20 செப்டம்பர் 2006

திரும்பிப் பார்க்கிறேன் 196

மதுரையில் நான் இருந்தது ஒரு வருடம்தான் என்று கூறினேன்.

அதற்கு என்ன காரணம் என்று கோடிட்டு காட்டியிருந்தேன்..

அதற்கு முன் இன்னும் கொஞ்சம் மதுரையைப் பற்றி..

நான் கிளைக்கு பொறுப்பேற்ற நேரத்தில் இருந்த அதே அலுவலகர்கள்தான் நான் இருந்த ஒரு வருட காலத்திலும் இருந்தனர். அதாவது, மாற்றலாகிப் போன அந்த பெண் அதிகாரியைத் தவிர.

ஆயினும் என்னுடைய அதிர்ஷ்டமோ, அல்லது அணுகுமுறையோ தெரியவில்லை. நான் பொறுப்பேற்ற சமயத்தில் இருந்த அத்தனை குளறுபடிகளையும் சுமார் ஒன்பது மாத காலத்தில் என்னுடைய அலுவலகர்களின் முழு ஒத்துழைப்புடன் சரி செய்ய முடிந்தது.

எப்போதுமே ஒரு கிளையில் நடக்கும் அத்தனைக்கும் அக்கிளையின் மேலாளர்தான் பொறுப்பேற்க வேண்டி வரும். அவர் எத்தனை திறமையுள்ளவராக இருப்பினும் அவருடைய மேற்பார்வையில் பணியாற்றும் பணியாளர்கள் அவருக்கு தகுந்த விதத்தில் ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால் கிளையை சரிவர நடத்திச் செல்ல இயலாமற் போகும். கிளையில் குளறுபடிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

அப்படிப்பட்ட நிலையில்தான் என்னுடைய கிளையும் இருந்தது. அப்போதிருந்த என்னுடைய வங்கியின் முதல்வர் அடிக்கடி இவ்வாக்கியத்தைக் கூறுவார். ‘If a branch is not showing desired results the Branch Manager would immediately try to take shelter by pointing out at his staff. Change him and things would look up.’

அவர் முதல்வராக இருந்த காலத்தில் அப்படித்தான் நடந்தது. ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் சம்பிரதாயமாக நடைபெறும் மேலாளர் மாற்றல்கள் அவர் பதவியில் இருந்த காலத்தில் வருடத்தின் எல்லா மாதங்களிலும் நடக்க ஆரம்பித்தது. யாருக்கு எப்போது மாற்றம் வரும் என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது என்றால் மிகையாகாது.

அப்படிப்பட்ட சூழலில்தான் என்னுடைய நண்பரும் மதுரைக் கிளைக்கு வந்த இரண்டே வருடங்களில் மாற்றப் பட்டார்.

மதுரையில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு அவரும் ஒரு வகையில் காரணமாயிருந்தார் என்றே நினைக்கிறேன். மதுரை போன்ற நகரங்களில் பணியாற்ற உள்ளூர் மொழி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். கேரளத்திலும் அப்படித்தான். நான் பணியாற்றிய கொச்சி போன்ற நகரங்களில் ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும், சமாளித்து விடலாம். ஆனால் திருச்சூர், கோட்டயம், ஏன் திருவனந்தபுரத்திலும் உள்ளூர் மொழி தெரியாமல் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாது.

சுமார் இருபதாண்டு காலம் தன்னுடைய சொந்த மாநிலமான கேரளத்திலேயே பணிபுரிந்திருந்த என்னுடைய நண்பர் மதுரை போன்ற பெரிய கிளைகளில் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் மேற் பதவிக்கு செல்ல வாய்ப்புள்ளது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மதுரை மாற்றலை ஏற்றுக்கொண்டு வந்திருந்தார்.

ஆனால் மதுரைக்கு வந்த சில மாதங்களிலேயே தன்னுடைய அரைகுறை தமிழ் உள்ளூரில் செல்லுபடியாகாது என்பதை உணர்ந்து மனம் தளர்ந்து போனார் என்று நினைக்கிறேன். ஆகவே உள்ளூர்வாசியும் தன்னுடைய உதவி மேலாளருமான பெண் அதிகாரியிடம் கிளை சகலப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு பேருக்கு ஒரு மேலாளராக இருக்க முடிவு செய்திருந்தார் என்றும் நினைக்கிறேன்.

ஒரு வங்கிக் கிளையின் மேலாளரோ அல்லது அவருக்கு துணையாக பணிபுரியும் கிளையின் மற்ற அதிகாரிகளோ அனுபவமில்லாதவர்கள் என்று தெரிந்தாலே போதும் கேட்கவே வேண்டாம், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார்கள்.

என்னுடைய நண்பர் பணிபுரிந்திருந்த இரு கிளைகளுமே Deposit Oriented கிளைகள். அதிலும் எப்போதாவது வங்கிக்கு வந்து செல்லும் NRI வாடிக்கையாளர்கள். கிளை அமைந்திருந்த நகரமும் சிறு நகரங்களாயிருந்ததால் எல்லோருக்கும் எல்லோரையும் தெரியும் என்ற நிலை. நீ இன்னார் மகந்தானே, சகோதரந்தானே.. என்ற நிலையில் பரஸ்பரம் தெரிந்திருக்கும் சூழலில் பணியாற்றிவிட்டு எப்படி வேண்டுமானாலும் வணிகம் செய்யலாம்,  லாபம் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்துடன் மதுரை சந்தையிலிருந்த வணிகர்களுடைய உள்நோக்கத்தை அறிந்துக் கொள்ள தவறியதுதான் அவருடைய ஒரே தவறு.

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக் கூடிய மனநிலை கொண்டவர்கள் வங்கி மேலாளராக திறம்பட செயல்பட முடியாது. சந்தையிலிருக்கும் வணிகர்களுக்குரிய சாதுரியம் வங்கி மேலாளருக்கும் இருக்க வேண்டும். பாம்பின் கால் பாம்பறியும் என்பது வங்கி மேலாளர் அனுபவத்தில் நான் படித்த மிக முக்கியமான பாடம்.

நியாயமாக, நேர்மையாக செயல்பட்டு தங்களுடைய வணிகத்தில் மிக சிறப்பான வெற்றியைக் கண்ட வணிகர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். வணிகத்தில் எந்த தொய்வு ஏற்பட்டாலும் சரி தங்களுடைய சீரான பாதையை விட்டு விலகுவதில்லை என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த அவர்களுடைய சோதனைக் காலத்தில் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவது  வங்கி மேலாளர்களுடைய  தார்மீகக் கடமை என்பதை நான் உணர்ந்திருந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு வாடிக்கையாளர் என்னுடைய கிளையிலும் இருந்தார்.

மதுரையிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருந்தது அவருடைய பருத்தி நூற்ப்பாலை.

பரம்பரையாகவே நல்ல செல்வந்தக் குடும்பத்திலிருந்த வந்தவர். ஆயினும் எவ்வித ஆணவமும், அகங்காரமும் இல்லாதிருந்த அவரை முதன் முதலில் சந்தித்தபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளைவெளேர் நிறத்தில் கதர் வேட்டி, அதே நிறத்தில் அரைக் கை வைத்த கதர் சட்டை. சிவந்த மேனி, அடர்த்தியான புருவங்களுக்குக் கீழே பார்ப்போரை கவர்ந்திழுக்கும் கூர்மையான பார்வை, எப்போதும் மாறாதிருந்த புன்னகை..

அவருடைய முப்பாட்டான் காலத்திலிருந்தே சிறப்பாக செயல்பட்டு  வந்திருந்த நூற்பாலை நான் கிளைக்கு பொறுப்பேற்ற காலத்தில் சற்றே நலிவடைந்திருந்தது. கடந்த மூன்று மாத காலமாக நூற்பாலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக செயல்பட முடியாமல் முடங்கிப் போயிருந்தது.

இத்தனைக்கும் அவருடைய நூற்பாலையில் பணிபுரிந்த பெரும்பாலான தொழிலாளர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருந்தவர்கள்.   மத்திய, மாநில அரசுகளின் புலம்பெயர்வோர் புணர்வாழ்வு திட்டத்தின் கீழ் தாமாகவே முன்வந்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க முன்வந்ததுதான் அவர் செய்த மிகப் பெரும் தவறு என்பதை நான் சுட்டிக் காட்டியபோது அவர் கோபப் படாமல் சிரித்தார்.

‘நீங்க சொல்றது சரிதானோன்னு இப்போ எனக்கு தோனுது சார். ஆனா நாலஞ்சு வருசத்துக்கு முன்னால என் நண்பரோட யாழ்ப்பாணம் போயிருந்தப்போ அங்கே இவங்க படற பாட்ட பார்த்து நான் மனமிளகிப் போனேன் சார். அப்புறமா ஊர் திரும்புனதும் இங்கருக்கற Repatriate Coop Bank மேனேசர ஒரு முறை நம்ம லயன் க்ளப்புல சந்திச்சேன். நீங்க நம்ம அரசாங்க திட்டத்துல Srilanka Repatriatesக்கு வேலை வாய்ப்பு குடுக்க முன்வந்தா நாங்க ஒங்க மில்லுக்கு வேண்டிய முழு ஃபைனான்சும் செய்யறோம்னார். நானும் யோசிச்சிப் பார்த்தேன். நம்ம சாதிப் பயல்கன்னு நினைச்சி வேல குடுத்தவனெல்லாம் நினைச்சா வேலை நிறுத்தம் செய்யறானுவளே நாடு விட்டு நாடு வந்து கஷ்டத்த மட்டுமே அனுபவிச்சிக்கிட்டிருக்கற இவங்களுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாமேன்னு தோனிச்சி. அதனோட பலனத்தான் நான் இப்ப அனுபவிக்கேன்.’

ஆம். வேலை கிடைத்த ஆரம்பக் காலத்தில் மிகவும் நன்றியுணர்வுடன் பணிக்கு வந்த ஊழியர்கள் அடுத்த ஆறே மாதத்தில் ஊதிய உயர்வு, எட்டு மணி  நேர வேலை என்ற கோரிக்கைகளை வைத்து வேலைநிறுத்தம் செய்யப் போவதாக மிரட்டியதுடன் தங்களுடைய பயமுறுத்தலுக்கு உரிமையாளர் பணியப் போவதில்லையென்று தெரிந்ததும், அடுத்த சில மாதங்களில்  இலங்கையில் நிலமை சற்றே சீரானவுடன் வேலையை உதறிவிட்டு செல்ல  எஞ்சியிருந்த சில பணியாட்களைக் கொண்டு மனிதர் நூற்பாலையை நடத்த முடியாமல் சிரமப்பட்டு போயிருக்கிறார்.

புலம்பெயர்ந்தோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு கடனுதவி அளித்திருந்த வங்கி அடுத்த சில மாதங்களில் கடனை திருப்பி செலுத்த வற்புறுத்த முன்பு அவருக்கு உதவியாயிருந்த ஸ்டேட் வங்கியினரும் கைவிரித்துவிட்ட சூழலில்தான் என்னுடைய வங்கியின் முந்தைய முதல்வரின் சிபாரிசில் எங்களுடைய வங்கி அவருக்கு Repatriate Coop Bank அளித்திருந்த முழுக் கடனையும் ஏற்றுக்கொண்டிருந்தது.

எங்களுடைய வங்கி கடனை ஏற்றுக்கொண்ட நேரமோ என்னவோ அவர் புலம்பெயர்ந்தோருக்கு உதவும் நோக்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த முந்தைய  ஊழியர்களில் பலரும் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு பணிக்கு திரும்ப நூற்பாலை மீண்டும் செயல்பட துவங்கியிருந்தது.

ஆனால் காலங்காலமாக அவருடைய பாட்டனார் காலத்திலிருந்து அந்நூற்பாலையில் பணியாற்றி வந்திருந்த ஊழியர்கள் அவரைப் பழிவாங்கும் நோக்குடனே பணிக்கு திரும்பியிருந்தனர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

ஒரு வணிகத்தையோ அல்லது தொழிலையோ திறம்பட நடத்திச் செல்ல நேர்மையும், திறமையும் இருந்தால் மட்டும் போறாது சாணக்கியத்தனமும் இருக்க வேண்டும் என்பதை அவரைப் பார்த்துத்தான் நான் தெரிந்துக் கொண்டேன்.

பத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் நிறுவனங்களே ஊழியர் சங்கங்களால் அவதிப்படும்போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட அந்நிறுவனத்தில் புலம்பெயர்ந்தோருக்கென ஒரு சங்கமும் உள்ளூர் தொழிலாளர்களுக்கென ஒரு சங்கமும் இருந்தது. ஒரு சங்கம் இருந்தாலே சமாளிப்பது சிரமம். அதுவும் நேரெதிர் நோக்கங்களைக் கொண்ட இரு சங்கள் ஒரு நிறுவனத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.

தங்களுடைய தாய் நாட்டுக்கு திரும்பிச் சென்றவர்களுடன் செல்லாமல் நின்றுப்போன சுமார் இருபது இலங்கையர்கள் தங்களுக்கென ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டு தங்களுடைய முதலாளிக்கு விசுவாசமாக இருந்ததை சகித்துக் கொள்ள முடியாத உள்ளூர் தொழிலாளர்களின் சங்கத் தலைவர்கள் அவர்களை ஒழித்துக் கட்டுவதில் முனைப்பாயிருக்க நூற்பாலையில் எந்நேரமும் பிரச்சினை..

இது போறாதென தன்னுடைய சொந்த ஊர்க்காரன் என்ற ஒரே காரணத்திற்காக புதிதாய் மேலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருந்தவர் நூற்பாலையின் செயல்பாட்டில் ஏற்படுத்தியிருந்த தேவையற்ற மாற்றங்கள் வேறு சிக்கலைப் பெரிதாக்கியிருந்தது.  

சிக்கல் மேலும் சிக்கலாகி இரு சங்க ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு நூற்பாலையை மூடப்பட்ட சூழலில்தான் நான் என்னுடைய கிளைக்கு பொறுப்பேற்றிருந்தேன்.

மதுரைக் கிளையிலிருந்து கொடுக்கப் பட்டிருந்த கடன் கணக்குகளில் மிகக் கணிசமான தொகையைக் கொண்டிருந்தது அந்நூற்பாலை.

கிளைக்கு பொறுப்பேற்ற மாதத்தில் நூற்பாலை மூடப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கழிந்திருந்தன.

நூற்பாலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டிருந்தாலும் அதிலிருந்த சரக்குகளை மேற்பார்வையிடலாம் என்ற நோக்கத்தில் அவரை ஏற்கனவே சந்திருந்த நான் தொலைப் பேசியில் தொடர்புக்கொண்டு நூற்பாலைக்கு வருவதாக தெரிவித்தேன்.

‘கண்டிப்பா சார். ஆனா என்னாலத்தான் இப்ப வரமுடியாம கெடக்கு. ரெண்டு நாளா மேலுக்கு முடியல.. நா மேனேசருக்கு போன் போட்டு சொல்றேன்.. நீங்க புறப்பட நேரம் சொன்னீகன்னா நா ப்ளசர அனுப்ப சொல்றேன். ஒங்களுக்கு வழி தெரியாதில்லையா.. இருபது மைலுக்கு மேல இருக்குமே..’ என்றார்.

‘பரவாயில்ல சார். நான் என் ஸ்கூட்டர்லயே வந்துடறேன்.’ என்றேன்.

அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அவரை ஏற்கனவே சந்தித்து அவருடயை பேச்சில் கவரப்பட்டிருந்ததால் என்னால் மறுப்பேதும் கூற முடியவில்லை. சரி என்று ஒத்துக்கொண்டேன்.

அன்று பிற்பகல் மூன்று மணியளவில் அவருடைய வாகனம் வந்ததும் என்னுடைய அதிகாரிகளில் ஒருவரை அழைத்துக்கொண்டு நூற்பாலையைச் சென்றடைந்தேன்..

ஆலையின் மேலாளரும் அவருடைய அலுவலக பணியாட்களும் மட்டுமே இருந்தனர்.

மேலாளரைப் பார்த்த முதற் பார்வையிலேயே அவரை எனக்கு பிடிக்காமற் போனது. அவருடைய உதவியாளர்களை? கேட்கவே வேண்டாம்.. தமிழ் திரைப்படங்களில் வரும் அடியாட்களுடைய அதே சாயல்!

தொடரும்..

13 கருத்துகள்:

  1. ரெண்டு தொழிற்சங்கமுன்னா ரொம்பக் கஷ்டம்தான்.

    வில்லன்கள்ன்னு இப்பெல்லாம் சினிமாவுலெ காட்டுறவங்க நிஜத்திலும் இருக்காங்களா?

    புணர்வாழ்வு = புனர் வாழ்வு

    பதிலளிநீக்கு
  2. வாங்க துளசி,

    ரெண்டு தொழிற்சங்கமுன்னா ரொம்பக் கஷ்டம்தான்.//

    கேரளம் இன்னமும் தொழிலில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறாததற்குக் காரணமே இச்சங்ககள்தானே.

    வில்லன்கள்ன்னு இப்பெல்லாம் சினிமாவுலெ காட்டுறவங்க நிஜத்திலும் இருக்காங்களா?//

    நிஜவாழ்வில் இருக்கறவங்களைத்தானே சற்று மிகைப்படுத்தி சினிமாவுல காட்டறாங்க?

    புணர்வாழ்வு = புனர் வாழ்வு //

    எஸ் டீச்சர்.. ஆனா ஒரு சின்ன திருத்தம். புனர்வாழ்வு ஒரே வார்த்தைதான்.. என்ன ஒரு சுழி கூடிப்போச்சி.. திருத்தறது கொஞ்சம் சிரமம்தான்..

    பதிலளிநீக்கு
  3. குழந்தை என்று தூக்கிவைத்துக்கொண்டால்,
    அது மூக்கில் குத்த ஆரம்பிக்கும்பொழுதுதான்
    கஷ்டம் தெரியும்
    [ இது 'பன்னாட்டு வணிகத்தில்
    protection க்கு ஆதரவாக கூறப்படும்
    infant industriees argument ற்கு
    எதிரான வாதம்....தமிழ்ப்படுத்தி
    உள்ளேன்]

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜி!

    தமிழாக்கம் சரியாருக்குன்னு நினைக்கிறேன்.

    ரொம்ப சரியான அப்சர்வேஷன்..

    ஆனா ஒன்னு சார். இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வந்த பிறகுதான் தெரிகிறது நம்முடையவர்கள் இவ்வளவு காலம் நம்மை எவ்வளவு சுரண்டியிருக்கிறார்கள் என்று?

    பதிலளிநீக்கு
  5. "வங்கி மேலாளருக்கு சாணக்கியத்தனமும் வேண்டும்"-வேலைக்கு வருவதற்கு முன்பு வேண்டுமானால் சிலரிடம் இருக்கும்,உள்ளே வந்த பிறகு கொஞ்சம் பில்டப் பண்ணுவது கஷ்டம் இல்லை?
    கத்துக்கொள்வதற்கு முன்பே "போட்டுத்தள்ளிட மாட்டாங்க?"-கூட இருக்கிறவங்க சிலர்!

    பதிலளிநீக்கு
  6. வாங்க குமார்,

    கத்துக்கொள்வதற்கு முன்பே "போட்டுத்தள்ளிட மாட்டாங்க?"-கூட இருக்கிறவங்க சிலர்! //

    நீங்க ஏதாவது பேங்க்ல வேல பாக்கீங்களா,ரொம்ப கரெக்டா சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  7. ஜோசப் சார்,

    தங்கள் அனுபவ ஊற்றுகளிலிருந்து சிறிது சிறதாக எங்களுக்கு பருக கொடுத்து வருகிறீர்கள்.

    ரொம்பவும் ச்வாரசியமாக இருக்கிறது.

    தமிழ் பதிவுகளில் ஒரு பாடமாக தவறாமல் படித்து சந்தோஷப்படுகிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. அடேங்கப்பா....அப்புறம் என்ன..சினிமாவுல வர்ர பேங்க் மேனேஜர் கதாநாயகன் மாதிரி விர்ரு விர்ருன்னு சர்ரு சர்ருன்னு பறந்து போயி சண்ட போட்டீங்களாக்கும். :-)

    செய்நன்றி அறிதல்லு சொல்வாங்க. மெல்லிசை மன்னர் தூங்கப் போறதுக்கு முன்னாடித் தன்னை வாழ வைத்தவங்களுக்கு எல்லாம் நன்றி சொல்வாராம். காலைல எழுந்ததும் ஏன் சொல்லக் கூடாது? ஏன்னா காலையில் எழுந்திருப்போம்னு நமக்கு எப்படித் தெரியும்? அதுனாலதான் தூங்கப் போறதுக்கு முன்னாடியே சொல்லீர்ரது. தேவையில்லாம இது நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  9. வாங்க ராகவன்,

    அடேங்கப்பா....அப்புறம் என்ன..சினிமாவுல வர்ர பேங்க் மேனேஜர் கதாநாயகன் மாதிரி விர்ரு விர்ருன்னு சர்ரு சர்ருன்னு பறந்து போயி சண்ட போட்டீங்களாக்கும்.//

    அப்படி யாராவது சண்டை போட்டுருக்காங்களா என்ன? ஆமாம்.. இப்பத்தான் நினைவுக்கு வருது.. பாக்கியராஜ் ஒரு படத்துல பேங்க் மேனேஜரா வருவார். கலெக்ஷன் பண்ண போற எடத்துல லேடி பாரோயர் கிட்ட மயங்கி சின்ன வீடா செட்டப் பண்ணிட்டு முழிப்பார்.. அதுல சில சீன்ஸ்ல பறந்து பறந்து சண்டை போடுவார்..

    செய்நன்றி அறிதல்லு சொல்வாங்க. மெல்லிசை மன்னர் தூங்கப் போறதுக்கு முன்னாடித் தன்னை வாழ வைத்தவங்களுக்கு எல்லாம் நன்றி சொல்வாராம். காலைல எழுந்ததும் ஏன் சொல்லக் கூடாது? ஏன்னா காலையில் எழுந்திருப்போம்னு நமக்கு எப்படித் தெரியும்? அதுனாலதான் தூங்கப் போறதுக்கு முன்னாடியே சொல்லீர்ரது. தேவையில்லாம இது நினைவுக்கு வந்தது. //

    அதான.. இதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா என்ன?

    பதிலளிநீக்கு
  10. "அதான.. இதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா என்ன?"
    ஸ்ரீலங்காக்காரங்களைப் பற்றி அவர் கூறுகிறார் என நினைக்கிறேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு
  11. வாங்க ஜயராமன்,

    தமிழ் பதிவுகளில் ஒரு பாடமாக தவறாமல் படித்து சந்தோஷப்படுகிறேன்.//

    அட அப்படியா! நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  12. வாங்க ராகவன் சார்,

    ஸ்ரீலங்காக்காரங்களைப் பற்றி அவர் கூறுகிறார் என நினைக்கிறேன்.//

    இருக்கும். நான் ஒரு ட்யூப்லைட்.. எதுவுமே கொஞ்சம் லேட்டாத்தான் புரியும்..

    பதிலளிநீக்கு
  13. ஜோசஃப் ஐயா, உங்கள் அனுபவங்களை அற்புதமாகப் பதிவு செய்கிறீர்கள். பழைய நண்பன் ஒருவன் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்வது போல இருக்கிறது. இடையில் ரொம்ப gentle-ஆக உங்கள் கருத்துக்கள், கற்ற பாடங்களை இழையோட விடுகிறீர்கள் (தொழிற்சங்கம், சாணக்கியத்தனம் etc.).

    அடுத்து என்ன ஆச்சு என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு