20 மார்ச் 2012

கூடங்குளம் அணு உலையும் தமிழக அரசும்


அனைவரும் எதிர்பார்த்தபடி தமிழக அரசு குறிப்பாக, அதன் முதல்வர், தன்னுடய முந்தைய எதிர்ப்பைமறந்துவிட்டு கூடங்குளம் அணு உலையை திறக்க அனுமதித்துள்ளார்.


இதுவரை 'உள்ளூர் மக்களின் அச்சத்தை போக்கும்வரை அணு உலை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என்று மத்திய அரசிற்கு கடிதங்கள் எழுதி வந்த முதல்வர் இப்போது மத்திய அரசும் தன்னுடைய அரசும் அமைத்த வல்லுனர் குழுவினர் சமர்ப்பித்த அறிக்கைகள் தமக்கு திருப்தியளிப்பதாக இருப்பதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

ஏனெனில் கூடங்குளம் அணு உலை கட்டுமான பணிகள் இன்றோ, நேற்றோ துவக்கப்பட்டவை அல்ல. அடிப்படை ஆய்வு பணிகள் துவக்கப்பட்டதோ 1988ம் ஆண்டு. அதன் பிறகு அம்மையாரே இரு முறை முதல்வராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் அணு உலை கட்டுமானப் பணிகள் தொடர்வதற்கு எவ்வித மறுப்பும் கூறாமல் இருந்தவர் ஆயத்த பணிகள் அனைத்தும் முடிந்து மின் உற்பத்தி துவங்கவிருக்கும் சூழலில் திடீரென்று அதற்கு முட்டுக்கட்டையாக நின்றது சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை மனதில் வைத்துத்தானே தவிர அணு உலையைச் சுற்றிலும் வாழும் ஏழை மக்கள் மீதுள்ள அக்கறையால் அல்ல. அத்துடன் பிரதமருடன் நீயா, நானா என்று அவர் நடத்திய தன்மான போராட்டமும் ஒரு காரணம். அணு உலை அமைந்துள்ள மாநிலத்தின் முதல்வர் நான் இருக்க என்னை கலந்தாலோசிக்காமல் மின் உற்பத்தி தியதியை தன்னிச்சையாக மத்திய அரசு எப்படி தீர்மானிக்கலாம் என்கிற ஆணவமும் முதலில் இதை எதிர்த்ததற்கு ஒரு காரணம்.

ஆனால் அதே அணு உலைக்கு ஆதரவாக பா..கவின் போக்கு உள்ளது என்பதை அம்மையார் உணர்ந்தபோதுதான் மாநில அளவில் ஒரு வல்லுனர் குழுவை நியமித்து அணு உலை பாதுகாப்பானதுதான் என்பது போன்ற அறிக்கையை பெற்று இந்த சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார். பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் அம்மையாரின் உள் எண்ணத்தை உணர்ந்த அவருடைய ஜன்ம எதிரியான கலைஞர் உடனே 'இது உள்ளூர் மக்களை ஏமாற்றும் வேலையே தவிர வேறொன்றுமில்லை' என்று அறிக்கை விட்டார். பிறகு அவரே சங்கரன்கோவில் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு திடீரென்று தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள 'இனியும் தாமதிப்பதில் பயனில்லை' என்ற ஞானோதயம் அம்மையாருக்கும் வந்துவிட்டது.

இத்தகைய சூழலில் அம்மையாரின் உள்நோக்கத்தை அறியாமல் நியாயம் கிடைக்காதா என்று அவரிடமே முறையிட சென்ற உதயகுமாரை என்னவென்று சொல்வது? அவருடைய முறையீட்டை தான் கண்டுக்கொள்ளவே போவதில்லை என்பதை முழுவதும் உணர்ந்திருந்த அம்மையார் வேண்டுமென்றே ஒப்புக்கு அவரை சந்திக்க சம்மதித்து மறுப்பேதும் பேசாமல் அவர் கூறியதையெல்லாம் கேட்டிருந்துவிட்டு அனுப்பி வைக்க அவர் 'முதல்வர் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்புகிறோம்' என்று அப்பாவித்தனமாக ஒரு அறிக்கையையும் விட்டார். இப்போது நாங்கள் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்று சாகும்வரை உண்ணாவிரதம் என்கிறார். இவர் என்ன அன்னா ஹசாரேவா இவருடைய உயிரை காப்பாற்ற எதிர்க்கட்சிகளும், அறிவியல் வல்லுனர்களும் இவருடன் கைகோர்க்க?

அணு உலை எதிர்ப்பு என்கிற தங்களுடைய போராட்டம் இனியும் வெற்றிபெறும் என்ற போக்கில் உதயகுமாரும் அவரை நம்பியிருக்கும் உள்ளூர் மக்களும் செல்வார்களேயானால் அது விபரீதமாகவே முடியும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கு, அவர்களுடைய உண்ணாவிரத போராட்டம் நடத்த இடமளித்து ஆதரிக்கும் கத்தோலிக்க தேவாலய அமைப்பாளர்களும் தகுந்த ஆலோசனையை வழங்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அவர்களுடைய போராட்டம் உள்ளூர் தேவாலய வளாகத்தில் நடப்பதால்தான் காவல்துறை அதை தடுத்து நிறுத்த முடியாமல் திணறுகிறது. அவர்களுடைய போராட்டம் வன்முறையாக மாறாமல் அமைதி வழியில் அதே வளாகத்தினுள் இருந்து தொடருமானால் காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இத்தகைய பயனற்ற போராட்டத்திற்கு இனியும் உடன் செல்வது சரிதானா என்பதை உள்ளூர் தேவாலய நிர்வாகிகள் சிந்தித்து போராட்டக்காரர்களை சமாதானம் செய்து இதை ஒரு சுமுக முடிவுக்கு கொண்டு வருவது நல்லது.

கூடங்குளம் பிரச்சினையை குறித்து நான் எழுதிய முந்தைய பதிவில் இது மேலும் ஒரு பரமக்குடியாக முடியக் கூடாது என்று எழுதியிருந்தேன். உதயகுமார் தலைமையிலான அறப்போராட்டம் இனியும் தொடருமானால் ஒரு சந்தர்ப்பத்தில் அது எல்லையைக் கடந்து அதன் விளைவாக காவல்துறையின் அத்துமீறலுக்கு உள்ளாகி இனியும் ஒரு பரமக்குடி என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.



**********

ழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக