12 ஏப்ரல் 2013

காதுல பூ வலைப்பூவை பதிவு செய்ய மறுப்பு!




என்னுடைய காதுல பூ வலைப்பூவை 'செய்தி பத்திரிகை' என்றும் ஆகவே தமிழ்மணத்தில் பதிவு செய்ய முடியாது எனவும் சுமார் ஒரு வாரம் கழித்து மறுத்துள்ளது தமிழ்மணம் நிர்வாகம்!


இதை எப்படி செய்தி பத்திரிகை என்று கணித்தது என்பதுதான் எனக்கு புரியவில்லை. இதே போன்றதொரு வடிவத்தில் ஆங்கிலத்தில் ஏறத்தாழ இரண்டு ஆண்டு காலம் ஒரு வலைப்பூ வெற்றிகரமாக செயல்பட்டு வந்ததும் அது வட இந்தியாவின் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திவந்த 'திரட்டி' அதை வெளியிட்டு வந்ததும் பலருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எதையும் நகைச்சுவை உணர்வுடன் எளிதாக எடுத்துக்கொள்ளும் இன்றைய தலைமுறையின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வந்த அந்த வலைத்தளம் இன்று மிகவும் பிரபலமான இணையதளமாக ஜொலித்துவருவதையும்  பார்க்க முடிகிறது.  இந்த தளத்தின் ஹிந்தி பதிப்பும் மிகவும் பிரபலமானது. 

இந்த இரண்டு வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் எத்தனை சர்ச்சைக்குரியதாக இருப்பினும் இதுவரை எவரும் எங்கள் மானம் பறிபோகிவிட்டதென கூப்பாடு போடவில்லை. இதில் வெளியாகும் சில செய்திகளுக்கு வாசகர்களிடமிருந்து  கடுமையான விமர்சனங்கள் வந்தாலும் வலைத்தளம் இன்னும் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டுதான் வருகிறது. அதுமட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து இதற்கு கற்பனை செய்திகளை எழுதி அனுப்புபவர்களும் இருக்கின்றனர் என்பதை இதை ஒருமுறை வாசிப்பவர்களுக்கு புரியும்.

அதாவது, வட இந்தியாவில் சகஜமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்படும் விஷயம் இங்கு தவிர்க்கப்பட வேண்டிய விஷயமாகக் கருதப்படுகிறது. எதையும் நகைச்சுவையுணர்வுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இங்கு இல்லை என்பதுதான் நிதர்சனம். 

ஏனெனில் என்னுடைய வலைத்தளத்தை கண்டவுடனே இது ஒரு செய்தி தளம் என்பது தெரிந்திருக்குமே? அப்படியிருக்க 48 மணி நேரத்தில் உங்களுடைய வலைத்தளம் தமிழ்மணத்துடன் இணைக்கப்படும் என்று என்னுடைய கோரிக்கை கிடைத்தவுடன் மின்னஞ்சலை அனுப்பிய நிர்வாகம் சுமார் ஒரு வாரம் கழித்து உங்களுடைய வலைத்தளம் செய்தி தளம் என்பதால் இணைக்கமுடியாமைக்கு வருந்துகிறோம் என்று பதில் அனுப்ப என்ன காரணம்? எங்கே இதில் வரும்  பொய்செய்திகளை உண்மையென நம்பி சம்மந்தப்பட்டவர்கள் யாரேனும் மானநஷ்ட வழக்கு தொடர்வார்களோ அல்லது அடியாட்களை அனுப்பி அடி உதையில் இறங்கிவிடுவார்களோ என்ற அச்சமும் இந்த மறுப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். 

அது அவர்களுக்கே வெளிச்சம்!

என்னுடைய வலைத்தளத்துக்கு ஒரு பெரிய ரீச் கிடைப்பதற்குத்தான் தமிழ்மண திரட்டி தேவை என்று நினைத்தேனே தவிர என்னுடைய எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் இதன் மூலம் கிடைக்கும் என்று நான் எண்ணவில்லை.

என்னுடைய வலைத்தளம் தடங்கல் இல்லாமல் தொடரும். என்னுடைய எழுத்தால் கவரப்படுபவர்கள் நிச்சயம் தொடர்ந்து ஆதரவளிப்பார்கள் என்று நம்புகிறேன். இது எனக்கு ஒரு ஆத்ம திருப்தியை அளிக்கிறது என்பதாலும் எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

*******

1 கருத்து:

  1. சார்..பதிவை போட்டுட்டு முகநூலில் லிங்க் கொடுத்துட்டு விட்டுடுங்க சார்...
    தமிழ்மணம் இப்ப மாறிடுச்சு போல...

    இல்லாட்டி கருணாநிதி ஒழிகன்னு ஒரு நியுசை போட்டு திரும்ப அப்ளை பண்ணுங்க..கிடைக்கலாம்

    பதிலளிநீக்கு