02 மார்ச் 2006

திரும்பிப் பார்க்கிறேன் 90

புது வீடு குடிபோன ராசியோ என்னவோ (இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் என் மனைவிக்கு நிறைய!) என் கிளையிலும் வியாபாரம் சூடு பிடிக்க ரம்பித்தது.

அதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் இருவர்.

ஒருவர் சேட். மற்றவர் பண்ணையார்.

பண்ணையார் என் கிளை வர்த்தக அறிக்கையின் (Balance Sheet) லையபலிட்டி பக்கத்தை (Liability Side) வளர்த்தவர் என்றால் சேட் அசெட் பக்கத்தை (Asset Side) வளர்க்க மிகவும் உதவியாயிருந்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வங்கி அகராதியில் சேமிப்புக் கணக்குகளை லையபிலிட்டி என்றும் கடன் கணக்குகளை அசெட் என்றும் கூறுவதுதான்.

நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் 'இவன் பெரிய லையபிலிட்டிடா' என்று ஒன்றுக்கும் உருப்படாதவனை அல்லது நமக்கு வேண்டாதவனைப் பார்த்துதான் சொல்வோம் இல்லையா?

வங்கிகளுக்கு மிகவும் தேவையான அடிப்படை சேமிப்புக் கணக்குகள். சேமிப்பு வாடிக்கையாளர்கள்தான் ஒரு வங்கியின் உயிர்நாடி. ஆனால் அவர்கள் அளிக்கும் சேமிப்பு வங்கியின் கடனாகக் கருதப்படுகிறது.

அதாவது வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டக் கடன்.

அதைப் பெற்றுக்கொண்ட வங்கிகள் அதை வட்டியுடன் திருப்பித் தர வேண்டுமல்லவா?

கடனாகப் பெறப்பட்ட தொகை பல மடங்காகப் பெருகினால் மட்டுமே சேமிப்புத் தொகையுடன் வட்டியையும் சேர்த்து திருப்பித் தர வங்கிகளால் இயலும்.

இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.

வங்கிகள் தங்கள் சேமிப்பு வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் முழு தொகையையும் கடனாக வழங்கிவிட முடியாது.

சேமிப்பாகப் பெறப்படும் தொகை ரூ.100 என்று வைத்துக் கொள்வோம்.

அதில் சுமார் ரூ.40ஐ மத்திய, மாநில அரசு சேமிப்புப் பத்திரங்கள் (liquid assets) மற்றும் ரிசர்வ் வங்கிக் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும்.

மீதமுள்ள ரூ.60ல் 40 விழுக்காடு (அதாவது ரூ24) நலிந்தவர்க்கு சலுகைக் கடனுதவி செய்ய ஒதுக்க வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்திற்கு குறைவாகவும் இருக்க வாய்ப்புண்டு.

ஆக, வர்த்தகம் மற்றும் தொழில் செய்வோருக்கு வழங்க வங்கிகளுடைய கையில் மீதமிருக்கும் தொகை கேவலம் ரூ.36 தான்.

மத்திய, மாநில அரசுகளின் பத்திரங்களில் முதலீடு செய்யும் தொகைக்கு சராசரியாக 6 விழுக்காட்டிலிருந்து 7 விழுக்காடு வரை வட்டி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதைவிடவும் வருமானத்தைக் கூட்ட முடியும். ஆனால் அதற்கு பிரத்தியேகப் பயிற்சியும், திறமையும் வேண்டும். இதைத்தான் பங்கு வர்த்தக அகராதியில் 'டிரேடிங்' என்போம். வங்கிகளுக்கிடையில் இத்தகைய பத்திரங்கள் விற்கல் வாங்கல் நாள்தோறும் நடக்கும். இதில் புத்திசாலித்தனத்துடன் நடந்துக்கொண்டால் லாபமும், பேராசை மற்றும் அவசரத்துடன் முடிவெடுத்தால் பெருத்த நஷ்டமும் ஏற்பட வாய்ப்புண்டு.. சரி இத்தொல்லையே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தாலும் வருட இறுதியில் பத்திர வர்த்தக சந்தையில் விலைகள் சரிந்து நஷ்டமடையவும் வாய்ப்பிருக்கிறது!

ரிசர்வ் வங்கியில் வைக்கப்படும் தொகைக்கு (cash reserve) மூன்றிலிருந்து நான்கு விழுக்காடு வட்டி கிடைக்கும். அது வங்கிகள் சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வட்டி விகிதத்தில் ஐம்பது விழுக்காடுக்கும் குறைவானது..

ஆக, சேமிப்பாய் பெற்ற ரூ.100ஐ வட்டியுடன் திருப்பிக் கொடுத்து வங்கியையும் திறம்பட நடத்தி லாபம் ஈட்டுவதென்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல.

அதுமட்டுமா? வங்கிகள் அளிக்கும் எல்லா கடன் தொகையுமா வட்டியுடன் திரும்பி வருகின்றன?

திருப்பிச் செலுத்தப்படாத கடன்களைத்தான் வாராக் கடன்கள் (Non performing Assets) என்கிறோம். இத்தகைய கடன்கள் இன்றைய நிலவரப்படி  சுமார் ஒரு விழுக்காட்டிலிருந்து அதிகப்பட்சமாக முப்பது விழுக்காடு வரை உள்ளது. அதாவது ஒரு வங்கியின் மொத்த கடன் தொகை ரூ.1000 கோடி என்று வைத்துக் கொண்டால் வாராக் கடன்களில் முடங்கிக் கிடக்கும் தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.300 கோடிகள் வரை உள்ளது! இவ்விகிதம் வங்கிகள் கடனளிக்கும் முறை, கடன் வாடிக்கையாளர்களை தேர்ந்தெடுக்கும் முறை, கடன் கணக்குகளை கண்காணிக்கும் முறை என்பனவற்றைப் பொருத்திருக்கிறது.

ரூ.1000 கோடி கடன் வழங்கவேண்டுமென்றால் சுமார் ரூ.2800 கோடி சேமிப்பு பெறப்பட்டிருக்க வேண்டும். சேமிப்பாய் பெறப்பட்ட தொகைக்கு சராசரியாக ஆறு விழுக்காடு வட்டி கொடுக்கப்படவேண்டும். ஆக, எல்லா சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கும் வட்டி கொடுக்கப்படவேண்டுமென்றால் அவ்வங்கி குறைந்தபட்சம் ரூ.175 கோடி ஈட்ட வேண்டும்.

வர்த்தக மற்றும் தொழில் கடன் தொகைக்கு சராசரியாக அதிகபட்சம் ஒன்பது விழுக்காடு வட்டி கிடைக்க வாய்ப்புண்டு. அதாவது ரூ.1000 கோடி கடன் தொகைக்கு ரூ.90 கோடி. அரசு பத்திரங்கள் மற்றும் ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு கிடைக்கும் அதிகபட்ச வட்டி ஏழு விழுக்காடு. அதாவது சுமார் ரூ.80 கோடி. சலுகைக் கடன் தொகைகளிலிருந்து கிடைக்கக்கூடிய அதிகபட்ச வட்டி விகிதம் ஆறு. அதாவது சுமார் ரூ.15 கோடி.

தோராயமாகப் பார்த்தால் ரூ.2800 சேமிப்புத் தொகைக்கு அளிக்கப்படவேண்டிய வட்டித்தொகை ரூ.175 கோடி. கடன் தொகைகள் மற்றும் முதலீடு வழியாக கிடைக்கும் வருமானம் சுமார் ரூ.185 கோடி..

மீதமுள்ள ரூ.10 கோடியை வைத்துத்தான் வங்கி தங்களுடைய பராமரிப்பு செலவுகளான வாடகை, மின்சாரம், தொலைத்தொடர்பு, போன்ற செலவுகள், ஊழியர்களுடைய ஊதியம் இவற்றையெல்லாம் பார்த்துக்கொள்ள வேண்டும்..

சரி.. ரூ.1000 கோடியில் ரூ.300 கோடி வாராக்கடனாகிவிட்டால் வங்கிகளின் கதி என்ன?

இச்சுழ்நிலையில்தான் வங்கிகள் வழங்கும் கடன் தொகைகள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற முடிவெடுக்கும் உரிமை வங்கிகளுக்கு மட்டுமே இருத்தல் வேண்டும் என்று வங்கிகள் வாதாடுகின்றன என்பதை உங்களுக்கு எடுத்துக் காட்டவே இதை கூறுகிறேன்.

சமுதாயத்தில் நலிந்தோருக்கு சலுகைக் கடன் வழங்குதல் என்பது ஒரு சமூக சேவை. அவற்றை வங்கிகளிடமிருந்து அரசும் அ.வாதிகளும், அ.காரிகளும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதுதான் என்னைப் போன்ற வங்கி அதிகாரிகளுக்குப் புரிவதில்லை.

சரி.. வங்கிகளுடைய முக்கியக் குறிக்கோள் இதுதான் என்றால் அவர்கள் சேமிப்பாய் பெறும் முழுத்தொகையையும் கடனாய் அளிக்க வழி பிறக்க வேண்டும்.

வங்கிகள் பெறும் சேமிப்புத் தொகையில் சுமார் நாற்பது விழுக்காடு வரை குறைந்த வட்டி கிடைக்கும் வழிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஒரு பக்கம் நிர்பந்தித்து விட்டு இன்னொரு புறம் நலிந்தோருக்கு சலுகைக் கடன் வழங்கு என்று வற்புறுத்துவது எந்தவிதத்தில் நியாயம்?

அத்தகைய சலுகைக் கடன் பெறப்படுவோர் உண்மையிலேயே சமுதாயத்தில் நலிந்த பிரிவினரா என்று பார்த்தால் அதுவும் இருக்காது. அ.வாதிகளின் கைத்தடிகளும், அடிபொடிகளும், கட்சியைச் சார்ந்தவர்களும் அ.காரிகளின் சொந்தமும், பந்தமும், நட்பும்தான் பெரும்பாலும்.

சரி அதுவும் போகட்டும். கொடுத்த கடனையாவது திருப்பிக் கோர வங்கிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா என்றால் அதிலும் நான் மேற்கூறிய இரு தரப்பினரும் தலையிட்டு வங்கிகளின் கைகளைக் கட்டிப் போட்டுவிடுவார்கள். தரமானவர்களுக்கு அதாவது சேரவேண்டியவர்களுக்கு இக்கடன் தொகை சென்று சேர்ந்தால் நிச்சயம் அவை வட்டியுடன் சேர்த்து நிச்சயம் திருப்பி வரும் என்பது என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கு தெரியும்.

ஆனால், வராது என தெரிந்தே நிர்பந்தம் காரணமாக கடன்கள் வழங்கப்படுகின்றனவே என்பதைப் பார்க்கும்போது ஏற்படும் மன உளைச்சல் இருக்கிறதே அதை எழுதி மாளாது..

இதைத்தான் என்னுடைய 17.2.2006 இடுகையின் இறுதியில் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கு சலுகைக் கடன்கள் எப்படி கொள்ளையடிப்படுகின்றன என்பதைக் கூறுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதை சுருக்கமாக இன்று கூறுகிறேன்..

அன்னை இந்திரா காந்தி அவர்கள் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் அவர்கள் கொண்டுவந்த இருபதம்ச திட்டங்களில் ஒரு முக்கியமான அம்சம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்கு வங்கிகள் வழியாக கடனுதவி வழங்குதல்.

இதன் அடிப்படையில் ஒருங்கினைந்த கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (IRDP) என்ற திட்டம் நாடெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் மார்ஜினல் ஃபார்மர்ஸ் எனப்படும் ஐந்து ஏக்கர் விளை நிலங்களுக்கும் குறைவான விவசாயிகள், நிலமற்ற ஏழை விவசாய கூலி வேலையாட்கள், கிராமப்புறத்தில் உள்ள கைவினைத் தொழிலாளர்கள் (கூடை முடிதல், சிறு நெசவாளர்கள்) ஆகியோருக்கு சலுகைக் கடன் உதவி வழங்கப்பட்டு வந்தது.

இதற்கு முன்பு இத்தகையோர் அவர்களுடைய அவசரத் தேவைகளுக்கு மிராசுதார்களையும், பண்ணையாளர்களையும், வட்டிக்குக் கடன் வழங்கும் உள்ளூர் பணமுதலைகளையும் நம்பியே இருந்து வந்தனர். சொற்பத் தொகையை கடனாகப் பெற்று வட்டியுடன் சேர்த்து அடைக்க முடியாமல் பரம்பரை பரம்பரையாக கடன் வழங்கியவர் குடும்பத்துக்கு அடிமையாகிப் போன சோகங்களைத் தீர்க்கவே மத்திய, மாநில அரசுகள் வழியாக இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்திட்டம் 1980ல் நடைமுறைக்கு வந்தது. நான் தஞ்சையில் பணியாற்றிய காலம் 1982 டு 84.  என்னைப் போன்ற வங்கி மேலாளர்கள் இக்காலக் கட்டத்தில் அ.காரிகளின் கெடுபிடிக்கு ஆளாகி பட்ட அவதிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அதை நாளை தொடர்ந்து கூறுகிறேன்..


தொடரும்..



22 கருத்துகள்:

  1. அடேங்கப்பா...இவ்வளவு வெவகாரம் இருக்குதா...இதுல....இந்த பணம் தொடர்பான விவரங்கள் இன்னும் சரியாப் புரியவே மாட்டேங்குது. இன்னமும் வருசத்துக்கு 150 ரூவா குடுத்துதான் வருமானவரியைப் பதிவு பண்ணுறேன்.

    பதிலளிநீக்கு
  2. நிறைய பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ஜோசப் சார்!

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்,

    இந்த பணம் தொடர்பான விவரங்கள் இன்னும் சரியாப் புரியவே மாட்டேங்குது//

    இங்கயும் அதேதான்! வங்கி வணிகத்தைத் தவிர வேறொன்னும் தெரியாது..

    பதிலளிநீக்கு
  4. வாங்க ஜோ,

    நிறைய பயனுள்ள தகவல்களுக்கு நன்றி //

    வங்கி மேலாளர்களின் தர்மசங்கடத்தை எல்லோரும் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்.

    அதில் வெற்றியடைந்தால் சந்தோஷம்தான்.

    பதிலளிநீக்கு
  5. சார்,

    இதையெல்லாம் மக்களுக்கு உறைக்கிற மாதிரி சொல்லுங்க சார்....நல்ல துவக்கம்....
    அப்படியே பூஜாரி பத்தியும் சொல்லுங்க..

    சிதம்பரம் விவசாய கடனை விகிதத்தை குறைச்சது பத்தியும்...

    பதிலளிநீக்கு
  6. அட! வாங்க முத்து!

    படிச்சிக்கிட்டுத்தான் இருக்கீங்களா?

    சொல்லலாம். நம்ம நிலைமையை பதறாம, சிதறாம சொல்லணும்.. அப்பத்தான் நம்ம மேல சிம்பத்தி ஏற்படும்..

    பதிலளிநீக்கு
  7. 'கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது' என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது, அரசியல்வாதிகள் வங்கிப் பணத்தை வாரிக் கொடுக்கும்போது. விரிவான தகவல்களுக்கு நன்றி டிபிஆர்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க சுதர்சன்,

    'கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது//

    ரொம்ப கரெக்டா சொன்னீங்க.

    அதான் கொஞ்ச வருஷம் முன்னால் வரைக்கும் நடந்தது..

    பதிலளிநீக்கு
  9. வாங்க சிங்கைநாதன்,

    இந்த குழப்பம் யாருக்கும் வரும்..

    கவலையேபடாதீங்க:-))

    பதிலளிநீக்கு
  10. சார்,

    எப்படின்னாலும் இந்தப்பக்கம்தான் சுத்திகிட்டு இருப்பேன்...

    பதிலளிநீக்கு
  11. வாங்க முத்து,

    சும்மா தமாஷ் பண்ணேன்..

    சீரியசா எடுத்துக்காதீங்க..

    பதிலளிநீக்கு
  12. ஜோசப் சார்,
    உங்களுக்கு தெரியாதது இல்ல. ஆனா தெரிஞ்ச்சுக்க ஆசை படற நிறைய பேர் படிக்கறாங்கன்னு ஒரு விளக்கம்.

    //இதில் வேடிக்கை என்னவென்றால் வங்கி அகராதியில் சேமிப்புக் கணக்குகளை லையபிலிட்டி என்றும் கடன் கணக்குகளை அசெட் என்றும் கூறுவதுதான்.//

    லையபிலிடி என்பது இங்கு ஒரு திருப்பி தர வேண்டிய பொறுப்பு அல்லது கடன் என்ற அர்த்தத்திலேயே வழங்கப்படுகிறது. அதேபோல் அசெட் என்பது இங்கு சொத்து எனும் அர்த்தத்தில் வருகிறது.

    வங்கியை பொறுத்தவரை, எடுத்துக்கொள்ளும் டெபாஸிட்களை திருப்பித்தரும் பொறுப்பு இருப்பதால், அவை வங்கியின் பார்வையில் லையபிலிட்டி.

    அதே போல் கொடுத்த கடன், வங்கிக்கு திரும்ப வரும். எப்பொழுது வேண்டுமானாலும் (சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு) என் பணத்தை திருப்பி கொடு என கேட்க முடியும். அது வங்கியின் பணம், ஆகவே, அது வங்கியின் சொத்து.

    இதில் வேடிக்கை ஒன்றும் இல்லையே.

    பதிலளிநீக்கு
  13. வாங்க இ.கொத்தனார்,

    அடடா..நான் lighter senseல சொன்னத நீங்க ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டிங்களே.

    இருந்தாலும் உங்களுடைய விளக்கம் மிக அருமை.. நன்றி..

    பதிலளிநீக்கு
  14. இன்னும் ஒன்று சொல்கிறேன். பெரும்பாலும் நாம் வங்கியில் நமது கணக்கில் இருப்பை கேட்கும் பொழுது க்ரெடிட் பாலன்ஸ்தானே என்று கேட்போம். இது பற்றி பார்ப்போம்.

    சென்ற பின்னூட்டத்தில் டெபாஸிட்டுகள் லையபிலிடி என்றும். கடன்கள் அசெட் எனவும் பார்த்தோம். அக்கவுண்டிங் விதிகளின் படி லையபிலிடிகளுக்கு க்ரெடிட் பாலான்ஸும், அசெட்டுகளுக்கு டெபிட் பாலன்ஸும் இருக்கவேண்டும்.
    (ஏன் என தெரிய வேண்டுமானால் சொல்லுங்கள், த்னிப்பதிவு போடுகிறேன்.)

    இவ்விதிப்படி, வங்கியின் பார்வையில்தான் உங்கள் கணக்கில் இருக்கும் பாலன்ஸ் க்ரெடிட் பாலன்ஸ். நீங்கள், உங்களுக்கான கணக்கை எழுத ஆரம்பித்தால் அதில் இந்த வங்கி கணக்கு டெபிட் பாலன்ஸாகத்தான் வரும். அது நீங்கள் வங்கிக்கு கொடுத்திருக்கும் கடன் (உங்களுக்க்கு அசெட்) அல்லவா?

    பதிலளிநீக்கு
  15. புரிந்ததா? குழப்பிவிட்டேனா?

    இந்த இ.கோ புதிராய் போடுகிறானே வேறெதுவும் தெரியாதா என்று யாரும் கேட்குமுன்னே, தெரிந்த கொஞ்சத்தை சொல்லிவிட்டேன். :)

    வாய்ப்பளித்த ஜோசப் சாருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. //அடடா..நான் lighter senseல சொன்னத நீங்க ரொம்ப சீரியசா எடுத்துக்கிட்டிங்களே.//

    அய்யா, உங்களுக்கு தெரியாதது இல்லை என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். மற்றவர்கள் இங்கு வந்து தெரிந்து கொள்வதால், புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்குமே என்றுதான் எழுதினேன்.

    உங்கள் எழுத்தில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கம் இல்லை. எனக்கு அந்த தகுதியும் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. //அதான் கொஞ்ச வருஷம் முன்னால் வரைக்கும் நடந்தது..//

    அப்படின்னா இப்பொவெல்லாம் அந்த மாதிரி 'சமூகக் கடன் திட்டம்' எல்லாம் நிப்பாட்டிட்டாங்களா?

    பதிலளிநீக்கு
  18. மிக அருமையான் பதிவு.

    வங்கியின் செயல்பாடுகளை எளிதாக புரிய வைத்துவிட்டீகள். நன்றி.

    //வாரா கடன்//
    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்கின்றார். இதில் தெரிந்தே ஏமாறுவது வேதனை.

    பேசாமல், அரசியலை வர்தகமாக அறிவித்து, மக்களை "venture capitalist" ஆக செய்து விடலாம். மக்கள் விழிப்புணர்வோடு இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  19. மீண்டும் வருக இ.கொ.

    உங்கள் எழுத்தில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கம் இல்லை.//

    நான் அப்படி நினைப்பவன் அல்ல இ.கொ.

    எனக்கு அந்த தகுதியும் இல்லை.//

    உங்களுடைய தெளிவான பின்னூட்டத்தைப் பார்த்தப் பிறகு எனக்கு அப்படி தோன்றவில்லை..

    வாய்ப்பளித்த ஜோசப் சாருக்கு நன்றி.//

    You are welcome!

    பதிலளிநீக்கு
  20. மீண்டும் வருக சுதர்சன்,

    அப்படின்னா இப்பொவெல்லாம் அந்த மாதிரி 'சமூகக் கடன் திட்டம்' எல்லாம் நிப்பாட்டிட்டாங்களா? //

    இல்லையே.. என்னுடைய பின்னூட்ட பதில்கள் உங்களைத் தவறாக நினைக்க வைத்துவிட்டதற்கு வருந்துகிறேன்.

    இப்போதும் வங்கிகள் தங்களுடைய மொத்த கடன் தொகைகளில் நாற்பது விழுக்காடு இத்தகைய சலுகைக் கடன்களை நலிந்தோருக்கு வழங்குகின்றனர்.. நான் சொல்ல வந்தது என்னவென்றால் இப்போதெல்லாம் அ.வாதிகளின் தலையீடு வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதுதான்.. கடன் பெறுவோரை தேர்ந்தெடுக்கும் வேலையில் அவர்களுடைய தலையீடு இப்போதெல்லாம் அவ்வளவாக இருப்பதில்லை..

    பதிலளிநீக்கு
  21. வாங்க பஸ்பாஸ்,

    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருக்கத்தான் செய்கின்றார். இதில் தெரிந்தே ஏமாறுவது வேதனை. //

    உண்மைதான்.. ஆனால் வங்கி மேலாளர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது அதை விட வேதனை..

    பதிலளிநீக்கு
  22. அரசியல்வாதிகளின் தலையீடு வெகுவாகக் குறைந்துவிட்டதா? ஆச்சரியமாக இருக்கிறது..

    பதிலளிநீக்கு