11 ஜூன் 2010

பணியிலிருந்து ஓய்வு 3

நிரந்தர பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மாற்று பணிக்கு செல்லும் எண்ணம் உள்ளவர்களும் தங்களுடைய எண்ணத்திற்கேற்றாற்போல் ஒரு பணி கிடைக்கும் வரையிலாவது வீட்டில் 'சும்மா' இருந்துதானே ஆகவேண்டும்?

பணியிலிருந்து ஓய்வு பெறுபவர் ஆண் என்ற கோணத்தில் மட்டுமே இதை அணுகுகிறேன் என்பதை நினைவில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் பணியிலிருந்து ஓய்வு பெறும் பெண்கள் பெரும்பாலும் அத்தகைய ஓய்வை வரவேற்கவே செய்கிறார்கள். ஆகவே அலுவலகத்திலிருந்து வீட்டிற்கான இந்த மாற்றத்தை அவர்களால் மிக எளிதாக எதிர்கொள்ள
முடிகிறது என்கின்றன பல ஆய்வுகள்.

ஆனால் ஆண்களுள் பெரும்பாலானோர் அப்படியல்ல. அவர்களைப் பொருத்தவரை அவர்களுடைய உத்தியோகம்தான் வாழ்க்கையின் பிரதானமாக உள்ளது. என்னுடைய உத்தியோகம்தான் என்னுடைய முதல் மனைவி என்று பலரும் பெருமையுடன் கூறிக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள். இதற்காகவே முந்தைய தலைமுறை ஆண்கள் பெரும்பாலும் அலுவலகத்திற்கு செல்லாத பெண்களையே விரும்பி திருமணம் செய்துக்கொண்டனர் என்பதும் உண்மை.

இத்தகையோரில் பலருக்கும் அலுவலக பணியைத் தவிர வேறெதிலும் நாட்டமும் இருப்பதில்லை. அதாவது இசையை ரசிப்பதிலோ, அரசியலைப் பற்றி பேசுவதிலோ, அல்லது கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பங்குகொள்ளாவிட்டாலும் அவற்றை பார்ப்பதிலோ, விமர்சிப்பதிலோ கூட அவர்களுக்கு நாட்டம் இருக்காது. இவ்வாறு சுமார்
முப்பதாண்டுகாலம் அலுவலக பணியே கதியென்று இருந்தவர்கள் சட்டென்று அது இல்லை என்றாகிவிடும் சூழலை சந்திக்கையில் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்பது இயற்கைதானே!

இத்தகையோர் அத்தகைய சூழலுக்கு எப்படி தங்களை தயார் செய்துக்கொள்வது?

பெரும்பாலான ஆண்கள் வீட்டையும் அலுவலகம் போன்றே கருதுவதாக பரவலானதொரு குற்றச்சாட்டு பெண்கள் மத்தியில் உண்டு. வீடு வீடுதான் அலுவலகம் அலுவலகம்தான் என்பதை ஆண்கள் உணர்வதில்லை. அலுவலகத்தில் நாம் எடுக்கும் பெரும்பாலான முடிவுகள் நம்முடைய பெர்சனல் வாழ்க்கையை அதிகம் பாதிப்பதில்லை. நாம் எடுக்கும் முடிவுகள்
வெற்றிபெறாத சமயங்களில் அதிகபட்சம் அதிகாரிகள் முன்பு தலைகுணிய வேண்டிவரும். நம்முடைய முடிவில் என்ன தவறு இருந்தது, ஏன் வெற்றிபெறவில்லை என்பதை ஆராய்ந்து அவற்றை தவிர்த்தால் தோல்வியை வெற்றியாகவும் மாற்றிவிட முடிகிறது. ஆனால் குடும்பத்தில் நாம் எடுக்கும் சில முடிவுகள் தோல்வியில் முடிந்தால் அவற்றால் நாம் மட்டுமல்ல
நம்மைச் சார்ந்திருக்கும் ஒட்டுமொத்த குடும்பமே பாதிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு சில தவறான முடிவுகள் சரிசெய்யவே முடியாத முடிவுகளாகி வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடுவதை நம்மில் பலரும் அனுபவித்து உணர்ந்திருக்கிறோம்.

அலுவலக வாழ்க்கையில் பெரும் வெற்றிகளைப் பெற்று மிக உயர்ந்த பதவியை பிடிக்க முடிந்த என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் தோற்றுப்போனதை என்னுடைய வாழ்க்கையில் கண்டிருக்கிறேன். ஆகவே அலுவலகமும் குடும்பமும் எப்போதும் ஒன்றாகிவிட முடியாது. 'ஏன் எடுத்தத எடுத்த இடத்துல வைக்க மாட்டேங்கறீங்க?' என்றுசிடுசிப்பார் ஓய்வுபெற்ற கணவர். ஏனெனில் முந்தைய நாள் வரை அவருக்கு தேவையான அனைத்தையுமே மனைவிதான் எடுத்து கொடுத்திருப்ப்பார். 'எது எங்க இருக்கும்னு ஒங்களுக்கு தெரிஞ்சாத்தானே. இது ஆஃபீஸ் இல்லை, பிள்ளைங்க இருக்கற வீடு. அதது அங்கங்க இருக்கத்தான் செய்யும். சும்மாத்தான இருக்கீங்க, எடுத்து எங்க வைக்கணுமோ அங்க வைங்க' என்று பதிலடி கொடுப்பார் மனைவி.

மேலும், ஆண்கள் எவ்வாறு அவர்களுடைய அலுவலகத்தில் அவர்கள்தான் ராஜா எனவும் அவர்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்றும் எண்ணுகிறார்களோ அப்படித்தான் வீட்டுப் பெண்களும். குடும்பத்தைப் பொருத்தவரை அவர்கள்தான் எல்லாம் என்கிற எண்ணம் பெரும்பாலான குடும்பப் பெண்கள் மனதில் வேரூன்றியுள்ளதை ஆண்கள் பெரும்பாலும் கருத்தில் கொள்வதில்லை. அலுவலகம், அலுவலகம் என்று ஆண்கள் அலைந்துக்கொண்டிருந்த வேளையில் குடும்பத்தை திறம்பட நடத்தியது பெண்கள்தானே என்பதை மறந்துவிட்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் குடும்ப விஷயங்களிலும் இனி நாந்தான் ராஜா, இனி நான் சொல்வதுபோலத்தான் எதுவும் நடக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தால் வேறு வினையே வேண்டாம்.

மேலும் கணவர் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றதும் ஏற்படுகிற அமைதியான சூழலை அனுபவித்து பழகிப்போன பெண்கள் பலரும் 'ஐயோ இனி இவர் இருபத்திநாலு மணி நேரமும் வீட்லயா இருக்கப் போறார்? 'சனி, ஞாயிறுல வீட்ல இருந்தாலே மனுஷன் பாடா படுத்துவாரே, இனி கேக்கணுமா? இத நா எப்படி சமாளிக்கப் போறேன், ஈஸ்வரா!' என்ற
எண்ணத்திலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகின்றனர். கணவர் இல்லாத எட்டு மணி நேரத்தில் தங்கள் மனம் போனபடி வீட்டு அலுவல்களை நிதானமாக செய்து பழகிப்போகும் பெண்கள் 'காலை பதினோரு மணிக்கு காப்பி, மதியம் ஒரு மணிக்கு லஞ்ச், பிற்பகல் மூன்று மணிக்கு காப்பி' என தங்களுடைய தனிமை சுதந்திரத்தில் தலையிட வந்துவிடும் கணவர்களை தங்களுடைய சுதந்திரத்திற்கு எதிராக முளைத்த எதிரிகளாகவே வரித்துக்கொள்கின்றனர் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த சுதந்திரத்தை பணியிலிருந்து ஓய்வுபெறும் பெரும்பாலான ஆண்கள் புரிந்துக்கொள்ளாமல் தங்களுடைய மனைவியரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் குற்றம் காண்பதில் குறியாய் இருப்பதை தவிர்த்தால் நல்லது. 'இவ்வளவு நாளும் நீங்களா இத செஞ்சுக்கிட்டிருந்தீங்க? நீங்க பேசாம அக்காடான்னு இருங்க. எல்லாத்துலயும் மூக்க நீட்டாதீங்க!' இது
பெரும்பாலான வீடுகளில் மனைவியர் கூறும் குற்றச்சாட்டு.


இந்த குற்றச் சாட்டை தவிர்க்க ஆண்கள் செய்ய வேண்டியது என்ன?

அதை அடுத்த பதிவில் கூறுகிறேன்.

தொடரும்

7 கருத்துகள்:

  1. // 'ஐயோ இனி இவர் இருபத்திநாலு மணி நேரமும் வீட்லயா இருக்கப் போறார்? 'சனி, ஞாயிறுல வீட்ல இருந்தாலே மனுஷன் பாடா படுத்துவாரே, இனி கேக்கணுமா? //

    எனது வீட்டில் இதை நான் நேரில் கண்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  2. அவசியமான பதிவுதாங்கோ..

    பதிலளிநீக்கு
  3. தொடர் அருமையா இருக்கு டிபிஆர் ஐயா.. எனக்கு நிச்சயமா உதவியா இருக்குமுன்னு நம்பறேன்.

    முதல் பகுதியின் பின்னூட்டத் தொடர்ச்சி
    //டி.பி.ஆர் said...
    நான் 18 வயசில வேலை செய்ய ஆரம்பித்து விட்டேன். 50 வயதில் ரிட்டயர்மெண்ட் எனது குறிக்கோள். // ஐம்பது வயசுங்கறது கொஞ்சம் சீக்கிரமா தெரியலையா ஸ்ரீராம்? It all depends on how you look at life. சிலருக்கு 70 வயதானாலும் ஒரு வேலையில் இல்லாமல் வீட்டில் இருக்க முடியும் என்று நினைக்க முடியவில்லை//

    1. இப்பொ எனக்கு வயசு 35. இன்னும் 15 வருஷத்தில் அடுத்த 30-40 வருஷம் குடும்பம் வாழத் தேவையான பணத்தை சேர்த்து விட்டு சம்பளம் வாங்கும் வேலைக்கு ஓய்வு - இதுவே என் திட்டம் and I am on the right track so far.

    2. 50 வயசுக்கப்புறம் நான் முன்னர் சொன்ன Free Trainer job. உடலில் கொஞ்சம் சக்தி மிச்சமிருக்கும் போதே செய்ய ஆரம்பிக்கணும்..

    NGO க்கள் பத்தின உங்க அனுபவம் எனக்கு ரொம்ப் உதவியா இருக்கும்.

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  4. வாங்க வினையூக்கி, //எனது வீட்டில் இதை நான் நேரில் கண்டிருக்கின்றேன்.// எல்லா வீட்லயும் நடக்கறதுதான். இதுக்கு பெரும்பாலும் ஆண்கள்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க வினையூக்கி, //எனது வீட்டில் இதை நான் நேரில் கண்டிருக்கின்றேன்.// எல்லா வீட்லயும் நடக்கறதுதான். இதுக்கு பெரும்பாலும் ஆண்கள்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  6. நன்றிங்கோ தாராபுராத்தாரே

    பதிலளிநீக்கு
  7. வாங்க ஸ்ரீராம், பிறருக்கு உதவ வேண்டும் என்கிற உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன். நான் NGOவைப் பற்றி எழுதியவை எல்லா NGOக்களுக்கும் பொருந்தாது. சில நல்ல சேவை நிறுவனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

    பதிலளிநீக்கு