17 மார்ச் 2006

திரும்பிப் பார்க்கிறேன் 100

அடுத்த நாள் காலை என்னுடைய காசாளார் கூறியதைக் கேட்டுவிட்டு, ‘அப்படியா? அவர பார்த்தா அப்படி தெரியலையே?’ என்று வியந்தேன்.

‘ஆமாம் சார். அவரப்பத்தி ஊர்லருக்கறவங்க சொன்னத கேட்டதும் என்னாலயும் முதல்ல நம்பமுடியலை. அப்புறம் ஊர் மணியக்காரரையே நேர்ல பார்த்து கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்.’என்றார் என்னுடைய காசாளர்.

‘அப்படியா? சரி.. அவர் வரட்டும் நான் பார்த்துக்கறேன். உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.’ என்று கூறி அவரை அனுப்பினேன்.

என்னுடைய காசாளரைப் பற்றியும் அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பல நல்ல பாடங்களைப் பற்றியும் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அவர் எதையும் மிகைப்படுத்தி கூறுபவர் அல்ல என்றும் எனக்குத்தெரியும்.

ஆனாலும் அவர் கூறியதைப் பற்றி அன்று முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தேன்.

ஏற்கனவே ஐந்தாறு கனரக வாகனங்களுக்கு உரிமையாளரான ஒருவர், சுமார் ஐம்பது ஏக்கர்களுக்கும் கூடுதலான நஞ்சை நிலத்திற்கும் தஞ்சை நகரத்தில் இருந்த ஐந்தாறு வீடுகளுக்கும் உரிமையாளரான ஒருவர், ஒன்றுக்கு இரு மனைவியரைக் கொண்டிருந்த ஒருவர், ஏற்கனவே சில வங்கிகளில் கடனாகப் பெற்ற தொகையையே சரிவர அடைக்காமல் இருக்கும் ஒருவர்..

எப்படி.. எப்படி, அவ்வளவு எளிதாக அப்பாவி போல் நடித்து..

இவரைப் பற்றி நான் எழுதிய முதல் பதிவில் நான் எழுதியிருந்த இப்பகுதியை மீண்டும் வாசியுங்கள்..

“என்னுடைய அனுபவத்தில் ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை கணிக்கும் திறமை லேசாக இருந்தது. அன்று அவர் பேசிய தோரணை என்னை சந்தேகப்பட வைக்கவில்லை என்பது மட்டுமல்ல அவரைப் பார்த்து பரிதாபப்படவும் வைத்தது.”

எத்தனை சிறுபிள்ளைத்தனம்!

அவர் தன்னுடைய கைதேர்ந்த நடிப்பால் என்னை ஏமாற்றிவிட்டார் என்பதைவிட பெரிய அனுபவசாலி என்று நினைத்துக்கொண்டிருந்த நான் ஏமாந்து போனேனே என்பதை நினைத்தபோதுதான் எனக்கு என் மேலேயே கோபம் வந்தது.

சரி, அந்த மனுஷன் வரட்டும். நாமும் நடித்தே அவரை கவிழ்க்க வேண்டும் என்று தீர்மானித்து அவர் வரும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தேன்.

என்னுடைய காசாளர் என்னிடம் குறித்துக் கொடுத்திருந்த வங்கிகளுடைய மேலாளர்களை தொலைப்பேசியில் அழைத்து 'என்னுடைய வங்கி கிளைக்கு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் உங்களிடம் கடன் பெற்று சரிவர அடைக்காத ஒரு வாடிக்கையாளர் என்னிடன் கடன் பெறுவதற்காக வருகிறார். அச்சமயத்தில் நீங்களும் என்னுடன் இருந்தால் நன்றாயிருக்கும்' என்று கேட்டுக்கொண்டேன். ஒரேயொரு மேலாளரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஒப்புக்கொண்டனர். குறிப்பிட்ட மேலாளர் ஏன் ஒப்புக்கொள்ளவில்லை என்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. அதை பிறகு பார்ப்போம்.

அதன் பிறகு என்னுடைய வாடிக்கையாளர் என்னிடம் கொடுத்துவிட்டுப் போன பத்திரத்தை தஞ்சையிலிருந்த என்னுடைய வங்கி சட்ட ஆலோசகர் அவர்களுக்கு அனுப்பி அவருடைய சட்ட கருத்தைக் கேட்டேன்.

அவர் அதை ஆராய்ந்து பார்த்துவிட்டு பத்திரத்தில் எந்த பிரச்சினையுமில்லை என்றும் ஆனால் இச்சொத்தின் வில்லங்க சான்றிதழ், மற்றும் அதன் தாய் பத்திரத்தைப் பார்த்துவிட்டுத்தான் இதை ஈடாக ஏற்றுக்கொள்ளலாமா, வேண்டாமா என்று என்னால் கூற முடியும் என்று கூறிவிட்டார்.

தாய் பத்திரத்தின் விவரங்கள் அவர் கொடுத்த பத்திரத்திலேயே இருந்தன. அதை வைத்து உரிமையாளருடைய அனுமதி இல்லாமலேயே அப்பத்திரத்தின் நகலையும் சொத்திற்கான வில்லங்க சான்றிதழையும்  சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் (sub registrar) அலுவலகத்திலிருந்து பெற முடியும். ஆனால் அச்சொத்து தஞ்சை நகரத்திற்கு வெளியே இருந்ததால் அது பதிவு செய்யப்பட்டிருந்த சார் பதிவாளர் அலுவலகத்தைக் கண்டுபிடித்து பத்திர நகலை இரண்டு நாட்களுக்குள் நிச்சயம் பெற முடியாது என்பதை உணர்ந்து வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

வாடிக்கையாளரை நான் வரச்சொன்ன குறிப்பிட்ட நாள் வந்தது. நான் கேட்டுக்கொண்டபடி வங்கி மேலாளர்களும் வந்தனர். ஆனால் நம்முடைய வாடிக்கையாளர் வரவில்லை!

ஒரு அரைமணி நேரம் காத்திருந்துவிட்டு வங்கி மேலாளர்கள் நிராசையுடன் திரும்பிச் சென்றுவிட்டனர். அவர்களுடைய கூற்றுப்படி நான் அழைத்தும் வரமறுத்த வங்கி மேலாளர்தான் என்னுடைய வாடிக்கையாளரிடம் இதைப் பற்றி அறிவித்திருக்க வேண்டும். அத்துடன் அவர்தான் இந்த வாடிக்கையாளரை மற்ற வங்கி மேலாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார் என்பதும் தெரியவந்தது..

அடுத்த ஒரு வாரத்திற்கும் அந்த வாடிக்கையாளர் கடன் கேட்டு வராததால் அவர் கொடுத்திருந்த தஞ்சை விலாசத்திற்கு என்னுடைய சிப்பந்தி ஒருவரை அனுப்பினேன்.

அவர் திரும்பி வந்து, ‘சார் அவர் தந்த விலாசத்துல அப்படி ஒரு ஆளே இல்ல சார்.’ என்றார்.

சரி, அவர் பணிபுரிவதாய் கூறிய போக்குவரத்து ஸ்தாபனத்தின் முதலாளிக்காவது இவரைப் பற்றி தெரிந்திருக்குமே என்று நினைத்து அவருடைய நிறுவன  தொலைப்பேசியைத் தேடிப் பிடித்து  தொடர்புகொண்டேன். அவர் மிகச்சாதாரணமாக, 'ஆமா சார்.. என் வண்டியில ஒன்னதான் லீசுக்கு எடுத்து ஓட்டிக்கிட்டிருக்கான். ஏன் சார், ஏன் கேக்கறீங்க?’ என்றார்.

எனக்கு ஒரு நிமிடம் மேற்கொண்டு என்ன கேட்பதென்று புரியவில்லை. எங்கேயோ உதைக்குதே.. நம்ம காசாளர் விசாரித்தபடி அவருக்கு ஏற்கனவே ஐந்தாறு வாகனங்கள் இருக்கிறது.. அதற்கு பல வங்கிகளிலும் கடன் பெற்றிருக்கிறார்.. அப்படியிருக்கும்போது இவர் ஏன் வேறொரு நிறுவனத்தினுடைய வாகனத்தை லீசுக்கு எடுத்து... something wrong somewhere..

சரி, இந்த சிக்கலைத் தீர்த்து வைக்க சரியான ஆள் இத்துறையுடன் தொடர்புடைய நம்முடைய நண்பர் நாயக்கர்தான் என்று நினைத்து ஒரு நாள் மாலை அவரைச் சென்று சந்தித்தேன்.

அவர் நான் கூறியதை பொறுமையாகக் கேட்டுவிட்டு என்னைப் பார்த்து புன்னகை செய்தார். ‘உங்க கிட்ட அவன் என்ன பேர் சொன்னான் சார்?’ என்றார்

பேரா? அதுலயும் தில்லுமுல்லா என்று வியப்பில் பதிலளிக்க முடியாமல் அவரையே சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு என்னுடைய வாடிக்கையாளர் என்னிடம் கூறிய பெயரைச் சொன்னேன்.

என்னுடைய முகபாவனை அவருக்கு சிரிப்பை வரவைத்தது. ‘பேரெல்லாம் சமயத்துக்கேத்தா மாதிரி பொருத்தமாத்தான் செலக்ட் பண்றான். சரி ஏதோ ஒன்னு... வெறும் பினாமிதானே.. நீங்க பேசினீங்களே அவனோட முதலாளி, அவரோட உண்மையான பேரையே இந்த முறை உபயோகிச்சிருக்கான்... நீங்க சொன்ன அடையாளத்த வச்சி பார்த்தா இந்தாளு அவர்கிட்ட லீசுக்கு எடுத்து ஓட்டற ஆள்தான்.. அதுல பொய் இல்லே.. ஆனா அந்தாள் உங்கக்கிட்ட வந்து கேட்ட வண்டி அவனுக்கில்ல... பேங்க் லோனுக்கு அவன் கட்டுறதா சொன்ன மார்ஜின் பணமும் அவனுதில்லே.. எல்லாம் அவனோட முதலாளியோடது.. அவன் முதலாளிக்கு சொந்தமா இருக்கற ஏறக்குறைய எல்லா வண்டிகளுமே இவன மாதிரி இருக்கற ரெண்டு, மூனு ஆளுங்க பேர்ல வாங்குன வண்டிங்கதான் சார்.. சில பேங்க் மேனேஜர்களுக்கு குடுக்கறத குடுத்து லோன் வாங்கிருவாங்க.. சில பேங்க் மேனேஜர்ங்க கிட்ட இந்த மாதிரி அப்பாவி வேஷம் போட்டு ஏமாத்தி லோன் வாங்குவாங்க.. எந்த மேனேஜர் எப்படிப்பட்டவர்னு ரெண்டு மூனு மாசம் வாட்ச் பண்ணிட்டுதான் செய்வாங்க. உங்க அதிர்ஷ்டம், லோன் குடுக்கறதுக்கு முன்னாலயே தெரிஞ்சிக்கிட்டீங்க.. அதுவுமில்லாம உங்க மடியில கனமில்ல இல்லையா? அதான் உங்களுக்கு பயமும் இல்ல.. ஆனா ஒரு கையால 'வாங்கிட்ட' மேனேஜர்ங்க இவங்க பண்ற தில்லுமுல்லு தெரிஞ்சாலும் வாய மூடிக்கிட்டு இருந்துருவாங்க..’

ஆனாலும் லாஜிக் எங்கோ உதைக்கிறதே என்று யோசித்தேன். நான் அந்த நிறுவனத்தின் முதலாளியை அழைத்து அவருடைய பெயரையே சொல்லித்தானே விசாரித்தேன்? அவர் ஏன் சர்வசாதாரணமாக ஆமா சார் அவன் என் வண்டியில ஒன்னத்தான் லீசுக்கு எடுத்து ஓட்டிக்கிட்டிருக்கான்னு சொன்னார்?

என்னுடைய  ஐயத்தை அவரிடம் கூறினேன். அவர் என்ன சார் நீங்க? என்பதுபோல் என்னைப் பார்த்தார்.

‘நீங்க எப்படிப்பட்ட ஆள்னு  விசாரிச்சிக்கிட்டுத்தான சார் அவங்க உங்ககிட்ட வராங்க? நீங்க ஊர்ல போய் விசாரிக்கிறேன்னு சொல்வீங்கன்னு அவனுங்களுக்கு தெரியும். என் பேரையே நீ சொல்லிரு. அப்பத்தான் அவர் யாரையாச்சும் அனுப்புனா என் பேர சொல்லி கேட்டுக்கட்டும்னு சொல்லி அனுப்புறதே அவனோட முதலாளிதானே? அதுமட்டுமா? நீங்க அவரையே ஃபோன் பண்ணி கேப்பீங்கன்னும் எதிர்பார்த்திருக்க மாட்டானா? நீங்களும் கரெக்டா அவனுக்கே ஃபோன் பண்ணிட்டீங்க.. நீங்க கூப்டுவீங்கன்னு எதிர்பார்த்தவனுக்கு எப்படி பதில் சொல்லணும்னு தெரியாதா?’ என்று சற்று கேலியுடன் என்னை மடக்கியபோதுதான் புரிந்தது நான் எத்தனை விவரமில்லாதவன் என்று!

அப்படியானால் இவரைப் பற்றி ஊர் மணியக்காரர் ஏன் ஐம்பது ஏக்கருக்கு சொந்தக்காரர் என்று கூறவேண்டும் என்று நினைத்தேன். நாயக்கரிடம் கேட்டும் விட்டேன்.

மீண்டும் அதே என்ன சார் நீங்க பார்வை..

‘அவனோட முதலாளி பேரத்தானே சார் குறிச்சிக் குடுத்துருக்கான்? அவர் பேர்லருக்கற சொத்துதானே. அப்புறம் மணியக்காரர் வேறென்ன சொல்வார்? ஒரு வேளை அவருக்கும் நீங்க ஆள அனுப்புவீங்க.. பார்த்து பக்குவமா, நல்லபடியா சொல்லிருங்கன்னு சொல்லி வச்சிருப்பான்களோ என்னவோ, யார் கண்டா? சாதாரணமா ஒன்னு ரெண்டு மேனேஜர்ங்கதான் இந்த மாதிரி விலாசம் கொடு, போய் பார்த்துட்டு சொல்றேன்னு கேப்பாங்கன்னு அவனுகளுக்கு தெரியும். அந்த மாதிரி மேனேஜர்ங்கக் கிட்ட என் பேரையே குடுத்துருன்னு முதலாளி முன் கூட்டியே சொல்லி வச்சிருவார்னு நினைக்கிறேன். அரசுடமையாக்கப்பட்ட பேங்க் மேனேஜர்களுக்கு இந்த மாதிரி போய் விசாரிக்கறதுக்கெல்லாம் ஏதுசார் டைம்? நீங்க தெனம் ஒரு அஞ்சு லோன் குடுத்தீங்கன்னா அவங்க நூறு கணக்குலல்ல குடுக்குறாங்க?’

இன்னமும் நிவர்த்தியடையாத சந்தேகங்கள் இருந்தன. இவர் குறிப்பிட்ட நிறுவன முதலாளிக்கு நிறைய வாகனங்கள் இருந்தன.. ஆனால் மணியக்காரர் ஏன் ஐந்தாறு வாகனங்கள்தான் அவர் பெயரில் இருந்தன என்றார்?

அதற்கும் நாயக்கரிடம் பதில் இருந்தது. ‘அதான் சார் உண்மை. அவர் பேர்ல இருக்கற வண்டிங்க அஞ்சாறுதான், பொய்யில்ல.. மத்ததெல்லாம் இந்த மாதிரி பினாமி ஆளுங்க பேர்லதான் இருக்கும்.’

நாயக்கருடைய அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியெல்லாம்  அவர் கூறியதையே அலசி ஆராய்ந்து பார்த்தேன்.

ஆனாலும் என்னைப் பார்க்க வந்தவர், நான் கேட்டதும் உடனே சொத்துப் பத்திரத்தை எடுத்து நீட்டினாரே.. அதெப்படி?

சில நிமிட யோசனைக்குப் பிறகு அதற்கும் விடை கிடைத்தது.

தன்னுடைய முதலாளியின் பெயரிலிருந்த பத்திரத்தைத் தானே கொடுத்திருக்கிறார்.. சொத்து அந்த பெயரில் இல்லாமல் எங்கே போகும்?

இப்போது என்னுடைய நேற்றைய பதிவின் இறுதி வாக்கியத்தை மீண்டும் வாசித்து பாருங்கள்..

“நான் வாடிக்கையாளர்களை கணிக்கும் விதத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது.. அதை விரைவில் திருத்திக்கொள்ளாவிட்டால் ஆபத்து என்றும் நினைத்தேன்..”

சரிதானே!

இது நடந்த அடுத்த சில தினங்களுக்குள் ஒருவர் என் அலுவலகத்திற்கு வந்து, ‘சார் நம்ம முதலாளியோட பத்திரத்த அவருக்கு தெரியாம யாரோ உங்கக் கிட்ட குடுத்திருக்கறதா நம்ம முதலாளி சந்தேகப்படறார். அது உங்க கிட்ட இருந்தா குடுத்துறுங்க. இந்தாங்க, நம்ம முதலாளி கைப்பட எழுதுன லெட்டர். சந்தேகம் இருந்தா நீங்களே போன் போட்டு கேட்டுக்குங்க.’ என்றான்!

சட்டென்று பொங்கி எழுந்த கோபத்தில், ‘உங்க கிட்ட குடுக்க முடியாதுங்க. இத கொண்டு வந்து கொடுத்த ஆள்கிட்டதான் குடுக்க முடியும். அவர வரச்சொல்லுங்க’ என்று விரட்டியடித்தேன் என்னுடைய அந்த செயலும் வில்லங்கத்தை விலைக்கு வாங்கப்போகிறது என்பது தெரியாமல்.



தொடரும்..






4 கருத்துகள்:

  1. 100க்கு ஏத்தமாதிரியே 'கனரகமா' நடந்துருக்கு விஷயங்கள். இன்னும் என்னாங்க? எதுலே வில்லங்கம்?

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா..........குழியத் தோண்டி வானம் போய்....அங்கிருந்து கடல்ல குதிச்சி....கடல் குதிரைல ஏறிக்கிட்டு ஊர்கோலம் போனாராம் முண்டத்தலை மகராஜா.......அந்தாக்குலல்ல இருக்கு. எமகாதகப் பயக....

    பதிலளிநீக்கு
  3. வாங்க துளசி,

    வில்லங்கம் புடிச்ச ஆளுங்களோட சம்பந்தம் வச்சிக்கிட்டா எப்ப வில்லங்கம் வரும்னு யாருக்கு தெரியும்?

    வம்ப விலை குடுத்து வாங்குனா மாதிரிதான். அப்போ இள ரத்தம் இல்லையா? அதான் ஆழம் தெரியாமல் கால விட்டுட்டு.. எழுந்து வர்றதுக்குள்ள போறும்டா சாமின்னு ஆயிருச்சி..

    பதிலளிநீக்கு
  4. குழியத் தோண்டி வானம் போய்....அங்கிருந்து கடல்ல குதிச்சி....கடல் குதிரைல ஏறிக்கிட்டு ஊர்கோலம் போனாராம் முண்டத்தலை மகராஜா......./

    அடடா.. சூப்பர் உதாரணம்!

    இவனுங்கள தூக்கி சாப்பிடற எமகாதகனும் இருக்கான்ங்க.. நம்ம ஊர்லயே.. அதாங்க தூ..டி..

    பதிலளிநீக்கு