ஆந்திர மாநிலத்தில் இயங்கி வந்த எல்லா வங்கி கிளைகளுமே மீன் வளர்ப்பு தொழிலுக்கு போட்டி போட்டுக்கொண்டு கடன்களை வழங்கியிருந்த காலம் அது.
நான் ஆய்வுக்குச் சென்றிருந்த கிளையிலிருந்தும் பல கோடி ரூபாய் அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டிருந்தன. எங்களுடைய கிளை இயங்கிவந்த மாவட்டத்தில் அப்போது அரசியலில் மிகவும் பிரபலமாயிருந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் மாவட்டத்திலிருந்த பெருவாரியான விளை நிலங்கள், உப்பளங்களை ஏக்கர், ஹெக்டேர் கணக்கில் குத்தகைக்கு வளைத்துப் போட்டு மீன்வளர்ப்பு பண்ணைகளாக மாற்றியிருந்த காலம் அது.
அம்மாவட்டத்தில் எங்களுடைய வங்கியையும் சேர்த்து சுமார் இருபது வங்கிகள் இயங்கி வந்தன. அங்கு வணிகம் மற்றும் தொழில்கள் துவங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாதிருந்த சூழலில் விவசாயம், உப்பு தயாரித்தல் மற்றும் மீன் வளர்ப்பு ஆகியவையில் மட்டுமே அங்குள்ள பெருவாரியான வணிகர்கள் ஈடுபட்டிருந்தனர்.
விவசாயமும் , உப்பு தயாரிப்பு தொழிலும் நலிவடைந்திருந்ததால் அதில் ஈடுபட்டு நஷ்டமடைந்திருந்த விவசாயிகள் தங்களுக்கு அசுர விகிதத்தில் கடன் வழங்கியிருந்த செல்வந்தர்களிடத்திலேயே தங்களுடைய விளைநிலங்களை இழந்து அவர்களிடத்திலேயே மீன் பண்ணைகளில் கூலிக்கு உழைத்துகொண்டிருந்தனர்.
நான் என்னுடைய கிளைக்குச் சென்றடைந்ததும் முதல் வேலையாக கடனுக்கு விண்ணப்பித்திருந்த வாடிக்கையாளரையும் மீன் பண்ணை அமைக்கப்படவிருந்த இடத்தையும் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மேலாளர் முன் வைத்தேன். அவரோ என்னுடைய கோரிக்கையை எதிர்பார்த்திருந்ததுபோல், ‘சாரி சார். நீங்க வர்றதா முன்னாலயே சொல்லியிருந்தா நானே அதுக்கு ஏற்பாடு பண்ணியிருப்பேன். அந்த ஃபர்ம்மோட மெய்ன் பார்ட்னர் நேத்துத்தான் டெல்லி வரைக்கும் போயிருக்கார். வர்றதுக்கு இன்னும் ஒரு வாரம் ஆகுமாம். அவர் இல்லாதப்போ பண்ணைக்கு போனாலும் நம்மள உள்ள விடமாட்டாங்க.’ என்றார்.
எனக்கென்னவோ அவர் அதை கூறிய விதமே சரியாகப்படவில்லை. இருப்பினும் என்னுடைய சந்தேகத்தை அவரிடம் கூறாமல், ‘பரவாயில்லை சார். நாம அந்த ஏரியாவில வேற சில பண்ணைகளுக்கு லோன் குடுத்திருக்கோமே. அதையாவது பார்த்துட்டு போயிடறேன். வந்த ட்ரிப்ப இதுக்காவது யூஸ் பண்ணிக்கலாம். இந்த பண்ணைய அடுத்த ட்ரிப்புல பாத்துக்கலாம். என்ன ஒன்னு நான் பார்த்து சர்ட்டிஃபை பண்ற வரைக்கும் அவங்க லோன் பேப்பர்ஸ் நம்ம எச்.ஓவுக்கு போகாது. இந்த விசிட்டுல பாக்க முடியாமப் போனா ஒரு மாசம் கழிச்சித்தான் மறுபடியும் வர முடியும். அவங்க ஃபேமிலியில வேற யாரும் இருந்தா கூப்பிட்டு சொல்லிருங்க.’ என்றேன்.
அவர் இதை எதிர்பார்க்கவில்லையென்பது என்பது அவருடைய முகம் போன போக்கிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது.
‘சார் ஒரு நிமிஷம், அவங்கள கூப்ட்டு சொல்லிட்டு வரேன்.’ என்று எழுந்து அறையை விட்டு வெளியேறினார். இந்த அறையிலேயே தொலைப்பேசி இருக்கையில் அவர் எதற்காக அறையைவிட்டு வெளியே செல்கிறார் என்ற நினைப்பில் அவரையே பார்த்தேன். அவர் எங்களுடைய வர்த்தக ஹாலைக் கடந்து எதிர் கோடியில் இருந்து கதவுகளைத் திறந்துக்கொண்டு வெளியேறியதைப் பார்த்தேன்.
அவருடைய குடியிருப்பு வங்கி அலுவலகத்தின் பின்புறத்தில்தான் இருந்தது. ஆகவே அலுவலகத்திலிருந்து தொலைப்பேசி செய்ய விரும்பாமல் தன்னுடைய குடியிருப்பிற்கு செல்கிறார் என்பது எனக்கு விளங்கியது.
அவர் திரும்பி வரும்வரை வெறுமனே அமர்ந்திருக்க விரும்பாமல் வர்த்தக கூடத்தில் (Banking Hall) அமர்ந்திருந்த ஜுனியர் அதிகாரிகளிடம் உரையாடும் நோக்கத்தில் அறையை விட்டு வெளியே சென்றேன்.
அந்த கிளை துவக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்ததாலும் நான் சென்றிருந்த நேரம் வர்த்தக பாஷையில் peak hour என்பதாலும் கவுண்டரில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமிருக்க எல்லா குமாஸ்தாக்களும், அதிகாரிகளும் அவர்களைக் கவனிப்பதில் மும்முரமாயிருந்தனர்.
அடுத்த சில நிமிடங்களில் மேலாளர் தன்னுடைய குடியிருப்பிலிருந்து வெளியே வர நான் அவருடைய அறைக்கு திரும்பும் எண்ணத்தில் கூடத்திலிருந்து அவருடைய அறையை நோக்கி நடந்தேன். மேலாளர் அறைக்கு வெளியே இருந்த மேசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளுக்கு மேலே இருந்த கோப்பின் மீது எழுதி வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளரின் பெயர் என்னுடைய கவனத்தை ஈர்க்க போகும் போக்கில் அதைக் கையில் எடுத்துக்கொண்டு அவருடைய அறைக்குள் நுழைந்தேன்.
என்னுடைய கையிலிருந்த கோப்பைப் பார்த்ததும் சட்டென்று மேலாளர் முகத்தில் ஏதோ ஒரு பதற்றம் தோன்றி மறைந்ததுபோன்ற உணர்வு. ஆயினும் ஒருவேளை நாந்தான் தேவையில்லாமல் கற்பனை செய்கிறேனோ என்னவோ என்று நினைத்து அதைப் பொருட்படுத்தாமல் அவர் முன்னே அமர்ந்து கோப்பில் எழுதியிருந்த பெயரை மீண்டும் வாசித்தேன்.
‘இது நம்மக்கிட்ட லோன் அப்ளை பண்ணியிருக்கற பார்ட்டிதானே?’ என்றேன். அவர் தயக்கத்துடன் மாம் என்று தலையை அசைத்தார்.
‘ஆனால் இது நம்ம பேங்க் ஃபைல் இல்லையே? இது எப்படி இங்க?’ என்றேன்.
அவர் அப்போதுதான் அந்த கோப்பை முதன்முறையாகப் பார்ப்பதுபோல் என்னிடம் இருந்து வாங்கி புரட்டிப் பார்த்துவிட்டு தன்னுடைய இருக்கைக்குப் பின்னாலிருந்த ஒரு அலமாரியில் வைத்தார். ‘ஆமா சார். டஇது ----------------- பேங்குக்கு அவங்க க்ரூப் கம்பெனி ஒன்னு அனுப்பியிருக்கற ப்ரொப்போசலோட காப்பி. சும்மா ஒரு ரெஃபரன்சுக்காக வாங்கினேன்.’
அவருடைய பதிலில் நான் சமாதானமடையாவிட்டாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ‘என்ன சார் ஃபோன் செஞ்சீங்களா?’ என்றேன்.
அவர் உடனே, ‘ஆமா சார். நல்லவேளையா அவர் போக இருந்த ஃப்ளைட் நேத்து க்ளைமேட் மோசமா இருந்ததால கிளம்பறதுக்கே ரொம்ப டிலே ஆயிருச்சாம். அதனால சகுணம் நல்லால்லேன்னு திரும்பி வந்துட்டாராம். வீட்லதான் இருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வராராம்.’ என்றார்.
‘அவர் எதுக்கு இங்க வரணும்? வேண்டாம்னு சொல்லிருங்க. அவர நேரா சைட்டுக்கு வந்துரச் சொல்லுங்க. ஒங்களுக்கு வழி தெரியும்தானே? வேணும்னா லோக்கல் பியூன துணைக்கு கூப்ட்டுக்குங்க.’
அவர் ஏற்கனவே பலமுறை அந்த பண்ணை அமைக்கப்படவிருந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதாக அவருடைய பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு சொந்தத்தில் நாற்சக்கர வாகனம் இருந்ததும் எனக்கு தெரியும். ஆனால் அவரோ என்னுடைய கோரிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் தடுமாற நான் அதைக் கண்டுக்கொள்ளாதவன்போல் எழுந்து நின்றேன்.
அவரும் வேறு வழியில்லாமல் கிளம்பினார். தன்னுடைய மனைவியிடம் கூறிவிட்டு வருகிறேன் என்று அவர் தன்னுடைய குடியிருப்புக்கு மீண்டும் செல்ல நான் சென்னையிலிருந்து கையோடு கொண்டுவந்திருந்த கடன் விண்ணப்ப நகல் அடங்கியிருந்த கோப்பை எடுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினான்.
அவர் குடியிருப்புக்கு சென்றது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு விவரத்தை தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்தான் என்பதை நான் உணர்ந்திருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த சில நிமிடங்களில் கார் சாவியுடன் திரும்பிய மேலாளருடன் கிளம்பினேன். அவர் கிளை துவக்கப்பட்டதிலிருந்து பணியாற்றிய உள்ளூர் சிப்பந்தி ஒருவரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
நகரத்தின் எல்லை வரை இலகுவாக வாகனத்தை செலுத்திய அவர் அதன் பிறகு வழிதெரியாமல் உள்ளூர் சிப்பந்தியின் உதவியை அவ்வப்போது நாடுவது நன்றாகவே தெரிந்தது. அவர் அந்த கிளைக்கு மேலாளராக வந்து ஏறத்தாழ மூன்று வருடங்கள் நிறைவேறியிருந்ததால் அரைகுறை தெலுங்கும் தெரிந்திருந்தது. இளம் பருவத்தில் சென்னையில் நான் வளர்ந்த இடத்தைச் சுற்றிலும் பல தெலுங்கு குடும்பங்கள் இருந்ததால் தெலுங்கில் பேசினால் புரிந்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு எனக்கு விவரம் இருந்தது.
ஆகவே என்னுடைய மேலாளரும் அவருடைய சிப்பந்தியும் பேசிக்கொண்டதிலிருந்து அவர் முதல் முறையாக அந்த ரூட்டில் செல்கிறார் என்பது மட்டும் விளங்கியது. என்னுடைய எண்ணத்தை அவரும் உணர்ந்திருக்க வேண்டும். ‘இதுவரைக்கும் நான் தனியா கார்ல வந்ததில்ல சார். பார்ட்டீசே வந்து கூட்டிக்கிட்டு போயிருவாங்க. அதனால நான் ரூட்டை பத்தி கவலைப் பட்டதில்ல.’ என்றார்.
நான் லேசான ஒரு புன்னகையுடன் பரவாயில்லை என்பதுபோல் வாளாவிருந்தேன். அவருடைய சிப்பந்திக்கும் வழி சரியாக தெரியாததால் வழியிலிருந்தவர்களை கேட்டு, கேட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்க இரண்டு மணி நேரம் எடுத்திருந்தது.
பண்ணை வாயிலில் நின்றிருந்த ஒரு மேலைநாட்டு வாகனமும் ஜீப்பும் கடன் விண்ணப்பித்திருந்த வாடிக்கையாளர் ஏற்கனவே வந்திருந்தார் என்பதை எனக்கு உணர்த்தியது.
வரும் வழியில் என்னுடைய மேலாளர் வாடிக்கையாளரைப் பற்றி கூறியதில் அவருக்கிருந்த அரசியல் செல்வாக்கைப் பற்றித்தான் அதிகம் இருந்ததை நான் உணர்ந்தேன். அத்துடன், ‘பார்ட்டி ரொம்ப பெரிய செல்வாக்குள்ள பார்ட்டி சார். அதனால நீங்க அவங்கள சந்தேகப்பட்டு இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருக்கறதா அவங்கக்கிட்ட சொல்ல தயக்கமா இருந்தது. நீங்களும் சொல்லாம இருந்தா நல்லாருக்கும்.’ என்றார்.
பண்ணை வாசலில் நின்றிருந்த வாகனங்களும் வாசலில் நின்றிருந்த அடியாட்கள் கூட்டமும் அவர் கூறியதை நிரூபித்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பாத்திகள் கட்டப்பட்டு நீர் நிரம்பியிருந்ததை காண முடிந்தது. அவற்றுடன் ஆங்காங்கே நிலத்தடி நீரை இழுத்து பாய்ச்சும் சக்திவாய்ந்த ப்ரொப்பல்லர் பம்ப் செட்டுகள் நீரை மீதமிருந்த பாத்திகளில் பாய்ச்சிக்கொண்டிருந்ததையும் காண முடிந்தது.
நான் கையோடு கொண்டு வந்திருந்த விண்ணப்பத்தில் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை துவக்கவிருப்பதாக குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வர நான் திரும்பி என்னுடைய மேலாளரைப் பார்த்தேன்.
அவரும் அப்போதுதான் முதல் முறையாக அந்த பண்ணைக்கு வந்துள்ளார் என்பதை அவருடைய முகத்தில் தோன்றிய அதிர்ச்சியிலிருந்தே தெரிந்தது.
தொடரும்..
வாங்க நாடோடி,
பதிலளிநீக்குநான் தான் first ஆ?//
ஆமாம். நீங்கதான் இன்றைய முதல்வர்!
ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள் போல? //
பயங்கரமான ரவுடிகளும் கூட:(
சார்...தெலுங்குப் படத்துல எல்லாம்...ஆய் ஊய்னு கத்திக்கிட்டு கத்தி கபடா எல்லாம் வெச்சுக்கிட்டு "சம்ப்பேஸ்தான்ரா"ன்னு கத்துறாங்க. கத்தியால குத்துறாங்க. நீங்க போனப்போ அப்படி ஒன்னும் நடக்கலைன்னு நீங்க இப்ப பதிவு போடுறதுல இருந்து தெரியுது. ஆனா...என்ன நடந்துச்சு? அதச் சொல்லுங்க.
பதிலளிநீக்குசீக்ரம், சீக்ரம். சொல்லுங்க. சொல்லுங்க. வாடு கொலை சேஸ்தாவா லேதா?
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்