27 டிசம்பர் 2006

தி.பா.தொடர் - பாகம் II - 11

என்னுடைய அலுவலகத்தின் கீழ் இயங்கிவந்த கிளைகளில் வணிக அளவில் நடுத்தரத்திற்கும் சற்று கூடுதலான வங்கிகளில் சில ஆந்திர மாநிலத்தில் இருந்தன.

தென்னிந்தியாவில் விவசாயத்துறையில் மிகப்பெரிய செல்வந்தர்களைக் கொண்ட மாநிலம் ஆந்திரா என்றால் மிகையாகாது. குறிப்பாக தலைநகரமான ஐதராபாத், நடுத்தர நகரங்கள் எனப்படும் குண்ட்டூர், விஜயவாடா, விசாகப்பட்டணம் போன்ற நகரங்களிலும் அதனையடுத்த நகரங்களிலும் இயங்கிவந்த கிளைகள் சில கேரள மாநிலத்தில் இயங்கி வந்த கிளைகளைக் காட்டிலும் பலமடங்கு அதிக வணிகத்தை கையாண்டன.

விவசாயத்தை இயந்திரமயமாக்கியதில் ஆந்திராவுக்கு நிறைய பங்குண்டு.. ஏன் இத்துறையில் அவர்கள் முன்னோடிகள் என்றாலும் மிகையாகாது. எங்களுடைய வங்கியிலிருந்து வழங்கிய விவசாயக் கடன்களில் சுமார் எழுபது விழுக்காடு ஆந்திராவில் இயங்கி வந்த கிளைகள் வழியாகவே வழங்கப்பட்டிருந்தன.

விவசாயத் தொழிலில் மிக முக்கியமான பங்கு வகித்தது மீன் வளர்ப்புத் தொழில். குறிப்பாக மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இத்தொழில் அப்போது சூடுபிடித்திருந்தது. சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பில் இத்தொழில் நடந்து வந்தது.

இத்தொழிலுக்கு தேவையான நிலங்களை வாங்க அல்லது  குத்தகைக்கு எடுக்க, மீன் குஞ்சுகள் அல்லது சினைகள் வாங்க, அதை வளர்ப்பதற்கு தேவையான சுத்தமான நிலத்தடி நீரை கொண்டு வர மோட்டார்கள், பைப்புகள், ப்ரொப்பலர்கள் பம்ப் செட்டுகள் வாங்க, நிர்மானிக்க, பராமரிக்க என லட்சக் கணக்கில், ஏன் சில சமயம் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்படுவதுண்டு.

அத்தகைய வாடிக்கையாளர்கள் எங்கள் வங்கியிலும் இருந்தனர். ஒரு குறிப்பிட்ட கடன் தொகைக்கு கூடுதலாக வழங்க நேருகையில் எங்களுடைய வட்டார அலுவலகத்திலிருந்து கடன் வழங்குவதற்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆய்வுகளுக்கு (pre sanction and post sanction inspection) என்னைப் போன்ற அதிகாரிகளை அனுப்புவதுண்டு. தேவைப்பட்டால், அதாவது கோரப்படும் தொகை கணிசமான அளவாக இருக்கும் பட்சத்தில், கடன் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதுமே எங்களுடைய மத்திய அலுவலகத்தின் உத்தரவின்பேரில் ஆய்வுக்கு செல்வதும் உண்டு.

வழக்கமாக நடைபெறும் ஆய்வுகள் (routine inspections) ஒரு கிளையின் செயல்பாடுகள் வங்கியின் நியதிப்படி உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நடத்தப்படும் ஆய்வுகள் என்றால் மேலே குறிப்பிட்ட ஆய்வுகள் கடன் கோரி விண்ணப்பத்திருக்கும் வாடிக்கையாளர் அந்த கடனைப் பெறுவதற்கு தகுதியானவர்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள செய்யப்படுகின்றன.

இதற்கு முழுப்பொறுப்பு கடனைப் பரிந்துரைத்த கிளை மேலாளர்தான் என்றாலும் அவருடைய கணிப்பு வங்கி நிர்ணயித்திருந்த நியதிகளுக்குட்பட்டு செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசீலனை செய்யவோ அல்லது அவருடைய கணிப்பில் ஏதேனும் குறை இருப்பின் அதை நிவர்த்தி செய்ய வழியுள்ளதா என்பதை ஆராயவுமே இத்தகைய ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

இத்தகைய ஆய்வுகள் சிலவற்றிற்கு நானும் சென்றிருக்கிறேன்.

சாதாரணமாக இத்தகைய கடன்களுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரால் பரிந்துரைக்கப்பட்டு என்னுடைய வட்டார மேலாளரின் பரிசீலனை மற்றும் பரிந்துரைக்காக அனுப்பப்படும்.

கிளைமேலாளாரின் கணிப்பில் ஏதேனும் குறைபாடுகள் தென்பட்டால் மட்டுமே தலைமையகத்திற்கு பரிந்துரை செய்வதற்கு முன்பு ஆய்வுக்கு செல்வோம்.

நான் குறைபாடுகள் என்று இங்கே குறிப்பிடுவது மேலாளரின் கடன் தொகை அளவிற்கான கணிப்பில் அல்ல. அது சாதாரணமாகவே எல்லா பரிந்துரைகளிலும் காணப்படும். பத்து லட்சம் கடன் தேவைப்படும் வாடிக்கையாளர் குறைந்த பட்சம் பதினைந்து லட்சம் கோருவார். கிளை மேலாளர் அதை சற்று குறைத்து பதிமூன்று அல்லது பதிநான்கு லட்சத்திற்கு பரிந்துரைப்பார். அதில் சற்று குறைந்து பன்னிரண்டு லட்சத்திற்கு வட்டார மேலாளர் பரிந்துரைப்பார். தலைமையகத்தில் அதை வாடிக்கையாளருக்கு தேவைப்படும் பத்து லட்சத்திற்கு குறைத்து இறுதியில் அனுமதி வழங்குவார்கள். வாடிக்கையாளருக்கு உண்மையில் தேவைப்படும் கடன் கிடைத்த திருப்தி.

ஆகவே இத்தகைய குறைபாடுகளை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் கடன் விண்ணப்பத்தை பரிந்துரை செய்வதற்கு முன்பே ஆய்வு நடத்த வேண்டி வருவது கடன் விண்ணப்பித்திருந்த வாடிக்கையாளரைக் குறித்து கிளை மேலாளர் செய்திருந்த கணிப்பில் காணப்படும் குறைபாடுகள்தான்.

ஒரு வாடிக்கையாளரின் பூர்வீகம், குடும்பப் பின்னணி, அவருடைய சொத்து மதிப்பைப் பற்றிய கணிப்பு, சம்பந்தப்பட்ட தொழிலை நடத்தக்கூடிய வாடிக்கையாளருக்கு உள்ளதா, கடனைத் திருப்பிச் செலுத்த தேவையான வசதிகள் அவருக்கு உள்ளனவா என்பதை ஓரளவுக்கு முழுமையாக கணிக்க வங்கி பல நியதிகளை நிர்ணயித்திருந்தது.

அத்தகைய நியதிகளை ஒரு கிளை மேலாளர் சரிவர கடைப்பிடித்திருக்கிறாரா என்பதை பரிசீலனை செய்யவும் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களையும் எங்களுடைய வங்கியின் பயிற்சி கல்லூரிக்கே அழைத்து வட்டார அலுவலகங்களில் பணியாற்றிய என்னைப் போன்ற அதிகாரிகளைப் பயிற்சிவிப்பதும் உண்டு.

குறிப்பிட்ட கிளையிலிருந்து வந்திருந்த ஒரு கடன் விண்ணப்பத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய என்னை பணித்ததற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று கடன் தொகை அதுவரை இல்லாத அளவு கணிசமானதாக இருந்தது.

அத்துடன் கடன் விண்ணப்பத்தை நிராகரிக்க இயலாத அளவுக்கு மிக திறமையாக, முழுமையாக தயாரிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக கிளை மேலாளர்கள் பரிந்துரைக்கும் இத்தகைய விண்ணப்பங்களில் பெரிதாக ப்ரொஃபஷனலிசம் இருக்காது. ஒரு வங்கி அதிகாரிக்கு இருக்கும் விவரங்களின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும்.

அத்தகைய பரிந்துரைகளை மேற்பரிசீலனை செய்வதற்கு தேவைப்படும் விஷயங்களை வட்டார அலுவலகங்களில் இப்பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மேலாளரையோ அல்லது அவரால் திறம்பட பதிலளிக்க இயலாத சமயங்களில் நேரடியாக வாடிக்கையாளரையோ தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு பெறுவதுண்டு.

ஆகவே நான் குறிப்பிட்ட விண்ணப்பம் மிகத் திறம்பட அதை பரிசீலனை செய்ய தேவைப்படும் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியிருந்ததால் என்னுடைய அலுவலகத்தில் கடன் வழங்கும் பிரிவிற்கு தலைவராயிருந்த சீஃப் மேலாளருக்கு வியப்பாயிருந்ததுடன் இதன் பின்புலத்தில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்ற ஐயமும் ஏற்பட்டது. இது நிச்சயம் நம்முடைய கிளை மேலாளரால் தயாரிக்கப்பட்டதல்ல என்ற ஐயமும் இருந்தது அவருக்கு.

ஆகவே அவர் என்னுடைய உடனடி அதிகாரியைக் கலந்தாலோசித்து சம்பந்தப்பட்ட கிளைக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தில் சமர்ப்பித்திருப்பதெல்லாம் சரிதானா என்பதை ஆய்வு செய்ய எங்களுடைய ஆய்வு இலாக்காவிலிருந்து ஒரு அதிகாரியை அனுப்புவதென தீர்மானித்தார்.

என்னுடைய உடனடி அதிகாரிக்கு என்னை அனுப்ப அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. ஆயினும் சம்பந்தப்பட்ட சீஃப் மேலாளருடைய பரிந்துரையின் பேரில் ஒத்துக்கொண்டார்.

சாதாரணமாக எங்களுடைய ஆய்வு இலாக்காவிலிருந்து செல்கையில் முன்னறிவிப்பில்லாமல் செல்வது வழக்கம். ஆனால் இது அத்தகைய ஆய்வு இல்லையென்பதாலும் நான் செல்லும் நேரத்தில் சம்பந்தப்பட்ட கிளை மேலாளரும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்த வாடிக்கையாளரும் ஊரில் இருக்க வேண்டும் என்பதாலும் நான் புறப்படுவதற்கு ஒரு வாரம் முன்பே கிளை மேலாளரை அழைத்து நான் இன்ன தேதியில் வருவதாகவும் அந்த சமயத்தில் அவரும் வாடிக்கையாளரும் ஊரில் இருக்க வேண்டும் என்றும் அவரிடம் சொல்லிவிடலாமா என்று வினவினேன் என் அதிகாரியிடம்.

அவரோ என்னை என்ன நீ முட்டாளா என்பதுபோல் பார்த்தார். ‘என்ன டிபிஆர் சொல்றீங்க? இந்த ப்ரொப்போசல்லயே டவுட் இருக்கறதுனாலதான ஒரு ப்ரீ சாங்ஷன் இன்ஸ்பெக்ஷன் தேவைன்னு தீர்மானிச்சோம்? நீங்க பாட்டுக்கு ஆன் தி ஸ்பாட் வெரிஃபிகேஷனுக்கு நீங்க வரீங்கன்னு ஃபோன் போட்டு சொன்னா நம்ம  மேனேஜர் அந்த பார்ட்டிய கூப்ட்டு சொல்ல மாட்டாரா? அப்புறம் ஒங்க விசிட்டுக்கு என்ன அர்த்தம்?’

சாதாரணமாக தன்னுடைய நிழலையே சந்தேகத்துடன் பார்ப்பவர் அவர். இவரிடம் போய் கேட்டேன் பார் என்று என்னையே நொந்துக்கொண்டு அவர் இல்லாத நேரத்தில் சம்பந்தப்பட்ட கடன் பிரிவின் அதிகாரியை அணுகி 'முன்னறிவிப்பில்லாமல் நான் அங்கு சென்று நம்ம மேனேஜரோ அல்லது விண்ணப்பதாரரோ ஊரில் இல்லாமல் போனால் என்ன செய்வது சார்?’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டு, ‘ஒங்க பாஸ் சொன்ன மாதிரியே செஞ்சிரலாம் டிபீஆர். ஏன்னா நீங்க போற நேரத்துல நம்ம மேனேஜரும் அந்த பார்ட்டியும் இல்லாம போறது ஒரு வகையில நமக்கு நல்லதுன்னுதான் நினைக்கிறோம். நம்ம மேனேஜர் இல்லன்னா பிராஞ்சுலருக்கற ஒரு ஜூனியர் ஆஃபிசர கூட்டிக்கிட்டு நீங்க சைட்டுக்கு போலாம். அந்த பார்ட்டி ஊர்ல இல்லன்னாலும் ப்ராஜக்ட் சைட்ல யாராச்சும் நிச்சயம் இருப்பாங்க. ஏறக்குறைய நூறு ஏக்கர் சைட் அது.. அட்லீஸ்ட் வாட்ச் மேனாவது இருப்பாங்க. நீங்க நிம்மதியா எந்த இடைஞ்சலும் இல்லாம இன்ஸ்பெக்ட் பண்ணிட்டு வரலாம்.’ என்றார். பிறகு, ‘டிபிஆர். நீங்க ஒரு இன்ஸ்பெக்டரா போறீங்க. மறந்துராதீங்க. ஒங்க ஆப்ஜெக்ட் திங்கிங்கோட பாக்காதீங்க. ஒங்க கொனம் தெரிஞ்சிதான் ஒங்க பாஸ் ஒங்கள அனுப்ப வேண்டாம்னு நினைக்கிறார். So, act like an inspector when you are there.. You should report whatever you observe there.. Please remember, based on your report only I would decide whether or not to consider this proposal.’ என்றார் கண்டிப்புடன்.

சாதாரணமாக அவர் அப்படி பேசாதவர் என்பது எனக்கு தெரிந்திருந்ததால் அவர் பரிந்துரைத்தபடியே சம்பந்தப்பட்ட கிளைக்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பயணித்தேன்.

Hindsight அதாவது உள்ளுணர்வு என்பார்களே அதுபோலத்தான் இருந்தது.

என்னுடைய இரு சீஃப் மேலாளர்களும் நினைத்திருந்தது எத்தனை சரி என்பது அங்கு சென்று சேர்ந்தபோதுதான் தெரிந்தது..

தொடரும்

10 கருத்துகள்:

  1. அனுபவம் அனுபவந்தான் இல்ல. அவர் ஒங்களுக்கு அப்படிச் சொன்னது சரீன்னுதான் தோணுது. காரணம்...கொடுக்க வேண்டிய தகவலைக் கொடுக்காம இருக்குறது மட்டுமல்ல..அளவுக்கு அதிகமாகக் கொடுக்குறதும் தப்புத்தானாம்.

    பதிலளிநீக்கு
  2. வாங்க ராகவன்,

    கொடுக்க வேண்டிய தகவலைக் கொடுக்காம இருக்குறது மட்டுமல்ல..அளவுக்கு அதிகமாகக் கொடுக்குறதும் தப்புத்தானாம். //

    எங்க சேர்மன் அடிக்கடி சொல்வார்: தப்பும் தவறுமா இருக்கற ரிப்போர்ட்ட நம்பலாம். எல்லாம் சரியா இருக்கற ரிப்போர்ட்ட நம்பவே முடியாது.

    பதிலளிநீக்கு
  3. கொஞ்சம் அப்படி இப்படின்னு ரிப்போர்ட்ட தயார் பண்ணியிருக்கனும் அவங்க. பாருங்க உங்க கிட்ட மாட்டிகிட்டாங்க...Mistrust the obviousனு சொல்லுவாங்க இல்ல சார்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க கிருஷ்ணா,

    Mistrust the obviousனு சொல்லுவாங்க //

    அதான மனித இயல்பு? நல்லாருக்கறத நம்பறதில்லையே நாம?

    பதிலளிநீக்கு
  5. "இது நிச்சயம் நம்முடைய கிளை மேலாளரால் தயாரிக்கப்பட்டதல்ல என்ற ஐயமும் இருந்தது அவருக்கு."

    நீங்கள் "திரும்பிப் பார்க்கிறேன்" ஆங்கில வெர்ஷனில் (looking back) கூறியிருந்தபடி, உங்கள் வங்கியின் பழைய ஆஃபீசர் ஒருவர் (ராஜினாமா செய்தவர்/ரிடயர் ஆனவர்) கன்சல்டண்டாக செயல்பட்டு தயாரித்த பிரபோசலா அது?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  6. ஆமாங்க சார்.

    ஒரு விஷயத்தை, செய்யறதுக்கோ, சொல்றதுக்கோ முன்னாடி, அதப்பத்தி, ரொம்பவும் யோசிச்சி, பல கோணங்கள்ல ஆராய்ந்து (!), அப்புறம் செய்யவோ, சொல்லவோ செஞ்சா, அதுக்கு, கூட இருக்கறவங்க சில ஆட்சேபணையோ, ஆலோசனையோ சொல்லுவாங்க. நாம் நினைக்காத விஷயத்த சொன்னா சரி, நாம ஏற்கனவே ஆராய்ந்த விஷயம்னா, அத உடனே மறுப்போம் இல்லயா. உடனே, நாம சொல்றத கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கலயேன்னு, இணவிக்கோ, நட்புக்கோ, பாஸுக்கோ கோபம் வரும் பாருங்க.... அதுக்கு என்ன பண்றது?

    கொஞ்சம் அவங்களும் ஆலோசன சொல்ற மாதிரி விட்டு வைக்கிறதுதான் சரியில்ல...

    இப்பல்லாம், பாஸுக்கு ரிப்போர்ட்டோ, பேப்பரோ, கொடுக்கும்போது, சில சில்லறை தப்புகளோட கொடுக்கறேன். அவரும் அத திருத்திட்டேன்னு சொல்றதுக்கு, அந்த தப்புகள திருத்தி அனுப்பிடுவார். இல்லன்னா, முக்கியமான விஷயத்தையே மாத்துங்கன்னுடுவாரே..அதே மாதிரி, அந்த பார்ட்டிங்க உங்ககிட்ட சூடு பட்ட பின்னாடி, அப்படி இப்படின்னு ரிப்போர்ட் கொடுக்க ஆரம்பிச்சிருப்பாங்களே...

    என்ன, இணைவிகிட்ட இந்த டெக்னிக் செல்லுபடியாக மாட்டேன்னுது...எல்லாத்தயும் நீயே முடிவு பண்ணிட்டு, என் வாயில இருந்து வர வைக்க பாக்கறயான்னுடுவாங்க...

    பதிலளிநீக்கு
  7. வாங்க ராகவன் சார்,

    உங்கள் வங்கியின் பழைய ஆஃபீசர் ஒருவர் (ராஜினாமா செய்தவர்/ரிடயர் ஆனவர்) கன்சல்டண்டாக செயல்பட்டு தயாரித்த பிரபோசலா அது?//

    இல்லை சார்.. அவரைப் போன்ற வேறொருவரால்.. இதெல்லாம் இப்போது மிகவும் சகஜமாகிவிட்டது. அதனால்தானோ என்னவோ வாராக்கடன்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்திருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  8. சார் இன்னொரு விஷயம். நீங்க தலைப்ப தி.பா.தொடர்னு போடற விட, திரும்பிப் பார்க்கிறேன்-II-12, 13 ன்னு போட்டா நல்லாயிருக்குமோ...

    பதிலளிநீக்கு
  9. இப்பல்லாம், பாஸுக்கு ரிப்போர்ட்டோ, பேப்பரோ, கொடுக்கும்போது, சில சில்லறை தப்புகளோட கொடுக்கறேன். அவரும் அத திருத்திட்டேன்னு சொல்றதுக்கு, அந்த தப்புகள திருத்தி அனுப்பிடுவார். //

    ஒங்க பாஸுக்கும் ஏதாவது வேலை குடுக்கணுமே? இல்லன்னா அப்புறம் அவர் எதுக்கு?

    என்ன, இணைவிகிட்ட இந்த டெக்னிக் செல்லுபடியாக மாட்டேன்னுது...//

    இதான் பாஸுக்கும் பார்ட்னருக்கும் (லைஃப்ல சொன்னேன்) உள்ள வித்தியாசம் பிரதர்:)

    பதிலளிநீக்கு
  10. திரும்பிப் பார்க்கிறேன்-II-12, 13 ன்னு போட்டா நல்லாயிருக்குமோ... //

    நாளைலருந்து அப்படியே போட்டுடறேன்:)

    பதிலளிநீக்கு