07 மே 2009

காங்கிரசுக்கு மாற்று இருக்கிறதா?

கடந்த சில நாட்களாக பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சோனியாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதைப் பற்றி பலவிதமாக எழுதி வருகின்றனர்.

சோனியா தனக்கு எதிராக நடைபெறவிருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாததாலோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க நினைத்தோ  இந்த பயணத்தைத் தவிர்த்திருக்கலாம்.  இதற்கு தன் உயிர் மீதான பயம் என்றோ அல்லது அவருடைய இந்த தவிர்ப்பு தமிழ் ஈழ போராளிகளுக்கு வெற்றி என்றோ கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகிறேன்.

ஐநா, அமெரிக்கா உட்பட பல வல்லரசுகளுடைய வேண்டுகோளையெல்லாம் புறக்கணித்த இலங்கை அரசு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் என்று வாதிடுவதும் கூட சிறுபிள்ளைத்தனம் என்றே கூறுவேன்.

போர் நிறுத்தம் வேண்டாம் ஆனால் ஆயுதங்களையாவது வழங்காமல் இருந்திருக்கலாமே என்று வாதிடுபவர்களுக்கு.  நாம் ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திவிட்டால் மட்டுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை நிறுத்திவிடப் போவதில்லை.

இந்தியா ஆயுதங்களை வழங்க மறுத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சைனா, இஸ்ரவேல் போன்ற நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

இதில் வேறொரு கோணமும் உள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா,பாகிஸ்தான் ஏன் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விரோத கண்கொண்டே பார்த்து வருகின்றன. இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.

ராஜபக்ஷே மட்டுமல்ல இதற்கு முன்பு பதவியிலிருந்த அனனத்து ஜனாதிபதிகளுமே விடுதலைப் புலிகளள அழித்துவிடுவதில் குறியாகவே இருந்தனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முயற்சியில் ராஜபக்ஷே சற்று அதிக முனைப்பாகவே இருக்கிறார் என்பதுடன் விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள்ளேயே பிரிவினைகளும், பூசல்களும் ஏற்பட்டுள்ளதும் அவர்களின் தொடர் தோல்விக்கு ஒரு காரணம்.

எந்த ஒரு போராட்டத்திற்கும் முடிவு என்று ஒன்று உண்டு. அதை பிரபாகரன் உணராததுதான் அவருடைய இன்றைய இழி நிலைக்கு காரணம். தனி ஈழம் என்பது ஒரு நிறைவேற இயலா கனவு என்பதை உணர்ந்து ஒரு ஃபெடரல் ஆளுமைக்கு தன்னை தயார் செய்துக்கொண்டு அந்த கோணத்தில் தமிழர்களின் சம உரிமைக்கு அவர் பாடுபட முனனந்திருக்கலாம். அந்த அமைப்பைச் சார்ந்த பல தலைவர்களுடைய அறிவுரையையும் புறக்கணித்ததோடல்லாமல் தன்னுடைய கருத்தைச் சார்ந்திராதவர் அனைவருமே தன்னுடைய அமைப்புக்கு எதிரிகள் என நினைத்து அவர் படுகொலை செய்த தமிழின தலைவர்கள் எத்தனை பேர். அவர்களுள் ஒருவரான பத்மநாபாவை சென்னைக் குடியிருப்புகளுள் ஒன்றில் புகுந்து ஈனத்தனமாக தாக்கியதை அதே பகுதியில் வசித்ததால் நேரில் கண்டவன் நான்.

அதையும் கடந்து என்னுடைய பிரதமர் ஒருவரை திட்டமிட்டு ஒரு பெண்ணை பயன்படுத்தி படுகொலை செய்தவர் அவர். அத்தகையவரை நண்பர் என்றும் அவர் போராளியல்ல என்றும் நம் நாட்டு தலைவர்கள் சொல்லித்திரிவது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட.

இன்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு மத்திய அரசு எந்த விதத்தில் பொறுப்பாகிறது என்பதும் விளங்கவில்லை. விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேன் என்ற முனைப்புடன் இலங்கை அரசு போரை துவக்கியது. விடுதலைப் புலிகள் வசம் இல்லாத கனரக ஆயுதங்களே இல்லையென்னும் அளவுக்கு அது பலம் வாய்ந்திருந்தது. தரையிலும்,கடலிலும், வானிலும் ஒரு நாட்டின் படைக்கு இணையாக போரிட பலம் பெற்றிருந்த ஒரு அமைப்பை அழிக்க நினைத்த அரசு அதே அளவுக்கு போரிடத்தானே வேண்டும். விடுதலைப் புலிகளைப் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து போராட்டத்தைத் துவக்கினால் நம்முடைய மத்திய அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா என்ன?

சில மாதங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் கூறியதுபோன்று போர் என்று வந்தால் மக்கள் மரிக்கத்தானே வேண்டும்?

இலங்கை தமிழர்களுக்கு பிரதிநிதி என தங்களை முன்நிறுத்தும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது என்று இலங்கை அரசு மட்டுமல்லாமல் ஐ.நா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டினவே? அதை சிறிதும் பொருட்படுத்தாமல் உயிருக்கு பயந்து தப்பிக்க நினைத்த மக்களை தடுத்தும் நிறுத்தும் விதமாக மண் சுவர்களை எழுப்பியது யார்? இலங்கை அரசா? அல்லது அதையும் மீறி மக்கள் தப்பித்துவிடக் கூடாதே என்று கடலோரங்களிலும் கன்னிவெடிகளள புதைத்து வைத்தது யார்? அதையும் மீறி பாதுகாப்பு பகுதியை நோக்கி ஓடிய மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதாக தப்பித்து வந்த தமிழர்களே கூறுகிறார்களே அது பொய்யா?

இலங்கை தமிழர்களள காப்பாற்ற நினைக்கும் நம்முடைய தமிழக தலைவர்கள் வேண்டுமானால் பிரபாகரனுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தாதீர்கள் என்று கூறட்டுமே.

அதை விட்டு விட்டு சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதில் என்ன பயன்? 

சரி. இன்றைய பதிவின் தலைப்புக்கு வருவோம்.

மத்திய அரசில் காங்கிரஸ் வேண்டாம் என்றால் மாற்றாக எந்த கட்சிக்கு வாக்களிப்பது? பிஜேபிக்கா?

நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என நினைப்பதே இலங்கைவாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காகத்தானே. மத்திய அரசு இதில் நாம் விரும்பும் வகையில் பணியாற்ற வேண்டுமென்றால் பிஜேபி அமைக்கும் அரசில் தமிழகத்தைச் சார்ந்த ஒரு பலம் வாய்ந்த கட்சி அதில் பங்குபெற வேண்டும். ஆனால் பிஜேபி தமிழகத்தில் கூட்டு சேர்ந்திருப்பது யாருடன்? ஒரு முன்னாள் கதாநாயகன், மற்றொருவர் முன்னாள் வில்லன், இன்னாள் கதாநாயகன். 

தேர்தலுக்குப் பிறகு ஒரு தனிப்பெரும் கட்சியாக பிஜேபி வரும் சூழலில் நம்முடைய செல்வியும் (ஏன் மருத்துவரும் கூட) அவர்களுடன் சேருவார் என்றே வைத்துக்கொள்வோம்.

செல்வியின் தமிழ் ஈழ நிலைப்பாடு அப்படியே இருக்கும் என்று கருதுகிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. அவருடைய சமீபத்திய நிலைப்பாடு தேர்தல் தந்திரம் மட்டுமே. அவருடைய ஒரேயொரு குறிக்கோள் தன்னுடைய பரம எதிரியான முகவை வீழ்த்துவது. அதன் முன்னால் மற்றதெல்லாம் வெறும் தூசு!

ஆகவேதான் சொல்கிறேன் காங்கிரசுக்கு மாற்று தற்போது இல்லை.

********

23 கருத்துகள்:

  1. பெயரில்லா3:08 PM

    ரொம்ப அருமையை அலசியிருக்கீங்க டிபிஆர். என்னுடைய கருத்தும் அதுதான். முக்கியமா ஜெயலலிதா விஷயத்துல.

    ஆனா ஏன் அடிக்கடி காணாம போயிடுறீங்க? தொடர்ந்து எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  2. //இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.//

    ஜோசப் சார்,
    ஏதேதோ சொல்ல நினைக்கிறேன் ..ஆனால் நான் காலங்காலமாக காங்கிரஸ் காரன் என்று போன பதிவிலேயே நீங்கள் சொல்லி விட்டதால் ..சொல்ல ஏதுமில்லை.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப அருமையா அலசியிருக்கீங்க டிபிஆர். என்னுடைய கருத்தும் அதுதான். முக்கியமா ஜெயலலிதா விஷயத்துல. //

    நன்றிங்க. ஆனா ஒங்க பேர்லயே போட்டிருந்தீங்கனா நல்லாருந்துருக்கும்.

    ஆனா ஏன் அடிக்கடி காணாம போயிடுறீங்க? தொடர்ந்து எழுதுங்க.//

    முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜோ,

    நான் காலங்காலமாக காங்கிரஸ் காரன் என்று போன பதிவிலேயே நீங்கள் சொல்லி விட்டதால் ..சொல்ல ஏதுமில்லை./

    சரி ஒத்துக்கறேன். நான் காங்கிரஸ்காரன் என்பதால் அவர்களுடைய செயல்பாடுகளில் என்னால் தவறேதும் காண முடிவதில்லை.

    ஆனால் அவர்களுக்கு மாற்று ஏதும் உள்ளதா? சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
  5. ”கை” குடுங்க. :)
    http://thinkcongress.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. ”கை” குடுங்க//

    இந்தாங்க :))

    பதிலளிநீக்கு
  7. ஒரு இத்தாலி அம்மையாருக்கு மாற்று 110 கோடி மக்களில் யாருமே இல்லை என்ற உங்களின் கூற்று......சிரிப்புதான் வருது....

    இந்தியர்களை தகுதியில்லாதவர்கள் என்று கூறும் நீங்கள் இந்தியரா...
    இல்லை இத்தாலியிலிருந்து வந்தீர்களா....

    முதலில் சோனியாவையும் அவரது குடும்பத்தையும் காங்கிரசிலிருந்து நீக்கிவிட்டு...
    இத்தாலி காங்கிரஸை இந்திய காங்கிரஸாக மாற்றிவிட்டு...
    காங்கிரசுக்கு மாற்று யார் என்று பதிவிட்டால் பாராட்டலாம்.

    இப்படிக்கு,
    ராவணன்

    பதிலளிநீக்கு
  8. இத்தாலி சோனியா, இத்தாலிக்கு ஓடும் அளவிற்கு இத்தாலி காங்கிரஸ் தோல்வி அடையவேண்டும்.

    இந்தியர்கள் காங்கிரசை மீட்டெடுக்கவேண்டும்.

    இப்படிக்கு,
    ராவணன்.

    பதிலளிநீக்கு
  9. //அண்டை நட்பு நாடான இலங்கையையும்//

    இதை விட சிறுபிள்ளத்தனமான கனவு வேறொன்றும் இல்லை.

    பதிலளிநீக்கு
  10. ஒரு இத்தாலி அம்மையாருக்கு மாற்று 110 கோடி மக்களில் யாருமே இல்லை என்ற உங்களின் கூற்று......சிரிப்புதான் வருது....//

    நான் காங்கிரஸ்காரன் சோனியாகாரன் அல்ல. சோனியா வந்தது நேற்று. நாங்கள் பரம்பரை, பரம்பரையாக காங்கிரஸ்காரர்கள்.

    இத்தாலி சோனியா, இத்தாலிக்கு ஓடும் அளவிற்கு இத்தாலி காங்கிரஸ் தோல்வி அடையவேண்டும்.//

    அடையட்டுங்க. அப்பத்தானே அவங்க அருமை தெரியும். பிஜேபி மத்தியில வரனும். அம்மையார் இங்க வரணும். அப்பவாவது இலங்கை தமிழர்களுக்கு விடிவு காலம் வரும் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் நடக்கட்டுமே. அதையும் பார்க்கத்தானே போகிறோம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இதை விட சிறுபிள்ளத்தனமான கனவு வேறொன்றும் இல்லை.//

    அப்படீங்களா? நன்றி முத்துக்குமார்.

    பதிலளிநீக்கு
  12. பதிவைப் படித்துக் கொண்டே வரும்போதே மனதில் பட்டது இவ்வளவு சொல்கிறாரே நிகழும் மனித அவலங்களைப் பற்றி எங்காவது தொடுகிறீர்களா என்று தேடிக்கொண்டே வந்தேன்.பின்னூட்டம் வரும்போது நீங்கள் எப்பவுமே காங்கிரஸ் என்ற வட்டத்துக்குள் வரும்போது பதிவின் நியாயங்கள் தோற்றுப் போகின்றன.

    பதிலளிநீக்கு
  13. நிகழும் மனித அவலங்களைப் பற்றி எங்காவது தொடுகிறீர்களா என்று தேடிக்கொண்டே வந்தேன்//

    மனித அவலங்களை நான் மறக்கவும் இல்லை, நியாயப்படுத்தவும் இல்லை.

    ஆனால் இது யாரால் ஏற்பட்டது? இதற்கு ஏன் இந்திய அரசை மட்டும் குறை கூறுகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி?

    சரி. அப்படியே காங்கிரஸ் அரசை மாற்ற நினைத்தால் யாரை அங்கு அமர்த்தப்போகிறீர்கள்? இலங்கை தமிழர்களை காப்பாற்றுவது மட்டுமே மத்திய அரசின் வேலை அவர்கள் அதை செய்யாததால் நான் அரசையே தூக்கியெறியப் போகிறேன் என்று களத்தில் இறங்குவதாக இருந்தால் செய்யுங்கள். விளைவுகளை அனுபவியுங்கள்.

    இலங்கைத் தமிழர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தமிழக தமிழர்களைப் பற்றியும் கொஞ்சம் நினையுங்கள் என்றுதான் கேட்கிறேன்.

    நான் காங்கிரஸ்காரன் என்பதை மறந்துவிட்டு என்னுடைய வாதங்களில் இருக்கும் நியாயங்களைப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. //சோனியா தனக்கு எதிராக நடைபெறவிருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாததாலோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க நினைத்தோ இந்த பயணத்தைத் தவிர்த்திருக்கலாம். இதற்கு தன் உயிர் மீதான பயம் என்றோ அல்லது அவருடைய இந்த தவிர்ப்பு தமிழ் ஈழ போராளிகளுக்கு வெற்றி என்றோ கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகிறேன்.//

    நாகரீகமான வாதத்தை நீங்கள் முன்வைத்தாலும் சமன்பாட்டில் தோற்றுப் போவது உங்களுக்குப் புரியவில்லையென நினைக்கிறேன்.ஒழுங்கு பிரச்சினை,கருப்புக் கொடி எதிர்கொள்ள விருப்பமில்லாமையில் காட்டும் ஆர்வத்தில் சிறுபங்கு அல்லல் படும் மக்களுக்கு வார்த்தையாக சிறு கோடு காட்டியிருந்தால் கறுப்புக்கொடி காட்டும் படலங்களுக்கே இடமில்லாமல் போயிருக்குமே.தமிழக காங்கிரஸ்காரர்களின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அப்படியும் அந்த சூழலுக்கு வந்தும் அதன் மூலகாரணத்தை ஆராயமலிருப்பது சிறுபிள்ளைத்தனமாகப் படவில்லையா?

    பதிலளிநீக்கு
  15. அல்லல் படும் மக்களுக்கு வார்த்தையாக சிறு கோடு காட்டியிருந்தால்..//

    அதாவது இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவதில் சோனியா அக்கறை காட்டவில்லை, அனுதாபப்படவில்லை என்று கூறுகிறீர்கள்.

    அப்படியானால் மத்திய அரசு வெளித்துறை அமைச்சரையும், உள்துறையை செயலரையும் இலங்கைக்கு அனுப்பி போரை நிறுத்த வற்புறுத்தியது எதற்கு?

    அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை சோனியாவும், ராஹுலும் எதிர்த்து பலமுறை பேட்டியளித்துள்ளனரே...

    வேறொரு நாட்டை ஓரளவுக்குத்தான் பணிய வைக்க முடியும் என்பதை புரிந்துக்கொள்ளாமல் ஏதோ ராஜபக்ஷே சோனியாவின் அடியாள் என்பதுபோல் பேசுவதுதான் சிறுபிள்ளைத்தனம். நான் உங்களை சொல்லவில்லை..

    பதிலளிநீக்கு
  16. //ஐநா, அமெரிக்கா உட்பட பல வல்லரசுகளுடைய வேண்டுகோளையெல்லாம் புறக்கணித்த இலங்கை அரசு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் என்று வாதிடுவதும் கூட சிறுபிள்ளைத்தனம் என்றே கூறுவேன்.//

    நீங்கள் பன்னாட்டு அரசியலையும் பூகோள அரசியலையும் இலங்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைப் பொறுத்து நிகழ்வுகள் எப்படி மாறும் என்ற விவாதங்களை உங்களுக்குள்ளேயே எழுப்பாமல் இந்தியாவால் போர்நிறுத்தம் எப்படி அமலாக்க இயலும் என வாதிடுகிறீர்கள்.

    வல்லரசுகளால் முக்கியமாக வல்லரசு என சொல்லும் இந்தியாவால் போர் நிறுத்தம் கொண்டு வர இயலவில்லையென்பது மக்களை ஏமாற்றும் கண்ணாமூச்சி.

    பதிலளிநீக்கு
  17. முக்கியமாக வல்லரசு என சொல்லும் இந்தியாவால் ...//

    நம் நாடு ஒரு வல்லரசா? கேட்க பெருமையாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. //இந்தியா ஆயுதங்களை வழங்க மறுத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சைனா, இஸ்ரவேல் போன்ற நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.//

    இப்பவும் பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பு சபையில் பக்கவாத்தியமாகவும் சைனா இலங்கையில் வலுவான தளம் அமைக்கவே செய்கிறது.இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை தவறாகப் போய்விடக் கூடாதே என்பதே அனைவரின் கவலையும் கூட.

    பதிலளிநீக்கு
  19. //இதில் வேறொரு கோணமும் உள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா,பாகிஸ்தான் ஏன் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விரோத கண்கொண்டே பார்த்து வருகின்றன. இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.//

    மனித அவலங்களை நிகழ்த்திக் காட்டியதன் மூலமும்,தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமலும் நட்பு நாட்டுக்கான தார்மீகத்தை இலங்கை இழந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  20. //ராஜபக்ஷே மட்டுமல்ல இதற்கு முன்பு பதவியிலிருந்த அனனத்து ஜனாதிபதிகளுமே விடுதலைப் புலிகளள அழித்துவிடுவதில் குறியாகவே இருந்தனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முயற்சியில் ராஜபக்ஷே சற்று அதிக முனைப்பாகவே இருக்கிறார் என்பதுடன் விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள்ளேயே பிரிவினைகளும், பூசல்களும் ஏற்பட்டுள்ளதும் அவர்களின் தொடர் தோல்விக்கு ஒரு காரணம்.//

    பிணங்களைத் தின்னும் கழுகுக்கும் கூட ராஜபட்சி என்ற பெயர் இருக்கிறது.

    கருணா,பிள்ளையான்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.காலம் இவர்களை எப்படி நடத்துகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    புலிகள் பற்றிய விமர்சனங்கள் இருந்தாலும் கூட மனித அவலங்களின் இந்த நேரத்தில் இதனை விமர்சிப்பது சரியல்ல என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  21. இறுதியாக ஒரு பின்னூட்டம்.காங்கிரஸ் என்றால் என்ன என்ற நிலைக்கு தமிழகத்தில் மக்கள் மனநிலை இருப்பதாகத்தான் பதிவுகளும் தமிழக குரல்களும் கேட்கின்றது.நீங்கள் இன்னும் காங்கிரசுக்கு மாற்று இருக்கிறதா என்ற கேட்பது சிரிப்பையே வரவழைக்கிறது.

    (கடைய பூட்ட நேரமாயிடுச்சு.வருகிறேன்.வணக்கம்)

    பதிலளிநீக்கு
  22. உங்க கடையிலிருந்து வெளியே போகலாமுன்னு வந்தா மீண்டும் சிரித்துக் கொண்டே போகிறேன்.வணக்கம்.

    பதிலளிநீக்கு
  23. ராஜநடராஜன்,

    என்னுடைய இடுகையிலிருந்த ஒவ்வொரு வாதத்தைக்கும் எதிர்வாதம் செய்தமைக்கு மிகவும் நன்றி.

    உங்களுடைய வாதம் எதையும் குறை கூற விரும்பவில்லை.

    நான் எழுதியது என்னுடைய கருத்து நீங்கள் எழுதியது உங்களுடைய கருத்து.

    எது சரி என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

    ஆனால் ஜெயலலிதாவையும் அவருடைய கூட்டாளி ராமதாசையும் நம்புவதை விட முகவை நம்புவது எவ்வளவோ மேல்.

    பதிலளிநீக்கு