ஒங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.’ என்ற அறிவுரையுடன் கொடுத்துவிட்டு நான் ‘அளித்ததை’ பெற்றுக்கொண்டு சென்றார்.
எனக்குக் கிடைத்த தகவலை வைத்தே சம்பந்தப்பட்ட சொத்துக்களுக்கு ஒரு வில்லங்க சான்றிதழ்களைப் பெற்றுவிட முடியும் என்று நினைத்தேன். அவற்றை நீதிமன்றத்தின் மூலம் attach செய்துவிட்டால் வாடிக்கையாளர் தாமாக வங்கியின் கடனை அடைக்க முன்வருவார் என்றும் யோசித்து அப்படியே செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.
அதை செயல்படுத்தும் எண்ணத்துடன் முனிசிபல் அலுவலகத்தைவிட்டு வெளியே வந்த நான் என்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். மாலை ஐந்து மணியைக் கடந்திருந்தது.
இப்போது சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று பயனில்லை. இனி நாளைக் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் முனிசிபல் அலுவலகத்தில் அவர் கூறிய அறிவுரைப்படி என்னுடைய மாமனாரிடம் இதைப்பற்றி பேச வேண்டுமா என்று யோசித்தேன். எதற்காக அவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் என்றும் தோன்றியது.
அவருக்குத் தெரிந்திருக்க வேண்டுமென்றால் என் மனைவிக்கும் தெரிந்திருக்க வேண்டுமே அவரிடம் இவர்களைப் பற்றி கேட்டால் என்ன என்றும் தோன்றியது. ஆனால் அதே சமயம் பிரசவம் இன்றோ நாளையோ என்ற நிலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் என் மனைவியிடம் இப்படிப்பட்ட விஷயத்தைப் பேசுவது உசிதமல்ல என்று நினைத்தேன்.
சட்டென்று மனதில் ஒரு எண்ணம் உதித்தது. இதற்கு சரியான நபர் என்னுடைய வங்கியின் சட்ட ஆலோசகர்தான் என்று தோன்றியது. ஆனால் அவரை வார நாட்களில் மாலை ஏழு மணிக்கு மேல்தான் சந்திக்க முடியும் என்பதால் என்னுடைய அலுவலகத்திற்குத் திரும்பி மீதமிருந்த அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு அவரைச் சந்திக்க செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
மேலும் அன்று ஜூன் மாதம் 29ம் நாள். எங்களுடைய அரையாண்டு கணக்கு முடிப்பதன் சம்பந்தமாக அலுவல்கள் நிறைய இருந்தன. ஆகவே அலுவலகம் திரும்பி அந்த அலுவல்களில் மூழ்கிப் போனேன்.
என்னுடைய அலுவலக மேசையில் ஒரு சிறிய அலாரம் டைம் பீசை வைத்திருப்பது வழக்கம். என்னுடைய முக்கியமான அலுவல்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க ஒரு நாளில் இரண்டு மூன்று முறையாவது எனக்கு நினைவுபடுத்த அலாரம் வைப்பது வழக்கம். இப்போதிருப்பதுபோல கணினி இருக்கவில்லையே..
வேலை மும்முரத்தில் என்னுடைய சட்ட ஆலோசகரை சந்திக்க வேண்டும் நான் மாலையில் எடுத்த முடிவு மறந்துபோகவிருந்த சமயத்தில் அலாரம் அடிக்கவே, என்னுடைய மேசையிலிருந்தவற்றை இழுப்பில் வைத்து பூட்டிவிட்டு தன்னுடைய அலுவல்களில் மும்முரமாக இருந்த என்னுடைய உதவி மேலாளரிடமும் அலுவலகத்திற்கு பின்னால் என்னுடைய குடியிருப்பில் இருந்த என்னுடைய மனைவியிடமும் கூறிக்கொண்டு புறப்பட்டேன்.
என்னுடைய வங்கியின் சட்ட ஆலோசகர் தூத்துக்குடியில் எதிரும் புதிருமாய் இருந்த இரு சாதிப்பிரிவினரில் ஒரு பிரிவினைச் சார்ந்தவராயினும் எல்லோரிடம் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இனிமையுடன் பழகும் சுபாவம் உள்ளவர். அவருக்கு இருந்த வாடிக்கையாளர்களுள் எல்லா சாதிப் பிரிவனரையும் சார்ந்தவர்கள் இருந்தனர்.. பிழைப்புக்காக என்றாலும் அதையும் பொருட்படுத்தாமல் தன் இனத்தைச் சார்ந்தவருக்கு மட்டுமே வாதிடும் வழக்கறிஞர்களும் தூத்துக்குடியில் இருக்கத்தான் செய்தார்கள்.
நான் அவருடைய அலுவலகத்தை அடைந்த நேரம் peak hour என்பார்களே அதுபோல் இருந்தது. இருக்க இடம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் கூட்டம். அவர் தூத்துக்குடி முனிசிபாலிட்டிக்கும் சட்ட ஆலோசகராக இருந்ததால் வழக்குகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் குறைவில்லை.
ஆயினும் நான் நுழைந்ததை தன்னுடைய அறையிலிருந்தே கவனித்த அவர் என்னைப் பார்த்ததும் புன்னகையுடன் எழுந்து ‘உள்ளார வாங்க ஜோசஃப்’ என்றார்.
நான் குழுமியிருந்த கூட்டத்தைப் பார்த்து தயங்குவதைப் பார்த்த அவர், ‘இவங்கெல்லாம் தெனமும் வர்றவங்க. ஆனா நீங்க எப்பவாச்சும் தானே.. அதனால சும்மா வாங்க..’ என்றவாறு தன் அறையில் குழுமி இருந்தவர்களைப் பார்த்து, ‘என்னய்யா.. இவரு நம்ம பேங்க் மேனேசர்.. இவர தனியா பாத்துக்கணுமில்லே.?’ என்றார் சிரித்தவாறு.
குழுமியிருந்தவர்களுள் சிலர் என்னுடைய வாடிக்கையாளர்களாகவும் இருந்தனர். அவர்கள் மட்டும் என்னைப் பார்த்து புன்னகைக்க மீதியுள்ளவர்கள் என்னை, ‘யாருவே இவுக?’ என்பதுபோல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
நான் அவரருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து வந்த விஷயத்தை சுருக்கமாகக் கூறிவிட்டு முனிசிபல் அலுவலகத்தில் இருந்து எனக்கு கிடைத்திருந்த விவரங்களை அவரிடம் காண்பித்தேன்.
அவர் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் நான் கொடுத்த ச்சீட்டையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு குழுமியிருந்தவர்களுக்கு விளங்கக் கூடாது என்ற நோக்கத்தில் ஆங்கிலத்தில், ‘இது வேணுமா சார்? நீங்க டார்கெட் பண்ணியிருக்கற ஆளு நீங்க நினைக்கறா மாதிரி லேசுபட்ட ஆளில்லையே, அதான் யோசிக்கறேன். நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?’ என்றார்.
‘சொல்லுங்க சார்.’
‘இந்த ஆள நல்லா தெரிஞ்ச ஒரு ஆள எனக்கு தெரியும். என்னோட க்ளையண்ட்தான். நா வேணும்னா அவர்கிட்ட ஒங்க லோன் சமாச்சாரமா பேசிப் பாக்கறேன். எனக்கு ஒரு ரெண்டு நாள் டைம் கொடுங்க.’
என்னுடைய வங்கியின் சட்ட ஆலோசகராய் கடந்த நான்கு ஆண்டுகள் பணியாற்றிய, தூத்துக்குடி நகரைச் சார்ந்த ஒரு வழக்கறிஞரே தயங்குகிறார் என்றால் நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தவர் உண்மையிலேயே ஒரு வில்லங்கம் பிடித்த ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்ற நினைப்பில் ‘ஓக்கே சார்.. ரெண்டு நாளைக்கப்புறம் நான் உங்கள கூப்டறேன்.’ என்று கூறிவிட்டு எழுந்து நின்றேன்.
அவரும் எழுந்து என்னுடன் என்னுடைய வாகனம் வரை வந்தார். ‘நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க ஜோசப். நீங்க வந்து ரெண்டு மாசம்தான் ஆயிருக்குன்னு நினைக்கிறேன். முதல்ல இந்த ஊரைப்பத்தி, இங்கருக்கற ஆளுங்களோட பேக்ரவுண்ட பத்தி முழுசா விசாரிச்சி தெரிஞ்சிக்குங்க. அப்புறம் ரிக்கவரிக்கு இறங்குங்க. நானும் இங்க வந்து ப்ராக்டீஸ் துவங்கி சுமார் இருபது வருஷத்துக்கு மேல ஆவுது.. இருந்தாலும் சில சமயங்கள்ல உயிர கைல பிடிச்சிக்கிட்டு இருக்கறதுபோல தோணும். இது மத்த ஊர்ங்க போல இல்ல. ரொம்பவும் கவனமா நாம மூவ் பண்ணணும். ஏதோ சொல்லணும்னு தோனிச்சி. பி கேர்ஃபுல். இட் ஈஸ் ஃபார் யுவர் ஓன் குட்.’
நான் என்னுடைய வீட்டிற்கு திரும்பும் வழியெல்லாம் அவர் கூறிய அறிவுரையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என்னுடைய பெயரை யாரோ உரக்க அழைப்பதைக் கேட்டு சாலையோரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன்.
நான் பணியில் சேர்ந்ததும் சந்தித்த ஆறேழு படகுகளுக்கு சொந்தக்காரர் (இன்சூரன்ஸ் பாலிசி விவகாரத்தில் என்னுடன் வாதம் செய்தவர்) அவருடைய பணக்காரத்தனமான நாற்சக்கர வாகனத்திலிருந்து என்னை அழைப்பதைப் பார்த்தேன். அவருடைய முகத்தில் இருந்த புன்னகை அவர் மீண்டும் வம்புக்கு வரவில்லை என்ற நினைப்புடன் வாகனத்திலிருந்து இறங்கி நான் நின்ற இடத்திலேயே நின்று அவருக்காகக் காத்திருந்தேன்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்திலிருந்து பந்தாவாக இறங்கியவருடைய தோற்றத்தைப் பார்த்து அசந்து போனேன் நான். என்னுடன் முதல் நாள் அலுவலகத்திலும் அன்று மாலை என்னுடைய மாமனார் வீட்டில் வந்திருந்தவருக்கும் இவருக்கும்தான் எத்தனை வித்தியாசம் என்று நினைத்தேன்.
‘என்ன சார் அப்படி பாக்கறீங்க?’ என்று சிரித்தவர். ‘ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு இருக்கேன். இந்த மாதிரி கோலத்துல போனாத்தான் பெரியவன்னு மதிக்கிறானுவ. பேங்குக்கு வரும்போது நம்மள ஒரு கடன்காரனால்லே பாக்கறீய? அங்க போயி இந்த மாதிரி அஞ்சி விரல்லயும் மோதிரத்த போட்டுக்கிட்டு வந்து நின்னா கடனத்தான் குடுத்துருவியளா?’ என்று மேலும் உரக்க சிரிக்க சாலையில் சென்றுக்கொண்டிருந்த சிலர் எங்களைத் திரும்பிப் பார்த்தனர். அவர்களுள் ஒருவர் என்னுடன் இருந்தவரைப் பார்த்ததும், ‘என்னண்ணே இங்ஙன நிக்கறீய?’ என்று குசலம் விசாரித்தார்.
நான் தர்மசங்கடத்துடன் இப்ப எதுக்குய்யா வந்திரிக்கீக? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வெறுமனே உதட்டில் ஒரு புன்னகையுடன் நின்றுக்கொண்டிருந்தேன்.
அவரைக் குசலம் விசாரித்தவர் அகன்றதும், ‘சார் நா அன்னைக்கி பேசினது சரியில்லைன்னு எனக்கு ரொம்ப நாள் உறுத்திக்கிட்டே இருந்திச்சி. ஒரு வாரம் முன்னால உங்க மச்சான பார்த்தேன். அவன் என்னோட ஸ்கூல் ஃப்ரெண்டு. என்னடா நீ எம் மச்சான்கிட்ட போயி தகராறு பண்ணியாம்மேன்னதும் எனக்கு ரொம்ப சங்கடமா போயிருச்சி. ஒங்கள ஆஃபீஸ்ல வந்து எப்படி பார்த்து பேசறதுன்னு தெரியாம சங்கடப்பட்டுக்கிட்டு இருந்தேன். அதான் வழியில உங்கள பார்த்ததும் வண்டிய நிறுத்தச் சொல்லிட்டு உங்கள கூப்டேன். தப்பா நினைச்சிக்காதீங்க. நாங்கல்லாம் அடா புடான்னு தொழில் செய்யற காட்டுப்பசங்க சார். யார் கிட்ட என்ன பேசறது எப்படி பேசறதுன்னு சமயத்துல தெரியாம போயிருது.’ என்றவரைப் பார்த்து என்ன பேசுவதென தெரியாமல் நின்றிருந்தேன்.
‘நீங்க அத இன்னும் மறக்கலைன்னு தோனுது.’ என்று அவர் மீண்டும் தொடரவே நான் அவருடைய கையைப் பிடித்து, ‘சேச்சே அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. என்னோட வேலையில இதெல்லாம் ரொம்ப சகஜம். உங்களுக்கு ஏற்பட்டுப்போன நஷ்டத்துல நீங்க கொஞ்சம் படபடன்னு வந்தீங்க. நான் அத அன்னைக்கே மறந்துட்டேன். என் மாமனார்தான் ஒருவேளை உங்க ஃப்ரெண்டுக்கிட்ட சொல்லியிருக்கணும்.’ என்றேன்.
அவர் பதிலுக்கு, ‘என்ன சார் பெரிசா நஷ்டம்..? தொழில்ல ஏற்படாத நஷ்டமா? பணமா சார் முக்கியம்? உங்களமாதிரி ஆளுங்களோட நட்புதான் சார் முக்கியம். அதையெல்லாம் யோசிக்காம எடுத்தேன் கவுத்தேன்னு பேசிட்டு அப்புறமா சங்கத் தலவைர் தலையிட்டு சமாதானம் பண்ற வரைக்குமில்லே நடந்துக்கிட்டேன்? அத நினைச்சாத்தான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு?’ என்று அங்கலாய்த்தார்.
இதென்னடா வம்பு மனுஷன் கோபத்துலயும் பேசிக்கிட்டே இருப்பார் இப்பவுமா என்ற நினைப்பில், ‘நான் அர்ஜெண்ட் வேலையா போகணும் சார்.’ என்று விடைபெற்று வாகனத்தில் ஏறிக்கொண்டு புறப்பட்டேன். வரும் வழியில் அவரைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. இவர்களுள் பெரும்பாலோனோர் இப்படித்தான். வெயிலிருந்து பார்ப்பதற்கு வாட்டசாட்டமான உருவமும், கறடுமுரடான தோற்றமும்.. முரட்டுத்தனமான வார்த்தைகளும்.. ஆனால் பழகிவிட்டால் பாசத்துக்கு அடிமையாகி தங்கள் உயிரையும் கொடுக்கத் துணியும் குழந்தை உள்ளம்.. பலாப்பழத்தைப் போல..
வீட்டையடைந்ததும் வாசலிலேயே காத்திருந்த என்னுடைய மனைவியின் மூத்த சகோதரர் (கப்பலில் வேலை பார்ப்பவர். விடுமுறையில் ஊருக்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன), ‘என்ன மச்சான் எங்க போய்ட்டீங்க? தங்கச்சிக்கு பிரசவ வலி வந்திருச்சி. நல்ல வேளை அவ உடனே ஃபோன் பண்ணதால அம்மா வந்து எதுத்தாப்பல ஜெயலட்சுமி க்ளினிக்குக்கு கூட்டிக்கிட்டு போயிருக்காங்க. இன்னைக்கி ராத்திரிக்குள்ள பிரசவம் ஆயிரும்னு டாக்டர் சொல்லியிருக்கார்.. நீங்க போய் பாருங்க. நான் வீட்டுக்கு போய்ட்டு இப்ப வரேன்.’ என்று படபடக்க நான் வாகனத்தை நிறுத்திவிட்டு என்னுடைய வங்கி அலுவலகத்தின் நேரெதிரில் இருந்த மருத்துவ மனைக்குள் நுழைந்தேன்.
அன்று இரவு சுமார் பதினோரு மணிக்கு என்னுடைய மூன்றாவது மகள் பிறந்தாள்.
தொடரும்..
niraya per pala pazhangal (jackfruits) dnan.; identify seyradhudhan kashtam
பதிலளிநீக்குவாங்க ஜி!
பதிலளிநீக்குniraya per pala pazhangal (jackfruits) dnan.; identify seyradhudhan kashtam //
சரியாய் சொன்னீர்கள்.
நல்லபடியா பெத்துப் பொழைச்சாங்களா?
பதிலளிநீக்குவாழ்த்து(க்)கள். கொஞ்சம்(!) லேட்டாச் சொல்றேன். ஒரு 22 வருசம் கழிச்சுத்தானே? அட்ஜஸ்ட் செஞ்சுக்குங்க.
வாங்க துளசி,
பதிலளிநீக்குசுகப்பிரசவம் தான். இந்த ஆயுதக்கேசும்பாங்களே அது..
இருபத்திரண்டு வருஷமாய்ட்டாலும் இதையெல்லாம் எழுதும்போது என்னமோ நேத்து நடந்தா மாதிரி இருக்கு. என் மனைவி நேற்று என்னுடைய வேர்ட் நகலைப் படித்துவிட்டு, 'ஏங்க இதையெல்லாமா போயி எழுதுவாங்க?' என்றாள் வெட்கத்துடன்!
பாருங்க, நாப்பத்தொன்பது வயசாகுது..
இது என்னங்க. வயசாயிட்டா வெக்கம் இல்லாமப்போயிரணுமா என்ன? நீங்கவேற!
பதிலளிநீக்குஇது என்னங்க. வயசாயிட்டா வெக்கம் இல்லாமப்போயிரணுமா என்ன? //
பதிலளிநீக்குஆமாங்க துளசி. இந்த வெக்கம்தானே பெண்மைக்கே அழகும் அணிகலனும்!
மனிதர்களை ஒழுங்காகப் புரிந்து கொள்வது நமக்கெல்லாம் கஷ்டமாகவே இருக்கிறது சார்.
பதிலளிநீக்குடீச்சர் 22 வருசம் கழிச்சி வாழ்த்து சொல்றாங்க....நானும் அவங்க கூடச் சேந்துக்கிறேன்.
என்ன சார், இந்த வாரம் லீவா?
பதிலளிநீக்கு