்து கோடி லாபம் வரும்... பத்து கோடி இன்வெஸ்ட் பண்ணுவோம்.. படம் ஊத்திக்கும்.. இதுல இந்த படத்துக்கான காச கீழ வச்சாத்தான் அடுத்த பட ரிலீஸ் தருவோம்னு தியேட்டர்காரங்கக் கிட்ட சண்டைக்கு நின்னா... அவ்வளவுதான் நம்ம படத்த எவனும் ரிலீஸ் பண்ண முன்வரமாட்டான். நீங்க குடுக்கற --------லட்சத்துல நடக்கற கம்பெனியில்லசார் இது. வேணும்னா ஒங்க மொத்த பேலன்சையும் வட்டியோட இப்பவே செக்கா குடுத்து செட்டில் பண்ண சொல்றேன். வாங்கிக்கிறீங்களா?' என்றார் தணிக்கையாளர் எகத்தாளமாக.

அன்றைய தியதியில் அவர்களுக்கு அளித்திருந்த கடன் தொகை கணிசமானதுதான்... அந்த தொகையை உடனே வசூலித்துவிட்டால் அதன் மூலம் வங்கிக்கு கிடைத்துவரும் லாபம் உடனே போய்விடும். 'அவங்க நல்ல பார்ட்டியாச்சே எதுக்கு அக்கவுண்ட க்ளோஸ் பண்ணிட்டாங்க?' என்ற கேள்விகளும் என்னுடைய மேலிடத்திலிருந்து எழலாம்.

ஆயினும் நாம் வழங்கும் கடன் மட்டும் வேண்டும். ஆனால் நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்பதுபோல் நடந்துக்கொள்ளும் வாடிக்கையாளர் நமக்கு தேவையில்லை என்று அப்போது தோன்றியது எனக்கு. ஒரு நொடி கூட தயங்காமல், 'சரி சார். குடுத்துருங்க.' என்றேன். இதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லையென்பது அவர்கள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது. ஆனால் இந்த சின்ன பையன் முன்னால நம்ம கவுரவத்தை இழந்துவிடவேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ உடனே காசோலையை கிழித்துக் கொடுத்துவிட்டார்கள். 'இது ப்ளாங்க் செக் சார்... வட்டியோட சேத்து ஃபில் அப் பண்ணிக்குங்க. பேங்க்ல போடறதுக்கு முன்னால அமவுண்ட மட்டும் போன் பண்ணி சொல்லிருங்க.' என்றவாறு எழுந்து நிற்க நானும் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.

ஒருவேளை என்னுடைய அனுபவமின்மையும் இத்தகைய முடிவுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால் அது என்னை எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்பது சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து தெரிந்தது...

அதைப்பற்றி நாளை கூறுகிறேன்....

2 கருத்துகள்:

  1. ஆகா! சினிமா எடுக்குறது சம்பாதிக்கத்தான். அதே நேரத்துல கொஞ்சம் கலையார்வத்தோடயும் எடுக்கலாம். இல்லைன்னா பேசாம நீலப்படம் எடுத்துப் பொழைக்கலாம்.

    அதுல நீங்க சொல்ற மாதிரி அல்டாப்பு கேசுங்க வேற...என்ன நடந்ததோ..அடுத்த பதிவுல படிச்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்,

    அதுல நீங்க சொல்ற மாதிரி அல்டாப்பு கேசுங்க வேற...//

    இப்பல்லாம் இதுங்கதான் ஜாஸ்தி.

    பதிலளிநீக்கு