அவற்றில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களை எல்லாம் சந்தித்து விவரம் அறிவதுதான் அடுத்த இரண்டு மாதங்களில் என்னுடைய முக்கிய பணியாய் இருந்தது..
தூத்துக்குடியின் மிக முக்கியமான தொழில்களுள் ஒன்று மீன் பிடித்தல் என்று முன்பே கூறியிருந்தேன். தூத்துக்குடி மீன் பிடித் துறைமுகத்தில் மாலை வேளைகளில் சென்றால் படு பரபரப்பாய் இருக்கும்.
நூற்றுக்கும் மேற்பட்ட மீன் பிடிப் படகுகள் நங்கூரம் இட்டு படகுத் துறைமுகத்தில் நிற்க அதிலிருந்து அன்றைய பிடிப்பை இறக்கி தரம் வாரியாகப் பிரித்து, குவியல் குவியலாய் அமைத்திருக்க மீன் மற்றும் இரால் ஏற்றுமதியாளர்களும், உள்ளூர் மீன் விற்பனையாளர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தில் அவற்றைக் கொள்முதல் செய்து செல்வது நாள்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
அதுபோலவே தூத்துக்குடி சரக்குத் துறைமுகமும் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் இந்தியாவிலுள்ள துறைமுகங்களுள் மிக அதிக அளவிலான சரக்குகளைக் கையாண்டு சாதனைப் படைத்துவரும் துறைமுகம் அது.
இங்கு வந்து செல்லும் வெளிநாட்டும் மற்றும் உள் நாட்டு கப்பல்களுக்கு அவர்களுக்கு தூத்துக்குடியை விட்டு அடுத்த துறைமுகத்திற்கு செல்லும் வரையிலான பலசரக்குகள் (Provisions) அதாவது அரிசி, பருப்பு, மசாலா சாமான்கள், ரொட்டி, பட்டர், ஜாம், மாமிசம், பதப்படுத்தப்பட்ட மீன், இறால் வகையறாக்கள்.. ஆகியவற்றை சப்ளை செய்யும் தொழிலில் தூத்துக்குடியில் இருந்த பல நிறுவனங்களும் ஈடுபட்டிருந்தன.
சாதாரணமாக கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் இத்தகைய நிறுவனங்களுடன் நீண்ட கால ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கும். பலசரக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முன்பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குத் தேவையானவற்றை சப்ளை செய்துவிட்டு அதற்குறிய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குப் பிறகு பெற்றுக்கொள்ளும்.
இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையில் இருந்த போட்டியை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு பெரும்பாலான கப்பல் நிறுவனங்கள் யார் தங்களுக்கு அதிக காலக்கெடு அளிக்கிறார்களோ அல்லது தங்களிடமிருந்து பெறவேண்டிய தொகைக்கு யார் அதிகம் தொல்லைக் கொடுக்காதிருக்கிறார்களோ அவர்களுக்கே அந்த ஒப்பந்தத்தை (contract) அளிப்பார்கள். அவர்கள் சப்ளை செய்யும் பொருட்களில் விலை அதிகமிருந்தாலோ அல்லது அவற்றின் தரம் சற்று சுமாராக இருந்தாலோ அதைப் பொருட்படுத்தமாட்டார்கள்.
இத்தொழிலில் ஈடுபட்டிருந்த நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய முதலீட்டில் இயங்கும் தனி முதலாளி (Proprietorship) அல்லது கூட்டு (Partnship firm) நிறுவனங்களாகவே இருக்கும். ஆகவே முதலில் பணத்தை முடக்கி சரக்குகளை சப்ளை செய்துவிட்டு கப்பல் நிறுவனங்கள் அதற்குண்டான தொகையை அளிக்கும் வரை பணத்திற்காகக் காத்திருக்க அவர்களுடைய நிதிநிலை இடமளிக்காது.
அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு கடன் வழங்குவது தூத்துக்குடியிலிருந்த வங்கிகளுடைய முக்கிய வணிகத்தில் ஒன்று . இந்நிறுவனங்கள் சப்ளை செய்யும் பொருட்களுக்குண்டான இன்வாய்சை கப்பல் நிறுவனங்களின் பெயரில் தயாரித்து அதனுடைய மதிப்பிற்கு ஈடான மூன்று மாத காலத்திற்குள் காலாவதியாகும் வகையில் ஹ¤ண்டி ஒன்றையும் தயாரித்து அத்துடன் அவர்கள் சப்ளை செய்த கப்பல் சரக்கு மாஸ்டர் அல்லது கேப்டனின் ஒப்பமிட்ட அத்தாட்சியையும் (acknowledgement) இணைத்து வங்கிக்கு சமர்ப்பிப்பார்கள்.
வங்கிகள் அவற்றை சரிபார்த்துவிட்டு இன்வாய்சின் மதிப்பில் 75% லிருந்து 80% வரை இந்நிறுவனங்களுக்கு கடனாக வழங்குவார்கள். அதன் பிறகு அவர்களிடமிருந்து பெற்ற எல்லா தஸ்தாவேஜுகளையும் சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனங்கள் செயலாற்றும் இடத்திலுள்ள தங்களுடைய கிளைகளில் ஒன்றிற்கு வசூலுக்காக அனுப்பி வைப்பார்கள். கப்பல் நிறுவனங்கள் பணத்தை தருவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்திற்குண்டான வட்டி தூத்துக்குடி நிறுவனங்களுடைய கணக்கில் இருந்து வசூல் செய்யப்படும்.
இத்தகைய வணிகத்தில் நல்ல லாபம் கிடைத்ததாலும் இதில் தில்லுமுல்லுகள் நடைபெற வாய்ப்பு குறைவு என்பதாலும் தூத்துக்குடியிலிருந்த பல வங்கிகளும் - என்னுடைய வங்கியும் சேர்த்து - ஈடுபட்டிருந்தன.
இத்தொழிலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே ஈடுபட்டிருந்தனர் என்றாலும் இதில் கிடைத்த லாப விகிதம் ஒரு சில வேற்று சமூகத்தினரையும் கவர்ந்திழுக்கவே இங்கொன்றும் அங்கொன்றுமாக இத்தகைய நிறுவனங்களும் இதில் ஈடுபட்டிருந்தன.
என்னுடைய கிளையில் இருந்தும் இத்தகைய நிறுவனங்கள் சிலவற்றிற்கு கடன் வழங்கப்பட்டிருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை நேர்மையுடன் செயலாற்றி வந்தன. அவர்களுடைய வரவு செலவுகளும் வங்கியின் நியதிகளுக்குட்பட்டே இருந்து வந்தன.
ஆனால் அவற்றுள் ஒரேயொரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த கடன் மட்டும் காலக்கெடு முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக வசூலிக்கப்படாமல் இருந்தது. அந்நிறுவனத்தின் கோப்பை எடுத்து வாசித்துப்பார்த்த என்னுடைய கண்ணில் தெரிந்தது ஒரு விபரீதம்.
என்னுடைய சொந்த வாழ்க்கையில் எந்த சாதியைப் பற்றியும் கவலைப்படாதவன் நான். ஆனால் என்னுடைய வங்கி அனுபவத்தில் நான் கண்ட வரை ஒவ்வொரு சாதியைச் சார்ந்தவருக்கும் ஒரு தனிப்பட்ட குணாதிசயங்கள் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அவை என்னவென்று ஆராய்ச்சி செய்வதோ அல்லது நான் என்னுடைய ஊகம் எந்த அடிப்படையில் ஏற்பட்டதென்றோ இங்கே விவாதிப்பது சரியல்ல என்று நினைக்கிறேன்.
ஆயினும் என்னுடைய ஊகங்கள் பல சமயங்களில் சரியாய் இருந்திருக்கின்றன. ஆகவே நான் குறிப்பிட்ட நிறுவனம் கோப்பில் முற்றிலும் நேர்மறையான குணாதிசயங்களைக் கொண்டிருந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்து துவக்கப்பட்டிருந்ததைக் கண்டதும் எனக்கு வியப்பாய் இருந்தது.
அன்று மாலையே என்னுடைய காசாளரை என்னுடைய அறைக்குள் அழைத்து என்வசமிருந்த அந்த கோப்பைக் காட்டி இவர்களைத் தெரியுமா என்று வினவினேன்.
அவர் என்ன நினைத்தாரோ சட்டென்று, ‘எனக்கு அவ்வளவா தெரியாது சார். ஆனா இந்த பார்ட்டி லோன் கேட்டு வந்ததுமே நான் குடுக்காதீங்க சார்னு நம்ம மேனேசர்கிட்ட சொன்னேன்..ஆனா அவர்தான் கேக்கல.’ என்றார்.
‘எதுக்கு அப்படி சொல்றீங்க?’ என்றேன்.
அவர் சிறிது நேரம் எப்படி சொல்வதென தெரியாமல் தயங்கியதைப் போல் தோன்றவே, ‘சும்மா சொல்லுங்க கோமஸ். அதா லோன் குடுத்து ரெண்டு வருசத்துக்கு மேல ஆகப்போவுதே..’ என்றேன்.
அவர், ‘இவங்க ரெண்டு பேருமே வெவ்வேற சாதிக்காரங்க சார். அதுவும் நம்ம ஊர்ல எப்ப பார்த்தாலும் ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கிட்டு நிக்கற சாதிக்காரங்க. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டா பிசினஸ் பண்றதெல்லாம் சரிவராது சார். நாங்கதான் காலங்காலமா பார்த்துக்கிட்டு வரமே.. இவங்க ரெண்டு பேருமா சேர்ந்து என்ன பிசினஸ் பண்ணாலும் அது ரொம்ப நாளைக்கு நடக்காது.. எல்லாம் ஒரு அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்காவத்தான் இருக்கும்னு நினைச்சேன்.. அத சார்கிட்ட சொல்லவும் செஞ்சேன்.. கேட்டாத்தான?’ என்றார்.
தொடர்ந்து, ‘எங்க சாதிக்காரன் கடைசியில் ஏமாந்து நின்னதுதான் பாக்கி.. நம்ம பேங்க்ல மட்டுமில்ல சார். அந்தாளு இவர் பேர்ல ஊர்ல நிறைய பேர ஏமாத்திட்டு தைரியமா தாதா மாதிரி சுத்திக்கிட்டிருக்கான். அவன் நம்ம ஊர்க்காரனும் இல்ல சார். ---------பட்டிக்காரன். (தூத்துக்குடியிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தூரத்திலிருந்த நகரம் அது. ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு பேர் போன நகரமும் கும்.) அவரோட சேர்ந்து எங்க சாதிக்காரன் நஷ்ட்டப்பட்டது போகட்டும். நம்ம பேங்குமில்ல நஷ்டப்பட்டு நிக்கி..?’
அவர் கூறியதில் நியாயம் இருந்ததோ இல்லையோ அவர் இறுதியில் கூறியதில் என்னவோ உண்மை இருந்தது. அந்த காலத்தில் வசூலிக்கப்படாமல் இருந்த தொகை சற்று பெரிதுதான்.
ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு இதை எப்படி வசூலிக்கலாம் என்று அந்நிறுவனத்தின் கோப்பை ஆராயத் துவங்கினேன்.
கடன் கோரி வாடிக்கையாளர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்துடன் அவர்கள் பெயரிலும் அவர்களுடைய குடும்பத்தினர் பேரிலும் இருந்த அசையும் (movable) மற்றும் அசையா (immovable) சொத்துக்களின் விவரத்தையும் சமர்ப்பிப்பது வழக்கம். எந்தவித சொத்தும் இல்லாதவர்களுக்கு சாதாரணமாக எங்களுடைய வங்கியிலிருந்து கடன் வழங்குவதில்லை.
அவற்றுள் வங்கியின் கணிப்பில் கடன் வழங்குவதற்குப் போதுமான மதிப்புள்ள சொத்தை ஈடாக வங்கியில் மார்ட்கேஜ் செய்யவும் நிர்பந்தம் (insist) செய்வது வழக்கம். அப்படித்தான் என்னுடைய முந்தைய மேலாளரும் செய்திருந்தார். ஆனால் அவரகள் அடகு வைத்திருந்த சொத்தின் மதிப்பு நிலுவையில் நின்ற தொகையைவிட சற்றே குறைவாய் இருந்தது என்று நினைத்தேன்.
வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த சொத்துடன் இன்னும் ஓரிரு சொத்துக்கள் பாகஸ்தர்களுடைய பெயரில் இருந்ததைக் கவனித்த நான் அதைக் குறித்துக்கொண்டு அன்று மாலையே என்னுடைய கிளைக்கு மிக அருகாமையிலிருந்த தூத்துக்குடி முனிசிபல் அலுவலகத்திற்குச் சென்றேன். என்னுடைய மாமனார் பெயரில் சில வீடுகள் தூத்துக்குடியில் இருந்ததால் அவற்றிற்கு வீட்டு வரி வசூலிக்கவரும் ஓரிருவரை நான் தெரிந்து வைத்திருந்தேன்.
அவர்களைச் சந்தித்து நான் குறித்துவைத்திருந்த சொத்து எந்த பெயரில் இருக்கிறதென பார்த்து சொல்ல முடியுமா என்று கேட்டேன். முனிசிபல் நியதிகளின்படி அது இயலாத காரியம் என்று எனக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும் அத்தகைய காரியத்தை செய்து முடிக்க ‘மேற்படி’ அளித்தால் முடிந்துவிடும் என்பதையும் தெரிந்து வைத்திருந்தேன்.
என்னுடைய சொந்த தேவைக்கல்லவே, வங்கியின் பணத்தை வசூலிக்கத்தானே என்று எனக்கு நானே சமாதானம் கூறிக்கொண்டு அவர்களுள் ஒருவர் கேட்ட தொகையை சிறிது நேர பேரத்திற்குப் பிறகு அளிப்பதற்கு சம்மதித்தேன். ‘நீங்க இங்ஙனயே நில்லுங்க. நான் கொண்டுக்கிட்டு வாரேன்.’ என்று சென்றவர் அடுத்த அரை மணியில் எனக்குத்தேவையான தகவல்களுடன் வந்தார்.
ஆனால் அதை என்னிடம் கொடுப்பதற்கு முன்னால்.. ‘சார்.. நீங்க நம்ம ---------- ஐயாவோட மருமகனாச்சேன்னு சொல்றேன். இந்த ஆளுக பயங்கரமான ஆளுக சார்.. நீங்க எதையாச்சும் செஞ்சிட்டு வில்லங்கத்துல சிக்கிக்கிராதீங்க.. எதுக்கும் ஒங்க மாமனார்கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு செய்ங்க.. ஒங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்.’ என்ற அறிவுரையுடன் கொடுத்துவிட்டு நான் ‘அளித்ததை’ பெற்றுக்கொண்டு சென்றார்.
தொடரும்...
//‘மேற்படி’ அளித்தால் முடிந்துவிடும் என்பதையும் ..//
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம்ம்......ச்சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனை பிடிக்கிறது?
வாங்க துளசி,
பதிலளிநீக்குச்சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனை பிடிக்கிறது? //
அடடா.. மீன்பிடித் தொழிலுக்கு ஏத்த மாதிரி சொல்றீங்க பாருங்க.. :-)
நல்லாயிருக்கே இது......ரெண்டு சாதிக்காரங்க சேந்து தொழில் செய்யக் கூடாதான்னு கேக்கலாம்....தூத்துக்குடீலயும் கேக்கலாம்...ஆனா அந்த ரெண்டு சாதிக்காரங்களும் சேந்து செய்றாங்கன்னா...அது அதிசயந்தான்....எனக்குத் தெரிஞ்சி நாம் பாத்ததில்லை. பள்ளிக்கூடத்துலயே ஒன்னாத் திரிய மாட்டானுகளே.....அட அவங்கவங்களுக்கு தனித்தனி பள்ளிக்கூடம் இருக்கே....
பதிலளிநீக்குவாங்க ராகவன்,
பதிலளிநீக்குஆனா அந்த ரெண்டு சாதிக்காரங்களும் சேந்து செய்றாங்கன்னா//
ஒருத்தன் மத்தவன ஏமாத்தலாம்னு நினைச்சி துவக்கப்பட்ட நிறுவனமாயிருக்கலாம் இல்லையா?
நிச்சயமா....எதுவும் நடக்கும்.....
பதிலளிநீக்குகொஞ்சம் தாமதமா பின்னூட்டமிடுவதற்கு மன்னிக்கவும். எனக்கு மிக நெருங்கிய துறை பத்தி எழுதியிருக்கீங்க. தூத்துக்குடி உரத் தொழிற்சாலைல அஞ்சு வருஷம் வேலை பாத்தவன் நான். இப்ப சென்னைல ship chandling நிறுவனத்தை பாத்துகிட்டு இருக்கேன். தூத்துக்குடிலயும் கிளை உண்டு. ஆக நீங்க எந்த நிறுவனத்தை பத்தி சொல்றீங்கன்னு தனி மடலிட முடியுமா. சும்மா தெரிஞ்சுக்க தான் :-)
பதிலளிநீக்குவாங்க ச்செந்தில்,
பதிலளிநீக்குஆக நீங்க எந்த நிறுவனத்தை பத்தி சொல்றீங்கன்னு தனி மடலிட முடியுமா.//
மன்னிச்சிருங்க செந்தில்.. அது நல்லாருக்காது..