03 ஜூன் 2014

ரசிகனும் விமர்சகனும்


ரசனை உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் எதுவுமே கசக்காது என்பார்கள். வாழ்க்கையில் வெற்றிகள் கிடைத்ததும் வானளாவ மகிழ்வதும் துயரங்கள் வந்ததும் துவண்டுவிடுவதும் ரசனை உணர்வு உள்ளவர்களிடம் காண்பது அரிது. அரை கப் பானத்தை பார்த்ததும் இவ்வளவுதானா என்ற  நிராசையும் இவ்வளவாவது கிடைத்ததே என்று திருப்தியும் ஏற்படுவது இந்த ரசனை குணத்தால்தான். எந்த விஷயத்திலும் செயலிலும் உள்ள நிறைகளை மட்டுமே காண்பவர்களுக்கு எதையும் ரசிக்கும் குணம் அல்லது பண்பு அதிகம் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். எதிலுமே குறையை மட்டுமே காண்பவர்களுக்கு இது சற்று குறைவாக உள்ளது என்றும் கூறலாம். 

விளையாட்டு மற்றும் திரைப்படங்களை ரசிகனும் விமர்சகனும் ஒரே கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. ஒரு விளையாட்டு வீரராகட்டும் அல்லது ஒரு திரையுலக கதாநாயகனாகட்டும் அவர்களுடைய செயல்பாடுகளில் நிறையை மட்டுமே காண்பவர்கள் அவர்களுடைய ரசிகர்கள். ஒருவரை ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டால் அவர்களுடைய செயல்பாடுகளில் குறைகள் இருந்தாலும் அவற்றை மறந்து நிறைகளை மட்டுமே கண்டு போற்றுவார்கள். ஆனால் விமர்சகர்கள் அப்படியில்லை. இவர்களிலும் கூட இருதரப்பான விமர்சகர்கள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. நல்ல ஆக்கபூர்வமான விமர்சகர்கள் (constructive critics) குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பதுடன் நிறைகளையும் எடுத்துக்காட்டி பாராட்ட தயங்கமாட்டார்கள். ஆனால் குறை காண்பதற்கெனவே பிறவி எடுப்பதுபோல் விமர்சிப்பவர்கள் நிறைகளை மூடி மறைப்பதில் சூரர்கள். இவர்களை destructive critics எனலாம். இத்தகையோரின் விமர்சனத்திற்கு பின்னால் ஒரு வகை காழ்ப்புணர்வு தென்படுவதைக் காணலாம். 

இவர்களுடைய பின்புலத்தை சற்று ஆராய்ந்தால் இவர்களுக்கு தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனப்போக்கு இருப்பதை உணர்ந்துக்கொள்ள முடியும். இந்த பூமியில் இவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல் எல்லாவற்றை பற்றியும் விமர்சிப்பார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் துறையை மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் பற்றி எழுது தங்களுடைய மேதாவிலாசத்தை காட்டிக்கொள்வதில் முனைப்பாய் இருப்பார்கள். கண்ணில் தெரிபவர்களைப் பற்றியெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் இவர்களுடைய விமர்சனத்தை யாராவது எதிர்த்துவிட்டால் போதும் பொங்கியெழுந்துவிடுவார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்களுடைய அணி ஜெயித்து அரையிறுதிக்குள் நுழைந்ததும்  அந்த அணி ஏதோ இந்திரலோகத்தையே வென்றுவிட்டதுபோல் பாராட்டி மகிழ்ந்ததையும் ஆனால் அதே அணி இறுதியாட்டத்திற்குள் நுழைய முடியாமல் தோற்றதும் அதற்கு அந்த அணியின் தலைவரை (captain) மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததையும் பதிவுலகிலும், முகநூல், மற்றும் ட்விட்டரில் கடந்த ஒரு வார காலமாகவே காண முடிகிறது. இத்தகைய கீழ்த்தரமான விமர்சனத்தில் இறங்கியவர்களுள் ஒருவராவது இந்த விளையாட்டை விளையாடியிருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வந்திருக்கும். ஒருநாள், இருபதுக்கு இருபது போட்டிகளில் உலக கோப்பை வெற்றி , சாம்பியன்ஸ் கோப்பையில் வெற்றி என பல வெற்றிகளை குவித்த இந்திய அணியையும் ஏழு முறை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை இறுதிப் போட்டிக்கும் அவற்றில் இரண்டு முறை கோப்பையையும் வெல்ல வைத்த சென்னை அணியையும் தலைமையேற்று நடத்திய தோனியை ஒன்றுக்கும் பயனற்றவர் (useless) என்று விமர்சித்தவண்ணம் இருந்தார் ஒரு மெத்த படித்த மேதாவி. அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்னும் அளவுக்கு அவர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் எழுதுவதை யாராவது எதிர்த்து எழுதிவிட்டால் போதும் இவர் மட்டுமல்லாமல் இவருடைய அடிவருடிகளும் ஒருசேர இணைந்து அவரை தாக்கி உருக்குலைத்துவிடுவார்கள். 

இதுபோலவே பதிவுலகிலும் திரைப்படங்களை விமர்சிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் தமிழ்வாணன் என்றொருவர் இருந்தார். அவர் விமர்சிக்காத திரைப்படமே இல்லை எனலாம். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அவரே ஒரு படத்தை எடுத்தார். அதுதான் அவருக்கு முதலும் இறுதியுமான படம். ஒரு வாரம் கூட ஓடாமல் சுருண்ட படம் அது. அத்தனை கொடுமையாக எடுத்திருந்தார். 

இதுபோல்தான் பல விமர்சகர்களும். இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளிவரும் விமர்சனங்களை நம்பி திரைப்படங்களுக்கு செல்ல முடிவதில்லை. ஏனெனில் எந்த விமர்சனமும் பாரபட்சமற்றதாக இருப்பதில்லை. விமர்சிப்பவரின் மனம் கவர்ந்த இயக்குனரோ அல்லது நாயகனோ நடித்திருந்தால் அதை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுதுவார்கள் இல்லையென்றால் கிழி கிழி என்று கிழித்தெறிந்திருப்பார்கள். தயாரிப்பாளருடைய  sponsorsed விமர்சகர்களும் உண்டு. 

விமர்சிக்கப்படுபவரைக் காட்டிலும் திறம்பட செயல்பட முடிபவர்தான் விமர்சனத்தில் இறங்க வேண்டும் என்பதில்லை. யாருக்கும் எவரையும் விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் எந்த உரிமையும் (right) அதற்கு இணையான பொறுப்பையும் (responsibility) கொண்டுள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துவிடுகிறோம். பொறுப்பற்ற விமர்சனம் யாருக்கும் எவ்வித பயனையும் அளிப்பதில்லை. மாறாக மனக்கசப்பையே விளைவிக்கிறது. 

ஆகவே விமர்சியுங்கள். ஆனால் விமர்சனம் என்பது குறையை மட்டுமே சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிடக் கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். விமர்சகர்கள் தங்களுடைய மேதாவிலாசத்தை காட்டும் எண்ணத்துடன் செயல்படுவதைத் தவிர்க்கவேன்டும்.  நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகருக்கு மட்டுமல்லாமல் அவரால் விமர்சிக்கப்படுபவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

********


20 கருத்துகள்:

  1. // நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகருக்கு மட்டுமல்லாமல் அவரால் விமர்சிக்கப்படுபவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. //
    உண்மைதான். ஆனால் நம்மிடையே பிறர் மனம் புண்படி எழுதி அதில் சுகம் காணும் விமரிசர்கள் தானே அதிகம்.இவர்களது விமரிசனத்திற்கு முக்கியத்துவம் தராமல் இவர்களைத் தவிர்ப்பதே நல்லது.

    பதிலளிநீக்கு
  2. விமர்சிப்பதால் மட்டுமே நமக்கு எல்லாம் தெரியும் என நினைத்துவிடக்கூடாது என்பதை நல்லா சோன்னீங்க.

    பதிலளிநீக்கு
  3. ”காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே”விமரிசிப்பவருக்கு அதுபற்றிய நுணுக்கமான அறிவுவேண்டும் ஆனால் அதைச் செய்யத்தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கட் விமரிசிகனுக்கு அதை ஆடவோ, இசை விமரிசிகனுக்குப் பாடவோதெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை. நல்ல ரசிகனாய் இருப்பதுடன் nuances தெரிந்தும் இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  4. எதனையும் விமர்சனம் செய்வது நல்லதுதான். ஆனால் முடிந்தவரை தனிமனித தாக்குதலைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒருவர் தான் செய்யும் தவறையே அடுத்தவர் செய்துவிட்டால் காட்டமாக விமர்சிக்கும்போது பிரச்சனை அதிகமாகிறது.

    பெயர் பெற்ற எழுத்தாளர்களுக்கெல்லாம், பதிவுலகம் வந்த்து பிடிக்கவில்லை என்று அவர்கள் எழுத்திலிருந்து அறிகிறேன். அது டெண்டுல்கர், பூங்காவில் கிரிக்கெட் விளையாடுபவர்களைப் பார்த்து, இவர்களும் விளையாடுகிறார்களே, அதனையும் பத்துபேர் பார்க்கிறார்களே என்று எரிச்சலடைவதைப்போல உள்ளது. முடிந்தவரை சரியோ தவறோ, அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாதபட்சத்தில், அடுத்தவர்களுடைய பிடிக்காத விமர்சனத்தை தாண்டி சென்றுவிடுவது உத்தமம்.

    பதிலளிநீக்கு
  5. மிகச்சிறப்பான அலசல்! வேண்டப்பட்டவர்களை பாரட்டுவதும் வேண்டாதவர்களை தூற்றுவதும் விமர்சனம் ஆகாது! நன்றி!

    பதிலளிநீக்கு
  6. சிலருக்கு எப்படி இருந்தாலும் எதிர்மறையாகத்தான் விமர்சிப்பார்கள்.தனக்குமட்டுமே எல்லாம் தெரியும் தான் சொல்வதுதான் சரி என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் .
    படைப்பிலோ எழுத்திலோ, கருத்திலோ செயல்பாட்டிலோ உள்ள குறைகளை நாகரீகமாக சொல்வது நல்லது.

    பதிலளிநீக்கு
  7. வள்ளுவர் சும்மா சொன்னார்...! எதையும் செய்து பார்த்தால் தான் தெரியும்...

    பதிலளிநீக்கு
  8. விமர்சகர்களைப் பற்றிய விமர்சனம். சிறப்பாக இருந்தது. நாசக்கார விமர்சகர்கள் (destructive critics )பற்றி நன்றாகவே சொன்னீர்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒருவரே வெவ்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளில் பம்மாத்து செய்கின்றனர். ஒரு குழு போல் காட்டிக் கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு

  9. Blogger வே.நடனசபாபதி said...
    // நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகருக்கு மட்டுமல்லாமல் அவரால் விமர்சிக்கப்படுபவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. //
    உண்மைதான். ஆனால் நம்மிடையே பிறர் மனம் புண்படி எழுதி அதில் சுகம் காணும் விமரிசர்கள் தானே அதிகம்.இவர்களது விமரிசனத்திற்கு முக்கியத்துவம் தராமல் இவர்களைத் தவிர்ப்பதே நல்லது. //

    மிகச் சரியாக சொன்னீர்கள்.
    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  10. Blogger ராஜி said...
    நல்ல அலசல்

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  11. logger ராஜி said...
    விமர்சிப்பதால் மட்டுமே நமக்கு எல்லாம் தெரியும் என நினைத்துவிடக்கூடாது என்பதை நல்லா சோன்னீங்க.//

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு


  12. Blogger G.M Balasubramaniam said...
    ”காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே”விமரிசிப்பவருக்கு அதுபற்றிய நுணுக்கமான அறிவுவேண்டும் ஆனால் அதைச் செய்யத்தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கட் விமரிசிகனுக்கு அதை ஆடவோ, இசை விமரிசிகனுக்குப் பாடவோதெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை. நல்ல ரசிகனாய் இருப்பதுடன் nuances தெரிந்தும் இருக்கவேண்டும்.//

    மிகச் சரியாக கூறியுள்ளீர்கள்.

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  13. Blogger Packirisamy N said...
    எதனையும் விமர்சனம் செய்வது நல்லதுதான். ஆனால் முடிந்தவரை தனிமனித தாக்குதலைத் தவிர்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். ஒருவர் தான் செய்யும் தவறையே அடுத்தவர் செய்துவிட்டால் காட்டமாக விமர்சிக்கும்போது பிரச்சனை அதிகமாகிறது. //

    பிரச்சினையை ஏற்படுத்துவதுதான் இத்தகைய விமர்சகர்களின் நோக்கமே. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுபோல் இதை வைத்தே அரசியல் செய்பவர்களும் உள்ளனர்.

    பெயர் பெற்ற எழுத்தாளர்களுக்கெல்லாம், பதிவுலகம் வந்த்து பிடிக்கவில்லை என்று அவர்கள் எழுத்திலிருந்து அறிகிறேன். அது டெண்டுல்கர், பூங்காவில் கிரிக்கெட் விளையாடுபவர்களைப் பார்த்து, இவர்களும் விளையாடுகிறார்களே, அதனையும் பத்துபேர் பார்க்கிறார்களே என்று எரிச்சலடைவதைப்போல உள்ளது. //

    சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூக்களிலும் எழுதியே பிரபலமடைந்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். குறிப்பாக உலக அளவில் ஆங்கிலத்தில் எழுதும் பல ப்ளாகர்கள் பல பிரபல எழுத்தாளர்களுக்கு இணையாக பேசப்படுகின்றனர் என்கிறார்கள்.

    முடிந்தவரை சரியோ தவறோ, அடுத்தவர்களுக்கு தொந்தரவு இல்லாதபட்சத்தில், அடுத்தவர்களுடைய பிடிக்காத விமர்சனத்தை தாண்டி சென்றுவிடுவது உத்தமம்.//

    ஆமாம்.

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  14. Blogger கரந்தை ஜெயக்குமார் said...
    நல்ல அலசல்//

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  15. Blogger ‘தளிர்’ சுரேஷ் said...
    மிகச்சிறப்பான அலசல்! வேண்டப்பட்டவர்களை பாரட்டுவதும் வேண்டாதவர்களை தூற்றுவதும் விமர்சனம் ஆகாது!//

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  16. Blogger டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
    சிலருக்கு எப்படி இருந்தாலும் எதிர்மறையாகத்தான் விமர்சிப்பார்கள்.தனக்குமட்டுமே எல்லாம் தெரியும் தான் சொல்வதுதான் சரி என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் .
    படைப்பிலோ எழுத்திலோ, கருத்திலோ செயல்பாட்டிலோ உள்ள குறைகளை நாகரீகமாக சொல்வது நல்லது.

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  17. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    வள்ளுவர் சும்மா சொன்னார்...! எதையும் செய்து பார்த்தால் தான் தெரியும்...

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

  18. Blogger தி.தமிழ் இளங்கோ said...
    விமர்சகர்களைப் பற்றிய விமர்சனம். சிறப்பாக இருந்தது. நாசக்கார விமர்சகர்கள் (destructive critics )பற்றி நன்றாகவே சொன்னீர்கள். அவர்களில் பெரும்பாலோர் ஒருவரே வெவ்வேறு பெயர்களில் வலைப்பதிவுகளில் பம்மாத்து செய்கின்றனர். ஒரு குழு போல் காட்டிக் கொள்கின்றனர்.//

    சரியாக சொன்னீர்கள்.

    உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு