23 மார்ச் 2012

உதயகுமார் என்ன தீவிரவாதியா?

உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிட்டே தமிழகத்தில் பிரபலமடைந்த மேல்சாதி வெறி பிடித்த தமிழ் நாழிதழ் ஒன்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் உதயகுமார் மீனவர் வேடமிட்டு கடல் வழியே நாட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக மீண்டும் ஒரு அப்பட்டமான பொய் செய்தியை வெளியிட்டுள்ளது.

உதயகுமாரை தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாகவும் அவருடைய ஆதரவாளர்களே அவரை மிக விரைவில் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்றெல்லாம் செய்தி வெளியிட்டு மகிழ்வடைகிறது இந்த வெட்கங்கெட்ட பத்திரிகை.
ஏற்கனவே ஒரு பிரிவினரைப் பற்றி கேவலமாக எழுதி தமிழகமெங்குமுள்ள நீதிமன்றங்களில் வழக்குகளை சந்தித்துக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை வெளியிட்டு மதக்கலவரத்தையும் தூண்டிவிட முயல்கிறது என்றால் மிகையல்ல.


உதயகுமார்,  அவருடைய போராட்டக் குழுவினர் மற்றும் அவர் போராட்டம் நடத்த இடம் அளித்த பாதிரிமார்கள் ஆகியோர் மீது இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என பட்டியலிடும் இந்த பத்திரிகை உதயகுமார் இவற்றிலிருந்து மீளவே முடியாதென்றும் அவர் குறைந்தபட்சம் ஏழாண்டுகளாவது சிறையில் இருந்தே ஆகவேண்டும் என்றும் கொக்கரிக்கிறது.

உதயகுமார் என்ன தீவிரவாதியா அல்லது கொள்ளைக் கூட்டத் தலைவனா?

இலட்சம் கோடிகைளை வாரி விழுங்கி ஏப்பம் விட்ட அரசியல்வாதிகளும் அவர்களுடைய அடிவருடிகளான அதிகாரிகளும் பேருக்கு சில நாட்கள் சிறையில் ராஜபோக வாழ்க்கையை அனுபவித்துவிட்டு பிணையில் வெளி வந்து அரசியல் பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில் பொதுநலனுக்காக ஒரு அறப்போராட்டத்தை எவ்வித வன்முறையிலும் ஈடுபடாமல் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கும் ஒரு சாமான்ய மனிதரை ஒரு தீவிரவாதியைப் போல் சித்தரித்து அவரை தேசீய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிடுகிறவர்களுக்கு என்ன தண்டனை அளிப்பது?

வாருங்கள், வந்து உதயகுமாரை மட்டுமல்லாமல் அவருடன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எங்கள் அனைவரையும் கைது செய்து சிறையிலடையுங்கள், இலங்கையில் உள்ள தமிழர்களைப் போன்றே எங்களையும் சுட்டு வீழ்த்துங்கள் என்று மன உறுதியுடன் கண்ணீர் மல்க பேட்டியளிக்கும் அந்த அப்பாவி பெண்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுங்களேன். இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் கூச்சலிடும் அரசியல்வாதிகள்  உள் நாட்டிலேயே ஒரு குக்கிராமத்தில் வாழும் மக்களை அவர்களுடைய அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை பெற முடியாமல் 144 தடையுத்தரவு என்கிற பெயரில் சிறைபிடித்து வைத்திருப்பதற்கு என்ன பொருள்? இலங்கைத் தமிழர்களுக்கு குய்யோ முறையோ என்று மார்பில் அடித்துக்கொண்டு புலம்பிய தமிழ் பதிவாளர்கள் ஏன் இதில் எவ்வித அக்கறையும் இல்லாமல் இருக்கின்றீர்கள்?

இது ஒரு சிறிய மதத்தைச் சார்ந்த ஏழை மீனவர்களின் பிரச்சினைதானே என்றுதானே இந்த மவுனம்?

 எங்கோ வசிக்கும் தமிழனுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விலாவரியாக பக்கம், பக்கமாய் எழுதிக் குவித்த பதிவாளர்கள் எங்கே போனார்கள்? இடிந்தகரையில் காவல்துறையும் ராணுவமும் சுற்றிவளைத்து மக்களை சிறைபிடித்து வைத்துள்ளதற்கு எங்கே உங்கள் எதிர்ப்பு? எத்தனை நாளைக்கு தொடரப்போகிறது இந்த கொடுமை?


************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக