06 ஜூன் 2007

திரும்பிப் பார்க்கிறேன் II - 64

வங்கிகள் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட தவணைகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை (Term Loans) மட்டுமே வழங்க முன்வருவதுண்டு.

அவற்றை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதலாவது, மூன்று வருடங்கள் அல்லது 36 மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தக் கூடிய குறுகிய காலக் கடன் (Short term loan). இரண்டாவது அதற்கு மேற்பட்ட நீண்டகால கடன்கள் (Long term loan).

அப்போதெல்லாம் நீண்டகாலக் கடன்கள் அதிகபட்சமாக ஏழாண்டுகள் வரை வழங்கப்படுவதுண்டு. இது என்னென்ன தேவைகளுக்காக கடன் பெறப்படுகிறது என்பதைப் பொருத்து அமையும். பெரும்பாலும் தொழிற்சாலைக் கட்டிடங்கள் கட்டுவதற்கு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு நீண்டகாலக் கடன்கள் வழங்கப்படுவதுண்டு.

ஆனால் இத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவது வங்கிகளால் இயலாத காரியம். இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுடைய வைப்பு நிதி சேமிப்பு திட்டங்களின் கீழ் (Fixed Deposit Schemes) அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரையில் மட்டுமே கணக்கு துவங்க முடியும் என்ற நிர்பந்தம். மேலும் வங்கிகள் வசம் இருந்த மொத்த சேமிப்பு தொகையில் (Deposit Amount) அறுபது விழுக்காடுகளுக்கும் மேல் உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய Demand Deposits ஆகவே இருந்தன. இப்போதும் அப்படித்தான்.

ஆகவே ஐந்து வருடங்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தக் கூடிய கடன்களை வழங்குவது சாத்தியமில்லாத விஷயமாகக் கருதப்பட்டது.

இத்தகைய நீண்டகாலக் கடன் வழங்குவதற்கெனவே அப்போது term lending institutions எனப்படும் நிறுவனங்கள் இயங்கி வந்தன. அவற்றில் முக்கியமானவை ICICI Corporation மற்றும் IDBI ஆகியவை.

ஒரு தொழில் துவங்கத் தேவையான முதலீட்டில் நீண்டகாலக் கடன்களை (Term Loans) இத்தகைய நிறுவனங்களும் குறுகியகாலக் கடன்களை (Working Capital facilities) வங்கிகளும் இணைந்து வழங்கி வந்தன. இந்த கடன்களைப் பெறும் தொழில் நிறுவனத்தின் அசையா சொத்துக்கள் (Factories, Machinery etc) நீண்ட காலக் கடன்களுக்கு ஈடாகவும் அசையும் சொத்துக்கள் (Working Capital Assets) வங்கிகள் வழங்கும் குறுகியக் காலக் கடன்களுக்கு ஈடாகவும் கோரப்படுவதுண்டு.

இத்தகைய கூட்டு முயற்சிகள் அப்போது மிகவும் பிரபலமாயிருந்தது. ஆனால் இதில் நாளடைவில் பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன. ஒரு தொழில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தேக்கநிலை ஏற்படும் சமயங்களில் முதலில் பாதிக்கப்படுவது வங்கிகள் வழங்கிய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்துக்கள்தான். நிறுவனத்தின் அன்றாட செயல்பாட்டுக்கு உதவும் அசையா சொத்துக்களான உற்பத்திப் பொருட்கள் கைவசம் இல்லாத நிலையில் வங்கிகள் வழங்கிய கடன்களுக்கு ஈடாக எந்து சொத்தும் இல்லாத நிலை ஏற்பட்டுவிடக்கூடும்.

அச்சமயங்களில் நீண்டகால கடன்களை வழங்கும் ஐடிபிஐ போன்ற நிறுவனங்கள் அவர்களுடைய கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள அசையா சொத்துக்களை வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முன்வர வேண்டும். அதுதான் நீண்ட காலக் கடன் வழங்கும் நிறுவனங்களுடனான கூட்டுறவின் அடைப்படை நியதியாக வங்கிகள் கருதிவந்தன.

ஆனால் தங்களுடைய நீண்டகாலக் கடன்களை முழுவதுமாக வசூலித்தப் பிறகு மீதமுள்ள சொத்துக்களை மட்டுமே வங்கிகளுடன் பகிர்ந்துக்கொள்ள முடியும் என்கிற நிலைப்பாட்டை ஐடிபிஐ, ஐசிஐசிஐ போன்ற நிறுவனங்கள் எடுக்கவே வங்கிகளும் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதற்கு ஒரே வழி தங்களிடம் கடன் கோரி வரும் தொழில் நிறுவனங்களின் மொத்த தேவையையும் தாங்களே பூர்த்தி செய்யவேண்டும் என்பதுதான் என வங்கிகளும் உணர ஆரம்பித்தன் விளைவுதான் லீசிங் ஃபைனான்ஸ் என்கிற புதுமாதிரி கடன் வழங்கும் முறை.

அதுவரை நீண்டகாலக் கடன் வழங்கி வந்த ஐசிஐசிஐ, ஐடிபிஐ போன்ற வங்கிகளல்லாத நிறுவனங்கள் மட்டுமே ஈடிபட்டிருந்த லீசிங் முறை வங்கிகளும் ஈடபடத் துவங்கின.

நீண்டகால கடனுக்கு லீசிங் முறைக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு தொழில் நிறுவனத்திற்கு இயந்திரங்கள் வாங்க கடனுதவி தேவை என்று வைத்துக்கொள்வோம்.

இயந்திரம் தேவைப்படும் தொழில் நிறுவனத்திடமிருந்து இயந்திரத்தின் விலையில் சுமார் 10லிருந்து 25 சதவிகிதம் வரை அதனுடைய முதலீடாக (margin) பெற்றுக்கொண்டு மீதித் தொகையை கடனாக வங்கிகள் வழங்குவதுண்டு. இயந்திரத்தின் மொத்த விலையையும் வங்கியே அதன் விற்பனையாளரிடம் வங்கி காசோலை மூலமாக நேரடியாக வழங்கிவிடும். ஆனால் இயந்திரம் கடன் பெற்றவருடைய பெயரில் விற்கப்படும். அதாவது இயந்திரத்தின் உரிமையாளர் கடன் பெறுபவராக இருப்பார். கடன் நிலுவையில் நின்றுவிடும் சூழலில் கடன் வழங்கிய வங்கி நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்ட அதாவது அடகு வைக்கப்பட்ட இயந்திரத்தை கைப்பற்றி விற்று கடனை வசூலித்துக்கொள்ள முடியும். வங்கிக்கு இத்தகைய உரிமை உண்டு என்றாலும் அதை செயல்படுத்துவது அத்தனை எளிதல்ல. கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்துக்கள் (hypothecated assets) கடன் பெற்றவரின் கைவசம் இருப்பதால் அவற்றை வங்கிகளுக்கு தெரியாமலே விற்றுவிட வாய்ப்பிருந்தது. மேலும் இத்தகைய கடன்களிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையை தவிர வேறெந்த வருமானமும் வங்கிகளுக்கு கிடைப்பதில்லை.

ஆனால் லீசிங் முறையில் தொழில் நிறுவனத்தின் பயனுக்கு தேவையான இயந்திரங்களை வங்கிகளே தங்களுடைய பெயரில் வாங்கி சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடியும். அதாவது தொழில் நிறுவனத்திற்கு இயந்தைரங்களை பயன்படுத்தும் உரிமை மட்டுமே இருக்கும். அதை விற்பதற்கு எவ்வித உரிமையும் இருக்காது. மீறி விற்றால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும் வங்கிகளுக்கு உரிமையுண்டு. சாதாரணமாக இத்தகைய முறையில் வட்டி என்று எதுவும் இருக்காது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மாதா மாதம் வழங்கும் லீசிங் வாடகை வங்கியின் வருமானமாக கருதப்படும். வங்கிகள் ஒரு இயந்திரத்தின் விலையின் மீது பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கணக்கிட்டு அதை இயந்திரத்தின் விலையுடன் சேர்த்து அந்த கூட்டுத்தொகையை தவணைகளாக பிரித்து வாடகை என்று வசூலிப்பது வழக்கம். இதைத்தான் லீசிங் வாடகை என்பார்கள் (lease rentals). அத்துடன் இயந்திரங்கள் வங்கிகளின் பெயரிலேயே இருப்பதால் வருடா வருடம் அதனுடைய கொள்முதல் விலையில் பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் வரையிலும் கழிவு (depreciation) என்று தங்களுடைய வருமானத்திலிருந்து எழுதித் தள்ள முடியும். இதனால் வங்கிகள் செலுத்தக் கூடிய வருமான வரி கனிசமான அளவு குறையக்கூடும்!

ஆனால் இத்தகைய லீசிங் முறையில் கடன் வழங்கும் பாணி அப்போது வங்கித் துறையில் அறிமுக நிலையில் இருந்ததால் எங்களைப் போன்ற வங்கிகளில் அதன் செயல்பாடுகளில் அனுபவம் உள்ள அதிகாரிகள் யாரும் இருக்கவில்லை.

ஆகவே எங்களுடைய வங்கி முதல்வர் இத்தகைய முறையை எங்களுடைய வங்கியிலும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று முனைந்தாலும் அதை சரிவர செயல்படுத்த முடியவில்லை. ஆகவே அவருடைய முந்தைய வங்கியிலிருந்து இத்துறையில் அனுபவம் உள்ள இரு அதிகாரிகளை கொண்டு வரும் செயலில் இறங்கினார்.

அப்போதுதான் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

சாதாரணமாக எந்த ஒரு நிறுவனத்திலும் உயர் அதிகாரிகள் நிலையில் வெளியிலிருந்து ஆட்களை - அவர்கள் எத்தனை தகுதி மிக்கவர்களாயினும் - கொண்டு வருவதற்கு அந்த நிறுவனத்திலுள்ள மற்ற அதிகாரிகள் அத்தனை எளிதில் சம்மதிக்க மாட்டார்கள்.

அதுதான் எங்களுடைய வங்கியிலும் நடந்தது. நிறுவனத்திலேயே திறமையுள்ள சில அதிகாரிகளை தெரிவு செய்து அவர்களுக்கு இத்துறையில் பயிற்சி அளிக்கலாமே என்ற எண்ணம் பல உயர் அதிகாரிகள் மத்தியில் நிலவியது. அதில் வெகு சிலர் தங்களுடைய கருத்தை பகிரங்கமாகவே கூற ஆரம்பித்தனர். ஆனால் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் தன்னுடைய எண்ணத்தை செயல்படுத்துவதில் எங்களுடைய வங்கி முதல்வர் முனைப்பாயிருந்தார்.

தங்களுடைய கருத்துக்கு அவர் மதிப்பளிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்த அதிகாரிகள் தங்களுடைய தொழிற்சங்கத்தை அணுகினர். இத்தகைய சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் முதல்வரின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க விஷயம் மேலும் தீவிரம் அடைந்தது.

ஆனால் வங்கி இயக்குனர் குழு முதல்வரின் யோசனையை ஆதரிக்கவே அவர் தன்னுடைய முந்தைய வங்கி நிர்வாகத்திடம் இரு மூத்த அதிகாரிகளுடைய பெயர்களை பரிந்துரைக்குமாறு கடிதம் அனுப்பினார்.

ஆனால் அதிலும் சிக்கல். மூத்த அதிகாரிகள் வெளி வங்கிகளிலிருந்து வருவதை எங்களுடைய வங்கி அதிகாரிகளும் தொழிற்சங்கமும் விரும்பவில்லை என்பதை எப்படியோ அறிந்த முதல்வரின் முந்தைய வங்கி தங்களால் யாரையும் பரிந்துரைக்க இயலாதென்றும் வேண்டுமானால் எங்களுடைய வங்கியின் கோரிக்கையை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக விடுவதாகவும் அதைப் பார்த்துவிட்டு விரும்பி வருபவர்களிலிருந்து தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது.

சாதாரணமாக தற்சமயம் பணியாற்றும் நிறுவனத்தில் தங்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றோ அல்லது எதிர்வரும் காலத்தில் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பில்லை என்றோ கருதும் அதிகாரிகள் மட்டுமே அதிலிருந்து வெளியேற எண்ணுவது வழக்கம். அத்தகையோர் திறமைசாலிகளாகவோ அல்லது அனுபவம் உள்ளவர்களாகவோ இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும் தங்களைவிடவும் பன்மடங்கு சிறிய வங்கிக்கு செல்வதற்கு நல்ல திறமையுள்ளவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதும் உண்மைதானே.

அப்படித்தான் நடந்தது..

எங்களுடைய வங்கிக்கு வருவதற்கு வெகு சிலரே முன்வந்தனர். அதிலிருந்து எங்களுடைய வங்கி முதல்வர் தெரிவு செய்த இருவரும் எங்களுடைய வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளைக் காட்டிலும் விஷயஞானத்திலும் சரி திறமையிலும் சரி உயர்ந்தவர்கள் அல்ல என்பது அவர்களுடைய முழு விவரமும் எங்களுடைய வங்கிக்கு வந்து சேர்ந்தவுடன் கொதித்தெழுந்தது எங்களுடைய தொழிற்சங்கம்...

தொடரும்..

2 கருத்துகள்:

  1. நல்ல திட்டங்கள், இப்படிப்பட்ட நடைமுறைத் தடைகளால்,
    பலவீனமடைகின்றன.

    உங்கள் அதிகாரிகளுக்கே பழைய வங்கியில் பயிற்சி அளித்திருக்கலாம்
    ஆனால் அதிலும் சிக்கல் உண்டு.
    இத்திட்டத்தில் நம்பிக்கயில்லாதவர்கள்
    பயிற்சி பெற்று திரும்பியபின்னர்
    திட்டத்தையே 'கொத்து பரோட்டா'
    போட்டுவிடுவதும் உண்டு

    பதிலளிநீக்கு
  2. வாங்க ஜி!

    நல்ல திட்டங்கள், இப்படிப்பட்ட நடைமுறைத் தடைகளால்,
    பலவீனமடைகின்றன.//

    உண்மைதான். ஆனால் அதே சமயம் எந்த ஒரு நல்ல திட்டமும் முதலில் நிறுவனத்திற்குள் இருப்பவர்களிடம் விற்கப்படவேண்டும். அதாவது அவர்கள் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களால் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் விற்கமுடியும். If you can't sell your products to your own people you can't sell it to outsiders என்பார்கள்.

    உங்கள் அதிகாரிகளுக்கே பழைய வங்கியில் பயிற்சி அளித்திருக்கலாம்
    ஆனால் அதிலும் சிக்கல் உண்டு.
    இத்திட்டத்தில் நம்பிக்கயில்லாதவர்கள்
    பயிற்சி பெற்று திரும்பியபின்னர்
    திட்டத்தையே 'கொத்து பரோட்டா'
    போட்டுவிடுவதும் உண்டு //

    இதுவும் உண்மைதான். பயிற்சி அளிப்பதற்கு தெரிவு செய்ய வேண்டிய process ஒழுங்காக நடக்கவில்லையென்றால் பிரச்சினைதான். தகுதியற்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் எந்த பயனும் இருக்காது. மேலும் உள்ளே இருப்பவருக்கு பயிற்சி அளித்து அவர் அதில் திறம்பட செய்வார் என்று எதிர்பார்த்திருப்பதைவிட வெளியிலிருந்து ஏற்கனவே சம்பந்தப்பட்ட துறையில் வல்லுனர் ஒருவரை தெரிவு செய்து அவருக்கு கீழே நிறுவனத்திலுள்ள அதிகாரிகளை நேரடி பயிற்சி பெற (on the job training) செய்வதுதான் நல்ல அணுகுமுறை.

    ஆனால் அதை உள்ளிருக்கும் அதிகாரிகள் உணர்வதில்லை. அவர்களுக்கு ஒத்து ஊதுவது தொழிற்சங்கங்கள்..

    இது இன்றும் பல நிறுவனங்களிலும் நடப்பதைக் காணலாம்..

    பதிலளிநீக்கு